Wednesday, June 28, 2023

விசேஷ மிஸ்கீன்கள்

(இந்தச் சிறுகதை பேராசிரியர் சேமுமு அவர்கள் ஆசிரியராக உள்ள “இனிய திசைகள்” மாதிகையின்  ஜூன் 2023--ஆம் தேதியிட்ட இதழில் வெளியாகியுள்ளது (பக்.30-33) ஆசிரியர் குழுவுக்கு மனமார்ந்த நன்றி.)


 

வெள்ளிக்கிழமை என்றால் தொழுகைக்கு முன்போ பின்போ யாராவது ஒரு மிஸ்கீனுக்கு (இரவலருக்கு) சாப்பாடு அல்லது சாப்பாட்டுக்கான பணம் ‘சதக்கா’ (தர்மம்) செய்ய வேண்டும். இது என்னவள் பேணி வரும் அறங்களுள் ஒன்று. வேறு ஏதேனும் ஞாபகார்த்த நாட்களை முன்னிட்டு இதர கிழமைகளிலும் இந்த அறத்தை நிறைவேற்றுவாள். மீஸ்கீனைத் தேடிக்கண்டு கொடுப்பது என் வேலை.

            மிஸ்கீன்களிலும் பல வகையானவர்கள் இருக்கிறார்கள். குஞ்சு குளுவான்களோடு வந்து “ஸ்லாமலேக்கும்… மூனு பேரு வந்திருக்கோம்…” என்று நீட்டியிழுத்து ஏக்கத்துடன் கேட்கும் தாய்க்குலத்தின் குரல். பத்து ரூவாத் தாளை மடித்துக் கதவிடுக்கில் நீட்டும்போது அழுக்காடை அணிந்த பெண்ணின் இடுப்பில் தலையைச் சாய்த்தபடி நிற்கும் சிறுமி அல்லது சிறுவன் பார்க்கும் பார்வை ஈரக்குலையைப் பதற வைக்கும். வறுமை சாவினும் கொடிது! ஒருமுறை அப்படி ஒரு பயலை அழைத்து வீட்டு மரத்தில் பழுத்த கொய்யாக்கனி ஒன்றைக் கொடுத்தேன். தயங்கி நின்றவன் அம்மா சொன்னதும் வாங்கிக் கொண்டான். விலக்கப்பட்ட கனிக்கு அனுமதி கிடைத்துவிட்டது போன்ற மகிழ்ச்சி அவன் முகத்தில்! கடித்து ருசித்துக்கொண்டே அம்மாவின் பின்னே போனான்.



இந்த வகை மிஸ்கீன்கள்தாம் பெரும்பான்மை. புனித ரமலான் மாதத்தில் இவர்களின் ஜனத்தொகை அதிகமாகிவிடும். பெண் என்றால் கந்தலான ஒரு புர்கா. ஆண் என்றால் தலைக்கு ஒரு நைந்த தொப்பி. ஒரு பெருநாளன்று இவர்கள் அரிதாரம் தரிப்பதை நேரிலேயே பார்த்துவிட்டேன். நெற்றியிலிருந்த திலகத்தை அழித்து அவசர அவசரமாகப் பைக்குள்ளிருந்து புர்காவை உருவியெடுத்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி. வயிற்றுப்பாடு ஐயா! கருப்பாயி நூர்ஜஹானாக மாறப் போகிறாள், தற்காலிகமாக! அவளருகில் ஒரு சின்னசாமி என்கிற சிக்கந்தர், மாமாங்கமாக எண்ணெய் காணாத தலைக்குத் தொப்பி அணிந்து கொண்டிருந்தான். இப்படியெல்லாம் அரிதாரம் போட்டுக்கொள்ளாமல் இதுதான் நான் என்பது போல் வந்து நிற்கும் மிஸ்கீன்களும் உண்டு. காவி வேட்டி கட்டி மேலுக்குக் காவி துண்டு போர்த்தி, திருநீற்றுப் பட்டையுடன் ஒருவர் திருவோடு ஏந்தி நிற்பதையும் பார்த்தேன். வயிறும் பசியும் எல்லாருக்கும் பொது. இதை விளங்கியவர்கள்தாம் இங்கே தொழ வருகிறார்கள் என்று அவன் நம்புகிறானே! அந்த நம்பிக்கை பொய்க்கலாகாது.

பல வருசங்களுக்கு முன், “இந்தப் பிச்சைக்காரர்கள்லாம் ஏன் சாமியார் மாதிரி காவி வேட்டியும் துண்டும் போட்டிருக்காங்க?” என்று நண்பன் ஒருவன் கேட்டான். “அதுதான் அவுங்களுக்கு இலவசமாக் கெடச்சது. கோட் சூட் குடுத்தீன்னா அதெப் போட்டுக்குவாங்க. கையேந்துறவனுக்கு எம்புட்டுப் போடலாம்னு மட்டும் யோசி” என்றேன்.

இந்த மிஸ்கீன்களின் கூட்டத்தில் நான் தேடுவது வேறு வகையான நபர்களை. சில இறைநேசர்கள் (அவ்லியா) இப்படி மிஸ்கீன்களாக உலவக்கூடும். தர்வேஷ், கலந்தர், ஃபக்கீர் என்னும் பெயரெல்லாம் அவர்களைத்தான் குறிக்கும். மலாமத்தி என்றொரு வகையினரும் உண்டு. எல்லாரும் திட்டித் தீர்க்கும்படி காரியம் செய்து வைப்பார்கள். ஆணவ மலத்தை அழிப்பதற்கான ஆசிட் டெஸ்ட்! சிலர் பைத்தியம் போல் திரிவார்கள். மஜ்தூப் என்று அவர்களுக்குப் பெயர். இவர்களை எல்லாம் முஸ்லிம் சித்தர்கள் என்று இங்கே சில பேர் எழுதியிருக்கிறார்கள். சித்தன் போக்கு சிவன் போக்கு. தர்வேஷ் போக்கு தம்பிரான் போக்கு!

அத்தர் கடை இஸ்மாயில் ஒருமுறை சொன்னார்: “அப்பப்போ ஒரு மிஸ்கீன் வருவார். அவராகவே இவ்வளவு வேணும்னு ரொம்ப அதிகாரத்தோட கேப்பார். பத்து ரூவா குடு, இருவது ரூவா குடுன்னு. அவ்வளவுதான் கேப்பார். கேட்டதக் குடுத்துருவேன். வாங்கிக்கிட்டுப் போயிருவார். எதுக்கு நமக்கு வம்பு. எந்தக் கோலத்துல யாரு உலவுறாங்கன்னு நாம என்னத்தக் கண்டோம்?”

 அதுபோல் நானும் சில பேரை அடையாளம் கண்டு வைத்திருக்கிறேன். வாரா வாரம் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் போகும்போது சகதர்மினி கட்டித் தரும் சாப்பாட்டுப் பொட்டலம் ஒருவருக்குப் போய்க் கொண்டிருந்தது. பத்துப் பதினைந்து மிஸ்கீன்கள் நிற்கும்போது ஒருவரை மட்டும் விசேசமாகத் தேர்ந்தெடுத்து நான் எப்படிக் கொடுப்பது? அதற்கு நான் ஒரு யுக்தி வைத்திருந்தேன். நான் மஸ்ஜிதுக்குப் போகும் பாதையில் முதலாவதாகக் கண்ணில் படும் மிஸ்கீனுக்கே என் சாப்பாட்டுப் பொட்டலம்! (மட்டன் அல்லது சிக்கன் பிரியாணி. அல்லது, நெய்ச்சோறும் கறிக் குழம்பும் ஒரு அவிச்ச முட்டையும்.)



இந்த உத்தியை நான் செயல்படுத்தியபோது வாரா வாரம் அவரிடமே கொடுக்கும்படி வந்தது. தோதகத்திக் கட்டை மாதிரி கறுப்பு. முரணாக வெள்ளை வேஷ்டி சட்டை. முழுக்கைச் சட்டையை எப்போதும் கஃப் பண்ணியிருப்பார். இப்படி ஒரு ’நீட்நெஸ்’ உள்ள மிஸ்கீனை நான் வேறெங்கும் பார்த்ததே இல்லை. அருகில் ஒரு பையை வைத்துக்கொண்டு ஒரு வீட்டின் முன் குத்த வைத்து அமர்ந்திருப்பார். ஆனால் முகத்தில் ஒரு கடுமை இருக்கும். குறிப்பாக, லேசான சிவப்பு ஏறிய முட்டைக் கண்களைப் பார்க்கவே பயமாக இருக்கும். அவர் சிரித்து நான் பார்த்ததே இல்லை. நான்கைந்து வாரங்களாக, அதே இடத்தில் அவருக்கே வெள்ளிச்சோறு கொடுத்தேன்.

ஒரு வெள்ளிக்கிழமை அன்று கல்லூரிக்குப் போகும் வழியில் அவரைப் பார்த்தேன். யாரோ ஒருவரின் பைக்கில் அமர்ந்து வந்தவர் பள்ளிவாசல் இருக்கும் ஏரியாவின் முக்கில் மெல்ல இறங்கினார். அப்படியே படியில் அமர்ந்தார். வாகனத்தில் போய்க் கொண்டே என்னால் இவ்வளவுதான் பார்க்க முடிந்தது. சரிதான், இவர் விசேஷமான ஒரு மிஸ்கீன்தான் என்பது உறுதியாகிவிட்டது!



இன்னொரு விசேஷ மிஸ்கீனைக் கண்டு பிடித்த கதைச்சுருக்கத்தையும் இங்கே சொல்லிவிட வேண்டும். சாப்பாட்டுப் பொட்டலத்தை ஸ்கூட்டரில் தொங்கவிட்டுக்கொண்டு தேடியபடி காஜாமலை அடிவாரம் நோக்கிப் போனபோது அவர் கப்ருஸ்தானின் (இடுகாட்டின்) வாசலில் தார்ப்பாய் விரித்துப் படுத்துக் கிடந்தார். மேலில் துணியில்லை. கைலியும் முட்டிக்காலுக்குச் சற்று மேல் வரை மடக்கியிருந்தது. நான் ஸ்கூட்டரை நிறுத்திய மாத்திரத்தில் சட்டென்று எழுந்து சமனமிட்டு அமர்ந்தார். அந்த வேகம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “அஸ்-சலாமு அலைக்கும்” என்றார். முகத்தருகில் சென்ற அவரின் கையில் நாலைந்து கல்-மோதிரங்கள். மணிக்கட்டில் கயிறு சுற்றப்பட்டிருந்தது. கலைந்து கிடந்த தும்பை நரை தலைமுடி ஐன்ஸ்டீனை நினைவூட்டியது. அவரின் கண்கள் காத்திரமாக நோக்கின. கையை நீட்டி வாங்கிக்கொண்டார். அப்போது லுஹர் தொழுகைக்கான நேரம் நெருங்கியிருந்தது. “போங்க, போயி தொழுவுங்க. வீட்லயும் எல்லாரையும் அஞ்சு வேளையும் தொழுவச் சொல்லுங்க,” என்று கண்டிப்பான குரலில் சொன்னார். சரி அவர்? அவர் மஜ்தூபாக இருக்கலாம். அவரை விமர்சித்து சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடாது.

இப்படியாகப் போய்க்கொண்டிருந்த மிஸ்கீன் ஈகைப் படலத்தில் வேறொரு சுவையான நிகழ்வும் வந்தது. ஏதோ ஒரு காரியத்தின் நிமித்தம் ஏழு மிஸ்கீன்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று அகத்துக்காரி சொன்னாள்.

