பாஸ் கஷ்த் என்பது நக்ஷ்பந்திய்யா நெறியில் ஆறாவது கோட்பாடாக அமைகிறது. இதன்
நேரடிப் பொருள் திரும்புதல், மீளுதல் என்பதாகும்.
பாஸ் கஷ்த் என்னும் ஃபார்சி சொல்லுக்கு இணையாக அவ்பா என்னும் அறபிச் சொல் அமையும்.
ஏனெனில் இங்கே குறிப்பிடப்படும் திரும்புதல் என்பது ஷரீஅத் விதிக்கும் கடமைகளை நிறைவேற்றிய
உடன் சாதகன் இறைவனிடம் தன் கவனம் முழுவதையும் திருப்பி விடுவதைக் குறிக்கிறது.
அறபியில் திரும்புதல் என்பதைக் குறிக்க மூன்று சொற்கள் உள்ளன: தவ்பா, இனாபா, மற்றும் அவ்பா. இவை
மூன்றும் தனித்தனிப் படித்தரங்கள் ஆகும். அவற்றின் விளக்கமாவது:
1.
தவ்பா – இது பொதுவாக பாவமன்னிப்பு
(இஸ்திக்ஃபார்) என்னும் அர்த்தத்தில் மக்களின் புழக்கத்தில் உள்ள சொல்லாகும். இது பாவத்தை
விட்டும் நன்மையின் பக்கம் திரும்புவதைக் குறிக்கும்.
2.
இனாபா – இது இறைவனிடம் பாவமன்னிப்புத்
தேடுவதுடன் நில்லாது அடியான் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றி அவனைத் திருப்தி படுத்துவதற்காகப்
போராடும் நிலையாகும்.
3.
அவ்பா – இது என்பது முழுமையாக
இறைவனிடம் திரும்பி விடுவதாகும். படைப்புக்களை விட்டு விலகியும் இறைவனிடம் நெருங்கியும்
இருக்கும் நிலைக்குத் திரும்புதல் ஆகும்.
மேற்காணும் மூன்றில் அவ்பா
என்னும் நிலையே பாஸ் கஷ்த் என்பதைக் குறிக்கிறது.
”நஃபீ மற்றும் இஸ்பாத் ஆகியவற்றைக் கொண்டு திக்ரு செய்யும் முரீது, இலாஹி அன்த மக்ஸூதீ வ ரிளாக்க மத்லூபீ – ‘என்
இறைவா! நீயே என் இலட்சியம், உன் பொருத்தமே என் இலக்கு’ என்று நபி (ஸல்) கூறியிருப்பதைப்
புரிந்து கொள்ளும் நிலை இது” என்று ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் சொல்கிறார்.
”நீங்கள் எத்திசை நோக்கினும் அல்லாஹ்வின் முகமே நிறைந்துள்ளது” (2:115)
என்னும் திருவசனத்தின் ரகசியம் இத்தகையோருக்கே திறக்கப்படுகிறது. இந்த அகப்பார்வையை எட்டிய பாக்கியவான்களே
”கண்களைத்
திறந்திட நிறை முகம்
கண்களை
மூடிட இறை மயம்
கண்களைத்
திறந்ததும் அவன் அவன்
காட்சியில்
வந்ததும் அவன் அவன்
அல்லாஹு அல்லாஹ்”
என்று ஸூஃபி ஞானி ஃபாரூக்கி ஷாஹ் ஃபள்லி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள்
பரவசமுற்றுப் பாடுவது போல் பாட இயலும்.
“நினைவுகூரப்படுவோனே! நீ நினைவுகூரப்பட வேண்டிய
தகுதிக்குத் தக யாம் உன்னை நினைவுகூரவில்லையே!”
நபி (ஸல்) இப்படிச்
சொல்லியிருப்பதைக் கொண்டு ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் தரும் விளக்கமாவது:
”அல்லாஹ் தன்
அடியானை நினைவு கூர்தலும் அல்லாஹ்வின் உதவியும் இருந்தாலே தவிர அடியான் தன் திக்ரில்
அல்லாஹ்வின் பிரசன்னத்திற்கு வந்து சேர முடியாது, அடியான் தன் திக்ரில் அல்லாஹ்வின்
ரகசியங்களையும் திருப்பண்புகளையும் வெளியாக்க முடியாது. அபூ யஜீதுல் பிஸ்தாமி (ரஹ்)
சொன்னது போல், ‘நான் அல்லாஹ்வை அடைந்தபோது அவன் என்னை நினைவு கூர்வது நான் அவனை நினைவு
கூர்வதை முந்தியிருக்கக் கண்டேன்.’ அடியான் தன் தானே சுயமாக திக்ரு செய்ய முடியாது.
