Tuesday, November 28, 2017

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 8



Image result for bread and tea
1:151-153 ரொட்டியும் புகழ்ச்சியும்

      அப்போதுதான் நான் உண்டு முடித்த ரொட்டியைப் பற்றியும் பருகி முடித்த நீரைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருந்தேன். இந்த அகச்செய்தி வந்தது: ஒவ்வொரு ரொட்டித் துண்டுக்கும் கனிச்சுவைக்கும் ஒரு நாவும் புகழ்ச்சி மொழியும் உள்ளது. மனித உடலினுள் நுழைந்தவுடன் அது கட்டவிழ்கிறது.

      விண்மீன்களில் இருந்து வரும் தாக்கங்களுக்கும் நிலம் வளி விண் தீ நீர் என்னும் ஐம்பூதங்களாக மாற்றமுறும் பருப்பொருளுக்கும் இந்த மடைமாற்ற உவமை நீளும். அவை அடுத்தக் கட்டத்தில் செடிகளாகின்றன. செடிகள் விலங்குகளாகின்றன. பின்னர் அவை மொழிப்புலம் சிறந்த மனிதர்களாகி, இறைவனின் கருணைக்கும் கோபத்திற்குமான புகழ்ச்சியாகவே ஆகின்றன.

      இம்மர்மத்தின் அம்சங்களைச் சுமந்தபடி ரொட்டியும் நீரும் கரைந்து எனது அங்கங்களில் நகர்ந்து செல்வதைக் கண்டேன். அவை எல்லாம் பேசும் ஆற்றல் கொண்ட பூக்கள். அவை சாட்சி பகர்கின்றன: ”அவனின் புகழைக் கொண்டு துதிக்காத பொருள் எதுவுமில்லை” (17:44).

      எனது நுண்ணறிவும் நினைவும், இருத்தலைத் தாங்கித் தூண்டுகின்ற, மறைகளை வழங்குகின்ற மர்மத்தின் கைகளில் உள்ள மலர்கள் என்பதால், காதலின் சுவையையும் விரிதலின் சுகங்களையும் உணர்த்துதற்கு நூற்களின் வடிவில் எனக்கு ஞானத்தை வழங்குமாறு நான் வேண்டுகிறேன். இவ்வெழுத்துக்களை ஒதுக்கிவிடாதே. ஆதம் நபியின் புறத்தோற்றத்தை மட்டுமே வீழ்ந்துபட்ட ஷைத்தான் கண்டான். அவரின் சுயத்தை அவன் காணவில்லை. இந்த மெருகற்ற சொற்களுக்குள்ளே ரகசியங்கள் இருக்கின்றன. அவற்றைத் தவறவிடாதே.

1:168-169 வெறுமையின் இந்த மகத்துவம்
      
 இன்ப துன்பத்தின், உள்ளமை இல்லமையின் ஊற்றுக்கண் எங்கே? வெறுமையை நோக்கி அப்பக்கம் இழுக்கின்ற ஒன்று இல்லாமல் எதுவும் திருப்தி தருகின்றதா என்ன? இது நம்மிடம் இல்லையோ அதையே வேண்டுகிறோம். எதுவுமற்றதான ஒரு புலத்திலிருந்தே நித்தியம், ஞானம், நிலைத்த வாழ்வு, பெண்களின் அழகு, அங்கீகாரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான நமது ஏக்கங்களைத் தீர்க்கும் மருந்து வருகின்றது.

      வெறுமையில் நீ அங்கே இருக்கின்றாய். உன் பண்புகளில் நான் என்னை அழித்துக்கொள்கிறேன். காலம் இடம் என்பவற்றுக்கப்பால் பிரக்ஞை கரைந்துபோகிறது. வளர்தலையும் தளர்தலையும் நான் அவதானிக்கிறேன். வெறுமையின் இந்த மகத்துவத்தில் நான் எங்கே வாழ்வேன்? இறங்குமிடம் ஏதுமில்லை.

Image result for sufi oneness
1:172-173 ஒரு மணி நேரம்

      அலிஃப் லாம் மீம் 

”நான்” என்னும் பொருளில் இறைவன் ”நாம்” என்று சொல்லும்போது நான் கூறும் எந்தவொரு பிரதிப்பெயரும் மேலோட்டமாகிறது. பதவிப்பெயர்கள் இதழ்களாய் உதிர்கின்றன. ஞானம் வருகிறது. என்னுள் அப்படியொரு ஆனந்த வெள்ளப் பெருக்கினை நான் உணர்கிறேன், அதன் கவனத்தை இழந்துவிடுவேன் போலும். எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன், காதலனும் காதலியும் காதலிப்பதன் பல்வேறு வழிமுறைகளும் எல்லாம் எப்படி ஒரே பொருளாய் இருக்கின்றன என்று விசாரிக்கிறேன்.

