Wednesday, July 9, 2025

யா(தே) ஹுசைன் - 2

 


            கர்பலா களத்தில் இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் மரணத்தைப் புன்முறுவலுடன் வரவேற்றார்கள். இறைவனின் விதிப்புக்குத் தன்னை ஒப்படைத்துக் கொள்வதில் அத்தனை தெளிவும் உறுதியும் இன்பமும் இறைத் தூதர்களுக்கும் இறை நேசர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகும். அவர்களின் உடல் பகைவரின் அம்புகளால் துளைக்கப் பட்டிருக்கலாம். ஆன்மாவோ மிக ஆனந்தத்துடன் அல்லாஹ்வின் சந்நிதிக்குச் சென்றுவிட்டது.

            (மறுமை நாளில் நல்லடியார்களிடம் சொல்லப்படும்)

            நிம்மதியடைந்த ஆத்மாவே!

            நீ உன் இறைவனிடம் மீளுவாயாக,

            அவன் திருப்தியுற்ற நிலையிலும்

            அவன் உன் மீது திருப்தியுற்ற நிலையிலும்.

            நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக

            என் சொர்க்கத்திலும் நுழைந்துவிடுவாயாக!

            (யா அய்யுஹன் நஃப்சுல் முத்ம’இன்னா,

             இர்ஜி’ஈ இலா றப்பிக்கி ராளியத்தம் மர்ளிய்யா

             ஃபத்ஃகுலீ ஃபீ இபாதீ, வத்ஃகுலீ ஜன்னத்தீ – 89:27-30)

            இந்தத் திருவசனத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டாக இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் திகழ்கிறார்கள் என்று இறைநேசர்கள் உணர்ந்துள்ளனர். அந்த விளக்கத்தின் அடிப்படையில் முஹ்சின் நக்வி பாடுகிறார்:

            ’சாந்தியடைந்த ஆன்மாவே!’ என்று

            குர்’ஆன் எவரை அழைத்ததோ,

            இறைவனின் பார்வையில் அந்தப் படித்தரம்

            இமாம் ஹுசைனுக்கு உரியதாகும்!

            (குர்’ஆன் நே புகாரா ஜிசே நஃப்சே முத்ம’ஈன்

              ஃகாலிக் கீ நழர் மேன் ஹே யெ தரஜா ஹுசைன் கா)

            குர்’ஆன் என்னும் திருமறையை ஓதுவோர் பலர். ஆனால், குர்’ஆன் நபியை ஓதுகிறது, நபியின் குடும்பத்தாரை ஓதுகிறது. இந்த விளக்கங்கள் எத்தனை பேருக்கு எட்டுகிறது? முஹ்சின் நக்வி சொல்கிறார்:

            கடைவீதியின் கும்பலிடம் சொல்லுங்கள்

            வாய் மூடி மௌனமாய் இருப்பீராக;

            இதோ ஹுசைனை ஓதுகிறது குர்’ஆன்!

            (பஜார் கெ ஹுஜூம் செ கெஹ் தோ கெ ச்சுப் ரஹே

             குர்’ஆன் கர் ரஹா ஹே திலாவத் ஹுசைன் கீ)

            கர்பலா களத்தில் இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் தன் உயிரை நீத்து ஏகத்துவ உணர்வுக்கு உயிரூட்டினார்கள். கொடுங்கோல் ஆட்சி அதிகாரத்திற்கு அடிபணிவது என்பதும் ஒருவகையான சிலை வணக்கம்தான் என்று அவர்கள் கண்டார்கள். எனவே அதை எதிர்த்து நின்றார்கள். முஹ்சின் நக்வி சொல்கிறார்:

            வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை வராமல் போயிருக்கும்,

            சிலை வழிபாடு மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கும்,

            ஹுசைன் இப்னு அலீ தன் தலையைத் தந்திருக்காவிடில்

            இந்த உலகம் முழுவதும் யஜீதாக மாறியிருக்கும்.

            (ஜிந்தகீ ந உம்மீத் ஹோ ஜாத்தீ

             புத் பரஸ்த்தி ஜதீத் ஹோ ஜாத்தீ

              சர் ந தேத்தே ஹுசைன் இப்னே அலீ அகர்

              சாரி துன்யா யஜீத் ஹோ ஜாத்தீ)

            இன்றும் யஜீதுகள் இருக்கின்றனர். உலக ஆதாயத்துக்காக மார்க்கத்தை விற்கும் ஒவ்வொருவனும் ஒரு யஜீதுதான். அநீதம் புரியும் ஒவ்வொருவனும் ஒரு யஜீதுதான். அவர்களுக்கு எதிராக தலை நிமிர்ந்து நிற்கும் ஒவ்வொருவரும் ஒரு ஹுசைன்தான். முஹ்சின் நக்வி சொல்கிறார்:

            அசத்தியத்தின் முன் ஒருவர் சிரம் பணியவில்லை என்றால்,

            புரிந்துகொள், அவரது அறிவின் எஜமான் ஹுசைன் ஆவார்!

            (பாத்தில் கே சாம்னே ந ஜுகாயே ஜோ அப்னா சர்

             சம்ஜோ கே உஸ்கே ஸெஹன் கா மாலிக் ஹுசைன் ஹே)


            
கர்பலா மைதானத்தின் அருகில்தான் ஃபுராத் நதி ஓடிக் கொண்டிருந்தது. அந்தத் தண்ணீரில் ஒரு சொட்டுக் கூட ஹுசைன் (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்குக் கிடைக்காமல் யஜீதின் படையினர் தடுத்துவிட்டனர். சுவனத் தடாகத்தின் இன்சுவைத் தண்ணீரை சொர்க்கவாசிகளுக்கெல்லாம் புகட்டுகின்ற நபியின் குடும்பத்தார் கர்பலாவில் கடும் தாகத்துடனேயே மடிய நேர்ந்தது. அப்போது அந்தத் தண்ணீரும் துடிதுடித்திருக்கும் என்று கற்பனை செய்கிறார் முஹ்சின் நக்வி:

            ஹுசைனின் நியாபகம் வந்தால்

            கண்கள் கலங்கி விடுகின்றன;

            ஓ! இப்போதும் ஹுசைனின் மீது

            நீருக்கு எவ்வளவு நேசம்!

            (திக்ரே ஹுசைன் ஆயா தோ ஆன்ஃகேன் ச்சலக் படீ

             பானீ கோ கித்னா பியார் ஹே அப் பீ ஹுசைன் சே)


            
இன்னொரு நுட்பமான நயமான கவிதை ஒன்றை நினைவு கூர்கிறேன். அதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் வரலாற்றைப் பற்றி அல்லாமா அலீமி ஷாஹ் ஆமிரி (தாமத் பரக்காத்துஹு) அவர்கள் ஆற்றிய பேருரை ஒன்றில் அதனை மேற்கோள் காட்டினார்கள். அது என் சிந்தையில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவ்வப்போது நினைத்துப் பார்த்து நெகிழும் வரியாகிவிட்டது. கவிஞர் சொல்கிறார்:

            மருதாணி இலையைப் பார்த்தால்

            எனக்கு நிம்மதியே வருவதில்லை;

            அதன் வெளிரங்கம் ஹசனின் நியாபகம்

            அதன் அந்தரங்கம் ஹுசைனின் நியாபகம்.

             (பர்கே ஹினா கோ தேக் கர் ஆத்தா நஹீன் ஹே ச்சைன்

              ழாஹிர் யாதே ஹசன் தொ பாத்தின் யாதே ஹுசைன்)



            இந்தக் கவிதையை விளங்கிக் கொள்வதற்கான குறிப்புகளைத் தருகிறேன். நபிகள் நாயகத்தின் பேரப் பிள்ளைகளான இமாம் ஹசன் (ரலி) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) இருவரும் பகைவர்களால் கொலை செய்யப்பட்டார்கள். இமாம் ஹசன் (ரலி) அவர்கள் உணவில் நஞ்சு வைத்துக் கொல்லப்பட்டார். இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் கர்பலா களத்தில் அம்புகள், ஈட்டிகள், வாட்கள் ஆகிய கருவிகளால் தாக்கப்பட்டு ரத்தம் தோய்ந்த நிலையில் உயிர் நீத்தார். மருதாணி இலை பச்சை நிறமாக உள்ளது. அது நஞ்சின் நிறம். மருதாணியை அரைத்துப் பூசினால் சிவப்பு நிறம் தருகிறது. அது ரத்தத்தின் நிறம். இப்போது மீண்டும் கவிதையை வாசித்துப் பாருங்கள். கவிஞர் எத்தனை ஆழமான அவதானத்தோடு அதை எழுதியிருக்கிறார் என்பது புரியும்.

