Monday, October 28, 2019

ரூமியின் வாழ்வில்... - 6


26
குருதியின் அற்புதம்

      அக்காலத்தில் மருத்துவ உலகில் ஒரு பெரும் விவாதம் கிளம்பிற்று. மனிதன் அவனது நாளங்களில் இரத்தம் இருப்பதால் வாழ்கிறானா அல்லது இறைவனின் அருளால் மட்டுமே வாழ்கிறானா என்பதுதான் அது. மருத்துவர்கள் இயல்பாகவே தமது துறையைச் சார்ந்து வாதிட்டார்கள். மனித உடலின் சாரம் குருதிதான். அது வெளியேறி வடிந்துவிட்டால் மனித உயிர் நின்றுவிடும் என்றார்கள்.

      ஆன்மிக நெறியினரின் சிந்தனை அதற்கு முரணாக இருந்தது. அவர்கள் இவ்விவாதத்தை மௌலானாவிடம் தெரிவித்தனர்.

      மருத்துவத்தைப் பொருத்த மட்டில் மனித உடலில் குருதி இருக்க வேண்டியது மிகவும் இன்றியமையாத ஒன்றுதான் என்று அவர் சொன்னார். “ஆனால் நமது சிந்தனை என்னவென்றால் மனிதனின் இருப்பு என்பது இறைவனின் நாட்டத்தின் படியே ஆகும். ஒருவரும் அதனை மறுக்க முடியாது, கூடாது” என்றும் சொன்னார். இதனைக் கூறிவிட்டு ஒரு பணியாளரை அழைத்துத் தனக்கு இரத்தம் குத்தச் சொன்னார். சராசரி மனிதன் செத்துப் போயிருப்பான் என்று சொல்லும் அளவுக்கு அவரது உடலில் இருந்து குருதி வெளியேறிவிட்டது. எவ்வளவு இரத்தம் வெளியேறிற்று என்றால் அவரது உடலே சற்று மஞ்சள் நிறமாக மாறிவிட்டது. அதனை மருத்துவர்களிடம் சுட்டிக் காண்பித்து மனிதன் இறைவனின் அருளால்தான் இருக்கிறான், இரத்தத்தால் மட்டுமன்று என்று அவர்கள் ஒப்புக் கொள்கிறார்களா என்று மௌலானா கேட்டார்.

      அவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வதாகத் தலையைச் சாய்த்தனர். அவர்கள் மௌலானாவின் சீடர்கள் ஆயினர். மௌலானா எழுந்து சென்று குளித்துவிட்டு வந்தார். ஓதுதலும் ஆன்மிக வரிகள் பாடப்படும் இசையும் தொடங்கிற்று. எதுவுமே நடந்திராதது போல் மௌலானா அதில் கலந்து கொண்டார்.


27
சான்றோர் ஏன் ஞானியரைப் பற்றிப் பேசுகின்றனர்?

      மௌலானா ஷம்ஸுத்தீன் மாலத்தி ஒருமுறை மௌலானா ரூமியின் வீட்டிற்கு வந்தார். அவர் தனிமையில் அமர்ந்திருப்பதைக் கண்டார். தன்னருகில் வந்து நெருக்கமாக அமருமாறு அவரிடம் மகான் சைகை காட்டினார். எனவே மாலத்தி அவர்கள் மௌலானாவின் பக்கம் வந்து நெருங்கி அமர்ந்தார். இன்னும் நெருக்கமாக, இன்னும் நெருக்கமாக என்று மௌலானா மீண்டும் மீண்டும் சொன்னார். மாலத்தியின் முழங்கால் மௌலானாவின் முழங்காலைத் தொட்டது. அதன் பிறகு மௌலானா அவர்கள் சையது புர்ஹானுத்தீன் மற்றும் மௌலானா ஷம்ஸி தப்ரேஸ் ஆகியோரது ஆன்மிகப் படித்தரங்களைப் பற்றிப் பேசினார். அதனால் மௌலானா மாலத்தி மிகவும் ஆட்கொள்ளப் பட்டார். எனவே மௌலானா அவர்கள் மேலும் விளக்கமாக உரைத்தார்:

      ”நீங்கள் ஏன் இப்படி உணர்கிறீர்கள் தெரியுமா? எங்கெல்லாம் இறை நேசர்களின் மேன்மைகள் பேசப்படுகின்றனவோ அங்கெல்லாம் இறைவனின் அருள் ஒரு மழையைப் போல் பொழிகிறது. அதுவே மனதிற்குப் புத்துணர்ச்சி ஊட்டுகிறது.”

      இன்னொரு நிகழ்வும் அறிவிக்கப் படுகிறது. எப்போதெல்லாம் மௌலானா குளியலறைக்குச் செல்வார்களோ அப்போதெல்லாம் மௌலானாவின் மனைவி அவரின் சீடர்களிடம் ஒரு பட்டுத் துவாலையைக் கொடுத்து அனுப்புவார்கள், வெந்நீர்க் குளியலின் பின் அவருக்குக் கபம் கட்டிவிடக் கூடாது என்பதற்காக.

      ஒருநாள் அவர்கள் பட்டுத் துவாலையை விரித்தபோது அதனைக் கண்டு காரணத்தை ஊகித்துவிட்ட மௌலானா அவர்கள் குளிர்ப் பருவத்தின் தாக்கத்திலிருந்து தன்னைக் காத்து வரும் தனது ஆடைகளை உடனே களைந்துவிட்டு கடும் பனியில் வெளியே தோட்டத்திற்குச் சென்றார்கள். கதகதப்பான ஆடைகளால் தன்னைப் போர்த்திக் கொள்ளாது பனி பொழிந்து மூடிய புல் பரப்பில் மௌலானா நிற்பதைச் சீடர்கள் பார்த்தனர். மௌலானா தனது தலையின் மீது பெரிய பனிக்கட்டி ஒன்றை வைத்திருந்தார். தனது சீடர்களுக்கு அவர் விளக்கிச் சொன்னார்:

28
குளிரால் பாதிப்பில்லை

      ”நண்பர்களே! எனது ஸ்தூல சுயம் அரவணைக்கப்பட வேண்டாம். நான் ஃபிர்-அவ்ன்களின் குலத்தில் வந்தவன் அல்லன். ஆனால் தர்வேஷ்களின் பேரரசன் ஆகிய அந்த அரசனின் இனத்தைச் சேர்ந்தவன்.’ இதனைச் சொல்லிவிட்டு அவர் தனது தொப்பியை அணிந்துகொண்டு அப்பால் நடந்தார்.

29
சண்டி மனம்

மௌலானா ரூமியின் மகன் சுல்தான் வலத் அவர்கள் அறிவிக்கிறார்: மௌலானா அவர்களுக்கு ஐந்து வயதாக இருந்த பிள்ளைப் பருவத்திலேயே இச்சைகளும் ஆசைகளும் அற்றுப் போயின. ‘என் தந்தை இளமைப் பருவத்தை எய்தினார். பின்னர் நடு வயதும் அடைந்தார். தொடர்ந்து தன்னை வழிபாட்டில் பிழிந்தார். ஆணவத்தை அகற்றுவதன் அடையாளமாக உடலுக்கு இதம் நல்கும் வசதிகளைத் தள்ளினார், உலக இச்சைகளை நசுக்கினார். இளம் வயதிலேயே உலக ஆசைகளை எல்லாம் களைந்த பின்னரும் இப்போதும் ஏன் உடல் தேவைகள் மற்றும் ஆசைகள் பற்றி விழிப்புடன் கண்காணித்து வருகின்றீர்? என்று நான் என் தந்தையை வினவினேன். மனம் ஒரு மாபெரும் ஏமாற்றுக்காரன் என்று அவர் சொன்னார். ‘தீமை ஒருவரை மிகைத்து விடாமல் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்றார்.

“சண்டி மனத்தின் கடிவாளத்தை
கண்டிப்புடன் நீ இழுத்துப் பிடி.
உலகின் ஏமாற்றுப் பூக்கள் உன்னை
எளிதில் மயக்கும், எச்சரிக்கை!
நீள அங்கியும் தியான மாலையும்
கோலம் காட்டிடும் மனம் கொள்ளாதே!
அதனுடன் ஒட்டி உறவாடாதே
அதனுடன் பயணம் செல்ல நாடாதே!”

30
சீடன் ஒருவனுக்கு தீட்சை

      ஷெலபி ஹுசாமுத்தீன் இந்நிகழ்வை அறிவிக்கிறார். சையது ஷரஃபுத்தீனுக்குக் கோன்யா நகரின் பிரமுகர் ஒருவர் நண்பராக இருந்தார். அந்தச் செல்வருக்கு அறிவும் நற்பண்பும் மிக்க மகன் ஒருவன் இருந்தான். மௌலானாவின் பக்தி மற்றும் நற்பண்புகளால் கவரப்பட்ட அந்த இளைஞன் அவ்விளம் வயதிலேயே மௌலானாவின் சீடனாக வேண்டும் என்று ஆசைப்பட்டான். மௌலானாவின் போதனைகள் எல்லாம் தன் பையனுக்கு மிகவும் அதிகம் என்று நினைத்த செல்வர் தனது அனுமதியை ஒத்திப் போட்டு வந்தார். அந்த மகா ஞானியின் சீடன் ஆவதற்குத் தன்னை அனுமதிக்கவில்லை என்றால் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அவன் மிரட்டினான். வேறு வழியின்றி அனுமதி தந்த செல்வந்தர் அவ்விசயத்தில் சையது ஷரஃபுத்தீனின் உதவியை நாடினார். எதிர்நிலையான பதிலைச் சொல்லாமல் ஷரஃபுத்தீன் ஒரு திட்டத்தை வகுத்துத் தந்தார். அதன்படி, அந்தத் தந்தையே மௌலானாவிடம் சென்று தனது மகன் சொர்க்கத்துக்குச் செல்வானா இல்லையா என்று கேட்க வேண்டும். அந்தத் துடுக்கான கேள்வி மௌலானாவைக் கோபப் படுத்தும். அதனால் அவரது மகனுக்கு மௌலானா தீட்சை வழங்குவது தடைப்பட்டுப் போகும்.