தன் வழியாக அல்லாஹ்தான் திக்ரு செய்கிறான் என்பதை அவன் உணரவேண்டும்.”
பாஸ் கஷ்த் என்பது இறைவனிடம் மீளுதல் என்பதைக்
குறிக்கும் என்று கண்டோம். அதாவது படைப்புக்களை விட்டும் படைத்தவனிடம் மீளுதல் என்று
இதனை அர்த்தப்படுத்தும்போது அந்தப் படைப்புக்களில் சாதகனும் இருக்கிறான். எனவே, உண்மையான
மீளுதல் என்பது ஒருவர் தன்னை விட்டுமே இறைவனிடம் மீளுதலாகும். எனவே, பாஸ் கஷ்த் என்பது இறை நினைவில் மூழ்கியிருத்தல்
என்னும் இஸ்திக்ராக் நிலையைக் குறிக்கிறது
என்று ஸுஃபிகள் சொல்கின்றனர். இதனை விளக்க சுவையான நிகழ்வு ஒன்று சொல்லப்படுகிறது:
ஸூஃபி ஒருவருக்கு
இறை தியானத்தின்போது மனத்தில் பல்வேறு ஊசாட்டங்கள் வந்து கொண்டிருந்தன. அவற்றில் தூய்மையற்ற
எண்ணங்களும் இருந்தன. தன் மனம் இப்படி அழுக்காக இருக்கிறதே என்று அவர் பெரிதும் கவலைப்
பட்டார். தான் ஸூஃபித்துவத்தில் நேர்மையாக இல்லை என்று அவர் வெட்கினார். எனவே, அவரின்
ஷைஃகு அவரை வேறொரு ஸூஃபியிடம் அழைத்துச் சென்றார். அந்த ஸூஃபி இஸ்திக்ராக் என்னும்
நிலையில் இருப்பவர். அதாவது இறை நினைவில் தன்னை மறந்து மூழ்கியிருப்பவர். தன்னிடம்
ஆலோசனை கேட்டு வந்த சாதகரிடம் அந்த ஸூஃபி சொன்னார், ‘உன் பிரச்சனைக்குத் தீர்வு இறை
தியானத்தில் மூழ்குவதுதான், மயிர் பிளக்கும் அறிவு விவாதங்கள் அல்ல.’ அப்போது அந்த
சாதகர் ஒன்றை உணர்ந்து கொண்டார். அதாவது தனது நேர்மையின்மை, அவமானம், தேவைகள், ஆசைகள்
என்று சிந்தித்துக் கொண்டிருந்ததில் தன் நினைவிலேயே மூழ்கி இருந்துவிட்டார். அதுவே
இறை நினைவுக்குத் தடையாகி விட்டது.
விஷக் குளவிகள் ஒருவனைத் துரத்திக் கொண்டு வந்தன.
சட்டென்று அவன் நதியில் குதித்துவிட்டான்.
இந்தக் குறியீட்டின்
அர்த்தம்தான் என்ன? கேள்.
தண்ணீர்தான் திக்ரு – இறைவனை நினைவு கூர்தல்.
லா இலாஹ இல்லல்லாஹ்
– அல்லாஹ்வை அன்றி தெய்வமில்லை.
உள்ளமையில் இறைவன்
மட்டுமே இருக்கிறான்.
அந்தக் குளவிகள் என்ன? அவனின் காம எண்ணங்கள்
இவள் அவள் இவன்
அவன் இது அது.
தலை மேலே எழுகிறது. குளவிகள் கொட்டுகின்றன.
அவன் சட்டென்று
மீண்டும் முழுகுகிறான்.
தண்ணீரே உன் மூச்சாகி விடட்டும்.
தலை முதல் பாதம் வரை நதியாகிவிடு.
அப்போதுதான் குளவிகள் உன்னை விட்டுவிடும்.
நீ நதியை விட்டு விலகிப் போனாலும்
அப்போது அவை உன்னை
கவனிக்காது.
சூரியன் வந்துவிட்ட பின்னர்
விண்மீன்களை எவரும் தேடுவதில்லை.