            இப்படி பல நூற்றாண்டுகளாக, பல்லாயிரம் கவிஞர்களின் பல்லாயிரம் சிந்தனைகளை இந்த தியாக வரலாறு மீட்டிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாமிற்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒவ்வொரு நபருக்கும் கர்பலா வரலாறு ஏகத்துவத்தின் ஒளியைப் பாய்ச்சும் ஒரு கலங்கரை விளக்காகத் திகழ்கிறது. இறைஞான ரகசியங்கள் பலவற்றைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் இந்த வரலாற்றின் முக்கியத்துவம் பற்றி முத்தாய்ப்பாகச் சொல்ல வேண்டும் எனில் மவ்லானா முஹம்மத் அலீ ஜவ்ஹர் (ரஹ்) அவர்களின் வரிகளைத்தான் மேற்கோள் காட்ட வேண்டும்:

            ஹுசைனின் படுகொலை

            எதார்த்தத்தில்

            யஜீதின் மரணமே ஆகும்;

            இஸ்லாம் புத்துயிர் பெறுகிறது

            ஒவ்வொரு கர்பலாவுக்குப் பிறகும்!

            (கத்லே ஹுசைன் அஸ்ல் மேன் மர்கே யஜீத் ஹே

             இஸ்லாம் ஜிந்தா ஹோத்தா ஹே ஹர் கர்பலா கே பஅத்)

Monday, July 7, 2025

யா(தே) ஹுசைன் - 1


இஸ்லாமிய வரலாற்றில் தியாகத்தின் ரத்தத்தால் எழுதப்பட்ட பக்கங்கள் எத்தனையோ இருக்கலாம். ஆனால், ரத்தத்தின் ஈரம் இன்னமும் காயாத ஒரு பக்கம் உண்டு என்றால் அது நபி (ஸல்) அவர்களின் திருப்பேரரான இமாம் ஹுசைன் (ரலி) அவர்களும் அன்னாரின் பரிசுத்தக் குடும்பத்தினரும் பகைவர்களால் – யஜீதின் படையினரால் – படுகொலை செய்யப்பட்ட “கர்பலா” நிகழ்வே ஆகும். இது முஹர்ரம் 10, ஹிஜ்ரி 61-ஆம் அண்டில் (10 அக்டோபர் 680 பொ.ஆ) நிகழ்ந்தது.

            ஆட்சியும் பதவியும் தனக்கே உரியன என்று யஜீது கோரியபோது அதை இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் மறுத்தார்கள். உலக இச்சை மிகைத்தவனான யஜீதின் கையில் உடன்படிக்கை செய்ய முடியாது என்று உறுதியாக நின்றார்கள். யஜீதின் படை அவர்களைக் கொலை செய்யத் தேடியபோது முஹர்ரம் 2-ஆம் நாள் ’கர்பலா’ என்னும் பொட்டல் வெளியில் கூடாரம் அடித்துத் தனது குடும்பத்தாருடன் தங்கினார்கள்.

யஜீதின் படையினர் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் கூடாரங்களைச் சுற்றி வளைத்தனர். அவ்விடத்தின் அருகில் ஃபுராத் (யூஃப்ரேட்ஸ்) நதி ஓடிக் கொண்டிருந்தது. அதன் தண்ணீர் இமாமுக்குக் கிடைக்காமல் தடுத்துவிட்டனர். இப்படியே நாட்கள் நகர்ந்தன. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தண்ணீர் இன்றித் தவித்தனர். பச்சிளம் குழவியைக் காட்டி நீர் கேட்டால் பாதகரின் மனம் இரக்கம் காட்டும் என்ற நம்பிக்கையும் பொய்த்தது.

இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் மீது பகைவர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஐயாயிரம் பேர் இருந்தனர். இமாம் அவர்களின் தரப்பில் போரிட்டு மடிந்தோரின் எண்ணிக்கை எழுபத்திரண்டு. பெண்களும் ஒரே ஒரு குழந்தையான இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரலி) அவர்களும் மட்டும் உயிருடன் விடப்பட்டனர்.

இது ஒரு நெடிய வரலாற்று நிகழ்வு. இக்கட்டுரைக்கான பின்னணியை நினைவில் நிறுத்த வேண்டி மிகச் சுருக்கமாகத் தந்திருக்கிறேன்.

இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் இறைவனுக்காக உள்ளத்தில் உறுதியுடன் மரணத்தை வரவேற்ற மகத்தான நிகழ்வு அது. அந்நிகழ்வுக்கு வித்திட்ட பல்வேறு தருணங்களில் சத்தியத்தின் சார்பில் நின்று, சற்றும் சறுகாமல் இமாம் அவர்கள் சாற்றிய சொற்கள் சரித்திரத்தில் சுடர் விட்டுப் பிறங்குகின்றன. அவற்றுள் சில:

            ”உண்மைக்காக மரணிப்பது என்பது எனக்கு இன்பமே அன்றி வேறில்லை; கொடுங்கோலரின் கீழ் அடங்கி வாழ்வது நரகமே அன்றி வேறில்லை”

            ”இறைவனின் மீது சத்தியமாக, நான் ஒருபோதும் இழிவடைந்த ஒருவனாக என் பகைவரிடம் சரணடைய மாட்டேன்; அடிமைகளைப் போல் ஒருபோதும் பகைவரிடம் உடன்படிக்கை செய்ய மாட்டேன்.”

            ”இழிவான வாழ்க்கையை விட கண்ணியமிக்க மரணம் மேலானது”

            ”மக்கள் இந்த உலகத்தின் அடிமைகளாக உள்ளனர். அவர்கள் சொல்வதெல்லாம் மார்க்கம் என்றாகிவிட்டது. அவர்களுக்கு வாழ்வாதாரம் தரும்வரை மட்டுமே மார்க்கத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் சோதிக்கப்படும்போது, உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் வெகு சிலரே எஞ்சுகின்றனர்.”

            இனி, இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் நினைவின் நிமித்தம் உள்ளத்தை உருக்கும் கவிதை வரிகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

            இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் உயிர்த் தியாகத்தை நினைவு கூர்ந்து பாடப்படும் இரங்கற் பாக்கள் உருது மொழியில் ஒரு தனி இலக்கிய வகைமையாகவே உருவாகி உள்ளன. அது ”மர்ஸியா” எனப்படுகிறது. மர்ஸியா என்பது பொதுவாக ஒருவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துப் பாடப்படும் கவிதையைக் குறிக்கிறது என்றாலும், குறிப்பாக அது இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் இறப்பிற்காகப் பாடப்படும் இலக்கியமாகவே அடையாளம் பெற்றுள்ளது. இந்தக் கவிதை கஜல் அல்லது கஸீதா வடிவத்தில்தான் பாடப்படுகிறது. அதன் உள்ளடக்கமே, பாடுபொருளே அதனை மர்ஸியா ஆக்குகிறது.

இதன் காரணத்தால், மர்ஸியா இரண்டு வகைப்படும் என்று பிரித்திருக்கிறார்கள்:

1) ரிவாயத்தி மர்ஸியா: இது கர்பலா களத்தில் இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் மற்றும் அன்னாரின் பரிசுத்தக் குடும்பத்தார் உற்ற உயிர் தியாகத்தை நினைவு கூர்ந்து எழுதப்படும் இரங்கற் பாக்களைக் குறிக்கும்.

2) ஷக்ஸி மர்ஸியா: உர்து மொழியில் ஷக்ஸ் என்றால் நபர் என்று பொருள். எனவே யாரேனும் ஒருவரின் இறப்பிற்காகப் பாடப்படும் இரங்கற் கவிதை ஷக்ஸி மர்சியா எனப்படுகிறது. இது பொதுவானது.