”வெள்ளிக் கிழமன்னா மிஸ்கீன்க நெறைய பேரு வருவாங்க. இப்ப எப்படிக் குடுப்பீங்க?”

“காஜாமலை பக்கம் இருப்பாங்க. போயி பாக்குறேன். அங்கேயும் இல்லேன்னா காலேஜ் பள்ளிவாசலுக்குப் போயி பாக்குறேன்.”

ஏழு பொட்டலங்களை மாட்டிக்கொண்டு ஸ்கூட்டரில் நான் போகும்போது வி.மிஸ்கீன்#1 என் கண்ணில் பட்டார். பூட்டியிருந்த கடை ஒன்றின் முன் குத்த வைத்து அமர்ந்திருந்தார். “நான் இங்கெ இருக்கேன். நீ எங்கெடா ஓடிக்கிட்டிருக்க?” என்பது போலிருந்தது அவரின் பார்வை. மானசீகமாக அவரிடம் சொன்னேன், “மன்னிக்கணும் மவ்லானா! இன்னிக்கு ஏழு பேருக்குக் குடுத்தாவணும். இப்ப ஒங்களுக்குக் குடுத்துப் பத்தாமப் போச்சுன்னா என்ன பண்ணுவேன்? வெள்ளிக்கிழமெ அன்னிக்கு ஒங்களுக்குத்தான்.”

இடுகாட்டு வாசலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டின் திண்ணையில் வி.மி.#2 அமர்ந்திருந்தார். ஒரு பொட்டலத்தை அவரிடம் நீட்டினேன். இரண்டு வைகளை ஏந்தி வாங்கிக் கொண்டவர் சொன்னார்: “அங்கே ஒருத்தர் போய்க்கிட்டிருக்காரு. போங்க, அவருக்குக் குடுங்க.” சரி என்று ஸ்கூட்டரைக் கிளப்பினேன். காஜாமலை அடிவாரத்தில் அன்றைக்கென்று ஒரு ஆளும் இல்லை. மலை மேலே யாரும் நிற்கிறார்களா என்று பார்த்தேன். யாருமில்லை. ரேஸ் கோர்ஸ் சாலைக்குப் போகும் தெருவில் அவர் சொன்னது போல் ஒரு மிஸ்கீன் போய்க் கொண்டிருந்தார். அவரைப் பிடித்து அவருக்கும் ஒரு பொட்டலம் கொடுத்தேன். இன்னும் ஐந்து இருந்தது. கல்லூரி மஸ்ஜிதுக்குப் போனேன். நான்கு பேர் அரக்கப் பரக்க ஓடி வந்தார்கள். ஆளுக்கொரு பொட்டலம் கொடுத்தேன். ஒரே ஒரு பொட்டலம் மட்டும் மிச்சம். அதை யாருக்குக் கொடுப்பது என்று யோசித்தபோது வி.மி#1 நினைவுக்கு வந்தார். திரும்பி வந்தபோது முன்பு அமர்ந்திருந்த அதே இடத்தில், பூட்டிய கடைக்கு முன்னால் அமர்ந்திருந்தார். கடைசிப் பொட்டலத்தை அவரிடமே கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

இன்னொரு வெள்ளிக்கிழமை. கல்லூரி விடுமுறை என்பதால் அன்று ஜும்’ஆ தொழுகைக்கு மகனும் என்னுடன் வந்தான். கையில் ஒரு உணவுப் பொட்டலம். ”இதெ யாருக்கத்தா தரபோறீங்க?” என்று கேட்ட மகனுக்கு என் மிஸ்கீன் தேடல் அனுபவங்களை எல்லாம் விவரித்துக்கொண்டே ஸ்கூட்டரை மெதுவாக ஓட்டினேன். “நீ வேணும்னா பாரு. அவுரு அங்கே மொத ஆளா நம்ம கண்ணுல படுவாரு. அவருக்கிட்ட குடுத்துருவோம்.”

பள்ளிவாசலுக்குச் செல்லும் தெருவில் திரும்பியபோது வெள்ளை தொப்பி சட்டை லுங்கி அணிந்த கருப்புக் கம்பீரம் ஐம்பதடிக்கு அப்பால் நடந்து போய்க் கொண்டிருந்தது. சரியாக அதே வீட்டின் வாசலில் பையை வைத்துவிட்டு அமர்ந்தது. நான் அவரை நெருங்கி நிறுத்தி உணவுப் பொட்டலத்தைக் கொடுத்ததும் வாங்கிக் கொண்டார். “பாத்தியா? பிச்சக்காரன்னு கேவலமா யோசிச்சிரக்கூடாது. இவுரு ஒரு அவ்லியாவா இருக்கலாம். மரியாதையோட பாக்கணும். தெரியுதா?” என்றேன்.

ஜும்’ஆ தொழுதுவிட்டு வெளியே வந்தபோது ஓர் அதிர்ச்சியான காட்சி. எல்லா மிஸ்கீன்களும் – வயோதிகர்கள் பெண்கள் சிறார்கள் அனைவரும் – வெளியே நின்று கொண்டோ அமர்ந்தபடியோ யாசித்துக் கொண்டிருந்தனர். வி.மி#1 பள்ளி வளாகத்தினுள் படிக்கட்டுக்கு அருகில் படுத்துக் கிடந்தார். லேசாக ஒருக்களித்தபடி குப்புறக் கிடந்த அவரின் ஒரு கால் மட்டும் இழுத்துக்கொண்டது போல் மடங்கியிருந்தது. முடக்கு வாதம் வந்து நடக்கவே முடியாமல் தத்தளிப்பவர் போல் பாவித்துக்கொண்டு புலம்பியபடி யாசித்துக் கொண்டிருந்தார்.

மகன் என்னைப் பார்த்துப் பரிகசிப்பதுபோல் சிரித்தான், “அத்தா, இவுரு அவ்லியாவா?”

நானும் சிரித்தபடி ”இருக்கலாம்” என்றேன்.

கதையை இங்கேயே முடித்துவிடலாம். இன்னொரு வி.மிஸ்கீன் இருக்கிறாரே? அவர் என்னவானார்? எங்கேயும் போய்விடவில்லை. அங்கேயேதான் இருக்கிறார், கப்ருஸ்தான் வாசலில் தார்ப்பாய் மீது படுத்துக்கொண்டு, நாலைந்து கல் மோதிரங்கள் அணிந்த விரல்களின் இடையே பீடியைப் புகைய விட்டுக்கொண்டு. ஒருமுறை அவருக்கு உணவு கொடுக்கப் போனபோது ’வெல்டுடூ’வாகத் தெரிந்த ஒருவரிடம் ஏதோ ஆலோசனை சொல்வது போல் உருதுவில் பேசிக் கொண்டிருந்தார். நான் சற்று ஒதுங்கி நின்றேன். அவரை அனுப்பிவிட்டு வந்தவர் உணவை வாங்கிக்கொண்டதும், “நாகூர் எஜமானப் போய்ப் பாத்துட்டு வந்திருங்க” என்றார். என்ன திடுதிப்புன்னு இப்படிச் சொல்றாரே என்று மனதிற்குள் திகைத்தேன். உடனே மாற்றிச் சொன்னார்: “சரி, போயி நத்தர்வலி பாவாவப் பாத்துடுங்க.” தலையாட்டிவிட்டுக் கிளம்பிவிட்டேன். மூன்று நாளில் தப்லே ஆலம் பாதுஷா என்றழைக்கப்படும் நத்ஹர் வலியுல்லாஹ்வின் உரூஸ் நாள். நானும் மகனும் இமானுவேலையும் அழைத்துக் கொண்டுபோய் ஜியாரத் செய்தோம்.

ஒருநாள் வெயில் மெல்ல எழுந்து வரும் காலை ஏழே முக்காலுக்கு ஒரு காட்சி கண்ணில் பட்டது. பெரியார் கல்லூரி நிறுத்தத்தில் நின்ற பேருந்திலிருந்து வி.மி#2 இறங்கிக் கொண்டிருந்தார். அவர் கையிலும் ஒரு பை. வெளுத்து இஸ்திரி போட்ட மைநீலச் சட்டை போட்டிருந்தார். தூய்மையான வெள்ளைக் கைலி உடுத்தியிருந்தார். சரிதான், டியூட்டிக்கு இப்படித்தான் தினமும் வருகிறார் போலும் என்று மனம் எண்ணிற்று. மகனின் கேள்வி மீண்டும் மனதிற்குள் பகடியாக ஒலித்தது: “அத்தா, இவரு அவ்லியாவா?”

இப்போதும், சிரித்தபடி, “இருக்கலாம்” என்றேன்.

 


கசாப்புக் கத்தி

 


(”...என்றார் தர்வேஷ்” தொடரில் ஒரு பதிவு.)

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தோழர் தக்கலை ஹா மீம் முஸ்தஃபா ஒரு கவிதை எழுதியிருந்தார். அதனை சீடன் ஒருவன் தர்வேஷிடம் காட்டினான்.

                        ”பக்ரீத் நெருங்குகிறது

                         குர்பானிக்குத் தயாராகிறது சமூகம்

                         ஆட்டு வியாபாரிகளும்

                         கசாப்புக்கடைக்காரர்களும்

                         பரபரப்பாகிவிட்டனர்

                         ஒன்றுக்கு இரண்டு கத்திகளை

                         மோதினார் கூர்தீட்டி வைத்திருக்கிறார்

                         ஆடோ மாடோ

                         ஒட்டகமோ குர்பானி செய்வதில்

                         எந்தச் சிரமமும் நமக்கில்லை

                         இஸ்மாயிலை பத்திரப்படுத்திவிட்டோமே

                         ஆசை அறுக்காமல் இஸ்மாயிலை

                         குர்பானி கொடுப்பது எளிதல்ல

                         இஸ்மாயிலை குர்பானி கொடுக்காமல்

                         இபுராஹீமை ஒருபோதும்

                         நம்மால் கண்டடைய முடியாது.”

            கவிதையை வாசித்து ரசித்த தர்வேஷின் உதடுகள் புன்முறுவல் பூத்தன.

            ”அருமையாக எழுதியிருக்கிறார். ஆனால், இதில் ஓர் இடத்தில் சிறு பிழை உள்ளது. அதைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் விளக்கிக் கூற ஆசைப்படுகிறேன்.”

            ”சொல்லுங்கள் குருவே” என்றது சீடர் குழாம்.

            ”இஸ்மாயிலை நீங்களே குர்பானி கொடுக்க முடியாது,” என்றார் தர்வேஷ்.

            ”இன்னும் விளக்கமாகச் சொல்லுங்கள் குருவே” என்றனர் சீடர்கள்.



            ”அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி உங்களை நீங்களே அறுத்துக் கொண்டாலும் அது தற்கொலைதான். தற்கொலை பெரும்பாவம் அல்லவா?