      எனவே ஒருநாள் அந்தச் செல்வர் ஊரில் உள்ள மாபெரும் அறிஞர்கள் அனைவருக்கும் பெரு விருந்து அளித்தார். வழக்கப்படி, விருந்து முடிந்தபின் ஆன்மிகச் சுழல் நடனமும் இசையும் நடைபெற்றது. இசையும் சுழற்சியும் உச்ச நிலையில் நிகழ்ந்து கொண்டிருந்த போது மௌலானாவிடம் தான் கருதியிருந்த கேள்வியைச் செல்வர் கேட்டார். சற்றும் தயக்கமின்றி மௌலானா அவர்கள் அந்த இளைஞன் சொர்க்கத்திற்குச் செல்வான் என்றும் இறைவனின் திருக்காட்சியைப் பெறுவான் என்றும் சொன்னார். நகரில் உள்ள அவனது வயதினரைப் போன்றவன் அல்லன் அவன். ஏனெனில், அவன் ஆன்மிகத்தால் ஈர்க்கப்பட்டிருக்கிறான், ஆனால் மற்ற இளைஞர்கள் ஈர்க்கப்படவில்லை. அதனைக் கேட்ட அந்தச் செல்வரும் தனது மகனுடன் சேர்ந்து மௌலானாவிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் ஆயினர்.


31
சீடர்களின் தரமின்மை


      ‘மௌலானா அவர்கள் பயபக்தியில் மிக உன்னத நிலையை அடைந்தவர். பல தலைமுறைகளாக அவரைப் போன்ற ஒருவர் பிறந்ததே இல்லை’ என்று சொல்லி, ஆனால் அவரது சீடர்கள் மிகவும் மட்டமான தரத்தினராகவும் சுயமோகம் கொண்டவர்களாக இருப்பதாகவும் மொய்னுத்தீன் ஒருநாள் குறைப்பட்டுக் கொண்டார்.

      அவருடன் இருந்த ஒருவர் அச்செய்தியை மௌலானாவிடம் எற்றி வைத்தார். சீடர்கள் அனைவரும் அதனைக் கேட்டு மன வேதனைப் பட்டனர்.

      எனவே மௌலானா அவர்கள் மொய்னுத்தீனுக்கு ஒரு குறிப்பெழுதி அனுப்பினார். ’எனது சீடர்கள் எல்லாம் ஏற்கனவே பக்குவப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் என்றால் நானே அவர்களின் சீடனாக ஆகியிருப்பேன், அவர்கள் எனது சீடர்கள் ஆகியிருக்க மாட்டார்கள். அவர்கள் தம்மிடம் குறைகள் இருப்பதாக அறிந்ததால்தான் தாம் தூய்மை அடைய அவர்கள் என்னிடம் வந்துள்ளனர்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும், ‘எனது கண்ணியமிக்க தந்தை மீது ஆணையாகச் சொல்கிறேன், எனது சீடர்கள் எல்லாம் நேர்வழி பெற வேண்டும் என்று நாடி இறைவனே அவர்களது பாதுகாவலனாக இருப்பதால்தான் அவர்கள் எனது சீடர்களாகப் பதிவு செய்யப் பட்டுள்ளனர்’ என்றும் மௌலானா குறிப்பிட்டிருந்தார். மேலும், அவர் கவி படித்தார்:

      ”திரிகின்றனர்
      அவர்கள் அலைகின்றனர்
      இறைவனின் பாதையில்தான்!
      அவர்களைக் காக்கவே
      வந்துள்ளோம் யாம்!
      அல்லும் பகலும்
அவர் பணி செய்வாம்!”

மௌலானாவின் மடலை மொய்னுத்தீன் கண்ணுற்ற போது அதன் வாதத்தால் உள்ளம் உருகியவராகி உடனே வந்து மௌலானாவிடம் தானும் தொண்டனாகச் சேர்ந்து அதன் பின் எப்போதும் அவருக்கு நன்றியுடன் சேவை புரிபவர் ஆனார்.

32
அகப்புலச் சந்திப்பு

      மௌலானாவின் சமயக் கல்லூரிக்கு அருகில் இளம் வணிகன் ஒருவன் வசித்திருந்தான். மௌலானாவின் போதனைகள் அவனைப் பெரிதும் ஈர்த்தன. அவ்விளைஞன் எகிப்திற்குப் பயணிக்க வேண்டுமென்று பேராவல் கொண்டிருந்தான். அவனது நண்பர்களோ அவன் எகிப்துக்குப் போக வேண்டாம் என்று அறிவுரை கூறினர். அவனது திட்டத்தை அறிந்தபோது மௌலானாவும் அவன் செல்ல வேண்டாம் என்றே ஆலோசனை நல்கினார். ஆனால், தனது திட்டத்தில் அந்த வணிகன் மிக உறுதியாக இருந்தான். ஓரிரவு அவன் சிரியா நோக்கிப் புறப்பட்டான். அண்டகியாவை அடைந்ததும் அங்கிருந்து எகிப்துக்குச் செல்லும் கப்பல் ஒன்றில் ஏறிக்கொண்டான். ரோம அரசின் விளிம்பில் வாழ்ந்த குலத்தினரான ஃபிராங்குகளால் அக்கப்பல் கைப்பற்றப் பட்டது. அவ்வணிகன் பாதாளச் சிறை ஒன்றில் வீசப்பட்டான். அவனுக்கு மிகச் சொற்பமான உணவே கொடுக்கப்பட்டது. நாற்பது நாற்கள் முழுமையாக அந்த இருட்டுச் சிறையில் அவன் கிடந்தான். மௌலானாவின் அறிவுரையைப் புறக்கணித்ததால்தான் தனக்கு இக்கதி நேர்ந்தது என்று அவன் புலம்பிக் கொண்டிருந்தான்.

      நாற்பதாம் நாளிரவு தனது கனவில் அவன் மௌலானாவைக் கண்டான். அடுத்த நாள் காலை ஃபிராங்குகள் அவனை விசாரணை செய்யும்போது அவனிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் அவன் உடன்பாடாகவே பதில் உரைக்க வேண்டும் என்று மௌலானா அவனிடம் சொன்னார். அவன் திடுக்கிட்டு எழுந்தான். கனவின் மீது உறுதி கொண்டான். காலையில் ஃபிராங்குகள் அவனை விசாரணை செய்ய ஒரு துபாஷியுடன் வந்தனர். அவனுக்கு மருத்துவம் ஏதாவது அறிவானா என்று கேட்டனர். தனது கனவை நினைவுகூர்ந்து அவன் ”ஆம்” என்று கூறினான். தானொரு மருத்துவ நிபுணர் என்று சொன்னான். ஃபிராங்குகள் மிகவும் மகிழ்ந்தவர்களாக அவனை உடனே தமது அரசனிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்றனர். அரசன் நோய்ப்பட்டுக் கிடந்தான். அவனுக்கு உடனே மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

      ஃபிராங்குகள் அவனுக்கு உயர்தரமான ஆடைகளை அணிவித்துத் தங்கள் அரசனைக் காண அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். ‘திறன்மிகு மருத்துவன்’ என்று அறிமுகஞ் செய்தனர். செல்லும் வழியில் அவனுக்கு ஓர் உள்ளுதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன்படி, அவன் அரசனைச் சோதித்துப் பார்த்துவிட்டு ஏழ்வகைக் கனிகளைச் சாறு பிழிந்து ஒன்று கலந்து அவருக்குப் புகட்ட வேண்டும் என்று பரிந்துரைத்தான். இறைவனின் அருளால் சற்று நேரத்திலேயே அரசனின் உடல்நலத்தில் நல்ல மாற்றம் தெரிந்தது. அரசன் அகம் மகிழ்ந்தான். அவ்விளைஞன் அரச விருந்தாளி ஆனான். மருத்துவ அறிவு கிஞ்சிற்றும் இல்லாதவன் என்றபோதும் அவ்வணிகனுக்கு உதவி தேடி வந்தது:

      ”ஒடுங்கினார் உள்ளத்து அழுகுரல் தம்மை
      அடைகின்ற போது அருளாளர் நெஞ்சம்
      உதவி புரிந்திட விரைந்து வருமே”

      அரசன் முழு நலம் அடைந்தவுடன் அவ்விளைஞனை அழைத்து அவனுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று வினவினான். தன்னை விடுதலை செய்து தனது ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் ஆன்மிக குருவான மௌலானாவின் முன் தான் மண்டியிட்டு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் அவன் சொன்னான். அவன் விடுதலை செய்யப்பட்டுப் பரிசுகளும் கொடுக்கப்பட்டன. அவன் தனது கதையை ஃபிராங்குகளிடம் இப்போது சொன்னான். மௌலானாவின் உதவியையும் ஆன்மிக ஆற்றலையும் எண்ணி அவர்கள் வியந்தார்கள்.

      கோன்யாவை அடைந்த வணிகன் நேராக மௌலானாவின் வீட்டிற்குச் சென்றான். அவரின் பாதங்களை முத்தமிட்டு நன்றியுடனும் மரியாதையுடனும் அவற்றைக் கைகளால் பற்றிக் கொண்டான். இளம் வணிகனை மீண்டும் பார்த்ததில் தனது மகிழ்ச்சியை மௌலானா வெளிப்படுத்தினார். தன் சீடனது முகத்தை அன்புடன் முத்தமிட்டுச் சொன்னார், “ஃபிராங்குகளைச் சமாதானப் படுத்தி உன்னைக் காப்பாற்றி விடுதலையும் வாங்கித் தந்துவிட்டேன். இனிமேலாவது நீ போதும் என்ற மனத்துடன் நேர்மையான வழியில் பொருளீட்டி இங்கேயே இரு. போதும் என்னும் மனமே இறைவனின் அருட்கொடை. பேராசையோ இருட்டறைக்கு இழுத்துச் செல்கிறது.”

33
செல்வரும் ஏழையரும்


       கோன்யாவின் பிரமுகர்கள் மௌலானாவைச் சந்திக்க வராமல் அவரினும் கீழான படிப்பும் பயபக்தியும் கொண்டோரைச் சந்திக்கச் செல்கின்றனர் என்று மௌலானாவின் தீவிர சீடர்கள் ஆதங்கப் பட்டனர். மௌலானாவின் உயர்வை அக்குடிமக்கள் முழுமையாக அனுபவிக்கவில்லை என்று கருதினர். இதனை அறிந்த மௌலானா, செல்வர்களைத் தாம் அழைத்து உறவாடத் தொடங்கினால் ஏழையர் தமது சகவாசத்தை இழந்து வாட நேரிடும் என்று அவர்களிடம் சொன்னார்.