மர்ஸியாக்கள் பெரும்பாலும் ஷி’ஆ பிரிவினரால் இயற்றப்படுகின்றன. எனினும், ’அஹ்லுல் பைத்’ என்னும் நபிக்குடும்பத்தார் மீது நேசம் வைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்பதாலும், நபி (ஸல்) அவர்களை நேசிப்பதில் ’அஹ்லுல் பைத்’தின் நேசம் இன்றியமையாத ஒரு பகுதியாகும் என்பதாலும் சுன்னத் வல் ஜமாஅத் தரப்பின் கவிஞர்களும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் புகழையும், கர்பலா துயர் நிகழ்வின் இரங்கலையும் பாடியிருக்கிறார்கள்.


            
இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் ஆன்மிக ஆளுமையை ஃகாஜா முயீனுத்தீன் சிஷ்தி அஜ்மீரி (ரஹ்) அவர்கள் பாடிய நான்கு வரிகள் முத்தாய்ப்பாக வருணித்துக் காட்டுகின்றன:

            ஹுசைன் அரசராவார்; ஹுசைன் பேரசரர் ஆவார்;

            ஹுசைன் மார்க்கம் ஆவார்; ஹுசைன் மார்க்கத்தின் பாதுகாவல் ஆவார்;           

            தலையைக் கொடுத்தார்; யஜீதின் கையில் கையைக் கொடுக்கவில்லை;

            சத்தியமாக, [‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்னும் திருக்கலிமாவில்

            பொய்த் தெய்வங்களை நிராகரிக்கும் நஃபீ என்னும் முற்பகுதியான]

            ’லா இலாஹ’ என்பதன் அடித்தளமாக இருக்கிறார் ஹுசைன்!

          (ஷாஹஸ்த் ஹுசைன் பாத்ஷாஹஸ்த் ஹுசைன் 

           தீனஸ்த் ஹுசைன் தீன் பனாஹஸ்த் ஹுசைன் 

           சர் தாத் ந தாத் தஸ்த் தர் தஸ்த்தே யஜீத்

           ஹக்கா கெ பினாயே லா இலாஹஸ்த் ஹுசைன்.)

            இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் உயிர் தியாகம் குர்’ஆனில் சுட்டப்பட்டுள்ளது என்ற அவதானமும் உண்டு.  இதை அறிய இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் சரித்திரத்தைக் காண வேண்டும்.

            இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு வெகு காலமாகப் பிள்ளைப்பேறு இல்லை. அவர்களின் கனிந்த முதுமையில் அவர்களுக்கு இறைவன் அளித்த அருட்கொடையாக இறைத்தூதர் இஸ்மாயில் (அலை) அவர்கள் பிறந்தார்கள். அவர் அழகான ஒரு சிறுவனாக வளரந்து வந்தபோது இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு இறைவன் ஒரு சோதனை வைத்தான். இளம் சிறுவரான இஸ்மாயில் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிடச் சொன்னான். அதற்கு இஸ்மாயில் (அலை) அவர்களும் தன்னை உடனே ஒப்படைத்தார்கள். பையனின் கழுத்தில் கத்தியை ஓட்டியபோது அது இறை ஆணையால் அறுக்க மறுத்தது. அப்போது, இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் இறைபக்தியைத் தான் ஏற்றுக்கொண்டதாக இறைவனிடம் இருந்து செய்தி வந்தது. வானவர்கோன் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இறைவன் சொர்க்கத்தின் செம்மறியாடு ஒன்றை அனுப்பியிருந்தான். அதை அறுத்துப் பலியிடுமாறு இப்றாஹீம் (அலை) அவர்கள் பணிக்கப்பட்டார்கள்.

            இந்தச் சரித்திரத்தைச் சொல்லும் குர்’ஆன், இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு ஒரு மாபெரும் பலியினைப் பகரமாக்கியதாகச் சொல்கிறது: “வ ஃபதைனாஹு பி-திப்ஹின் அழீம்” – ”ஆகவே மகத்தானதொரு பலியை அவருக்குப் பகரமாக்கினோம்” (37:107)

            இந்த ”மகத்தான பலி” (திப்ஹின் அழீம்) என்பது இமாம் ஹுசைன் (ரலி) அவர்களையே குறிக்கும் என்று விளக்கம் சொல்லப்படுவதும் உண்டு. ஏனெனில், நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அப்போது இஸ்மாயில் (அலை) அவர்களில் ஒளியாக இருந்தார்கள். அன்னாரின் சந்ததியில்தான் அவர்கள் வந்துதிப்பார்கள் என்று நிர்ணயம் ஆகியிருந்தது. எனவே அவர்கள் சிறுவனாகக் கொல்லப்படக் கூடாது. அன்னாரின் வமிச வழி இவ்வுலகில் தொடர வேண்டியது அவசியமானது. எனவே, இஸ்மாயில் (அலை) அவர்களுக்குப் பகரமான ’மகத்தான பலி’ நபி (ஸல்) அவர்களின் சந்ததியில் இருந்து கொடுக்கப்பட்டது. அந்தப் பலியே இமாம் ஹுசைன் (ரலி) ஆவார்.


            இக்கருத்தினைக் கவிஞர்கள் பலரும் பன்முறை பாடியிருக்கிறார்கள். உலக மகாகவியாகத் திகழ்ந்த அல்லாமா இக்பால் (ரஹ்) அவர்கள் புதிய வீச்சுடன் இக்கருத்தினைப் பாடினார்கள். “பாலே ஜிப்ரீல்” (வானவர் கோனின் சிறகு) என்னும் நூலில் சொல்கிறார்கள்:

            அரிதானது, எளிமையானது, வண்ணமயமானது

            ஆதி இறையில்லத்தின் அற்புதக் கதை;

            அதன் அந்தி எல்லை ஹுசைன்,

            அதன் ஆரம்பப் புள்ளி இஸ்மாயில்!                    

                        (கரீப் ஒ ஸாதா ஒ ரங்கீன் ஹே தாஸ்த்தானே ஹரம்

                               நிஹாயத் இஸ்கீ ஹுசைன் இப்திதா ஹே இஸ்மாயீல்)

               இறை வேதமாம் குர்’ஆனின் அத்தியாயங்களுக்குத் திறப்பு வாசகமாக அமைந்திருப்பது ”பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்பதாகும். இதன் பொருள்: “அருளாளனும் அன்பாளனுமான அல்லாஹ்வின் திருநாமத்தால்.” இந்த வாசகம் “பா” என்னும் எழுத்தால் தொடங்குகிறது. அது ஒரு வளை கோட்டின் கீழ் ஒரு புள்ளி வைத்த வடிவமுடையது. அப்புள்ளி (நுக்தா) இறை வேதத்தின் ரகசியங்களை எல்லாம் தன்னுள் அடக்கியது என்று ஞானியர் கூறுவர். மேலும், அது இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைந்துவிட்ட நிலையைக் குறிக்கிறது என்பர். இமாம் அலீ (ரலி) அவர்கள் அத்தகைய உன்னத நிலையை எய்தி இருந்தார்கள். எனவே, தன்னை பிஸ்மில்லாஹ்வின் பா என்னும் எழுத்தாக அவர்கள் குறிப்பிட்டார்கள். இக்கருத்தையும் இணைத்து “அஸ்ராரே ஃகுதி” (சுயத்தின் ரகசியங்கள்) என்னும் நூலில் அல்லாமா இக்பால் (ரஹ்) சொல்கிறார்கள்:

            இறைவா! இறைவா! என்னே அதிசயம்!

            தந்தையோ பிஸ்மில்லாஹ்வின்

            ’பா’ என்னும் எழுத்தாக இருக்கிறார்;

            மகனோ, ’மகத்தான பலி’

            என்பதன் அர்த்தமாக வந்தார்!                                                                  

                        (அல்லாஹ் அல்லாஹ் பாயே பிஸ்மில்லாஹ் பிதர்

                               மஃ’னியே ழிப்ஹே அழீம் ஆமத் பிசர்)

            மேலும், “ருமூஸே பேஃகுதி” (தன்னை இழத்தலின் மர்மங்கள்) என்னும் நூலில் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களைப் பற்றி அல்லாமா இக்பால் (ரஹ்) சொல்கிறார்கள்:

            அவர் இப்றாஹீம் மற்றும் இஸ்மாயில் ஆகிய

            இறைத்தூதர்களின் ரகசியம் ஆனார்;

            அதவாது அவ்விருவரும் சாராம்சம்

            இவரோ அதற்கு விரிவுரை!

