Friday, July 22, 2022

அலமாரிப் பூக்கள்

 (இந்தக் கட்டுரை பேராசிரியர் சேமுமு அவர்கள் நடத்திவரும் “இனிய திசைகள்” என்னும் மாதிகையில் ஜூலை 2022 இதழில் வெளியாகியுள்ளது.)


“ஒரு தோட்டமும்

ஒரு நூலகமும்

உன்னிடம் இருந்தால்

தேவையானதெல்லாம்

அடைந்துவிட்டாய்”

என்கிறார் ரோமானிய தத்துவ அறிஞர் மார்க்கஸ் சிசரோ.

            நான் அடைந்த நல்லூழ், சிறுவனாக இருந்த காலம் தொட்டே எங்கள் வீட்டில் தோட்டம் இருந்தது. பதின் பருவத்தில் எனக்கான சிறு நூலகம் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டேன்.

            சொந்தமாக வீடு கட்டியபோதும் முற்றத்தில் தோட்டம் வைக்க போதிய இடம் விட்டே கட்டினேன். அதில் இப்போது தோட்டம் இருக்கிறது. வாசிக்கும் கூடம் வைத்து வீட்டு நூலகமும் வளர்ந்துள்ளது.



            சிசரோ சொன்னதைச் சிந்தித்துப் பார்க்கையில் இரண்டும் ஒன்றுதான் என்று படுகிறது. நூலகம் என்பது வீட்டின் அகத் தோட்டம். தோட்டம் என்பது வீட்டின் புற நூலகம்.

            நூலகம் என்பது தாள்களால் ஆன பூந்தோட்டம்; தோட்டம் என்பது செடி கொடிகளால் ஆன நூலகம்.

            எப்படி அமைய வேண்டும் என்று திட்டமிட்டேதான் என் நூலகத்தை உருவாக்கி வந்திருக்கிறேன். வீட்டுத் தோட்டமும் அப்படியே.

            ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் என்னென்ன தாவரங்கள் இருக்கும் என்பது அவரவரின் ரசனையைக் காட்டும். வீட்டு நூலகமும் அப்படியே.

            ஆரம்பத்தில் என்னிடம் இருந்த நூற்களின் சேகரத்தில் பலவற்றை நானே பிற்பாடு நீக்கியிருக்கிறேன், பூச்செடி என்று நினைத்து வளர விட்டதை நாமே பிறகு களை என்று கண்டு நீக்கிவிடுவதைப் போல்.

            என் நூலகத்தில் கவிதைப் பூக்கள் இருக்கின்றன, ஞானக் கனிகள் இருக்கின்றன. என் தோட்டத்தில் பூக்களே கவிதைகளாகவும் கனிகளே ஞானங்களாகவும் இருக்கின்றன.

            சிலர் துளசிச் செடி புனிதமானது என்று அதற்குத் தனியாக பீடம் அமைத்து அதில் உயர்த்தி வைப்பார்கள். அதேபோல், என் நூலகத்திலும் இறை வேதத்திற்கும் நபிமொழித் தொகுப்புக்களுக்கும் தனியாக அலமாரி இருக்கிறது. 



            சில வீடுகளில் வேறு செடியே இல்லாமல் துளசி மட்டும் ஒரு தொட்டியில் நின்று கொண்டிருக்கும். அதுபோல், பல வீடுகளில் நூல் என்று திருமறை ஒன்று மட்டுமே இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.



             பயன்படும் செடிகளை வைக்க வேண்டும். வெறும் அழகுக்கென்று பூச்செடிகளை வைப்பதால் என்ன பயன்? தோட்டத்தில் காய்கள் கனிகள் தரும் தருக்கள் இருக்க வேண்டும் என்பது ஒருவரின் கோட்பாடாக இருக்கலாம். அது போல் ஒருவரின் நூலகத்தில் புனைவுகளுக்கே இடமில்லாமல், அகராதி, அட்லஸ், சமையல் நூற்கள் என்பன போல் அன்றாட வாழ்க்கைக்குப் ’பயன்’படும் நூல்கள் மட்டுமே இருக்கக்கூடும்.