      இறைப்பண்புகளும் மனிதர்களும் அப்படி என்பது போல், காதலிலும் ஓர் ஒருமை உள்ளது. இதயத்தில் வேறுபாடுகளுக்கு இடமில்லை. ஏகத்துவமும் காதலியும் மட்டுமே. அந்த பிரசன்னத்தில் ஒரு மணி நேரம் இருப்பதற்காக நான் எனது நூற்கள், நிலங்கள், நற்பெயர்கள், ஒழுக்கங்கள் அனைத்தையும் இழந்துவிடச் சம்மதிப்பேன்.

1:174-175 வியக்கும் வாதம்
      இப்படித்தான் முஹம்மதிடம் இறைவன் பேசினான், ”நிச்சயமாக, தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றியளித்தோம்” (48:1). அவர்களுக்கிடையில் சகவாசம் இருந்தது, ”இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்” (4:105) என்றும், “நாம் உம் நெஞ்சத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?” (94:1) என்றும். அவர்களிருவரும் நண்பர்களைப் போல் உரையாடினர். வேறு எவருக்கேனும் அத்தகைய அனுபவம் வாய்த்ததுண்டா? தெய்வீக ரகசியம் என்பது ஒவ்வொன்றின் ஒவ்வொருவரின் பகுதி என்பதால் ஒவ்வொருவருள்ளும் அத்தகைய நெருக்கம் இருக்கத்தானே வேண்டும்?

      இந்த வியக்கும் வாதத்திற்கு விடை ஒன்று வந்தது. ஒவ்வொரு ஆன்மாவுக்கும் தனித்தன்மையான வழியுண்டு. ஒருவரின் கையில் வேதனை தரப்படுகிறது. இன்னொன்றில் காதல், இன்னொன்றில் காமம். கடுந்தண்டனைகளை ஒருவர் கடந்தாக வேண்டியுள்ளது. இன்னொருவருக்கோ மிதமிஞ்சிய அரவணைப்பு.

      ஆனால், தீர்க்கதரிசிகளுடன் இறைவன் கொண்டுள்ள உறவு வேறொரு தளத்தில் உள்ளது. அதில் அற்புதங்களும் அருளும் மறைவுலகின் காட்சிகளும் வருகின்றன. அத்தளம் காண ஆசைப்படு. இல்லை எனில் நீ எப்போதுமே இறைவனிடம் உஷ்ணம்-குளிர் பற்றியும், உணவு, சம்பாத்யம், உறக்கம், நடை மற்றும் ஞான ரகசியம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் பற்றியுமே பேசிக்கொண்டிருப்பாய்.

      என் பிரார்த்தனை இதுதான். நான் உன்னுடன் தனித்திருக்கும்போது அர்ப்பணமான காதலின் இன்பத்தை எனக்கு அனுபவிக்கக் கொடு. எந்தவொரு ஆசையின் திருப்திக்கும் அப்பால் நானாக அமர்கையில் ஒருங்கிணைவு கொடு.

Related image
Mazhar e sharif, Balkh city, Afghanistan.
 
1:188-189 ஒரே மாதிரியான சில கனவுகள்

      இங்கே பல்ஃக் நகரில் ஒரே இரவில் நல்லோர் உயர்ந்தோர் பலரின் கனவில் தோன்றி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் எனக்கு வழங்கிய பட்டத்தினை ரத்து செய்ய நீதிபதி ஒருவர் முயல்கிறார். “ஞானப் பேரரசு”.

