Sunday, June 29, 2025

உகூஃபே ஜமானி (நேரத்தைப் பேணுதல்)

 


கால நிர்வாகம் (time management) என்பது ஆன்மிகத்தில் மிக முக்கியமானது. தனக்குக் கிடைக்கும் கால அவகாசங்களை வீணாக்கும் எவரும் ஆன்மிகத்தில் முன்னேற்றம் அடைய முடியாது.

            படைப்புக்களை அடைவதற்கே காலம் கருதிச் செயல்பட வேண்டியது அவசியம் ஆகிறது. எனில், படைத்தவனை அடைய காலம் பேணுதல் எவ்வளவு அவசியம் என்று சொல்லத் தேவையில்லை.

காலத்தின் மீதாணை!

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்” (103:1-2)

என்கிறது குர்’ஆன். மனிதன் நட்டமடைவதில் கால விரயம் முக்கியமான ஒரு காரணம் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. எவர் இறை நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து, சத்தியத்தையே பேசி, பொறுமையுடன் இருந்தாரோ அவரைத் தவிர என்றும் இந்த அத்தியாயம் சொல்கிறது. எனவே, இந்த அம்சங்களைப் பேணுவதால் காலம் விரயமாகாமல், நாம் நட்டமடையாமல் தப்பலாம் என்று புரிகிறது.

            ”ஐந்துக்கு முன்னர் ஐந்தை ஆதாயம் கொள்க” (இக்தனிம் ஃகம்சன் கப்ல ஃகம்சின்) என்று கூறி நபி (ஸல்) இவற்றைச் சுட்டிக் காட்டினார்கள்:

1.      உன் முதுமைக்கு முன் உன் இளமை (ஷபாபக்க கப்ல ஹரமிக்க).

2.      உன் நோய்க்கு முன் உன் ஆரோக்கியம் (வ சிஹ்ஹத்திக்க கப்ல சகமிக்க)

3.      உன் வறுமைக்கு முன் உன் செல்வம் (வ கினாக்க கப்ல ஃபக்ரிக்க)

4.      உன் வேலைக்கு முன் உன் அவகாசம் (வ ஃபராகக்க கப்ல ஷுகுலிக்க)

5.      உன் மரணத்திற்கு முன் உன் வாழ்க்கை  (வ ஹயாத்தக்க கப்ல மவ்த்திக்க)

இவ்வைந்துள் மூன்று விடயங்கள் காலம் தொடர்பானவையாக உள்ளன. முதுமை இளமை என்று வயது சார்ந்த நிலைகளும் காலத்தால் உண்டாகின்றன. மரணம் வாழ்க்கை என்பவையும் காலத்த்தைக் கொண்டு நிர்ணயம் ஆகின்றன. ஆழ்ந்து சிந்தித்தால் இவ்வைந்துமே காலம் தொடர்பான விடயங்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

ஆன்மிக நெறியில் ஈடுபடுவதற்கு மேற்சொன்ன வழிகாட்டுதலைப் பொருத்திப் பார்க்கும்போது,

1.      இளம் வயதிலேயே ஆன்மிக நெறியில் இணைந்துவிட வேண்டும்,

2.      உலகியல் தேவைக்கான நேரம் போக கிடைக்கும் அவகாசத்தை ஆன்மிகப் பயிற்சிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்,

என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.


            உகூஃப் ஜமானி என்னும் இந்தக் கோட்பாடு இரண்டு விடயங்களை கவனித்துச் செயல்படுத்தப் படுகிறது:

1.      ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நம் மனநிலை (ஹால்) என்ன?

2.      அந்த மனநிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?

இந்தக் கோணத்தில் இறைஞானியர் பல்வேறு விளக்கங்களைத் தருகின்றனர்.

“நீ உன்னைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். நீ ஷரீஅத்தைப் பின்பற்றுவதாக உன்னைக் கண்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்து. இல்லை எனில் அவனிடம் பாவ மன்னிப்புத் தேடு” என்று ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்ஷ்பந்த் (ரஹ்) சொல்கிறார்கள்.

ஆன்மிகத்தில் ஈடுபடும் அடியானின் இதயம் இரண்டு நிலைகளில் இருக்கும். கப்ளு என்னும் சுருங்கிய நிலை / ஒடுக்க நிலை, மற்றும் பஸ்த் என்னும் விரிவடைந்த நிலை. முன்னதில் மனச் சோர்வு / மனம் உடைதல் / மனத் தளர்ச்சி இருக்கும். பின்னதில் பரவசம், களிப்பு, மகிழ்ச்சி ஆகியவை இருக்கும். கப்ளு என்னும் நிலை ”அல்-காபிள்” என்னும் அல்லாஹ்வின் திருநாமத்தால் உண்டாகிறது. பஸ்த் என்னும் நிலை “அல்-பாஸித்” என்னும் திருநாமத்தால் உண்டாகிறது.

அல்லாஹ்தான் ஒடுக்குகிறான், விரிவாக்குகிறான்” (2:245)

            இந்த இரண்டு நிலைகளும் சாலிக் (சாதகர்) மீது மாறி மாறி உண்டாகிறது. அல்லாஹ்வின் ஜலாலிய்யத் என்னும் வல்லமையும் கஹ்ரு என்னும் சினமும் வெளியாகும்போது அடியானில் கப்ளு என்னும் நிலை உண்டாகிறது. அல்லாஹ்வின் ஜமாலிய்யத் என்னும் அழகும் லுத்ஃபு என்னும் வாஞ்சையும் வெளியாகும்போது அடியானில் பஸ்த் என்னும் நிலை உண்டாகிறது.