                        (சிர்ரே இப்றாஹீம் ஒ இஸ்மாயீல் பூத்

                               யஃ’னீ ஆன் இஜ்மால் ரா தஃப்ஸீல் பூத்)

            இந்த முஹம்மதிய சமுதாயத்தில் – ’உம்மத்தே முஹம்மதிய்யா’வில் எத்தனையோ உயிர்த் தியாகியர் வந்துள்ளனர். எத்தனையோ நல்லடியார்களும் இறைநேசர்களும் வந்துள்ளனர். ஆனால், இமாம் ஹுசைன் (ரலி) அவர்களைப் போன்ற இன்னொருவரைச் சுட்டிக்காட்ட முடியாது. அன்னாரின் உன்னத நிலையை உணர்த்த வந்த அல்லாமா இக்பால் (ரஹ்) மேற்சொன்ன நூலில் ஓரிடத்தில் இமாம் அவர்களை இப்படி வருணிக்கிறார்:

            இந்தச் சமுதாயத்தின் நடுவில்

            அந்தப் பிரபஞ்ச ஆளுமை

            இறைவேதத்தில் ’குல் ஹுவல்லாஹ்’

            இருப்பதைப் போன்றவர்!

                        (தர்மியானே உம்மத் ஆன் கைவான் ஜனாப்

                               ஹம்ச்சூ ஹர்ஃபே குல் ஹுவல்லாஹ் தர் கிதாப்)

            இதை இதயத்தால் முழுமையாக ஒப்புக் கொள்கிறோம். எம் நிலையோ – “ஸும்ம ரதத்னாஹு அஸ்ஃபல சாஃபிலீன்” – ‘இன்னும் அவனைக் கீழோரில் மிகக் கீழோன் ஆக்கினோம்’ (95:5) என்பதாக இருக்கிறது. இமாமுனா அல்-ஹுசைன் (ரலி) அவர்களோ ஏகத்துவ முழக்கமான “குல் ஹுவல்லாஹு அஹத்” (கூறுக: அல்லாஹ் அவன் ஏகன் – 112:1) ஆக இருக்கிறார்கள். அதைக் கர்பலாவில் நிரூபித்துவிட்டார்கள்.

            உருதுக் கவியுலகில், இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் மீது பாடப்படும் இரங்கற்பா வகையான மர்சியாவின் சிகரம் என்று போற்றப்படுபவர் மீப் பப்பர் அனீஸ். அவரின் கவிதைகளில் இருந்து சில வைர மணிகளை அள்ளித் தருகிறேன். அவர் சொல்கிறார்:

            ”கர்பலாவின் பாதையில் ஒரு புழுதி ஆகி விட்டேன்;

            என் மண்ணும் அப்போது ரசவாதம் ஆகிவிட்டது!”

                        (குபாரே ராஹே கர்பலா ஹோ கயீ

                               மேரீ ஃகாக் பீ கீமியா ஹோ கயீ)

            மர்சியா கவிதையுலகில் இக்காலத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கும் கவிஞர் முஹ்சின் நக்வி என்பவர் ஆவார். அவரின் கவிதைகளில் இமாம் ஹுசைன் (ரலி) மீதான காதலுடன் அன்னாரைப் படுகொலை செய்த யஜீதின் தரப்பினர் மீதான அறச் சீற்றமும் பொங்கி வருகிறது. உதாரணங்கள் சில பார்க்கலாம்.

            முஹ்சினே! ஹுசைனை நியாபகம் ஊட்டியதும்

            எவன் எரிந்து கொதிக்கிறானோ

            மனித மொழியில் அவனைத்தான்

            யஜீத் எ(ன்று சொல்கிறார்கள்!

                        (திக்ரே ஹுசைன் சே ஜோ ஜல்த்தா ஹே முஹ்சின்

                              இன்சானியத் கீ ஜுபான் மேன் உஸ்கோ யஜீத் கெஹ்தே ஹேன்)

            இந்த இடத்தில், யஜீத் விடயத்தில் ’அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்’தின் நிலைப்பாடு பற்றி அறிந்து கொள்வது அவசியம் கருதுகிறேன். இரு தினங்களுக்கு முன் ஊடகங்களில் இது குறித்து மவ்லானா மவ்லவி சதீதுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் மிகத் தெளிவான விளக்கம் தந்திருந்தார்கள். அவர்கள் சொன்ன கருத்து இது:


            ”நான் இங்கே சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை முடிவு ஒன்றைச் சொல்ல வேண்டும், கடைசியாய். ஹுசைன் (ரலி) அவர்களைக் கொன்ற அத்தனை பேரும் நாசமாக வேண்டும், (அவர்கள் மீது) அல்லாஹ்வுடைய சாபம் உண்டாக வேண்டும்: 1. கொலை செய்தவர்கள், 2. உடன் போனவர்கள், 3. உடந்தையாய் இருந்தவர்கள், 4. சைக்கினையால் சுட்டிக் காட்டியவர்கள், 5. கொல்லப்பட்டுவிட்டார் ஹுசைன் (ரலி) என்று தெரிந்தபோது மனதளவிலே பொருந்தியவர்கள், மகிழந்தவர்கள். இத்தனை கொடூரமானவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் எல்லாக் காலங்களிலும் உண்டாகட்டும் என்பதுதான் அஹ்லே சுன்னத் ஜமாஅத்தினுடைய தீர்க்கமான முடிவு.”

            மேலும், இமாம் ஹுசைன் (ரலி) அவர்களையும் யஜீதையும் வேறுபடுத்தித் தரம் பிரித்துக் காட்டும் உரை ஒன்றையும் நேற்று கேட்டேன். இமாம் அல்-ஹுசைன் (ரலி) அவர்களின் வமிச வழித்தோன்றலான இறைநேசர் சய்யிதுனா உமர் ஆமிர் கலீமிஷாஹ் நூரீ (ரஹ்) அவர்களின் திருமகனார் அல்லாமா பஸீரி ஷாஹ் ஆமிரி (தாமத் பரக்காத்துஹு) அவர்கள் பேசிய அந்த உரையின் ஒரு பகுதி:

            ”இன்று சில சபிக்கப்பட்ட யஜீதிகள் யஜீதை அமீருல் முஃமினீன் என்று சொல்கின்றனர். ஆம். அவன் அமீராக இருந்தான் என்பது உண்மைதான். அவன் அமீருல் ஃபாசிக்கீன் (பாவியரின் தலைவன்), அமீருல் காஃபிரீன் (நிராகரிப்பாளரின் தலைவன்), அமீருல் முஷ்ரிக்கீன் (இணைவைப்போரின் தலைவன்), அமீருல் முல்ஹிதீன் (இறை மறுப்பாளரின் தலைவன்), அமீருல் ஷயாத்தீன் (சாத்தான்களின் தலைவன்). என் ஹுசைன் (ரலி) அவர்களோ அமீருல் முஃமினீன் (இறை நம்பிக்கையாளரின் தலைவர்), அமீருல் முத்தகீன் (இறை பக்தர்களின் தலைவர்), அமீருல் முவஹ்ஹிதீன் (ஏகத்துவவாதிகளின் தலைவர்), அமீருஸ் ஸாலிஹீன் (நல்லடியார்களின் தலைவர்), அமீருல் அக்தாப் (குத்புமாரின் தலைவர்), அமீருல் அவ்லியா (இறை நேசர்களின் தலைவர்), அமீருல் அஃக்வாஸ் (சிறப்பானோரின் தலைவர்), அமீருல் மலாஇக்கா (வானவரின் தலைவர்). யஜீது யார்? பன்றி (ஃகின்ஸீர்). சொல்லுங்கள், அவன் ஒரு பன்றி (ஃகின்ஸீர்). யஜீது ஃபாசிக் (அசுத்தமானவன்), யஜீது ஃபாஜிர் (ஒழுக்கங்கெட்டவன்), யஜீது ஹராமி (தகாதவன்), யஜீது நாய்களின் போஷகன். ஒரு யஜீதைக் காட்டுங்கள் பார்க்கலாம். அவனின் வாரிசுகளில் ஒருவனை இன்று காட்டுங்கள் பார்க்கலாம். ‘இன்ன ஷஃ’னியக்க ஹுவல் அப்தர்’ – ’நபியே! நிச்சயமாக உம் பகைவன்தான் துண்டிக்கப்பட்டவன் (சந்ததியற்றவன்)’ (குர்’ஆன் 108:3). ‘ஹுசைனே! அவன் உங்களை வெட்ட நாடுகிறான். நான் அவனின் வமிசத்தை வெட்டிவிடுவேன்’. உம் பகைவர்கள் இல்லாமல் போனார்கள், இல்லாமல் போகிறார்கள், இல்லாமல் போவார்கள் (மிட் கயே மிட்தே ஹேன் மிட் ஜாயேங்கே அஃ’தா தேரே). யஜீது இல்லாமல் போனான. நஜ்திகள் இல்லாமல் போனார்கள், போகிறார்கள், போவார்கள். யஜீது என்னும் பெயர்கூட இன்றில்லை. யஜீது என்று பெயர் வைப்பது பாவம் என்று முஸ்லிம்கள் புரிந்து வைத்துள்ளனர்.  இந்தத் தெருவில் சென்று பாருங்கள். எத்தனையோ ஹுசைன்கள் கிடைப்பார்கள். தெருவுக்குத் தெரு ஹுசைன்கள் கிடைப்பார்கள். ஒரு யஜீதைக் காட்ட முடியுமா? ’இன்ன ஷஃ’னியக்க ஹுவல் அப்தர்’ ஆகிவிட்டது. ஆஹ்! ஹுசைனின் ஒரே ஒரு மகன் – ஒரே ஒரு நோய்ப்பட்ட மகன் – ‘ஆபிதே பீமார் சாஜிதே சஜ்ஜாத்’ இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரலி) – மட்டுமே பிழைத்தார்கள். அந்த ஒரு நோய்ப்பட்ட மகனின் நஸ்லு (ரத்த உறவு) உலகம் முழுவதும் பரவியுள்ளது. சாதாத்தே கிராம் (கண்ணியமிக்க நபி வமிசத்தார்) உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ஆனால், யஜீத் அரசனாக இருந்தான். அவனுக்குப் பதினான்கு மகன்கள். அந்தப் பன்றியின் ஒரு வாரிசு கூட இன்று உலகில் இல்லை. ஆனால், ஹுசைனின் நஸ்லு? இங்கே கிருஷ்ணாம்பேட்டையிலும் சாதாத்மார் இருக்கின்றனர். இந்த ஃபக்கீரின் உருவத்திலும் ஹுசைனின் குலாம் (அடியான்) அமர்ந்திருக்கிறேன். இதுதான், ‘இன்ன ஷஃனியக்க ஹுவல் அப்தர்’. பகைவர்கள் ஹுசைனை முடித்துவிட நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அவர்கள்தாம் முடிந்து போவார்கள்.”