            தோட்டங்களில் சில வகைகள் இருக்கின்றன. ஜென் தோட்டம், முகலாயத் தோட்டம் (பாரசீகத் தோட்டம்), ஆங்கிலேயத் தோட்டம் ஆகியவை போல். நூலகங்களும் அப்படி ஒரு குறிப்பிட்ட பொருண்மை சார்ந்த நூற்கள் அதிகமாக இருக்கும்படி அமையக்கூடும். ஒரே தோட்டத்தில் இந்த வகைகளுக்கு இடங்கள் ஒதுக்கப் பட்டிருக்கலாம். என் நூலகம் அப்படித்தான் இருக்கிறது. அதில் சூஃபி, ஜென், மேலை மற்றும் கீழை ஞான மரபுகள் என்று அனைத்துக்கும் இடம் இருக்கிறது.

            சிறு சிறு தொட்டிகளில் கை மருந்துக்கான மூலிகைகளும் வீட்டுத் தோட்டங்களில் இருக்கும். ஓமவள்ளி, துளசி, வெற்றிலை, பச்சிலை ஆகியவை போல. அதுபோல் சில நூற்கள் மனதுக்கு மருந்தாக அமையும். சில வீடுகளில் மருந்துக்கும் செடி இருக்காது; சில வீடுகளில் மருந்துக்கும் நூல் இருக்காது.



            என் நூலகத்தில் செய்தித்தாள்களுக்கு இடம் இல்லை; என் தோட்டத்தில் பிளாஸ்டிக் தாவரங்கள் இல்லை.

            நூற்களும் விற்கப்படும் நவீன காஃபி அங்காடி ஒன்றில் ஒருமுறை அன்பளிப்பாக ஒரு சிறு செடியைக் கொடுத்தார்கள். அதுபோல், தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு செடியின் பின்னணியிலும் ஒரு கதை இருக்கக் கூடும். என் நூலகத்தில் உள்ள சில நூல்களின் பின்னணியில் சுவையான நிகழ்வுகள் உள்ளன.

            நூல்களிலும் விஷச் செடிகளும் நச்சு மரங்களும் உண்டு. பொதுவாக அவை கேளாமலே முளைப்பவை, இலவசமாக வந்து சேர்பவை. ஆரம்பத்திலேயே அவற்றை அகற்றிவிட வேண்டும். சில காலம் சென்ற பிறகே எனக்கு இந்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

            தோட்டத்தில் உள்ள பெரிய மரம் சில நேரங்களில் வீட்டுச் சுவரில் விரிசல் ஏற்படுத்திவிடலாம். அப்போது மரத்தை வெட்டிவிடுவார்கள். ஓஷோவின் சுவாங்சூ அரங்கத்தை அவர் காடு போல் உருவாக்கிப் பேணிய தோட்டத்தின் மரம் ஒன்று சாய்ந்து விரிசல் ஏற்படுத்தியது. அந்த மரத்தை வெட்டிவிட அனுமதி கேட்ட சீடர்களிடம், “வேண்டுமானால் அரங்கத்தை இடித்துவிடலாம்; மரத்தை வெட்டக் கூடாது,” என்று அவர் சொன்னாராம்.



            என் நூல் சேகரம் வீட்டின் சகல இடங்களையும் ஆக்கிரமித்து வருகிறது. அவற்றுக்கென்று கூடத்தில் உள்ள மூன்று அலமாரிகள் போக மகனின் அறை அலமாரியில் ஓர் அடுக்கை எடுத்துக் கொண்டது, பரணில் ஒரு பகுதியை நிரப்பிவிட்டது, தொலைக்காட்சிக்கான அலமாரிக்குள்ளும் நூற்கள் புகுந்துள்ளன. ஆனாலும், புதிய நூற்களின் வருகை தொடர்கிறது. அது நிற்காது.

            செழித்து மலர்ந்திருக்கும் செடியை மாடோ ஆடோ புகுந்து அழித்துவிடுவது உண்டல்லவா? அல்லது, அசந்த நேரத்தில் மனிதர்களே கூட பறித்துக் கொண்டு போய்விடுவதும் நடப்பதுதானே?             அப்படி என் நூலகத்தில் இருந்தும் பல நூற்களை இழந்திருக்கிறேன். வாசிக்கக் கொடுத்துத் திரும்பி வராதவை.

