Wednesday, June 18, 2025

ஃகல்வத் தர் அஞ்சுமன் (கூட்டத்தில் தனித்திருத்தல்)

 











நக்‌ஷ்பந்திய்யா நெறியின் ஆன்மிகக் கோட்பாடுகளுள் நான்காவது “ஃகல்வத் தர் அஞ்சுமன்” என்பதாகும். இதன் நேரடியான அர்த்தம் “கூட்டத்தில் தனித்திருத்தல்” என்பதாகும்.

            ஃகல்வத் என்றால் தனிமை என்று பொருள். அஞ்சுமன் என்றால் சமுதாயம், குழு என்று பொருட்படும்.

            ஃகல்வத் என்பது அறபிச் சொல். ஃபார்சி, உருது மொழிகளில் இதற்கு தன்ஹாப்பன், தன்ஹாயி என்னும் சொற்கள் உள்ளன.

            தனித்திருத்தல் என்பதன் பொருள் வேறு எவருமே நம்முடன் இல்லாமல் ‘தான் மட்டும் இருப்பது’ என்று விளங்கி விடக்கூடாது. ஏனெனில், தான் மட்டும் தனித்திருக்கும் நிலை எந்தப் படைப்புக்கும் கிடையாது. அது இறைவனுக்கு உரிய நிலை ஆகும்.

            இறைவனுடன் தனித்திருக்கும் நிலை நபி (ஸல்) அவர்களுக்கு உரியதாகும். ஏனைய படைப்புக்களை விட்டும் நபி (ஸல்) அவர்களால் விலகி இருக்க இயலும். ஏனைய படைப்புகள் அனைத்துக்கும் இறைவனுடனும் நபி (ஸல்) அவர்களுடனும் இருந்து பிறருடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கும் நிலையே ஃகல்வத் என்னும் தனிமை நிலையாகும்.

நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான்” (57:4)

என்னும் திருவசனத்தின்படியும்,

உங்களுக்குள் அல்லாஹ்வின் திருத்தூதர் இருக்கிறார் என்பதை அறிக” (49:7)

என்னும் திருவசனத்தின்படியும், நம்முடன் அல்லாஹ்வும் அவனின் திருத்தூதரும் இருக்கின்றனர். குருநாதர் (முர்ஷித்) தன் சீடர்களுக்கு இந்த உடனிருப்பின் உணர்வு நிலையை உண்டாக்கித் தருகிறார்கள்.



    

எனவேதான், “நமது ஞானவழியில் தன்ஹாப்பன் (தான் மட்டும் தனித்திருத்தல்) என்பது கிடையாது. அல்லாஹ்வுடனும் ரசூலுடனும் இருக்கும் நிலைதான் உண்டு” என்று அல்லாமா அலீமி ஷாஹ் ஆமிரி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் சொன்னார்கள்.

            உருது இலக்கியத்தில் மிகவும் புகழ் பெற்ற ஒரு கவிதை அடி ’ஃகல்வத் தர் அஞ்சுமன்’ என்னும் கருத்தினைத் தருகிறது. அதனை முஃ’மின் ஃகான் முஃ’மின் எழுதியுள்ளார்:

(தும் மேரே பாஸ் ஹோத்தே ஹோ கயா / ஜப் கோயீ தூஸ்ரா நஹீன் ஹோத்தா)

”நீ என்னுடன் எப்போதும் இருந்து விடுகின்றாய்

இரண்டாம் நபர் எவரும் இல்லாத போதெல்லாம்”

            ஃகல்வத் தர் அஞ்சுமன் என்பது வெளிப்படையில் மக்களுடன் இருப்பதும் அந்தரங்கத்தில் இறைவனுடன் இருப்பதுமாகும்” என்று நக்‌ஷ்பந்திய்யா நெறியின் குருவான ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் கூறுகிறார்.



            








தனித்திருத்தல் என்பது இரண்டு வகைப்படும்:

1.      புறத் தனிமை

2.      அகத் தனிமை

மக்கள் இல்லாத ஓர் இடத்தில் சாதகன் அமர்ந்து கொள்வது புறத் தனிமை ஆகும். இது ஆரம்ப நிலைச் சாதர்களுக்கு அமயம் சமயம் தேவைப்படுவதாகும். அப்போதுதான் அவர்கள் மன ஓர்மையுடன் இறை தியானத்தில் ஈடுபட முடியும். இதில் முதிர்ச்சி அடையும்போது அகத் தனிமை என்னும் நிலை அருளப்படும்.