      மௌலானாவிடம் அவரது சீடர்கள் செய்த முறையீடு கோன்யாவின் செல்வச் சீமான்களின் காதுகளை எட்டிற்று. மறுநாள் காலையிலேயே கோன்யாவின் செல்வர்கள் எல்லாம் மௌலானாவின் ஆசி பெறும் பொருட்டு அவரது வீட்டின் முன்னே குழுமிவிட்டனர். செல்வ வளம் மிக்கோரான ஃபக்ருத்தீன், மொய்னுத்தீன், ஹலாலுத்தீன் முஸ்தஃபா மற்றும் அமீனுத்தீன் மியாக்கயல் ஆகியோர் அவருள் இருந்தனர். மௌலானா வீட்டின் மேல் மாடி செல்வந்தரால் நிரம்பி வழிந்தது. அமர்ந்து மௌலானாவின் ஞான போதனையைக் கேட்க ஏழைகளுக்கு இடமில்லாமல் ஆயிற்று.

      அதன் விளைவாக ஏழைகள் எல்லோரும் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். மௌலானாவின் கவனம் அவர்கள் மீது போதுமான அளவு பட முடியாமல் ஆனது. உலகப் பொருள் வளம் இல்லா ஏழைகளுக்கு அது மிகவும் மன வேதனையைத் தந்தது. நிகழ்ச்சி முடிந்து செல்வரெல்லாம் சென்ற பின்பு ஏழைகள் அனைவரும் மாடிக்கு ஏறிச் சென்று மௌலானாவிடம் தமக்கு நேர்ந்த துயரத்தை முறையிட்டனர். அவர்களே தமது உண்மையான தோழர்கள் என்று சொல்லி மௌலானா அவர்களை அமைதிப் படுத்தினார். பொருள் குறைவாகவும் பணிவாகவும் உள்ளோர்க்கே தனது ஞான போதனைகள் அர்ப்பணம் என்று சொன்னார். ஏழைகட்கு வழங்கியது போக இருந்த மிச்சத்தையே பணக்காரர்கள் பெற்றுச் சென்றுள்ளனர் என்று சொன்னார். அதாவது, கன்றுகள் வயிறு நிரம்ப அருந்திய பின்னுள்ள மிச்சப் பாலினையே மக்கள் கறந்து கொள்வது போல. மிச்ச ஞானமே செல்வந்தருக்கு. நிறைந்த ஞானம் எல்லாம் ஏழைச் சீடர்களுக்கே. செல்வர்கள் வருவதே இல்லையே என்று ஏழைச் சீடர்கள் முறையிட்டதுதான் இத்தனை இடையூறுகளுக்கும் காரணம் ஆனது என்பதை அவர்களுக்கு மௌலானா உணர்த்தினார். அவர்களை அழைத்தது தான் அல்ல என்பதைப் புரிய வைத்தார். எனவே சீடர்கள் தம் மீது குறை எண்ணலாகாது என்று தெளிய வைத்தார். செல்வர்களும் செவ்வழிச் செல்ல வேண்டும் என்றும் தர்வேஷ்களுக்கு இடையூறு தராமல் அவர்கள் வாழ வேண்டும் என்றும் தமது செல்வங்களை அவர்கள் நேர்மையாக உழைத்து போதும் என்னும் மனநிலையில் ஈட்ட வேண்டும் என்றும் அவர்களுக்காகப் பிரார்த்திக்குமாறு ஏழைச் சீடர்களுக்கு வழி காட்டினார்.

34
ஓர் ஊரின் பெயர்

      ஷைகு ஜியாவுத்தீன் அவர்களின் வீட்டில் ஒருமுறை மௌலானா அவர்கள் ஞான சபையில் கலந்து கொண்டார். அப்போது ஜியாவுத்தீன் பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்:

      ”முற்பகல் மீதாணை!
      மூடும் இரவின் மீதாணை
      எப்போதும் உம்மை உமதிறைவன்
      கைவிடவுமில்லை, கைத்திடவும் இல்லை”
      (93:1-3)

      அவ்வசன ஓதல் மௌலானாவை மிகவும் பாதித்தது. எனவே, அதனை ஓதியவர் தெளிவாக ஓதாமல் ஓசைப் பழுதுடன் ஓதினார் என்று மௌலானாவிடம் ஷெலபி ஹுசாமுத்தீன் மன்னிப்புக் கோரினார்.

      மௌலானாவுக்கு கதை ஒன்று நினைவுக்கு வந்தது. அதை அவர் சபையில் சொன்னார். ஓர் ஊருக்குள் புதிதாக வந்த இலக்கணப் புலவனொருவன் தான் தேடி வந்த ஊர் அதுதானா என்று உறுதி செய்யும் பொருட்டு அங்கிருந்த பாமரன் ஒருவனை அழைத்துக் கேட்டான். உள்ளூர் வழக்கில் சொல்லப்படும் ஓசையுடன் அந்த இலக்கணப் பண்டிதனின் தெள்ளிய உச்சரிப்பு ஒத்துப் போகவில்லை. எனவே அந்தப் பாமரன் தான் அப்படி ஓர் ஊரைப் பற்றி அதுவரை கேள்விப்பட்டதே இல்லை என்று பதில் சொல்லிவிட்டான்.

      இதன் பொருளாவது, குர்ஆனின் பிரதி என்பது மௌலானாவுக்கும் ஓதியவருக்கும் மற்ற அனைவருக்கும் அதேதான். ஆனால் ஓதுவார் செய்த பிழையால் அதில் உயிரோட்டம் இல்லாமல் போனது.

      தான் உச்சரித்த முறைதான் சரியானது என்று அக்கதையில் இலக்கணப் புலவன் பிடிவாதம் செய்தான். ’இலக்கணப்படி உங்களுடைய உச்சரிப்பு சரியானதாக இருக்கலாம், ஆனால் இந்த ஊர் மக்கள் எல்லாம் இப்படித்தான் சொல்கிறார்கள். அதனால் நீங்கள் குறிப்பிடுவது வேறோர் ஊரை என்றுதான் விளங்குவார்கள்’ என்று அவரிடம் அந்தப் பாமரன் சொன்னான்.

     
35
ஏணியும் கயிறும்
  
    ஒருமுறை மௌலானா அவர்கள் ஆன்மிகத்தின் உயர்ந்த அம்சங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். தனது விரிவுரையில் ஒரு கதையைச் சேர்த்துக் கூறினார். தர்வேஷ் ஒருவர் பாலைவனத்தில் நடந்து போய்க்கொண்டிருந்தார். வழியில் கிணறு ஒன்று இருந்தது. நள்ளிரவில் அவ்வழியே சென்று கொண்டிருந்த இலக்கணப் புலவர் ஒருவர் அதனுள் வீழ்ந்து கிடந்தார். அவர் உதவிக்காகக் கதறிக் கொண்டிருந்தார். கிணற்றுக்குள் கிடக்கும் அவரை வெளியே எடுப்பதற்காக கயிறும் ஏணியும் கொண்டுவருமாறு அந்த தர்வேஷ் மக்களைக் கூவி அழைத்தார். கிணற்றுக்குள் கிடந்த புலவர் அந்த தர்வேஷை அழைத்து இலக்கணப்படி முதலில் ஏணியைச் சொன்ன பிறகே கயிற்றைக் குறிப்பிட வேண்டும் என்று பாடம் நடத்தினார். அவரிடம் அந்த தர்வேஷ், “அப்படியானால் நான் முறையாக இலக்கணம் படித்துக்கொண்டு வரும் வரை நீங்கள் கிணற்றுக்குள்ளேயே இருங்கள்’ என்று சொல்லிவிட்டு அப்பால் போய்விட்டார்.
  
    இக்கதை மூலம் மௌலானா தனது சீடர்களுக்கு ஒன்றைப் புரியவைத்தார்கள். வாணாளெல்லாம் மயிர் பிளக்கும் விவாதங்களில் செலவழித்து ஆன்மிக ரகசியங்கள் எதனையும் வெளிப்படுத்தாத மக்கள் கிணற்றில் கிடக்கும் புலவனை ஒப்பர். தாமே பீற்றிக் கொள்கின்ற கல்வியறிவின் சிரமங்களில் அவர்கள் சிக்கிக் கிடக்கின்றனர். உயர்வான ஆன்மிக இலக்கிற்கு அவர்களை அழைத்துச் செல்கின்ற ஞான குருவையும் அவர்கள் தேடி அடைவதில்லை.
  
    இதே போல் இன்னொரு நிகழ்வும் சொல்லப்படுகிறது. ஞானி சலாஹுத்தீனுக்குச் சீடன் ஒருவன் இருந்தான். அவன் மௌலானாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்தான். பொருள்கள் வாங்கி விற்கும் வணிகம் செய்து வந்தான். இஸ்தான்பூலுக்குச் சென்று காண வேண்டும் என்னும் ஆசையை அவன் வெகு காலமாக அடை காத்து வந்தான். அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் அவன் ஆயத்தம் செய்துவிட்டு அவன் மௌலானாவிடம் சொல்லிக் கொண்டு அவர்களின் ஆசியையும் அன்பையும் பெற வந்தான்.

36
துறவியும் அற்புதமும்

      அவன் இஸ்தான்பூலில் இருக்கும்போது, உலகைத் துறந்துவிட்டு அவ்வூரில் தனிமையில் வாழ்ந்து வரும் கிறித்துவத் துறவி ஒருவரைச் சென்று காணுமாறும் அவரிடம் தனது முகமன்களைத் தெரிவிக்குமாறும் அந்த வணிகனிடம் மௌலானா சொன்னார்கள். துருக்கியரின் அந்நகரை அடைந்ததும் முதல் வேலையாக அந்தக் கிறித்துவத் துறவியைப் போய் அவன் கண்டான். அவர் ஆழ்ந்த தியானிப்பில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி ஒருவித அமைதியும் உண்மையின் ஒளிவட்டமும் இருந்தன. மிகுந்த மரியாதையுடன் அவன் அவரிடம் மௌலானாவின் முகமன்களைத் தெரிவித்தான். நட்பின் அந்த வெளிப்பாடுகளைப் பெற்றுக் கொள்ள அவர் மரியாதையுடன் எழுந்து நின்றார். பிறகு அந்தத் துறவி பிரார்த்தனை செய்து மண்டியிட்டார்.

