Monday, June 9, 2025

மணமகன் ஆகி வந்தார்

                அண்மையில் முகநூல் பார்த்துக் கொண்டிருந்தபோது திருமண நிகழ்வு ஒன்றின் காணொளி என் கண்ணையும் காதையும் கருத்தையும் கவர்ந்தது. ஹைதரபாத் மாநகரில் நிகழ்ந்த ஒரு திருமண நிகழ்வு அது.

            நான் சார்ந்திருக்கும் ஆன்மிகப் பாதையின் மாபெரும் இறைநேசரான சய்யிதுனா நூரீ ஷாஹ் சிஷ்தியுல் காதிரி (ரஹ்) அவர்களின் பேரப் பிள்ளையும், சய்யிதுனா ஆரிஃபுத்தீன் ஜீலானீ சிஷ்தியுல் காதிரி (ரஹ்) அவர்களின் மகனுமான ஹஜ்ரத் மவ்லானா சய்யித் ஷம்சுத்தீன் ஜீலானீ அலீ பாஷா சாஹிப் (ஹஃபிழஹுல்லாஹ்) அவர்களின் திருமணம் அது.

பூமாலையும் மகுடமும் சூடிய மணமகனை ஊர்வலமாக அழைத்து வரும் காட்சியில் இருந்து திருமண மேடையில் ஏறும் வரையிலான காட்சிகளை அந்தக் காணொளி காட்டிற்று. அதன் பின்னணியில் ஒலித்த கவ்வாலிதான் என் காதையும் கருத்தையும் கவர்ந்தது.

கடந்த முப்பது ஆண்டுகளாக கவ்வாலி கேட்டு வருகிறேன். ஆனால் இந்தப் பாடலை இப்போதுதான் முதன் முறையாகக் கேட்டேன். அது எனக்கு மிகவும் சிலிர்ப்பாக இருந்தது. எளிமையான மெட்டு, பாடகரின் குரலில் ஒரு பாமரத் தன்மை, மெருகின்மை. நுட்பமில்லாத தாளக் கட்டு. ஆனால், இவை எல்லாம் சேர்ந்து அந்தப் பாடலை வேறொரு தளத்திற்குத் தூக்கிச் சென்றுவிட்ட அற்புதம் அதில் நிகழ்ந்திருந்தது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிக் கொண்டே இருந்தது.




அந்தப் பாடல், திருமண நிகழ்வில் மணமகனை வரவேற்பதாக அமைந்துள்ளது. ஆனால் அது ஆன்மிகக் குறியீட்டுப் பாடலாகவும் அமைந்துள்ளது. இறைநேசர் ஆன தன் குருநாதரை சீடர்கள் கூடி வரவேற்பது போன்றும் அதனை அர்த்தப்படுத்த முடிகிறது. அப்படித்தான் கவிஞர் அதனை எழுதியிருக்கிறார். அந்தப் பாடல் “ஹரியாலா பன்னா ஆயா” என்னும் பாடலாகும். அதனை வார்ஸி பிரதர்ஸ் (நஜீர் அஹ்மத் ஃகான் வார்ஸி மற்றும் நஸீர் அஹ்மத் ஃகான் வார்ஸி) பாடியுள்ளனர். அதன் வரிகளின் தமிழாக்கம் பின்வருமாறு:

வந்து பார், என் தோழியே! - யார்

வந்துள்ளான் என்று நீயே பார்.

என் காதலன் வந்துள்ளான் பார் -என்

அழகு இளம் காதலன் வந்துள்ளான்! – பசுங்

கொழுந்து போன்ற காதலன் வந்துள்ளான்! – அரசன்

மணமகனாய் இங்கே வந்துள்ளான்!

 

தன் குலத்தின் செல்வன் வந்துள்ளான்

மணமகனாக இங்கே வந்துள்ளான் – முகத்தில்

பூத்திரை அணிந்து வந்துள்ளான்

சுவனக் கன்னியர் பாடுகின்றார் – மகிழ்ந்து

வானவரும் போற்றிப் பாடுகின்றார்!

 

தோற்றம் முஸ்தஃபாவின் தோற்றம்

பிரகாசம் முர்தழாவின் பிரகாசம்

அனைவர் மீதும் இறைவனின் நிழல்!

அனைவர் மீதும் இறைவனின் நிழல்!

 

கேட்க வேண்டும் என்று வந்தோர் – தம்

மனத்தின் நாட்டத்தை அடைந்துவிட்டார்!

