Monday, August 28, 2017

கால காலமாய்...

Related image


இறைவன் சொன்னான்
’நானே காலம்’

எல்லாம் காலத்தில் இருக்கின்றன
எல்லாம் அவனில் இருக்கின்றன

இடமென்பது வந்ததெல்லாம்
காலத்தை அவதானிக்கத்தான்

இங்கிருந்து அங்கே
அங்கிருந்து இங்கே
இத்தனை இத்தனை நேரம் என்று
கணக்கிட்டுப் பார்த்துக்கொள்வதற்கே

ஒரு விண்மீனுக்கும் இன்னொன்றுக்கும்
எவ்வளவு தொலைவு?

சேணெடுந்தொலைவுகள் அளக்கப்படுகின்றன
ஒளி காணும் யாத்திரையின்
காலம் என்னும் கணக்கில்தான் அல்லவா?

இடத்தில் இருக்கின்றன எல்லாம்
காலத்தில் இருக்கின்றது இடம்

அசையாத ஏக காலத்தில்
அசைகின்றன எல்லாம்

இடத்தில் பொருள் கொள்ளும் அசைவோ
நேரிய தொடர்க் கணங்கள் காணும்

காலமென இருக்கும் ஏகனே
அசைக்கின்றான் உள்ளன எல்லாம்

ஒரு கணத்திலிருந்து அடுத்ததற்கு
ஒரு நிமிடத்திலிருந்து அடுத்ததற்கு
ஒரு நாளிலிருந்து அடுத்ததற்கு
ஒரு வாரத்திலிருந்து அடுத்ததற்கு
ஒரு மாதத்திலிருந்து அடுத்ததற்கு
ஓர் ஆண்டிலிருந்து அடுத்ததற்கு
அத்தன்மைத்தே ஆகின்றது
ஒரு வாழ்விலிருந்து அடுத்ததற்கு

அவரவர் வாழ்வுதான்
காலத்தின் அளவையோ?

ஈசலால் அவதானிக்கக் கூடுமோ
நேற்றென்பதும் நாளை என்பதும்?

நாளறிவிக்கும் சேவலுக்கும் தோன்றுமோ
பத்தாண்டுகள் என்னும் திட்டமெதுவும்?

தொங்கித் தவமியற்றும் வவ்வால்
அறியுமோ காலத்தைத் தலைகீழாய்?

காலப் புனலில்
உயிர்தான் படகோ?

குளம் ஓடை ஏரி நதி
குறுங்கடல் பெருங்கடல்
ஏதாக இருப்பினும் என்ன?
எதில் மிதந்த போதும்
படகு தொடுவதெல்லாம்
அதனளவு மட்டுமே அல்லவா?

கடலினைத் தன்னுள் அள்ளிக்கொள்ளும்
கப்பலெனச் செய்க உன்னறிவை!

ஆழியை
நாழி முகக்கும்
வித்தை பயில்!

ஒவ்வொரு பொருளும்
கண்ணில் தெரியும்
காலச் சுவடு

கிளைகளில் பசுந்தளிர்
ஓரிரு நாட்கள்

பாலுண் குழவி
ஒரு சில மாதம்

என் இல்லக் கூடு
ஆனது ஈராண்டு

என் மகனின் பிராயம்
பன்னீராட்டை

ஆடியில் என் பிம்பம்
நாற்பதின் நிறைவு

முச்சந்திப் பெருமரம்
முக்கால் நூற்றாண்டு

இருவிழி நிறையும்
இரவின் வான்வெளி
எத்தனை யுகங்கள்?

கடலின் ஒரு துளி
காட்டும் கடல் சுவை

காலமென நின்றானைச்
சுவைத்தல் கூடும்
காலமெலாம் உட்குவிந்த
’இக்கணம்’ ஒன்றில்


நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 5

Image result for body of flowers


1:34-35 இன்னமும் வளர்கிறது
       என் உடலுக்கு உள்ளிலும் வெளியிலும் பூக்களின் மருங்கில் தூய குளிரோடைகளைக் காண்கிறேன். நான் இறந்த பின் எனது பிணம் அவற்றிடமும் அவற்றைச் சுற்றிய மென் காற்றிடமும் மீண்டுவிடும். நமது ஆன்ம விதைகள் மறைவிலிருந்து வருகின்றன. நாம் இங்கே, இன்னமும் வளர்கிறோம். நாம் தேய்ந்து விதையிடம் செல்கிறோம். நாம் சாகிறோம். காணாத நிலத்தில் புதிய விதைகள் புதைகின்றன, நீரின் அருகில் தம் தனித்த வம்சத்தை வளர்ப்பதற்காக. இறைவன் இத்தொடர்ச்சியை அருள்கிறான்.
      நமக்கு மிகவும் நெருக்கமானவர்களில்கூட நமக்கு எதிரிகள் இருக்கலாம் என்று குர்ஆன் எச்சரிக்கின்றது (64:14). மிகவும் கவனமாயிருங்கள். நீங்கள் மன்னித்து, அவமதிப்புக்களைப் பொருட்படுத்தாதபோது, கருணை கோபத்தைக் கரைத்துவிடுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1:42 மன்னிப்பும் தூண்டலும்
      குறிப்பான பாவம் ஒன்று மன்னிக்கப்பட்டுவிட்டதா என்று அறிய, அதனைச் செய்வதற்கான தூண்டல் உள்ளுக்குள் இருக்கிறதா என்று கவனித்துப் பார். அப்படி இருந்தால், அது மன்னிக்கப்படவில்லை. அந்தத் தூண்டல் நீக்கப்பட வேண்டும் என்று கேட்டிரு.


Image result for loaves at table painting
Loaves and Fruit on a Table - Pablo Picasso.