          தோட்டம் என்றால் தாவரங்கள் மட்டும்தானா? வசதி இருந்தால் சிறு குளம் வைத்து அதில் மீன்களை விடுகிறார்கள். அதுபோல், என் நூலகத்தில் ஒரு பகுதியாக இசைக்கு இடம் இருக்கிறது.

            மண் உலகம் வேறு, நீர் உலகம் வேறு. இரண்டுமே தோட்டத்தில் இடம் பெறுகின்றன. அதுபோல், மொழி உலகம் வேறு, இசை உலகம் வேறு. அவை இரண்டும் என் நூலகத்தில் ஒன்றாக இருக்கின்றன.

            செடியில் மலர்ந்து மணம் வீசும் மலர்கள் எப்படித் தோன்றுகின்றன. அவை வேரின் சாரம் வெளிப்படுவதுதான் அல்லவா? அப்படித்தான், நூற்கள் எனக்கு என் வேர்களைக் காட்டுகின்றன. அதன் சாரமே என் சிந்தையில் ஆயிரம் பூக்களை மலர வைக்கிறது.

            இப்போதெல்லாம், உன் நூலகம் எங்கே என்று யாரையேனும் கேட்டால் மடிக்கணினியை அல்லது கைப்பேசியைக் காட்டுகிறார்கள். அதற்குள் நூறு நூல்கள் வைத்திருக்கிறேன், ஆயிரம் நூல்கள் இருக்கின்றன என்றெல்லாம் சொல்கிறார்கள். நூலகம் டிஜிட்டல் ஆகிவிட்டது. (என்னிடமும் அப்படி ஒரு டிஜிட்டல் சேகரம் இருக்கிறது.) இனி, டிஜிட்டல் சுவர்கள் அமைத்து அதில் தோட்டம் வளர்க்கப்படலாம்.

            “நூற்கள் இல்லாத அறை உயிரற்ற உடலைப் போன்றது” என்றும் சிசரோ சொல்கிறார். முற்றத்தில் தோட்டம் இல்லாத வீடு, அந்தகனின் முகம் போல் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.


Tuesday, July 19, 2022

கோள்களின் அசைவு

 ரூமியின் ஞான உரைகள் - 3

(மவ்லானா ரூமி அவர்களின் ஞான உரைகளின் தொகுப்பான ஃபீஹி மா ஃபீஹி என்னும் பெருநூலின் தமிழாக்கப் பணி அதன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!

அதன் 59-ஆம் உரையில் சோதிடம் பற்றிய ஒரு பேச்சு இருக்கிறது. அதற்கு யான் எழுதிய அடிக்குறிப்பையும் சேர்த்து இங்கே தருகிறேன்.)



”என் கண்களுக்குப் புலப்படும் இந்த பூமியின் மண்டலத்துக்கும் இந்தக் கோளங்களுக்கும் கிரகங்களுக்கும் அப்பால் ஏதோ இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இவற்றைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதே என் கருத்து. இருந்தால் நீங்கள் எனக்குக் காட்டுங்கள் பார்க்கலாம்,” என்று  அந்தக் கணியன் (முனஜ்ஜிம்) சொல்கிறான் என்கிறார்கள்.