            கப்ளு என்னும் நிலையில் ஃகவ்ஃப் (அச்சம்) என்னும் உணர்ச்சி இருக்கிறது. பஸ்த் என்னும் நிலையில் ரஜா (ஆதரவு) என்னும் உணர்ச்சி இருக்கிறது. இறை நம்பிக்கை (ஈமான்) என்பது இறைவன் மீதான அச்சத்துக்கும் ஆதரவுக்கும் இடையில் (பைனல் ஃகவ்ஃப் வர்-ரஜா) இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

“ஃகவ்ஃப் மற்றும் ரஜா ஆகிய இரண்டும் சமமாக இருக்க வேண்டும். ஃகவ்ஃப் மிகைத்திருக்க்கக் கூடாது. அதேபோல் ரஜா’வும் மிகைத்திருக்கக் கூடாது” என்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) சொல்கிறார்கள். இது ”இஃ’திதால்” (ஆன்மிகச் சமநிலை, spritual equilibrium) என்னும் நிலையாகும்.

            கப்ளு என்னும் நிலையில் நீ அதிகமாக இஸ்திக்ஃபார் (பாவ மன்னிப்பு) தேட வேண்டும், பஸ்த் என்னும் நிலையில் நீ அதிகமாக அல்லாஹ்வைப் புகழ வேண்டும். கப்ளு மற்றும் பஸ்த் என்னும் இந்த இரண்டு நிலைகளையும் கவனத்தில் எடுப்பதே உகூஃபே ஜமானி என்பதாகும்” என்று தன் ஷைஃகு அலாவுத்தீன் அல்-அத்தார் (ரஹ்) சொன்னதாக யாகூப் சர்க்கி (ரஹ்) அறிவிக்கிறார்கள்.

            ”அடியான் தன் கால அவகாசங்களை முழுமையாக அல்லாஹ்வை நெருங்கும் முயற்சிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அல்லாஹ் தனது செயல்களை எல்லாம் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து மிகச் சிறிய விவரத்தில் கூட கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இரவில் அடியான் தன் எண்ணங்களையும் செயல்களையும் கணக்கெடுத்து ஒவ்வொரு மணிநேரம், நிமிடம், நொடி என்று அலசிப் பார்த்து எடை போட வேண்டும். அவை நன்மையாக இருந்தால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவற்றில் பிழைகளும் குற்றங்களும் இருந்தால் பாவ மன்னிப்புத் தேட வேண்டும்” என்கிறார் ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன். நக்‌ஷ்பந்திய்யா நெறியில் இதனை உகூஃபே ஜமானி என்று சொல்கிறார்கள். பொதுவாக ஸூஃபிகள் இதனை முஹாசபா என்னும் சொல்லால் குறிக்கிறார்கள்.

            படைப்புகள் பல, படைத்தவன் ஒன்று (ஃகல்க் கஸீர், ஃகாலிக் வாஹித்). எனவே, இதயம் படைப்புக்களின் பக்கம் திரும்பும்போது கவனச் சிதறல் ஏற்படுகிறது. இதயம் படைத்தவனின் பக்கம் திரும்பும்போது கவனம் திரண்டு குவிகிறது. ஆன்மிகச் சாதகர் ஒவ்வொரு நொடியும் தன் மனத்தைச் சிதறவிடாமல் இறை நினைவில் திரட்ட வேண்டும். இந்தக் கருத்தில் மவ்லானா அப்துர் ரஹ்மான் ஜாமி (ரஹ்) அவர்கள் ‘ரிசாலாயே நூரிய்யா’ என்னும் நூலில் சொல்கிறார்கள்: “உகூஃபே ஜமானி என்பது ஒருவர் தன் நேரத்தை சிதறலில் (தஃப்ரீக்கா) செலவிடுகிறாரா, ஒருங்கிணைவில் (ஜம்’இய்யத்) கழிக்கிறாரா என்று கணக்கு வைப்பதாகும்.”

            இதையே வேறு ஒரு கோணத்தில், “உகூஃபே ஜமானி என்பது ஒருவர் தன் நேரத்தை மறதியில் (கஃப்லத்) கழிக்கிறாரா, இறை பிரசன்னத்தில் (ஹுளூர்) கழிக்கிறாரா என்று கணக்கு சோதனை செய்வதாகும்” என்கிறார் உஸ்மான் நூரீ தோப்பாஷ்.


            
”ஸூஃபி என்பவர் கணத்தின் குழந்தை ஆவார்” (அஸ்ஸூஃபி இப்னுல் வக்த்) என்று பிரபலமான சொலவம் ஒன்றுண்டு. இதன் பொருள் அவரின் ஒவ்வொரு கணமும் இறை நினைவில் செலவழிகிறது என்பதுதான். அதாவது, உகூஃபே ஜமானி என்பதைப் பேணுபவரே ஸூஃபி ஆவார்.

            ஒவ்வொரு நொடியும் சாதகருக்கு மிக முக்கியமானதாகும். சிறிய அவகாசத்தைக் கூட அலட்சியமாகக் கழித்துவிடக் கூடாது. ஒரு நொடி அலட்சியம் மிகப் பெரிய நஷ்டத்தைக் கொண்டு வந்துவிடலாம். அதேபோல், ஒரு நொடி கவனிப்பும்கூட மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வந்துவிடலாம், இன் ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment