Sunday, June 29, 2025

உகூஃபே கல்பி (இதயத்தை எப்போதும் இறைவனுடன் இணைத்து வைத்தல்)

 


இது நக்‌ஷபந்திய்யா நெறியின் பதினொரு கோட்பாடுகளில் இறுதியானது ஆகும். இஃது, இதயத்தை இறைவனுடன் இணைத்து வைக்கும் பயிற்சியாகும்.

            ஸூஃபி வழி என்பது ’இதயத்தின் பாதை’ என்று ஒரு வருணிப்பு உண்டு. ‘ஹுளூரில் கல்ப் – இதயத்தின் பிரசன்னம்’ என்பது இப்பாதையில் முன்னேறுவதற்கு மிகவும் முக்கியமானது. இதயமே உடல் மற்றும் உயிர் ஆகிய இரண்டு கடல்கள் சந்திக்கும் மையமாக இருக்கிறது.

            நக்‌ஷ்பந்திய்யா நெறியின் பதினொரு கோட்பாடுகளில் முதல் எட்டுக் கோட்பாடுகள் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஷைஃகு அப்துல் ஃகாலிக் குஜ்தவானி (ரஹ்) அவர்களால் வரையறுக்கப் பட்டவை ஆகும். அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு இந்த எட்டுக் கோட்பாடுகளே போதிக்கப்பட்டு வந்தன. அந்த ஞான வழியில் பின்னாளில் வந்த ஷைஃகு பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் 14-ஆம் நூற்றாண்டில் மேலும் மூன்று கோட்பாடுகளை வரையறுத்து இணைத்து நக்‌ஷ்பந்திய்யா நெறிக்கு அடிப்படையான பதினொரு கோட்பாடுகள் ஆக்கினார்கள்.

            தான் கூடுதலாக இணைத்த இறுதி மூன்று கோட்பாடுகள் பற்றி ஷைஃகு பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) கொண்டிருந்த கருத்தை நாம் அறிய வேண்டியது அவசியமாகிறது. அதாவது, உகூஃபே ஜமானி மற்றும் உகூஃபே அததி ஆகிய இரண்டையும் விட உகூஃபே கல்பி என்பதுதான் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அதுதான் திக்ரின் சாராம்சமும் திரட்சியும் ஆகும் என்று மகான் அவர்கள் கருதினார்கள்.

            இப்பயிற்சி, திக்ரு என்னும் தியானத்தில் சாதகன் தன் இதயத்தை இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவதற்காகும். எனவே, இதயம் என்பது ஆன்மிகத்தில் எவ்வளவு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது என்று அறிந்து கொள்வது அவசியம்.


            
‘கல்ப்’ (இதயம்) என்னும் சொல் வெளிப்படையான அர்த்தத்தில் நம் உடலில் இருக்கும் சதைத்துண்டைக் குறித்தாலும் அது அகமியமான ஒரு புலனையே குறிக்கிறது. இது, பாமர மக்களும்கூட அறிந்து வைத்திருக்கும் விடயம்தான். அவர்கள் அன்றாடப் புழக்கத்தில் கூட இப்படியான அர்த்தத்தில் பேசுவதைக் கேட்கலாம். ’இதய பூர்வமான நன்றி’, ‘என் இதயத்தில் உணர்கிறேன்’, ‘என் இதயம் உடைந்துவிட்டது’ என்றெல்லாம் பேசும்போது மனம் என்னும் அர்த்தத்திலேயே பேசுகிறோம். “எனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும்போதெல்லாம் கவிதை எழுதுகிறேன்” என்று கவிக்கோ அப்துல் ரகுமான் கூறினார். இங்கே ஹார்ட் அட்டாக் என்பதை மாரடைப்பு என்றோ அவரின் நெஞ்சுக்குள் இருக்கும் சதையுறுப்பான இருதயத்தின் இயக்கம் பாதிக்கப்பட்டுவிட்டது என்றோ நாம் புரிந்துகொள்வதில்லை. உடலின் உறுப்பான இதயத்திற்கு தாக்குதல் உண்டானால் கவிதை எங்கே வரும், இயல்பாகக்கூட பேச முடியாதே! கவிக்கோ இங்கே சிலேடையாகப் பேசுகிறார் என்பது சட்டென்று புரிகிறது. அவர் சதையால் ஆன இதயத்தைச் சொல்லவில்லை, உணர்வுகளின் மையமாக இருக்கும் அகமியப் புலனைத்தான் சொல்கிறார் என்று புரிந்து கொள்கிறோம். எனினும், இந்த மீப்புலன் அல்லது அகமியப் புலனுக்கு உடலில் ஓர் சுட்டிடமாக சதையாலான இருதயம் அமைந்துள்ளது. அவ்விடத்தில் இருந்து அந்த இதயத்தை அணுகுவது இயல்பாகவே நடக்கிறது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இதயத்தைப் பற்றிப் பேசும்போது சதைத்துண்டைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்:

 أَلاَ وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ‏.‏ أَلاَ وَهِيَ الْقَلْبُ ‏

            ”எச்சரிக்கை! மனித உடலில் சதைத்துண்டு ஒன்றுண்டு. அது சீர்பட்டால் முழு உடலும் சீரடையும். அது பழுதுற்றால் முழு உடலும் பழுதுபடும். அதுதான் இதயம்.” [அறிவிப்பாளர்: அந்-நுஃ’மான் இப்னு பஷீர் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஃகாரி #52]

            கல்ப் என்னும் சொல் இங்கே நஃப்ஸ் (மனம்) என்பதற்கு ஆகுபெயராக நின்று சுட்டுவதைக் காண்கிறோம். நஃப்ஸ் என்னும் சொல் உயிரைக் குறிக்கவும் ஆகுபெயர் ஆவது உண்டு. இதயம், மனம், உயிர் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொர்புள்ளவை ஆகும். இதயத்தை இறைவனிடம் ஒப்படைப்பது என்பது உயிரையும், மனத்தையும் அவனின் கையில் ஒப்படைப்பதுதான். நபி (ஸல்) அவர்கள் இறைவனின் மீது சத்தியம் உரைக்கும்போது,

بِيَدِهِ ‏‏ نَفْسِي وَالَّذِي

(வல்லதீ நஃப்சீ பியதிஹி) என்று கூறுவார்கள்.  ”என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக” என்று இதற்குப் பொருள்.

            மறுமையில், சீர்பெற்ற நிலையில் தன் இதயத்தை இறைவனிடம் கொண்டு வருபவனே வெற்றி அடைவான் என்கிறது குர்’ஆன்:

எவர் பேரமைதியுற்ற தூய இதயத்தை

அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ

அவர் (கண்ணியமடைவார்)” (26:89)

            ஊசலாட்டம், குழப்பம், பதற்றம், வஞ்சகம், சந்தேகம், இச்சைகள் முதலியவை இதயத்தில் உண்டாகும் நோய்களாகும். இறை நிராகரிப்பு (குஃப்ரு) மற்றும் இணைவைப்பு (ஷிர்க்) ஆகியவை இதயத்தில் உண்டாகும் மாபெரும் நோய்களாகும்.

”அவர்தம் இதயங்களில் நோய் உள்ளது.

அல்லாஹ் அவர்களுக்கு நோயை அதிகரித்துவிட்டான்.” (2:10)

            மனிதனில் அகமியமான இதயத்தில் மேற்சொன்ன நோய்கள் அதிகரிக்கும்போது அவனின் உள்ளம் கறுப்பாகி விடுகிறது. அதாவது, இருளாகி விடுகிறது. அதில் நோய் நீங்கும்போது அது வெண்மையாகி விடுகிறது, அதாவது, ஒளிமயமாகி விடுகிறது. இது குறித்து நபி (ஸல்) சொல்லி, இந்தக் கறும் புள்ளியே குர்’ஆனில் ’ரான்’ என்று சொல்லப்பட்டுள்ளது என்று சுட்டுகிறார்கள்:

            ”நிச்சயமாக, ஓர் அடியான் ஒரு பாவத்தைச் செய்யும்போது அவனின் இதயத்தில் கறும்புள்ளி ஒன்று உண்டாகிறது (இன்னல் அப்த இதா அஃக்த’அ ஃகதீஅத்தன் நுகிதத் ஃபீ கல்பிஹி நுக்தத்துன் சவ்தாஉ) அதை விட்டு அவன் விலகி, பாவமன்னிப்புத் தேடி, திருந்தி திரும்பினால், அவனின் இதயம் மெருகூட்டப்பட்டு தூய்மையாகிறது  (ஃப இதா ஹுவ நஸ’அ வஸ்தக்ஃபர வ தாப சுகில கல்புஹு) ஆனால் அவன் பாவத்திற்கு மீண்டுவிட்டால், அந்தக்  கறுமை அவன் இதயம் முழுவதையும் மூடும்வரை அதிகரிக்கிறது. ’ரான்’ என்று அல்லாஹ் குறிப்பிடுவது அதைத்தான் (வ இன் ஆத ஸீத ஃபீஹா ஹத்தா தஃ’லுவ கல்புஹு வ ஹுவர் ரானுல்லதீ தகரல்லாஹு): 

அவ்வாறன்று! அவர்கள் ஈட்டிக் கொண்டிருந்தவை

அவர்தம் இதயங்களின் மீது துருவாகப் படிந்துவிட்டன’ (83:14)”

[அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி); நூல்: ஜாமிஉத் திர்மிதி #3334]

            இதன் தொடர்பில் இன்னொரு நபிமொழியும் கவனத்திற்கு உரியது: சய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள், “அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) சொன்னார்கள்: ‘நிச்சயமாக, இரும்பு துரு பிடிப்பது போல் இதயங்களும் துரு பிடிக்கின்றன.’ நபித்தோழர்கள் கேட்டனர், ‘அதன் மெருகேற்றம் எது?’ அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) சொன்னார்கள், ‘மரணத்தை அதிகம் நினைவு கூர்வதும், குர்’ஆனை அதிகம் ஓதுவதுமாகும்.’” [நூல்: ஷுஅபுல் ஈமான் #1859; முஸ்னத் ஷிஹாப் #1179]

            இறைவனிடம் மன்னிப்புக் கோருவது – இஸ்திக்ஃபார் மற்றும் தவ்பா – பாவியான ஓர் அடியான் அல்லாஹ்வை நினைவு கூர்வதாக (திக்ரு) அமைகிறது. எனவே இதுவும் திக்ருல்லாஹ்வில் கட்டுப்பட்டதுதான். இதயத்தைத் தூய்மை செய்வதற்கு திக்ரு என்னும் இறை தியானத்தில் ஆழ்ந்தும் அதிகமாகவும் ஈடுபடுவதே ஔடதம் ஆகும். திக்ருதான் இதயத்தின் துருவையும் கறையையும் பிசுக்கையும் அகற்றி அதனை மெருகேற்றி ஒளிமயமாக்கும் என்று நபி (ஸல்) நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

            சய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்: “ஒவ்வொன்றுக்கும் ஒரு மெருகேற்றம் இருக்கிறது. இதயங்களைத் தூய்மையாக்கி மெருகேற்றுவது அல்லாஹ்வின் நியாபகமாகும்.” [நூல்: ஷு’அபுல் ஈமான் #519] [இதனை நபித்தோழர் அபூ தர்தா சொன்ன கருத்தாக ஷு’அபுல் ஈமான் நூலின் 503-வது ஹதீஸ் குறிப்பிடுகிறது.]