இறைவா! இதெல்லாம் உன் அருளே!

உன் அருளே! இறைவா! உன் அருளே! – இதோ

என் அழகு இளம் காதலன் வந்துவிட்டான்! – அரசன்

மணமகனாய் இங்கே வந்துவிட்டான்!

 

உடலையும் உயிரையும் அர்ப்பணிப்பேன்

எது வந்தாலும் அவனுக்காக ஏற்பேன்

இந்த நாள் இறைவன் உவந்த நாள் – பசுங்

கொழுந்து போன்ற காதலன் வந்துள்ளான்! - அரசன்

மணமகனாய் இங்கே வந்துவிட்டான்!

 

கண்களில் அவன் இருக்கிறான் – இனி

கண்களைக் கவர்பவர் எவருமில்லை

இதயத்தில் அவன் இருக்கிறான் – இனி

இதயத்தை ஈர்ப்பவர் எவருமில்லை

என் குருநாதர் எனக்கு வாய்த்துவிட்டார் - நான்

அருந்திய மது வெளியே எங்கும் கிடைப்பதில்லை!

இப்படி ஓர் அழகு, இறைவன் மீது சத்தியமாக

வேறு எங்குமே இல்லை!

எனக்குக் கிடைத்த அழகுச் சிலை போல்

அவனியில் எங்குமே சிலை இல்லை!

இரு கண்களில் அள்ளிக் கொண்டேன் – அழகு

முகத்தை நானும் அடைந்து கொண்டேன்! – பசுங்

கொழுந்து போன்ற காதலன் வந்துள்ளான்!

மணமகனாய் இங்கே வந்துவிட்டான்!

 

அவன் முகத்தில் பொங்கும் ஒளிச்சுடரில் - முழு

உலகமும் கொண்டாட்டம் காண்கிறதே! - பசுங்

கொழுந்து போன்ற காதலன் வந்துள்ளான்!

மணமகனாய் இங்கே வந்துவிட்டான்!





தீஷான் ஜான்பாஸ் என்பவரால் தற்போது இயற்றி இயக்கப்பட்டு வரும் “தெக்கன் நைட்ஸ்” என்னும் திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. ஹைதரபாதின் பண்பாட்டு அம்சங்களைப் புலப்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் இப்படத்தில் இப்பாடல் ஒரு திருமண நிகழ்வில் இடம் பெறுவதாக வைக்கப்பட்டுள்ளது.

இதனை எழுதியவர் யார் என்று தேடிப் பார்த்தபோது, இதற்கே ஒரு மூலப்பாடல் இருப்பதும் அதன் வரிகளைச் சற்றே மாற்றித்தான் கவ்வாலியில் பாடியுள்ளனர் என்றும் தெரிய வந்தது! அதனை எழுதியவர் ஹஜ்ரத் முஹம்மத் அப்துல் கதீர் ஸித்தீக்கி (ரஹ்) என்பவராவார். அவர் எழுதிய பாடல் நபி (ஸல்) அவர்களை வரவேற்பது போல் அமைந்திருக்கிறது.











பெயரை மட்டும் சொன்னால் அன்னாரின் ஆளுமை பற்றி ஒன்றும் தெரியாமல் போய்விடும். ஒரு சிறு அறிமுகமாவது தர வேண்டும். ஹஜ்ரத் முஹம்மத் அப்துல் கதீர் ஸித்தீக்கி (ரஹ்) (1871–1962) அவர்கள் ”பஹ்ருல் உலூம்” (கல்விப் பெருங்கடல்) என்று போற்றப்பட்டவர் ஆவார். இருபத்தெட்டு தலைமுறைகளுக்கு முன் அவரின் தந்தைத் தரப்பிலான குடும்பக் கொடிவழி ஹஜ்ரத் அபூபக்ரு அஸ்-ஸித்தீக் (ரலி) அவர்களுடன் இணைகிறது [அதனால்தான் ஸித்தீக்கி என்று பெயரில் குறிப்பிடப்படுகிறது]; அதுவே தாயின் தரப்பில் முப்பத்திரண்டாம் தலைமுறையில் சய்யிதுனா இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுடன் இணைந்து அவ்வழியில் அன்னாரின் பாட்டனாரான நபி முஹம்மத் (ஸல்) அவர்களில் இணைகிறது.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அறபி மொழியில் மவ்லவி ஃபாஜில் பட்டமும் ஃபார்சி மொழியில் முன்ஷி ஃபாஜில் பட்டமும் பெற்று முதல் இடத்திற்கான தங்கப் பதக்கங்களும் பெற்றவர். பின்னர் சிறிது காலம் ஹைதராபாதில் “தாருல் உலூம் கல்லூரி”யில் பேராசிரியராகப் பணியாற்றினார். அது, முதலில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிப் பின்னர் உஸ்மானிய்யா பல்கலைக்கழகம் என்று ஆயிற்று. அப்படி அது தனிப்பட்ட பல்கலைக்கழகம் ஆனபோது இறையியல் துறையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார். இருபது ஆண்டுகள் அப்பதவியில் பணியாற்றிய பின்னர் 1932-இல் ஓய்வு பெற்றார்.

