Sunday, June 29, 2025

11 கோட்பாடுகள் - முன்னுரையில் இருந்து...


 இறையருளால் இன்று “நக்‌ஷ்பந்திய்யா ஸூஃபி நெறியின் 11 கோட்பாடுகள்” நூலை எழுதி நிறைவு செய்திருக்கிறேன். 

சீர்மை பதிப்பகம் இதனை அழகிய அச்சாக்கத்திலும் வடிவமைப்பிலும் நூலாக வெளியிடும், இன் ஷா அல்லாஹ்.

நூலின் முன்னுரையில் இருந்து சில கருத்துக்கள்:

இந்நூல் வெறுமனே ஏட்டறிவு பெறுவதற்காகவோ பெருக்குவதற்காகவோ அல்ல. இது பயிற்சி நூலாகும். செயலில் ஈடுபடுவதுதான் ஸூஃபித்துவத்தில் முக்கியம். ”இதயத்திற்குத் திரும்புதல்” என்னும் நூலில் ஹஜ்ரத் ஆஜாத் ரசூல் அவர்கள் சொல்கிறார்கள்: “ஸூஃபிசம் என்பது நீச்சல் அடிப்பது போன்றது. நீச்சல் பற்றிய நூல்களை வாசிப்பதால் உங்களுக்கு நீச்சல் அடிக்க வந்துவிடாது. மாறாக, திறன் மிக்க நீச்சல் வீரர்கள் நீரில் வேகமாகவும் லாவகமாகவும் நீந்துவதற்காகத்தான் பாராட்டப் படுகிறார்களே தவிர நீச்சல் உத்திகளின் விரிவுரைகளுக்காக அல்ல.” [ப.84]

இன்னோர் உதாரணம் உரைக்கலாம். அதாவது, இது ஒரு சமையல் நூலைப் போன்றது. சுவையான உணவை எப்படிச் சமைக்கலாம், அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை, அவற்றை எவ்வளவு இட வேண்டும் என்றெல்லாம் ’ருசிப்பி’ (recipe) விவரம் தருகிறது. ஆனால் அவற்றைச் செய்முறையில் கொண்டு வந்தால்தான் அந்த நூலின் பயன் கிடைக்கும் [அந்த நூலின் பக்கங்களை உண்பவன் கழுதையாக வேண்டுமானால் ஆகலாம்!] நிஜத்தில் அந்த உணவைச் சமைத்து ருசித்து உண்பதுதான் அதன் பயன். வெறுமனே நூலை வாசிப்பதும் நெட்டுருப் போடுவதும் அல்ல.

அது போன்றுதான் இந்த நூலும். இது அகச் சமையல், இதயச் சமையல். இறைவனுக்கு விருப்பமான ருசியை உங்கள் இதயத்தில் உண்டாக்குவதே இந்தப் பதினொரு கோட்பாடுகளின் நோக்கம்.


No comments:

Post a Comment