            ஆரம்பத்தில் இருந்தே இந்தக் கேள்வி செல்லாத ஒன்றாகும். ஏனெனில் இடமற்ற ஒன்றைக் காட்டும்படி கோரப்படுகிறது. இங்கே, உன் மறுப்பு எங்கே இருக்கிறது என்று எனக்குக் காட்டு பார்க்கலாம். அது எங்குமே இல்லை. அது உன் நாவில் இல்லை, உன் வாயில் இல்லை, உன் நெஞ்சில் இல்லை. இங்கெல்லாம் தேடிப் பார். அவற்றை கண்டந்துண்டமாகக் கிழித்துப் பார். உன் மறுப்புக் கோட்பாடு அதிலெல்லாம் எங்குமே இருக்காது. எனவே, உன் கோட்பாட்டுக்கு ஓர் இடம் இல்லை என்பதை நாம் உணர்கிறோம். உன் கோட்பாடுகளின் மையப் புள்ளியை உன்னாலேயே சுட்ட முடியாத நீ எப்படி அனைத்துக் கோட்பாடுகளையும் படைப்பவனின் மையப் புள்ளியை நிர்ணயிக்கப் போகிறாய்? உன் மீதே ஆயிரம் ஆயிரம் கருத்துக்களும் பார்வைகளும் ஏற்படுகின்றன. ஆனால் அவை உன் கைவசத்தில் இல்லை, உன் கட்டுப்பாட்டில் இல்லை. இவை எங்கிருந்து வருகின்றன என்பதே உனக்குத் தெரியாது. தெரிந்தால் அவற்றை நீ அதிகப்படுத்தலாம். இவை எல்லாம் வந்து சேர்கின்ற தாழ்வாரம் மட்டும் உன்னிடம் இருக்கிறது. ஆனால் அவை எங்கிருந்து வருகின்றன, எங்கே போகின்றன, என்ன செய்கின்றன என்பதை நீ அறிய மாட்டாய். உன் சொந்த நிலைகளையே உன்னால் உறுதியாகச் சொல்ல முடியாதபோது நீ எப்படி உன்னைப் படைத்தவனின் நாட்டம் என்ன என்று கணித்துச் சொல்லப் போகிறாய்?

            ஒருவனின் மைத்துனி வேசையாக இருக்கிறாளாம். அவன் சொல்கிறானாம், “வானத்தில் கடவுள் இல்லை” என்று. குறுமதி கொண்ட குக்கலே! அவன் இல்லை என்று உனக்குத் தெரியுமா? நீ என்ன வானத்தை முழம் முழமாக அளந்து பார்த்துவிட்டாயா? அதன் எல்லைகளைக் கடந்து பார்த்துவிட்டாயா, அவன் அங்கே இல்லை என்று அறிக்கை விடுவதற்கு? உன் வீட்டிலேயே ஒரு பரத்தை இருப்பது உனக்குத் தெரியவில்லை! நீ எப்படி வானாதி அண்டங்களை அறிவாய்? ஆம், நீ வானத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாய். நட்சத்திரங்களின் நாமங்களை அறிவாய். கோள்கள் எல்லாம் ஏதோ ஒன்று என்று பிதற்றுகிறாய். வானாதிகள் பற்றி உனக்கு ஏதேனும் உருப்படியான அறிவு இருந்தால் அல்லது வானத்தை நோக்கி ஒரு காலடி எடுத்து வைத்திருந்தால் இப்படியெல்லாம் அபத்தமாகப் பேசமாட்டாய்.



மொழிபெயர்ப்பாளன் குறிப்புகள்:

உரை – 59: கணியன் (முனஜ்ஜிம் / நஜ்ஜாம்) – வான சாஸ்திரம் (astrology) என்பது விண்மீன்களின் அமைப்பை வைத்தும் அதனுடன் கிரகங்களின் இடங்களை ஒப்பிட்டும் கணிக்கப்படும் முறைமை ஆகும். எனவே அறபி மொழியில் “நஜ்மு” (விண்மீன்) என்னும் சொல்லை வைத்தே இத்துறை தன்ஜீம் என்று அழைக்கப்படுகிறது. வானியலை வைத்துக் கணிப்பவனுக்குப் பழந்தமிழில் கணியன் என்று பெயர். ஆங்கிலத்தில் astrologer, ஃபார்சி மற்றும் உருது மொழிகளில் நுஜூமி, அறபி மொழியில் முனஜ்ஜிம் அல்லது நஜ்ஜாம். முடிவு (result / end) என்பதைக் குறிக்க ஃபார்சி உருது மொழிகளில் அன்ஜாம் என்னும் சொல் இதனடியாகவே வந்திருக்கிறது. விண்மீன்களின் அமைப்பால்தான் காரியங்கள் நிகழ்கின்றன என்னும் சோதிடப் பார்வை அச்சொலுக்குள் பொதிந்துள்ளது. தமிழிலும் கோளாறு என்னும் சொல் அதைப் போன்றதே. கோள் + ஆறு = கோளாறு. ஆறு என்றால் வழி. கோள்கள் செல்லும் பாதையின் அமைப்புக்கு ஏற்பவே விளைவுகள் ஏற்படுகின்றன என்னும் சோதிடப் பார்வை அச்சொல்லில் உட்பொதிந்துள்ளது. கணியன்கள் ஊகங்களையே உரைக்கின்றனர். எனவேதான் புறம் பேசுவதையும் ’கோள் சொல்லுதல்’ என்றும் ’கோள் மூட்டுதல்’ என்றும் தமிழர்கள் குறிப்பிடுகின்றனர்.

