Tuesday, September 26, 2017

யாதினும் மெல்லோன்



      எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்... என்று ஆரம்பம் செய்கிறார்கள்.

      சர்வ வல்லமை கொண்ட ஆண்டவன் என்று இறைவனைச் சுட்டுகிறார்கள்.

      எல்லையற்ற வல்லமை கொண்டவன் என்றும் வருணிக்கின்றார்கள்.

      ’அந்த வல்லோனை நினைத்திருந்தால் நல்ல வாழ்க்கையும் தேடி வரும்’ என்று ஒலிக்கின்றது அல்லாஹ்வைத் தமிழ் செய்த பாடல்.

      அவன் வல்லோன் மட்டுமா? மெல்லோனும் அல்லவா?

      அவன் வலியன் மட்டுமா? எளியோனும் அல்லவா?

      இறைவன் வன்மைப் பண்பு கொண்டவன் என்று நினைக்கப் பாமர மனமே போதும். அவன் மென்மைப் பண்பு கொண்டவன் என்றும் உணர மனம் பக்குவப்பட வேண்டும்.

      ”அல்லாஹ் மென்மையானவன்; அவன் மென்மையை விரும்புகிறான்” என்று நபிகள் நாயகம் நவில்கிறார்கள். [சஹீஹ் முஸ்லிம்: 2593].

      இந்த அருள்மொழியின் மூலப்பிரதியில் உள்ள அரபிச் சொல் ”ரிஃப்க்” என்பதாகும். அதன் அர்த்தப் பிரிகைகளில் ஒன்றுதான் மென்மை என்பது. உண்மையில் அச்சொல் மென்மை சார்ந்த அனைத்துப் பண்புகளையும் உள்ளடக்கியது. உதாரணமாக, நளினம் என்றும் அதற்குப் பொருள் தரலாம்.

      எனவே, “அல்லாஹ் நளினமானவன்; அவன் நளினத்தை விரும்புகிறான்”.

      இறைவனின் மென்மைக்கு ஏதேனும் உவமை காட்ட முடியுமா?

      இறைவனுக்கு உவமை கூறக்கூடாது என்பதொரு நியதி. என்ன சொன்னாலும் தப்பாகத்தான் ஆகும் என்பதால். அவன் ஒப்புவமை அற்றோன் அல்லவா?

       ”எப்பொருளும் அவனுக்கு ஒப்பென்று இல்லை” (42:11) என்கிறது குர்ஆன்.

     இருப்பினும் அவனை நினைவூட்டாத பொருள் ஏதேனும் இருக்கிறதா?

 Image result for sufi with rose

      ”எந்தப் பூவும்
       உன்னைப் போல் இல்லை
       ஆனால்
       ஒவ்வொரு பூவும்
       உன்னையே நினைவூட்டுகிறது”

      என்று பாடினான் ஒரு கஸல் கவிஞன்.

      அப்படித்தான் ஒரு நிகழ்வில், “இந்தத் தாய்க்கு அவளின் பிள்ளை மீதுள்ள பாசத்தை விடவும் அல்லாஹ் தனது அடியானின் மீது பிரியமுள்ளவன்” என்று நபிகள் நாயகம் ஒப்பிட்டு உயர்த்திச் சொன்னார்கள். (சஹீஹ் புகாரி: 5653).

      இறைவன் நம் மீது பரிவு காட்டுவதைச் சொல்ல வந்த வள்ளலார் “பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து...” என்று பாடினார்.

      அதுபோல், நாமும் ஓர் ஒப்பீடு சொல்லி, இறைவன் இதனினும் மென்மையானவன் என்று சொல்லிச் சொல்லி இன்பம் அடையலாமே? எதைச் சொல்வது?

      மென்மை என்றதும் நம் நினைவுக்கு வருவன எவை? பூ, பெண், குழந்தை, பட்டு, தென்றல்...

      எதைச் சொன்னாலும் அதனினும் இறைவன் மென்மையானவன் அல்லவா? அவன் யாதினும் மெல்லோன்.

      நபித்தோழர் அனஸ் அவர்கள் சொல்கிறார்கள், “நபியின் உள்ளங்கையை விடவும் மென்மையான பட்டு எதையும் நான் தொட்டதில்லை. அவர்களின் வியர்வையை விடவும் வாசமான நறுமணம் எதையும் நான் முகர்ந்ததில்லை” (சஹீஹ் புகாரி: 3561).