      அவர் இருந்த சிறிய அறையில் அவ்வணிகன் தனது பார்வையை ஓடவிட்டான். அங்கே ஒரு மூலையில் மௌலானாவும் தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு மருண்டு போனான். கோன்யாவில் அவன் விடை பெற்றுக்கொண்ட போது அணிந்திருந்த அதே ஆடைகளை, தலைப்பாகையை இப்போதும் அணிந்திருந்தார். அப்போதிருந்த அதே சாந்தமான புன்னகை அவரின் உதடுகளில் இருந்தது. இக்காட்சியால் மிகவும் அதிர்ச்சி எய்தி அவ்வணிகன் மயங்கிச் சரிந்தான். அவன் விழித்தெழுந்த போது துறவி அவனை அமைதிப் படுத்தினார். ’விடுதலை’ அடைந்திருப்போரின் ரகசியங்களை அவன் அறிந்து கொண்டால் அவனால் ஆன்மிகத்தின் உயர்வான தளங்களை எட்ட முடியும் என்று அவனிடம் அவர் சொன்னார். அவ்வணிகனின் பயணங்களிலும் அலுவல்களிலும் அவனுக்குத் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்து கடிதம் ஒன்றை அந்தத் துறவி அவனிடம் தந்தார்.

      வணிகன் அந்தக் கடிதத்தை இஸ்தான்பூலின் அரசரிடம் எடுத்துச் சென்றான். அவர் அவனை ராஜ மரியாதையோடு வரவேற்று அவனத் தேவைகளை எல்லாம் நிறைவேற்றித் தந்தார். அதன் பின் அவன் சொல்லிக்கொண்டு கிளம்புவதற்காக அந்தத் துறவியைக் காணச் சென்றான். மௌலானா சொல்லி அனுப்பியதைப் போன்றே அத்துறவியும் தனது முகமன்களை மௌலானாவுக்குச் சொல்லுமாறு அவனிடம் சொன்னார். மௌலானா தனக்கு முகமன்கள் அனுப்பிட மறக்கக்கூடாது என்று தாம் கேட்டுக் கொண்டதாகவும் அவனிடம் சொல்லி அனுப்பினார். ஆனால், வணிகன் கோன்யாவுக்குத் திரும்பியவுடன் இந்தச் செய்திகளை எல்லாம் ஷைகு சலாஹுத்தீனிடம் சொன்னான். ஞானிகள் சொல்வன எல்லாம் சரியாகவே இருக்கும் என்றாலும் இந்தச் செய்திகளை எல்லாம் ஆன்மிகப் பள்ளியைச் சாராதோரிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்று அவர் அவனுக்கு அறிவுறுத்தினார். பிறகு அவர் அவ்வணிகனை மௌலானாவிடம் அழைத்துச் சென்றார். இஸ்தான்பூலின் கிறித்துவத் துறவியின் முகமன்களை அவன் மௌலானாவிடம் சொன்னான். மௌலானா அந்த வணிகனிடம், ”பார், நீ ஓர் அற்புதத்தைக் காண்பாய்!” என்று சொன்னார்.

      வணிகன் மௌலானாவின் அறையில் நோட்டம் விட்டான். மூலை ஒன்றில் அந்தக் கிறித்துவத் துறவி தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு வியப்படைந்தான். இஸ்தான்பூலில் தான் கண்ட அதே ஆடைகளை இப்போதும் அவர் அணிந்திருந்தார்.

      அக்காட்சி அளித்த பரவசத்தில் அந்த வணிகன் தனது ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். அந்தக் காட்சி மனிதப் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. மௌலானா அவனை அப்பால் அழைத்துச் சென்று சொன்னார், “நீ எதையெல்லாம் கண்டாயோ, ஆன்மிக ரகசியங்களைக் கண்டு விட்டாய். இப்போது நீ எமது நம்பிக்கையாளரில் ஒருவன். தகுதி பெறாதோரிடம், ஆன்மிக அறிவு மிகச் சொற்பமாகவே உள்ளோரிடம் நீ இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதே.” அதன் பின் மௌலானா கவி படித்தார்:

      ”அரச ரகசியத்தை வெளிப் படுத்தாதவன்
      எறும்புகளுக்குச் சீனியைத் தூவாதவன்.
      அவனுக்கே ரகசியங்கள் சொல்லப்படும்
      இல்லை எனில், மாடுகளின் முன்னே
      நல்ல நகைகளை வீசியது போலாம்.”

      இதனால் அவ்வணிகன் பெருந் தாக்கம் அடைந்தான். அவன் தனது உடைமைகளை எல்லாம் ஏழைகளுக்கு வழங்கிவிட்டு, உலகப் பணிகளைத் துறந்து மௌலானாவிற்கு அர்ப்பணமான சீடன் ஆகிவிட்டான்.

      இன்னொரு நிகழ்ச்சி. ஒருநாள், மௌலானா அவர்கள் தனது பள்ளிவாசலை விட்டு ஊருக்குள் சென்று கொண்டிருந்தார். தாடி வைத்த துறவி ஒருவரைக் கண்டார். அவரது வெண் தாடி அவரை விடவும் வயதில் மூத்ததா என்று அவரிடம் கேட்டார். அதற்கவர் தனது இருபது வயதிலிருந்து தான் அந்த தாடியை வளர்த்து வருவதாகச் சொன்னார்.

      ’அப்படியானால் நீங்கள்தான் உங்கள் தாடியை விட மூத்தவர்’ என்றார் மௌலானா. தொடர்ந்து சொன்னார், “உனக்குக் கைசேதமே! உன்னை விட வயதில் இளையவனான உனது தாடி தனது பண்பிலும் தூய்மையிலும் வெள்ளையாகி விட்டது. ஆனால் நீயோ வாழ்வின் இருட்டில்தான் இன்னமும் இருக்கிறாய். உன்னுடைய தாடி தேர்ந்தெடுத்த பாதையை நீ இன்னமும் தேர்ந்தெடுக்காமல் இருக்கிறாய்.’

      மௌலானா சொன்னதன் உட்பொருளை விளங்கிக் கொண்ட அந்தத் துறவி உடனே தனது ஜெப மாலையை அறுத்தெறிந்துவிட்டு மார்க்கத்தைத் தழுவி மௌலானாவின் சிறந்த சீடர்களில் ஒருவரானார்.

      அதேபோல் ஒருமுறை அவர்கள் கறுப்பு அங்கி அணிந்த சிலரைக் கண்டனர். மெய்வழியை விட்டுப் பிறழ்ந்து போய்விட்டார்களே என்றும் ஆன்மிக வாழ்க்கையும் மெய்ஞ்ஞான உணர்வும் அவர்களிடம் இல்லையே என்றும் அவர்களை நோக்கி மௌலானாவின் சீடர்கள் கவலைப்பட்டனர். வழிகாட்டுதலின் சூரியன் அனிச்சையாகவேனும் அந்தக் கறுப்பாடைக் காரர்கள் மீது தனது வெளிச்சத்தைப் பாய்ச்சும் எனில் அவர்கள் நேர்வழி அடைவார்களே என்று சீடர்கள் சொல்லிக் கொண்டனர். மௌலானாவின் பார்வையில் அந்த மனிதர்கள் வந்த போது ‘சூரியன் அவர்கள் மீது சுடர் வீசிற்று’. அக்கணமே அவர்கள் மௌலானாவின் வழிக்கு வந்து விட்டனர்; அர்ப்பணமான சீடர்கள் ஆகிவிட்டனர். வெண்மைக்குள் இருளை இறைவன் மறைத்து வைக்கிறான் என்றும் இருளிலிருந்து வெண்மையை வெளிப்படுத்துகிறான் என்றும் சொல்லப்படுகிறது. மௌலானா இதனைச் சொல்லக் கேட்டபோது அவர்கள் அனைவரும் தமது தலைகளைத் தாழ்த்தி அதனை ஏற்றனர்.


37
அகத்தைச் செம்மை செய்தல்


      மௌலானா இஃக்தியாருத்தீன் என்றொரு பிரபலமான மார்க்கச் சட்ட வல்லுநர் இருந்தார். தனது வீட்டிற்கு வருமாறு பன்முறை அவரை மௌலானா அழைத்திருந்தார்கள். ஒரு வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்குப் பின் அவர் மௌலானாவின் வீட்டிற்கு மிகத் தாமதமாக வந்து சேர்ந்தார். தாமதத்திற்கான காரணத்தை மௌலானா வினவினார். ஃகுஜந்த் நகரின் போதகர் ஒருவர் வந்திருந்ததாகவும் அவரது சொற்பொழிவிலிருந்து எழுந்து வரத் தாமதம் ஆகிவிட்டது என்றும் இஃதியார் கூறினார். அந்த போதகர் என்ன பொருண்மை பற்றிப் பேசினார் என்று மௌலானா வினவினார். தானும் அங்கே கூடியிருந்தோரும் எத்தகைய அருட்கொடையில் இருக்கிறோம் என்பதை ஃகுஜந்தின் முல்லா எடுத்துச் சொல்லி இறைவனுக்கு அனைவரும் அதிகமதிகம் நன்றி செலுத்த வேண்டும், ஏனெனில் நம்மை எல்லாம் அவன் தனது மார்க்கத்தில் பிறக்க வைத்துள்ளான், அதற்கு வெளியே நம்மை அவன் ஆக்கவில்லை என்று சொன்னார் என்றார். மௌலானா லேசாகப் புன்னகை செய்தார். ”அந்த அப்பாவி முல்லா தனது பேச்சாலும், அவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்ற உணர்வாலும் தன்னை இறைத்தூதர்கள் மற்றும் இறைநேசர்களை விடவும் மேலே உயர்த்திவிட்டார். அத்தகைய மனிதர்கள் ஒருபோதும் தமது அகத்தைக் காண்பதே இல்லை (அதாவது, இந்த மனிதர்களே பெரும்பாவிகள். அவர்களுக்கு ஆன்மிக உணர்வு கிஞ்சிற்றும் இல்லை. அவர்கள் தமது உள்ளத்தையும் மேலோட்டமாகவே காண்கின்றனர். அதாவது தங்கள் சுயத்தின் ’புறம்’ மட்டுமே அவர்களுக்குப் படுகிறது. அகமியத்தை அவர்கள் அறிவதும் உணர்வதும் இல்லை.) தங்களது அகத்தை மெய்ஞ்ஞான ஒளியால் செம்மை செய்திருப்போரின் மேன்மையை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை” என்று சொன்னார். பிறகு மௌலானா பின்வரும் கவிதையைப் படித்தார்:

      ”இறைவனின் விதானத்தில் 
      சிறகடிப்போர் இருக்கின்றனர்;
      வானவரும் ஞானியரும்
      ஏகன் அவனைக் காதலிப்போர்.”