தன் தாய்மாமன் ஆன ஹஜ்ரத் சையத் ஃகாஜா முஹம்மத் ஸித்தீக் மஹ்பூபுல்லாஹ் (ரஹ்) அவர்களைத் தன் ஆன்மிக குருவாகக் கொண்டு ஸூஃபி நெறியில் பயணித்தவர். தன் குருவின் மறைவைத் தொடர்ந்து தன் இருபத்து நான்காம் வயதில் குருவாகப் பொறுப்பேற்று, அதன் பின்னரும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று பல்வேறு குருமார்களிடம் ஞானப் பயிற்சிகள் பெற்றுத் தன்னைச் செம்மை ஆக்கிக் கொண்டவர். இவரின் சீடர்களும் கொடிவழியினரும் தங்களை “கதீரி”கள் என்று அழைக்கின்றனர்.

குர்’ஆனுக்கு அவர் எழுதிய விரிவுரையான “தஃப்சீரே ஸித்தீக்கி” என்பது ஆறு பாகங்களாக அமைந்துள்ளது. இவை அன்றி அல்-தவ்ஹீத், ஹிக்மத்தே இஸ்லாமிய்யா, அல்-இர்ஃபான், தஃப்ஹீமாத்தே ஸித்தீக்கி, ஹகீக்கத்தே பைஅத், ஹகீக்கத்தே மிஃ’ராஜ், அல்-ம’ஆரிஃப், சமாஃ முதலிய ஐம்பது நூல்களை எழுதியுள்ளார். இவரின் கஜல் கவிதைகள் “குல்லிய்யாத்தே ஹஸ்ரத்” என்னும் தொகுப்பு நூலாக உள்ளது. 1962-இல் இறந்த இவரின் அடக்கத்தலம் ஹைதராதின் பஹதூர்புரா என்னும் பகுதியில் உள்ள “குல்ஷனே சித்தீக்கி” என்னுமிடத்தில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஷவ்வால் 17-ஆம் தேதி அன்னாரின் உரூஸ் என்னும் ஆண்டு வைபவம் நிகழ்த்தப் படுகிறது.












இவர் ”ஹஸ்ரத்” என்னும் புனை பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார். அதில் ஒன்றுதான் கவ்வாலியாகப் பாடப்படும் “ஹரியாலா பன்னா ஆயா” என்னும் பாடலாகும். இது ஹிந்தி மொழியில் எழுதப்பட்டதாகும். [1966-இல் (ஹிஜ்ரி 1386-இல்) ஜனாப் கர்னல் ஹபீப் அலீ ஸாஹிப் கதீரி என்பவரால் பதிப்பிக்கப்பட்ட “குல்லிய்யாத்தே ஹஸ்ரத்” என்னும் நூலில் ‘ஹிந்தி கலாம்’ என்னும் பகுதியில் இப்பாடல் 149-ஆம் பக்கத்தில் அமைந்துள்ளது]. இது தக்கணப் பகுதியில் மிகப் பிரபலமான ஒரு பாடலாக இன்றும் பாடப்பட்டு வருகிறது. தில்லி அரசியாக இருந்த ரஜியா சுல்தானாவின் கதை 1983-இல் இந்தியில் திரைப் படமாக எடுக்கப்பட்டபோது ”ஹரியாலா பன்னா ஆயா” என்னும் முதலடி மட்டும் பல்லவியாக எடுத்தாளப்பட்டு வேறொரு பாடல் எழுதப்பட்டு அப்படத்தில் இடம் பெற்றது. இந்தப் பாடல் எவ்வளவு பிரபலமான ஒன்று என்பதற்கு இது ஒரு சான்று.

