Sunday, June 29, 2025

யாத் தாஷ்த் (இறைவனின் நினைவில் மனம் குவிதல்)

 


நக்‌ஷ்பந்திய்யா நெறியின் எட்டாம் கோட்பாடான யாத் தாஷ்த் என்பது ஏழாவது கோட்பாடான நிகாஹ் தாஷ்த் என்பதன் தொடர்ச்சியே ஆகும்.

            யாத் என்றால் நினைவு என்று முன்பே கண்டோம். யாத் தாஷ்த் என்பது அல்லாஹ்வின் உடனிருத்தலை உணர்வதில் நிலைத்திருப்பதாகும்.

நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான்” (57:4)

என்று குர்’ஆன் அறிவிக்கிறது. அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்னும் உணர்வையே தவ்ர் குகையில் இருந்தபோது நபி (ஸல்) தன் அணுக்கத் தோழரும் பிரதான கலீஃபாவுமான சய்யிதுனா அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு போதித்தார்கள்:

“கவலைப் படாதீர், நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” (9:40)

            இந்தப் பிரக்ஞை நிலையே, அதாவது இறைவனின் உடனிருத்தல் பற்றிய உணர்வே இறை நம்பிக்கையில் மிகவும் சிறந்த நிலை என்று நபி (ஸல்) சொல்கிறார்கள்:

إِنَّ أَفْضَلَ الْإِيمَانِ أَنْ تَعْلَمَ أَنَّ اللَّهَ مَعَكَ حَيْثُ مَا كُنْتُ

“நிச்சயமாக இறை நம்பிக்கையில் சிறந்தது நீ அங்கே இருந்தாலும் அல்லாஹ் உன்னுடன் இருக்கிறான் என்பதை நீ அறிவதாகும்.” (தப்ரானீ #8791)


            
அல்லாஹ் நம்முடன் இருத்தலை இறைஞானியர் பல்வேறு கோணங்களில் அவதானித்து வகைப்படுத்தித் தந்திருக்கின்றனர். ஸூஃபி ஞானி மவ்லவி ஷைஃகு அப்துல் காதிர் மன்ப’ஈ (எ) இர்ஃபானீ ஷாஹ் நூரி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் எழுதுகிறார்கள்:

            ”அல்லாஹ் நம்முடன் இருக்கிறான். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இவ்விஷயத்தை குர்’ஆனும், ஹதீஸும் பல்வேறு விதங்களில் பல்வேறு கோணங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளது. உதாரணமாக சில:-

1.      ம’இய்யத் (உடன் இருக்குதல்)

2.      குர்பத் (சமீபமாக இருக்குதல்)

3.      அக்ரபிய்யத் (மிக நெருக்கமாக இருக்குதல்)

4.      இஹாதத் (சூழ்ந்து இருக்குதல்)

5.      ஷஹாதத் (பிரசன்னமாக இருக்குதல்)

6.      சம்மியத் (நீக்கமற நிறைந்து இருக்குதல்)

7.      ஹக்கியத் (சத்தியமாக, அசல் மூலமாக இருத்தல்)

8.      அவ்வலியத் (ஆரம்பமாக இருத்தல்)

9.      ஆகிரியத் (முடிவாக இருத்தல்)

10.   லாஹிரியத் (வெளிரங்கமாக இருத்தல்)

11.   பாதினியத் (உள்ரங்கமாக இருத்தல்)

12.   உஸ்’அத் (விசாலமாக இருத்தல்)

13.   நூரியத் (பிரகாசமாக இருத்தல்)

14.   பாக்கியத் (தரிபாடாக இருத்தல்)

15.   ஹகீகதே முஹம்மதீ (நபி (ஸல்)யின் நூராக இருத்தல்)

16.   அய்னியத் (அவன் தானே வெளியாகி இருக்குதல்)”

இவை ஒவ்வொன்றுக்கும் குர்’ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை விளக்கமாக அறிய விரும்புவோர் இர்ஃபானீ ஷாஹ் நூரி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் எழுதிய “குர்’ஆன் ஹதீஸ் ஒளியில் அல்லாஹ் நம்முடன்” என்னும் நூலினை வாசிக்கலாம்.

“அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்று குர்’ஆன் அறிவித்துவிட்டது. எனவே அதை அறிய குர்’ஆனை ஒருவர் வாசிப்பதே போதுமானது. ஆனால், அவன் எவ்வாறு நம்முடன் இருக்கிறான் என்பதை அறிய தரீக்கத் என்னும் ஞான நெறி அவசியமாகிறது, குருநாதரின் சகவாசமும் வழிகாட்டலும் அவசியமாகிறது” என்று ஸூஃபிகள் சொல்கின்றனர்.