(to be continued...)

Sunday, October 27, 2019

ரூமியின் வாழ்வில்... - 5


15
நூற்களும் அவற்றின் உள்ளுறை உட்பொருளும்


      இதே போன்றதொரு நிகழ்ச்சியை ஷைகு மஹ்மூத் அறிவிக்கிறார். ஒருமுறை, சுல்தான் கை-ஃகுஸ்ரோவின் அமைச்சராக இருந்த காஜி மௌலானா இஸ்ஸுத்தீன் அவர்கள் கோன்யாவில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி அதற்கு மௌலானாவின் பெயரைச் சூட்டினார். திறமைகளும் சால்பும் மிக்க மனிதரான அவர் மௌலானாவிடம் ஒருதடவை கேட்டார், ‘நீங்கள் எவற்றை எல்லாம் படித்தீர்களோ அந்த நூற்களையேதான் யாமும் கற்றோம். ஆனால் அவற்றினின்றும் நீங்கள் ‘பெற்று’ வெளிப்படுத்துகின்றவை எல்லாம் எமது நிலைக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன. இது ஏன்?”

      மௌலானா சொன்னார்,  “ஆம், அது உண்மைதான். ஆனால், அல்லாஹ்வின் நூலில் ஓரிரண்டு பக்கங்களிலிருந்து நாம் ஏதோவொன்றை கிரகித்து விட்டோம். அதுதான் எம்மிடமிருந்து உமக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ‘அது இறைவனின் அருளிலிருந்து வருகிறது; அதனை அவன் தான் நாடியோருக்கே வழங்குகிறான்.” கவிதையைக் கேளுங்கள்:

      ”நுணுகித் துளைக்கும் எம் அறிவிற்கு
      சனிக்கோளத்தின் அறிவும் சமமில்லை;
      அத்துடன் புதனைச் சேர்ப்பினும் அஃதே.
      எனினும் இறைவன் உயிரின் தன்மையில்
      எமக்கோர் எழுச்சியை அருளிச் செய்தனன்;
      நம்பிக்கை என்பதன் நல்லறிவுடனே
      எமது சுயங்கள் அமைந்து உள்ளன;
      ஆதலால் தெய்விக ஞானம் கற்பதே
      காதலால் எமது வாழ்க்கை ஆனது”

      இதைக் கேட்டதும், புகழ் பெற்ற அந்த காஜி உடைந்து கண்ணீர் உகுத்தார்.

16
ஆன்மிக நடனம்

      மனிதனில் ஆன்மிக உணர்வுகளைத் தூண்டும் இசைக்கும் நடனத்திற்கும் காஜி இஸ்ஸுத்தீன் எதிரானவர் என்று சொல்லப்படுகிறது. ஒருநாள், ஆன்மிகப் பரவம் மிகைப்பட்ட நிலையில், ஆன்மிக இசை அதன் உன்னதத் தளத்தில் வாசிக்கப்பட்டிருக்க, மௌலானா அவர்கள் சமயக் கல்லூரிக்கு வெளியே வந்தார். அவர் காஜியை அணுகி, அவரும் வந்து இறைவன் புகழப்படும் இவ்விசையில் கலந்து கொள்ளக் கூவினார். அவரை நெட்டித் தள்ளியபடி, ஆன்மிக அனுபவத்திற்கு எதிரான அவரது நிலைப்பாட்டுக்கு மாற்றமாக இருக்குமாறு இறைக் காதலர்களின் நடுவில் அவரைக் கொண்டு வந்து நிறுத்தினார். அவருக்கும் பரவசம் எழுந்தது. அவர் தனது அங்கியைக் கிழித்துக் கொண்டார். பிறரைப் போன்றே ஆன்மிகப் பாடலுள் மூழ்கினார், சுற்றிச் சுழன்று ஆடினார், ஆனந்தக் களியில் கூவினார். பின்னர் அவரும் மௌலானாவின் சிறந்த சீடர்களில் ஒருவராகிப் போனார்.


17
பாதை

      அதேபோல், கோன்யாவின் காஜியும், இசித்தீன் என்பாரும், அமாஸ்யாவின் காஜியும், சிவாஸின் காஜியும் மௌலானாவைச் சந்தித்து அவரின் ”பாதை” எது என்று வினவினார்கள்.

தன் நெஞ்சைக் காட்டி மௌலானா கூறினார், “இதுவே எனது ’பாதை’. பின்பற்றுவோருக்கு ஞானம் அருளப்படும்.’ அதாவது, அவரது ஆன்மிகப் பயிற்சிகளே அவரின் பாதை ஆகும். அதனைப் பிறர் பேணி ஒழுகினால் அவரது வழிகாட்டுதலின்படி அவர்கள் ஞானம் அடைவர். சூஃபி நெறிக்குக் குறிப்பிட்ட ’பாட நூல்’ என்பதெல்லாம் இல்லை என்பதையும் முர்ஷித் (ஆன்மிக குரு) மட்டுமே சீடர்களை ஆன்மிக நிலைகளுக்கு இட்டுச் செல்கிறார் என்பதையும் இவ்விடையின் மூலம் மௌலானா உணர்த்துகின்றார். அந்த மூன்று நபர்களும் மௌலானாவின் சீடர்கள் ஆயினர்.

18
கிளியும் வழுக்கை மனிதனும்

      அதனா நகரின் ஆணையர் பள்ளி வாசல் ஒன்றைக் கட்டியெழுப்பி அதற்கு மௌலானாவின் பெயரைச் சூட்டினார். பெரும் பொருட் செலவில் தான் கட்டியிருக்கும் அப்பள்ளியின் திறப்பு விழாவில் தொழுகைக்குப் பின்னர் மௌலானாவை உரையாற்றும்படிக் கேட்டுக் கொண்டார். எனவே, மௌலானா ஒரு பிரசங்கம் செய்தார். தலை வழுக்கையாகிப் போன கிளி ஒன்றைப் பற்றி அதில் குறிப்பிட்டுப் பேசினார். (அக்கதையிலிருந்து மக்களுக்குக் குறியீடான விளக்கங்கள் சொல்லிப் படிப்பினை ஊட்டினார். அக்கதை மௌலானாவின் பெருங் காவியமான மஸ்னவி ஷரீஃபில் இடம்பெற்றுள்ளது.) அந்த விழாவில் கலந்துகொண்ட பெருமக்களில் இரண்டு காஜிகளுக்குத் தலை வழுக்கையாக இருந்தது. கூட்டத்திலும் பொது மக்கள் சிலருக்குத் தலை வழுக்கை. எனினும் அவர்கள் எவருக்கும் மனம் புண்படவே இல்லை. அத்தனை நயமாகவும் எதிர்ப்புணர்வு எழாமலும் அக்கதையின் கொடுக்கு எவரையும் தைக்காமலும் மௌலானா பிரசங்கம் செய்த திறத்தை அவ்விழாவில் பங்கேற்ற மகா ஞானி கமாலுத்தீன் என்பார் மிகவும் மெச்சினார்.

19
ஒரு சச்சரவு

      அதே போன்று இன்னொரு அறிவிப்பு. ஒருநாள் மௌலானா அவர்கள் ஒரு தெருவில் நடந்திருந்த போது அங்கே இரண்டு நபர்கள் சச்சரவிட்டபடி ஒருவர் மீதொருவர் அவதூறுகளை வாரி வீசிக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களில் ஒருவர் மற்றவரிடம், “எனக்கு நீ ஒரு கெட்ட வார்த்தை சொன்னால் உனக்கு நான் ஆயிரம் சொல்வேன்” என்று கூறுவதை மௌலானா கேட்டார். மௌலானா அவர்கள் முன்னால் போய் நின்று, “நண்பரே! உங்கள் நிந்தனைகளை எல்லாம் என் மேல் கொட்டி விடுங்கள். நீங்கள் என் மேல் ஆயிரம் கெட்ட வார்த்தைகள் சொன்னாலும் ஒரே ஒன்றைக் கூட நான் திருப்பிச் சொல்ல மாட்டேன்!” என்றார். அவ்விருவரும் மிகவும் வெட்கிப் போனார்கள். இந்த அறிவார்ந்த போதனை அவர்கள் இருவரையும் நண்பர்கள் ஆக்கிவிட்டது.

20
இலக்கணப் புலவரும் கிணறும்

      இந்த நிகழ்வை மௌலானா ஷம்ஸுத்தீன் மாலத்தி சொன்னார். கற்றுதெ தேர்ந்த மார்க்க அறிஞர் ஒருவர் ஒருமுறை மௌலானாவுக்குத் தனது மரியாதையைச் செலுத்துவதற்காகத் தனது மாணவர்களுடன் வருகை தந்தார். எனினும், மௌலானாவிடம் வினாக்கள் தொடுத்து அறிவைச் சோதித்து மட்டந்தட்ட வேண்டும் என்னும் அழுக்காறு அவரது மனத்துள் கரந்து கிடந்தது. கற்று அறியக் கிடைக்கும் அறிவெல்லாம் தமது ஆசானின் நெஞ்சத்துள் அடங்கிவிட்டன என்பது அந்த அறிஞரது மாணவர்களின் நம்பிக்கையாக இருந்தது. எனவே, அவர்களும் மௌலானாவின் அறிவை ஆழம் பார்க்க ஆவல் கொண்டிருந்தனர்.