 இனி, “ஹஸ்ரத்” எழுதிய “ஹரியாலா பன்னா ஆயா” என்னும் பாடலைக் காண்போம்.

”பசுமையான காதலர் வந்தார்

பெரும் ஆரவாரத்துடன் வைகறையில்”

(ஹரியாலா பன்னா தூம் கஜர் சே ஆயா)

என்று இப்பாடல் தொடங்குகிறது. ”கஜர்” என்பது விடியல் பொழுதில் உறங்கிக் கொண்டிருப்போரை எழுப்பும் பேரொலி ஆகும். காதலனின் வருகை உள்ளத்தின் உறக்கத்தைக் கலைத்து விழிப்பூட்டுவதாக இருக்கிறது. அதாவது, நபியின் வருகை மனித குலத்திற்கு அகக் கண்ணைத் திறப்பதாக உள்ளது.

            ”பெரும் ஆரவாரத்துடன் வந்தாரம்மா

             பசுமையான அழகுக் காதலர்!

             வெகு தூரத்திலிருந்து வந்தாரம்மா - அவர்

            விண்ணேற்றம் முடித்துத் திரும்பி வந்தார்!

                        (படீ தூம் சே ஆயா மா(ன்) ஹரியாலா பன்னா /

                               படீ தூர் சே ஆயா மா(ன்) மிஃராஜி பன்னா)

            நபியின் எதார்த்தம் (ஹகீக்கத்) இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பதாகும். அது படிப்படியாக அனைத்து இறைத்தூதர்களிலும் வெளிப்பட்டு முழுமையான வெளிப்பாடாக முஹம்மத் (ஸல்) அவர்கள் இம்மண்ணில் மனிதராகப் பிறந்தார்கள். எனவேதான் அவர்கள் இறுதி இறைத்தூதராக வந்தார்கள். “தேர் ஆமத் கெ அஸ் தூர் ஆமத்” (தாமதமாக வந்தார்கள், ஏனெனில் வெகு தொலைவில் இருந்து வந்தார்கள்) என்று இதனைச் சொல்வதுண்டு. இவ்வரிகளில், நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் விண்ணேற்றம் சென்று வந்த நிகழ்வைக் கவிஞர் பாடுகிறார். இறைவனை தரிசித்த பின் உம்மத் என்னும் தன் சமுதாயத்தின் மீது கொண்ட பாசத்தால் நபி (ஸல்) இம்மண்ணுலகிற்குத் திரும்பி வந்துவிட்டார்கள். இதைப் பற்றி மகாகவி அல்லாமா இக்பால் (ரஹ்) சொல்லும்போது, மாபெரும் ஸூஃபி கவிஞர்களுள் ஒருவரான அப்துல் குத்தூஸ் கங்கோஹி (ரஹ்) அவர்களை மேற்கோள் காட்டுகிறார்: “அறபியான முஹம்மத் (ஸல்) உச்சமான வானத்திற்குச் சென்று திரும்பி வந்துவிட்டார்கள்; இறைவனின் மீது சத்தியம்! அந்த இடத்திற்கு நான் சென்றிருந்தால் ஒருபோதும் திரும்பி வந்திருக்க மாட்டேன்!” இதனை அல்லாமா இக்பால் (ரஹ்) இப்படி விளக்குகிறார்கள்: “ஸூஃபி இலக்கியப் பரப்பு முழுவதிலும், இறைத்தூது (நுபுவ்வத்) மற்றும் இறைநேசம் (விலாயத்) ஆகியவற்றின் பிரக்ஞைகளுக்கு இடையிலான உளவியல் வித்தியாசத்தை வெளிப்படுத்தும் இவ்வளவு கூர்மையான பார்வையைக் காண்பது அரிதாகும்.” (”Six Lectures on the Reconstruction of Religious Thought in Islam”, Lecture-V ‘The Spirit of Muslim Culture’, p.173, The Kapur Art, Lahore, 1930). நபி (ஸல்) அவர்களை, “ரஹ்மத்துல்லில் ஆலமீன்” (அகிலங்கள் அனைத்துக்கும் பேரருள்) என்று இறைவன் வருணிக்கிறான் (குர்’ஆன் 21:107). மிஃராஜ் பயணத்தில் இருந்து நபி (ஸல்) திரும்பி வந்த நிகழ்வும் அதனை உறுதிப்படுத்திவிட்டது. எனவே அது இறை விசுவாசிகள் கொண்டாடும் மகிழ்ச்சியான நிகழ்வாகிவிட்டது.