அல்லாஹ்வின் உடனிருத்தல் பற்றிய பிரக்ஞை இடையறாமல் தொடர்கின்ற, காயிம் தாயிம் ஆகிவிட்ட நிலையே  யாத் தாஷ்த் என்று சுட்டப்படுகிறது. இதனால்தான், “யாத் தாஷ்த் என்பது மாட்சிமை மிக்க அல்-ஹக்கு (சத்திய இறைவன்) மீதான பிரக்ஞை நிலைத்திருப்பதற்குச் சொல்லப்படும். அதாவது, அந்த உணர்வு மறையாமல் இருப்பதாகும்” என்று உபைதுல்லாஹ் அஹ்ரார் அவர்கள் சொல்கிறார்.

நக்‌ஷ்பந்திய்யா நெறியின் ஞானியர் இந்த யாத் தாஷ்த் என்பதை இஹ்சான் என்னும் நிலையுடன் அடையாளம் கண்டுள்ளனர். அதனை விளங்க இஹ்சான் என்றால் என்ன என்று அறிவது அவசியமாகும்.

            ஹதீஸே ஜிப்ரீல் என்னும் பிரபலமானதும் முக்கியமானதுமான நபிமொழியில், இஸ்லாம், ஈமான், மற்றும் இஹ்சான் ஆகிய மூன்று மார்க்க நிலைகள் – தீனின் மூன்று அம்சங்கள் – பற்றி வானவர் கோன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வினவ, அவற்றுக்கான வரையறைகளை நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள். அதில், இஹ்சான் என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் சொன்னதாவது:

‏ أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ

”அல்லாஹ்வை நீ பார்ப்பது போல் வணங்க வேண்டும், அவனை நீ பார்க்க முடியாவிட்டால் நிச்சயமாக அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் (என்னும் உணர்வுடன் வணங்க வேண்டும்)” (ஸஹீஹுல் புஃகாரி #50; ஸஹீஹ் முஸ்லிம் #8)

            இந்த ஹதீஸை இறைநேசர்கள் ஸூஃபித்துவம் என்பதன் அடித்தளம் (பினாயே தஸவ்வுஃப்) என்று கூறியுள்ளனர். எனவேதான் ஸூஃபித்துவம் என்பது இல்முல் இஹ்சான் (இஹ்சான் பற்றிய அறிவுத் துறை) என்று சொல்லப்படுகிறது.

இந்த ஹதீஸ் இரண்டு அகநிலைகளைக் குறிப்பிடுகிறது:

1.      முஷாஹதா : அல்லாஹ்வை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு.

2.      முராக்கபா : அல்லாஹ் தன்னைப் பார்க்கிறான் என்னும் உணர்வு.

யாத் தாஷ்த் என்பதை சிலர் முஷாஹதா என்னும் நிலையுடனும், சிலர் முராக்கபா என்னும் நிலையுடனும் அடையாளம் கண்டு விளக்கியுள்ளனர்.

உதாரணமாக, உஸ்மான் நூரீ தோப்பாஷ் அவர்கள் இதனை முராக்கபா என்னும் கோணத்தில் இப்படி விளக்குகிறார்:

”யாத் தாஷ்த் என்பது எல்லாம் வல்ல இறைவனின் பிரசன்னத்தில் நிலைத்திருப்பது பற்றிய பிரக்ஞையை அடைவதும் அந்த விழிப்புணர்வுடன் செயல்படுவதுமாகும். இதனை முராக்கபா என்றும் சொல்வர். அல்லாஹ் தன் திருவசனம் ஒன்றில் அறிவிக்கிறான்: ‘யாமே மனிதனைப் படைத்தோம், அவனின் மனம் அவனிடம் என்ன ஊசாடுகிறது என்பதையும் யாம் அறிவோம். அவனின் பிடரி நரம்பை விடவும் அவனிடம் யாம் நெருங்கியுள்ளோம்’ (50:16). எனவே, ஈமானின் அகமியமான இஹ்சான் என்னும் உணர்வை ஒருபோதும் இழந்துவிடாமல் இருப்பது அவசியமாகும். அதாவது ஒவ்வொரு கணமும் அல்லாஹ் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், தன் மனத்தின் நிலையை அறிகிறான் என்னும் பிரக்ஞை இருக்க வேண்டும். இந்த உணர்வு பாவங்களுக்கு எதிரான பாதுகாப்புக் கவசம் ஆகும். ஏனெனில், ஒருவரின் இதயம் எப்போதும் தன் ரட்சகனுடன் இருக்கும்போது, தான் இறை பிரசன்னத்தை விட்டு நீங்காமல் இருப்பதை உணர்வும்போது அவர் எப்படிப் பாவம் செய்ய முடியும்?”