1:49-50 மேஜையில் ரொட்டிகள்
      வேறு எதன் மீதும் கருணையே இல்லாத ஒருவனுக்குத் தன் மீதும் இரக்கமே இருக்காது. அன்னியன் ஒருவனுக்கு நீ கடுமையான அநீதம் செய்தால், அதையே அல்லது அதனினும் மோசமானதை உனக்கே நீ செய்துகொள்வாய். மறதியான ஒவ்வொரு மோச காரியமும் திரும்பி வரும். நிஜமாகவே உன்னால் தாங்க முடியாத பெருஞ்சுமை ஒன்று உன் மீது இருப்பதைக் காண்பாய். நீ போதிய வலிமை உள்ளவன் அல்லன். ஆனந்தமோ அர்த்தமோ இல்லாது அலைந்திருப்பதான சாபம் பல வருடஙகள் உன்னுடன் வரும், உனது முதல் அடைக்கலமான கொட்டிலணைக்கு நீ வந்து சேரும் வரை.
      அலைந்து திரிந்த குதிரை ஒன்று கடைசியில் சிங்கங்கள் இருக்கும் குகைக்குள் வந்து சேர்ந்தது. நீ காமம் கலை மற்றும் செல்வத்தின் மீதான உனது ஆசைக்குள் ஆழமாக நுழைகின்றாய். உனது வாழ்க்கையே வெறுமையாகிவிடும் நேரம் ஒன்று வரும் (காண்க:76:1). ஆனால். மனிதர்கள் அக்கறை காட்டப்படாத நேரம் எப்போதாவது இருந்திருக்கிறதா என்ன? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நமக்கு அடையாளமே இல்லை. எனினும் இந்த அற்புதத் தருணத்திற்கு, இந்தப் பிரகாசமான பிரக்ஞையான ஆயுளுக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். அறியவும் பின்னர் இருக்கவும் நமக்கு இத்தகைய நிம்மதியின்மையைத் தந்தது யார்?
      கருவறை என்னும் அடுப்பில் நீயொரு பச்சை மாவாக இருந்தாய், உலகின் நெடிய விருந்து மேசைக்கு இன்னமும் வெந்துகொண்டிருப்பவனாக. அச்செயல்முறையைப் பற்றிய அறிவே நினக்குக் கிடையாது. இந்த நறுமணமான தாராளமான தருணத்திற்கு உன்னைக் கொண்டு வந்திருக்கும் திறன்களைப் பற்றி நீ ஒன்றுமே அறியாய். சமையற்காரரைப் பற்றி ரொட்டி மாவு ஒன்றுமே அறிவதில்லை, மேசையில் அமர்கின்ற விருந்தினரைப் பற்றியும்தான்.
      உனக்கிருக்கும் கண்ணோட்டத்தை நீ வழங்கப்பட்டிருக்கிறாய். அர்ப்பணம் ஆக வேண்டும் என்னும் நாட்டமும். அது ஏதோ அடங்கிக் கிடப்பதன்று. ஆனால் அது புகழ்ச்சியுடன் வழிபடுதலாகும். கற்கள் அல்லது உலோகத்துண்டுகள் போன்ற உயிரற்ற பொருட்கள் பார்க்காது என்பதைப் போன்ற வரையறுத்த தெளிவான இந்த நியதிகளெல்லாம் நாம் ஒப்புக்கொள்ள வேண்டியவையே. உன் உயிருடனும் உயிரில் வாழும் ஜீவன்களுடனும் நீ அப்படித்தான் இருக்கிறாய். நீ அவற்றைக் காணவியலாது அல்லது அவற்றின் சூழல்களையும் நோக்கங்களையும் நீ அறியவியலாது.
      நாம் அறிபவை மிகச் சொற்பமே. அடைவதற்கு நமக்குத் தகுதியே இல்லாத அன்பளிப்புக்கள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. நாம் புழுதியிலிருந்து எழுகிறோம், குறுகிய கஷ்ட ஜீவனம் செய்து வென்ற பின் மீண்டும் புழுதிக்குள் மறைகிறோம். இதில், இறைவனின் நீதியை அல்லது பொது எதார்த்தத்தை அல்லது ஆழ்ந்த கருணையைக் கேள்வி கேட்பது என்பது கடைந்தெடுத்த முட்டாள்தனமும், இழிந்த சாத்தானிய அராஜகமும் ஆகும். கண்ணியமின்மை அல்லது தாழ்ச்சி அல்லது இன்னும், முட்டாள்தனமான பேரிடர் என்று நீ உணர்வது எதுவெனினும் புகழ்ந்து போற்று. தெய்வீக இருப்பு என்பது நமது தவறான புரிதல்கள் அனைத்தைவிட்டும் மேலானதொரு அறிதல் என்றும் அந்த அறிதல் அனைத்தையும் ரட்சிக்கிறது என்றும் நீ புகழ்வாயாக. 

Image result for dark night painting
1:52-53 இரவுக் காவல்
      இருள் நாம் உறங்குதற்கொரு இரவாடையாகத் தரப்பட்டுள்ளது (காண்க:25:47). குருதி மற்றும் சதைக்காக நீர் மற்றும் மண்ணிலிருந்து, எலும்புக்கூட்டின் உருவாக்கத்திற்காகத் தணலில் வதக்கப்படும் நெய்ப்புப் பிசின்கள் கொண்டும் மனிதன் எவ்வாறு உருவாக்கப்படுகிறான் என்பதை நினைவு செய். பின்னர் தெய்வீக ஒளியான ஆன்மா, மனித உருவங்களுக்குள் ஊதப்பட்டது. இப்போதைய வேலை நமது தேகங்கள் தூய ஒளியாக மாற்றம் அடைவதற்கே. இது நிகழ்வதில்லை என்பது போல் தோன்றலாம். ஆனால் ஒரு புழுக்கூட்டினுள் புழுக்கரைந்த குழம்பின் துகள் ஒவ்வொன்றும் பட்டாகின்றது. நாம் ஒளியை உட்கொள்ளும்போது நமது ஒவ்வொரு பாகமும் பட்டாகின்றது.
      இரவை நாமோர் இருளாக்கினோம். எனினும் அதிலிருந்து நாம் ஒளிரும் விடியலைக் கொண்டுவருகிறோம். அவ்வாறே, நினது மண்ணறை மேடு மறுவுயிர்ப்புக் கொண்டு மலரும். சூஃபிகளும் இதயத்தின் பாதையில் அவர்களுடன் உள்ளோரும், உள்ளே செல்வதற்கு இருளைப் பயன்படுத்துகின்றனர். இரவுக் காவலின் விழிப்பில் பிரபஞ்சம் முழுவதும் அவர்களுடையது (காண்க:40:16). சிற்றரசரகள் அரசர்கள் மற்றும் அவர்களின் கற்றறிந்த அமைச்சர்கள் அனைவரும் ஆழ்ந்து உறங்கும்போது, ஒவ்வொருவரும் வேலை இழந்தோரே, தெய்வீக இருப்பும் அதனுடன் விழித்திருக்கும் சிலரையும் தவிர.
1:62-63 தோட்டத்தின் கீழே
      யாரொ கேட்டார்கள், ஏன் அத்தகைய துன்பங்களும் பேரிடர்களும் இறைவனின் நண்பர்களுக்கும் இறைத்தூதர்களுக்கும் நேர்கின்றன என்று. நான் சொன்னேன், துயரம் இதயத்தைத் திறக்கின்றது. அது  ஒரு நல்ல விஷயம்தான். வலியும் சிரமங்களும் மழைக்கால மின்முகில்கள். மேலே கருமை, கீழே பூக்களும் புன்னகையும். கண்ணுக்குத் தெரியும் இவ்வுலகம் உடலை வருத்தும் துயர்களின் வீடு. ஆனால் இங்கே ஆன்மா மேலும் உயிர்ப்படைகின்றது.
      இழந்த சமூகம் துக்கிக்கின்றது. பிறகு உடலைத் தேற்ற வழி தேடுகின்றது. அவர்கள், அவர்களது தலைகீழ்ப் பார்வையின் சோகத்தை வாழ்கிறார்கள். ஒரு தர்வேஷ் (சூஃபித் துறவி) இதயத்தின் பூமிக்குள் எப்படி மறைந்துறைகிறார் என்பதைப் பார், மதில்களே இல்லை என்னுமாறு இடிந்துகொண்டிருக்கும் மதிற்சிதலங்களில்கூட மண்டிச் செழிக்கும் தனது ரோஜா வனத்தினடியில் மட்டற்ற மகிழ்ச்சியுடன். அது சமயம், இதயத்தின் வெளியே வசிப்போர் தமது உடைமைக் குறிப்பான்களைச் செம்மையான கட்டுமானத்துடன் பளபளப்பதாக மிகவும் கூர்மையாகவும் துல்லியமாகவும் ஆக்கி வைக்கிறார்கள். ஆனால் அவற்றினுள்ளே மலர்கள் நறுங்கியும் வெளிறியும் உள்ளன.
      பக்திக்கு இரண்டு சிறகுகள் உள்ளன. ஒவ்வொரு சிறகிலும் பல இறகுகள். ஐவேளை தொழுகையில் ஆனந்தம் என்பது ஒரு சிறகு. இன்னொன்று நோன்பில். தனது குடும்பத்தைக் கவனிப்பதிலும் பிற கடமைகளிலும் ஒரு பதின்பாகம். மற்றொரு சிறகில் வலிமைக்கான இறகுகள் இருக்கின்றன. ஒன்று, தவறான சகவாசத்தை நீக்குதற்கான மனவுறுதி. இன்னொன்று, பாதகஞ் செய்வாரைத் துரத்தியடித்து பாதிப்பிலிருந்து சமூகத்தைக் காப்பதற்கான தீர்மானம்.

 Related image
1:64-65 காத்திருப்பு
      ”நிச்சயமாக நாம் உமக்குத் தெளிவான வெற்றியைத் திறந்தளித்தோம்” (48:1). கற்பாறை உடைந்து திறந்து இனிய நன்னீர் பாய்ந்தோடுகிறது. மனத்தாங்கல் கொண்ட ஒருவர் ஆழ்ந்த அன்புடன் நோக்கும்போது, பொறி மேல் பொறி பற்றிப் பெருந்தீ மூள்கிறது. மூடிய கரிய களிமண்ணிலிருந்து நம்மை போஷிக்கும் பசிய முளைகள் வருகின்றன. உன்னிலிருந்தொரு வனம் வளர்க்கிறோம் நாம். உன்னைச் சோகமாக்கும் எதனைக் கண்டாய் நீ?
      ”பேரிறைவன் அன்றி வேறிறைவன் இல்லை” (2:255). அதாவது ஏகம். அதனுள் திறந்துகொள். ஆசைப்படுவதையும் ஜாக்கிரதையாகக் கணக்கிடுவதையும் வழித்தெறி. நீ மிகவும் அஞ்சுவது ஏற்கனவே நடந்துவிட்டது. உனது பாத்திரம் ஏற்கனவே உடைந்துவிட்டது.
      யாரோ ஒருவர் ரொட்டி தந்துவிட்டு அதைப் பறித்துக்கொண்டால் என்ன? அப்பா சில நேரங்களில் தனது பிள்ளைகளிடம் தங்கத்தையும் வெள்ளியையும் காண்பிக்கின்றார். பிறகு காசுகளை அப்பால் மறைத்துவிடுகிறார். அவர்கள் தமக்கு இப்போதே அன்பளிப்புக்களை வேட்கிறார்கள். ஆனால் அப்பா அவற்றை அவர்களின் திருமணங்களுக்காகச் சேமித்து வைக்கிறார். அவர் அவற்றை இப்போதே அவர்களிடம் தந்தால் அவற்றை அவர்கள் வீணடிப்பார்கள். பிறகு  வெட்கப்படுவார்கள். நாம் கூடாரங்கள் கட்டும் வலிய துணிகளை இறைவன் பருத்திக் கொட்டையினுள் மறைத்து வைக்கிறான். புழுக்கூடுகளுக்குள் காத்திருக்கிறது மென் பட்டு. திறனற்ற கற்றுக்குட்டித் திருடர்கள் அவற்றை (பருத்திக் கொட்டைகள் மற்றும் புழுக்கூடுகளை)த் திருடுவார்கள் எனில் அவற்றின் மதிப்பை ஒருபோதும் அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள்.

 Related image
1:66 துரு
”அல்லாஹ் அவர்களின் இதயங்கள் மீதும் செவிப்புலன்களின் மீதும் முத்திரை இட்டுவிட்டான்” (2:7). முத்திரை இடப்படுதல் என்பதொரு மூடிய நிலை, கண்ணாடி துருப் பிடிப்பது போல. நீயொரு கண்ணாடியை வாங்கினால் அவ்வரக்குப் பாசி அதன் பரப்பில் படர்ந்து அதனைப் பிரதிபலிக்க விடாது.
      நீ உனது இதயக் கண்ணாடியை உலகின் குப்பை மேட்டில் வீசிவிட்டாய். நெடுங்காலம் அதனை அங்கே வானிலை தாக்கும்படி விட்டுவிட்டாய். ஒரு காலத்தில் அது பிரதிபலித்திருந்த நித்யத்தின் படிமங்கள் இப்போது தொலைந்து போய்விட்டன.
      சோம்பலும் புறக்கணிப்பும் கொண்டதால், தன்னைச் சுற்றியிருக்கும் அழகினைப் பிரதிபலிக்கும் ஆற்றலை இதயம் இழந்து விடுகிறது. நாம் செய்வன மற்றும் செய்யாதிருப்பன ஆகியவற்றின் பின்விளைகள் மெல்ல மெல்லத் திரண்டு வருகின்றன. 

Related image
1:82-83 தோட்ட வேலையும் நட்பின்பால் அக்கறையும்
      கோணல் புத்தி கொண்ட ஃபக்ருத்தீன் ராஜிக்கும் அரசர் குவாரசம்ஷாவுக்கும் ஆனந்தமற்ற தத்துவவாதிகளான ஏனைய சிலருக்கும் நான் சொல்லியிருக்கிறேன், உங்கள் வழியில் நீங்கள் பூக்களின் அழகையும் பேரமைதியையும் முதுகுக்குப் பின்னே விட்டுவிட்டு நீங்கல் நேராக இருளுக்குள் நடக்கிறீர்கள். புகைகளுக்கும் ஆவிகளுக்கும் பகரமாக நீங்கள் தெளிந்த அற்புதங்களைப் புறக்கணிக்கின்றீர்கள். உமது தன்முனைப்பின் பொய்யான சுயம் உமது முடிவுகளை எடுக்கிறது. நீங்கள் குழம்பிப்போய் அடைப்பட்டுக் கிடக்கிறீர்கள், ஆனால், இப்பருவுலகம் ஆன்மாவிற்கான கதவு என்பதை ஞானம் அறியும். குறிப்பிட்ட செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. மேலும், நட்பின்பால் அக்கறையான கவனம் செலுத்தப்பட வேண்டும்.
      முட்களும் விஷச் செடிகளும் காட்டுத்தனமாகச் செழிக்கின்ற, ஆனால் கனி மரங்களும் ரோஜாக்களும் காய்கறிகளும் வளர்வதற்கு கவனிப்புத் தேவைப்படுகின்ற உலகமொன்றில் இருக்கின்றோம் நாம். அந்தத் தளராத சிரத்தை கொண்ட தோட்ட வேலையே ஒழுக்கம். ஃபக்ருத்தீனும் குவாரசம்ஷாவும் ஒப்ப மறுக்கின்றனர். ”கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதைகுழிகளிலிருந்து வெளிவரும் வெட்டுக்கிளிகளைப் போல்” (54:7) இருக்கின்றார்கள். பயிரை வளர விடாது தின்றழிக்கின்றார்கள். நானோ, முண்டமும் கைகால்களும் முகமும் ஆன இப்போர்வையால், முஹம்மதைப் போல் போர்த்திக்கொள்கிறேன் (காண்க:74:1). அது, நானறியாத இலக்கொன்றினை நோக்கி நான் வளர்ந்து வருகின்ற, இந்த காரண காரிய இருத்தலின் அற்புதமான போர்வையாகும். மறுமையை நான் சென்றடைய இங்கே இம்மையில் நான் முழுமையாக வாழ்ந்தாக வேண்டும்.

1:89 தொங்கல்
      அண்மையில் இந்தியாவிலிருந்து வந்திருந்த ஒருவரிடம் கேட்கப்பட்டது, “பஹாவுத்தீனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”
      தனது பேச்சின் ஓட்டத்தில் தானே பெரிதும் திளைக்கின்ற அவர் சொன்னார், “வானில் தொங்கியபடி இருக்கிறார். அவரிலிருந்து ஒளிக்கதிர்கள் பீறிடுகின்றன.”
      ”அவரின் உரைகளைக் கேட்கும் எங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
      ”அவரது பாதங்களைச் சுற்றிக் கொத்தித் திரியும் கோழிகள்.”
      எனது இறைக்காதல் எனது உடலுக்கும் உவகை ஊட்டுவது உண்மைதான். காம இச்சை எனது கை கால்களையும் அங்கங்களையும் மேலும் உயிரூட்டம் கொள்ளச் செய்வதில் நான் அதே வகையில் ஒளியேற்றப்படுகிறேன்.

Related image
Shaykh Abdul Karim al-Kibrisi (rah).
 
1:92 சுயத்தின் வழிகள்
      பற்பல வழிகளில் நாம் இப்படி உயிருடன் இருப்பதன் இயல்பை இப்போது நான் அவதானிப்பேன். வாழும் உதாரணம் ஒன்றில்தான் சுயம் அறியப்பட முடியும். சுயம் தனது பண்புகளுடன் பிரகாசிக்கும் போது மக்கள் அவ்வப்போது வடிவத்தால் திகைப்படைகிறார்கள். இங்கே நான் சொல்வது உடல்நலம் பற்றிய உணர்ச்சிகளையோ அல்லது நோய் தரும் உணர்ச்சிகளையோ அல்ல. பசுமையுலகு, புதிய நட்புக்கள், கண்டறிதல்கள், சூழ்நிலைகள், நீருணர்வு, மனித உடலிலும் அதன் கற்பனைகளிலும் நாம் கொள்ளும் திளைப்பு, இவையே சுயம் செழிக்கும் களங்கள். எவரொருவரின் இருப்பையும் நாம் எப்படி அறிகிறோம், மக்களின் வாழ்வுகள் எப்படி உடலில் பதிகின்றன, ஆன்மா எப்படித் தனது வழிகாட்டலிடம் செல்கிறது, கொடுக்கப்படும் பணியை எப்படி ஏற்கிறது. இந்த வாழும் சாத்தியங்களுக்கு இன்னும் இன்னும் விழிப்புடணிருக்க முயல்க. இன்னும் மகிழ்ச்சியாய் இருக்க முயல்க. 

1:103-104 பசிகள்
       நீ இறைவனை நேசிக்கும்போது இறைவன் உன்னை நேசிக்கின்றான் (காண்க:3:31).
      நட்பின் இன்பங்களில் அல்லது ஆசையின் புலனின்ப மயக்கங்களில் நீ உனது ஏக்கத்திற்கான உண்மையான நிவாரணத்தை அடைந்துவிட்டாய் என்று உன்னால் சொல்ல முடியுமா? மேன்மையானதொரு நேசத்தில் நாம் கலந்துவிட வேண்டும் என்று முஹம்மது (ஸல்...) அறிவுறுத்துகிறார்.
      உனது நட்பிலோ அல்லது இச்சையிலோ இந்த விரிவை நீ அடைந்துவிட்டதாகச் சொல்வாய் எனில் நீ புளுகுகின்றாய், மக்கள் தமது ஆசைகளால் பிரகாசமடைவதும் நேசிப்பவரை இழக்க நேரிடுகையில் வெளிறிப்போவதும் நடப்பதுதான் என்றாலும்.
      நேசிப்பதற்காகவே பசிகள் தம்மை ஊட்டிக்கொண்டு உயிரோடிருக்கின்றன. பரந்த பேராவல் ஒன்றுள்ளது. இந்தப் பல்வேறு உடனிழுப்புக்கள் எல்லாம் அதனுள் நடனமிடுகின்றன. ஆசையினுள் இழையோடுமொரு நோக்கம் மேலும் உன்னதமான திருப்தியைத் தேடியபடியுள்ளது.


Thursday, August 24, 2017

பூழ்தி செய்திடடா! - 2



Related image

       ”வில்லினை எடடா – கையில்
 வில்லினை எடடா - அந்தப்
       புல்லியர்க் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா!”
என்று ஒரு மகாகவி பாரதி வரிகள் புனைந்துள்ளார் (’வேலன் பாட்டு’: 23). பூழ்தி என்பது புழுதியைக் குறிக்கும் சொல். மக்கட் பேச்சில் புழுதி என்பதல்லால் பூழ்தி என்னும் சொல் வழங்கி வராமையால் இப்பாடலைப் படிக்கும் பலருக்கும் இச்சொல் பாரதி புதிதாகப் புனைந்துகொண்ட சொல் என்றும் தமிழுக்கு அவன் அருளிய கொடை என்றும் தோன்றும். அப்படித் தோன்றிய கருத்தினையே உண்மை எனப் பிழைபட ஓர்ந்து தமது “பாரதி தமிழ்” (1987) என்னும் நூலில் முனைவர்.கே.கருணாகரன் மற்றும் வி.ஜெயா ஆகியோர் எழுதிவிட்டனர். தி.ந.இராமச்சந்திரன் அதனைச் சுட்டிக்காட்டிப் பின்வருமாறு எழுதுகிறார் (தமிழாக்கம் எனது):
“’பாரதி தமிழ்’-இன் ஆசிரியர்கள் மகாகவி பாரதி ‘பூழ்தி’ என்னுஞ் சொல்லினைப் புனைந்தார் என்று ஊன்றியெழுதுகின்றார்கள். இஃதொரு பிழை. அவர்கள் தமிழ் அகராதியை அணுகியிருந்தால் அச்சொல் திருக்கேதாரம் பற்றித் திருஞானசம்பந்தர் பாடிய தோத்திரப்பா ஒன்றில் இருப்பதைக் கண்டிருப்பார்கள். ’கேழல் பூழ்தி கிளைக்கும்” என்பது அந்த ஞானப்பிள்ளையின் அவதானம். [’கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே’ (பாடல் எண் 2707) என்று நூலில் உள்ளது – ரமீஸ் பிலாலி].
“இவ்வரியைத் தமிழ் அகராதி கிரகித்துக்கொண்ட போதும், அதற்கு முன்பே அச்சொல் (பூழ்தி) புனிதப் பேயாரால் பயன்படுத்தப்பட்டுள்ளதை அவ்வகராதியின் தொகுப்பாளர்கள் அறிந்திருக்கவில்லை. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தின் இரண்டாம் பாடல் பூழ்தி என்னும் சொல்லினைக் குறிப்பிடுகிறது. பூழ்தி என்னும் சொல்லின் பொருட்படுகின்ற, மேலும் அதிகப் புழக்கம் கொண்ட ‘புழுதி’ என்னுஞ் சொல்லினையும் அப்பதிகம் பயன்படுத்துகின்றது.”

இந்தப் பத்தியைப் படித்ததால் எழுந்த சிந்தனையே அவருக்கொரு கடிதம் வரைய எனை உந்திற்று. இன்று நான் அஞ்சல் செய்த அக்கடிதம் பின்வருமாறு:

சேக்கிழார் அடிப்பொடி’ அவர்களுக்கு,

பிஸ்மில்லாஹி தஆலா.