            ”மக்களே! பாருங்கள் எத்தகைய ஆரவாரம்!

             இங்கே மத்தளம் இப்படி ஒலிப்பதும் ஏன்?

             பாருங்கள்! பாருங்கள்! யார் வந்துள்ளார் என்று;

             இறைநேசர்கள் ஜெய பேரிகை கொட்டுகிறார்!

 பசுமையான காதலர் வந்தார்

             பெரும் ஆரவாரத்துடன் வைகறையில்”

                        (லோகோ! தேக் ஷோர் ஹே கெய்சா / க்யூன் பிகஹ்தா ஹே யான் நக்காரா // தேக்கோ தேக்கோ கோன் ஹே ஆயா / அலீ வலீ நே நஃ’ரா மாரா // ஹரியாலா பன்னா தூமே கஜர் சே ஆயா.)

 

            ”சத்திய இறைவனின் பிரியமான மன்னர் மணமகன்

             சமுதாயத் தலைவர், அனைவருக்கும் வழிகாட்டி,

             என் இதயக் கனி, என் இனிய எஜமான்!

             இறைவனின் அருநிழல், இன்னும் என்ன சொல்ல?

 பசுமையான காதலர் வந்தார்

             பெரும் ஆரவாரத்துடன் வைகறையில்”

                        (ஹக் கா ப்யாரா ராஜ் துலாரா / உம்மத் வாலா சப் கா சஹாரா // மேரா தாலீ மேரா ஆக்கா / க்யா கெஹ்னா ஹே ழில் ஃகுதா கா // ஹரியாலா பன்னா தூமே கஜர் சே ஆயா.)

 

            ”மகத்துவத்தின் மாட்சியாம், கண்ணியத்தின் இருப்பிடமாம்,

             வல்லமையின் ஊடககமாம், பேரருள் உடையவராம்,

             பேரொளியின் திருவுருவாம், நேசத்திற்குரிய நல்வாழ்வாம்,

             அனைவரினும் சிறந்தவராம், அனைவரினும் உயர்ந்தவராம்,

 பசுமையான காதலர் வந்தார்

             பெரும் ஆரவாரத்துடன் வைகறையில்”

                        (ஷானே அழ்மத் மர்கஸே இஜ்ஜத் / மழ்ஹரே குத்ரத் ஸாஹிபே ரஹ்மத் // நூர் கீ ஸூரத் ப்யாரீ சீரத் / சப் சே அஃப்ழல் சப் சே அஃ’லா // ஹரியாலா பன்னா தூமே கஜர் சே ஆயா.)

 

            ”நிச்சயமாக நான்… என்பதன் ஒளியைக் காட்டினார்

             அடியார் ஆகி வந்து இறைவனை நேசித்தார்

             அனைத்தையும் இழந்து அனைத்தையும் அடைந்தார்

             சமுதாயத்தின் தலைவர், அனைவரையும் ஏற்றுக்கொண்டார்!

 பசுமையான காதலர் வந்தார்

             பெரும் ஆரவாரத்துடன் வைகறையில்”

                        (இன்னீ அனா கா ஜல்வா திகாயா / பந்தா பன் கர் ரப் கோ பாயா / சப் குச் கோ கர் சப் குச் பாயா / உம்மத் வாலா சப் கோ சுஹாயா // ஹரியாலா பன்னா தூமே கஜர் சே ஆயா.)

             இந்தப் பாடல் நாயக நாயகி பாவனையில் எழுதப்பட்டுள்ளது. ஒரு கிராமத்துப் பெண்ணின் குரலில் ஒலிக்கிறது. அதுவும், வடநாட்டில் ஹிந்தி பேசும் ஒரு பெண்ணின் குரலில். அதனால்தான் இதில் ’கஜர்’ போன்ற சம்ஸ்கிருத மூலம் கொண்ட சொற்களும் எழுதப்பட்டுள்ளன. இப்படி நபி (ஸல்) அவர்களின் புகழைப் பாடுவதில் இஷ்கே றசூல் என்னும் நபிக்காதல் இந்தியாவுக்கே உரிய பக்தி மரபின் சுவையுடன் அனுபவமாகிறது.

No comments:

Post a Comment