      நபியில் வெளிப்படுவது இறைவனின் மென்மை அன்றி வேறல்ல. நபியில் கமழ்வது தெய்வீக மணம் அன்றி வேறல்ல.

Image result for sufi with rose 
 
      இறைவனால்தான் பூவும் மென்மையாக இருக்கிறது. இந்த ஞானம் தோன்றித்தான் தாயுமானவர் பூசைக்குப் பூப்பறிக்கச் சென்றவிடத்தில் பூவிலேயே இறைவனை உணர்ந்தார். “பார்க்கும் மலரூடு நீயே இருத்தி” என்று பரவசத்துடன் பாடினார்.
     
 இறைவன் பூவினும் மெல்லோன் என்று சொல்லலாம்தான். ஆனால், பூவை விடவும் மென்மையான விசயம் ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

      ”மலரினும் மெல்லிது காமம் / சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்” என்று சொல்லி வியக்க வைக்கிறார் அவர்.

      ’காமம்’ இன்று ஓர் ஆபாச வார்த்தை ஆகிவிட்டது. முப்பால் தந்த வள்ளுவர் தம் நூலின் மூன்றாம் பாலுக்குக் காமத்துப் பால் என்றே பெயர் சூட்டினார். அவர் காலத்தில் காமம் என்பது காதலின் மலர்ச்சி. அது வெறும் உடற் கிளர்ச்சி அல்ல.

      வள்ளுவர் மெய்ப்பொருள் காணும் அறிவு பெற்றவர். காமம் என்னும் ’மெய்’ப்பொருளில் இறைமை என்னும் மெய்ப்பொருளின் ஜோதி கண்டவர். அறிவுடையார்க்குக் காமம் என்பது பால். அறிவிலார்க்குக் காமம் என்பது கள். 

’பால் போல கள்ளும் உண்டு; நிறத்தாலே ரெண்டும் ஒன்று’ என்பார் கண்ணதாசன். ஒன்று சித்தம் அளிப்பது. மற்றது சித்தம் அழிப்பது. ஒன்று போதை போன்ற போதம். மற்றது போதம் போன்ற போதை. 

”மெல்லிது...” என்பதை tender என்று ஜி.யூ.போப்பும் ‘soft’ என்று கவியோகி சுத்தானந்த பாரதியும் ஆங்கிலம் ஆக்கியுள்ளனர். எனினும், மெல்லிது என்னும் சொல்லின் நுட்பமான அர்த்தம் இச்சொற்களிலும் மேலும், delicate, gentle போன்ற சொற்களிலும் வெளிப்படவில்லை என்று ஆங்கிலப் புலமை ஆழங்காற்பட்ட அறிஞர் தி.ந.ராமச்சந்திரன் சொல்கிறார். ’மெல்லிது’ என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் சாத்தியமல்ல என்னும் முடிவுக்கு வந்து, ”மெல்லிது மெல்லிது மெல்லிது. வள்ளுவன் சொன்ன சொல்லிது சொல்லிது சொல்லிது” என்று அமைகிறார்.

பூக்களில் மிகவும் மென்மையான பூ எது? அனிச்சம் என்று கூறுகிறது தமிழ். எவ்வளவு மென்மை? “,மோப்பக் குழையும் அனிச்சம்” என்கிறார் வள்ளுவர். அதாவது, அனிச்சம்பூ முகர்ந்து பார்த்தாலே வதங்கிவிடுமாம்.

மிகவும் மென்மையாகத் தொடுவதை ஆங்கிலத்தில் feather touch என்று சொல்லும் வழக்குண்டு. பறவைகளின் இறகுகளில் மென்மையானது அன்னத்தின் இறகு போலும். அதன் உடலிலிருந்து தானாய் உதிர்ந்த இறகுக்குத் தூவி என்று பெயர்.  

Image result for feet detail painting 
Detail - "Gentle Spring" by Fredrick Augustus Sandy.
 
அனிச்சம் என்னும் பூவும், அன்னத்தின் தூவியும் பெண்களின் பாதத்தில் நெருஞ்சி முள் போல் குத்தும் என்கிறார் வள்ளுவர். அவர்களின் பாதங்கள் அவ்வளவு மென்மையாம்!

“அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்” (1120).

மலரினும் மெல்லிது காமம். பூவினும் மென்மையள் பெண்.

