Monday, August 21, 2017

இரண்டு கவிதைகள் – 21.08.2017

Image result for sapling


சூஃபிச் செடி நவின்றது

வெகுநாளாயிற்று
சூஃபிக் கவிதையொன்று சொல்லேன்

’என் வேர்கள் ஸ்திரம்கொள்ளும்
மண்ணும் நீயே

என் கிளைகள் ஓங்கி விரியும்
விண்ணும் நீயே

தீராக் கனிகளின்
தீஞ்சுவையும் நீயே’

என்று
நெஞ்சுருக உரையாடி நிற்கின்றது...

எண்ணற்ற உலகங்களில்
தானும் ஒன்றானதொரு உலகில்

எண்ணற்ற காடுகளில்
தானும் ஒன்றானதொரு காட்டில்

எண்ணற்ற மரங்களில்
தானும் ஒன்றானதொரு மரத்தின் கீழே

முளைத்து நிற்கும் செடிகள் பலவற்றில்
தானும் ஒன்றான சிறிய செடி.


Related image
மிச்சில்

மதிய மழைத்தூறலின் துளிகள்
ஒவ்வொரு இலையிலும்
ஒவ்வொரு நீல மொக்கிலும்
மினுங்க நிற்கிறது
வீடளவுயர்ந்து நிற்கும் எருக்கஞ்செடி

மேற்கு வானத்து
மேக விளிம்பெல்லாம்
வெள்ளியெனச் சுடரும் தண்ணொளி
சூரியனே நிலாவாகிவிட்டது போல்

நீர் வார்த்த வானம்
தருக்களுக்கெல்லாம்
ஒளியினைப் பரிந்தூட்டுகின்றது

தேனால் செய்தன போலுமாய்க்
காலத்தின் அடையில் இத்தருணங்கள்

பெருநதிகள் மட்டும் பெருகின்ற பேறு
சாலைக் குழிநீரும் காணும் கருணை

ஆமாம் அன்பர்களே!
சவியுறத் தெளிந்து
சான்றோர் எழுதிய
கவியெனக் கிடக்கின்றதைப் பாருங்கள்
இளைத்தோடும் நாயொன்று
பருகிச் செல்லுமிந்த மிச்சில் நீர்.

No comments:

Post a Comment