      அவர்களின் உள் நோக்கத்தை உணர்ந்து கொண்ட மௌலானா அதனைக் காட்டிக் கொள்ளாமல் அவர்களை மிகுந்த கண்ணியத்தோடு வரவேற்றார். அறிவுத் துறைகள் பல சார்ந்து உரை நிகழ்த்தினார். போகும் போக்கில், எதிரியின் உள்ளத்தைத் தைக்குமாறு கருத்தைச் செலுத்தும் அவரது பாணியில் குறியீடான கதை ஒன்றைச் சொல்லத் தொடங்கினார். சமய அறிஞர் இருவரைப் பற்றிய கதை அது. அவர்களில் ஒருவர் இலக்கணப் புலவர், மற்றவர் சமயக் கல்வியை முடித்திருந்தும் மெய்ஞ்ஞானப் பாதையைப் பின்பற்றிச் செல்லும் சாதகர். அவர்கள் இருவரும் ஒருநாள் காலாற நடந்து கொண்டிருந்தனர். பேச்சின் இடையில் அந்த ஆன்மிகச் சாதகர் வார்த்தை ஒன்றைச் சற்றே பிழையாக உச்சரித்தார். நூற்கள் பல கற்று அறிவுச் சேகரத்தை அகத்தில் வைத்திருப்பதாக அகந்தை மிகுந்திருந்த இலக்கணப் பண்டிதரால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த வார்த்தை அப்படித் தவறாக உச்சரிக்கப்படுவதைத் தன்னால் ஒருபோதும் அனுமதிக்க இயலாது என்று அவர் பொருமினார். அவர்கள் நெடுநேரம் விவாதித்துக் கொண்டே நடந்திருந்தனர். வழியில் பாழ் கிணறு ஒன்று  இருப்பதை இருவருமே கவனிக்கவில்லை. இலக்கணப் புலவர் அதனுள் விழுந்துவிட்டார். தன்னைக் காப்பாற்றும்படி அவர் சாதகனிடம் கோரினார். அவர் தனது மறுப்புரையைத் திரும்பப் பெற்றால்தான் காப்பாற்ற முடியும் என்று சாதகன் சொன்னான். இலக்கணப் புலவர் அதற்கு ஒப்பாமல் தனது அறிவின் மேன்மையை வலியுறுத்திக் கொண்டிருந்தார். எனவே அவரை அங்கேயே விட்டுவிட்டு அந்தச் சாதகன் போய்விட்டான்.

      இந்தக் குறியீட்டுக் கதையைச் சொல்லிவிட்டு மௌலானா அவர்கள் தொடர்ந்து தற்பெருமை மற்றும் தற்புகழ்ச்சி குறித்துப் பேசினார்கள். “சுய மேன்மையை வலியுறுத்துவதை ஒருவர் நிறுத்தினாலே ஒழிய அவர் ஓர் இருட்டுக் கிணற்றுக்குள்தான் கிடப்பார். பிறருக்கு மட்டுமே தெரிகின்ற, தனக்குப் புலப்படாத கிணறு அது. கடிவாளம் அற்ற தன்முனைப்பு என்பது அந்தப் புலவர் விழுந்து கிடந்த கிணற்றைப் போன்றதே. தேவையில்லாத சுய முக்கியத்துவமே அந்த உணர்வின் வெளிப்பாடாகும்.” ஆன்மிகக் கருத்துள்ள இந்தக் கதையைக் கேட்டுப் பெரிதும் பாராட்டிய அவர்கள் அனைவரும் மிகவும் தாக்கம் பெற்று மௌலானாவின் சீடர்கள் ஆயினர்.

21
தர்வேஷும் ஒட்டகமும்


      ஒருநாள், மௌலானாவின் முன்னிலையில் கூடியிருந்தோர் அந்நாட்டின் ஆளுநரான மொய்னுத்தீன் என்பவரைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவரது ஆட்சியில் மக்கள் மிகவும் உடல் சௌகரியத்துடனும் உடல் நலத்துடனும் வாழ்ந்தனர் என்றும் அவரது வண்மை மிகப் பெரிது என்றும் பேசினர். மௌலானா சொன்னார், அது எதார்த்தம்தான், நூறு மடங்கு உண்மைதான்; ஆனால் வாழ்க்கைக்கு இன்னோர் அம்சமும் இருக்கின்றது (அதாவது, வெறுமனே புறத் தலைமை மட்டும் போதாது. ஆன்மிகத் தலைமைக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும்.) இது தொடர்பாக கதை ஒன்றும் சொன்னார்:

      முன்பு ஒருமுறை குழு ஒன்று ஹஜ் என்னும் புனித யாத்திரையாக மக்காவுக்குப் பயணித்தது. அந்தக் குழுவில் இருந்த தர்வேஷ் ஒருவரின் ஒட்டகம் நோய்ப்பட்டது. அவர்கள் எவ்வளவு சிகிச்சை செய்தும் அந்த ஒட்டகம் எழுந்து நிற்கவில்லை. (அந்த தர்வேஷ் ஒரு சலுகைப் பயணம்தான் செய்கிறார்; அவரிடம் மூட்டை முடிச்சுகள் ஏதுமில்லை என்பது வெளிப்படை.) எனவே, அந்த ஒட்டகம் சுமந்து வந்த பைகளை எல்லாம அவரவர் எடுத்துக்கொண்டு வேறு ஒட்டகங்களில் பகிர்ந்து ஏற்றி விட்டார்கள். வாகனம் ஏதுமின்றி அந்த தர்வேஷைத் தனியே விட்டுவிட்டார்கள். தர்வேஷை அப்பயணக்குழு அழைத்துச் சென்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மௌலானா பின்வரும் கவிதையைப் பாடினார்:

      ”வழிகாட்டி ஒருவரை
      உன்னுடம் அழைத்துச் செல்
      பாதையோ மிகவும்
      பாதகமானது.
      நல்லூழின் நட்சத்திரம்
      என்று சொல்வேன் அவரை.
      அவர் ஒரு வழிகாட்டியாய் இருப்பது
      அகவை மிகுந்தவர் என்பதால் அன்று,
      திகழும் ஞானத் திறத்தால் மட்டுமே.”


22
கழுதை


      மௌலானா ஒருநாள் சமயக் கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பற்பல ஆன்மிக மர்மங்களின் உள் அர்த்தங்களை விளக்கிக் கொண்டிருந்தார். திருக்குர்ஆனில், “திண்ணமாக, ஓசைகளில் மிகவும் அருவருப்பானது கழுதையின் ஓசையே” (31:19) என்று சொல்லப்பட்டிருப்பது ஏன்? என்று கேட்டு அதனைத் தனது மாணவர்களும் சீடர்களும் விளங்குகிறார்களா என்றும் கேட்டார்.

      மௌலானா விளக்கினார், “விலங்குகள் எல்லாம் ஓசை எழுப்பும்போது இறைவனை வணங்கவும் புகழவும் செய்கின்றன. உதாரணமாக ஒட்டகம், பெண் ஒட்டகம்; தேனீக்களின் ரீங்காரம், குளவியின் சப்தம். ஆனால், கழுதை அப்படியான நோக்கத்தில் கத்துவதில்லை. அது இரண்டே தருணங்களில்தான் தனது குரலை எழுப்புகிறது: அது பசித்திருக்கும்போது மற்றும் இணை சேர விரும்பும்போது. எவனது உள்ளத்தில் இறைக்காதலுக்கு இடமில்லையோ அந்த மனிதனும் அப்படித்தான். உண்மையில், அவன் கழுதையை விடவும் மட்டமானவன்.”
அதன் பிறகு அவர் இந்தக் கவிதையைப் பாடினார்:

      ”எவரது ஆர்வங்கள் கழுதையைப் போன்றதோ
      அவரது படித்தரம் கழுதையினும் கீழ்தான்;
      வழியோ உனக்குப் பரிச்சயம் இல்லையேல்
      கழுதையின் ஆசைக்கு எதிராக இயங்கு!”

      அதன் பின் அவர் அரசன் ஒருவனைப் பற்றிய கதையைச் சொன்னார். அந்த அரசன் தன்னிடம் மூன்று பொருட்களை அனுப்புமாறு அண்டை நாட்டு அரசனுக்குச் செய்தி அனுப்பினான்: ஆக மட்டமான உணவு, மிகவும் மோசமான மனிதன் மற்றும் மிகவும் கீழான விலங்கு. அரசனின் நண்பனான அந்த அரசன் கொஞ்சம் மோசமான உணவு, அர்மீனியா நாட்டு அடிமை மற்றும் ஒரு கழுதை ஆகியவற்றை அனுப்பி வைத்தான். கத்துவன யாவற்றின் ஓசைகளிலும் கழுதையின் ஓசையே அருவருப்பானது என்றுரைக்கும் திருக்குர்ஆன் வசனத்தை அவன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.
       
ஒருநாள், மௌலானாவும் அவரது நண்பர்களும் ஷெலபி ஹுசாமுத்தீன் அவர்களின் தோட்டத்திற்குப் போய்க் கொண்டிருந்தனர். மௌலானா ஒரு கழுதையின் மீது அமர்ந்திருந்தார். ஷீது, உஜைர் மற்றும் ஏசு போன்ற இறைத்தூதர்கள் கழுதை மீது சவாரி செய்துள்ளனர் என்றும் அந்த புனித வழிமுறையைத் தானும் கடைப்பிடிப்பதாகவும் அவர் சொன்னார்.

கவிதை:

      ”அறிவாளியே!
      கழுதையின் வெற்று முதுகின் மேல்
      சவாரி செய்வாய்!
      இறைவனின் தூதர்கள் பலர்
      இவர்ந்து சென்றனர் அப்படியே!”

      அப்போது, ஞானி ஷஹாபுத்தீனும் ஒரு கழுதையின் மீது சவாரி செய்திருந்தார். அது திடீரென்று கத்தத் தொடங்கிற்று. அதன் சப்தத்தால் கோபமுற்ற ஷஹாபுத்தீன் அதனைத் தலையில் அடிக்கத் தொடங்கினார். மௌலானா அவரைக் கண்டித்துச் சொன்னார், “அதனை அடிக்காதீர். இறைவனுக்கு நன்றி கூறுங்கள். நீங்கள் அதன் மீது சவாரி செய்கின்றீர். அது உங்கள் மீது சவாரி செய்யவில்லை!” ஷஹாபுத்தீன் வெட்கிப் போனார். மன்னிப்புக் கோரும் பாவனையில் கழுதையை விட்டுக் கீழிறங்கி அதன் குளம்புகளை முத்தமிட்டார். மேலும் மௌலானா சொன்னார், “அதே போன்ற உணர்ச்சிகள் மனிதர்களையும் ஆட்டுவிக்கின்றன. அப்படியானால் அவர்களையும் அடிக்கத்தானே வேண்டும்?”