இறைவனால்தான் பெண் மென்மையாக இருக்கிறாள்.

இசை மென்மையானது. இறைவன் இசையினும் மென்மையானவன். இறைவனால்தான் இசை மென்மையாக இருக்கிறது.

குழந்தையின் மூச்சு மென்மையானது. இறைவன் குழவியின் மூச்சினும் மென்மையானவன். இறைவனால்தான் சிசுவின் மூச்சு மென்மையாக இருக்கிறது.

எதைச் சொன்னாலும் இப்படிப் போய்க்கொண்டேதானே இருக்கும். இறைவன் யாதினும் மெல்லோன். அதை அவரவர் தம் அறிவு நிலைக்கேற்ப சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.

கிறித்துவ ஞான மரபில் தோன்றிய புனிதர் சியனாவின் கேத்தரீன் ஒரு மென்மையான விஷயத்தைச் சொல்கிறார்: முத்தம்!

Image result for virgin and child auguste ernest hebert 
"VIrgin and the Child" by Antoine Auguste Ernest Herbert.

அது காதலியின் முத்தம் அல்ல. அதைவிடவும் அழகான ஆழமான ஒரு முத்தத்தை முன்வைத்து அவர் பேசுகிறார். அதைப் படித்தபோது ஒரு நொடி என் மூச்சு நின்றுவிட்டது!

”God’s heart is more gentle than the Virgin’s first kiss upon the Christ” என்கிறார் அவர்.

”இறைவனின் இதயம்
மென்மையானது,
ஏசுவின் மீது
கன்னி (மேரி) இட்ட
முதல் முத்தத்தினும்.”
                                                                                               

Sunday, September 24, 2017

அன்பின் அழகிய மகள்



Image result for thiruvalluvar
     தமிழின் அதி சிறந்த அறநூல் திருக்குறள். அதில் தமிழ் என்னும் சொல்லே இல்லை! யாரோ ஒரு புண்ணியவான் எழுத்தெண்ணிப் படித்து இதனைக் கண்டுபிடித்திருக்கிறார். 

      இரவெல்லாம் அமர்ந்து ஒவ்வொரு குறளாக விடிய விடிய ஆய்ந்து அதில் வெண்பா இலக்கணம் எவ்விடத்தும் பிழைபடவில்லை என்று கண்டறிந்தாராம் வைரமுத்து. ’தேவையா இந்த வேலை?’ என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அதனால், வெண்பா எழுதும் திறன் அவருக்குக் கைவந்ததாம்.

      அடியேனும் இன்று திருக்குறளில் ஒரு தன்மையைக் கண்டுபிடித்தேன். கடின உழைப்பால் அல்ல. மிகவும் எளிதாக. இணையம் என்னும் ‘ஜின்’னின் ஒத்தாசை இருக்கிறதே!

      ’அன்பு’ என்று தொடங்கும் அல்லது முடியும் கவிதை ஒன்று, ஐந்து நிமிடத்திற்குள் அவசரமாக வேண்டும் என்று அழைத்தார் நண்பர் ஒருவர். இணையத்துள் நுழைந்து திருக்குறளில் தேடும்படி கணினிக்கு ஆணையிட்டேன். ‘ஆலம்பனாஹ்! இதோ’ என்று அது அள்ளி வந்ததில் பதினொரு குறள்கள் இருந்தன. ”சரி, அன்பு என்று முடியும் குறள்” என்று ஆணையிட்டேன். ’இல்லை’ என்று பதில் வந்தது. “அடடே! திருக்குறளில் அன்பு என்று எந்தக் குறளும் முடியவில்லை”. ஆய்வு செய்து நான் இதைக் கண்டுபிடித்ததாகப் பீற்றினால் என் மனசாட்சியே என்னை மன்னிக்காது. 

‘அன்பு என்று தொடங்கும் குறள்கள் பதினொன்று உள்ளன. ஆனால், அன்பு என்று ஒரு குறளும் முடியவில்லை. ஏன் தெரியுமா? அன்பிற்கு முடிவே இல்லை! என்று வள்ளுவர் சொல்ல வருகிறார்’ என்று நான் ஏதாவது மேடையில் பேசினால் கைத்தட்டல்கள் கிடைக்கலாம். ஆனால், வள்ளுவரின் ஆன்மா என்னை மன்னிக்காது! (தர்க்கம் இடிக்கிறதே? அறம் என்று முடியும் குறள் உண்டு. அப்படியானால் அறத்திற்கு முடிவு உண்டா?)