 வேறு சிலர் யாத் தாஷ்த் என்பதை முஷாஹதா (அகக் கண்ணால் அல்லாஹ்வை தரிசித்தல்) என்னும் நிலையுடன் அடையாளப்படுத்தி விளக்குகின்றனர். உதாரணமாக, ரஷாஹத் ஐனுல் ஹயாத் என்னும் நூலில் எழுதப்பட்டுள்ளது: “யாத் தாஷ்த் என்பது சாட்சி காணுதல் (ஷுஹூது) ஆகும். அதாவது அவசியமான காதலின் (வாஜிபுல் இஷ்க்) [அதாவது, இறைக்காதலின்] காரணத்தால் இதயத்தில் சாட்சிநிலை (ஷுஹூது) மிகைத்திருப்பதாகும்.”

இந்த இறைக்காதல் ஒருவரின் இதயத்தில் உண்டாகித் தரிப்பட்டுவிட்டால் அப்புறம் அவர் உலகில் எப்பணியில் இருந்தாலும் இந்த பிரக்ஞை நிலை மாறாமல் இருக்கும். ஒருவரின் ’ஆன்மிக மாற்றம்’ முழுமை அடைவதற்கு முன் உள்ள கட்டங்களில் இதுவே கடைசிக் கட்டமாகும். இறைக்காதல் என்பது சாதகர் தன் ’அனா’ என்னும் ஆணவத்தை, தன்முனைப்பை இழந்ததற்காக வழங்கப்படும் சன்மானமாகும். ”இந்நிலை எட்டப்படும்போது சாதகர் தன் சுயத்தை இழந்ததை கவனிக்காத வண்ணம் அவரின் மீது ஹக்கின் புறத்தில் இருந்து ஆனந்த நிலை உண்டாகிவிடுகிறது” என்கிறார் டெரென்ஸ் நூனிஸ்.

ஒருவர் உலகியல் பணிகளில் ஈடுபட்டிருக்கும்போதும் உள்ளம் இறை நினைவில் மூழ்கி லயித்திருக்க்கும் நிலையைக் குறிப்பிட நக்‌ஷ்பந்திய்யா நெறியில் ஒரு சொலவம் உண்டு:

தஸ்த் ப-கார் தில் ப-யார்

(கைகள் வேலையில் ஈடுபட்டுள்ளன; இதயம் இறைவனிடம் இருக்கிறது)

”இது நக்‌ஷ்பந்திய்யா நெறியின் அடையாளம் ஆகும். இந்தப் பயிற்சியால்தான் சாதகன் (சாலிக்) இந்த ஸூஃபி நெறியின் முக்கியமான ஆன்மிக நிலையை அடைய முடியும்” என்கிறார் ஹஜ்ரத் மவ்லானா முஹம்மத் அப்துஸ் சத்தார் ஃகான் நக்‌ஷ்பந்தி காதிரி (நூல்: நக்‌ஷ்பந்தி டீச்சிங்ஸ் லத்தாஇஃப் & முராக்கபாத், ப.27).

யாத் தாஷ்த் என்பது உன்னதமான அகநிலை என்று புரிகிறது. ஆனால் ஆரம்ப நிலையில் பயிற்சி பெற்று வரும் சாதகன் இதனை எப்படி அடைவது? என்று வினா எழலாம். அதற்கான பயிற்சிகளை முறைப்படி செய்யும்போது இந்த நிலை வாய்க்கும். அடிப்படையான சில விடயங்களைப் புரிந்து கொண்டு பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்.

யாத் தாஷ்த் என்னும் எட்டாவது கோட்பாடு அதற்கு முந்தைய கோட்பாட்டின் தொடர்ச்சி என்று இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டேன். இந்நிலை இதற்கு முந்தைய மூன்று கோட்பாடுகளின் தொடர்ச்சியாக ஏற்படுவது என்று ஃகாஜா உபைதுல்லாஹ் (ரஹ்) சொல்கிறார்:

“யாத் கர்த் என்பது திக்ரு செய்தல் என்னும் காரியமாகும். இது கலிமா தய்யிபா என்னும் பரிசுத்த நறுமண வாசகத்தை நாவால் ஓதுவதாகும். பாஸ் கஷ்த் என்பது கலிமா வாசகத்தைச் சொல்லி திக்ரு செய்யும்போது இதயத்தை ஹக்கின் பக்கம் திருப்பி, ‘என் இறைவா, நீயே எனது இலக்கு, உன் பொருத்தமே எனது லட்சியம்’ என்னும் உணர்வுடன் இருப்பதாகும். நிகாஹ் தாஷ்த் என்பது சொற்கள் இன்றி இதயத்தில் மௌனமாகவே ஹக்கிடம் திரும்பி முன்னோக்கிய நிலையில் உறுதிப் படுவதாகும். யாத் தாஷ்த் என்பது ’நிகாஹ் தாஷ்த்’தில் நிலைத்திருப்பதாகும்.”