நமஸ்காரம்.
      அடியேனைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். ஜமால் முஹம்மது கல்லூரியின் நிறுவனர்களுள் ஒருவரான வள்ளல் ஃகாஜாமியான் ராவுத்தர் அவர்களின் பேத்தியின் பேரன் நான். மூன்று வயது முதல் பதினாறு வயது வரை திருவையாற்றில் வளர்ந்தேன். பாரதி இயக்கத்தில் சிறிது தொடர்பும் இருந்தது. தியாகராஜர் காலனியில் ‘இலக்கியச் சோலை’ என்னும் அமைப்பை மூன்றாண்டுகள் நடத்தி வந்தேன் (’திருப்பழனம் மகாலிங்கையர் நிலையம்’ என்னும் இல்லத்தை நீங்கள் அறிந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். அதற்கு எதிர்வீட்டில் பதின்மூன்று ஆண்டுகள் வசித்திருந்தோம். அப்படி வளர்கையில், தில்லைஸ்தானம் திரு.ராமகிருஷ்ணன் மற்றும் திருமதி.புவனேஸ்வரி ராமகிருஷ்ணன் ஆகியோரது நட்பு சில நண்பர்கள் வழி வாய்த்தது. “சுகந்த பாரதி” இல்லத்திற்கு நான் சில முறை சென்று வந்ததுண்டு. அப்போது தங்கள் அக்காள் அவர்களையும் கண்டிருக்கிறேன். நான் வரைந்த சில கரிக்கோல் சித்திரங்களை அவர்கள் பெரிதும் பாராட்டினார்கள். அவ்வில்லத்துக் கொழுந்துகளான ஸ்வர்ணா மற்றும் பரத் ஆகியோருடன் பல விஷயங்கள் பற்றி உரையாடியிருந்த அனுபவங்கள் இனிய நினைவுகளாய் இருக்கின்றன. கல்லூரிப் படிப்பிற்கென்று திருச்சிக்கு வந்த பின் அத்தொடர்பு மங்கிற்று. ஜமால் முகம்மது கல்லூரியிலேயே கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்ப் பேராசிரியராகப் பணிசெய்து வருகிறேன். 

      கவிஞர் திருலோக சீதாராம் அவர்களின் நூற்றாண்டு விழா என்று நினைவு. திருவையாற்றில் பாரதி இயக்கத்தின் சார்பில் நடந்த அவ்விழாவில் அடியேனும் ஐந்து நிமிடங்கள் பேசினேன். அந்திக்குப் பிறகான அமர்வில் நீங்கள் பேசினீர்கள். இன்னொரு நிகழ்வில், தஞ்சை பெசண்ட் ஹாலில் உங்களின் உரையை கேட்டிருக்கிறேன். நிகழ்ச்சி தொடங்கும் முன்னதாக திரு.வி.எஸ்.ஆர் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஞாபகம். அப்போதே, என் மாணவப் பருவத்தில், தங்களின் மொழியாக்க நூற்கள் சிலவற்றை வாங்கி வாசித்திருக்கிறேன், குறிப்பாக மகாகவி பாரதி பாடல்களின் மொழிபெயர்ப்புக்கள். மேலும், திரு.தி.சா.ராஜு அவர்களின் சில நூற்களையும் படித்திருக்கிறேன். திருலோக சீதாராம் அவர்களின் மொழிபெயர்ப்பிலான ‘சித்தார்த்தா’ படித்திருக்கிறேன். 

      திரு.ரவிசுப்பிரமணியம் அவர்கள் தங்களைப் பற்றி உருவாக்கிய ஆவணப்படத்தை நேற்று யூட்யூபில் கண்டேன். பழைய நினைவுகள் நெஞ்சிற் கிளர்ந்தன. ஏழெட்டு ஆண்டுகட்கு முன்பே உங்களுக்கொரு கடிதம் எழுத எண்ணி ஏதோ காரணத்தால் தவிர்ந்து போயிற்று. அவ்விஷயம் இப்போது மீண்டும் ஞாபகம் வந்து எழுதத் தோன்றியது. அது, “பூழ்தி” என்னுஞ் சொற் பற்றியதொரு கருத்து.

      1993-ஆம் ஆண்டு தாங்கள் ஆங்கில ஆக்கத்துடன் வெளியிட்ட ”THE HYMNS OF KAARAIKKAAL AMMAIYAAR” என்னும் நூலின் முகவுரையில் “பூழ்தி” என்னுஞ் சொல்லினை பாரதி உண்டாக்கவில்லை, அவருக்கும் முன்பே திருஞானசம்பந்தரும் பேயாரும் அச்சொல்லினைக் கையாண்டுள்ளனர் என்னும் தகவல்களைத் தந்திருக்கின்றீர். எனது மொழிப்புலமை செம்மைப்பட நூல்வழி அமைந்த ஆசான்மாருள் நீங்களும் ஒருவர் என்னும் நன்றியமைய அடியேன் பின்வரும் செய்தியினை உங்களுக்குத் தெரிவிக்க விழைகிறேன்.

      மகாகவி பாரதி பிறந்து வளர்ந்த எட்டயபுரத்தில் வாழ்ந்து அடங்கியிருக்கும் இஸ்லாமியப் பெருங்கவி உமறுப்புலவர் செய்த “சீறாப்புராணம்” என்னும் பாரகாவியத்துள் “பூழ்தி” என்னுஞ் சொல் இடம்பெற்றிருக்கிறது. அடியேன் வாசித்த வகையில் கிடைத்த சான்றுகள் இவை:
      ”கரிய பூங்குழல் சென்னிறப் பூழ்தியிற் கரந்து” (சீறா:1:7:63)
      ”தேறிலா துறுக்கி யிருகரம் புதைப்பச் செறிதரு பூழ்தியை வாரி” (சீறா:2:3:116).
      ”பங்கிகள் பூழ்தியிற் பதிய ........” (சீறா:2:3:126)
      ”பூழ்தியெடுத் தெற்றி யெறிந்த வரவும்… …..“ (சீறா:3:3:83)
      ”விரைவிற் துடைத்தான் வாய்ப்பூழ்தி யுமிழ்ந்தான்...” (சீறா:3:3:92)
      ”புதயக் கிடந்த பூழ்திதுடைத் தெழுந்தார்...” (சீறா:3:3:95)

      புழுதி என்பது பூழ்தி என வழங்கப்படுவதுடன் மேலும் மருவி ‘பூழி’ என்றும் வடிவங் கொள்ளும். புழுதி நிறைந்த கொடிய காட்டிற்கு இராமன் செல்ல வேண்டும் என்று கைகேயி சொல்வதாக அமைந்த பிரசித்தமான பாடலில் ”பூழி வெங்கானம் நண்ணி” (க.ரா: 1690) என்று கம்பன் யாப்பதைக் காண்கிறோம்.

      இந்தப் ”பூழி” என்னும் வடிவத்தையும் உமறுப்புலவர் கையாண்டிருக்கிறார். ”உடுத்த பூழியிற் புதைமணி யெனவுட லொடுங்கி” (சீறா:1:4:47; நாச்சிகுளத்தார் பதிப்பு (செப்டம்பர் 1974)) என்று அவர் பாடுகிறார். இவ்வரிக்கு, “தரித்த பூழ்தியின்கண் புதைந்த விரத்தினத்தைப் போன்று...” எனப் பொழிப்புரை வரைகிறார் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர்.