தோழருக்கு அக்குறட்பாக்களின் எண்களை அனுப்பினேன். ‘இதெல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டது. புதிய கவிதை வேண்டும். ஐந்து வரிகள் போதும். உங்களுக்கு இரண்டு நிமிடம் ஆகுமா? எழுதி அனுப்புங்களேன்” என்று அன்புக் கட்டளை இட்டார். ஆங்கிலத்தில் தட்டி வாட்ஸப்பில் அனுப்பினேன், இப்படி:

என் அன்பே!
என்று அழைப்பது எப்படி?

அன்பு
எனதும் அல்ல
உனதும் அல்ல

அன்பின் உடைமை
அல்லவோ
நீயும் நானும்?

’ஆஹா! கவிதை கவிதை’ என்று சிலாகித்து குறுஞ்செய்தி அனுப்பினார் தோழர். தொடர்ந்து, ஊறும் மணற்கேணி போல் அன்பைப் பற்றிய எண்ணங்கள் மனக்கேணியில் சுரந்து வந்தன.

Image result for love painting 
"In Love" - by Marcus Stone.

“வையத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை” என்பது பாரதியின் வாக்கு. இவ்வரி தோன்றியபோது பாரதியைச் செல்லமாகச் சீண்ட நினைத்தேன். திரைப்பாடல் ஒன்றின் சரணத்தில் எழுதலாம் போல் இப்படி எழுதினேன்:

“அன்பே சிறந்த தவம்
என்கிறான் பாரதி
அன்பே சிறந்த வரம்
என்று நீ கூறடி!”

இன்னொரு சிந்தனை. அவனும் அவளும் பால்ய வயதில் அன்புடன் பழகியவர்கள். காலம் செல்ல, அவள் பருவமடைகிறாள். முன் போல் அவளை அவன் பார்க்கவியலாது. அவள் பர்தா என்னும் திரை அணிந்துகொள்கிறாள். ஆனால் அந்த அன்பு அகத்தில் மெல்ல மெல்லக் காய்ச்சப்பட்டுக் காதலாகிவிடுகிறது. இனி அவளை அவன் மணம் செய்தால்தான் முன்பு போல் உரையாட முடியும். இந்தப் பின்னணியில் அவன் சிந்திப்பதாக ஒரு குறுங்கவிதை:

அன்பைப் போல்
அத்தனை வெளிப்படையாய்
இருப்பதில்லை காதல்

ருதுவடைந்த அன்புதான் காதலோ?
அதனால் அது     
திரை அணிகின்றதோ?

அன்பு எனும் சிறுமி பருவமெய்திக் கன்னியாய் ஆனதே காதல் என்று நான் உருவகம் செய்கிறேன் என்றால், அந்த அன்பு ஒரு தாயாகிக் கருவுற்றுப் பிள்ளை பெறுவதாக உருவகம் செய்து வியக்க வைக்கிறார் வள்ளுவர். அன்பின் குழந்தை எது? அருள் என்கிறார் அவர். “அருள் என்னும் அன்பீன் குழவி” என்பது அவர் வாக்கு.

Related image 
"madonna with child" by william bouguereau.

குழவி என்றால் கைக்குழந்தை. அருளைக் குழவி என்று சொன்னதில் நுட்பமான உட்பொருள் உள்ளது. கரு தரித்துத் தங்கி குழந்தை பிறப்பதே பெரும்பாடு. அதுபோல் அன்புள்ள மனதில் அவ்வன்பு அருளாய் மாறுவதே அபூர்வம்தான். எனினும் அன்பு அருளாக மாறும் கணங்களை அவ்வப்போது ஒவ்வொரு மனிதனும் அடையவே செய்வான். ஆனால், அந்த அருளை வளர்த்தெடுப்பது, நிலைக்க வைப்பது மிக மிகக் கடினமான செயல். அது குழவியை வளர்த்தெடுப்பது போன்றது. தொடர்ந்து தாய் அதற்குப் பாலூட்ட வேண்டும். நோய் தாக்காது கவனிக்க வேண்டும். நோயுற்றால் தக்க மருந்து கொடுத்துக் காக்க வேண்டும். இப்படித்தான் அருளையும் வளர்க்க வேண்டியுள்ளது. அபூர்வமாக அகத்தில் அரும்பும் அருளுணர்வை மனிதர்கள் அனாதையாக விட்டுவிடுகிறார்கள். அதனை வளர்ப்போரே புனிதர்கள் ஆகிறார்கள்.