            ”ராபர்ட் ஃப்ரேஜர் அல்-ஜர்ராஹி என்பவர் இதற்கு ஓர் உவமை சொல்லியிருக்கிறார். ‘சிறு சிறு காயங்களுக்கு நீங்களே மருத்துவம் செய்து கொள்ள முடியும். ஆனால், மயக்க நிலை தேவைப்படும் அறுவை சிகிச்சையை உங்களுக்கு நீங்களே செய்துகொள்ள முடியாது’ என்கிறார். ஆம், நீங்களே ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தாலும் சரியே! அதனால்தான் பிறப்பிலேயே விலாயத் என்னும் இறைஞானம் பெற்றிருந்த முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) அவர்கள் தனக்கு ஒரு குருவைத் தேடி அவரிடம் தன்னை ஒப்படைத்தார்கள். உள்ளத்தை சிறு சிறு பாவ அழுக்குகளை விட்டும் நீ தூய்மை ஆக்கலாம். அப்படிச் செய்தால் நீ சரணடைய வேண்டிய குருவை அல்லாஹ் உனக்குக் காட்டுவான். ‘ஆசை அறுக்காமல் இஸ்மாயிலை / குர்பானி கொடுப்பது எளிதல்ல’ என்னும் வரிகள் இதற்குப் பொருத்தமாக உள்ளன. ஆனால் அடுத்து வரும் வரிகள் சரியாக இல்லை.

            ”கவிஞர் சொல்கிறார்: இஸ்மாயிலை குர்பானி கொடுக்காமல் / இபுராஹீமை ஒருபோதும் / நம்மால் கண்டடைய முடியாது. இஸ்மாயிலை யார் குர்பானி கொடுப்பது? இப்றாஹீம் நபிதான்! இப்றாஹீமைக் கண்டடையாமல் இஸ்மாயிலைக் குர்பானி கொடுக்க முடியாது என்பதே சரி. இப்றாஹீமைக் கண்டடையுங்கள். அவர் உங்கள் இஸ்மாயிலைக் குர்பானி கொடுப்பார்!

            ”இஸ்மாயில் என்று இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது ஒருவரின் தன்முனைப்பைத்தான் (நஃப்ஸ்). ஆசாபாசங்கள் நிரம்பிய மனம் அபூஜஹலாகவும் அபூலஹபாகவும் ஃபிர்அவ்னாகவும் நம்ரூதாகவும் இருக்கிறது. ஆசாபாசங்களை அகற்றித் தூய்மை ஆகிவிட்ட மனம் இஸ்மாயில் ஆகிவிட்டது. அது தியாகத்துக்குத் தயாராகிவிடுகிறது. ஆனால் அதுவே தன்னை அறுத்துக்கொள்ள முடியாது.

             ”இப்றாஹீம் நபியின் செயலைச் செய்பவர் குரு; இஸ்மாயில் நபியின் செயலைச் செய்பவர் சீடர்” என்றார் தர்வேஷ்.

 

 


Monday, April 17, 2023

சிவப்புக் கந்தகம்

 (நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரபஞ்சக்குடிலுக்குள் நுழைகிறேன். மீண்டும் பதிவுகளைத் தொடரும்படித் தூண்டிய தோழர் அஷ்ரஃப் நாகூரிக்கு நன்றி. நூலாக்கப் பணிகள் தொடர்கின்றன. அவ்வகையில், “அல்-கிப்ரீத்துல் அஹ்மர் வல் அக்ஸீருல் அக்பர் ஃபீ மஃரிஃபத்தி அஸ்ராரிஸ் சுலூக்கி இலா மலிக்கில் முலூக்கி” என்னும் சூஃபித்துவ ஞான நூலினைத் தமிழாக்கம் செய்துவருகிறேன். தமிழில் இதன் சுருக்கமான தலைப்பு “சிவப்புக் கந்தகம்” என்பதாகும். ஆங்கிலத்தில் "Red Sulphur". இதனை எழுதியவர் ஷைகு அப்துல்லாஹிப்னு அபீபக்ருல் ஐதரூஸ் (ரஹ்) என்னும் சூஃபி ஞானி ஆவார். இந்நூலின் அறபிப் பிரதியுடன் ஆங்கில ஆக்கத்தை ஒப்புநோக்கிப் பையப் பையத் தமிழாக்கம் செய்து வருகிறேன். அறபியில் ஏற்படும் ஐயங்களை ஜமால் முகமது கல்லூரியின் அறபிப் பேராசிரியர் மௌலவி ஷாஹுல் ஹமீது பிலாலி அவர்களிடம் ஆலோசித்துத் திருத்திக் கொள்கிறேன். இந்நூலின் ஆங்கிலப் பிரதிக்கு ’இஸ்லாமியச் சிந்தனைக்கான ராயல் ஆலுல் பைத் இன்ஸ்டிட்யூட், ஜோர்தான்’ தந்திருக்கும் முன்னுரையை இங்கே பதிவிடுகிறேன். இந்த முன்னுரையே இந்நூலின் உள்ளடக்கத்தை மிகச் சுருக்கமாக வரைந்து காட்டுகிறது.) 


இச்சிறிய ஞான நூலின் ஆசிரியரான அப்துல்லாஹ் இப்னு அபீபக்ருல் ஐதரூஸ் அவர்கள் 811 ஹிஜ்ரி / 1408 பொ.ஆண்டில் பிறந்தார். அவரின் மகனான அல்-ஐதரூஸுல் அதனியிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கும் பொருட்டு அவரை அல்-ஐதரூஸுல் அக்பர் என்று அழைக்கின்றனர்.

            அவர் தனது எட்டாம் வயதில் தந்தையை இழந்தார். அதன் பின்னர் அவரை அவரின் தாத்தா வளர்த்து வந்தார். அவரின் பத்தாம் வயதில் தாத்தாவும் இறந்தபிறகு அவரை அவரின் சிற்றப்பா ஷைகு உமருல் மிஹ்தார் வளர்த்தார். தன் சிற்றப்பா ஷைகு உமருல் மிக்தாரிடம் கல்வியில் பெரும்பயன் அடைந்ததற்கு அப்பால் அவர் மார்க்கச் சட்ட அறிஞர்கள் மற்றும் சூஃபிகள் ஆகியோரின் ஒரு குழுவினரிடம் பயின்று குர்ஆன் விரிவுரை, ஹதீஸ் மற்றும் இஸ்லாமியச் சட்டவியல் ஆகிய மூன்று இறைஞானத் துறைகளில் சிறப்புற்றார்.

            அவர் வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான அறிவுப்புலங்களில் கற்பித்தார். பேரெண்ணிக்கையான மாணவர்கள் அவரின் கையால் பட்டம் பெற்றனர். அவர்களில் பலரும் தாம் சார்ந்த அறிவுத்துறையில் மேதைகள் ஆயினர். அவரின் சகோதரர் ஷைகு அலீ அவர்களும் அவரின் மூன்று மகன்களும் அத்தகையோருள் அடக்கம்.

            அவரின் சிறிய தந்தையின் மறைவுக்குப் பின்னர் அவர் ’பா அலவி’ ஞானப் பாட்டையின் ஆன்மிகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு இருபத்தைந்து வயதுதான் ஆகியிருந்தது. இஃது அவருக்கிருந்த பரந்துபட்ட கல்வியறிவையும் அதிசயமான ஆன்மிக முதிர்ச்சியையும் காட்டுகின்றது.

            அப்துல்லாஹ் இப்னு அபீபக்ருல் ஐதரூஸ் அவர்கள் 865 ஹிஜ்ரி / 1462 பொ.ஆண்டில் (யமன் நாட்டின் ஹள்ரமவ்த் மாகாணத்தில் உள்ள) அல்-ஷிஹ்ரு என்னும் ஊருக்குச் சென்றுவிட்டு தனது ஊரான தரீமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது ரமலான் 12-ஆம் நாளில் தனது ஐம்பத்து நான்காம் அகவையில் மரணித்தார். இரண்டு நாட்கள் கழித்து தரீமில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரின் இடத்தில் பா அலவிகளின் ஆன்மிகத் தலைவராக அவரின் மகனார் அபூபக்ரு அமர்ந்தார்.1

            அப்துல்லாஹ் இப்னு அபீபக்ருல் ஐதரூஸ் அவர்கள் எழுதிய சிறு பனுவலான “சிவப்புக் கந்தகம்” என்பது ஆன்மிக வழிநடை (சுலூக்) குறித்ததாகும். இது கற்றோரைத் தனது வாசகராகப் பெற முயலும் கல்வித்துறை சார்ந்த நூலன்று. அதேசமயம், இதனை எழுதியவரைப் போல் ஆன்மிகத்தில் மேனிலை அடைந்த ஞானியருக்குப் பயன் நல்கும் மேம்பட்ட பனுவலுமன்று. ஆனால், இது ஆன்மிகப் பாதையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் சாதகருக்குப் பயனளிக்கும் நோக்கில் எழுதப்பட்ட ஒன்று.

            ஆன்மிக சாதகர்கள் அனைவருக்குமான அகநோக்கு சர்ந்த குறிப்புரைகள் நிறைந்திருப்பதால் சுருக்காமாக  இருந்தாலும் பெரிதும் பயனளிப்பதாக உள்ளது.

             சில அம்சங்களில் இந்நூல், அபுல் காசிமுல் குஷைரி எழுதிய ரிசாலா அல்லது அல்-சுஹ்ரவர்தி எழுதிய அவாரிஃபுல் ம’ஆரிஃப் ஆகிய சூஃபித்துவப் பெருநூற்களின் பயனுள்ள சுருக்கமாகப் படலாம். ஆனாலும், மேற்சொன்ன நூற்களினை இவர், குறிப்பாக அகநிலைகள் மற்றும் படித்தரங்கள் (அஹ்வால் மற்றும் மகாமாத்) தொடர்புடைய கலைச் சொற்களை விளக்குவதற்கு, எடுகோளாகக் கையாண்டிருப்பினும், ஆசிரியரின் சொந்த ஆன்மிக அனுபவமும் மெய்யறிதலும் இந்நூலின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுகின்றது.

            ஆன்மிகப் பாதை பயணிக்கப்படுகின்ற பல்வேறு வழிகளை விவரிப்பதில் தொடங்கும் இப்பனுவல், செம்மை அடைந்த ஆன்மிக குரு ஒருவரின்றி இவ்வழிகளில் எது ஒன்றுமே சாத்தியமில்லை என்று திட்டவட்டமாகச் சொல்கிறது. இந்து சூஃபிகள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு கருத்தாகும். ரட்சகனுக்கும் அடியானுக்கும் இடையிலான திரை ஆணவத்தாலும் தகாதோரின் சகவாசத்தாலும் தடிக்கிறது. ஆன்மிக குரு ஒருவரின் வழிகாட்டுதல் இன்றி அத்திரையை நீக்குதல் முடியாது. இமாம் கஸ்ஸாலி அவர்களின் ஆன்மிக வழியின் செய்முறைக்கு ஏற்ப, சூஃபி பாதை என்பது நான்கு முக்கியப் பண்புகளின் மீது அமைந்துள்ளது: குறைவாக உண்ணுதல், குறைவாகப் பேசுதல், குறைவாகத் தூங்குதல் மற்றும், மக்களை விட்டும் ஒதுங்கியிருத்தல்.

ஆன்மிக ஒழுக்கம், தனித்திருத்தல், அகநிலைகள் மற்றும் படித்தரங்கள், அல்லது வேறு ஆன்மிக அடைதல்கள் எதுவாயினும் செம்மையுற்ற ஷைகு ஒருவரின் சகவாசத்தில் ஆன்மிக சாதகன் இருந்தால் அன்றி கிட்டவே கிட்டாது என்பதை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.

மேலும், இஹ்சான் [என்னும் ஆன்மிக மேனிலைகளுள் ஒன்று] என்னும் அகநிலை மார்க்கத்தின் பிற இரண்டு தூண்களைச் சார்ந்துள்ளது : உறுதியான இறைநம்பிக்கை கொண்டிருப்பது மற்றும் இஸ்லாம் விதிக்கும் கடமைகளைப் பேணுவது.