விண்மீன்கள் அவற்றின் ஒளியைக் கொண்டே பார்க்கப்படுகின்றன. எனவே சம்ஸ்க்ருதத்தில் ஒளியைக் குறிக்கும் ஜோதி என்னும் சொல்லைக் கொண்டு இத்துறைக்கு ஜ்யோதிஷா என்று பெயர் வந்தது. கணியனுக்கு ஜ்யோதிஷிகா என்று பெயர் (ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அமரகோஷம் என்னும் சம்ஸ்க்ருத நிகண்டு கணியனுக்குக் குறிப்பிடும் எட்டுப் பெயர்களுள் இதுவும் ஒன்று. கணிகா என்னும் பெயரும் இருக்கிறது.) தமிழில் இவ்விரண்டு பெயர்களையும் மரூஉவாக சோதிடம் / ஜோஸ்யம் என்றும் சோதிடர் / ஜோஸ்யர் என்றும் புழங்குகின்றனர். பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில் “சோதிடம் தன்னை இகழ்” என்று கூறியிருப்பதும் சிந்தனைக்கு உரியது.                                      

உரை – 59: சோதிடம் பற்றி: உன் சொந்த நிலைகளையே உன்னால் உறுதியாகச் சொல்ல முடியாதபோது நீ எப்படி உன்னைப் படைத்தவனின் நாட்டம் என்ன என்று கணித்துச் சொல்லப் போகிறாய்? – 

    ஒப்பீடு: அ) உருதுக் கவிஞர் அஹ்மத் ஹுசைன் மாஇல் பாடுகிறார்: “கணியன் ஆகி, பிறருக்கு அவர் நிலை பகர்கின்றேன் / என்னையே தெரியாது எனக்கு, அத்தகைய அசடனாய் இருக்கின்றேன்” (கைர் கோ ஹால் தொ கெஹ்தா ஹூன் நுஜூமி பன் கர் / ஆப்-பீத்தி நஹீன் மஃ’லூம் ஒ நாதான் ஹூன் மெய்ன்.); 



    ஆ) வைரமுத்து எழுதிய “எல்லா நதியிலும் என் ஓடம்” என்னும் நூலில் “பாரசீகம்” என்னும் அத்தியாயத்தில் (எண்:10) ’சோதிடம் தன்னை இகழும்’ கவிதை ஒன்று மேற்கோள் காட்டப்படுகிறது. அந்தப் பகுதியை அப்படியே தருகிறேன்: “தொழில் நிமித்தமாய் வெளியூர் போயிருந்த ஒரு சோதிடம் வீட்டுக்கு வருகிறான். // தன் மனைவி இன்னொருவனோடு சோரம் போய்க் கொண்டிருப்பதைக் கண்டு துடிக்கிறான். அவளைத் தசை கிழியத் தண்டிக்கிறான். // இதை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த சாஅதி கேட்கிறார் - // “அட போடா! / பொண்டாட்டியின் / அசைவுகளை / அறிய முடியாத நீயா / கோள்களின் / அசைவுகளை அறிந்து / குறி சொல்லப் போகிறாய்?” // என்ன கேள்வி?... என்ன கேலி?... // எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தீர்க்கமான விசாரணையின் தெறிப்பல்லவா இது? (பக்.86-87).