இன்னொரு சிந்தனை: “அன்பு தாய்; அருள் அதன் மகள். அன்பு அழகானதுதான், மாதவியைப் போல. ஆனால் அவளின் மகள் அவளைவிட அழகி, மணிமேகலையைப் போல.”

இந்தச் சிந்தனையை விரித்துக்கொண்டே போனபோது அதுவே அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரம் போல் அர்த்தங்களை அள்ளி வழங்கியது.

அன்பைப் பற்றி அதிகமாக எழுதுகிறார்கள். ஆனால் அருளைப் பற்றி அவ்வளவு எழுதப்படுவதில்லை. சிலம்பில், மாதவியின் அழகை இளங்கோ பாடிய அளவுக்கு, மணிமேகலையின் அழகை அவள் பெயரால் அமைந்த காப்பியத்தில் சாத்தனார் பாடவில்லை. எனினும், சுருக்கமாக ஒரு வரி சொல்கிறார். அதில் அவள் உலகின் மிகச் சிறந்த அழகியாகத் தோன்றுகிறாள்:

படையிட்டு நடுங்கும்
காமன் பாவையை
ஆடவர் கண்டால்
அகறலும் உண்டோ?
பேடியர் அன்றோ
பெற்றியின் நின்றிடின்?

அதாவது, இளமையின் அழகு செழித்த அவளைப் பார்த்தால் அதன் பின் ஆடவர் அவளிருக்கும் இடத்தை விட்டு அகல்வார்களா? அவளைக் கண்ட பின்னும் தம் இயல்பு திரியாமல் அப்படியே நிற்பார்கள் எனில் அவர்கள் பேடிகளாகத்தான் இருக்க வேண்டும்’ என்கிறார் சாத்தனார். 






Image result for face portrait detail
face detail by william bouguereau.

மாதவி தன் மகளான மணிமேகலையைத் துறவு நெறிக்குக் கொடுத்துவிட்டாள். ஒரு நாள் மணிமேகலை பூப்பறிப்பதற்காக மலர்வனம் சென்றாள். அப்போது அவ்வூர் மக்கள் அவளைச் சுற்றிச் சூழ்ந்து நின்று பார்க்கிறார்கள். ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கற்றுத் தேர்ந்து தன் அழகால் உள்ளங்களை உருக்கியவளான மாதவி தனது மகளை இப்படித் துறவி ஆக்கிவிட்டாளே என்று அவர்கள் வருந்தி, அப்படிச் செய்த மாதவி கொடியவள் அறிவற்றவள் என்று திட்டியதாகச் சாத்தனார் எழுதுகிறார்:

அணியமை தோற்றத்து
அருந்தவப் படுத்திய
தாயோ
கொடியவள் தகவிலள்

அன்பு நிலையில் மட்டுமே நின்றியங்கும் மக்கள் இப்படி வருத்தப்படுவது இயல்புதான். ஆனால் அருள் அதனைக் கருத்தில் கொள்ளலாகாது. காலம் செல்லச் செல்லத்தான் அருளின் உயர்வு அனைவர்க்கும் தெரியும்.

கலைகளில் சிறந்த மாதவிக்கு அமுதசுரபி கிடைக்கவில்லை. அவள் வயிற்றில் பிறந்த மணிமேகலைக்கே அது கிடைத்தது. அதுபோல், பல்வேறு உறவுநிலைகளால் இவ்வுலகை அலங்கரிக்கும் அன்புக்குக் கிடைக்காத ஞானம், அந்த அன்பின் வழிப் பிறந்த அருளுக்கே கிடைக்கிறது.

இன்னொரு சிந்தனை. மேற்சொன்ன திருக்குறளுக்கு வரையப்பட்டுள்ள உரைகள் தரும் வெளிச்சங்கள்.

”அருள் என்னும் அன்பீன் குழவி” என்பதற்கு ”தொடர்பு பற்றாதே வருத்தம் உற்றார் மேல் செல்வதாய அருள், தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவது ஆகலின்...” என்று விளக்கம் தருகிறார் பரிமேலழகர்.