இத்துடன், அஹ்லுஸ் ஸுன்னாஹ் என்னும் நேர்வழியினரின் கொள்கைகளை (இஃதிகாதே அஹ்லுஸ் ஸுன்னாஹ்) விளக்கி ஷைகு அப்துல்லாஹ் இப்னு அஸ்’அதுல் யாஃபிய்யி எழுதிய குறுங்கவிதை ஒன்றையும் இந்நூலாசிரியர் இணைத்துள்ளார். அல்லாஹ்வை அறிந்தோர் முன்மொழியும் இறை நம்பிக்கையின் எதார்த்தம் யாதெனில், அல்லாஹ்வை அவன் தன்னில் தானே இருக்கும் நிலையில் நாம் அறியவே இயலாது, அவன் மேலானவன் அப்பாற்பட்டவன்! என்பதே. அல்லாஹ் தன்னில் தானே அமைந்திருக்கும் நிலையில் அவனை அறிய மாட்டாத இந்த மனித இயலாமையின் முன், இறைஞானியர் தம்மால் அறியப்படக்கூடிய மற்றும் அறிய இயலாத அனைத்தையும் விட்டுவிடுகின்றனர். எனவே, அவர்கள் தம்மை விட்டே வெளியேறுகின்றனர். அவர்கள் சத்திய உள்ளமையை அன்றி வேறு எதையுமோ எவரையுமோ காண்பதில்லை.

ஆன்மிகச் சாதனைக்கு இன்றியமையாத இரண்டாம் தூணாக இருப்பது பயிற்சிகள் (அஃமால் – செயற்பாடுகள்). இறை பயபக்தி என்னும் உணர்வு இல்லாத செயல்கள் எதுவும் சரியானதாகவோ ஏற்புடையதாகவோ இருக்காது. பயபக்தி (தக்வா)விற்கு ஐந்து அந்தரங்க மற்றும் ஐந்து வெளிரங்க ஆடைகள் உள்ளன: முதலாவது உடலின் உறுப்புகள் சார்ந்தது. அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களைப் பேணுவதால் இஃது அடையப்படுகிறது. இரண்டாவது, இதயம் சார்ந்தது. அது அடைகின்ற ஆன்மிக படித்தரங்களின் தொடர்பால் அடையப்படுகிறது. மூன்றாவது உயிர் (ரூஹ்) சார்ந்தது. அவை அடையும் ஆன்மிக ருசிகளால் அது அடையப்படுகிறது. நான்காவது, ஏகத்துவத்துவத்தின் வழியாக அடையப்படும் அந்தரங்க ரகசியங்கள் (அஸ்ரார்) சார்ந்தது. ஐந்தாவது, ரகசியத்தின் ரகசியம் (சிர்ருல் அஸ்ரார்) சார்ந்தது. இதுவே அனைத்திலும் மிகப் பெரிது. இதனை அடைந்தவர் ’இறைப் பிரதிநிதி’ (ஃகலீஃபத்துல்லாஹ்) என்னும் நிலையின் ரகசியத்தை அடைந்தவராவார்.

இதனைத் தொடர்ந்து, உண்மையான சூஃபி யார் என்பதை விளக்கும் ஆசிரியர், அவர் இறைச் சட்டம், ஞானப் பாதை மற்றும் மேலான ஆன்மிக எதார்த்தம் ஆகியவற்றை ஒன்றிணைப்பவரே ஆவார் என்று சொல்கிறார். அதற்கடுத்து, தற்பழியர் (மலாமத்தி) மற்றும் அலைஞர் (கலந்தரி) ஆகியோருக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குகிறார். இவ்விடத்தில், சூஃபி நெறியினரிடம் இருந்து மறுப்புரைகள் தோன்றக்கூடும் என்று கருதி முன்னெச்சரிக்கைக் குறிப்பு ஒன்றும் தருகிறார். சக முஸ்லிம்கள் மீது நல்லெண்ணம் வைக்கும்படியும், அவர்கள் மொழியும் சொற்களைக் கொண்டோ அல்லது அவர்களின் செயல்களைக் கொண்டோ, அவற்றை உடன்பாடான முறையில் அர்த்தப்படுத்த வழியிருக்கும் வரை, அவசரப்பட்டு அவர்களைக் கண்டனம் செய்யவோ, அவர்களை நிராகரிப்பாளர் என்று தீர்ப்புரைக்கவோ வேண்டாம் என்று வலியுறுத்துகிறார்.

இந்த ஆரம்ப வார்த்தைகளுடன், “சிவப்புக் கந்தகம்” நூலின் ஆசிரியர் அடுத்தபடியாக சூஃபி நெறியினரின் ஆன்மிகப் படித்தரங்களையும் அவற்றின் பயன்களையும் விவரிக்கின்றார். பத்து அருட்பயன்களை நல்கும் பத்துப் படித்தரங்களை அவர் பட்டியலிடுகிறார்: 1) திரும்புதல் (தவ்பா), 2) பேணுதல் (வரா’ஃ), 3) பற்றறுப்பு (ஜுஹ்து), 4) பொறுமை (ஸப்ரு), 5) வறுமை (ஃபக்ரு), 6) நன்றியுணர்வு (ஷுக்ரு), 7) இறையச்சம் (ஃகவ்ஃப்), 8) இறை ஆதரவு (ரஜா’ஃ), 9) அல்லாஹ்விடம் ஒப்படைதல் (அத்-தவக்குல் அலல்லாஹ்), மற்றும் 10) திருப்தி / பொருத்தம் (அர்-ரிளா).

இந்தப் பத்துப் படித்தரங்களும் பத்துப் பயன்களைத் தருகின்றன: 1) திரும்புதல் அல்லது மீளுதல் (தவ்பா) அல்லாஹ்வின் அன்பைப் (முஹப்பத்தல்லாஹ்) பெறுகிறது; 2) பேணுதல் (வரா’ஃ) ஏக்கத்தை (அஷ்-ஷவ்க்) உண்டாக்குகிறது; 3) பற்றறுதல் (ஜுஹ்து) உள்ளத்தில் பயபக்தியை (ஃகுஷூ வ ஃகுளூ) உண்டாக்குகிறது; 4) பொறுமை (ஸப்ரு) இறை நெருக்கத்தை (உன்ஸ்) உண்டாக்குகிறது; 5) வறுமை (ஃபக்ரு) இறைவனுடன் மிக நெருக்கத்தை (குர்பு) உண்டாக்குகிறது; 6) நன்றியுணர்வு (ஷுக்ரு) வெட்கவுணர்வை (அல்-ஹயா’ஃ) உண்டாக்குகிறது; 7) வறுமை (ஃகவ்ஃப்) இறைப் பரவசத்தை (அஸ்-சுக்ரு) உண்டாக்குகிறது; 8) இறை ஆதரவு (ரஜா’ஃ) இணைவை (அல்-வஸ்லு / அல்-வஸூல்) உண்டாக்குகிறது; 9) அல்லாஹ்விடம் ஒப்படைதல் / பரஞ்சாட்டுதல் (அத்-தவக்குல் அலல்லாஹ்) சமாதி நிலையை (ஃபனா) உண்டாக்குகிறது; 10) திருப்தி / பொருத்தம் (அர்-ரிளா) இறைவனில் நிலைத்திருக்கும் நிலையை (பகா’) உண்டாக்குகிறது.

இவ்விளக்கத்தை அடுத்து, அப்துல்லாஹ் இப்னு அபீபக்ருல் ஐதரூஸ் அவர்கள் சூஃபிகளின் சொல்லாடல்களைப் புரிந்து கொள்வதற்கு இன்றியமையாத முக்கியமான கலைச் சொற்களான ஷரீஅத் (இறைச் சட்டம்), தரீக்கத் (ஆன்மிக நெறி / பாதை), மேலான ஆன்மிக எதார்த்தம் (ஹகீக்கத்), கணம் (வக்து) மற்றும் அகநிலை (ஹால்) ஆகியவற்றை விளக்குகிறார். பின்னர், நிலையான ஆன்மிகப் படித்தரங்கள் (மகாமாத்) மற்றும் தற்காலிகத் தங்கிடங்களான (அஹ்வால்) ஆகியவற்றின் வேறுபாடுகளைச் சுட்டுகிறார். அதன் பின், முக்கிய ஆன்மிக நிலைகளான ‘சுருங்குதலும் விரிவும்’ (கப்ளு வ பஸ்த்), ‘திகைப்பும் நெருக்கமும்’ (ஹைபா வ உன்ஸ்), ‘முற்பரவசமும் பரவசமும்’ (தவாஜிது வ வஜ்து), ’அடைதல்’ (அல்-வஜூது), ’சேர்தலும் பிரிதலும்’ (அல்-ஜம்’உ வல் ஃபர்க்) மற்றும் ‘சேர்தலின் சேர்வு மற்றும் இரண்டாம் பிரிதல்’ (அல்-ஜம்’உல் ஜம்’உ வல் ஃபர்க்குஸ் ஸானி), மற்றும் இன்ன பிற பற்றிய தெள்ளிய விளக்கங்களை நல்குகிறார்.

ஆன்மிகப் பயணி (அஸ்-ஸாலிக்) இந்த ஆன்மிக நிலைகள் மற்றும் படித்தரங்கள் அனைத்தையும் கடந்து போக வேண்டும். தன் செயற்பாடுகளை விட்டும் அழிக்கப்படுகின்ற சாதகன் அல்லாஹ்வின் செய்ற்பாடுகளைக் கொண்டு தரிப்படுகிறான். தன் பண்புகளை விட்டும் அழிக்கப்படுபவன் அல்லாஹ்வின் பண்புகளைக் கொண்டு தரிப்படுகிறான். தன் சுயத்தைக் கொண்டு அழிக்கப்படுபவன் அல்லாஹ்வின் சுயத்தைக் கொண்டு தரிப்படுகிறான். சாதகன் அழிவின் பிரதேசத்தை அடைகின்றபோது ஏகத்துவப் பேரொளி அவனை அனைத்துத் தட்டழிவுகளை விட்டும் காப்பாற்றி, அனைத்து தீய பண்புகள் மற்றும் அத்துமீறல்களை விட்டும் அவனைத் தூய்மையாக்குகிறது. அதன் பிறகுதான் அவன் ஆத்ம ஞானியரின் குழாத்துள் வைக்கப்படுகிறான், பேரமைதி மற்றும் ஆனந்தம் ஆகியவற்றை அடையும்வரை அவன் ஆத்ம சாதகரின் நிலைகள் அனைத்திலும் பயணிக்கின்றான்.

ஆத்ம சாதகன் உயிரின் (ரூஹ்) பிரதேசத்தை அடையும்போது அல்லாஹ்வின் அருட்கொடையாக அவன் அனாதி நிலையை அவதானிக்கின்றான். ஓ! அது எத்தகைய சிறந்த கண்ணியம்! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதைக் கொண்டு இதயத்தின் கதவு திறக்கிறது. ‘அல்லாஹ்! அல்லாஹ்!’ என்பதைக் கொண்டு உயிரின் கதவு திறக்கிறது. ஆர்மபம் மட்டுமே இருக்கிறது. இறைதியானம் (திக்ரு) இதயத்தை மிகைக்கும்போது தியானிப்போன் (தாக்கிர்) தியானிக்கப்படுவோனாகவும் (மத்கூர்), தியானிக்கப்படுவோன் (மத்கூர்) தியானிப்போனாகவும் (தாக்கிர்) மாறும் நிலை நேர்கிறது. அப்போது தியானிப்போன் தனது சுயத்தை விட்டும் ஏனைய அனைத்தை விட்டும் முற்றிலும் அழிக்கப்படுகிறான். இதுவே சிறந்தோருள் சிறந்தோரின் (ஃகாஸ்ஸுல் ஃகவாஸ்) கருத்தில் ஏகத்துவம் ஆகும். தியானமே ஆன்மிகப் பயணியரின் கட்டுச்சாதம் என்று சொல்லப்படுவது ஏன் என்பதை இது விளக்கும். அவனின் தியானம் இன்றி எவரும் அல்லாஹ்வை அடைவது இல்லை. அல்லாஹ்வின் தியானம் என்பது சொல் செயல் மற்றும் அகநிலை ஆகியவற்றால் அமைவதாகும்.