            மேற்சொன்ன கருத்துக்களின் அடிப்படையில் இப்னு கய்யிம் அவர்கள் சொல்லும் கருத்தாவது: “இதயம் இரண்டு காரியங்களால் துருவேறுகிறது: அலட்சியம் மற்றும் பாவம் (கஃப்லத் வ தன்ப்); அது இரண்டு விடயங்களால் மெருகேறுகிறது: பாவ மன்னிப்பு மற்றும் இறை தியானம் (இஸ்திக்ஃபார் வ திக்ரு)” [நூல்: அல்-வாபிலுஸ் சய்யிப் மினல் கிதாபித் தய்யிப் 1/40]

            மேற்கண்ட விளக்கங்கள் யாவும் இதயத்தைத் தூய்மையாக வைத்திருப்பது ஆன்மிக நலனுக்கு எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்று உணர்த்தப் போதுமானவை ஆகும். ஸூஃபிகள் இவ்வுலகில் வாழும்போதே தம் இதயத்தை இறைவனிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இந்த நபிவழியை (சுன்னாஹ்)வை அவர்கள்தாம் முழுமையாக நிறைவேற்றுவோராக உள்ளனர். அதற்கான பயிற்சியாக நக்‌ஷ்பந்திய்யா நெறியில் ”உகூஃபே கல்பி” அமைக்கப்பட்டுள்ளது.


            
”உகூஃபே கல்பி என்பது அல்லாஹ்வை அன்றி வேறு எதன் மீது கவனம் திரும்பாத அளவுக்கு இறைவனின் பிரசன்னத்தில் அடியான் இருக்கும் வகையில் இதயத்தில் உண்டாகும் விழிப்புணர்வு ஆகும்” என்கிறார் உபைதுல்லாஹ் அல்-அஹ்ரார் (ரஹ்) அவர்கள்.

            இதே கருத்தில், ”உகூஃபே கல்பி என்பது அடியான் தன் நேசனான ஏக இறைவனைத் தவிர வேறு எதையும் காணாத நிலையை அடைவதாகும். இப்பயிற்சி இறைவனின் முன் இதயத்தைக் கொண்டு போய் நிறுத்துகிறது. அடியான் தன் அனைத்து நிலைகளிலும் இறைவனின் வெளிப்பாட்டை அனுபவிப்பதாகும்” என்கிறார் ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன்.

            இதயத்தில் தொடர்ந்து ஊசலாட்டங்கள் வந்து கொண்டே இருக்கும். அதற்கு அறபியில் கல்ப் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அச்சொல் ’புரள்வது’ என்று அர்த்தம் உடையது. மனம் ஒரு நிலையில் இருக்காமல் புரண்டு கொண்டேதான் இருக்கும். அதன் இயல்பை மாற்ற முடியாது. ஆனால், இதயத்தில் நன்மையும் தீமையும் மாறி மாறி வந்து போய்க் கொண்டிருந்தால் அது நிம்மதியும் தூய்மையும் அடைந்த  இதயமாக - ‘கல்புன் சலீம்’ – ஆகாது. அந்த ஊசலாட்டம் நிறுத்தப்பட வேண்டும். எனில் கல்ப் புரளாதா? புரளும். மனிதப் புனிதர்களான இறைத் தூதர்கள் மற்றும் இறை நேசர்கள் ஆகியோரின் இதயங்கள் ”மினல்லாஹ் இலல்லாஹ்” (அல்லாஹ்விடம் இருந்து அல்லாஹ்விடமே) புரண்டு கொண்டுள்ளன.

            இங்கே, நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி ஒன்றும் கற்றுத் தந்த பிரார்த்தனையும் நினையத்தகும்:

            அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) சொன்னார்கள், ’நிச்சயமாக ஆதமின் மக்கள் அனைவரின் இதயங்களும் அருளாளனான அல்லாஹ்வின் விரல்களில் இரண்டு விரல்களின் இடையில் ஒரே இதயம்போல் உள்ளன. அதை அவன் தான் விரும்பியவாறு புரட்டுகிறான்.’ இதைச் சொல்லிவிட்டு அல்லாஹ்வின் திருத்தூதர் சொன்னார்கள்: ‘அல்லாஹ்வே! இதயங்களைப் புரட்டுபவனே! எங்கள் இதயங்களை உனக்கு அடிபணிதலில் திருப்புவாயாக (அல்லாஹும்ம முஸர்ரிஃபல் குலூபி ஸர்ரிஃப் குலூபனா அலா தாஅத்திக்க).’” [அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ருல் ஆஸ் (ரலி); நூல்: சஹீஹ் முஸ்லிம் #2655]