அதாவது இன்னார் இனியார் எனப் பாராது உற்றார் உறவினர் அல்லார் மீதும் உண்டாகும் மெல்லுணர்வு (மேலுணர்வு) அருள். நம்முடன் தொடர்புடைய நபர்கள் மீது மட்டும் உண்டாகும் மெல்லுணர்வு அன்பு.

இவ்விரு பண்புகளும் இறைமைப் பண்புகள் என்று இஸ்லாம் காண்கிறது. எவ்வொரு செயலுக்கும் தொடக்க வாசகமாக அதில் சொல்லப்படுவது “பிஸ்மில்லாஹ் அர்ரஹ்மான் அர்ரஹீம்” என்பது. ”அல்லாஹ்வின் பெயரால்... அவன் அருளாளன் அன்பாளன்” என்பது அதன் பொருள்.

இதில் அருள் முதலிலும் அன்பு அடுத்தும் சொல்லப்பட்டுள்ளது. இறைவன் தன்னை ஏற்றாரையும் மறுத்தாரையும் நல்லாரையும் பொல்லாரையும் பாரபட்சமின்றி ரட்சிக்கிறான். இதுவே அருளாளன் எனும் நிலை. தனது அடியார்க்கு அவர்களின் பக்திக்கேற்ப அருட்கொடைகளை அவன் வழங்குகிறான். இதுவே அன்பாளன் என்னும் நிலை.

அன்பு என்னும் தாய்க்கு அருள் என்னும் குழந்தை பிறக்கிறது என்பது சரிதான். ஆனால் தந்தை யார் என்னும் கேள்வி தோன்றுகிறது அல்லவா? அறம் என்பதே அதன் தந்தை என்கிறார் மணக்குடவர். அதாவது, அறத்துடன் அன்பு சேரும்போது அருள் பிறக்கிறது.

இவ்வுலகில் அறம் செய்ய வேண்டும் என்றால் பொருள் (செல்வம்) வேண்டும். பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதும் அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை என்பதும் அவர் சொல்வதுதான். அதாவது, இவ்வுலகிலும் அருள் வேண்டும், ஆனால் அதற்குப் பொருளின் துணை தேவை என்கிறார். “இது பொருளுடையார்க்கே அறம் செய்தல் ஆவது கூறிற்று” என்று இக்குறள் பற்றி மணக்குடவர் விளக்குகிறார்.
Image result for sadaqah photos
பொருளுடையார் செய்யும் அறம் இரண்டு என்று இஸ்லாம் வகுத்தது. ஒன்று வறியார்க்குக் கட்டாயம் ஈதல் ஆன ஜக்காத். தானுவந்து தரும் தர்மம் ஆன சதக்கா.

”அருள் என்னும் அன்பீன் குழவி” என்பதற்கு ஞா.தேவநேயப் பாவாணர் இன்னொரு விளக்கம் தருகிறார். “உயர்திணை மேலுள்ள அன்பு முதிர்ந்தவிடத்தே அஃறிணை மீது அருள் பிறத்தல் போல்...” என்கிறார்.

உயர்திணையான மக்கள் மீது மட்டும் காட்டுவது அன்பு. அதுவே, அஃறிணையான விலங்குகள் பூச்சிகள் தாவரங்கள் மீதெல்லாம் காட்டப்படும் எனில் அது அருள்.

“மானுட சமுத்திரம் நானென்று கூவு” என்றார் பாரதிதாசன். இது அன்பு.

“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றார் பாரதி. இது அருள்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார் கணியன் பூங்குன்றனார். இது அன்பு.

“யாதும் ஊரே யாதும் கேளிர்” என்றார் தேவதேவன். இது அருள்.

Saturday, September 23, 2017

காதல் காதல் காதல்



Image result for black bird woman
       
      மகாகவி பாரதியார் எழுதிய மகத்தான நெடுங்கவிதை ”குயில் பாட்டு”. குயிலும் மாடும் குரங்கும் வரும் அக்கவிதை வெற்றுக் கற்பனை அன்று; அஃதொரு பொழுதுபோக்குக் கவிதையும் அல்ல. 

      அது ஓர் ஆன்மிகக் காவியம். வேத ஞானத்தைக் குறியீடாகப் பேசும் பனுவல். அப்பாட்டின் முடிவில் இதனை பாரதியே சொல்கிறார். ஒரு சவால் விடுகிறார்: ”ஆன்ற தமிழ்ப்புலவீர்! கற்பனையே ஆனாலும் / வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க / யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?”