இறைவனில் மூழ்கிப் போகும் ஒருவர் மறைந்து விடுவதில்லை.
அவர் இறைப் பண்புகளில் ஊறிப் போய்விடுகிறார்.
குர்’ஆனில் இருந்து சான்று வேண்டுமா?
’வ இன் குல்லுல் லம்மா
ஜமீஉல் லதைனா முஹ்ளரூன்’
’அவர்கள் அனைவரும் நிச்சயமாக
நம்மிடமே கொண்டுவரப் படுவார்கள்’
(36:32)
அந்தப் பயணிகளுடன்
இணைந்துவிடு.
நாம் எரிக்கும் விளக்குகள் அணைந்து விடுகின்றன,
சில வெகு சீக்கிரமே, சில விடியல் வரை.
மங்கலானவை சில, பிரகாசமானவை சில,
எல்லா விளக்குக்கும்
ஒரே எண்ணெய்தான்!
ஒரு வீட்டில் விளக்கு அணைந்தால்
பிற வீடுகளை அது பாதிப்பதில்லை.
அதுதான் மிருக
ஆன்மாவின் உதாரணம்.
புனித ஆன்மா அப்படிப்பட்டதன்று.
சூரியன் எல்லா வீடுகளின் மீதும் பிரகாசிக்கிறது.
அது சாயும்போது
எல்லா வீடுகளும் இருள்கின்றன.
உன் குருவின் திருவுருவம் ஒளியாகும்.
உன் பகைவர்களோ
இருளை நேசிக்கின்றனர்.
சிலந்தி தன்னிலிருந்தே வலை பின்னி
ஒளியின் மீது
திரையிட்டுக் கொள்கிறது.
காட்டுக் குதிரையை அதன் காலைப் பிடித்து
அடக்கி விடலாம் என்று எண்ணாதே.
கழுத்தைப் பிடி, கடிவாளம் இடு.
அறிவுடன் செயல்படு,
அப்புறம் சவாரி செய்.
சுய நிராகரிப்பு உனக்குத் தேவையாக உள்ளது.
பழைய ஒழுக்கங்களின் மீது அலுத்துக் கொள்ளாதே,
அவை பேருதவி புரிகின்றன,
இப்போதும்.*
உலகத் தேவைகள் மற்றும் கடமைகளுக்கான காரியங்களை நிறைவேற்றிய
பின்னர் முற்றிலுமாம இறைவனிடம் மீண்டு அவனின் நினைவில் மூழ்கி இருத்தல் என்னும் கருத்துள்ள
பாஸ் கஷ்த் என்னும் இந்தக் கோட்பாட்டினைச் நாம் நிறைவேற்ற நபி (ஸல்) அவர்களே அழகிய
முன் மாதிரியாக இருக்கிறார்கள். அவர்களை நோக்கி இறைவன் இப்படிச் சொன்னான்:
”உம் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்து கொண்டிருப்பீராக,
மேலும், அனைத்தையும் விட்டு அவனுக்காகவே ஆகிவிடுவீராக” (73:8)
இந்த நிலை “தபத்துல்”
என்று சொல்லப்படுகிறது. ஒரு முஸ்லிம் எந்த அளவுக்கு இறைவனின் நினைவில் மூழ்குதல் வேண்டும்
என்று இது காட்டுகிறது. இந்த இறைக் கட்டளை இன்னுமோர் இடத்திலும் வருகிறது:
’எனவே, நீங்கள் ஓய்ந்ததும் (இறைவனிடம்) ஈடுபட்டு முனைவீராக’ (94:7)
’மேலும், முழுமையாக நும் இறைவனிடம் சார்ந்துவிடுவீராக’ (94:8)
”தபத்துல்” என்னும்
இந்த நிலையை அடையும்படியான கட்டளை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே பிரத்யேகமானது, அதை
நாம் செய்ய வேண்டியதில்லை என்று எவரேனும் நினைத்தால் அது தவறான சிந்தனையும், வழிகேடும்
ஆகும். அப்படி நினைப்பவர் படைப்புக்களுடனான தொடர்புகளில் மூழ்கி உழன்று தன் இறை நம்பிக்கையைப்
பழுதாக்கிக் கொள்வார் என்பதில் ஐயமில்லை.