            இதயம் இறைவனின் பிரசன்னத்தில் இருப்பதன் அடையாளம் அதில் இறைவனின் ஒளிச்சுடர்கள் (தஜல்லியாத்) உண்டாவதாகும். இறைவனின் ஒளிச்சுடர்கள் – அதாவது இறை ஞானத்தின் வெளிச்சம் – அதில் உண்டாகும்போது தீய எண்ணங்கள் அதில் உண்டாக இயலாது. அதுகாறும் இதயத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மா சிவல்லாஹ் (அல்லாஹ் அல்லாதவை) எல்லாம் வீழ்ந்துவிடும். அந்த இதயத்தில் இறைவனின் ஆட்சி ஏற்பட்டுவிடும். அது இறைவனுக்குரிய இதயம் ஆகிவிடும்.

            இறைத்தூதரான சுலைமான் (அலை) அவர்களின் படையினர் தன் நாட்டைத் தாக்க வருவது பற்றி ஷீபா நாட்டின் அரசியான பல்கீஸ் அவர்கள் தன் அமைச்சர்களிடம் கூறினார்கள்: “அரசர்கள் ஒரு நகரத்துள் நுழைவார்களானால் நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியவான்களை இழிவுபடுத்தி விடுகிறார்கள்” (27:34).

            இந்த குர்’ஆன் வசனப்பகுதியின் உட்பொருளாக, “ஓர் அடியானின் இதயத்திற்குள் இறைவனின் ஒளிச்சுடர்கள் நுழையும்போது அதில் முன்பு மதிப்புற்றிருந்த உலகப் பொருட்கள் அனைத்தும் மதிப்பிழந்து விடுகின்றன. அவை அந்த இதயத்தை விட்டும் அகற்றப்பட்டு விடுகின்றன” என்று மகான்கள் சொல்கின்றனர்.

            அல்லாஹ் ”மலிக்குல் முல்க்” – அகில உலகங்களின் மீது ஆட்சியதிகாரம் உள்ள பேரரசன் ஆவான். அவன், மலிக்குல் அம்லாக் – அரசர்களுக்கெல்லாம் அரசன் ஆவான். எனவே, அவனின் ஒளிச்சுடர்களே அகில உலகையும் ஆள்கின்றன. அவனின் ஒளிச்சுடர்களை அரசர்கள் என்று உருவகப்படுத்துவது சரிதான்.


            
உகூஃபே கல்பி என்னும் சொற்றொடர் இரண்டு விதங்களில் அர்த்தப்படும் என்கிறார் டெரென்ஸ் நூனிஸ்:

1.      இதயம் திக்ரின் இடையில் இறைவனின் பிரசன்னம் பற்றிய விழிப்பில் இருத்தல். இப்பொருளில் இது யாத் தாஷ்த் என்பதை ஒத்திருக்கிறது.

2.      இதயத்தைப் பற்றிய கவனம் இருத்தல். அதாவது, சாதகர் திக்ரில் ஈடுபடும்போது அவரின் கவனம் இந்த கூம்பு வடிவ இதயத்தின் மீது நிலைக்கிறது. அது, இதயத்தை விழிப்புணர்வுடன் திக்ரில் ஈடுபடுமாறு செய்கிறது.


இந்த இரண்டாம் கருத்துப்பட கவிஞர் ஒருவர் இப்படிப் பாடியுள்ளார்:

”அடைகாக்கும் தாய்ப்பறவை போல் அமர்ந்திரு;

உன் இதயத்தின் முட்டையைக் கண்காணித்திரு.

இந்த முட்டையில் இருந்தே உன் பரவச நிலை வெளியாகும்

சுயமிழத்தல் பெருஞ்சிரிப்புடன் உன் இறுதி இலக்கை அடையும்”


(முற்றும்)

No comments:

Post a Comment