இதனைத் தொடர்ந்து, ’சிவப்புக் கந்தகம்’ நூலாசிரியர் ஆன்மிக இசை குறித்து விளக்குவதற்குச் சில பத்திகளை ஒதுக்குகிறார். முதலில், ஆன்மிக இசைக்கு மக்கள் பல்வேறு விதங்களில் எதிர்வினை ஆற்றுவதைச் சுட்டுகிறார். அவர்களின் உணர்வுகள் மற்றும் ரசனைகள் பலதரப்பட்டவையாக இருப்பதை நோக்கும்போது இது ஏற்படுவது இயல்புதான் என்கிறார். முதல் வகை இசை சட்டரீதியாக முரணுவதாகும். அதில் கேட்போர் வெறுமனே இனிய குரலை மட்டும் ரசிக்கிறார் அல்லது மகிழ்ச்சியும் குதூகலமும் அடைகிறார். இரண்டாம் வகை இசை போற்றத் தக்கதாகும். அது, இறைக் காதலால் மிகைக்கப்பட்ட ஒருவர் கேட்கும் இசையாகும். இத்தகு இதயம் இல்லாதோர் ஆன்மிக இசைக் கூட்டங்களில் கலந்து கொள்வது தடை செய்யப்பட்டதாகும். ஏனெனில், இசை அவர்களின் தீய பண்புகளைக் கிளர்த்தி விட்டு அவர்களின் குழப்பத்தையும் பாவங்களையும் அதிகமாக்கிவிடும்.

இறுதியாக, அப்துல்லாஹ் இப்னு அபீபக்ருல் ஐதரூஸ் அவர்கள் இச்சிறு மாநூலில் மேலான ஆன்மிக எதார்த்ததிற்கு உரியோரே (அஹ்லுல் ஹகீக்கத்) அல்லாஹ்வை அறிந்தோர் (ஆரிஃப்பில்லாஹ்) என்று குறிப்பிடுகிறார். அல்லாஹ், அவனின் திருநாமங்கள் மற்றும் அவனின் திருப்பண்புகள் பற்றிய பல்வகையான அறிவுகளை அவர்களே அடைந்துள்ளனர். மேலான ஆன்மிக எதார்த்தம் என்பது ரட்சக (ருபூபிய்யத்) ரகசியங்களின் ஒளிகளை தரிசிப்பதாகும் என்று அவர்கள் கருதுகின்றனர். இந்த தரிசனத்தை அடைவதற்கான வழி ஷரீஅத் என்னும் இறைச் சட்டத்தை இம்மி பிசகாமல் கடுமையாகப் பேணுவதாகும். இந்தப் பாதையில் பயணிக்கும் எவரும் மேலான ஆன்மிக எதார்த்தத்தை அடைவார்.


Tuesday, January 10, 2023

அங்கதன் ஜுஹா

 (அறபு நாட்டு மரபுக் கதை )

[ஜுஹாவின் பாத்திரம் இங்கே பொதுவான எளிய சமூகப் பகடிக்கு மட்டுமன்றி உயர் பதவிகளில் இருந்த குறிப்பிட்ட வரலாற்று ஆளுமைகளையும் பகடி செய்ய வழி கோலுகிறது.]

ஒருநாள், தைமூர்லங்1 தனது நகர ஆளுநர் நிதியில் இருந்து பெருந் தொகைகளைக் கையாடல் பண்ணி விட்டார் என்று அபாண்டமாக ஊழல் குற்றம் சுமத்தி அவரின் உடைமைகளை எல்லாம் ஜப்தி செய்ய உத்தரவிட்டான். உண்மை என்னவென்றால், அந்த ஆண்டு வானம் பொய்த்துப் போனது. மழையே பெய்யவில்லை. போதாத குறையாக புயல் வேறு வீசியது. இதனால் பயிர் பச்சைகளும் பழங்களும் பாதிக்கப்பட்டுப் பாழாகிவிட்டன. முந்தைய ஆண்டின் விளைச்சல் அமோகமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பூமி தந்த விளைச்சலை வைத்து மக்கள் உயிர் வாழ முடியுமா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. ஆளுநர் தன்னால் முடிந்த எல்லா நடவடிக்கைகளையும் செய்தார். தன் அதிகாரத்தைக் கொண்டு மக்களின் சேகரத்தில் இருந்து எவ்வளவு அதிகமாகத் திரட்ட முடியுமோ அவ்வளவு வாங்கியிருந்தார்.



ஆளுநர் தன் கணக்குப் பதிவேடுகளை நாளது வரையில் முறையாகக் கொண்டு வந்து வைத்தார் – அதையெல்லாம் தைமூர்லங் கிழித்து வீசுவதை மட்டுமே அவர் பார்க்க முடிந்தது. அப்புறம் அவன் தன் சிப்பாய்களுக்கு ஆணையிட்டு அவருக்குச் சவுக்கடி கொடுத்தான். அப்புறம், அவர் அந்த கிழிந்த தாள்களைத் தின்னும்படிச் செய்தான். அதன் பின், ஆளுநரின் சொத்துக்களை எல்லாம் தைமூர்லங் பறிமுதல் செய்தான். அவரை வெறுங்கையராக விட்டுவிட்டான்.

அப்புறம் அவன் ஜுஹாவை வரவழைத்தான். அவர் மிகவும் நேர்மையானவர் என்று பெயர் வாங்கியிருந்தார். எனவே, நகரக் கருவூலத்தின் மேற்பார்வையாளர் பதவியை அவருக்கு வழங்கினான். அந்த அப்பாவிக் கிழவன் எப்படியாவது அந்தப் பதவியில் சிக்காமல் தப்பிக்க வேண்டும் என்று சாக்குப் போக்குகள் சொன்னார். “ஐயா எனக்கு ஒடம்புக்கு ரொம்ப முடியலீங்க… நித்திய கண்டம் பூரண ஆயுசுன்னு ஓடிக்கிட்டிருக்கு. கண்ணுஞ் சரியாத் தெரிய மாட்டேங்குது, காதும் கேக்கல. நரம்புத் தளர்ச்சி… கையி கால்லாம் நடுங்குது.” ஒரு காரணமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மாதக் கடைசியில், தைமூர்லங் கணக்குப் பதிவேடுகளைக் கொண்டு வரச் சொன்னான். ஜுஹா அவற்றை மெல்லிசான ரொட்டிகளில் எழுதியிருந்தார். அவர் கொண்டு வந்து காட்டுவது என்ன என்று அவரிடம் தைமூர்லங் கேட்டான்.

ஜுஹா சொன்னார்: “ஐயா! கடசீல இது எப்பிடி முடியும்னு எனக்குத் தெரியும். இதையெல்லாம் நான் திங்கனும்னு உத்தரவு போடுவீங்க. நான் வயசாளி. எனக்கு மின்னாடி இருந்தவன் மாட்டம் நான் ஒன்னும் பேரு பெத்த ஆளோ ஓங்குன கையோ இல்ல. உண்மையச் சொல்லணும்னா, இந்த ரொட்டியக் கூட என் வவுறு செமிக்கிறது கொஞ்சம் செரமந்தான்!”



ஒருநாள், தற்போதைய ஆளுநர்2  நகரத் தெருக்களைச் சோதித்தபடி வலம் வந்துகொண்டிருந்தான். அடுமனை ஒன்றிலிருந்து காற்றில் மிதந்து வந்த கதகதப்பான நறுமணம் அவன் மூக்கைத் துளைத்து நாக்கில் எச்சில் ஊற வைத்தது. அடுமனைக்காரனை உடனே அழைத்தான். சில நிமிடங்களில் வாய்த் தகராறு ஆகிவிட்டது. அதன் முடிவில், அடுமனையில் சுட்டுக் கொண்டிருந்த வாத்தை அடுமனைக்காரன் தன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆளுநர் ஆணையிட்டான். பறவைக்கு உடைமைக்காரன் வந்து கேட்டால் சுட்ட வாத்து பறந்து போய்விட்டது என்று சொல்லுமாறு கூறினான்.

”வாத்துக்காரன் ஒத்துக்கலன்னு வைய்யி, நேரா எங்கிட்ட வந்து சொல்லு. ஒங்க ரெண்டு பேத்துக்கிடையில நான் தீர்ப்புச் சொல்றேன். அவனெ நான் பாத்துக்குறேன், நீ கவலப் படாத.”

வேறு வழியின்றி அடுமனைக்காரன் ஆளுநரிடம் மடங்கிவிட்டான். சுட்ட வாத்தை அவரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். வாத்தின் உடைமைக்காரன் வந்து வாத்தைக் கேட்டபோது, அது பறந்து விட்டது என்று அடுமனைக்காரன் சொன்னான். வாத்துக்காரனுக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. இருவருக்கும் காரசாரமான வாய்த் தகராறு. சுற்றி நின்ற மக்கள் வாத்துக்காரனையே ஆதரித்தனர். அடுமனைக்காரனைத் திருட்டுப்பயல் என்று திட்டினர். அவர்கள் தொடர்ந்து அவனை ஏசிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவன் வெறுத்துப் போய், அஞ்சி நடுங்கி, ஒரு கிறுக்கனைப் போல் ஓடிவிட்டான். ஓடும்போது அவன் கைக்கு எட்டிய முதல் மனிதனின் மூஞ்சியில் ஓங்கி ஒரு குத்துவிட்டதில் அந்த ஆளின் ஒரு பல் தெரித்து வெளியே விழுந்தது.

கும்பலின் மனநிலை தாறுமாறாகிவிட்டது. ஆனால், பேஜாரான அடுமனைக்காரன் ஒருவழியாகச் சமாளித்துக்கொண்டு பக்கத்துச் சந்து ஒன்றினுள் தாவி ஓடினான். குறுகலான அந்தச் சந்தில் தன் கணவனுடன் வரும் கர்ப்பினி ஒருத்தி எதிரில் அடைத்துக்கொண்டு நின்றாள். ஓடும் வேகத்தில் அடுமனைக்காரன் விட்ட உதையில் அவளின் கர்ப்பம் கலைந்துவிட்டது. கும்பலின் கோபம் உச்சத்தை அடைந்தது. அவர்கள் அவனைத் துரத்தினர். ஆனால் அவன் வில்லில் இருந்து விடுபட்ட கணை போல் கடுகி ஓடினான். அருகிலிருந்த ஒரு மஸ்ஜிதுக்குள் நுழைந்து அதன் ஸ்தூபியின் உச்சிக்கு ஏறிவிட்டான். 