      இது பற்றி நான் இறைவனிடம் பேசினேன். இந்த நீதிபதிக்கு வேறு உள்நோக்கங்கள் உள்ளன. அவர் ரகசியக் காமம் கொண்ட மனிதனைப் போல் இருக்கிறார். பெண்களை ரசித்துப் பார்ப்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை. எனினும் தான் பார்ப்பது பார்க்கப்படுவதை அவன் விரும்பவில்லை. இந்த நீதிபதி சில சொத்துக்களை அடைய விரும்புகிறார். அப்படியே எனது நற்பெயரையும் அழிக்க நினைக்கிறார். தனது சுய நோக்கங்களைக் காண முடியாத ஒருவர் என்ன மாதிரியான இஸ்லாமிய நீதிபதி? வழக்குகளை முடிவு செய்வதற்கான அவரது சுதந்திரமும் அதிகாரமும் பறிக்கப்பட வேண்டும். எவரேனும் அவரது வீட்டினுள் நுழைந்து வெள்ளிக்காசுகளைத் திருட முயன்றால் அவர் மீது ஆயிரம் குற்றங்கள் சுமத்தி ஒறுத்துவிடுவார். ஒருவேளை அவர் வழக்கில் தோற்றால், இஸ்லாம் காய்ந்து காற்றிலடித்துப் போய்விட்டது என்று சொல்வார்.

      நமது அன்பிற்கினிய ஆத்ம நண்பர்களுக்கு ஒரே மாதிரியான கனவுகள் வந்திருக்கின்றன. பிரகாசமான முதியவர் ஒருவர் மலைமீது நின்றபடி என்னை அழைக்கிறார், ‘சுல்தானுல் உலமா! (அறிஞர்களின் பேரரசரே!) வெளியே வாரும். உலகம் உமது ஒளியை அனுபவிக்கட்டும். நீண்ட காலம் நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டீர்கள். வெளியே வாரும்’.

      இங்கொரு நபும்ஸகன் இருக்கிறான். பல குடும்பங்களில் சேவகம் செய்கிறான். அக்குடும்பத்தார்கள் எல்லாம் தமது கனவுகளில் முஹம்மது நபி தோன்றி எனக்கு இந்தப் பட்டத்தை வழங்கியதாகப் பேசிக்கொண்டதை அவன் எனக்குத் தெரிவித்தான். அத்தகு திடீர் வெளிப்பாட்டை எப்படி ரத்துச் செய்வது? எந்த அதிகாரத்தில்? “பஹாவுட்தீனின் நண்பர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர் அறிஞர்களில் பேரரசர்.” என்று பெரிய சபை ஒன்று முழங்கியதைத் தானே கண்டதாக அவன் சொன்னான். எதிரிகள் சபிக்கப்பட்டவர்கள் என்பது இதிலிருந்து அர்த்தப்படவில்லையா? இறைவன் அறிவான். அவன் சிறந்ததைச் செய்து முடிப்பான்.

Related image
1:190 உன்னத ஆரோக்கியம்

      உன்னத ஆரோக்கிய நிலையில் உள்ளோர்க்கு அருள்கள் எல்லாம் கேளாமலே இலகுவாக வந்து சேர்கின்றன. ஆனால் நாம் காயம்பட்டுக் குழம்பிப் போனால் அருளை நாம் யாசித்தே ஆகவேண்டும்.

      நான் எப்படிச் செயல்படுவேன் எனில், ஆசையின் சொர்க்கத்தையும் அதில் திளைக்கும் தேவதைகளையும் எனது முழு உடலும் பெற்றுக்கொள்ளும்.

      தன் பணியைச் செய்ய படைப்பாற்றலுக்கு ஏதுக்களோ கருவிகளோ தேவையில்லை. ஆணை ஏதுமின்றி மறுப்பேதுமின்றி, நிகழ்வுகளும் பொருட்களும் மௌனமாகத் தோன்றி மறைகின்றன. ஒரு கோதுமை மணி மிருதுவாகி அழிகின்றது. பிறகொரு முளை தோன்றி ஒரு புதிய பயிர் வளர்கிறது. இதுபோன்றே மரங்களும் கனிகளும் உற்பத்தியாகின்றன. இப்போது உன் வாழ்வை யோசி. பழுது நீக்கப்படும் இன்பத்தின் அதிசயம் நோக்கி நினது தொழுகைகள் வெறுமையாகவும் கந்தலாகவும் எப்படி மேலே செல்கின்றன என்று யோசி.

1:191-192 நகரங்களும் ஆசீர்வதிக்கப்பட்ட இருளும்

      ”நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா?” (78:6). அப்படுக்கையில் நீங்கள் உமது உடல்களில், உமது முகங்களில் மன்னர்களைப் போல் ஓய்வு கொள்கிறீர். அங்கே மலைகள் உம்மை ஆடாது பிடித்துள்ளன. அவை வலிய மர முளைகளாக இருக்கின்றன.