திக்ருல்லாஹ் என்னும் இறைதியான நிலை ஒருவரை மிகைத்துவிடும் போது அகத் தனிமை உண்டாகிவிட்டது என்று அறிந்து கொள்ளலாம். அப்போது அவரின் இதயபூர்வமான தியானம் (திக்ரே கல்பீ) எந்த அளவுக்கு இருக்கும் என்றால் ”மக்கள் குழுமியுள்ள இடத்தில் அவர் நுழையும்போதும் அவருக்குத் தன் இதயத்தின் திக்ருடைய குரலே கேட்கும், மக்களின் பேச்சுக் குரல் கேட்காது” என்று சொல்லப்படுகிறது. இது அகத் தனிமை முழுமை அடைந்துவிட்டதன் அடையாளம் எனப்படுகிறது.

வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும்

அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் தடுத்துவிடாத நபர்கள்” (24:37)

என்று குர்’ஆன் இத்தகைய நிலையை அடைந்தோரைச் சுட்டுவதாக ஸூஃபிகள் சொல்கின்றனர்.

            இந்தத் திருவசனத்தை நக்‌ஷ்பந்திய்யா நெறியின் முதல்வரான ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் இக்கோட்பாட்டின் ஆதாரம் என்று காட்டிய சுவையான நிகழ்வு ஒன்று உள்ளது:

            பஹாவுத்தீன் அவர்கள் மக்காவை நோக்கிச் செல்லும் வழியில் ஹிரத் என்னும் ஊரினை அடைந்தபோது அவ்வூரின் அமீர் (ஆணையர்) ஆன ஹுசைன் என்பார் மகான் அவர்களை வரவேற்று கண்ணியப்படுத்தும் நோக்கில் ஒரு சபை கூட்டினார்.

சபையில் அவர் மகானிடம் கேட்டார்: “உங்களிடம் சப்தமுள்ள திக்ரு, அல்லது பயண ஆரவாரம், அல்லது ஸூஃபிகளின் இசையும் கவிதையும் என்று எதுவுமே இல்லையே? உங்கள் பாதைதான் என்ன?” 

ஷாஹ் பஹாவுத்தீன் (ரஹ்) அவர்கள் பதில் சொன்னார்கள், “அப்துல் ஃகாலிக் குஜ்தவானி அவர்களது கூட்டத்தாரின் மிகத் தூய்மையான வார்த்தைகள் ஃகல்வத் தர் அஞ்சுமன் (கூட்டத்தில் தனித்திருத்தல்) என்பதாகும். யாம் அவர்களின் வழியையே பின்பற்றுகிறோம்.”

“கூட்டத்தில் தனித்திருத்தல் என்றால் என்ன?” என்று அமீர் வினவினார்.

“வெளிப்படையில் மக்களுடன் இருப்பதும் அந்தரங்கத்தில் அல்லாஹ்வுடன் இருப்பதுமாகும்” என்று மகான் சொன்னார்கள்.

இதைக் கேட்டு அமீர் பெரிதும் வியப்படைந்தார். அப்படி இருப்பது நடைமுறையில் சாத்தியம்தானா என்று கேட்டார்.

மகான் பதில் சொன்னார்கள்: “அப்படி இருப்பது சாத்தியம் இல்லை என்றால் அல்லாஹு த’ஆலா அதனைத் தன் குர்’ஆனில் குறிப்பிட்டிருக்க மாட்டான். ஆனால் அதை அவன் இவ்வாறு சுட்டியுள்ளான்: வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் தடுத்துவிடாத நபர்கள்’ (24:37). இதுவே எமது வழியாகும்.”

            ஞான வழியில் தனிமைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் சகவாசத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று கருதிவிடக்கூடாது. தனிமையும் சகவாசமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. அவற்றுக்குச் சம மதிப்பு உண்டு. இதனால்தான், நக்‌ஷ்பந்திய்யா நெறியின் முதல்வர் ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: ”சகவாசமே நமது வழியாகும், நன்மை சேர்ந்திருப்பதில் உள்ளது(தரீக்கத்துனா அஸ்-ஸுஹ்பத் வல் ஃகைரு ஃபில் ஜமிய்யத்) புறத் தனிமையில் பிரபல்யம் உண்டாகிவிடுகிறது. பிரபல்யத்தில் இருந்து சீர்கேடு உண்டாகிறது. நமது நலம் நம் சபையிலும் சகவாசத்திலும் இருக்கிறது. ஆனால் ஒன்றுக்கு ஒன்றில் சுயத்தின் அழிவு (ஃபனா) இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.”

            அப்துல் ஃகாலிக் குஜ்தவானி (ரஹ்) சொன்னதாவது: “குருநிலையின் சடங்கு என்னும் கதவை மூடிவிடு, தோழமையின் கதவைத் திறந்துவிடு. ஃகல்வத்தின் (தனிமையின்) கதவை மூடிவிடு, ஸுஹ்பத்தின் (சகவாசத்தின்) கதவைத் திறந்துவிடு.”