23
உலக இழப்பு

      ஒருநாள், ஒரு மனிதன் மௌலானாவிடம் வந்து தனது உலக நட்டங்களைப் பற்றியும் வறுமை தன்னை முடக்கி விட்டதைப் பற்றியும் மிகவும் கசப்புடன் புலம்பிக் கொண்டிருந்தான். தனது சகவாசத்தை விட்டுவிடுமாறு மௌலானா அவனிடம் சொன்னார். மேலும், “எமக்கு அருகிலேயே வராதே. எம்மை விட்டும் எம்மைப் போன்றோரை விட்டும் தூரமாகவே இரு” என்றும் சொல்லிவிட்டுப் பின்வரும் கவிதையைப் பாடினார்:

      ”மேன்மையானவனே வா!
      என்னைப் போல் இரு.
      அழியும் பொருட்களின்
      ஆழ உயரங்களைத் தேடாதே.
      சாத்தானின் பின்னல் அதுவே!
      அரசனின் மகுடம் உன்
      சிரசில் பொருத்தப்படும்!
      ஞானியரின் அங்கி உன்
      மேனியில் சூட்டப்படும்!”

      இதே போல் ஒரு நிகழ்வு நபிகள் நாயகத்தின் வாழ்வில் அறிவிக்கப்படுகிறது. தனது தோழர் ஒருவருக்கு அவர் நவினறார், “இரும்புக் கவசங்கள் அணிந்துகொள்; பகைமையை வரவேற்கவும் சிரமங்களை அனுபவிக்கவும் ஆயத்தமாகு; ஏனெனில் உலகச் சம்பத்துக்களின் சுருக்கம் என்பது இறைவனை நேசிப்போருக்கு வழங்கப்படும் அருட்கொடை ஆகும்!”

      மௌலானா சொன்னார், ஒருமுறை ஞானி ஒருவர் பணக்காரன் ஒருவனிடம் அவன் எதை அதிகம் நேசிக்கிறான், பாவத்தையா? அல்லது பணத்தையா? என்று கேட்டார். பணத்தையே அதிகம் நேசிப்பதாக அந்த மனிதன் சொன்னான். அவனிடம் ஞானி சொன்னார், “நீ உண்மையைச் சொல்லவில்லை. ஏனெனில் நீ மரணிக்கும்போது உனது செல்வங்களை விட்டுவிட்டுப் போவாய்; ஆனால் உனது பாவங்களை எடுத்துக்கொண்டு போவாய்.”

      ”நீ எதை அதிகம் நேசிக்கிறாயோ அதை உன்னுடன் எடுத்துச் செல்வதற்கு வழியைப் பார்” என்று அவனிடம் அந்த ஞானி சொன்னார். (அதாவது, அவன் பணத்தையே அதிகம் நேசிக்கிறான். அதனை மறுமைக்கு எடுத்துச் செல்வது என்பது அவன் வாழும்போதே அதனை ஏழைகளுக்கு ஈகையாகக் கொடுத்துச் செல்வதுதான்.) “தர்மம் செய். அப்படியானால், நீ இறைவனிடம் சென்று சேர்வதற்கு முன்பே அவனுக்கு உனது செல்வங்களை அனுப்பி வைத்தவன் ஆவாய். ’நன்மையில் நீங்கள் உங்களுக்காக முற்படுத்தியதை அல்லாஹ்விடம் கண்டடைவீர்’ (2:110) என்று குர் ஆன் சொல்கிறது. அதுவே மிக உன்னதமான சன்மானம் ஆகும்.” என்றும் அவர் அவனிடம் சொன்னார்.

24
கண்ணியமான இடம்

      ஞானி மொய்னுத்தீன் ஒருநாள் தனது இல்லத்திற்கு அணுக்க நண்பர்கள் பலரையும், சான்றோரையும் அறிஞர்களையும் அழைத்திருந்தார். அவர்களை அவரவர் தகுதிக்கேற்ப கண்ணியமான இடங்களிலே அமர வைத்திருந்தார். மௌலானாவும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நாட்டின் உயர் ஆளுநர் விரும்பினார். எனவே, மௌலானாவை அழைத்து வர உயர் ஆளுநரின் மருமகனான முஜாதுத்தீன் அனுப்பப்பட்டார். சிறப்பு இருக்கைகள் யாவும் நிரம்பிவிட்டதால் மௌலானா வருகை தந்தால் அவரை எங்கே அமர வைப்பது என்று அங்கிருந்த சிறப்பு விருந்தினர்களிடையே விவாதங்கள் தொடங்கிவிட்டன. அவரவரும் தனது மதிப்பின் மீது உறுதியாக இருந்த காரணத்தால் மௌலானா வரும்போது தனது இடத்தை விட்டும் எழாமல் இருப்பது என்று முடிவு செய்துகொண்டனர். மௌலானாவை அழைத்து வருமாறு பணிக்கப்பட்டவர் நயமிகு சொற்களால் அழைப்பு விடுத்தார். எனவே, மௌலானா தனது பிரதிநிதியாகிய ஞானி ஷெலபி ஹுசாமுத்தீன் மற்றும் பிற நண்பர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.

      மௌலானாவின் சீடர்கள் முன்னே நடந்தனர். ஞானி ஹுசாமுத்தீன் அந்த வீட்டினுள் காலடி வைத்தவுடன் அங்கிருந்த ஆன்மிக குருமார் அனைவரும் அவரை வரவேற்று உயர்வான இடமொன்றில் அமர வைத்தனர். பின்னர் மௌலானா ரூமி அங்கே வந்து சேர்ந்த போது உயர் ஆளுநர் ஓடிச் சென்று வரவேற்று மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் மௌலானாவின் கைகளை முத்தமிட்டார். பெரிய மனிதர்கள் யாவரும் ஏற்கனவே சிறப்பிடங்களில் அமர்ந்திருப்பதைக் கண்ட மௌலானா அவர்களுக்கு முகமன் உரைத்துவிட்டு நடு மேடைக்கு அப்பால் இருந்த இடத்தில் ஓரமாக அமர்ந்து கொண்டார்.

      மௌலானா அவர்கள் மேடைக்கு அப்பால் ஓரத்தில் அமர்வதைக் கவனித்த ஷெலபி ஹுசாமுத்தீன் தானெழுந்து சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டார். அதனைக் கண்ட பிற பிரமுகர்களும் எழுந்து வந்து அவர்களின் அருகில் அமர்ந்தனர். ஆனால், மௌலானாவின் பெருமையை ஒருபோதும் ஏற்பதில்லை என்று நெஞ்சில் வஞ்சகம் பூண்டிருந்தோர் மட்டும் இருந்த இடத்தை விட்டு எழாமல் அமர்ந்திருந்தனர். ஷைகு நசீருத்தீன், சையது ஷரீஃபுத்தீன் போன்றோர் அவர்களில் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் பெரும் கல்வியாளர்கள், ஒவ்வொருவரும் ஒரு நூலகத்தையே கரைத்துக் குடித்தவரைப் போன்றோர். ஷரீஃபுத்தீன் உயர்ந்த பண்புகளும் அறிவும் பெற்றவராயினும் கொஞ்சம் அவரமாகவும் வெளிப்படையாகவும் பேசிவிடக் கூடியவர் என்று சொல்லப்பட்டது. மௌலானா பலரையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார்கள் என்பதையும் தனது பக்கம் பெரும்பான்மை இருக்கைகள் வெறுமை ஆகிவிட்டன என்பதையும் கண்ட ஷரீஃபுத்தீன், சிறப்பு விருந்தினருக்கான இருக்கை எது? என்றும் கூட்டத்தின் தலைவர் உண்மையில் யார் என்றும் கேள்வி எழ்ப்பினார்.

      ஃகுராசான் நகரின் ஞானியர் மற்றும் தனிமையான வாழ்க்கை வாழ்ந்தோர் ஆகியோரது கருத்தின்படி மேடையின் விளிம்புப் பகுதியே கண்ணியமிக்க இடம் என்று ஷைகு ஷரீஃபுத்தீன் சொன்னார். சூஃபிகளின் உலகில் மேடையின் கடைசி ஓரமே மிகவும் கண்ணியமான இடம் என்று ஷைகு சதுருத்தீன் கூறினார். பிறகு, சோதிக்கும் முறையால், கண்ணியமான் இடம் எது என்று அவர்கள் மௌலானாவைக் கேட்டனர். மௌலானா பாடினார்கள்:

      ”வசிப்பிடம் எது? சிறப்பிடம் எது?
      தலைமை தாங்குவோர் யார்?
      இந்த வார்த்தைகளில் எல்லாம்
      உண்மையில் அர்த்தம் உள்ளதா?
      நாம் என்பதும் நான் என்பதும் யார்?
      இறைவன் எங்கோ அங்கே நாம்.”

      ”இறைவன் எங்கோ அங்கேதான் தலைவரும்” என்று மௌலானா சொன்னதும், “சரி, இறைவன் எங்கே?” என்று சையது சதுருத்தீன் கேட்டார். “ஓ அந்தகரே! நீங்கள் பார்க்கவில்லை அல்லவா?” என்று கேட்டுவிட்டு மௌலானா பின்வரும் கவிதையைப் பாடினார்:

      ”காண்பதற்கு அகக்கண் இல்லை உன்னிடம்.
      இல்லையேல்,
உச்சி முதல் பாதம் வரை
      உன் மொத்த இருப்பிலும்
      உன்னை அல்ல
      அவனையே காண்பாய் நீ”

      பின்னர் மௌலானா அவர்கள் இவ்வுலகை விட்டுச் சென்ற பின்பு, ஷரீஃபுத்தீன் டமஸ்கஸுக்குச் சென்றார். மௌலானா அவர்கள் முன்னுரைத்தது போன்றே அவர் கண்பார்வையை இழந்து அழுது புலம்பிக் கொண்டிருந்தார். மௌலானா தன்னை நோக்கிச் சத்தமிட்ட போது யாரோ தனது கண் முன்னால் கரும்பலகை ஒன்றைப் பிடித்திருப்பது போன்று தான் உணர்ந்ததாகவும் தன்னால் அதன் பின் எதையுமே தெளிவாகக் காண இயலவில்லை என்றும் அவர் சொன்னார். மௌலானாவின் மன்னிக்கும் மனோபாவம் மாபெரிது என்பதால் அவர் தன்னை மன்னிக்கக் கூடும் என்று அவர் நம்புவதாகச் சொல்லிப் பின்வரும் கவிதையைப் பாடினார்:

      ”மன்னிப்பின் நம்பிக்கையை இழக்காதே.
      சொன்னதைத் திரும்பப் பெற்றால்
      மன்னிப்பின் கடலோ விசாலமானது.
      தொழுகையிலும் தியானத்திலும்
      பாவங்களுக்காக மன்னிப்புக் கேள்;
      அவனின் மன்னிப்போ அளப்பரிது.”