      கவிஞர் திருலோக சீதாராம் அவர்களைப் பற்றிய விழாவில் நீங்கள் பேசுகையில் “a chaste pearl embedded in mud” என்றொரு வரியை அவர் தமிழில் எப்படி மொழிபெயர்த்தார் என்று சொன்னதாக ஞாபகம். “பூழியிற் புதைமணி” என்னும் சொற்றொடர் அதனை எனக்கு நினைவூட்டுகிறது.

      தமிழ் லெக்ஸிகான் செய்த அறிஞர் பெருமக்கள் காரைக்கால் அம்மையாரையே நினைவு வைத்திருக்கவில்லை என்னும்போது சீறாப்புராணத்தைப் படித்திருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நியாயமன்று.

      எட்டயபுரத்தில் வாழ்ந்திருந்த உமறுப்புலவர் ஆழ்வார் பாடல்களிலும் கம்பராமாயணத்திலும் தோய்ந்து தமிழறிவு முதிரப் பெற்றிருப்பார் என்பதென் துணிபு. அதற்கான சான்றுகளை சீறாப்புராணம் நெடுகிலும் பரக்கக் காணலாம். அவற்றையெல்லாம் தனியொரு ஆய்வாக நிதானத்துடன் நிகழ்த்தி வருகிறேன், பாற்கடல் நக்கப் புகுந்ததொரு பூனையைப் போல.

பணிவுடன்.,
முனைவர்.அ.தௌஃபீக் ரமீஸ்,

      தி.ந.இரா அவர்கள் சீறாப்புராணம் படித்திருப்பர் என்றே ஊகிக்கிறேன். எனினும் அவரெழுத்துக்களில் அதற்கான சான்று ஏதும் கிட்டில என்பதை ஆதரவு கொண்டே அவருக்கு மடல் எழுதத் துணிந்தேன். எண்பத்துமூன்று அகவை நிரம்பிய ஒரு பெரியவருக்கு இப்போது போய் ஒரு செய்தியை அறிவித்தல் அவசியமா என்று கேட்பது நியாயமல்ல. ”கல்வி கரை இல, கற்பவர் நாள் சில” (நாலடியார்:135) என்னும் சமணமுனிவர் வாக்கு அட்சரலட்ச உண்மை அன்றோ?

 

பூழ்தி செய்திடடா! - 1



      மூன்று நாட்களுக்கு முன் ஆவணப்படம் ஒன்று கண்டேன். இற்றை நாள் தமிழகத்தில் வாழ்ந்து வரும் ஓர் அதிசய அறிஞரைப் பற்றியது அப்படம். பத்து நாட்களுக்கு முன் சோழ வளநாட்டுப் பகுதியில் மேற்கொண்டிருந்த பயணத்தின் தாக்கத்தால் அடியேன் வளர்ந்த ஐயாற்று மண்ணை, நெஞ்சை அள்ளும் தஞ்சையை மனம் அசை போட்டுக்கொண்டிருந்ததில் அவ் அறிவரின் நினைவு முகிழ்த்தது. அவரைப் பற்றி ஓர் ஆவணப்படம் வெளிவந்திருப்பதை முன்பொரு முறை தி-ஹிந்து நாளிதழில் வாசித்த நினைவுமெழ அஃது யூட்யூபில் கிடைக்குமா என்று தேடினேன். கிடைத்துவிட்டது.
 Image result for t n ramachandran 

      அந்த மேதை “TNR” என்று பெயரின் முதலெழுத்துக்களால் அழைக்கப்படும் திருநெய்த்தானம் நடராஜன் இராமச்சந்திரன். (திருநெய்த்தானம் என்னும் சிற்றூர், சிவஸ்தலம், திருவையாற்றிலிருந்து சற்றுத் தொலைவில், மூன்று நான்கு கி.மீ இருக்கலாம், அமைந்துள்ளது. தில்லஸ்தானம் என்பது மக்கள் நாவின் நாடக வழக்கு. TNR தற்போது தஞ்சையம்பதியில் வசிக்கிறார்.

      அப்படி என்ன இவரது ஆளுமையின் தனித்தன்மை என்று கேட்பார்க்கு, ‘வழி வழி பாரதி’ என்னும் இவரது நூலின் பின்னட்டையில் இவரைப் பற்றிய அறிமுகக் குறிப்பில் உள்ள சொற்றொடர் ஒன்றினை விடையாக மொழிந்தால் போதுமானது என்று எண்ணுகிறேன். ஊன்றி கவனிக்கவும்.

      ”தமிழ், ஆங்கிலம் நன்கு அறிந்தவர்”

      வேண்டுமெனில் மீண்டும் ஒரு முறை வாசித்துக்கொள்ளவும். அவர் தமிழும் ஆங்கிலமும் நன்கு அறிந்தவர். இருமொழி அறிஞர்.

      சுய விளம்பரப் பெருக்கத்தால் சீரழிந்து கிடக்கும் குமுகாயச் சூழலில் இவ்வரி மிக எளிய ஒன்றாக, சிறப்பற்றதாகத் தோன்றக்கூடும். என்ன செய்ய? நாம்தான் நாளும் நாளும் எத்தனை எத்தனை ’வாழும் வள்ளுவர்’களை’, ‘கலிகாலக் கபிலர்’களை, (ஐந்தையும் அவித்துவிட்ட) ‘ஐந்தமிழ் அறிஞர்’களை, (’பூமிப்பந்தைப் புரட்ட வல்ல’) புரட்சியாளர்களை, ’சிந்தனைச் சிப்பி’களை, தமிழகத்து சே குவாராக்களை (சேக்குவாரா?), ’பன்மொழி வித்தவர்’களை எல்லாம் கண்டு வருகின்றோம்.

      ஆம், ஒரு மொழிகூட சரிவரத் தெரியாதவர்கள் எல்லாம் பன்மொழி வித்தகர்கள் / அறிஞர்கள் என்று பட்டம் சூடித் தருக்கித் திரியும் தாழ்நிலை கடுத்த பாழ்நிலம் ஆகிவிட்டது தமிழகம். அத்தகு சூழலில், ஒருவர் தன்னைப் பற்றிய குறிப்பாக ’இருமொழி நன்கு அறிந்தவர்’ என்று தனது “கரிக்குலம் விட்டே”வில் குறிப்பிடுதல் காணின் நரிக்குலம் அவரை நகாதோ?

      ஆனால் அந்த எளிய குறிப்பு சத்தியம். அதன் எழுத்து ஒவ்வொன்றும் உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை. தி.ந.இராமச்சந்திரன் அவர்கள் தமிழும் ஆங்கிலமும் நன்கு அறிந்தவர். அதனை அவரின் நூற்கள் வழி அடியேன் அறிந்துளேன். அதனாற்றான், தமிழ் ஆங்கிலம் உருது அரபி ஃபார்சி ஆகிய ஐந்து மொழிகளில், முதலிரண்டு மொழிகளில் தேவலாம் எனுமளவும் இதர மூன்று மொழிகளில் சொற்ப அளவும் அறிவு பெற்றுள்ள எனை நோக்கி என் நண்பர் குழாம் “பன்மொழி அறிஞன்” என்று ஏத்துகையில் நான் நாணத்தால் நெளிகின்றேன். காரணம், தி.ந.இராமச்சந்திரன் போன்ற அறிஞர்களை நான் அறிந்திருக்கிறேன்.
Image result for t n ramachandran
      தி.ந.இரா அவர்களின் சாதனை மொழிபெயர்ப்புத்தான். குறிப்பாக, சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளை ஆங்கிலமாக்கியுள்ளார். அப்பணி முடிக்க “IISSR – International Institute of Saiva SIddhantha Research” என்பதன் இயக்குநராக அமர்த்தப்பட்டிருந்தார். மகாகவி பாரதியாரின் பாடல்களையும் ஆங்கிலமாக்கியுள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இவரைப் பதிப்பாசிரியராக அமர்த்தி அவற்றை வெளியிட்டது. 