      நாம் உமக்கு நகரங்களை வழங்கியுள்ளோம், நீவிர் ஜோடியாகத் திளைத்தும் நட்பு கொண்டும் வாழ்வதற்கு. மேலும், ”நாமே இரவைப் போர்வையாக ஆக்கினோம்” (78:10). அதன் கீழ் நீங்கள் காத்திருக்கின்றீர், அதன் ஆசீர்வதிக்கப்பட்ட இருளை விட்டும் இன்னொன்றுக்கு உம்மை நாம் கொண்டு செல்லும் வரை.

Image result for inner flower 
Inner Flower - Corinna Carrara.
 
1:194-195 குருட்டு நம்பிக்கை

      இறைவனின் பண்புகளை நான் உணர்கிறேன். குறிப்பாக, கருணையை. இது எப்போதுமே எனக்கு வேண்டும்.

      பதில்: உன் சுயத்தின் அந்தரங்கத்துள் எனது காதலை எடுத்து வருவோரை மேலும் கூர்ந்து கவனி.

      அந்த அருட்சுமப்போரை நான் அவதானிக்கவே செய்கிறேன். இன்பவுணர்வை என் உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்லும் நுண்ணறிவைப் போன்றவர்கள் அவர்கள். ஆனால் நான் உன்னை இன்னும் நேரடியாக உணர விரும்புகிறேன்.

      எனது மகத்துவத்தை வெளிப்படுத்தும் மன்னர்களை கவனி. நீ வெளித் தோற்றத்தை மட்டுமே பார்க்கிறாய், உள் வேலையை அல்ல.

      மேலுமொரு விடை வருவதையும் உணர்கிறேன்: விதை நடப்படுவது போன்று உன்னை ஒப்படை. மண்ணுக்குள் மறை, சுவடின்றி. தமது குருட்டு நம்பிக்கையுடன் காற்றில் கை நீட்டும் கிளைகள் கொண்டு மரம் வளரத் தொடங்குகிறது. நம்புதலில் இருந்து பெரிய விஷயங்கள் பற்பல வளர்கின்றன. 

Wednesday, November 1, 2017

இதய ஆலயம்




Image result for inner world

                இடமும் காலமும் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் நியதிகளாக இருக்கின்றன. அவை இரண்டையும் தமது கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் சிலருக்குக் கிடைக்கின்றது. 

      ”மனிதர்கள் மீது கோளங்களும் விண்மீன்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் இறை பக்தர்களோ அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்” என்கிறார் சூஃபி ஞானி மவ்லானா ரூமி.

      பூமியில் குறிப்பிட்ட சில இடங்கள் பிற இடங்களை விடவும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், பாவக் கறைகளைக் கழுவித் தூய்மை அடையவும் புண்ணியத் தலங்களை நாடிச் செல்கிறார்கள்.

      அதேபோல், காலத்தில் சில குறிப்பிட்ட மாதங்களும் நாட்களும் நேரங்களும் புனிதத் தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அந்தப் புனிதக் காலங்களில் நிகழவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.

      ஆனால், மனிதப் புனிதர்கள் என்னும் நிலையை அடைந்த ஞானிகளின் நிலையோ வேறாக இருக்கின்றது. அவர்களால் காலமும் இடமும் புனிதமடைகின்றன.

Related image

      ராமனின் அகமியத்தை அறியாத கைகேயி அவன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்று வரம் கேட்டபோது “பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி” அவன் தவ வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டாள். ஆனால், ராமன் இன்னின்ன இடங்களுக்கு வந்தான் என்று குறிப்பிடப்படும் இடங்கள் எல்லாம் இன்று புண்ணியத் தலங்களாகிவிட்டன.

      நபிகள் நாயகம் பற்றிக் கவிஞர் மு.மேத்தா எழுதும் வரிகளை இங்கே நினைவு கூர்கிறேன்:

      ”எந்தச் சிம்மாசனத்திலும்
      அவர் அமர்ந்ததில்லை
      அவர் அமர்ந்த இடமெல்ல்லாம்
      சிம்மாசனம் ஆனது”

      காலத்தின் சங்கதியும் இதுவேதான். பிறப்பு இறப்பு உட்பட, எந்தெந்த நாட்களில் ஞானியர் வாழ்வில் பெருநிகழ்வுகள் நிகழ்ந்தனவோ அந்தந்த நாட்கள் புனிதமாகிவிடுகின்றன

      ஞானிகள் எல்லா இடத்திலும் இறைவனை தரிசிக்கின்றார்கள், எல்லா நேரங்களிலும் இறையுணர்வுடன் இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு முழு உலகமும் ஆலயம் ஆகிவிடுகிறது, அவர்களின் முழுவாழ்வும் வழிபாடு ஆகிவிடுகிறது.