            இது உணர்ச்சி மிகுந்த பேச்சு என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? இந்த ரோஷ உணர்ச்சி ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டாகும். எனில், நபியின் வமிசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எப்படி உண்டாகாமல் போகும்? இதுவும் குர்’ஆன் வசனத்தின் தஃப்ஸீர் (விளக்கவுரை)தான். வெறும் விளக்கம் அல்ல. உலக வரலாற்றில் உண்மையாக நடந்திருக்கும் விளக்கம். இது இறை ஞான ஒளியின் வெளிப்பாடு. இது நபியொளியின் – நூரே முஹம்மதிய்யாவின் – சுடர் வீச்சு.

            நபி (ஸல்) அவர்களை நோக்கி ’அஃலா ஹஜ்ரத்’ அஹ்மத் ரஜா ஃகான் பரேல்வி (ரஹ்) அவர்கள் பாடுகின்ற பசுமையான புகழ்ச்சி:

            நபியே! உங்கள் பரிசுத்தமான ரத்த உறவால்

            ஒவ்வொரு குழந்தையும் ஒளிமயம்!

            நீங்கள் ஒளியின் ஊற்றாக இருக்கின்றீர்,

            உம் குடும்பம் முழுவதும் ஒளிமயம்!

                        (தேரீ நஸ்லே பாக் மேன் ஹே பச்சா பச்சா நூர் கா

                         தூ ஹே ஐனே நூர் தேரா சப் கரானா நூர் கா)

            இந்தப் பேரொளியை ஒருவன் ஊதி அணைக்க நினைத்தால் அவனை விட வழிகேடன் யார்? அவனை விட மடையன் யார்? யஜீதின் கதி இதற்கொரு சான்று.

            அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களால்

            ஊதி அணைத்துவிட நாடுகின்றனர்;

            ஆனால், நிராகரிப்பாளர் வெறுத்தபோதிலும்

            அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.

                        (யுரீதூன லி’யுத்ஃபிஊ நூரல்லாஹி பி-அஃப்வாஹிஹிம்

                               வல்லாஹு முதிம்மு நூரிஹி வ லவ் கரிஹல் காஃபிரூன் – 61:8)

என்னும் திருவசனத்தின் நிதர்சனமான விளக்கத்தை வரலாற்றில் பாருங்கள். ஹுசைனை அழிக்க நினைத்த பகைவர்கள் அழிந்து போனார்கள். அல்லாஹ் தன் நபியின் வாரிசுகளை உலகமெங்கும் பரவச் செய்து பிரகாசிக்க வைத்திருக்கிறான். அஹ்லுல் பைத் என்னும் நபிக் குடும்பத்தாரில் பல்லாயிரம் பல்லாயிரம் இறைநேசர்கள் உருவாகி ஜொலிக்கிறார்கள்! உலக முடிவு நாள் வரை இந்த மகத்துவம் தொடரும். 

(தொடரும்...)

Sunday, July 6, 2025

ஹிந்துக்கள் பாடிய ஹுசைன் புகழ்

 

                         உருது, இந்தியத் திருநாட்டில் பிறந்த உன்னத மொழி.

            ’இரண்டு வாட்கள் மோதும்போது இரண்டு பண்பாடுகள் சந்திக்கின்றன” என்று உருதுவில் ஒரு பழமொழி உண்டு. அதற்கு உருது மொழியே சான்றாகவும் உள்ளது.

            பாரசீக வழியிலான இஸ்லாமியப் பண்பாடும் இந்துப் பண்பாடும் உரையாடியபோது உருது மொழி உருவானது. எனவே, அதற்கு ‘ஹிந்துஸ்தானி’ என்றும் இன்னொரு பெயர் உண்டு.

            உருது மொழியை வளப்படுத்தியதில் ஹிந்துக் கவிஞர்களின் பங்கும் பெரிது. அவர்கள் இஸ்லாமின் மீது ஈர்ப்பும், நபியின் மீது நேசமும், நபிக் குடும்பத்தாரின் மீது கண்ணியமும் கொண்டவர்கள். 


            
இஸ்லாமிய வரலாற்றில் ரத்தம் காயாத ஏடாக இருப்பது கர்பலா நிகழ்வு. அதில் கொடுங்கோலன் யஜீத் என்பவனின் படையினரால் நபி (ஸல்) அவர்களின் திருப்பேரர் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களும் அன்னாரின் தூய குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டனர். இது ஹிஜ்ரி 61-ஆம் ஆண்டில் முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் கர்பலா என்னும் ஊர்ப்புறத்தில் நிகழ்ந்ததாகும்.

            இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் கொடுங்கோன்மைக்கு எதிராக நின்று வீர மரணம் அடைந்த நிகழ்வின் வேதனை இன்றும் பல கோடி முஸ்லிம்களின் இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. அந்தத் துயரத்தில் பங்குகொள்ளும் ஹிந்துக் கவிஞர்கள் பலர் இம்மண்ணில் இருந்தனர், இருக்கின்றனர், இருப்பர் இன் ஷா அல்லாஹ்.

            ஹுசைன் (ரலி) அவர்களின் இறப்பை நினைவு கூர்ந்து பாடப்படும் கவிதைக்கு உருதுவில் மர்ஸியா என்று பெயர். அதனைப் பாடிய ஹிந்துக் கவிஞர்களும் பலர் உள்ளனர். அவர்களின் பட்டியலை காளிதாஸ் குப்தா ’ரஜா’ தொகுத்துத் தந்துள்ளார் [ரஜா என்பது இவரின் புனைபெயர். இமாம் ரஜா ஃகான் பரேலவி அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக இப்புனைபெயர் வைத்துக்கொண்டார்.] அவர்களில் சிலர்:

1.      ராம் ராவ் ‘சைவா’ [இவர்தான் மர்ஸியா எழுதிய முதல் ஹிந்துக் கவிஞர். சைவா என்பது அவரின் புனைபெயர்.]

2.      முன்ஷி சன்னு லால் லக்னவி [’தரப்’ என்னும் புனைபெயரில் கஜல்களும் ‘தில்கீர்’ என்னும் புனைபெயரில் மர்ஸியாக்களும் எழுதியவர்.]

3.     ரூப் கன்வர் குமாரி [கஷ்மீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த பிராமணப் பெண். ஆக்ராவில் வாழ்ந்தவர். ரூப் கன்வர் குமாரி எழுதிய மர்ஸியாக்களில் பக்திக்குரிய சொல்லாடல்களும் பாரசீக வெளிப்பாடும் கலந்து அற்புதமாக வெளிப்பட்டுள்ளன. இது அவரின் தனித்தன்மை என்று கருதப்படுகிறது. இவரை ‘மர்ஸியாவின் மீரா’ என்று சொல்லலாம்.]

4.     ராஜா பல்வான் சிங் [பனாரஸ் அரசர் மஹாராஜா சைத் சிங்கின் மகன். ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் இவர் பனாரஸை விட்டு வெளியேறினார். ஆக்ராவில் வசித்த இவரின் மகன் நஜீர் அக்பராபாதியின் சீடர் ஆனார். அவரும் பல மர்ஸியா கவிதைகள் எழுதியுள்ளார்]

5.     லாலா ராம் பிரசாத் ‘பஷர்’ [அஹ்லுல் பைத் என்னும் நபிக் குடும்பத்தார் மீது கொண்ட பற்றினாலும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் மீது கொண்ட நேசத்தாலும் இவர் தன் வாழ்வின் இறுதியில் கர்பலாவுக்குச் சென்று தங்கி அங்கேயே மரணித்தார்.

6.     மேலும் சிலர்: ஸ்ரீ மக்கன் தாஸ், பாலாஜி தஸம்பக் ‘தாரா’, ஸ்வாமி பிரசாத் ‘அஸ்கர்’, ராஜேந்திர குமார், ராம் பிஹாரி லால் ‘சபா’, சந்திரசேகர் சக்சேனா, கவ்ஹர் பிரசாத் நிகம் ‘விலாயத்’ கோரக்பூரி, முன்ஷி லக்ஷ்மன் நாராயண் ‘சஃகா’, மஹேந்திர குமார் ‘அஷ்க்’, குன்வர் மொஹிந்தர் சிங் பேடி, பஸ்வா ரெட்டி, ஜெய்சிங், கிஷன் லால், கோபி நாத், ஜகன்னாத் ஆஜாத், மற்றும் சந்திர ஷர்மா ‘புவன்’ அம்ரோஹி.



இனி, இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் பற்றி ஹிந்துக் கவிஞர்களின் சிந்தையில் விளைந்த புகழ்ச்சிகளை ருசிப்போம்:

புவன் அம்ரோஹி பாடுகிறார்:

ஹுசைன் இப்னு அலீ (ரலி) ஒருவேளை இந்தியா வந்தால்

ஹிந்துக்கள் அவரை வரவேற்போம்

இமைகள் வருட அவரின் பாதத்தில் முத்தமிட்டபடி!

(ஹிந்த் மேன் காஷ் ஹுசைன் இப்னு அலீ ஆ ஜாத்தே

ஹிந்து ச்சூம்த்தே உன் கெ கதம் பல்கே பிச்சாத்தே)

            இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் வரலாற்றைக் கேட்கும் எந்த ஒரு மனிதனும் அறவுணர்வால் அகம் நெகிழ்ந்து கண் கலங்கவே செய்வான். ராஜேந்திர குமார் தன் நேசத்தை இப்படி வெளிப்படுத்துகிறார்:

            கர்பலாவின் சரித்திரம் கேட்டு நான் இப்படி அழுதேன்

            நான் ஹிந்துவாகத்தான் இருந்தேன்

            என் கண்கள் ஹுசைனி ஆகிவிட்டன!

                        (இஸ் கதர் ரோயா மேன் சுன் கெ தாஸ்தானே கர்பலா

                               மேன் தொ ஹிந்து ஹி ரஹா ஆன்ஃகேன் ஹுசைனி ஹோ கயீ)

            ”ஹுசைன் என்னில் இருந்து உள்ளவர், நான் ஹுசைனில் இருந்து உள்ளவன்” (அல்-ஹுசைனு மின்னீ வ அன மினல் ஹுசைன்) என்று நபி (ஸல்) சொன்னார்கள். எதார்த்தத்தில் இமாம் ஹுசைனின் வரலாறு நபி (ஸல்) அவர்களின் வரலாற்று நீட்சியே ஆகும். ஹுசைனில் இருந்ததெல்லாம் நபி (ஸல்) அவர்கள்தானே! இந்தப் புரிதலோடு ராம் பிஹாரி லால் ‘சபா’ எழுதுகிறார்:

            கர்பலாவில் ஒரு கருவியாகத்தான் இருந்தார்

            ஹுசைன் இப்னு அலீ;

            அடைந்தவர் அங்கே அடைந்துகொண்டார்

நபி முஸ்தஃபாவின் சோதனையை.

                        (கர்பலா மேன் இக் பஹானா தா ஹுசைன் இப்னு அலீ

                              லேனே வாலே நே லியா தா இம்திஹானே முஸ்தஃபா)

            ’இறைநேசம்’ (விலாயத்) என்பது வெறுமனே இறை ஞானம் (மஃரிஃபா) இருப்பது மட்டுமன்று. இப்லீஸ் (ஷைத்தான்) ஆரம்பத்தில் இறைவனைப் பற்றிய அறிவு உள்ளவனாகத்தான் இருந்தான். வானவர்களுக்கே ஆசானாக (முஅல்லிமே மலாஇகா) இருந்தான். ஆனால், அவன் இறை நிராகரிப்பாளன் ஆகி வழிகெட்டுப் போனான். எனவே, இறை நேசம் (விலாயத்) என்பது எப்போதும் நபிக் குடும்பத்தார் மீதான நேசத்துடன் இணைந்து இருக்க வேண்டும். இக்கருத்தை, கவ்ஹர் பிரசாத் நிகம் ‘விலாயத்’ கோரக்பூரி தன் பாடல் வரிகளில் இப்படிச் சொல்கிறார்:

            முடிவற்ற மறுமையும் சொர்க்கமும்

            சுவன நன்னீர்த் தடாகமும் அவருக்காகும்

            நபிக்குடும்பத்தாரின் நேசத்துடன்

            இறைநேசம் இணைந்த ஒருவருக்கே!

                        (ஃகுல்த் உஸ்கீ ஹே ஃகைபான் உஸ் கா, கவ்ஸர் உஸ் கா ஹே

                              ஜிஸ் கோ உல்ஃபத் ஹே விலாயத் ஆலே பயம்பர் கே சாத்)

            அழுகை என்பது இதயத்தின் அங்கசுத்தி (ஒளூ) என்பர் ஞானியர். இறைவனுக்காக அழும் கண்களில் ஞானத்தின் ஒளி பிரகாசிக்கும். இறைத் தூதர்கள் மற்றும் இறை நேசர்கள் மீதான நேசம் என்பது இறை நேசத்தில் அடங்கியதாகும் என்பதால் இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் உயிர் நீத்த நிகழ்வை எண்ணிக் கண்ணீர் வடிக்கும் கண்களுக்கு இறைக் கருணையின் கதவுகள் திறக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, முன்ஷி லக்ஷ்மன் நாராயண் ‘சஃகா’ சொல்கிறார்:

            பூர்விகத்தின் உலகில் இருந்து காட்சியாகிறது

            சொர்க்கத்தின் பாதை,

            கர்பலாவில் உயிர் நீத்த தியாகியை

            நினைத்து நான் வேதனையில் அழும்போதெல்லாம்.

                        (நழர் ஆ ஜாத்தீ ஹே பழ்மே அஜல் சே ராஹ் ஜன்னத் கீ

                              ஷஹீதே கர்பலா கே கம் மேன் ஜப் ரோ கர் நிகல்த்தே ஹே)

            இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் கர்பலா களத்தில் நிகழ்த்திய வீரமும் உயிர்த் தியாகமுமே இஸ்லாமிய மூல மந்திரமான திருக்கலிமாவின் அகமிய ஞானத்தையும் அதன் தாத்பரியத்தின் வெளிப்பாடாக இருக்கும் தொழுகையின் உயிர்ப்பையும் மீட்டுத் தந்தன என்று ஞானியர் விளக்குகின்றனர். ’சத்திய இறைவனுக்கு மட்டுமே சிரம் பணிவேன்; அசத்தியத்திடம் தலை சாய்க்க மாட்டேன்’ என்னும் வீறுணர்வை இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் அங்கே உறுதிப்படுத்தினார்கள். தன் மூத்த சகோதரி சய்யிதா ஜைனப் (ரலி) அவர்களிடம் தம் குடும்பத்தாரை ஒப்படைத்து விட்டுக் கூடாரத்தை விட்டு வெளியேறி சிங்கம் போல் களத்துக்குச் சென்றார்கள். இந்த வரலாற்றுப் பின்னணியில் கிஷன் லால் இப்படிப் பாடுகிறார்:

            கோவிலில் இருந்து பார் நீ எமது மஸ்ஜிதை

            கூட்டம் முழுவதும் கைக்கட்டி நிற்கிறது;

            ஜைனபின் கைகளை எவர் கட்டிவிட்டாரோ

            அவரின் விதி அங்கே கைக்கட்டி நிற்கிறது!

                        (தேக் மந்திர் சே அப்னீ மஸ்ஜித் கோ

சப் ஜமாத் நே ஹாத் பாந்தே ஹே

                               ஜிஸ்னே ஜைனப் கே ஹாத் பாந்தே தே

உஸ்கே குத்ரத் நே ஹாத் பாந்தே ஹே)

            இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் சிறுவராக இருந்தபோது ஒருநாள் நிகழ்ந்த இன்ப நிகழ்வு ஒன்றை நினைவு கூர்வோம். நபி (ஸல்) தொழுகையில் சிரம் பணிந்த நிலையில் (சஜ்தாவில்) இருக்கும்போது இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் நபியின் தோள் மீது ஏறி அமர்ந்து கொண்டு ’குதிரையே! செல்’ என்று ஓட்டினார்கள். நபி (ஸல்) தன் பிரியமுள்ள பேரருக்காக குதிரையாக பாவித்து விளையாட்டுக் காட்டினார்கள். அத்தகைய இமாம் ஹுசைன் (ரலி) அவர்கள் பின்னாளில் கர்பலா களத்தினுள் ஒரு புரவியின் மீது அமர்ந்தபடி நுழைந்தபோது பகைவர்கள் அச்சத்தால் திடுக்கிட்டு அரற்றும்படி ‘செம்மறி மந்தைக்குள் புகுந்த சிம்மம் போல்’ நுழைந்தார்கள் என்கிறது வரலாறு. ஷஹ்சவார் என்றால் புரவியின் மீது ஆரோகணித்து வரும் இளவரசர் என்று பொருள். இந்தச் சொல்லினை, ‘மதீனத்து மன்னரான நபியின் மீது அமர்ந்து சவாரி செய்தவர்’ என்னும் அர்த்தமும் தொனிக்கும்படி பேராசிரியர் ஜகன்னாத் ஆஜாத் மிக அழகாகப் பாடியுள்ளார். அவரின் கவிதை இது:

            கொந்தளித்துள்ளது இதோ போர்க்களம்

            ஆயுதங்களின் ஆர்ப்பரிப்பு, ஆரவாரம்;

            கொலை பாதகரின் நடுவில் வந்துள்ளார்

            அவர்கள் அஞ்சி அரற்றும்படி முழக்கமிட்டு,

            இதோ புரவியில் ஆரோகணித்து ஓர் இளவரசர்!

            இப்பக்கம் இப்லீசின் வாரிசுகள் இருக்கின்றனர்;

            அப்பக்கம் மனிதனின் மகத்துவம், கம்பீரம்!

            ஹுசைன் தனியாக வந்துள்ளார் பார்;

            அங்கே, யஜீதின் ஆட்களோ ஆயிரம் பேர்.

            காலச் சக்கரமே! சற்றே நில் இங்கே

            இது போன்ற உதாரணம்

உனக்குக் கிடைக்காது வேறு எங்கும்!    

                        (தூஃபான் பர்ப்பா ஹே கர்ம் ஹே மைதானே கார்ஸார்

                              ஹே காத்திலோன் மேன் மஹ்வே ஃபுகான் இக் ஷஹ்சவார்

                              இப்லீஸியத் இதர் ஹே உதர் இன்சான் கா வகார்

                              தன்ஹா ஹுசைன் அவ்ர் யஜீதி ஹே ஹஜார்

                              ஏ கர்திஷே ஜமானா டெஹர் ஜரா யஹீன்

                              எய்சி மிஸ்லு ஃபிர் ந மிலேகி துஜே கஹீன்.)

            இமாம் ஹுசைன் (ரலி) போன்ற தன்னலமற்ற தியாகி ஒருவர் இன்று இஸ்லாமில் இருந்தால் தானும் அந்த நெறியில் சேர்ந்துவிடுவதாக கோபிநாத் என்பார் சொல்கிறார். அதாவது, இப்போது முஸ்லிம் பெயர்தாங்கிகள்தாம் அவரின் கண்ணுக்குப் படுகிறார்கள். சுயநலமற்ற ஒரு முஸ்லிமைக் கூட அவரால் பார்க்க முடியவில்லை என்பது கருத்து. அவர் இப்படிப் பாடுகிறார்:

            முஸ்லிம் ஆகிவிடுவேன், ஆனால் ஒரு கவலை உள்ளது;

            நேர்வழியை மறந்துவிட்ட ஒருவனாக ஆகிவிடக் கூடாதே!

            கேள்விப்பட்டுள்ளேன், புத்தகங்களில் படித்தும் இருக்கிறேன்

            முன்பொரு முஸ்லிம் இருந்தார், விண்மீனையே அழ வைப்பவர்!

                                    (ஹோ தோ ஜாவூன் மெய்ன் முஸல்மான் மகர் இக் கம் ஹே

                                              ஹோ ந ஜாவூன் கஹீன் ரஸ்த்தே கோ புலானே வாலா

                                              சுன் பீ ரக்கா ஹே, கிதாபோன் மேன் படா ஹே மெய்னே

                                              இக் முஸல்மான் தா ஜஹ்ரா கோ ருலானே வாலா.)

            இந்தப் பாடலின் கடைசி வரியில் உள்ள “ஜஹ்ரா கோ ருலானே வாலா” என்பது மிக அழகாக இருபொருள் கொண்டுள்ளது. ஜஹ்ரா என்பது அருந்ததி விண்மீனை (star of venus) குறிக்கும். இந்த வெளிரங்கமான அர்த்தப்படி, இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் மரணத்தில் பிரபஞ்சமே அழுதது என்னும் பொருளை இவ்வரி தருகிறது. நபி (ஸல்) அவர்களின் மகளாரும் ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களின் மனைவியும், சய்யிதுனா இமாம் ஹசன் (ரலி) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் அன்னையுமான ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு ஜஹ்ரா என்று சிறப்புப்பெயர் உண்டு. எனவே, ‘இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் உயிர்த் தியாகம் பற்றி நபி (ஸல்) செய்த முன்னறிவிப்பு அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களை அழ வைத்தது’ என்றும் இவ்வரி அர்த்தப்படுகிறது.

            ஹிந்துவாக இருந்தாலும் தான் “ஷப்பீர்” என்று அழைக்கப்படும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் பகைவனாக இல்லை என்று கோபிநாத் சுட்டுகிறார். யஜீதும் அவனின் படையினரும் இறை நிராகரிப்பாளரை விட மோசமானவர்கள் என்னும் கருத்தினையே அவர் இப்படி உணர்த்த விரும்புகிறார்:

            நான் ஒன்றும் அல்லன்; மரியாதைக்கு உரியவன் அல்லன்;

            என் பேச்சு பதிவு செய்யத் தகுதியானதும் அல்ல;

            இறை நிராகரிப்பாளன் என்க, இணை வைப்போன் என்க,

            என்னை என்ன வேண்டினும் சொல்வோர் சொல்லுக;

            நான் ஹிந்துதான் ஆனால், ஷப்பீரின் பகைவன் அல்லன்.

                                    (நா ச்சீஸ் ஹூன் மெய்ன் காபிலே தவ்க்கீர் நஹீன்

                                              தக்ரீர் மேரீ லாஇக்கே தஹ்ரீர் நஹீன்

                                              காஃபிர் கஹோ முஷ்ரிக் கஹோ ஜோ கெஹ்னா ஹே கெஹ் தோ

                                             ஹிந்து ஹூன் மகர் துஷ்மனே ஷப்பீர் நஹீன்)

            இதே கருத்தை இன்னோர் இடத்தில் இப்படிப் பாடுகிறார்:

            மார்க்கமற்றவன் நான்,

            வழிகாட்டி அற்றவன் அல்லன்!

            ஹிந்து நான், ஆனால்

            ஷப்பீரின் கொலைகாரன் அல்லன்!

                                    (பே-தீன் ஹூன் பே-பீர் நஹீன்

                                              ஹிந்து ஹூன் மகர் காத்திலே ஷப்பீர் நஹீன்)

            இதே நிலையில் தானும் இருப்பதாக கிஷன் லால் என்னும் கவிஞர் சொல்கிறார், கேளுங்கள்:

            நான் ஹிந்துவாக இருப்பினும் பகைவனாக இல்லை

            நபியின் வாரிசு மீது குறை சொல்பவனாக இல்லை

            என் நெற்றியில் உள்ள சிவப்பை வெறுப்புடன் நோக்காதே

            அது திலகம்தான், ரத்தக்கறை அல்ல!”

                                    (மெய்ன் ஹிந்து ஹோக்கே பீ துஷ்மன் நஹீன் ஹூன்

                                             நபி கீ ஆல் கோ ஷிக்வா நஹீன் ஹே

                                             மேரே மாத்தே கி சுர்ஃகீ பர் ந ஜாவோ

                                             திலக் ஹே ஃகூன் கா தப்பா நஹீன் ஹே.)

            கிஷன் லால் தன் நேசத்தின் உச்சத்தில் இந்த இந்தியத் திருநாட்டையே இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாகத் தந்துவிடுகிறார்:

            கண்ணில் அவரின் வசிப்பிடம்

இதயத்தில் ஷப்பீரின் இருப்பிடம்

இந்த பூமி ஷப்பீருடையது

இந்த வானம் ஷப்பீருடையது

கர்பலாவில் இருந்து இந்தியாவுக்கு

வருவோரிடம் நான் சொன்னேன்

அந்த கர்பலா நாளில் இருந்தே

இந்தியா ஷப்பீருடையது!

            (ஆன்ஃக் மேன் உன்கீ ஜகா தில் மேன் மகான் ஷப்பீர் கா

               யெ ஜமீன் ஷப்பீர் கீ யெ ஆஸ்மான் ஷப்பீர் கா

               ஜப் சே ஆனே கோ கஹா தா, கர்பலா சே ஹிந்த் மேன்

               ஹோ கயா உஸ் ரோஸ் சே ஹிந்துஸ்தான் ஷப்பீர் கா)

மஹிந்தர் சிங் என்னும் கவிஞர் “அஷ்க்” (கண்ணீர்) என்றே புனைபெயர் வைத்துக் கொண்டார். ஆனால் அவரின் கண்ணீர்த் துளிகள் இமாம் ஹுசைன் (ரலி) மீதான நேசத்தில் வைரத் துளிகளாய் மின்னுகின்றன. அவற்றைக் காய்ந்து போகாமல் காக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே கவலையாம். ஏன்? இதோ அவரே சொல்லக் கேட்போம்:

என் இந்த விழிகளின் கண்ணீர்

காய்ந்து போகாதிருக்கட்டும் எப்போதும்;

            அன்னை ஃபாத்திமா ஜஹ்ராவிடம்

            முகம் காட்ட வேண்டும் நான்.

            நான் ஹிந்துக்களை எல்லாம்

            ஹுசைனிகள் ஆக்கப் புறப்பட்டுள்ளேன்!

            ஏற்கனவே எரிந்து கொண்டிருப்போரை

            எரிக்க வேண்டியுள்ளது மேலும்!

                        (யெ மேரீ ஆன்ஃகோன் கே ஆன்சூ ந சூஃக் ஜாயி கஹீன்

                               ஜனாபே ஃபாத்திமா ஜஹ்ரா கோ முன்ஹ் திகானா ஹே

                               மேன் ஹிந்துவோன் கோ ஹுசைனி பனானே நிக்லா ஹூன்

                               ஜோ ஜல் ரஹே ஹேன் உன்ஹே அவ்ர் பீ ஜலானா ஹே)

            ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் நதிகளும் தலையானது கங்கை. இஸ்லாமில் சொர்க்கத்தின் தடாகம் குறிப்பிடப்படுகிறது. அதன் பெயர் ஹவ்ளுள் கவ்ஸர் என்பதாகும். மறுமையில் சொர்க்கவாசிகளுக்கு நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக் கிண்ணத்தில் அந்தத் தடாகத்து நீரை மொண்டு புகட்டுவார்கள் என்பது நபிமொழிகள் தரும் செய்தி. இதனால் நபி (ஸல்) அவர்கள் “சாக்கீயே கவ்ஸர்” என்று அழைக்கப் படுகிறார்கள். இனி, பஸ்வா ரெட்டி என்னும் கவிஞர் மிக நுட்பமாக ஒரு கற்பனை செய்கிறார், அதைக் காண்போம்:

            கங்கையிலிருந்து நான் கவ்ஸரிடம் சென்றபோது

            என்னை பார்த்து ஹுசைன் புன்முறுவல் செய்தார்!

            இறைவனற்ற இதயத்திலும் நான் ஹுசைனுக்கு அர்ப்பணம்

            ஹுசைனை அன்றி எனக்கு வேறெவரும் இல்லையே!

                        (கங்கா சே ஜப் பொஹுன்ச்சா மெய்ன் கவ்ஸர் பர்

                               தேக் கர் முஜ் கோ முஸ்குராயே ஹுசைன்

                              பே ஃகுதா தில் சே பீ ஹூன் ஃபிதாயே ஹுசைன்

                              மேரா கோயீ நஹீன் சிவாயே ஹுசைன்)

            பஸ்வா ரெட்டியின் இந்தக் கற்பனையைப் போன்றே குன்வர் மொஹிந்தர் சிங் பேடீ சீஃக் என்பாரும் கற்பனை புரிகிறார். முன்னவரின் கற்பனையில் இமாம் ஹுசைன் வந்தார்கள் என்றால் பின்னவரின் கற்பனையில் நபியே வருகிறார்கள்:

            உயிர்த் தியாகியரின் தலைவரே! நும் பெயர்

என் உதட்டில் எழுகின்ற போதெல்லாம்

கிண்ணத்தை ஏந்தியபடி சாக்கீயே கவ்ஸர்

என் முன்னே தோன்றுகிறார்.

                        (லப் பெ ஜப் ஷாஹே ஷஹீதான் தேரா நாம் ஆத்தா ஹே

                               சாம்னே சாக்கீயே கவ்ஸர் லியே ஜாம் ஆத்தா ஹே)

            இக்கவிஞர் மேலும் சொல்கிறார்:

            இஸ்லாமுக்கு நீங்கள் உயிரூட்டிவிட்டீர்

            உண்மை எது? பொய் எது? காட்டிவிட்டீர்

            வாழ்ந்தபடி சாவதுதான் அனைவருக்கும் இயல்கிறது

            மரணித்தும் வாழ்வது எப்படி? உம்மிடம் பயில்கிறது!”

                        (ஜிந்தா இஸ்லாம் கோ கியா தூ நே

                               ஹக் ஒ பாத்தில் திக்கா தியா தூ நே

                               ஜீ கெ மர்னா தோ சப்கோ ஆத்தா தா

                               மர் கெ ஜீனா சிஃகா தியா தூ நே)

             ஹிந்துக் கவிஞர்கள் பாடிய மர்ஸியாக்களை எல்லாம் தனியாகத் தொகுத்து ஒரு நூல் கொண்டு வர வேண்டும் என்று காளிதாஸ் குப்தா ‘ரஜா’ ஆசைப்பட்டாராம். அந்தப் பணி நிறைவேறும் முன்பே அவரின் ஆயுள் நிறைவு பெற்றுவிட்டது. அதனால் என்ன? அந்தப் பணியைத் தொடர்வதற்கு நூறு நூறு கவிஞர்கள் ’ஸாரே ஜஹான் சே அச்சா’வான இந்த ஹிந்துஸ்தானத்தில் உதித்துக்கொண்டுதான் இருப்பார்கள், இன் ஷாஹ் அல்லாஹ்.