      இந்தப் பாட்டில் குயில் என்று வருவது மனிதனின் ஆன்மாவைக் குறிக்கும் என்னும் அளவில் புரிந்து கொண்டாலே போதும். பல மர்ம முடிச்சுக்கள் நெகிழும், அவிழும்.

ஆன்மா இறைவனைக் காதலிக்கிறது. அந்தக் காதலையே ஞானிகள் அனைவரும் பேசினர். மனிதக் காதலை ஒரு குறியீடாக வைத்துக்கொண்டு அவர்கள் புனிதக் காதலை விளக்கினர். பாரதியின் குயிலும் அந்தப் புனிதக் காதலையே நாடித் தவிக்கிறது.

குயிற்பாட்டில் மிகவும் பிரபலமடைந்துவிட்ட வரி இதுதான்:

“காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்”

இதே போல் இன்னும் பல வரிகள் அந்தக் குயில் கூறுவதாக வருகின்றன. எனினும் இவ்வரி ஒன்று மட்டும் மிகவும் பிரபலம் அடைந்து விட்டது. இவ்வரி சந்த அமைப்பிலும் எளிய சொற்களின் தேர்விலும் குயில் கூவுவது போலவே அமைந்துள்ளது. நேர் நேர் என்னும் சீரமைப்புக் கொண்டு நேராக நெஞ்சில் சேதியைச் செருகுகின்றது.

இதே கருத்து வேறிரு இடங்களில் வேறு சொற்களில் சொல்லப்பட்டுள்ளது:

“காதலை வேண்டிக் கரைகின்றேன்
இல்லை எனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்”

என்றும்,

“காதலோ காதல்
இனிக் காதல் கிடைத்திலதேல்
சாதலோ சாதல்”

என்றும் குயில் புலம்பித் தவிப்பதாக பாரதி பாடுகிறார். எனினும் ‘காதல் காதல் காதல்’ என்று வரும் அந்த வரியே பெரும்புகழ் பெற்றது.

“ஆச வச்சேன் உன்மேல / அரளி வச்சேன் கொல்லையில” என்னும் நாட்டுப்புறப் பாடல் வரிகள் பாரதியின் வரிகளையே கவித்துவத்தில் விஞ்சி விட்டன என்றொரு கருத்துண்டு. கவிஞர் அறிவுமதி மேடையில் இதனைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இஃதோர் அவசரப் பிழை.
Image result for t n ramachandran

இதே போலொரு கருத்தினை மீண்டும் அண்மையில் கேட்டேன், பாரதியை அவரது மொழிபெயர்ப்பாளர் விஞ்சிவிட்டார் என்று. பாரதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அந்த அறிஞர் ‘சேக்கிழார் அடிப்பொடி’ என்று தன்னை அழைத்துக்கொள்ளும் தி.ந.ராமச்சந்திரன் அவர்கள் (சுருக்கமாக டி.என்.ஆர்). அவரது ஆங்கிலப் பெயர்ப்பில் பாரதியின் வரிகள் இப்படி அமைகின்றன:

“Love, Love, Love, Love;
If Love should flit
Life must quit.”

     டி.என்.ஆர் செய்த இம்மொழிபெயர்ப்புப் பற்றி ஆங்கிலப் பேராசிரியர் திரு.ஷர்மா அவர்கள் சொல்கிறார், “நான் அவரது பாரதி மொழிபெயர்ப்புக்கள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். அவை நன்றாக உள்ளன. ஆனால் மூலத்தையே அவர் விஞ்சுவதாகத் தோன்றும் அடி ஒன்று இருக்கிறது.” (”I’ve gone through all his translations of Bharathi. They’re fine. But there is one passage where he seems to excel the original.”).

 இப்படிச் சொல்லிவிட்டு அவர் மேற்கண்ட வரிகளை மேற்கோள் காட்டுகிறார். அவர் அப்படிக் கருதுவதற்கான காரணத்தையும் தொடர்ந்து சொல்கிறார்: ”மூலத்தை அவர் விஞ்சிவிட்டதாகத் தோன்றும் அடி இதுதான். ஏனெனில் காதல் என்பது மீண்டும் மீண்டும் நிகழும் செயலாக இருக்கலாம். ஆனால் சாவு என்பது ஒரே ஒரு முறை மட்டுமே நிகழ முடியும்.” (And this is the passage where he excels the original. Because love can be a repetitive action, but death can happen only once.) [காண்க: Sekizaar Adi-p-Podi T.N.Ramachandran : A documentary,  https://www.youtube.com/watch?v=__pasa5tskc, 38:47 – 39:47].