கும்பல் இன்னமும் அவனை அரக்கப் பரக்கத் தேடிக் கொண்டிருந்தது. எனவே அவன் தன்னைத் தேடும் கும்பலில் இருந்த ஒருத்தன் மீது ஸ்தூபியின் உச்சியிலிருந்து குதித்தான். அந்த ஆள் அதே இடத்தில் செத்துப்போக அடுமனைக்காரன் பிழைத்துக்கொண்டான். கும்பலின் ஆத்திரம் எல்லை மீறியது. எனவே, அடுமனைக்காரன் ஒரு கசாப்புக்காரனின் கடைக்குள் பாய்ந்தான். அங்கே ஒரு கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு பைத்தியம் போல் பாவனை காட்டினான்.

அங்கே அருகில் ஜுஹாவின் கழுதை நின்று கொண்டிருந்தது. அடுமனைக்காரன் ஆவேசமாகக் கசாப்புக் கத்தியை வீசியபோது அது அந்தக் கழுதையின் வாலை வெட்டிவிட்டது. அடுத்து அவன் ஆளுநர் கமீஷின் வீட்டுக்கு ஓடினான். கும்பலும் அவனைத் துரத்திக்கொண்டு ஓடியது. இறுதியாக, எல்லோரும் ஆளுநரின் முன்னால் நின்றனர்.

அடுமனைக்காரனைத் தனக்குத் தெரியவே தெரியாது என்பது போல் கமீஷும் தன் பங்குக்கு பாவனை செய்தான். முகத்தில் வியப்பைக் காட்டினான். அப்புறம், நடந்த கதையை முழுசாகக் கேட்டுவிட்டு, தான் அடுமனைக்காரனின் பேச்சை நம்புவதாக எல்லோரிடமும் கூறினாரன்: ”அழியில் வைத்துச் சுட்ட பின்னர் வாத்து பறந்துவிட்டது! இது இறைவன் எல்லாம் வல்லவன் என்பதைக் காட்டுகிறது! எல்லாப் புகழும் இறைவனுக்கே!” இதைக்கேட்டு வாத்துக்காரனுக்குக் கோபம் பொத்துக்கொண்டது. ஆனால் ஆளுநர் கமீஷ், அவனே ஊரின் நீதிபதியும் ஆதலால், வாத்துக்காரன் ஒரு மதத்துரோகி என்றும் இறைவனின் ஆற்றல் மீது நம்பிக்கை இல்லாதவன் என்றும் குற்றம் சாட்டி அதற்காக அவனுக்குப் பத்து தீனார்கள் அபராதம் விதித்த்தான்.

ஆளுநர் அடுத்து இரண்டாம் வாதியின் பக்கம் திரும்பினான். அவன் அடுமனைக்காரனின் மூஞ்சியில் ஒரு குத்து விடலாம் என்றும், சரியாக அதே பல்தான் உடைபட வேண்டும் என்றும், இதில் தவறும் பட்சத்தில் அவனுக்குத் தண்டனை கிடைக்கும் என்றும் சொன்னான். நீதிபதி ஓரவஞ்சனை பண்ணுகிறான் என்று தெரிந்து கொண்ட அந்த ஆள் வழக்கைத் திருப்பிக்கொண்டான். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அவருக்குப் பத்து தீனார்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

அடுத்து மூன்றாம் வாதியின் முறை. “செத்துப் போன ஒன் அண்ணென் மேலதாம்ப்பா தப்பு,” என்றான் கமீஷ். “இவுரு குதிக்கிற நேரம் பாத்து அவுரு ஏன் மினாராவுக்குக் கீழ நடந்தாரு? இருந்தாலும் நியாயம் தர்மம்னு ஒன்னு இருக்குல்ல? அத நான் நெறவேத்தித்தான் ஆவணும். நீ என்ன பண்ற, மினாரா உச்சிக்கு ஏறிப்போய் அங்கேருந்து இந்த அடுமனைக்காரன் மேல குதிச்சு, ஒன் அண்ணென இவென் கொன்ன மாதிரி நீயும் இவனெ கொன்னுடு.” நீதிபதியின் கோட்டித்தனம் தன் உயிரைக் காவு வாங்கிவிடும் என்றும் அவனிடம் நீதி கிடைப்பதற்கு வாய்ப்பே கிடையாது என்றும் உணர்ந்துகொண்ட அவன் தன் வழக்கைத் திருப்பிக்கொண்டான். நீதிமன்றத்தின் கட்டளையைச் செயல்படுத்த மறுத்ததற்காக அவனுக்குப் பத்து தீனார்கள் அபராதம் போடப்பட்டது.

இப்போது, கர்ப்பம் கலைந்த காரிகையின் முறை. ஒருவன் வேகமாக ஓடிவரும்போது அவ்வளவு குறுகலான சந்தில் அவள் வந்ததே தவறு என்று நீதிபதி அவளைக் கண்டித்தான். என்றாலும், தவறு உண்மையில் அவளின் கணவனிடம்தான் உள்ளது. அவன்தான் அப்படிப்பட்ட குறுகலான சந்தில் அவளைக் குடி வைத்திருக்கிறான். எது எப்படி இருந்தாலும் நீதிமன்றம் தன் கடமையைச் செய்தாக வேண்டும். எனவே ஆளுநரும் நீதிபதியுமான கமீஷ் சொன்னான்: “அவளோட கர்ப்பத்த எவன் கலைச்சானோ அதுக்குப் பிராயச்சித்தமா அவனே அவள கர்ப்பமாக்கித் தரணும்!” இதைக்கேட்டு கணவனும் மனைவியும் அதிர்ச்சியாகி நின்றனர். அவள் தன் வழக்கைத் திரும்பப் பெற்றாள். நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணாக்கியதால் அவளுக்குப் பத்து தீனார்கள் அபராதம் விதிக்கப்பட்டது.



ஈவு இரக்கமற்ற ஆளுநரின் தாறுமாறான தீர்ப்புகளைப் பார்த்த ஜுஹா தான் தப்பித்தால் போதும் என்பதை மட்டும் கவனித்துத் தன் கழுதையுடன் அங்கிருந்து பறந்துவிட்டார். ஆனால், அவர் தப்பிப்பதைப் பார்த்த ஆளுநர் கமீஷ் அவரைத் தடுத்து நிறுத்தினான். இறைவன் தன் கழுதையை வாலும் மூளையும் இல்லாததாகப் படைத்திருக்கிறான் என்று ஜுஹா கூவினார். அடுமனைக்காரனால் உசுப்பேற்றப்பட்ட ஆளுநர் இதை ஏற்க மறுத்தான். அவனிடம் விவாதித்துப் பயனில்லை என்பதை அறிந்த ஜுஹா ஆளுநரைப் பார்த்துச் சொன்னார்:

“ஆளுநர் ஐயா!  அது அப்படித்தான். இறைவன் என் கழுதைய வாலும் மூளையும் இல்லாத கழுதையாத்தான் படைச்சிருக்கான். நீங்க இறைவனோட வல்லமைய மறுக்குறீங்களா? அவென் ஆற்றல்ல ஒங்களுக்குச் சந்தேகமா இருக்கா? அவனால எல்லாம் முடியுங்கறத ஏத்துக்க ஒங்களுக்குச் சிரமமா இருக்கா?”

தனது தர்க்க வாதம் தன் மீதே தூக்கி வீசப்படுவதைப் பார்த்த ஆளுநர் வாயடைத்துப் போனான். அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

 

_________________________

1.கொடுங்கோலன் தைமூர்லங் (1336-1405)-உடன் ஜுஹா இருப்பது போன்று பல கதைகள் உள்ளன. அவற்றுள் இதுவும் ஒன்று.

2. இவன் பெயர் கமீஷ். அவன் காலத்தில் நீதியும் மற்றும் சட்ட ஒழுங்கின் சீரழிவுக்கான மனித வடிவமாகத் திகழ்ந்தான். ஆனால் அவன் தந்திரசாலி. கற்பூர புத்தி உள்ளவன். பேராசையும் பகைமையுமே அவனை இயக்கின. குறுக்கு வழிகளில் காரியம் சாதிப்பதிலும், உலகிலேயே மிக முட்டாளும் அசடனும் கூட கற்பனை செய்ய முடியாத சால்ஜாப்புகளைப் புனைவதில் இவனுக்குக் கிஞ்சிற்றும் நாணமோ தயக்கமோ இருந்ததில்லை.

 

Wednesday, December 7, 2022

விசுவாசமும் மாண்பும்

 ( இஸ்லாமுக்கு முற்பட்ட அறபு நாட்டு மரபுக் கதை.)



முன்பொரு காலத்தில் அல்-நுஃமான் இப்னுல் முந்திர்1 ஒருநாள் அல்-யஹ்மூம் (கறுப்பி) என்னும் தனது புரவியில் ஆரோகணித்து வேட்டைக்குச் சென்றார். நாட்டுப்புறத்தில் குதிரை அவரை மனம் போன போக்கில் இட்டுச் சென்றது. அதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சீக்கிரமே அவர் தனது பரிவாரங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். திடீரென்று பலத்த மழை பெய்யத் தொடங்கிற்று. எனவே அவர் ஒரு வீட்டில் அடைக்கலம் தேடினார். அவ்வீட்டில் தாயி குலத்தைச் சேர்ந்த ஹந்தலா என்பவரும் அவரின் மனைவியும் இருந்தனர்.

            ”இங்கெ நான் ராத்தங்க முடியுமா?” என்று நுஃமான் கேட்டார்.

            ஹந்தலா ஒப்புக்கொண்டார். நுஃமான் குதிரையில் இருந்து கீழே இறங்க உதவினார். நுஃமான் யாரென்று ஹந்தலாவுக்குத் தெரியாது.

            ஹந்தலாவிடம் ஒரே ஒரு ஆடு மட்டுமே அப்போது இருந்தது.

            ”இவரு ரொம்பப் பெரிய மனுசனாத் தெரியிறாரு. பெரிய பதவியில இருக்குற முக்கியமான ஆளா இருக்கணும். இப்ப நாம என்னா செய்றது?” என்று அவர் தன் மனைவியிடம் கேட்டார்.

            ”நான் சேத்து வச்ச மாவு கொஞ்சம் இருக்கு. அத வச்சு நான் ரொட்டி சுடுறேன். நீங்க போயி ஆட்ட அறுங்க,” என்றாள் அவரின் மனைவி.



            அப்பெண் ரொட்டி சுட்டாள். ஹந்தலாம் முதலில் ஆட்டில் பால் கறந்து கொண்டார். அப்புறம் அதனை பலியிட்டார். பின்னர் மதீரா-க் கஞ்சி2 காய்ச்சினார். நுஃமான் உண்பதற்கு இறைச்சியும் பருகுவதற்குப் பாலும் தந்தார். அப்புறம் மீத இரவில் நுஃமானுடன் பேசுவதற்கு அமர்ந்துவிட்டார்.

            காலையில் நுஃமான் தனது அங்கிகளை அணிந்துகொண்டு குதிரையில் ஏறியமர்ந்தபோது ஹந்தலாவிடம் சொன்னார்:

            ”ஓ தாயிக் குலத் தோன்றலே! என்னிடம் சன்மானம் பெற்றுக்கொள், நான்தான் அரசன் நுஃமான்!”

            ”ஆண்டவன் நாடுறப்ப வந்து வாங்கிக்கிறேன்,” என்றார் ஹந்தலா.

            அல்-நுஃமான் தனது பரிவாரத்தைக் கண்டுபிடித்துச் சேர்ந்துவிட்டார். அவர்கள் அல்-ஹிராவுக்குத் திரும்பிப் போயினர். சில காலம் தாயி அங்கேயே இருந்தார். பின்னர் ஒரு பேரிடர் ஏற்பட்டது. கடினமாக உழைத்தும் கொடிய வறுமை பீடித்தது. கெட்ட நாட்கள் வந்துற்றதே என்று வருந்தினார்.