 Image result for t n ramachandran
      தி.ந.இரா அவர்களின் இன்னொரு தனித்தன்மை, அரிய நூற்கள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு பெரும் நூலகத்தையே தனது வீட்டில் வைத்துப் பேணி வருகிறார் என்பது. ஐம்பதாயிரம் நூற்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றுள் அவரது தனிப்பட்ட சேகரமே செம்பாகம் படும். அந்நூலகத்தினைச் சார்ந்தே வெளியீட்டுப் பணிகளும் செய்துள்ளார். ”டி.ஆர்.நடராஜ அய்யர் மெமோரியல் லைப்ரரி & பப்ளிகேஷன்ஸ், மதுர பவனம், 14-ஏ செல்வம் நகர், தஞ்சாவூர்” என்னும் முகவரியை அவ்வெளியீட்டில் காண்கிறோம். எனவே அவரது தந்தையார் சேகரித்த நூற்றொகுதிகளிலிருந்து தொடங்கி தி.ந.இரா வளர்த்தெடுத்த நூலகமாக இருத்தல் வேண்டும். தி.ந.இராமச்சந்திரன் அவர்களைச் சந்தித்தது உண்டா? என்றொரு கேள்வியை அண்மையில் ஜெயமோகன் அவர்களிடம் கேட்டிருந்தேன். அதற்கான விடையில் தி.ந.இரா அவர்களின் நூலகத்தை அவர் மிகவும் போற்றி ”தமிழின் தொன்மையான நூல்கள், அரியநூல்களின் பெரும் சேகரம் டி.என்.ஆர் அவர்களிடமுள்ளது என அறிவேன். தமிழின் இரு மகத்தான தனியார் நூலகங்களில் ஒன்று அது. இன்னொன்று புதுக்கோட்டை கிருஷ்ணமூர்த்தி – டோரதி கிருஷ்ணமூர்த்தியின் சேகரிப்பு. அவற்றை அமைப்புரீதியாக முறையாக பாதுகாக்க [ரோஜா முத்தையாச் செட்டியார் நூலகம் போல] ஏதேனும் வெளிநாட்டுப் பல்கலைகள் முயலவேண்டும்.” என்று சொல்லியிருந்தார். (’சேக்கிழார் அடிப்பொடி’, www.jeyamohan.in., 23 ஆகஸ்ட் 2017).

      தி.ந.இரா அவர்களின் ஆங்கிலம் செவ்வியல் தன்மை வாய்ந்தது. சராசரியான ஆங்கில அறிவு கொண்டோர் அதனைப் படித்துச் சுவைத்தல் கடினம்தான். ஆனால், தன்னை மழுக்கிக்கொண்டு எழுத அவர் ஒருபோதும் இசையார். தமிழ்ச் செவ்வியற் பனுவல்களை ஆங்கிலமாக்கினால் அந்த ஆங்கிலமும் செவ்வியற் தன்மையுடன்தான் இருந்தாக வேண்டும் என்பது அவர்தம் இலக்கியக் கொள்கை. அப்போதுதான் அதில் மூல மொழியின் சுவையும் உணர்வும் இருக்கும் என்பது விளக்கம். 

Image result for t n ramachandran

      ஆங்கில இலக்கியங்களில் ஆழ்ந்து கவியுளம் கண்டவர் தி.ந.இரா. அதனால்தான் ‘மாமுனி மில்டன்’ என்று அவரால் சொல்ல முடிகிறது. அவருடன் பழகுகின்றவர்கள் அவரது நியாபக சக்தியை மிகவும் வியந்துரைக்கின்றார்கள். சகஜமாக பேசிக்கொண்டிருக்கும் நிலையிலேயே பொருத்தமான கவிதை வரிகளை அவ்வப்போது மேற்கோளாகச் சிந்துவார். அவரது எழுத்தும் அப்படியே. ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி, டென்னிசன், பைரன், எமர்சன், விட்மன், வொர்ட்ஸ்வொர்த், சரோஜினி தேவி, ரபீந்திரநாத் தாகூர், இக்பால், மௌலானா ரூமி, கலீல் ஜிப்ரான் என்றெல்லாம் அவர் ஒப்பிட்டு மேற்கோள் சொல்வதைக் காணக் காண கண்கள் வியப்பில் விரியும். “பாஞ்சாலி சபதம்” பற்றி எழுதுகின்றபோது அவர் தரும் குறிப்பினைப் பாருங்கள்: “ஷேக்ஸ்பியர் ‘பெரிக்ளீ’ஸ் என்ற நாடகத்தை “New joy wait on you! Here our play has ending” என்று முடித்தது போலவே ‘நாமுங் கதையை முடித்தோம் – இந்த / நானில முற்றும் நல்லின்பத்தில் வாழ்க” என்று நிறைவு செய்திருக்கிறார்.”

      தி.ந.இரா அவர்களின் தமிழ் மொழி நடை நான் மிகவும் ரசித்துச் சுவைத்து அனுபவித்த ஒன்று. அதன் தாக்கம் எனது நடையில் தெரிதல் வியப்பன்று. அது தெளிவும் செறிவும் கொண்ட நடை. சொன்னயம் மிக்க நடை. அவரது நூலினைப் புரட்டிக்கொண்டிருக்கையில் ஒரு சிறு பத்தியில் என் புத்தி நின்றது. பதினைந்து ஆண்டுகட்கு முன்பு அந்நூலினை வாசித்தபோது பெரிதும் உவந்த அதே வரிகள். பாரதியைப் பற்றி தி.ந.இரா சொல்கிறார், “பாரதியார் சொல் உராய்ந்து எழுந்த தீயின் சுடர் எழக் கனிந்த நாவுடையவர்; பாரதியார் மண்மாசு அகன்ற வான்படு சொற்கள் கொண்டு, மந்திரப் பாடல்கள் பாடி வேதம் புதுமை செய்தவர்”. அளவினால் சிறிதாகவும் கருத்தினால் பெரிதாகவும் உள்ள உயர்ந்த நூல் என்பதைக் குறிப்பிட “சிறு மா நூல்” என்று சுருங்கக் கூறுவார். இதனை ஓர் ’இடியம்’ போன்று, சொலவடை போன்று நானும் பயன்படுத்தி வருகிறேன். இத்தகு வரிகள் பலவற்றை அவர் பாரதியிடமிருந்து எடுத்தாள்வார். அவரின் எழுத்திலும் நாம் அத்தகு வரிகள் பலவற்றை எடுத்தாள இயலும்.
      
