Friday, May 22, 2026

தேநீருடன் ஒரு தேனிப்பு

 

            21, மே – உலகம் எங்கும் தேநீர் தினம் என்று ஐ.நா. சபை அறிவித்ததன் பேரில் உலகெங்கும் தேநீர் கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன. எனக்கோ தியானத்திற்கு உதவியாக ஒரு கோப்பைத் தேநீர் அமையும் தினம் எல்லாமே அக உலகின் தேநீர் தினம்தான்.



            ஆம், தேநீருக்கும் தியானத்திற்கும் தொடர்பு உண்டு. தேநீரைக் கண்டு பிடித்தவர் போதி தர்மர் என்கிறார்கள். சீனாவில் அவர் பயணித்தபோது அதைக் கண்டு பிடித்திருக்கிறார். அதாவது தேநீர் இலைகளைக் கொதிக்க வைத்து பானம் தயாரிக்கலாம் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார். சீன மொழியில் அதற்கு ’டே’ (Te) என்று பெயர். அதையே ஆங்கிலத்தில் டீ என்றும், அதன் பானத்தை தமிழில் தே+நீர் = தேநீர் என்றும் அழைக்கிறோம். நியாயப்படி, போதிதர்மரின் பிறந்த தினத்தைதான் உலகத் தேநீர் தினமாகக் கொண்டாட வேண்டும்.

            உலகத் தேநீர் தினம் பற்றிய செய்தியை வாசித்ததும், அண்மையில் நான் பருகிய அருமையான தேநீர் குறித்து என் நினைவு ஓடியது. (அண்மையில் காஃபி தருணங்கள் சிலவும் அமைந்தன. சென்ற மாதம் சென்னையின் ஃபீனிக்ஸ் மாலில் பருகிய ஹேகன் டாஸ் (Haagen Dazs), பெசண்ட் நகரில் அருந்திய தேர்டு வேவ் காஃபி, ஸ்ரீரங்கம் முரளி ஃபில்டர் காஃபி, ‘ஆஸி பைட்ஸ்’ என்னும் கடையில் பருகிய பச்சை நிறத்திலான பிஸ்தா காஃபி ஆகியவை முதல் நான்கு நாட்களுக்கு முன் ஏற்காடு கிராஞ்ச் எஸ்டேட்டில் பருகிய ஹேஸல்நட் காஃபி வரை.)

          சென்ற மாத இறுதியில் சில நாட்கள் சென்னையில் சகலையின் வீட்டில் தங்கி இருந்தேன். வாசிப்பதற்கு என்று ஓஷோவின் நூல் ஒன்றை எடுத்துச் சென்றிருந்தேன். ”தி புக் ஆஃப் விஸ்டம்” என்னும் அந்த நூல் திபெத்திய ஞானி அதிஷா என்பவர் மனம் செம்மையுற போதித்த ஏழு பயிற்சிகள் (seven points of mind training) குறித்து விரிவாகப் பேசுகிறது. ‘அடிப்படையான சாட்சிபாவத்தில் அமைந்து விடு. அதாவது சாராம்சத்தில்’ என்று அவர் சொல்கிறார். ”பாஸ் அன்ஃபாஸ்” என்று சூஃபிகள் கூறும் மூச்சுப் பயிற்சியில் அதுதான் நிகழ்கிறது.



            சகலையின் தந்தைக்கு திடீரென்று உடம்புக்குச் சரியில்லாமல் போய் ’கெரி கேர்’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அண்ணன் ஹஜ் பயணத்திற்குப் புறப்படும் ஏற்பாட்டில் இருந்ததால் சில மணி நேரங்கள் நான் மருத்துவமனையில் துணைக்கு இருந்தேன். ஆதம்பாக்கம் முதலாம் சாலையின் நெடுக்கில் சென்றால் நேரு நெடுஞ்சாலையில் கொண்டு போய் மருத்துவமனைக்கு அருகில் விட்டுவிடுகிறது. இரண்டு முறை மருத்துவமனைக்குப் போய் வந்தேன். காலை பதினொரு மணி வாக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது தேநீர் அருந்த வேண்டும் என்று தோன்றியது. யூனிவர்சல் என்று ஒரு டீக்கடை இருந்தது. அதில் கூட்டம் மொய்த்தது. தனிமையில் அமர்ந்து தேநீர் அருந்த ஏதேனும் கடை கிடைத்தால் பார்க்கலாம் என்று நகர்ந்துவிட்டேன். சற்று தூரம் வந்ததும் அப்படி ஒரு கடை கண்ணில் பட்டது. ’Seasoned Café’ என்னும் அந்தச் சிற்றுண்டிக் கடையில் யாருமே இல்லை, கடைக்காரர் கூட! உள்ளே போய் அழைத்த பின்னர் உள்ளறை ஒன்றிலிருந்து வந்தார். மெனு பார்த்துவிட்டு ஒரு லெமன் டீ சொன்னேன். தோராயமாகப் பத்துக்குப் பத்து சதுர அடிகள் உள்ள இடத்தில் மூன்று மேஜைகள் போட்டு சிறிய புல்வெளி போல் பரப்பி செடிகள் வைத்து ஜென் தோட்டம் போல் அலங்கரித்திருந்தார். கண்ணாடிக் கோப்பையில் அவர் கொடுத்த லெமன் டீ வீட்டில் சகதர்மினி போட்டுத் தரும் தேநீரின் நிறத்திலேயே இருந்தது. (அவள் தரும் சுலைமானி டீ எப்போதும் ’தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி’ என்று சூரியன் உதிக்கும் கீழ்வானம் பற்றி பாரதி சொல்வது போல் ஆரஞ்ச் நிறமாக இருக்கும். மேலும் பால் கலந்த தேநீரில் அவளே கண்டுபிடித்த தயாரிப்பு முறையில் இரண்டு வகை உண்டு. அவற்றுக்கு நான் ஸ்மோக்கீ பானு டீ மற்றும் ரோஸி பானு டீ என்று பெயர்கள் சூட்டியிருக்கிறேன்.) நிதானமாக பதினைந்து நிமிடங்கள் அனுபவித்துப் பருகினேன். அதுவரை டீ தழல் குறையாமல் – அதாவது சூடு ஆறாமல் – இருந்தது. சென்னையின் தட்ப வெப்பம் அதற்கு உறுதுணை செய்தது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! நான் பருகி எழும் வரை கடைக்கு வேறு எவரும் வரவில்லை. மீண்டும், எல்லாப் புகழும் இறைவனுக்கே!



            தேநீரை வைத்து சீனர்களிடமும் ஜப்பானியர்களிடமும் வாழ்வியல் பார்வைகள் பல உருவாகி உள்ளன. அவற்றுள் ஒன்று: தேநீர்க் கோப்பையை ஒருபோதும் முழுமையாக நிரப்பக் கூடாது. விருந்தினருக்கு அளிக்கும்போதும் முக்கால் பாகம் மட்டுமே நிரப்பித் தர வேண்டும். இது ஏன்? இதற்கான காரணத்தை, சீனாவின் ஷென்சென் மாகாணத்தின் பண்பாட்டு மற்றும் சுற்றுலாத் தூதரும் டிஜிட்டல் ஆளுமையுமான டான் லீ என்பவர் இப்படி விளக்கிச் சொல்கிறார்:

            ”சீனாவில் நாங்கள் எப்பொதும் ‘நிறைவாக’ அல்லது ‘முழுமையாக’ இருப்பதைத் தவிர்க்கிறோம். என் மேற்கத்திய நண்பர்களால் இதைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. உதாரணமாக, யாரேனும் ‘நீங்கள் அற்புதமாக இருக்கிறீர்கள்’ என்றோ, ‘நீங்கள் கச்சிதமாகச் செய்தீர்கள்’ என்றோ சொன்னால், சீனர்களாகிய நாங்கள் உடனே ‘மெய் யூ மெய் யூ’ – ‘இல்லை இல்லை’ – ‘நின் குவோ ஜியாங் லே’ – ‘நீங்கள் என்னை மிகையாகப் புகழ்ந்து விட்டீர்கள்’ என்றுதான் சொல்வோம். இதையே என் ஆங்கிலேய நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் ‘நன்றி’ என்றும் ‘நீங்கள் மிகவும் அன்பானவர்’ என்றும் சொல்வார்கள்.           

            ”மேற்கத்திய ஓவியங்கள் மற்றும் சீன ஓவியங்கள் ஆகியவற்றுக்கு இடையே நீங்கள் இந்த ஒரு வித்தியாசத்தையும் கவனிக்கலாம். மறுமலர்ச்சிக் காலத்தில் (Renaissance period) அல்லது பரோக் (Baroque) காலத்தில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஓவியங்களைப் பாருங்கள். கேன்வஸ் (திரை) முழுமயாக நிரப்பப் பட்டிருக்கும். பொருட்கள், ஒளி, மனிதர்கள், பூக்கள்…  என்று திரை முழுவதும் நிரப்பப் பட்டிருக்கும். ஆனால், சீன ஓவியங்களில் வேண்டுமென்றே வெற்றிடங்கள் விடப்பட்டிருப்பதை நீங்கள் மிக எளிதாக கவனிக்கலாம். சில மலைகள், ஒரு ஆறு, ஒற்றைப் படகில் ஒரு மீனவன், மற்றும் நிறைய வெற்றிடங்கள்.

”இது சீனத் தத்துவத்தில் எளிய சிந்தனை ஒன்றைச் சுட்டுகிறது: ’மன் ஜாவோ சுன் கின் ஷௌ இ’ – ‘நிறைவு சரிவைத் தொடங்கி வைக்கிறது, குறைவு வளர்ச்சிக்கான அழைப்பாகிறது.’ இதனால்தான், நீங்கள் சீனர் ஒருவரின் வீட்டுக்கு விருந்தாளியாகச் சென்றால், அவர் உங்களிடம் ‘மன்னிக்க வேண்டும், இன்றிரவு உணவு அவ்வளவு நன்றாக இல்லை’ என்றோ ’என் உபசரிப்பு அவ்வளவு நன்றாக இல்லை’ என்றோ கூறுவார். மேஜை முழுவதும் சுவையான பல உணவுகள் நிரப்பப் பட்டிருந்தாலும் அவர் உங்களிடம் ’போதிய அளவு உணவு வகைகள் இல்லை’ என்றே சொல்வார். என் ஆங்கிலேய நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள், ‘டான், பாராட்டுக்களை நீங்கள் ஏன் எப்போதும் மறுத்துக் கொண்டே இருக்கிறீர்கள்?  உங்கள் உபசரிப்பு நன்றாக இல்லை என்றே ஏன் எப்போதும் சொல்கிறீர்கள்?’ அது ஏனெனில், நாங்கள் மிகையை, அளவு மீறுவதை எப்போதும் தவிர்க்கிறோம்.   

“நிலவு தன் முழுமையை அடையும்போது தேய ஆரம்பிக்கிறது. ஒரு கோப்பையில் தேநீர் நிரம்பியதும் அது வெளியே சிந்த ஆரம்பிக்கிறது. ஆற்றல் தன் சிகரத்தை அடைந்தவுடன் குறைய ஆரம்பிக்கிறது.

“சீனர்களிடம் உள்ள 24 சூரிய கால வாக்குகளில் ஒன்று: ஜியாவ்மன் – சிறிய நிறைவு. இது ‘டாமன்’ – பெரிய நிறைவு அல்ல. அப்படி ஒன்று கிடையாது. ஆனால், ஜியாவ்மன் – சிறிய நிறைவு உள்ளது. அது, தானியங்கள் ஏகபோகமாக விளைந்து, ஆனால் இன்னும் முற்றாத பருவகாலத்தைக் குறிக்கிறது. நீர் எழுந்து வருகிறது, மழை அதிகமாகிறது, ஒவ்வொன்றும் அபிவிருத்தியை நோக்கிச் சீர் மல்கி வருகின்றன. ஆனால் எதுவும் இன்னும் அவற்றின் எல்லையை அடையவில்லை. இது ஒரு வகையான சமனம். இந்த நிலையைத்தான் சீனர்கள் அடைய விழைகின்றனர். அதனால்தான் சீனத் தேநீர்க் கோப்பை ஒருபோதும் நிரம்பியதாக இல்லை.”

டான் லீ-யின் பேச்சில் தாவோவின் தாக்கம் அதிகம் தெரிகிறது. வேறு எப்படி இருக்க முடியும்? குறிப்பாக இந்த வரிகள்:

நிலவு தன் முழுமையை அடையும்போது

தேய ஆரம்பிக்கிறது.

ஒரு கோப்பையில் தேநீர் நிரம்பியதும்

அது வெளியே சிந்த ஆரம்பிக்கிறது.

ஆற்றல் தன் சிகரத்தை அடைந்தவுடன்

குறைய ஆரம்பிக்கிறது.  

இது அப்படியே ’தாவோ தெ ச்சிங்’ நூலில் லாவோ சூ பேசுவது போன்று உள்ளது.  



டான் லீ-யின் விளக்கத்தை அவதானித்தபோது என் பால்ய காலத்தின் நினைவு ஒன்றை அடைந்தேன். அப்போது எனக்கு ஏழெட்டு வயது இருக்கலாம். என் தாய் வழித் தாத்தாவின் வீட்டில் ஓவியம் ஒன்று சுவரில் தொங்க விடப்பட்டிருந்தது. அந்த ஓவியத்தின் வடிவமும் மூலப்பொருளும்தான் என் கருத்தை முதலில் கவர்ந்திருக்க வேண்டும். அது ஓரடி அகலமும் மூன்றடி உயரமும் கொண்டதாக இருந்தது, மிக நீளமாக. அது ஓலைச் சுவடி போல் மெல்லிசான மூங்கில் பிளாச்சுகளைக் கோர்த்து உருவாக்கப் பட்டிருந்தது. அதன் இரண்டு ஓரங்களில் மெல்லிய மூங்கில் குச்சிகள் பொருத்தப் பட்டிருந்தன. பழுப்பு மஞ்சள் நிறமான அந்த மூங்கில் திரையில் ஒரு சீன ஓவியம் அச்சிடப்பட்டிருந்தது. அது கறுப்பு நிற மை கொண்டு மட்டுமே வரையப் பட்டிருந்தது. உயரமான மலைகள். அவற்றின் முகடுகள் மீது தவழும் மேகங்கள். அருவி ஒன்று இறங்கி ஆறாக ஓடுகிறது. மலை முகட்டில் ஒரு குடில். கீழே ஆற்றில் ஒரு படகு. அதில் ஒரு மீனவன். அதன் ஓரிடத்தில் சீன மொழியில் ஏதோ எழுதியிருந்தது. ‘இவ்வளவு பெரிய காட்சியை எப்படி இவ்வளவு சிறிய திரையில் வரைய முடிந்தது?’ என்று நான் மீண்டும் மீண்டும் அந்த ஓவியத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஓவிய உலகின் நுட்பங்களிடம் என்னை ஈர்த்த முதல் ஓவியம் அதுவாகத்தான் இருக்கும்.

தாவோ மற்றும் ஜென் குறித்துப் பின்னால் வாசிக்கும்போதுதான் தெரிந்தது. தியானத்திற்கான அறையில் இத்தகைய ஓவியம் ஒன்றை மாட்டி வைப்பார்கள். அந்த ஓவியத்துடன் ஒரு ஹைகூ கவிதை எழுதப்பட்டிருக்கும். தியானத்திற்கு முன் பச்சைத் தேநீர் தந்து உபசரிப்பார்கள். ஓவியம், ஹைகூ, பச்சைத் தேநீர் ஆகியவை எல்லாம் தியானத்திற்கு இட்டுச் செல்பவையாக இருக்கும். பால்ய வயதில் நான் ரசித்த அந்த ஓவியத்தில் இருந்த சீன எழுத்துக்கள் தாவோ வாசகங்களாக இருக்க வேண்டும். லாவோ சூ-வின் சொற்களாகவும் இருக்கலாம்.

டான் லீ சுட்டிக் காட்டுவது போல் அந்த ஓவியத்திலும் வெற்றிடங்கள் அதிகமாக இருந்தது. ஆனால், திரையைப் பொறுத்துதான் அது வெற்றிடம். ஓவியன் தீட்டாமல் விட்ட அந்த வெற்றிடம் காற்று நிரம்பிய வெளியைக் குறிக்கிறது. அல்லது, தீட்டாமல் விடும் உத்தியைக் கையாண்டு அந்த ஓவியன் காற்றை வரைந்திருக்கிறான் என்றும் சொல்லலாம்.  அந்த ஓவியத்தைப் பார்க்கும் போது அதன் வெற்றிடம் குறிக்கும் காற்றை நாம் சுவாசிக்க ஆரம்பித்து விடுகிறோம். அப்படியாக அது நம்மை தியானத்திற்குள் இட்டுச் செல்கிறது. உலகின் ஏனைய மரபுகளில் ஓவியர்கள் புறவுலகம் நம் மனத்தில் படிவதை வரைகிறார்கள் என்றால் சீன மற்றும் ஜப்பானிய ஓவியர்கள் புறவுலகைத் தன்னில் வைத்திருக்கும் பிரக்ஞையைப் பார்வையாளன் உணரும்படி வரைகிறார்கள்.

சீன மற்றும் ஜப்பானிய (அதாவது, தாவோ மற்றும் ஜென்) கலைகள் அனைத்திலுமே இந்த வெற்றிடம் உண்டு. அதுவே அந்தக் கலைக்கு உயிர்ப்பைத் தருகிறது. அது உருவத்துக்கும் அருவத்துக்கும் பாலமாகிறது. அவர்களின் கவிதைகள் மிகவும் குறைந்த சொற்களால் ஆனவை. சில சொற்களை எடுத்து வைத்தல்தான் அவர்களின் கவிதைக் கலை. நம்மிடம் இருப்பது போல் சொற்களின் பிரவாகம் அல்ல. அவர்களின் இசையிலும் அந்த வெற்றிடம் இருக்கிறது. சில ஸ்வரங்களை வாசிப்பதுதான் அவர்களின் இசை. அது விட்டிசைப்பு அதிகம் உள்ளது. ஒற்றைக் கருவி இசையே அவர்களிடம் முதன்மையாக உள்ளது. ஐரோப்பிய சிம்ஃபொனி போன்ற ஆரவாரமான கூட்டிசை அவர்களிடம் கிடையாது. அதேபோன்றுதான் அவர்களின் நடனமும். மிக மெதுவான அசைவுகளைக் கொண்டது. வெற்றிடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தத் தன்மையே அவர்களின் கலையில் இயல்பான ஓர் எளிமையைக் கொடுத்து விடுகிறது.  

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் இரண்டு முறை தேநீர் அருந்திவிட்டேன். ஒன்று, வீட்டில் நானே தயாரித்துப் பருகியது. மற்றது, கடையில். கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் முன் பருகிய தேநீர் வழக்கமான லெமன் டீதான். ஆனால், அதில் இன்று ஒரு புதிய சேர்க்கை. ஒரு சிறு கொப்பு ரோஸ்மேரி. [உலகமயமாக்கலின் சாதகமான அம்சங்களில் ஒன்று இது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மட்டுமே விளையும் என்றிருந்த பழங்களும் தாவரங்களும் எல்லா ஊர்களிலும் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. ஸ்ட்ராபெரியைத் தொடர்ந்து ப்ளூபெரியும் வந்துவிட்டது. முன்பெல்லாம் கொத்துமல்லி, புதினா மட்டும்தான் அறிவோம். பின்னர் வெங்காயத் தாள், செலரி, லீக்ஸ் என்று வந்தன. அந்த வரிசையில் இப்போது உலராத ரோஸ்மேரி கொப்புகளைக் கொத்துக்கட்டி வைத்திருக்கிறார்கள்.]



  இன்று மாலை, வேறொரு வேலையாக தில்லை நகர் சென்றேன். இடையே, ‘பிரவ்ன் ஷுகர்’ கஃபேயில் நுழைந்தபோது பாரிஸ்டாவின் மேஜை மீது தேநீர்க் கோப்பைகளின் நடுவில் ஒரு பீங்கான் கிண்ணமும் மூங்கில் பிரஷ்ஷும் இருப்பதைப் பார்த்தேன். ‘மாட்ச்சா டீ இருக்கா?’ என்று கேட்டபோது பணிப்பெண் ’ஆம்’ என்றார். தியானத்தில் தூங்கி வழியாமல் இருப்பதற்காக ஜென் மடங்களில் சாதகர்கள் இந்த மாட்ச்சா தேநீர் அருந்துவது மரபு. அந்த பானத்தைத் தயாரிப்பதே ஒருவிதமான தியானம்தான். அவ்வளவு நிதானமாகவும் ஈடுபாட்டுடனும் தயாரிப்பார்கள். ஆனால், கஃபேயில் மிகத் துரிதமாக ‘போட்டு’க் கொண்டு வந்து என் மேஜையில் வைத்துவிட்டார்கள். அந்த ’ப்ரோ’விடமே புகைப்படம் எடுத்துத் தரச் சொன்னேன். மிக சந்தோஷத்துடன் என்னைப் படம் பிடித்துக் கொடுத்தார்.  



ஜப்பானிய ஹைகூ கவியுலகின் சிகரங்களில் ஒருவரான கோபயாஷி தனக்கு ‘இஸ்ஸா’ என்று புனைபெயர் வைத்துக் கொண்டார். அதற்கு ‘தேநீர்க் கோப்பை’ என்று பொருள். ஒவ்வொரு ஹைகூவும் ஒரு கோப்பைத் தேநீர்தான். பாஷோ எழுதிய ஒரு தேநீர் ஹைகூவுடன் மௌனிக்கலாம்:

காலை பச்சைத் தேநீர் அருந்தியபடி

அமைதியாக ஒரு துறவி,

சாமந்திப் பூக்கள்.




Tuesday, December 30, 2025

ஒரு ஸூஃபி நூலுக்கான முகவுரை

 


(அண்மையில் இந்தியா வந்திருந்த என் இளைய சகோதரர் யூனுஸ் பர்வேஸ் அமெரிக்காவில் இருந்து எனக்கு மூன்று நூல்களைக் கொண்டு வந்து தந்தார். மூன்றும் ஸூஃபித்துவ நூல்கள். அதில் ஒன்று “ஜீனத்துல் குலூப்” என்னும் நூலின் ஆங்கிலப் பெயர்ப்பு. அதனைத் துருக்கி மொழியில் எழுதியவர் ஷைஃகு முழஃப்பர் ஒஸாக் அல்-ஜர்ராஹி என்னும் ஸூஃபி குரு. அந்நூலின் ஆங்கிலப் பெயர்ப்பிற்கு ஸூஃபித்துவ அறிஞரும் நியூயார்க் மாநிலப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான வில்லியம் சிட்டிக் ஓர் அருமையான முகவுரை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இது)

         shaikh muzaffar ozak al-jerrahi

முகவுரை

வில்லியம் கிளார்க் சிட்டிக்

             william clark chittick

கடந்த சில ஆண்டுகளில் மேற்குலகில் ஒரு விழிப்புணர்வு வளர்ந்து வந்துள்ளது. அதாவது, ஆதாரபூர்வமான உண்மையான ஸூஃபித்துவம் என்பது முழுமையும் ஒருங்கிணைவுமான இஸ்லாமே அன்றி வேறில்லை.

            முன்பு ஒரு காலம் இருந்தது. இஸ்லாம் என்பது உணர்வற்ற இதயம் கொண்ட வறட்டுப் பண்டிதர்களின் மதம் என்றும், கிறித்துவம், அல்லது பௌத்தம், அல்லது ஹிந்துயிசம், அல்லது ஈரானிய மதங்கள் ஆகியவற்றில் இருந்து பெற்ற ’தாக்கம்’ மட்டுமே முஸ்லிம்களில் விதிவிலக்கான ஒரு சிறு குழுவினர் அன்பின் மீதும் ஆன்மிகத்தின் மீதும் கவனம் செலுத்தக் காரணம் என்றும் எங்களிடம் ‘அறிஞர்கள்’ ஆனந்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். மேற்குலகிடம் எல்லா வினாக்களுக்கும் விடைகள் இருக்கின்றன என்று நம்பிவிட்ட சமகால முஸ்லிம் அறிவாளர்களும் அரசியல்வாதிகளும்கூட தமது பங்கிற்கு, தம் பின்தங்கிய நிலைக்கு இதுதான் காரணம் என்று எதன் மீதாவது பழிபோட வேண்டி ஒரு சாக்குப் போக்கைத் தேடினர். அவர்களுக்கு ஸூஃபித்துவம் என்பது இலகுவான இலக்காகப் பட்டது. எனவே, ஸூஃபித்துவமும் இஸ்லாமும் ஒத்துப்போகாதவை என்னும் கருத்தைக் கீழைத்தேயவியல் அறிஞர்களும் நவீனவாதிகளும் ஏற்றுக்கொண்டனர்.

            மிக அண்மையில், ஒரு சிலரைத் தவிர, பெரும்பான்மை மேற்குலக வல்லுநர்கள் இந்த நிலையைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளனர். “தாக்கம்” பற்றிய பேச்சு எதைக் காட்டுகிறது? தனக்குத் தானே முக்கியத்துவம் அளித்துக் கொண்டு ஸூஃபித்தின் வரலாறு நெடுகிலும் அதனை அனுபவித்து வந்துள்ளோரிடம் இருந்து அதனை நீக்கிவிட முனையும் பண்டிதனின் ஆசையைத் தவிர வேறு எதையாவது அது காட்டுகிறதா? என்று அவர்கள் ஆராய்ந்தனர். இதை விட முக்கியமான அணுகுமுறை ஒன்றையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்: “ஸூஃபித்துவத்தைப் புழங்குவோரின் பார்வையில் ஸூஃபித்துவம் என்பது என்ன?” இதுதான் கேட்கப்பட வேண்டிய கேள்வி.

            அப்போது நாம், இஸ்லாமியச் சிந்தனை மற்றும் நடைமுறையின் ஒளிமயமான ஆழங்களில் சுய விழிப்புடன் பங்கெடுப்பதைக் குறிப்பதற்கு முஸ்லிம்கள் பயன்படுத்தும் பல சொற்களில் ஸூஃபித்துவம் என்பதும் ஒன்று என்று காண்கிறோம்.

            இந்தப் பரிமாணம் இல்லாமல் போகும்போது சமயம் என்பது அந்தரங்க ஒழுங்கற்ற நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளின் தொகுப்பாக மாறிவிடுகிறது. இதுதான் பொதுவான நிலைமையாகவும் உள்ளது.

            ஸூஃபித்துவம் என்பது நபி (ஸல்) அவர்களின் ஆன்மிகம்தான். அது, இஸ்லாமை முழுமையாக வாழ்ந்தோரால் வழிவழியாகக் கையளிக்கப்பட்டு வருகிறது.

            ஸூஃபித்துவத்தில் நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்புகள் சிலவற்றில் காணப்படும் மிகைப்பாடுகளைக் கண்டு முஸ்லிம் நவீனவாதிகள் அதனை விமர்சிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் ஸூஃபித்துவத்தை அவர்கள் மறுப்பதற்கான உண்மைக் காரணங்கள் வேறு. அதாவது, அவர்கள் தம் சொந்த மரபின் உயிருள்ள வேர்களுடனான தொடர்பை இழந்துவிட்டனர்; மேலும், சமயத்தை முற்றிலும் அரசியல் ரீதியாகவே அவர்கள் பார்க்கின்றனர். நவீன மேற்கத்திய சிந்தனையில் அதீத மதிப்பு வழங்கப்பட்டுள்ள அரசியல் புலத்தில் வாழ்வின் அர்த்தத்தை அவர்கள் காண்பதால் ஸூஃபித்துவம் என்பது இஸ்லாமுக்கு முரணானது என்று அவர்கள் நிராகரிக்கின்றனர். சமூகச் செயற்பாடுகளுக்கு அப்பால் அதிகமான பல அம்சங்கள் சமயத்திற்கு உண்டு என்று இத்தகையோரை ஏற்க வைப்பது மிகவும் சிரமமாகும். குர்’ஆன் நமக்கு நினைவூட்டுகிறது, நபி (ஸல்) அவர்களாலேயே குருடர்களுக்குப் பார்வை அளிக்க இயலவில்லை. இஸ்லாமின் சாராம்சமான மெய்ஞ்ஞானப் பரிமாணத்திற்கு – அதாவது, பல தலைமுறைகளாக இறைஞானியரும் இறைநேசர்களும் (ஆரிஃபீன் வ அவ்லியா) இஸ்லாமின் அகப் பரிமாணத்திற்கு அளித்து வந்துள்ள விளக்கங்கள் மீது -   நவீனவாதிகள் ஆழங்காணாத அறியாமையில் இருக்கிறார்கள் என்னும் எதார்த்தம் அவர்கள் பின்பற்றும் பாதை புதிதாகத் தொடங்கப்பட்ட ஒன்று என்பதையே உறுதிப் படுத்துகிறது.

            மேற்கு மொழிகளில் உள்ள மூலங்கள் ஸூஃபித்துவத்தைப் பல்வேறு நோக்கு நிலைகளில் இருந்து அணுகுகின்றன. பொதுவாக, அந்த நூல்கள் எல்லாம் ”வெளியாட்கள்” அல்லது “உள்ளாட்கள்” என்று அழைக்கப்படுவோரால் எழுதப்பட்டவை எனலாம். அவற்றில் சில நூற்கள் இந்த இடைவெளியில் பாலமிடுவதாகவும் உள்ளன. இந்த ”வெளியாட்கள்” (புறமியர்) ஸூஃபித்துவ வரலாறு குறித்த காத்திரமான பல்வேறு ஆய்வுகளையும் செவ்வியல் பிரதிகளின் மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளனர். “உள்ளாட்கள்” (அகமியர்) ஸூஃபி மரபின் பிரதிநிதியாகவே பேசுகின்றனர், அல்லது அப்படிப் பேசுவதாகக் கோருகின்றனர். அத்தகயோருள் ஒருவர்தான் ஷைஃகு முழஃப்பர் அவர்கள். ஒருங்கிணைந்த முழுமையான இஸ்லாம் இப்போதும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை அவரின் நூல்கள் புலப்படுத்துகின்றன. அவர், தாம் ஆராயும் பொருண்மையை ஓர் அகழாய்வுக் களம் போல் பாவிக்கும் வல்லுநர்களின் வறண்டு போன வரலாற்று நோக்கையோ, நுண்ணறிவின் முன்னால் காணாமல் போய்விடும் மெய்நிகர் தொன்மங்களுக்குச் சுகமளிக்கும் நவீன முஸ்லிம்களின் பச்சாதாப அணுகுமுறையையோ கையாள்வதில்லை.

            ”உள்ளாட்கள்” எழுதியுள்ள நூல்களில் காணபடும் ஸூஃபித்துவத்திற்கான பல்வேறு அணுகுமுறைகளை நாம் புரிந்து கொள்ள ஷைஃகு முழஃப்பரின் நூல் உதவுகிறது. இது அன்னாரின் எழுத்தில் காணப்படும் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அவர் சுட்டுவது போல், இந்த எழுத்தாளர்களை நாம் பல்வகையாகப் பகுத்துக் காணலாம், “பேச்சாளி ஷைஃகுகள்” மற்றும் “உருவாகி வரும் ஷைஃகுகள்” என்பதில் இருந்து “ஆன்மிக ஷைஃகுகள்” என்பது வரை. அப்புறம் அவர், இந்த அணுகுமுறைகளை வேறுபடுத்திக் காண்பதற்கான பல்வேறு நியதிகளைத் தருகிறார். ஆன்மிகச் சாதகர்கள் நன்மை தீமைகளைப் பிரித்துப் பார்க்க தமது நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறும்போது அவர் இஸ்லாமிய மரபின் மையத்தில் நிற்கிறார். போதிய கல்வியறிவு இல்லை எனில் ”முனைப்புகள்” / “எண்ணங்கள்” (நிய்யாத்) போதுமானவை அல்ல. “அறிகின்றோரும் அறிகிலாதோரும் நிகராவரா?” (குர்’ஆன் 39:9).


            
அடிப்படையில் இந்நூல், ஹல்வத்தி-ஜர்ராஹி ஸூஃபி நெறியின் சாதகருக்கான ஒரு கையேடு ஆகும். ஆனால் எந்த ஒரு நிலையிலும் உள்ள ஸூஃபித்துவ ஆர்வலர் எவரும் இதனால் பயன் அடையலாம். வேறு ஸூஃபி நெறியினர், அல்லது பொதுவாக முஸ்லிம்கள், இறைவனுக்கு உகந்த முறையில் எப்படி வாழ்வது என்று வழிகாட்டும் பல செய்திகளை இந்நூலில் காணலாம். அனைத்து மரபுகளினதும் ஸூஃபித்துவச் சாதகர்கள் தம் நெறியில் இஸ்லாமியச் சகோதரத்துவ இணக்கத்தை அதிகப்படுத்தும் எடுத்துக்காட்டுகளை இதில் காணலாம். புழுதி படிந்த பழஞ் சுவடிகளில் ஒளிந்து கிடக்கும் போதனைகளின் சமகால வெளிப்பாட்டினை இந்நூலில் அறிஞன்மார் காண்பர். இஸ்லாம் பற்றி ஆர்வம் உள்ள பொது வாசகர்கள் ஊடகத்தில் பரப்பப்படும் பொய்களின் விடத்தை முறிக்கும் அருமருந்தை இதில் அடைவர்.

            முடிவாக, இஸ்லாம் என்பது சமய வடிவங்களில் இருந்து தன்னை எப்படியோ துண்டித்துக் கொண்ட அரிதான மற்றும் ‘உலகளாவிய’ ஆன்மிக நெறி என்று எண்ணும் நம் சமகாலத்தவர் இந்நூலினை வாசிக்கும்போது, ஸூஃபி சாதகர்கள் எல்லாக் காலத்திலும் அறிந்து வந்துள்ள ஓர் உண்மையைப் புரிந்து கொள்ளலாம்: “ஒரு விதத்தில், ஸூஃபித்துவம் என்பது இஸ்லாமின் அகப் பரிமாணத்தை விட அதன் புறப் பரிமாணத்திற்கு அதிக கவனத்தை அளிக்கிறது. ஏனெனில், உடல் வடிவங்கள் மற்றும் செயற்பாடுகள் மட்டுமன்றி, அனைத்துப் பொருட்களிலும் இறை வெளிப்பாட்டைக் காணும் ஒரு பிரபஞ்சவியலில் அது வேர் ஊன்றியுள்ளது. ஒரு ஸூஃபியின் இலட்சியம் இந்த வாழ்க்கையிலேயே, அதாவது இந்த உடலிலேயே, இறைவனை உணர்ந்து கொள்வதாகும். உடல் என்பது மனித இருப்புக்கும் ஆன்மிகப் பயிற்சிக்கும் அவசியக் கருவியாகும்.

இஸ்லாமிய போதனைகளில், உடலும் உயிரும் இரண்டு வெவ்வேறு பொருட்கள் அல்ல; ஆனால் அவை ஒரே எதார்த்தத்தின் இரண்டு பரிமாணங்கள் ஆகும். இவை இரண்டும் மூன்றாம் பரிமாணம் ஒன்றால் இணைக்கப்படுகின்றன. அது ஆன்மா என்று அழைக்கப்படுகிறது. அதுவே நம் விழிப்புணர்வின் குவிமையம் ஆகும்.

            ஆன்மா, ஆன்மிக உலகின் ஒருமையான ஒளிமயமான நிலைக்கு உயரலாம். அல்லது, உயிரற்ற பருப்பொருளின் சிதறிப்போன பன்மையான நிலைக்கு இழிந்து விடலாம். இவ்வுலகில் ஆன்மிகப் பூரணத்துவத்தையும் மறுமையில் மாசிலா இன்பத்தையும் அடைய விரும்புவோர் இவ்வுடலை உயிருடனும் தெய்வீக மூலத்துடனும் இணங்க வைக்க முயல வேண்டும்.

            இருத்தலின் ஒவ்வொரு தளத்திலும் ஒத்திசைவு, சமனம், மற்றும் இணக்கம் ஆகியவற்றை நிறுவ மனிதனை அனுமதிக்கும் பயிற்சிகள் உடல் மற்றும் ஆன்மா ஆகிய இரண்டு நிலைகளிலும் இருந்தால் மட்டுமே அது நிகழ முடியும். இந்தப் பயிற்சிகள் மனிதனால் பகுத்தறியப்பட முடியாதவை. எனவேதான், இஸ்லாம் அவற்றை இறைத்தூதருக்கும் அவரின் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்ட இறை வழிகாட்டலில் கண்டடைகிறது.

            ஆன்மாவின் தளம் என்பது உடலை விடக் குறைந்த பருன்மை கொண்டது என்பது தெளிவு. ஒரு விதத்தில், அது உடலின் எதார்த்தத்துடன் உடலை விட அதிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. சொல்லப் போனால், இந்தப் பருவுடல் சிதைவுற்று புழுதியாகி மறைந்துவிடும் என்றும் ஆன்மாவே ஓர் உடலாகத்தான் உயிர்த்தெழுப்பப்படும் என்று முஸ்லிம் ஆன்மிக ஆளுமைகள் பலரும் நமக்குச் சொல்கிறார்கள். ஆன்மாவுடன் நேர்ப்படும்படியாக உயிர்த்தெழுப்பப்பட்ட உடல்தான், சில கிரந்தங்களில் எழுதியுள்ளபடி, “உடல் ஆன்மா ஆகிறது, ஆன்மா உடல் ஆகிறது” என்று சொல்லப்படும் இடமாகும். பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறைஞானி ஸத்ருத்தீன் குன்யவி சொல்வது போல், மரணத்தின் வழியாக “புறம் அகம் ஆகிவிடுகிறது, அகம் புறம் ஆகிவிடுகிறது.” இப்போது ஸூஃபித்துவக் கல்வியில் நன்கு அறியப்பட்டிருக்கும் ஒரு சொல்லைக் கொண்டு குறிப்பிடுவதெனில், “கற்பனை” (ஃகயால்) என்பதே ஆன்மாவின் சாராம்சம். மேலும், கற்பனை என்பது உருவ மற்றும் மீவுருவ (அல்லது அருவ) எதார்த்தங்கள் ஒன்றிணைகின்ற, உடலும் ஆன்மாவும் கலக்கின்ற இடைப்புலம் ஆகும். அதுவே பர்ஸஃக் என்னும் உலகம். அதாவது, மரணத்திற்கும் மறுவுயிர்ப்புக்கும் இடையில் உள்ள உலகம். இன்னொரு விதத்தில், அது மறுவுயிர்ப்பிலும் அதற்கு அப்பாலும் நிகழும் அனுபவங்களின் உலகம்.

            ஸூஃபிசம் என்பது ஒரு பூடகமான தத்துவமோ, எதார்த்தத்தை விட்டு ‘தப்பித்த’லோ அல்ல. அது எதார்த்தத்தினுள் செல்வதற்கான நுழைவாயில். அது, மனித இருப்பின் இயல்பு கோருகின்ற தெளிவான உறுதியான முறைகளில் நிகழ்கிறது. பிரபலமான ஒரு மேற்கோளைச் சொல்ல வேண்டும் எனில், “முழு ஸூஃபித்துவமும் மிகச் சரியான நன்னடத்தை (அதப்)தான்.” நடத்தை என்பது மறுமையையும் இறைவனையும் நோக்கியதாக இருந்தபோதும், இவ்வுலகில் இந்த உடலில் மிக விவேகத்துடன் வேர் கொண்டுள்ளது. ஷைஃகு முழஃப்பர் அவர்களின் எழுத்தில் மீண்டும் மீண்டும் பேசப்படும் ஒரு பொருண்மை நபி (ஸல்) மற்றும் இறைநேசர்கள் ஆகியோரைப் பின்பற்றி நல்ல மற்றும் அழகான குணாம்சங்களைத் தன்னில் வளர்த்துக் கொள்வது மிக அவசியம் என்பதாகும். இந்த உலகத்தில் நாம் வாழப் போகிறோம் எனில் மனித நிலைகள் நிச்சயம் அவசியமானவையே. நமக்கு வேறு வழியில்லை.

            உடலும் ஆன்மாவும் உறவாடும் புலம் தெளிவான உறுதியான முன் மாதிரிகளாலும் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு கிரகிக்கப்பட வேண்டிய துல்லியமான அறிவுறுத்தல்களாலும் வடிவமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அற மற்றும் ஆன்மிக வளர்ச்சி சாத்தியப்படும். அப்போதுதான் ஒரு நபர் ‘மனிதன்’ என்னும் பெயருக்கு அதன் உண்மையான அர்த்தத்தில் தகுதியுடையவர் ஆவார்.








Saturday, December 20, 2025

கொய்யாவும் வேம்பும்

 

(இந்தச் சிறுகதை இம்மாத “இனிய திசைகள்” தமிழ் மாதிகையில் வெளியாகியுள்ளது. வெளியிட்ட பேராசிரியர் டாட்கர் சேமுமு அவர்களுக்கு நன்றி. ’இனிய திசைகள்’ மாதிகையின் பொறுப்பாசிரியர் மவ்லவி நூ.அப்துல்ஹாதி பாகவி இந்தக் கதையை எடிட்டிங் பண்ணிக் கொண்டிருந்தபோது கைப்பேசி வழி என்னை அழைத்து ஐயங்கள் கேட்டுத் தெளிந்தார். ‘பொறுப்பாசிரியர்’ என்னும் சொல்லுக்கு அவர் எவ்வளவு பொருத்தமாகப் பணியாற்றுகிறார் என்று மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கும் என் நன்றி.)


            ரெண்டு மூனு நாட்களாக நிப்பேனா என்று பெய்துகொண்டிருந்த மழை விட்டிருந்தது. காலை ஆறரை மணிக்கே கிழக்கில் இருந்து இள வெயில் பாய்ந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு பானு வாஷிங் மிஷினை ஓட விட்டாள். நாலு நாள் துணி துவைக்கப்படாமல் அப்படியே கிடக்கிறதே என்று புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு இன்று நல்லபடியாக விடிந்திருக்கிறது. சட்டென்று மழை பிடித்துவிடாமல் இருக்க வேண்டுமே என்று கைப்பேசியில் பருவநிலை முன்னறிவிப்பைப் பார்த்துக்கொண்டாள். ”பத்து மணிக்கு மேல மழைன்னு போட்டிருக்கான். அதுக்குள்ள கொஞ்சம் காஞ்சுட்டாலும் எல்லாத்தையும் எடுத்து உள்ளயே காயப் போட்டுக்கலாம்” என்றாள்.

            மாலை வரை மழை இல்லை. ஒரு பகலில் அடித்த வெயில், மூன்று நாள் பெயலின் சுவடே இல்லாமல் உலர்த்திவிட்டது. “மாடிக்குப் போய் பாக்கணும், மழைல என்னவாயிருக்கோ” என்றாள். வழக்கமான மாலை நடையை மொட்டை மாடியில் நிகழ்த்தலாம் என்று திட்டமாயிற்று.

கீழ் மொட்டை மாடியிலிருந்து கொய்யா மரத்தை ஆராய்ந்தாள். புதிதாக ரெண்டு கொப்புகளில் பூ விட்டிருந்தது. ஏற்கனவே ஒரு வாரத்துக்கு முன் பார்த்து வைத்திருந்த ஆறேழு பிஞ்சுகள் நெல்லிக்காய் அளவுக்குப் பருத்திருந்தன. “கட்டக் காயாவ்ல இருக்கு?” என்று சற்று ஏமாற்றமாகக் கேட்டாள். நன்றாகப் பூத்துக் காய்த்துப் பழுத்துத் தள்ளிக்கொண்டிருந்த மரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு பூவும் வைக்காமல் செம்மறி ஆட்டுக் காதுகள் போல் நீளமான இலைகளை மட்டும் மல்கிக் கொண்டு நின்றது. தின்னோமோ சலிச்சோமோ என்று இருந்தது. அம்புட்டு ருசி வேறு. “நம்ம மரத்துப் பழத்த சாப்பிட்டுட்டு வெளிய வாங்குற பழமே எனக்கு நல்லாயில்ல” என்று அடிக்கடி அலுத்துக் கொண்டிருந்தாள். தவிர, சொந்த பந்தங்கள் அக்கம் பக்கத்தினர் என்று எல்லோருக்கும் பை பையாகக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ”அடுத்து காக்யவே இல்லியாம்மா” என்று நேரிலும் ஃபோனிலும் அவர்கள் கேட்கும்போது முகம் சுண்டிப்போய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

”என்னங்க ஆச்சு இந்த மரத்துக்கு?” என்று ஒருமுறை கேட்டாள், நான் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது. “பால் மாற்றம்தான்” என்றேன். “என்னது?” என்றாள், இலக்கணச் சொல் புரியாமல்.

“ஆம்பள மரமா மாறீருச்சுடீ”

“அப்படியெல்லாம் ஆவுமா?” - வாய் அங்காந்திருக்க, விழிகள் விரிய வியந்தாள்.

“மனுசன்ல ஆவுதுல்ல. அப்புறம் ஏன் மரத்துல ஆவாது?”

“சுப்ஹானல்லாஹ்” – வியப்பு மெல்ல மாறி ஒரு சோகம் கவிந்துவிட்டது. “அப்ப இது திரும்பவும் மாறாதா?”

“ஆண்டவன் நாடுனா மாறீட்டுப் போவுது” என்று சொல்லிவிட்டு மோட்டரை அமுத்த நகர்ந்தேன்.

இல்லை. சிகிச்சை செய்துதான் அதை மாற்ற வேண்டும் என்று அவள் கண்டு கொண்டாள். ஒருநாள், கைப்பேசியில் அகஸ்மாத்தாக வந்த ஒரு ரீல்ஸில் சொல்லியிருந்த சிகிச்சையை என்னிடம் விவரித்தாள். “மரத்துல ஆணி அடிச்சோம்னா பூக்காத மரமும் பூத்துக் காய்க்கும்னு சொல்றாங்க.”

“என்னது? மரத்துல ஆணி அடிக்கணுமா? அப்படி செஞ்சா பூக்கும்னு கெளப்பி விட்ருக்கானுங்களா?”

“மல்லிகாம்மாவும் சொன்னாங்க, அப்படிப் பண்றது ஒரு மொற இருக்காம். பூக்குமாம்” என்றாள். வீட்டு வேலைக்கு வைத்த அம்மாளின் ஆலோசனையும் சேர்ந்துவிட்டது. இனி என்ன செய்வது? இதற்கு ஏதாவது அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறதா என்று யோசித்தேன். மரங்களுக்கு நம் உணர்வுகளை கிரகிக்கும் ஆற்றல் இருக்கிறது என்று எப்போதோ வாசித்த ஞாபகம். ஒரு மரத்தை வெட்டுவதற்காக ஒருத்தன் கோடாலி எடுத்துக்கொண்டு அதை நெருங்கினால் அது நடுங்குமாம். இந்த தினுசில் யோசித்துப் பார்த்ததில், ஆணி அடிப்பதால் மரம் அதிர்ச்சி ஆகி அதன் விளைவாகப் பூக்கவும் காய்க்கவும் ஆரம்பித்துவிடும் போலும் என்று தோன்றியது. அது கிளை பிரியும் இடத்துக்குக் கீழாக ஓரிடத்தில் ஆணி அடித்து வைத்தேன். இந்த அதிர்ச்சியில் அது மீண்டும் பெண்ணாக மாறிவிடுகிறதா, இல்லை மூன்றாம் பாலினம் ஆகிவிடுமான்னு பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

ஒரு மாதம் கழித்து அது பூத்திருந்தது. பானுவின் கண்ணில்தான் முதலில் பட்டது. ஆனந்த கண்ணீர் வார்க்காத குறையாக என்னிடம் கூப்பிட்டுக் காட்டினாள். எனக்கும் சந்தோஷம்தான்.  ‘ஆகா, மீண்டும் பூப்படைந்து விட்டதே!’ என்றேன். இப்போது மழை விட்ட நாளில் மீண்டும் மொட்டை மாடிக்கு வந்து சோதித்தபோது மேலும் சில பூக்கள் விட்டிருக்கின்றன. ஒரு வாரமாக பருத்து வந்திருக்கும் காய்களைப் பார்த்துவிட்டு, “கட்டக் காயாவ்ல இருக்கு?” என்று அவள் ஏமாற்றத்துடன் கேட்டதும், “பையப் பையதாம்ப்பா பழைய நெலைக்கு வரும். ரெண்டு வருசமா ஆம்பிளையா இருந்துட்டு இப்பத்தான் மறுபடியும் பெண்ணா மாறீருக்கு” என்று அவளுக்கு ஆறுதல் கூறினேன். “ஆணிய புடுங்கீட்டம்னா திரும்பவும் ஆம்பளையா மாறீருமோ?” என்று கேட்டவனைப் பார்த்து முறைத்தாள். வாயை மூடிக்கொண்டு மேல் மொட்டை மாடிக்கு ஏறினேன்.

 ஐந்தரை மணி வாக்கில் மேற்கிலிருந்து வரும் இண்டிகோ விமானம் தொலைவில் வந்து கொண்டிருந்தது. நட்சத்திரம் மாதிரி அதன் விளக்கு சுடர்ந்தது. வீடு கட்டிய புதிதில் அது எங்கள் வீட்டைக் கடந்து போகும் காட்சியை நான் வீடியோ பிடித்திருக்கிறேன். இப்போது தினமும் பார்க்கும் காட்சியாகிவிட்டது. மொட்டை மாடியில் உலாத்திக் கொண்டே தெருவையும் ஆரெஸ்புரம் பூங்காவையும் ஆகாசத்தையும் வேடிக்கை பார்ப்பது ஒரு தனி சுகம்தான்.

மேற்குப் பக்கம் கிடக்கும் காலி மனையில் மூத்ததும் இளையதுமாய் இரண்டு வேப்ப மரங்கள் இருக்கின்றன. மூத்த மரம் எங்கள் வீட்டை விட உயரமாக வளர்ந்து நிற்கிறது. அதன் உச்சியில் ஒரு கிளி உட்காருந்து பழங்களை ருசித்துக் கொண்டிருந்தது. இளையது வீட்டின் உயரத்தை ஏறத்தாழ எட்டிவிட்டது. அதன் உச்சியில் பார்த்தேன். இரண்டு பட்டாம்பூச்சிகள் வட்டமடித்துக் கொண்டிருந்தன. ’எல்லா உயிர்க்கும் இன்பம்’ என்று தொல்காப்பியர் சொன்னது நினைவு வந்தது. அந்த ஜோடியைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. கொத்துக் கொத்தாக வெண்ணிறச் சிறு பூக்களுடன் வேப்பங்க் கிளைகள் காற்றில் அசைய அவற்றுக்கு இயைந்து அந்த ஜோடியும் பறந்து கொண்டிருந்தது. பின்னர் சட்டென்று இரண்டும் ஆளுக்கொரு பூவில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தன. அப்போது மனதில் சட்டென்று ஒன்று தோன்றியது. பூவும் பட்டாம்பூச்சியும் அல்லது பூவும் வண்டும் காதலர்கள் என்று கவிகள் எழுதி வைத்திருக்கிறார்கள், திரைப்படத்திலும் குறியீடாகக் காட்சிப் படுத்துகிறார்கள், அது எவ்வளவு அபத்தம்! வண்ணத்துப் பூச்சிக்கு ஜோடி ஒரு வண்ணத்துப் பூச்சியாகத்தான் இருக்க முடியும். பூ எப்படி அதன் ஜோடியாகும்? அப்படியானால் இந்தப் பூக்கள் எல்லாம் அந்த ஜோடிகள் வந்து அமர்ந்து கதைத்துப் போகும் கஃபே போலும்! ‘பானு, இங்கே பார், நாம் காஃபி டேயிலும் பராஷியிலும் காஃபி குடிக்கிறாப்ல இதுங்களுக்கு இந்த மரம் ஒரு கஃபேவா இருக்கு!”

இன்னொரு யோசனையும் பிறந்தது. வண்ணத்துப் பூச்சிகள் இவ்வளவு உயரத்துக்குப் பறக்குமா? கோ.வசந்தகுமாரன் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வந்தது: ”பூக்களின் / உயரம் வரைதான் / வண்ணத்துப் பூச்சிகளின் ஆகாயம்.” நூறு மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஒரு தொட்டியில் பூச்செடி வளர்த்தால்? அப்போது அங்கேயும் பட்டாம்பூச்சி வருமா? அது வரை அதன் ஆகாயம் உயருமா? ஆம், வரும் என்று என் உள்மனம் சொன்னது. அவ்வளவு உயரத்துக்கு ஒரு பட்டாம்பூச்சி பறக்குமா என்ன? கூகிள் பண்ணிப் பார்த்தால் விடை தெரியும். எந்த வகைப் பட்டாம்பூச்சி எவ்வளவு உயரம் வரை பறக்கும் என்று தகவல்களை அள்ளி விடலாம். அவை இந்த வியப்பை இல்லாமல் ஆக்கிவிடும். வேண்டாம், இப்படியே ஆச்சரியப் பட்டுக்கொண்டு இருப்பதுதான் இப்போது அறிவுக்கு அழகு என்று தோன்றியது. நூர் பள்ளியிலிருந்து ‘அல்லாஹு அக்பர்’ என்று பாங்கு தொடங்கவும், ’வாங்க போகலாம். பூட்டீட்டு எறங்குங்க’ என்றாள் பானு.

Sunday, November 30, 2025

காந்தி கலந்த ’காஃபி’


            தமிழில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் நான் ரசித்தும் வியந்தும் வாசித்த கட்டுரைகளின் பட்டியல் ஒன்றுண்டு. அதில் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “’அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ தமிழக்கத்தில் காப்பி : ஒரு பண்பாட்டு வரலாறு” என்னும் கட்டுரையும் ஒன்று. எத்தனை தடவை வாசித்தாலும் சுவாரஸ்யம் குறையாத ஓர் ஆய்வுக் கட்டுரை!

            பிரிட்டிஷார் தமிழகத்தில் காஃபி பானத்தை அறிமுகப் படுத்தியபோது அதனைத் தமிழ்ச் சமூகம் எப்படி எதிர்கொண்டது என்ற செய்திகள் சுவையானவை. ஆரம்பத்தில் அதை ஒரு லாகிரி பானமாகவும், கள்ளை விட மோசமான ஒன்று எனவும் தள்ளிய சமூகமே பின்பு அதை அருந்துவது ஒரு பண்பாட்டு அடையாளம் என்று ஆக்கிக் கொண்டனர் என்பது வரலாறு.

            காப்பி, தேயிலை, கொக்கோ, மற்றும் சாராயம் ஆகியவை நச்சுப்பண்டங்கள் என்று மறைமலையடிகள் கண்டித்திருக்கிறார் என்பது காஃபி நம் முன்னோர்களால் எப்படி அணுகப்பட்டது என்பதற்கு ஒரு சான்று.

            மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரிமத்திலும் தேநீருக்கும் காஃபிக்கும் தடை இருந்தது என்று செய்தி. ஆனால், தமிழில் அழகாக எழுதிய சமய அறிஞர்களில் ஒருவரான பி.ஸ்ரீ. அவர்களின் கருத்து ஒன்றை ஆ.இரா.வே தன் கட்டுரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார்: ”என்னுடைய மூன்று காதலையோ நான் ’காந்தி, காஃபி, கம்பன்’ என்று சுருங்கக் கூறிவிடுகிறேன்.” (நான் அறிந்த தமிழ்மணிகள், சென்னை, 1971, ப.69).



            ஜெயகாந்தன் எழுதிய ”ஜெய ஜெய சங்கர” நாவலில் ஆதி என்று ஒரு கதாபாத்திரம். அவர் காந்தியவாதி. அவருக்கு காஃபி என்றாலே ஒரு வெறுப்பு. “ஆதி காபியை விஷம் என்று கருதினார். பல நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் வறுமைக்குக் காரணம் இந்தக் காபி என்கிற பேய்தான். ஒரு குடும்பத்தின் வருமானத்தில் கணிசமான பகுதியை அந்தப் பேய் வடிகட்டி இறுத்துக் கொள்கிறது என்றெல்லாம் ஆதி சொல்லுவார்” (ப.204).

            காந்திக்கு காஃபி அருந்துவது குறித்து எதிர்க்கருத்து இருந்திருக்கலாம். ஆனால், தென்னிந்தியாவில் இருந்து வருவோருக்காக கஸ்தூர்பாவின் சமையலறையில் தேநீரும் காஃபியும் தயாரிக்க அவர் அனுமதித்திருந்தார். தன் ஆசிரம விதியை ஒரு சிறுவனுக்காக அவர் தளர்த்திய நிகழ்வும் உண்டு.


            
ஒருமுறை அவரின் ஆசிரமத்தில் இருந்த தமிழ்ச் சிறுவன் ஒருவனுக்கு வயிற்றுப் போக்கு வந்துவிட்டது. அவன் காந்தியின் நேரடிக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றான். உடல்நலம் சற்றுத் தேறி வந்தது. அந்தப் பையன் காஃபியின் ருசியில் மனதைப் பறிகொடுத்திருந்தான். உணவு இல்லாமல்கூட இருந்துவிடுவான். ஆனால் காஃபி குடிக்காமல் அவனால் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் தன் வீட்டில் பருகிய காஃபியின் மணமும் ருசியும் அவன் நினைவில் எழுந்து வாட்டிக் கொண்டிருந்தன. காந்தி அவனிடம் ஒருநாள் இப்படிக் கேட்டார்: “இப்ப ஒடம்பு தேறி நல்லாத் தெரியிறியே! ஒனக்குப் பசி கெளம்பீருக்குமே? சாப்பிட என்ன வேணும் சொல்லு, உப்புமாவா? தோசையா?” அவனுக்கு அந்த இரண்டு உணவுமே ஒவ்வாது என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டே காந்தி கிண்டலாக அப்படிக் கேட்டார். எனவே அவன் யோசிப்பதைப் பார்த்து அவர் சிரித்துக் கொண்டிருந்தார். அவனுக்குச் சட்டென்று ஒரு யோசனை உதித்தது. சற்றும் தாமதிக்காமல், “எனக்கு ஒரு கப் காஃபி கிடைக்குமா?” என்று அவன் காந்தியிடம் கேட்டான். காந்தி மேலும் சிரித்துக் கொண்டே சொன்னார்: “ஓ! திருந்தாத பாவிப்பயலே! அதுதான் வேணுமா ஒனக்கு?” இதைக் கேட்டதும் அந்தச் சிறுவனின் முகம் வாடிப் போவதைக் கவனித்துவிட்டு அவர் அவனிடம் சொன்னார்: “கட்டாயம் ஒனக்கு ஒரு கப் காஃபி கிடைக்கும், கவலைய விடு. மிதமான காஃபிதான் ஒன் வவுத்துக்கு நல்லது. சரி, காஃபியோட சேத்து சாப்பிட என்னா வேணும். உப்புமாவோ தோசையோ செய்யலாம்தான். ஆனா, காஃபிக்கு அது பொருந்தாது. சூடாக டோஸ்ட் போட்டுத் தரச் சொல்றேன். ஒரு தாம்பாளம் ஒனக்கு அனுப்பி வைக்கிறேன்.” இப்படிச் சொல்லிவிட்டு காந்தி போய்விட்டார்.

            அந்தப் பையன் காத்திருந்தான். ‘சபர்மதி ஆசிரமத்தில் காஃபி! நிச்சயமாக இது ஓர் அற்புதம்தான்! காந்தி கண்டிபானவரே தவிர கொடுமை செய்பவர் அல்லர். அவர் அன்பானவர்’ என்று எண்ணி அவன் சந்தோஷப்பட்டான்.  இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. கஸ்தூர்பா ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பார் என்பதைக் கூட யோசிக்காமல் கேட்டுவிட்டோமே, காந்தி போய் அவரைச் சங்கடப்படுத்த வேண்டியிருக்குமே என்றெல்லாம் அவனுக்கு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

            சிறிது நேரத்தில் மரப் பாதுகையின் டக் டக் சத்தம் கேட்டது. காந்தி தன் கையில் தாம்பாளம் ஒன்றை ஏந்திக்கொண்டு அங்கே வந்தார். அது கதர் துணி போட்டு மூடப்பட்டிருந்தது. அதை அவன் முன் வைத்துத் திறந்தார். பிரட் டோஸ்ட்டும் ஆவி பறக்க ஒரு கப் காஃபியும் இருந்தன.   

            ”இந்தா, நீ கேட்ட டோஸ்ட்டும் காஃபியும். இதை நானே கலந்து கொண்டு வந்தேன் என்பதை மறந்துவிடாதே. நீ மதராஸிதானே, நான் நல்லா காஃபி போட்டிருக்கேனான்னு சொல்லு,” என்று காந்தி அவனிடம் சொன்னார்.

            ”ஆனா, இத நீங்களே ஏன் தூக்கிக்கிட்டு வந்தீங்க? வேற யாரையாச்சும் அனுப்பியிருக்கலாமே? ஒங்களுக்கு நான் சிரமம் கொடுத்துட்டேன். மன்னிக்கணும்” என்று அவன் சொன்னான்.

            ”சரி, சரி. ஒங் காஃபிய வீணாக்கிடாதே.  ஆறிப் போன காஃபி கெட்ட காஃபி. பாரு,   பா இப்போ ஓய்வு எடுத்துக்கிட்டிருக்கா. அவளைத் தொந்திரவு செய்ய வேணாம்னு நானே கலந்து கொண்டாந்தேன். சரி நான் இப்ப போறேன். தாம்பாளத்த வாங்கிக்க வேற ஆளு வருவாங்க” என்று சொல்லிவிட்டு காந்தி அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த காஃபி மிதமாகவும் இதமாகவும் இருந்தது.

            இந்த வரலாற்று நிகழ்வைப் படித்தபோது அந்தப் பையன் என் கற்பனையில் ஒரு குண்டுப் பையனாகத் தோன்றினான், உசிலை மணி போல. நரசுஸ் காஃபி விளம்பரத்தில் வரும் வாசகத்தை அவன் மாற்றிச் சொன்னான்: “பேஷ்! பேஷ்! காஃபின்னா காந்தி கலந்த காஃபிதான். ரொம்ப நன்னாருக்கு!”

            காஃபி என்பது இன்று மிக வேகமாகப் பரவி வரும் ஒரு கார்ப்பரேட் வணிகச் சந்தையாக மாறியுள்ளது. ஐ.டி துறையில் பணியாற்றும் இந்திய இளைஞரிடம், அமெரிக்கர்களைப் போல் காஃபி அருந்துதல் அதிகமாகியுள்ளது. சென்னையின் மிகப் பெரிய வணிக நிலையமான எக்ஸ்பிரஸ் அவென்யூவுக்குள் நுழைந்ததுமே அமெரிக்காவின் முன்னணி காஃபி பிராண்டான ஸ்டார் பக்ஸ் வரவேற்கிறது. ஐந்நூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை ஒரு கப் காஃபிக்குச் செலவு செய்து அருந்தும் நபர்களைக் காண முடிகிறது.



            வீட்டில் காஃபி கலந்து குடிக்கலாம் என்றால் அதிலும் ரசனை மெல்ல மெல்ல உயர் தரம் நோக்கித் தாவிச் சென்று விட்டது. கடைகளில் காஃபி என்றாலே ப்ரூ காஃபிதான் கொடுக்கிறார்கள். ஒரு நிலையில் எனக்கு அதன் ருசி பிடிக்காமல் போய் சன்ரைஸ் பிடித்திருந்தது. அப்போது யாரோ நெஸ்கஃபே கிளாசிக் ஒரு பாட்டில் வாங்கிக் கொடுத்தார்கள். அதை ருசி பார்த்த பின்னர் சன்ரைஸ் பிடிக்காமல் போய்விடவே சில ஆண்டுகள் தொடர்ந்து கிளாசிக் காஃபி வாங்கி இலவசக் கோப்பைகள் எல்லாம் சேகரித்தேன். இடையிடையே வேறு ப்ராண்டுகளையும் பரிசோதித்துக் கொண்டிருந்தேன். கிளாசிக் மாதிரி வரவில்லை. இதிலேயே நின்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது அபூதபியில் இருந்து நெஸ்கஃபே கோல்டு வந்து சேர்ந்தது. அதன் ருசியில் கிளாசிக்கே சப்பென்று ஆகிவிட்டது. போத்தல் காலியானதும் திருச்சியிலேயே கிடைக்கிறதா என்று தேடியபோது ஒரு கடையில் அது ருஷ்ய எழுத்துக்களிட்ட வில்லையுடன் கிடைத்தது. இறக்குமதி செய்யப்பட்டது என்றார்கள். விலையும் சகாயமாக இருந்தது. அது தீர்ந்த பின்னர் மீண்டும் அந்தக் கடையில் கேட்டபோது வரவில்லை என்று சொல்லி விட்டார்கள். நல்லூழாக, பல்பொருள் அங்காடிகளில் கிடைத்தது. அப்படிப் போய்க் கொண்டிருந்தபோது டேவிடாஃப் என்று ஒரு பிராண்ட் வந்து மூளையைப் பிறாண்டவே அதில் ரிச் அரொமா, ஃபைன் அரோமா, க்ரீமெ அண்டு இண்டென்ஸ் என்று வரிசையாக வாங்கிக் கொண்டிருந்தேன். இன்னும் கடுங்காப்பி – எக்ஸ்ப்ரஸ்ஸோ – குடிப்பதற்கு மனம் வரவில்லை! ‘பால் இல்லாமல் காஃபியா? நெவர்’ என்ற அக்மார்க் இந்திய மனநிலையில்தான் இருக்கிறேன். ’கறந்த பசும்பாலை உடனே காய்ச்சி அதில் ஃபில்டர் காஃபி போட்டுக் குடித்திருக்கிறீர்களா? எங்க வீட்ல அப்படித்தான் குடிப்போம். அந்த ருசியெல்லாம் இதுல எங்கே வரப்போவுது?” என்று பானு அடிக்கடி சொல்வாள்.



            இடையில் ஒரு மாறுதலுக்காக ”ஸ்லீப்பி ஔள்” (தூங்கும் ஆந்தை) என்னும் பிராண்டில் அராபிக்கா காஃபி வாங்கினேன். இருமருங்கும் செவிமடல் துருத்திய ஆந்தை ஒன்றின் தலையை பாவித்து அதன் போத்தலும் மூடியும் வடிவமைக்கப் படிருந்தன. அதை அழகு பார்த்துக் கொண்டே காஃபி பருக நன்றாக இருந்தது. ஆனால் மனம் மீண்டும் நெஸ்கஃபேயின் பக்கம் திரும்பி சில நாட்களுக்கு முன் ஆல்டா ரிக்கா வாங்கி வந்தேன்.

            வீட்டுப் புழக்கத்துக்கே இப்படியெல்லாம் வகை வகையாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க, ஷாப்பிங் என்று கிளம்பிப் போய் வெளியே சிற்றுண்டி சாப்பிட நேர்ந்தால் காஃபி பருக என்று அதற்கும் பலவிதக் கடைகள் முளைத்துள்ளன. பொதுவாக, காப்புச்சீனோ என்னும் வகை எல்லோரும் அறிந்த ஒன்றாகிவிட்டது. இரு தசாப்தங்களுக்கு முன்பே தமிழ்த் திரைப்பாடலில் அந்தச் சொல் ஒலித்துவிட்டது. ’காஃபி டே’வில் அமர்ந்தால் காப்புச்சீனோ, லாத்தே, மற்றும் மோக்கா ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்று பருகுவேன். மோக்கா என்பது காஃபியில் சாக்லேட்டும் கலக்கப்படுவது. ஐரிஷ் காஃபி என்று ஒன்றை மெனுவில் பல கடைகளில் போட்டு வைத்திருக்கிறார்கள். ஒருமுறை, மதுரை விஷால் டி மாலில் ஒரு கடையின் மெனுவில் அதைப் பார்த்துவிட்டு புதிதாகப் பருகிப் பார்ப்போமே என்று கேட்டேன். கடைக்காரர் பதறிப் போய், “பாய். இது என்னன்னு தெரியுமா?” என்றார். “புதுசா இருக்கேன்னு கேட்டேங்க” என்றேன். “இது லிக்கர் கலக்குற காஃபி பாய்” என்றார். அதிர்ந்து போய், “என்னங்க, காஃபி கடைல இதெல்லாம் விக்கிறீங்க? ஒங்க கடை பேரு கெட்டுப் போகாதா?” என்று கேட்டேன். ”அப்படியெல்லாம் ஆவாது பாய். இங்க வர்ற ஸ்கூல் பசங்களே இதுதான் வேணும்னு வாங்கிக் குடிச்சிட்டுப் போறாங்க” என்று அவர் சொன்னார். அதிலிருந்து புதிய பெயர்களை மெனுவில் பார்த்தாலே சற்றுத் தயக்கமாக இருக்கும். என்ன ஏது என்று விசாரிக்காமல் வாங்குவது இல்லை.

            தமிழில் ஆங்கிலம் அதிகமாகக் கலக்கிறதே என்று கவலைப் படுகிறோம். ஆங்கிலம் என்பதே பல்வேறு மொழிகளின் கலவைதான். எனவே ஆங்கிலம் கலக்கிறது என்றால் உலகில் உள்ள எல்லா மொழிகளும் கலக்கிறது என்றுதான் அர்த்தம். விஞ்ஞானத்தின் வழியாக ஆங்கிலம் வந்து கலப்பது தொடர்கிறது. ஐபேட், ஐஃபோன், டேப்லட் என்றெல்லாம் அது ஒரு பக்கம் கலந்து கொண்டு போகிறது. இராம கி ஐயா போன்றோர் தூய தமிழில் அவற்றுக்கான சொற்களைக் கண்டறிந்து அறிவித்தாலும் புழக்கத்தில் கொண்டு வர என்ன வழி என்று அறியாமல் தவிக்கிறோம். இன்னொரு பக்கம் உணவின் வழியாகப் பிற மொழிச் சொற்கள் வந்து கலப்பதும் நடக்கிறது. முன்பு அப்படித்தான் பிரியாணி, குலாப் ஜாமூன், ஜாங்கிரி, கபாப் எல்லாம் வந்தது. கிரில் சிக்கன், ஷவர்மா சில ஆண்டுகளுக்கு முன் வந்தன. பீட்சா பர்கர் ஆகியவையும் மிகப் பிரபலமாகிவிட்டன. ‘பீ…ட்சாவாம். பேரைச் சொன்னாலே சும்மா குமட்டுதுல்ல… ஹெஹ்ஹெஹ்ஹே’ என்று ஏதோ அறிவார்த்தமாக ஹாஸ்யம் பண்ணிவிட்டது போல் பேசும் பட்டிமன்ற அசடுகளையும் அதைக் கேட்டுச் சிரிக்கும் ரசிக மந்தைகளையும் தாண்டி அச்சொல் பொதுப் புழக்கத்தில் ஏற்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. இப்படி அருவருப்பு ஊட்டினால் அச்சொல் ஒழிந்துவிடுமா என்ன?

            இப்போது அறபியோ ஃபார்சியோ அல்ல, இத்தாலிய, எஸ்பஞோல், மற்றும் ஃப்ரெஞ்சுப் பதங்கள் உணவுப் பெயர்கள் வழி நுழைந்து கொண்டிருக்கின்றன. நூடுல்ஸ் என்பது ஜெர்மன் மொழிச் சொல்லாம். ஸ்பேகட்டி, பாஸ்ட்டா என்னும் இத்தாலியச் சொற்கள் இன்று வீட்டில் இலகுவாகப் புழக்கத்தில் வந்துவிட்டன. 


            
சென்ற மாதம் பானுவுடன் சிற்றுண்டி கொள்ள (திருச்சி, தில்லை நகர் இரண்டாம் குறுக்குச் சாலை மேற்கில் “கிரில் சிக்கன்” உணவகத்துக்கு அருகில்) ‘பராஷீ’ சென்றபோது நான் மோக்கா கேட்டேன். அவள் கொர்ட்டாடோ கேட்டாள். முன்னதாக, ஃபஹிட்டா சிக்கன் கேசடிய்யா மற்றும் சிக்கன் கொர்தோன் ப்ளியூ ஆகியவை உண்டோம். இதெல்லாம் எஸ்பஞோல் மொழிச் சொற்கள் என்று தெரிகிறது.  



            பத்து நாட்களுக்கு முன் நியூ ஜெர்சியிலிருந்து தம்பி யூனுஸ் வந்திருந்தான். அமெரிக்கர்கள் லிட்டர் கணக்கில்தான் காஃபி குடிப்பார்கள் என்பதைப் பற்றியும் பேச்சு ஓடிற்று. அவன் எக்ஸ்ப்ரஸ்ஸோ பருகுவானாம். அதைத் தயாரிக்க என்று வீட்டில் ஒரு இயந்திரம் வைத்திருப்பதாகச் சொன்னான். ஸ்டார் பக்ஸ் பற்றி நான் கேட்டேன். “இங்கே டீக்கடைல இழுத்து இழுத்து ஆத்தி கால் டம்ளருக்கு நுரை தள்ளி குடுக்குறாங்கல்ல, அதத்தான் அவனும் செய்றான். காத்த அடிச்சு ஏத்தி ஏத்தி பாதிக்குப் பாதி நுரை போட்டுத் தர்றான். பக்கிங்க, அத ஒரு ஃபேமஸ் பிராண்டுன்னு குடிக்கிதுங்க” என்றான்.

            ஒருநாள், பராஷீக்குப் போனோம். நாங்கள் மூவர் காப்புச்சீனோ கேட்க, பானு தனக்கு கொர்ட்டாடோ கேட்டாள். அது, காஃபி-நீரும் பாலும் சம விகிதத்தில் கலந்து போடப்படுவது. மிக மிதமாகவும் இதமாகவும் இருப்பதால் அவளுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ’வயிற்றுக்கு இதமாக’ என்று சொல்லி, தமிழ்ச் சிறுவனுக்கு காந்தி கலந்த காஃபி என் நினைவுக்கு வந்தது. கோப்பைகளை அலங்கரிக்க காஃபியின் மீது நுரையால் இதயங்கள் வரைந்து கொண்டு வந்து பரிமாறுகிறார்கள். திறன் மிக்க ஒரு பாரிஸ்டா மிக லாவகமாகவும் நேர்த்தியாகவும் இதயங்களையும் பூக்களையும் காஃபியில் வரைந்துவிடுகிறார். காந்தி ஒரு பாரிஸ்டாவாக மாறி, தன் இதயத்தையே கலந்து பரிமாறிய கொர்ட்டாடோ ஒரு தமிழ்ச் சிறுவனுக்கு எப்போதோ கிடைத்துவிட்டது!

Friday, November 21, 2025

ஜாவிதின் குறுங்கதைகள்


{ நவம்பர் 2025 “இனிய திசைகள்” மாதிகையில் வெளியாகியுள்ள என் கட்டுரை. இதழாசிரியர் பேராசிரியர் சேமுமு அவர்களுக்கு நன்றிகள்.} 


            
எம் கல்லூரியின் மேனாள் துணை முதல்வரும் விலங்கியல் துறைத் தலைவருமான எம்.எம்.எஸ் என்று அழைக்கப்படும் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் அவர்கள் என் வாசிப்பு மற்றும் எழுத்து ஆகியவற்றின் மீது மதிப்பும் அக்கறையும் கொண்டவர். தேர்ந்த நல்ல வாசகர். அண்மையில் என் நூல்களில் சிலவற்றைப் பெற்றுக்கொண்டு நான் மறுக்கவே கூடாது என்று ஆயிரம் ரூபாயும் தந்தார். அகத்தில் ஆயிரம் நூலை வாசித்து அவ்வப்போது அழைத்துத் தன் கருத்துக்களைச் சொல்வார். சில நாட்களுக்கு முன் தன் மகன் ஜாவித் அஹ்மத் எழுதிய “The Hard Comfort” என்னும் குறுங்கதை ஒன்றை நான் வாசித்துக் கருத்துச் சொல்ல வேண்டும் என்னும் கோரிக்கையுடன் அனுப்பியிருந்தார்.


            
ஜாவித் தற்போது ஜித்தாவில் அல்-அபீர் குழுமத்தில் ‘Branding and Communication Manager’-ஆகப் பணியாற்றி வருகிறார். ஆங்கிலத்தில் flash fiction என்று சொல்லப்படுகின்ற, ஒரு பத்தியில் இருந்து ஒரு பக்க அளவில் அமைகின்ற குறுங்கதை வடிவத்தில் ஜாவித் பல கதைகள் எழுதியுள்ளார். அவை ஆட்டோ ஃபிக்‌ஷன் என்று சொல்லப்படும் தற்புனைவு பாணியிலானவை. அத்தகைய கதைகளைத் தொகுத்து ஏற்கனவே “Life’s Little Things” (வாழ்வின் சிறு சிறு பொருண்மைகள்) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டுள்ளார் (நோஷன் பிரஸ் வெளியீடு; அமஸானில் கிடைக்கிறது.) யுவன் சந்திரசேகர் எழுதிய ’மணற்கேணி’ நூல் போல் ஆங்கிலத்தில் ஒரு நூல். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்துக்கு ஜாவித் தயாராகிறார் என்று காட்டுவது போல் இப்போது இந்த குறுங்கதை வந்திருக்கிறது. அதைத் தமிழாக்கித் தருகிறேன்:


            
”அது செப்டம்பர் 5, 1998. இரவு. பெய்யெனப் பெய்த மழை ஒருவழியாக ஓய்ந்திருந்தது. அத்துடன் என் பாசமிகு தாத்தாவின் ஓராண்டுப் போராட்டமும் முடிவுக்கு வந்திருந்தது. அவரின் உடலை நகர மருத்துவமனையில் இருந்து எங்கள் கிராமத்துக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடானது. அது நவீன ஆம்புலன்ஸாக இல்லை. இரக்கமற்ற சவ ஊர்தியாகவும் இல்லை. அது ஒரு சாதாரணமான, பாந்தமான வாகனம். வெண்ணிறக் கோடி சுற்றப்பட்ட தாத்தாவின் உடல் ஒரு பக்கம் சத்தமின்றிக் கிடந்தது. நான் எதிர்ப்பக்கம் அமர்ந்திருந்தேன், என் மாமாவுக்கும் குடும்ப நண்பர் ஒருவருக்கும் இடையில். குடும்பத்தில் மற்ற அனைவரும் முன்பே கிளம்பிவிட்டனர், என்னை இந்தச் சூழலின் வெறுமையான அணுக்கத்தில் விட்டுவிட்டு – ஆம்புலன்ஸில் என் முதல் பயணம், உயிரற்ற உடல் ஒன்றுடன்.

            அன்று காலையில்தான் பொறியியல் கல்லூரில் ஒன்றில் சேர்க்கையை வெற்றிகரமாக முடித்திருந்தேன். தாத்தாவிடம் சேதியைச் சொல்ல மருத்துவமனைக்கு விரைந்திருந்தேன். அவரால் பேச முடியவில்லை என்றாலும் கண்களில் நீர் முட்டி நின்றது – ஒரு மௌன சந்தோஷம். பல ஆண்டுகளாக அவர் தன் பேரப்பிள்ளைகளிடம் இரண்டே அறிவுரைகளைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்: ‘நல்லா சாப்பிடுங்க, நல்லா படிங்க.’ அவரின் இறுதி நிமிடங்களில் என்றாலும், அவர் கேட்க விரும்பிய சேதியை அவருக்குச் சொல்லிவிட்டேன் என்பது எனக்கு ஆறுதலாக இருந்தது. இந்த ஞாபகங்களில் தொலைந்து போயிருந்தேன் என்றாலும் மழையில் நனைந்த புழக்கமற்ற சாலைகளில் வேன் தூக்கிப் போட்டுக்கொண்டு குலுங்கிச் சென்றதில் அசௌகரியமாக நான் நெளிந்து கொண்டிருந்தேன். வேனுக்குள் நிரம்பியிருந்த சங்கடமான நிசப்தத்தை எந்திரத்தின் உறுமல் மட்டுமே நடுநிசிக் காற்றுடன் சேர்த்துத் துளைத்துக் கொண்டிருந்தது.

            என் அசௌகரியத்தை உணர்ந்து என் மாமா குறுக்கிட்டார், “என்னப்பா கஷ்டமா இருக்கா?” நான் ஆமோதித்தேன், “முதுகு வலிக்குது மாமா, சீட்டெல்லாம் லொட லொடன்னு ஆடுது”. கண்ணாடிச் சில்லின் விளிம்பு நிசப்தத்தைக் கீறுவது போல் சில நொடிகள் சலனமற்று அவர் என்னை நோக்கினார். ‘ஒரு ஆம்புலன்ஸ்ல ஒனக்கு சௌகரியமா பயணிக்கணும்னா நீ பொணமாத்தாம்ப்பா இருக்கணும்” என்றார். அவர் சொன்னதன் நிதர்சனமான உண்மை என் அசௌகரியத்தை நீக்கிவிடவில்லை. ஆனால், அது என் மனப் பதற்றத்தைச் சிதறடித்து அப்பட்டமான ஒரு தரிசனத்தில் நிறுத்தியது: அக்கணத்தில் அந்த ஆம்புலன்ஸில் மிக சௌகரியமான ஒருவர் இறந்து கிடப்பவர்தான்.

            மீதிப் பயணம் எனக்கு ஆழமான தணியாத சிந்தனைக்குரிய வசதியான சூழலாக மாறியிருந்தது: நாம் வாழ்க்கை முழுவதும் சௌகரியங்களைத் துரத்திக் கொண்டு ஓடுகிறோம். மெத்தென்ற இருக்கையும், சுலபமான வழிகளும், பூரண அமைதியும் கிடைக்கச் சண்டை போடுகிறோம். ஆனால் வாழ்க்கை என்பது கொஞ்சம் அசௌகரியமாக இருக்க வேண்டிய ஒன்றுதான். நிலையான, ஓய்வற்ற இயக்கமே, உங்கள் முதுகு நோவதே, இலக்கை நோக்கிய பாடுகளே, நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்பதற்கான நிரூபணம். உச்ச ஓய்வை இவ்வளவு ஆரம்பத்திலேயே அடைய நினைக்காதீர்கள். பயணத்தின் அசௌகரியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னமும் உங்களுக்கு ஓர் இலக்கு இருக்கிறது என்பதற்குச் சான்று அது மட்டுமே.”

            கதையை தமிழாக்கி முடித்துவிட்டேன். எவ்வளவு யோசித்தும் “The Hard Comfort” என்னும் தலைப்பைத் தமிழாக்குவதில் எனக்குத் திருப்தி வரவில்லை. சிரம சௌகரியம், கடின சௌகரியம், சிரம சுகம், கடின சுகம் என்றெல்லாம் பண்ணிப் பார்த்தால் ஏதோ ஃபஹத் ஃபாஸில், ஜோஜு ஜார்ஜ், துல்கர் சல்மான் போன்றோர் நடிக்கும் மலையாளத் திரைப்படத் தலைப்புகள் போல் தொனிக்கின்றன. அதனால், தலைப்பை அப்படியே விட்டு விடுகிறேன். தேவை எனில் நீங்களே தமிழாக்கிக் கொள்ளுங்கள்.

            இந்தக் கதை குறித்து என் கருத்து என்ன என்று நேற்று எம்.எம்.எஸ் சார் அழைத்துக் கேட்டார். இதில் சுட்டப்பட்டுள்ள வாழ்க்கை தரிசனம் குறித்துப் பேச ஆரம்பித்து பல்வேறு புள்ளிகளைத் தொடர்பு படுத்தி உரையாடல் சென்றது. நேற்று காலைதான் “திப்பு சுல்தானின் கனவுகள்” என்னும் நூலினைத் தமிழாக்கம் செய்து பதிப்பாளருக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதில் பின்னிணைப்பாக அல்லாமா இக்பால் எழுதிய ”சுல்தான் திப்பு கீ வஸிய்யத்” (திப்பு சுல்தானின் இறுதி அறிவுரை) என்னும் கவிதையையும் சேர்த்திருந்தேன்.

            இந்த உலகத்தில் சௌகரியமாக வாழ வேண்டும் என்றால் நீ இறந்தவனைப் போல் வாழ்ந்துவிடு என்னும் தத்துவத்தைச் சொல்வதாக ஜாவித் இந்தக் கதையை அமைத்திருக்க முடியும். “நீ மரணிக்கும் முன் மரணித்துவிடு” என்று ஸூஃபிகள் அடிக்கடி குறிப்பிடும் வாசகத்தைப் பிரதிபலிப்பதாக இந்தக் கதையை ஆக்கிவிட முடியும். ஆனால் ஜாவித் இந்தக் கதையை அதற்கு நேர் எதிரான நிலைக்கு நகர்த்திச் செல்கிறார்.

            ’உலகப் பற்றற்று இரு. உலக விடயங்களில் மரணித்தவனைப் போல் ஆகிவிடு” என்னும் உபதேசங்கள் பல நூற்றாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு முஸ்லிம் சமூகத்தை ஒரு மந்த நிலையில் ஆழ்த்திவிட்டது என்று மகாகவி இக்பால் கண்டார். எனவே, அசௌகரியங்களைத் தேடு, அதுவே வாழ்வின் உயிர்த்துடிப்புக்கு அடையாளம் என்று அவர் இந்தச் சமூகத்தை நோக்கி அறைகூவல் விடுத்தார். நபித்தோழர்களின் பாடுகளை அதற்கு ஆதாரமாகச் சுட்டிக் காட்டினார். அவரின் கவிமுழக்கத்தில் இருந்து நான்கு உதாரணங்கள்:

            1. ”இருத்தலின் பூங்காவை ஏதோ அந்நியனைப் போல் பார்க்காதே / இது பார்க்கப்பட வேண்டிய ஒன்றுதான், இதை மீண்டும் மீண்டும் பார்” (’குல்ஸாரே ஹஸ்த்-ஒ-பூத் ந பேகானாவார் தேக் / ஹே தேக்னே கீ ச்சீஸ் இஸே பார் பார் தேக்’ – நூல்: பாங்கே தாரா #50)

            2. “எம் பணி காலையும் மாலையும் பயணிப்பதே / செல்லுதல் செல்லுதல் நில்லாமல் செல்லுவதே” (’காம் அப்னா ஹே ஸுப்ஹ்-ஒ-ஷாம் ச்சல்னா / ச்சல்னா ச்சல்னா மதாம் ச்சல்னா’ – நூல்: பாங்கே தாரா #72)

            3. ”நீ ஒரு ராஜாளி, பறப்பதே உன் பணியாகும் / உன் முன்னே இன்னும் வேறு வானங்கள் இருக்கின்றன!” (’தூ ஷாஹீன் ஹே, பர்வாஸ் ஹே காம் தேரா / தேரே சாம்னே ஆஸ்மான் ஆர் பீ ஹேன்’ – நூல்: பாலே ஜிப்ரீல் #60)

4. “நீ காதலின் பாதையில் ஒரு பயணியாய் இருந்தால் தங்குமிடம் தேடாதே

லைலா உன்னுடன் வருகிறாள் எனில் அவள் பல்லக்கை ஏற்காதே!” (’தூ ரஹ்நவர்தே ஷவ்க் ஹே மன்ஸில் ந கர் கபூல் / லைலா பி ஹம்நஷீன் ஹோ தோ மஹ்மில் ந கர் கபூல்’ – நூல்: ஜர்பே கலீம் #78)

             மேலே நான்காவதாகச் சொல்லியிருக்கும் மேற்கோள் ‘திப்பு சுல்தானின் இறுதி அறிவுரை’ என்னும் கவிதையின் முதல் கண்ணி. இந்த விடயங்களைச் சொல்லிவிட்டு இன்னொரு பொருத்தத்தையும் பேராசிரியரிடம் சொன்னேன். அல்லாமா இக்பாலின் மகன் பெயர் ஜாவித். தன் மகனுக்குச் சொல்லும் அறிவுரையாக அல்லாமா இக்பால் அவர்கள் ‘ஜாவித் நாமா’ என்று ஒரு கவிதையும் எழுதியிருக்கிறார்.

            பேராசிரியர், ”இதுதான் வாசிப்புச் செய்யும் வேலை ரமீஸ். என் மகனுக்கு ஸூஃபித்துவமோ அல்லாமா இக்பாலோ அவர் சொல்லும் தத்துவங்களோ தெரியாது. அவர் தன் அனுபவத்தில் இருந்து கதையை இயல்பாக எழுதியிருக்கிறார். ஆனால் நீங்கள் அதைத் தொட்டுத் தொட்டு திப்பு சுல்தான் அல்லாமா இக்பால் என்றெல்லாம் எங்கெங்கோ போய் மீண்டும் ஜாவிதிடம் வந்துவிட்டீர்கள். அந்த இக்பாலின் மகன் பெயரும் ஜாவித் என்று இருக்கலாம். ஆனால் இந்த ஜாவிதின் தந்தையான நான் இக்பால் இல்லையே?” என்று சொல்லிச் சிரித்தார்.

            ’வாழ்வில் இருந்துதானே அல்லாமா இக்பாலும் தத்துவ தரிசனங்களை எடுத்தார்?’ என்று நான் திருப்பிக் கேட்டேன்.

            ஜாவிதின் சொந்த அனுபவ தரிசனத்தை குர்’ஆனின் வெளிச்சத்திலும் என்னால் மதிப்புடன் ஏற்க முடிகிறது:

            ”நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது; மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது” (ஃப-இன்ன ம’அல்-உஸ்ரி யுஸ்ரா; இன்ன ம’அல்-உஸ்ரி யுஸ்ரா – 94:5-6).

            ஜாவித் அஹ்மத் இன்னும் இதுபோல் நிறைய எழுத என் வாழ்த்துக்கள்.