            ”நீங்க போயி ராசவப் பாக்கலாம்ல? அவரு ஒங்களுக்கு தாராளமாத் தருவாரே?” என்று அவரின் மனைவி சொன்னாள்.



            அவர் அல்-ஹிராவுக்கு வந்தபோது நுஃமானின் அழிவுநாளாக3 இருந்தது. தனது குதிரையாட்களுடன் நுஃமான் முழு ஆயுதங்களுடன் நின்றிருந்தார். ஹந்தலாவைக் பார்த்ததும் அவர் அடையாளம் கண்டு கொண்டார். அவருக்குப் பெரிதும் சஞ்சலம் உண்டாகிவிட்டது.

            ”எனக்கு அடைக்கலம் கொடுத்த தாயிதானே நீ?” என்று அவர் கேட்டார்.

            ”ஆமாம்” என்றார் ஹந்தலா.

            ”இன்னிக்குன்னு வந்தியேப்பா, வேற நாள்ல வந்திருக்கக் கூடாதா நீ?” என்றார் நுஃமான்.

            ”கண்ணியமிக்க அரசரே! இன்னிக்கு என்ன நாள்னு எனக்கென்னா தெரியும்?” என்றார் ஹந்தலா.



            ”இன்னிக்கு மொதல்ல கண்ணுல படுற ஆளு எம் மகென் கபூஸாவே இருந்தாலுஞ் சரிதான் அவனெ பலி கொடுக்குறதத் தவிர வேற வழியில்லெ. அதுனால, ஒனக்கு என்னா சன்மானம் வேணும்னு சொல்லு. அப்புறம் ஒனக்கு மரண தண்டனையும் விதியாயிருச்சு.”

            ”கண்ணியமான அரசே! நானே செத்துட்டப்புறம் ஒலகத்துச் சன்மானங்கள வச்சு நான் என்ன பண்ண முடியும்?”

            ”வேற வழியே கிடையாது,” என்றார் நுஃமான்.

            ”அப்படீன்னா என் தண்டனைய கொஞ்சம் ஒத்திப் போடுங்க ராசா. நான் போயி என் குடும்பத்தப் பாத்துட்டு அவுங்க காரியங்கள எல்லாம் சரி பண்ணி வச்சிட்டு, அவுங்க பொழப்புக்கு ஏற்பாடு பண்ணீட்டு திரும்பி வர்றேன்,” என்றார் ஹந்தலா.

            ”அப்ப எனக்கு ஒரு பிணை வச்சிட்டுப் போ, நீ திரும்பி வருவன்னு நான் நம்பணும்ல?” என்றார் நுஃமான்.

            அப்போது நுஃமானின் அருகில் நின்றிருந்த அவரின் கூட்டாளி ஷரீக் இப்னு அம்ரு என்பாரை நோக்கினார் ஹந்தலா. தனக்குப் பிணை நிற்கும்படி அவரிடம் கோரினார். ஆனால் ஷரீக் அதை மறுத்துவிட்டார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு குரல், “நான் அவருக்குப் பிணை இருக்கேன், மன்னரே!” என்று. சொன்னவர் கல்ப் குலத்தைச் சேர்ந்த குராதிப்னு அஜ்தா.

            அவரின் பிணையை ஏற்றுக்கொண்ட நுஃமான், தாயிக்கு ஐநூறு பெண் ஒட்டகங்கள் வழங்கப்பட ஆணையிட்டதுடன் அவர் அடுத்த ஆணல் சரியாக அதே நாளில் வந்து சேர வேண்டுமென்றும் சொன்னார். ஹந்தலா அதனை ஏற்றுக்கொண்டு தனது குடும்பத்தினரைப் பார்க்க ஊர் திரும்பினார்.

            ஓராண்டு நிறைவடைய இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருந்தது. குராதிடம் நுஃமான் சொன்னார், “நாளைக்கு நிச்சயமா ஒனக்கு சாவுதான்.”

            காலை விடிந்ததும் நுஃமான் தனது குதிரைப்படை மற்றும் காலாட்படையுடன் ஆயுந்தங்கள் ஏந்திய நிலையில் புறப்பட்டார். அல்-கரிய்யான் என்று அழைக்கப்படும் இரட்டை கோபுரங்களுக்கு நடுவில் வந்து நின்றார். அங்கேதான் அழிவு நாளில் முதன் முதலில் எதிர்ப்பட்டோர் பலியிடப்படுவர். இரட்டை கோபுரங்களுக்கு நடுவில் நுஃமான் நின்றார். தன்னுடன் குராதையும் அவர் அழைத்து வந்திருந்தார். அவரின் அமைச்சர்கள் சுதாரித்துக் கொண்டு சொன்னார்கள்: “அரசே! இன்னிக்கு நாள் இன்னும் முடியல. அதுக்கு முன்னாடி அவரக் கொல செய்ய ஒங்களுக்கு உரிம இல்லெ.” நுஃமான் அதை ஏற்றுக்கொண்டார். என்றாலும், தனக்கு அடைக்கலம் தந்தவர் தப்பிக்க வேண்டும் என்றும் பிணை ஏற்றவர் அவருக்குப் பகரமாக சாகவேண்டும் என்றும் அவர் மனம் யோசித்தது.

            சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. குராது பலி பீடத்தின் மீது விரிக்கப்பட்டிருந்த தோலின் மீது நிறுத்தப்பட்டார். அவருக்கு அருகில் தலைவெட்டி நின்றுகொண்டிருந்தான். குராதின் மனைவி இன்னொரு பக்கம் நின்று புலம்பி அழுதுகொண்டிருந்தாள். அவர்கள் அப்படி இருக்கும்போது தூரத்தில் ஓர் ஆள் வருவதை அனைவரும் பார்த்தனர்.

            உடனே மக்கள் அரசனிடம் சொன்னார்கள், “ராஜா! அந்த ஆளு இங்கெ வந்து சேர்றதுக்கு முந்தி இவர நீங்க கொல்லக்கூடாது. அவரு யாருன்னு நாம பாக்கணும்.”

            எனவே, அந்நபர் வந்து சேரும்வரை நுஃமான் தனத் தீர்ப்பைத் தாமதித்தார். அவர் வேறு யாருமல்ல, ஹந்தலாவேதான்!

            தாயிக் குலத் தோன்றல் வந்துவிட்டானே என்று நுஃமானுக்கு மனத்தாங்கல் ஆகிவிட்டது. “மொத தடவ சாவுட்டேர்ந்து தப்பிச்சுப் போனியே, இப்ப எது ஒன்னெ திரும்பி வர வச்சுது?” என்று அவரிடம் கேட்டார்.

            ”கொடுத்த வாக்குறுதிக்கு விசுவாசம்,” என்றார் ஹந்தலா.

            ”ஓ, இம்புட்டு விசுவாசமா ஒன்னெ இருக்க வக்யிறது எது?”

            ”எம் மதம்,” என்று ஹந்தலா சொன்னார்.

            ”ஒம் மதம் எது?” என்று அரசர் கேட்டார்.

            ”நஸாரா மதம்,”4 என்றார் ஹந்தலா.

            ”அதப் பத்தி எனக்குச் சொல்லு,” என்று நுஃமான் கட்டளையிட்டார்.

            ஹந்தலா அவருக்குத் தன் மதத்தைப் பற்றிச் சொன்னார். அதன் பின் நுஃமானும் அவரின் அல்-ஹிரா நாட்டு மக்களும் நஸாரா மதத்தில் இணைந்தனர். அந்த நாளிலிருந்து மனிதர்களை பலி கொடுக்கும் சடங்கு கைவிடப்பட்டது. அல்-கரிய்யான் இடித்துத் தள்ளப்படவும் அவர் ஆணையிட்டார். தாயியை அவர் மன்னித்துவிட்டு மிகவும் வியப்புடன் சொன்னார்:

            ”ஆண்டவன் மேல ஆணெ, ஒங்க ரெண்டு பேத்துல யாரோட விசுவாசம் பெரிசுன்னு எனக்குத் தெரியல. சாவுலேர்ந்து தப்பிச்சுப் போயிட்டுத் திரும்பி வந்தவனா? இல்லெ, பிணெக்காக சாவுக்கு நின்னவனா? ஆண்டவன் மேல சத்தியம், நம்ம மூணு பேர்ல நான் மட்டும் விசுவாசத்துல சளைச்சன்னு எப்பவும் இருக்க மாட்டேன்.”

____________________________

1.       அல்-நுஃமான் என்பார் இஸ்லாமிற்கு முந்தைய காலத்தில்  வட அரேபியத் துணைக்கண்டத்தில் உள்ள அல்-ஹிரா என்னும் பகுதியின் அரபு மன்னர். அவர் இஸ்லாம் அறிமுகம் ஆவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் கி.பி 616-இல் இறந்தார்.

2.       மதீரா என்பது கொதிக்கும் பாலில் இறைச்சியை இட்டு அது சமைந்து பாலும் கெட்டியாகும் வரை சமைக்கப்படும் கஞ்சி ஆகும். 

3.       அந்-நுஃமான் அப்போது பழங்குடி மன்னராக இருந்தார். அவருக்கு இரண்டு விதமான் நாட்கள் இருந்தன. ஒன்று சுக நாள். மற்றது அழிவு நாள். அழிவு நாளில் அவர் தன் பார்வையில் படும் முதல் மனிதனைக் கொன்று விடுவார்.

4.       நஸாரா – ஈசா (அலை) என்னும் இயேசு நாதரை இறைமகன் என்று சொல்லும் கிறித்துவச் சமயத்தை அறபி மொழியில் “நஸாரா” என்று குறிப்பிடுவர். கிறித்துவர்களைக் குறிக்க இச்சொல் குர்ஆனில் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது. (காண்க 2:113; 5:14; 5:18; 5:82; 9:30.) (தமிழ் மொ-ர் குறிப்பு.)


Saturday, November 12, 2022

பனூ ச’அதின் புரோகிதி

 (இஸ்லாத்திற்கு முற்பட்ட அறபு நாட்டு மரபுக்கதை)


தனக்குப் பத்து ஆண் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து தன்னைச் சுற்றிலும்  ஆளாகி நிற்பதைக் காணும் பேறு பெற்றால் இறைவனுக்காக கஃ’பாவில் அவர்களில் ஒரு மகனை பலியிடுவதாக அப்துப் முத்தலிபு1 பிரதிக்ஞை செய்தார்.

            தனது மகன்கள் அனைவரும் பத்து வயதைக் கடந்த பிறகு அவர்களிடம் சொன்னார்: ”அருமை மக்களே! நான் ஒரு நேர்ச்ச செஞ்சுக்கிட்டது ஒங்க எல்லாருக்குந் தெரியும். நீங்க என்ன சொல்றீங்க?”

            ”ஒங்க இஷ்டம்ப்பா. நாங்க எல்லாரும் ஒங்க கையில,” என்று அவர்கள் பதில் சொல்லினர்.



            ”சரி. ஒவ்வொருத்தரும் ஒங்க அம்ப எடுத்து அதுல ஒங்க பேர எழுதிக் குடுங்க,” என்றார் அப்துல் முத்தலிபு.

            அவர்களும் சொன்னபடி எழுதிக் கொடுத்தனர். பின்னர் அப்துல் முத்தலிபு அம்பெறிந்து குறி சொல்லும் அகவனை வரவழைத்தார். அவனிடம் அம்புகளைக் கொடுத்து, “பாத்து மெதுவா போடுப்பா,” என்று சொன்னார். அவரின் மனம் கலங்கியிருந்தது.