தான் பாரதியை விஞ்சிவிட்டதாக டி.என்.ஆர் ஒப்புக்கொள்வாரா? ஒருபோதும் இல்லை. திருவிழாவில் தந்தையின் தோளின் மீது அமர்ந்தபடி வித்தையைக் கண்டு களிக்கும் பிள்ளையைப் போல், பாரதியின் தோள்மீது அமர்ந்துதானே புதிய தரிசனங்களை அவர் அடைகிறார். எனவே, நிஜத்தை விடவும் நீளமாக இருக்கிறது என்பதால் நிழல் வென்றுவிட்டது என்று சொல்வது பிழை. 


Image result for black bird woman
"bird woman" by Gabriel Moreno.

குயில் இங்கே ஆன்மாவின் குறியீடு என்று சொன்னேன். அது இறைவனின் மீது ஒருதலைக் காதல் கொண்டுள்ளது. இறைவன் அப்படித்தான் சோதிக்கின்றான். சில காலம் ஒருதலையாகத் தவிக்க விட்டுப் பிறகே ஆட்கொள்கிறான். உலகம் கண்ட இறைஞானியர் பலரின் வாழ்வும் இவ்வுண்மைக்குச் சான்று பகர்கின்றன.

இறைவன், ஒற்றைப் பூவுக்கோ பாசாங்குச் சொல்லுக்கோ வாழ்த்து அட்டைக்கோ மதி மயங்கும் அசட்டுப் பெண்ணல்லன். அவனது காதலின் தீயில் முழுதும் எரிந்து சாம்பலான ஒருவனையே தனது காதலின் ஃபீனிக்ஸ் பறவையாக எழுப்புகின்றான். அவர்களையே ’தெய்வீக உலகின் பறவைகள்’ (தாயிரே லாஹூத்) என்கிறது சூஃபித்துவம்.

காதல் என்பது உள்ளத்தில் பற்றும் தீ. ”உள்ளத் தனல் பெருக” அக்குயில் “இன்னிசைத் தீம்பாடல்” செய்ததாக பாரதி சொல்கிறார். அந்த இசையே காதல் என்னும் தீயின் வடிவம்தான். ’நாதக் கனலினிலே நம்முயிரைப் போக்கோமோ?’ என்கிறார் அவர்.

ஒருதலைக் காதல் என்பது எரிதழல். அது சம்மதம் பெற்றுவிடும்போது தீபம் ஆகிவிடுகிறது. விட்டிலோ இரண்டிலுமே எரிகிறது!

“காதல் உயிரூட்டலாம்
அல்லது கொல்லலாம்.
யாருக்குக் கவலை?
காதலிக்கப்படாவிடினும்
நான் காதலிப்பேன் ஆகுக”

என்கிறார் டி.என்.ஆர். (“Love may vivify or kill. Who bothers! Let me love, though unloved”, கண்ணன் பாட்டு ஆங்கிலப் பெயர்ப்பு முன்னுரை).

இக்கருத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் (தீ) பற்றுகிறார் இப்படி:

“நீ காதலிக்காவிட்டால் என்ன?
ஒரு பக்கம் பற்றினாலும்
அது நெருப்புதான்”



Image result for kaviko abdul rahman
பாரதியின் ஆழ்ந்த கவியுளம் கண்டோருள் அப்துல் ரகுமானும் ஒருவர். அவரும்கூட சில போழ்து பாரதியின் தோள்மீது அமர்ந்து பிரபஞ்சத் திருவிழாவில் தெய்வீக லீலைகளை தரிசித்திருக்கிறார். ‘அப்பா நான் உன்னை விட உசரமாகிவிட்டேன்’ என்று தோளேறிய பிள்ளை செல்லச் சீண்டல் செய்வது போல் அவர் சொல்கிறார்:

“காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்

என்றான் பாரதி
அது தவறு

காதல் காதல் காதல்
காதல் வந்தால் காதல் வந்தால்
சாதல் சாதல் சாதல்

என்பதுதான் சரி.”