      ஜலாலுத்தீன் கரத்தையின் வீட்டில் நடந்த ஒரு நிகழ்வு. தான் நிறுவும் கல்லூரியின் (மதரஸாவின்) கட்டடப் பணி நிறைவு பெற்றதால் அவர் அதன் திறப்பு விழாவிற்கு வருமாறு பெருந்திரளான அறிஞர்களையும் ஊரின் பெரிய மனிதர்களையும் அழைத்திருந்தார்.

      அந்நாளில்தான் மௌலானா ஷம்ஸி தப்ரேஸ் அந்நகருக்குப் புதிதாக வந்து சேர்ந்திருந்தார். கூட்டத்தில் கண்ணியமான இடம் எது என்று அவர் மௌலானாவைக் கேட்டார். மௌலானா சொன்னார், “அறிஞர்களிடையே கண்ணியமான இடம் என்பது மேடையின் நடுவில். ஆன்மிக நெறியின் ரகசியங்களைத் தேடுவோருக்குக் கண்ணியமான இடம் என்பது மேடையின் மூலை. சூஃபிகளுக்குக் கண்ணியமான இடம் என்பது மேடையின் ஓரம். காதலர்களுக்கோ கண்ணியமான இடம் என்பது நேசனின் அருகில்.” இதைச் சொல்லிவிட்டு மௌலானா ரூமி தனது இடத்தை விட்டு எழுந்து சென்று மௌலானா ஷம்ஸி தப்ரேஸின் அருகில் அமர்ந்து கொண்டார். அதன் பின் கோன்யா நகரில் மௌலானா ஷம்ஸ் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.
      
 ஆளுநர் மொய்னுத்தீன் அவர்கள் ஒருமுறை தனது இல்லத்தில் மௌலானாவைச் சிறப்புச் செய்யும் வகையில் இசை நிகழ்ச்சி (சமா) ஒன்றை ஏற்பாடு செய்து மக்களை அழைத்திருந்தார். ஞானத் துறைஞர் மற்றும் ஆன்மிகச் சிந்தனையாளர் பலரும் வந்திருந்தனர். நள்ளிரவு வரை உணர்வெழுச்சியுடன் சென்றது. எனவே ஆக்கி வைத்திருந்த உணவெல்லாம் ஆறிப்போய் உண்ணத் தகாமல் ஆயின. பணியாள் இதனை ஆளுநரின் காதில் ஓதினான். அவரோ தக்க நேரம் பார்த்து மௌலானாவிடம் விநயத்துடன் விண்டார். நிலைமையை மௌலானா புரிந்து கொண்டார். “கட்டுக்கடங்காத விசையுடன் நீர் கொட்டிக் கொண்டிருக்கும் போது நீராலையின் அருகில் நிற்குமொருவன் அதன் இயக்கத்தை எப்படி நிறுத்தமுடியும்?” என்று சொன்னார்.

      இந்த உவமையைக் கேட்டவுடன் ஆளுநர் உணர்ச்சி மேலிட்டுக் கண்ணீர் வடித்தார். உணவு ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. விருந்தினர்களுக்குப் புதிய உணவு சமைக்கப்பட்டது.


25
மருந்துகளின் அற்புதம்

      ரூம் அரசின் அக்காலத்து மருத்துவருள் சிறந்தோன் அக்மலுத்தீன். அம்மருத்துவன் நச்சரவம் தீண்டிய எழுபதின்மரைக் காக்கும் ஆற்றல் வாய்ந்த மருந்து மாத்திரைகளைத் தயாரித்திருந்தான். அப்போது ஆட்சி செய்திருந்த அரசனின் ஆணைக்கு ஏற்பவே இக்காரியம் நடந்து வந்தது. அவசர காலத்துக்கென்று எப்போதும் எழுபது கிண்ணங்களில் அந்த மருந்து ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று அரசர் கட்டளை இட்டிருந்தார்.

      அந்த மருந்துகள் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த நாளொன்றில் மௌலானா ரூமி அவர்கள் ஏதேச்சையாக அந்த மருத்துவனின் வீட்டிற்கு வந்தார். வழக்கப்படி அவரை மிகவும் சிறப்பாக அவன் வரவேற்றான். வினோதமான எழுபது மருந்துக் கோப்பைகள் இருப்பதைக் கண்ட மௌலானா ஒவ்வொன்றாக அவற்றை விழுங்கி முடித்தார். ஒவ்வொரு கோப்பையை முடித்ததும் அதன் அருமையான சுவைக்காக இறைவனைப் புகழ்ந்தார்.

      இதனைக் கண்ட மருத்துவன் வியப்பில் உறைந்து நின்றான். அவனுக்குப் பேச்சே எழவில்லை. சராசரி மனிதனின் மீது அந்த மருந்து என்ன விளைவை ஏற்படுத்தும் என்று மௌலானாவிடம் அறிவிக்கவும் அவன் துனியவில்லை. அந்த ஆற்றல் மிக்க மருந்துகளை அருந்திவிட்டு மௌலானா அவர்கள் எதுவுமே நிகழாதது போல் தனது கல்லூரியை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். அந்த மருந்தின் ஆற்றலைப் பற்றி மௌலானாவின் சீடர்களிடம் மருத்துவன் சொல்லி வைத்தான். அவனைப் போலவே அவர்களும் தங்களது குருநாதரின் உடல் நிலையில் அந்த மருந்துகள் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என்று அஞ்சினர். மௌலானா அவர்கள் தனது வாணாள் முழுவதும் கடுமையான ஆன்மிகப் பயிற்சிகளில், நீண்ட நேர வழிபாடுகளில் கழித்தவர் ஆதலால் அவர் தனது உடல் நலத்தை மிக எச்சரிக்கையாகப் பேண வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர். அந்த மருந்தின் ஓர் அலகை அருந்தினாலும் அவரால் எழ முடியாமல் போய்விடும் என்று மருத்துவன் சொல்லியிருந்தான். அவனால் நிம்மதியாகச் சாய்ந்திருக்க முடியவில்லை. மனத்தில் மிகுந்த பதற்றத்துடன் அவன் மௌலானாவின் இருப்பிடத்திற்கு விரைந்தான். கல்லூரியின் முற்றத்தில் மௌலானா அமர்ந்திருப்பதைக் கண்டான். அகத் தத்துவ நூலொன்றில் ஆழ்ந்து அதனை அமைதியாக வாசித்துக் கொண்டிருந்தார்.

      மரபான முகமன் உரைத்த பின், அவர் எப்படி உணர்கிறார் என்று அவன் மௌலானாவை வினவினான். தண்ணென்ற புனலோடை ஒன்றன் அருகில் அமர்ந்திருப்பதைப் போல் தான் குளுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக மௌலானா கூறினார். அவர் சிறிது காலம் குளுமையான நீரை அருந்தாமல் இருக்க வேண்டுமென்று மருத்துவன் மிகப் பக்குவமாக எடுத்துரைத்தான். மௌலானா உடனே பனிநீர் கொண்டு வருமாறு ஆணையிட்டார். அதில் கொஞ்சம் பனிக்கட்டியையும் இட்டு மேலும் குளுமையூட்டி அதனை உறிஞ்சிக் குடித்து முடித்தார். ஆன்மிக இசையை ஆரம்பிக்கும்படி ஆணையிட்ட பின் குளிப்பதற்குச் சென்றார். மூன்று நாட்கள் அந்த இசை ஒலித்துக் கொண்டிருந்தது.

      மனித அனுபவத்தில் இப்படி மருத்துவ அறிவைப் புறந்தள்ளுவது சாத்தியமே இல்லை என்று அந்த மருத்துவன் அலறினான். ஞானிகள் மட்டுமே இப்படிச் செய்ய இயலும். அதன் பின் அவனும் அவனது மனைவி மக்களும் உறவினர் சிலரும் மௌலானாவின் சீடர்களாயினர். தனது மருத்துவத் தோழர்களிடம் அவன் இந்நிகழ்வைப் பல காலம் சொல்லிக் கொண்டிருந்தான்.

      கவிதை இதைச் சொல்கிறது:

      ”அருந்தின் அவரை நஞ்சு நலியாது.
      அறைகுறைச் சாதகன் அருந்துவான் எனில்
      நீலச் சுண்டெலி போலவன் மேனி
      சாலவும் மாறிச் சாய்ந்து கிடக்கும்.
      முத்து நபியின் முதலாம் பிரதிநிதி
      சத்திய அபூ பக்கரின் மீது
      நஞ்சின் தீமை கொஞ்சமும் இல்லை
      என்பதன் ரகசியம் இதுதான், அறிக.
      ஞானியர் தமக்கோ நஞ்சு என்பது
      தேனென மாறும் உண்மை தெரிக.”

      இக்கவிதை வரலாற்று நிகழ்வு ஒன்றைச் சுட்டுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரைப் புலம் பெயர்ந்து மதீனா நகர் நோக்கிப் பயணித்தபோது நபியின் முதல் கலீஃபா (பிரதிநிதி)யான அபூபக்கர்தான் உடன் சென்றார். எதிரிகள் அவர்களைத் துரத்தி வந்தனர். பயணத்தின் இடையில் அவர்கள் ”தௌர்” என்னும் குகையில் மறைந்திருந்தனர். அதிலொரு பாம்புப் புற்று இருந்தது. அதிலிருந்து பாம்பு ஒன்று தனது தலையை வெளியே நீட்டிப் பார்த்தது. வெளியே வராமல் அதனைத் தடுக்க அபூபக்கர் தனது பாதப் பெருவிரலால் புற்றுத் துளையை அடைத்தார். அந்தப் பாந்தள் அவரைக் கொத்திற்று. அது தீண்டிய இடத்தில் நபியின் தூய உமிழ்நீர் தடவப்பட்டது. பாம்பின் விடம் அவருக்குத் தீங்கு செய்யவே இல்லை.

(to be continued...)