இந்த நிலையை நபியின் வழிகாட்டுதல்படி நபித்தோழர்கள் அடைந்திருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து இன்று வரை அடுத்தடுத்த தலைமுறையின் இறைநேசர்கள் இந்த நிலையை அடைந்து வருகின்றனர். இந்த நிலையை மிக ஆழமாக அடைந்திருந்த காரணத்தால் அருமை நபியின் திருமகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு “பதூல்” என்னும் சிறப்புப் பெயரும் உண்டாயிற்று.
”தபத்துல் என்றால் அனைத்தை விட்டும் துண்டித்துக்
கொண்டு அல்லாஹ்விடம் ஒன்றித்துவிடுதல். எல்லா உறவுகளையும் எவன் துண்டித்தானோ அவன்தான்
அல்லாஹ்வுடன் ஒன்றிக்க முடியும். இல்லை என்றால் அல்லாஹ்வுடன் ஒன்றித்து லயிப்பது –
வஸ்லு – கிடைக்காது. அவரை ’வாசில் ப ஹக்’
என்று சொல்ல முடியாது. அவர் ’வாஸில் ப துன்யா’
– உலகத்துடன் ஒன்றித்தவராகவே இருப்பார். எல்லாவற்றையும் துண்டித்துக் கொண்டு அல்லாஹ்வுடன்
ஒன்றித்துவிடுவது என்றால் என்ன அர்த்தம்? காட்டுக்குப் போய்விடுவதா? காடும் மா சிவல்லாஹ்
(அல்லாஹ் அல்லாதவை)தானே? ஒருவன் காட்டுக்குப் போய் மலைக் குகையில் உட்கார்ந்துவிட்டான்.
காடும் மா சிவல்லாஹ், மலையும் மா சிவல்லாஹ், குகையும் மா சிவல்லாஹ். அவையும் கைருல்லாஹ் (அல்லாஹ்வுக்கு
வேறானவை)தானே? அவற்றை விட்டு எப்படி அல்லாஹ்விடம் ஓடுவாய் நீ? எனவே, தபத்துல் என்றால்
எல்லா சிருஷ்டிகளை விட்டும் கல்பை (இதயத்தை)ப் பிடுங்கி அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுவது!
அவை நம் கல்பில் உட்கார்ந்திருந்தால் நாம் அல்லாஹ்வை நினைத்தோம் என்று சொல்லவே முடியாது.
”ஜோ ஹே சப் கோ பூல் ஜாத்தா ஒ ஃகுதா கோ யாத் கர்த்தா - ’எவர் அனைத்தையும் மறந்து விடுகிறானோ அவர்தான்
இறைவனை நினைவு கூர்கிறார்’ என்று ஞானிகள் பாடுகின்றனர். ஆனால் இந்த நிலையை அவ்வளவு
லேசாக அடைய முடியாது. தொழுகைக்குத் தலைமை தாங்கும் இமாம் பதவியில் இருக்கும் ஒரு மார்க்க
அறிஞருக்கும்கூட, தொழுகையின் நிலையிலும் இந்த நிலை உண்டாவதில் தடை வந்துவிடுகிறது.
‘ஜோ இமாம் பன் கயா ஹே உசே ஃபிக்ரே முப்ததீ ஹே’
– எவர் இமாம் ஆகிவிட்டாரோ அவருக்கு தன் பின்னால் நின்று தொழுபவரைப் பற்றிய சிந்தனை
உண்டாகி விடுகிறது’ என்று மகான் பாடுகிறார்கள்.”
எனவே பாஸ் கஷ்த்
அல்லது தபத்துல் என்னும் இந்த நிலை உண்டாவதற்கு தனியான கால அவகாசமும், ஓர்மையுடன் பயிற்சியில்
ஈடுபடுவதும் அவசியமாகும்.
இந்த நிலையை பீரானே
பீர் சய்யிதுனா கவ்ஸுல் அஃ’ழம் முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) அவர்கள்
அடைந்திருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள், “மா
ஃபில் அர்ளி ஃபில் அர்ளி, லைச ஃபில் கல்பி இல்லல்லாஹ்” – ’மண்ணின் மீது உள்ளவை
மண்ணின் மீதே உள்ளன, என் மனத்தில் அல்லாஹ்வை அன்றி யாரும் இல்லை.’ இத்தகைய நிலையை நாம்
அடைய அல்லாஹ் அருள் புரிவானாக!
* தி எஸ்ஸென்ஷியல் ரூமி” என்னும் நூலில் கோல்மன் பார்க்ஸ் “திக்ரு”
என்னும் தலைப்பில் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.
No comments:
Post a Comment