            









மக்களை விட்டு ஒதுங்கித் தனிமையில் இருத்தல் என்பது ஆரம்ப நிலையில் உள்ள சாதகர்களுக்கு பரிந்துரைக்கப்படும் ஒன்றுதான். பக்குவம் அடைந்தோர் மக்களுடன் இருக்கும்போதே இதயத்தால் தனித்து இறைவனுடனும் இருக்க வேண்டும் என்பதுதான் இக்கோட்பாடு. அதனால்தான் இது வெறுமனே ஃகல்வத் என்று சொல்லப்படாமல் ஃகல்வத் தர் அஞ்சுமன் எனப்படுகிறது. இக்கருத்தில் சய்யித் அல்-ஃகர்ராஸ் (ரஹ்) சொல்வதாவது:

            ”பூரணத்துவம் என்பது அற்புத சக்திகளை வெளிப்படுத்துவதில் இல்லை. ஆனால், மக்களுடன் அமர்ந்திருப்பது, கொடுக்கல் வாங்கல் செய்வது, திருமணம் செய்து பிள்ளைகள் பெறுவது என்று எல்லாம் செய்தபடி ஒரு கணம் கூட அல்லாஹ்வின் பிரசன்னத்தை விட்டு நீங்காமல் இருப்பதே பூரணத்துவம் ஆகும்.”

            இது எப்படிச் சாத்தியப்படும்? என்று வினா எழலாம். உங்களின் அனைத்துக் காரியங்களிலும் வெளியில் ஈடுபடும் அதே நேரத்தில் அகத்தில் அதை விட்டும் விடுதலையாகி இருக்க வேண்டும். அதாவது தாமரை இலை மீது உருளும் தண்ணீரைப் போல் நீங்கள் படைப்புக்களில் மனத்தை ஒட்டாமல் வைத்திருக்க வேண்டும். எது ஒன்றிலும் உங்களை அடையாளப்படுத்தாமல் இருங்கள் என்று ஞானியர் கூறுகின்றனர்.

            அப்துல் ஃகாலிக் குஜ்தவானி (ரஹ்) அவர்களின் ஃகலீஃபாக்களில் ஒருவரான ஃகாஜா அவ்லியா கபீர் (ரஹ்) அவர்கள் இக்கோட்பாடு பற்றி இப்படி விளக்கினார்கள்: “கூட்டத்தில் தனித்திருத்தல் என்பதாவது நீ சந்தையில் நடந்து போனாலும் ஒரு வார்த்தையையும் கேட்காத அளவுக்கு இறை தியானத்தில் மூழ்கியிருப்பதாகும்.”

            அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களின் தோளைப் பிடித்து அவரிடம் நபி (ஸல்) சொன்னார்கள்:

“இவ்வுலகில் ஒரு அந்நியனைப் போல் இரு, அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல் இரு.” (ஸஹீஹுல் புஃகாரி #6416).

            ”இவ்வுலகில் அந்நியனைப் போல் இரு” என்பது மக்களுக்கு மத்தியில் இருந்தபோதும் இறைவனுடன் தனித்திருக்கும் நிலையைக் குறிப்பதாக ஸூஃபிகள் சொல்கின்றனர்.

            இக்கருத்தில் ஷைஃகு அபூ சயீத் அஹ்மத் இப்னு ஈசா அல்-ஃகர்ராஸ் (ரஹ்) அவர்கள் பாடுகிறார்:

            ”உன்னுள் காதலியுடன் உவந்தே இருப்பதில்

            உலகிற்கு நீ ஓர் அந்நியன் ஆகிவிடு!

            அத்தகைய அழகு அருளப்பட்ட நபர்கள்

            அரிது அரிது இவ்வுலகில் அரிதே!”

            இத்தகைய மகான்களின் இதயம் என்பது மிகவும் விரிவடைகிறது. எந்த அளவுக்கு என்றால், “கல்புல் முஃமினி அர்ஷுல்லாஹ்” – இறை நம்பிக்கையாளனின் இதயம் அல்லாஹ்வின் சிம்மாசனம் என்னும் நபிமொழிக்கு அவர்களே உதாரணங்கள் ஆகின்றனர். இந்த நபிமொழியை, “இறைவனின் அர்ஷு இறைநம்பிக்கையாளனின் இதயம் ஆகிவிடுகிறது” என்றும் அர்த்தப் படுத்தலாம். அதாவது, இறைநேசர்களின் இதயமும் அர்ஷும் வேறு வேறு அல்ல என்னும் நிலை உண்டாகிவிடுகிறது.

No comments:

Post a Comment