            அப்துல்லாஹ் அவருக்கு மிகவும் பிரியமான மகன். அகவன் அம்புகளை வீசினான். அப்துல்லாஹ்வின் பெயரெழுதிய கணையே வந்தது. அப்துல் முத்தலிபு தன் நேர்ச்சையை நிறைவேற்ற சித்தமானார். நன்கு கூர் தீட்டப்பட்ட கத்தி ஒன்றை எடுத்துக் கொண்டு அப்துல்லாஹ்வையும் அழைத்து வந்து கஃ’பாவுக்கு அருகில் இருந்த, குறைஷியர் வழிபட்ட தெய்வங்களான இசஃப் மற்றும் நயீலா2 ஆகிய இரண்டு சிலைகளின் நடுவில் மைந்தனைச் சாய்த்தார். அவர் அப்துல்லாஹ்வை அறுக்க முனையும்போது இன்னொரு மகனான அபூ தாலிபு3 சட்டென்று குறுக்கே பாய்ந்து தன் தந்தையின் கையைப் பிடித்து நிறுத்தினான்.

            அப்துல்லாஹ்வின் தாய்மாமன்களான அபூ மஃக்ஸூம்கள் இதனைக் கேள்விப்பட்டபோது அவர்கள் அனைவரும் கடுங்கோபத்துடன் அப்துல் முத்தலிபிடம் வந்தனர்.

            ”மச்சான், எங்க மருமவன அறுக்குறதுக்கு நாங்க விடவே மாட்டோம். இம்புட்டுப் பயலுவ இருக்காணுங்கள்ல, அவனுங்கள்ல யார வேணாலும் போய் அறுத்துப் போடுங்க. எங்க மருமவன் மேல கத்தியோட நெழலு விழுந்தாலும் நடக்குறதே வேற…”

            ”நான் நேர்ந்துக்கிட்டேன். அதுபடி அப்துல்லாஹ்வோட பேருதான் வந்திருக்கு. அவன பலி கொடுத்துத்தான் ஆவணும்,” என்று அப்துல் முத்தலிபும் கத்தினார்.

            ”நடக்காது மச்சான். நாங்க உசிரோட இருக்குற வரய்க்கும் இது நடக்கவே நடக்காது! அவனக் காப்பாத்த எங்க சொத்து சொகம் உசிரு எல்லாத்தையும் எழக்கத் தயாரா இருக்கோம்.”

            அப்போது அங்கே குறைஷிக் குலத் தலைவர் வந்து அப்துல் முத்தலிபுடன் ஆலோசித்தார்:

            ”இப்பிடிக் கொடுமையான நேர்ச்ச பண்ணி வச்சிருக்கியேய்யா. ஒம் புள்ளைய அறுத்துப்புட்டு அப்புறம் நீ என்னன்னு நிம்மதியா வாழ முடியும்? பொறுமையா இரு. ச’அது கொலத்துக்கு ஒரு புரோகிதி இருக்காள்ல, அவளப் போயி பாப்போம். அவ என்னா சொல்றாளோ அப்படிச் செய்யி.”

            ”சரி, இதுக்கு நான் ஒத்துக்குறேன்,” என்றார் அப்துல் முத்தலிபு.

            எனவே அவர் பனூ மஃக்ஸூம்களுடன் அந்தப் புரோகிதியைப் பார்ப்பதற்காக திமிஷ்க் (டமஸ்கஸ்) பட்டினத்துக்குப் போனார். தன் மகனைப் பலி கொடுப்பதற்கான தனது நேர்ச்சையை அவர் சொன்னவுடன் அந்தப் புரோகிதி சன்னதத்துடன் கத்தினாள்: ”போங்க இங்கெ இருந்து இப்ப…” எனவே எல்லோரும் உடனே அங்கிருந்து நீங்கி விட்டனர்.



            மறு நாள் காலை திரும்பி வந்தனர். “ஒங்க கொலத்துல பலியாகுற ஒரு தலய்க்கு எம்புட்டுப் பணம்?” என்று அவள் கேட்டாள்.

            ”பத்து ஒட்டகம்,” என்றார்கள்.

            ”ஊருக்குப் போங்க. நேர்ச்ச பண்ணுன பையன முன்னாடி கொண்டு நிறுத்துங்க. அப்புறம் பத்து ஒட்டகத்த கொண்டு வாங்க. அப்புறம் அவன் பேர்லயும் அந்தப் பத்து ஒட்டகங்க பேர்லயும் அம்பு போட்டுப் பாருங்க. ஒட்டகத்தோட அம்பு வந்துச்சின்னா அதுகள பலி குடுங்க; ஒங்க பையனோட அம்பு வந்துச்சின்னா இன்னும் பத்து ஒட்டகங்கள சேத்து மறுக்காவும் அம்பு போட்டுப் பாருங்க. ஒட்டகத்தோட அம்பு வர்ற வரய்க்கும் பத்து பத்து ஒட்டகம் சேத்து மறுக்கா மறுக்கா அம்பு போட்டுப் பாக்கணும். எம்புட்டு ஒட்டகங்களுக்கு அம்பு வருதோ அதுதான் ஆண்டவன் பையனுக்குப் பகரமாக் கேக்குற தலப்பணம்.”

            அவள் சொன்னபடி குழு மக்காவுக்குத் திரும்பிற்று. அப்துல் முத்தலிபிடம் அவர்கள் சொல்லினர்:

            ”இபுறாஹீம்ட்ட இதுக்கு ஒரு நல்ல உதாரணம் இருக்குப் பாத்துக்க. அவரும் தன் மவன, அதான் இஸ்மாயில, பலி கொடுக்கப் பாத்தாரு. நீங்க இஸ்மாயிலோட வம்சத்துக்கு இப்பத் தலைவரா இருக்கீங்க. அதுனால ஒங்க மவனுக்குப் பகரமா எம்புட்டுப் பணம்னாலும் குடுத்துருங்க.”

            அடுத்த நாள் அதிகாலையில் அப்துல் முத்தலிபு தன் செல்ல மகன் அப்துல்லாஹ்வையும் பத்து ஒட்டகங்களையும் கொண்டு வந்து நிறுத்தினார். அப்புறம் அகவனை அழைத்துச் சொன்னார்: “யோவ் அகவா! நிதானமாப் போட்டுப் பாரு. அவசரப்படாத, என்ன?”



            அகவன் அம்புகளை வீசினான். அதிலிருந்து சாஸ்த்திரப்படி ஓர் அம்பினை எடுத்தான். பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினான். அதில் அப்துல்ல்லாஹ் என்னும் செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரியக் கண்டான். “ஐயா, சின்ன எசமான் பேருதாங்க வந்திருக்கு…” என்று கலங்கிச் சொன்னான்.

            அப்துல் முத்தலிபு மேலும் பத்து ஒட்டகங்களை சேர்த்து இருபது ஆக்கினார். மீண்டும் பகழி எறிந்து பார்த்தபோது அப்துல்லாஹ்வின் பெயரே வந்தது. ஒட்டகங்கள் முப்பது ஆனது. அப்புறம் நாற்பது, ஐம்பது, அறுபது… ஒவ்வொரு முறையும் அப்துல்லாஹ்வின் பெயரே தேர்வானது. அப்படியாக நூறு ஒட்டகங்கள் ஆகிவிட்டது. அப்போது அம்பு எறிந்து பார்த்தபோது ஒட்டகங்களின் அம்பு வந்து சேர்ந்தது.


            
”அல்லாஹு அக்பர்!” (இறைவன் பெரியோன்) என்று அப்துல் முத்தலிபு முழங்கினார். குறைஷிக் குலத்தாரும் முழங்கினர். “ஒங்க ஆண்டவன் திருப்தி ஆயிட்டான். ஒங்க புள்ளையும் தப்பிச்சிட்டான்,” என்று அவரிடம் அவர்கள் கூறினர்.

            ”இல்ல, இல்ல,” என்று மறுத்தார் அப்துல் முத்தலிபு. “இத மூனு தடவ செஞ்சுப் பாக்கணும். அப்பத்தான் உறுதிப்படுத்த முடியும். அவசரப் படாதீங்க.”

            எனவே இரண்டாம் முறையும் அப்படிச் சோதிக்கப் பட்டபோது. ஒட்டக அம்பே வந்தது. மூன்றாம் முறையும் சோதித்துப் பார்த்தபோது வந்த அம்பு ஒட்டகத்தையே பலி கொடுக்கச் சொன்னது. எனவே அப்துல் முத்தலிபுக்கு இப்போது இறைவனின் ஏற்பு உறுதிப்பட்டது. தன் மகனை இறைவன் இரட்சித்துவிட்டான் என்று தெரிந்துகொண்டார்.

            அப்துல் முத்தலிபு தன்னிடம் இருந்த சிறந்த இனத்தைச் சேர்ந்த நூறு ஒட்டகங்களை அங்கே பலியிட்டார். பிறகு, அவற்றின் இறைச்சியை விரும்புவோர் எடுத்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டு அங்கிருந்து நீங்கி, இறைவன் தன் மகனைத் தனக்கு உயிருடன் வழங்கிவிட்டான் என்ற உவகையுடன் வீட்டுக்குத் திரும்பினார்.

_______________________

1.       அப்துல் முத்தலிப் அவர்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தந்தைவழிப் பாட்டனார். நபிகள் நாயகத்தின் தந்தையான அப்துல்லாஹ் அவர்கள் மரித்த பின்னர் நபியை மிகப் பாசத்துடன் சில ஆண்டுகள் வளர்த்தவர் இவரே. அப்துல்லாஹ் அவர்கள் நபி (ஸல்) தாயின் கருவில் இருக்கும்போதே இறப்பெய்தினார்.

2.       இஃது, கஃ’பாவுக்கு அருகில் அஸ்-சஃபா மற்றும் மர்வா ஆகிய குன்றுகளுக்கு இடையில் பலிகள் நடத்தப்படும் இடத்திலாகும்.

3.       அபூ தாலிபு அவர்கள் அப்துல்லாஹ்வின் உடன் பிறந்த சகோதரர் (அதாவது, இருவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். ஏனையோர் மாற்றாந்தாய் மக்கள்.) நபி (ஸல்) அவர்களின் சின்னத்தாவான இவரே அப்துல் முத்தலிபின் மறைவுக்குப் பின்னர் நபிகள் நாயகத்தை வளர்க்கும் பொறுப்பினை ஏற்று அவர்களைப் பாதுகாத்தார். நபி (ஸல்) அவர்களின் பிரியமான மகளான ஃபாத்திமா (ரலி) அவர்களை மணந்தவரும், இஸ்லாமிய அரசின் நான்காம் ஆளுநருமான (கலீஃபா – ஆட்சிக்காலம் 35 ஹி / 656 பொ.ஆ – 40 ஹி / 66 பொ.ஆ) அலீ (ரலி) அவர்கள் அபூ தாலிபின் மகனாவார்.

d

            இக்கதை, மஹ்மூது ஷுக்ரியுல் அலூசி எழுதிய ‘புலூகுல் அரப் ஃபீ மஃரிஃபத்து அஹ்வாலுல் ‘அறப்’ (அறபியரின் வாழ்வியலை அறிதலில் இலக்கை எட்டுதல்) என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இஃது, கிஸாஸுல் அறப் (அறபியரின் கதைகள்) என்னும் நூலின் ஒன்றாம் பாகத்தில் உள்ளது.