 தி.ந.இரா அவர்களை அவரின் இள வயதிலேயே பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அதிசயக் கவிஞர் ஒருவர் ஓர் இலக்கியப் பனுவல் யாத்துள்ளார் என்று கண்டறிந்த போது மிகவும் வியப்பாக இருந்தது, என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பது போல். அப்பனுவலின் பெயர் “சித்திரகவிமாலை”. அந்நூலாசிரியர் திருவையாறு பி.வி.அப்துல் கபூர் சாஹிப் என்னும் ஆசுகவி. இறைவன் நாடினால், அவரைப் பற்றிப் பின்னர் விரிவாக கட்டுரை ஒன்று எழுதுகிறேன். அந்தப் புலவர் தனது நூலில் தி.ந.இராமச்சந்திரன் அவர்களை ’வேதியர் குல வள்ளல்’ என்று போற்றுவதுடன் தனக்கு இன்னின்னது தர வேண்டும் என்றெல்லாம் உரிமையுடன் கேட்கிறார். குறிப்பாக, பதினாறாவது சித்திரகவியான தேர்ப்பந்தம் என்பதினுள் அமைந்த இரண்டாம் இன்னிசை வெண்பாவின் இடையே “போற்றவே பூமனை” என்று பாடி, தனக்கொரு வீடு வேண்டும் என்று கேட்கிறார். அதையும் தி.ந.இராமச்சந்திரன் நிறைவேற்றினார்! (புலவர் பி.வி.அப்துல் கபூர் சாஹிப் அவர்களுக்கு தி.ந.இரா பத்திரமெழுதிப் பரிசில் தந்த வீடு இந்நாளில் கிடக்கும் கதியை, தான் உருவாக்கிய ஆவணப்படத்தில் ரவிசுப்பிரமணியம் காட்டியிருக்கிறார்).

      தி.ந.இரா அவர்களின் எழுத்துக்களில் நான் கண்ட இன்னொரு வியப்பான விஷயம், மௌலானா ரூமியைக் குறிப்பிட்டு அவர் எழுதியிருக்கிறார் என்பது. என்னைப் பெரிதும் கவர்ந்த சூஃபி மகான் அவரையும் கவர்ந்திருக்கிறார் என்பது அறிந்து மெத்த மகிழ்ந்திருக்கிறேன், “யாமறிந்த புலவரிலே, ரூமி என்ற ஒரு புலவரது வாக்குத்தான் பாரதி வாக்குப் போல் இருக்கின்றது” என்றெல்லாம் அவர் எழுதும் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும்கூட.

      ரெனால்டு நிக்கல்சன் செய்த ஆங்கில மொழிபெயர்ப்புக்களின் வழியே அவர் மௌலானா ரூமியின் மஸ்னவி ஷரீஃபை வாசித்திருக்கிறார். 1993-இல் அவர் வெளியிட்ட காரைக்கால் அம்மையார் துதிப்பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலின் முன்னுரையில், “According to Jalaluddin Rumi, Love is the Highpriest who mediates between God and soul.” என்று எழுதிவிட்டு மஸ்னவி ஷரீஃப் முதற்பாகத்தின் 109 – 111, 115 – 116 ஆகிய ஐந்து கண்ணிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பினை எடுத்துக்காட்டியிருக்கிறார். இந்நூலுக்குப் பின்னர் ஏழாண்டுகள் கழித்து 2000-இல் வெளிவந்த “வழி வழி பாரதி” என்னும் நூலில் ஒரு கட்டுரை வரைகிறார், “பாரதியும் ரூமியும்” என்று. அதில், மேற்சொன்ன ஐந்து கண்ணிகளை, மௌலானா ஜலாலுத்தீன் ரூமியின் கவிதை வரிகளை அவர் செந்தமிழாக்கித் தந்திருக்கும் விதம் வெகு இதம்:

      ”இதயத்துறு நோய் காதலன் வெறியைக்
      கதுமெனக் காட்டும்;
      இது போல் ஒரு நோய் யாண்டு மிலதே
      காதல் என்பது ஒரு தனி நோயே;
      இது தான்,
      அகத்தே கரந்து ஆழ்ந்தே கிடக்கும்
      தெய்வத் திருவை அளக்கும் கருவி;
      மண்ணார் காதலோ, விண்படு காதலோ,
      முடிவில் அப்பாலைக் கிஃதே உய்க்கும்; உறுதி
      ஏதுக்கள் இதனைச் சோதிக்கலாகா;
      ஏதுவும் காட்டும் சேற்றில் கழுதையே;
      தன்னைத் தானே காட்டும் பரிதிபோல்
      அன்பை விளக்கும் அதுவும் அன்பே;
      காண்பாய் இதனைக் கருத்தினை ஊன்றி;
      நிறுவத் தேடிய ருசுவெலாம் இங்கே
      நேர்பட நிற்பன கண்டு கொள்வாய்.”
      
Image result for astrolabe

 ஒரு குறிப்பு: “தெய்வத் திருவை அளக்கும் கருவி” என்னும் வரி ஆர்.ஏ.நிக்கல்சனின் ஆங்கிலத்தில் “And astrolabe of mysterious Divine” என்றுள்ளது. மௌலனா ரூமியின் ஃபார்சி மூலத்தில் இவ்வரி “இஷ்க் அஸ்துர்லாபெ அஸ்ராரெ ஃகுதாஸ்த்” என்றுள்ளது. (”Love is the astrolabe of the secrets of God” என்று இப்றாஹீம் கமார்து செய்துள்ள ஆங்கிலப் பெயர்ப்பு மூலக்கருத்துடன் மேலும் சரியாகப் பிரதிபலிக்கிறது.) அஸ்துர்லாப் என்பதொரு வானியற் கருவி. நிக்கல்சன் இக்கருவி குறித்து தனது மொழிபெயர்ப்பின் அடிக்குறிப்பில் “அது விண்மீன்களின் உயர்நிலையை அளப்பதற்கும் கோள வானியலின் சிக்கல்களைத் தீர்ப்பதற்குமானதொரு கருவி” என்று எழுதிகிறார். அஸ்துர்லாப் என்னும் பார்சிச் சொல்லே பின்னாளில் ஆங்கிலத்தில் ஆஸ்ட்ரொலேப் என்றாகியது.
      இவ்வளவு பெற்றி அமைந்த, தமிழறிவும் ஆங்கிலப் புலமையும் சைவத் தத்துவ அறிவும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற மேதை தி.ந.இராச்சந்திரன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று ஏழு ஆண்டுகட்கு முன் தோன்றி ஏதோ காரணம் பற்றி அத்திட்டத்தைக் கிடப்பில் சாய்த்தேன். அதற்கான் நேரம் இப்போதுதான் வர வேண்டும் என்பது இறைவன் திருவருள் போலும். அக்கடிதம் ஒரு தமிழ்ச்சொல் பற்றி அமைந்தது. “பூழ்தி” என்பது அச்சொல்.

      நுண்ணிய நூற்பல கற்று நுண்மான் நுழைபுலத்தில் நிலைத்தவரே ஆயினும், அரம் போலும் கூர்த்த மதி கொண்டு தூண்டு நூற்கனங்கள் துளைத்தவரே ஆயினும், ஏற்றமிகு எண்ணங்கள் பிறங்கும் ஏடுகள் பலவற்றை எழுத்தெண்ணிப் படித்தவரே ஆயினும், செய்யுள் நாடகம் ஆகிய இருவழக்கு ஆய்ந்தளந்து வார்த்தை வங்கி என வளர்ந்தவரே ஆயினும், ஒரு மொழியினுள் அமைந்த அனைத்துச் சொற்களையும் அறிந்திருத்தல் அரிதினும் அரிது. தி.ந.இரா அவர்கள் எழுதியிருக்கும் ஒரு செய்தியை மேலாய்ந்து இவ்வுண்மையை நான் உணர்ந்து கொண்டேன். அதனையே அவருக்குக் கடிதத்தில் தெரிவிக்க நாடினேன். “பூழ்தி” என்னுஞ் சொல்லினைப் பற்றிய ஒரு சேதி அது.

to be conluded in next part.