இதிலிருந்து இந்த நான்கு நிலைகளும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்ததாக இல்லை என்றும், ஒரே செய்முறையின் தொடர்ச்சியாக மலர்பவை என்றும் விளங்கலாம்.

லா இலாஹ இல்லல்லாஹ் என்னும் கலிமா தய்யிபாவை திக்ரு செய்வதே இந்த நிலைகளுக்கு வழிமுறையாக அமைந்துள்ளது. அதனை எப்படி திக்ரு செய்ய வேண்டும் என்பதில் தமது ஞான விளக்கங்களுக்கு ஏற்ப தரீக்கா (ஞான நெறி)கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கின்றன. நக்‌ஷ்பந்திய்யா நெறியில் கையாளப்படும் வழிமுறையை இங்கே எழுதுகிறேன்.

ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் எழுதுகிறார்: “யாத் தாஷ்த் என்பது திக்ரு செய்யும் சாதகர் ஒவ்வொரு மூச்சிலும் நஃபி (மறுத்தல், negation) மற்றும் இஸ்பாத் (உறுதிப்படுத்துதல், தரிப்படுத்துதல், affirmation) ஆகியவற்றால் தன் இதயத்தை எப்போதும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பிரசன்னத்தில் வைத்திருப்பதாகும். அப்படிச் செய்யும்போது அவர் இறைவனது ஏகமான தனித்த சுயத்தின் ஒளிச்சுடர்கள் (அன்வாரே ஜாத்துல் அஹதிய்யா) வெளிப்படுவதை உணர்கிறார்.

   ”அதன் பின்னர் அவர் நான்கு வகையான எண்ணங்களில் முதல் மூன்று வகையான எண்ணங்களை விட்டுவிடுகிறார்: 1) தன்முனைப்பான எண்ணங்கள், 2) தீய எண்ணங்கள், 3) வானவரின் எண்ணங்கள், 4) சத்திய (ஹக்கானி) எண்ணங்கள். இந்த நான்காம் வகையான எண்ணங்கள் மட்டுமே அவரின் மனத்தில் தரிப்படுகின்றன.”

இந்த நிலைகளில் சாதகர் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதைப் பின்வருமாறு ஓத வேண்டும். தலை குனிந்து தன் அடிவயிற்றில் இருந்து லா இலாஹ என்பதை மேலே இழுத்து வலது தோளுக்குக் கொண்டு சென்று இல்லல்லாஹ் என்பதை நெஞ்சின் இடது புறத்தின் கீழ்ப்பகுதியில் இதயத்தை நோக்கி அடிப்பது போல் தலையை அசைத்து மனத்தில் ஓத வேண்டும். இது ஒரு விடுத்தம் ஆகும். இது போல் ஒரே உள்மூச்சில் மூன்று முறை செய்ய வேண்டும். அடுத்து வெளிமூச்சில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று மனத்தில் ஓத வேண்டும். மீண்டும் இதே போல் செய்ய வேண்டும். இது ஆரம்ப நிலைப் பயிற்சி ஆகும். இதில் பக்குவம் அடைய அடைய ஒரே மூச்சில் ஏழு, ஒன்பது, பதினொன்று என்று ஒற்றைப் படையாக எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே போக வேண்டும். பூரண நிலை அடைந்தோர் ஒரே மூச்சில் இருபத்தைந்து முறை திக்ரு செய்யும் ஆற்றலை அடைகின்றனர்.

இது போல் பிற தரீக்காக்களில் அவரவர் விளக்கங்கள் மற்றும் செய்முறை (மஸ்லக்) அடிப்படையில் ஓதும் முறைகள் வடிவமைக்கப் பட்டிருக்கும். தான் எந்த தரீக்காவில் தன் குருநாதரை ஒருவர் அடைகிறாரோ அந்த குருநாதரின் வழிகாட்டுதல் படி திக்ரில் ஈடுபட வேண்டும்.

No comments:

Post a Comment