      ”பூமி முழுவதும் எனக்குத் தூய்மையாகவும் ஆலயமாகவும் ஆக்கப்பட்டுள்ளது” என்று நபிகள் நாயகம் நவின்றார்கள்.

      அனைத்தும் புனிதமாக்கப்பட்டுள்ளன.
      வன விலங்குகள் இதனை அறியும்.

      பூமியும் கடலும் மேகங்களும் கூட,
      அன்பு நிறைந்ததொரு இதயம்
      இதனை அறிவது போல்.

      மிகவும் வினோதமாக இருக்கிறது
      நம்மிடமிருந்து
இந்த அறிவைப் பறித்துக்கொண்டு
ஏற்கனவே புனிதமாய் இருப்பவற்றை
ஜெபித்துப் புனிதமாக்கும் ஆற்றலை
மதகுரு தனக்கெனப்
பறைசாற்றிக்கொள்வது
                          
என்கிறார் கிறித்துவ பெண் ஞானி சியனாவின் கேத்தரீன். உலகெங்கும் இறைமை நிறைந்திருப்பதை இதயத்தால் உணர்ந்த அவர்,

நான் மண்டியிட்டு வழிபட இயலாத,
அவனது பிரசன்னத்தால்
புனிதமாகாத
இடம்தான் ஏது?

என்று கேட்கிறார்.


      ஞானிகளால் எப்படி எல்லா இடத்திலும் இறைமையை உணர முடிகின்றது? என்று நமக்கு வியப்பாக இருக்கலாம். அதன் ரகசியம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் இறைவனைத் தமக்குள் ’கண்டு’ விட்டார்கள்.

      புற ஆலயங்களுக்குப் பயணம் செய்வது எளிது. அகத்தையே ஆலயமாக மாற்றுவதுதான் ஆன்மிகம். உண்மையான பக்தர்கள் தம்மையே ஆலயமாக ஆக்கிக்கொள்கிறார்கள்.

      சூஃபிகளுக்கு “தர்வேஷ்” என்று இன்னொரு பெயர் உண்டு. அச்சொல்லுக்கு ‘வாசல்’ என்று பொருள். அதாவது, அவரே பள்ளிவாசல் ஆகிவிட்டார் என்று பொருள்.

      துருக்கி நாட்டில் ஒரு காலத்தில் சூஃபிகளின் தியான மடங்கள் அதிகமாக இருந்தன. அவற்றை “தைக்கா” என்று அழைப்பார்கள். ஆன்மிகத்தை எதிர்க்கின்ற ஆட்சி அங்கே அமைந்தபோது தைக்காக்கள் இடிக்கப்பட்டன. அப்போது சூஃபி ஞானிகளிடையே துருக்கி மொழியில் ஞான வாசகம் உருவானது. அது பிறகு ஒரு பழமொழியாகவே நிலைத்துவிட்டது. “தைக்கா இடிக்கப்பட்டால் தர்வேஷே தைக்கா ஆவார்” என்பதுதான் அந்த ஞான வாசகம்.

      ”நெஞ்சகமே கோயில்” என்கிறார் தாயுமானவர்.

      ”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிறார் திருமூலர். அவர்தான் பக்தர்களை ”நடமாடும் கோயில்” என்று ஞானத்தால் சிறப்பித்துப் பேசினார்.

      இறைவன் நமக்கு உள்ளே இருப்பதை உணராமல் அவனை வெளியே தேடுவது வெட்டி வேலை. தன்னுள்ளே இறைவனை உணராதவர்களுக்கு அவன் வெளியே எங்கும் எதிலும் தெரியமாட்டான் என்னும் கருத்துப்பட,

      ”நட்ட கல்லும் பேசுமோ
      நாதன் உள்ளிருக்கையில்?”

என்று கேட்டார் சித்தர் கனங்களில் சிறப்புப் பெற்ற சிவவாக்கியார்.

      ’ஆமாம், நாதன் உள்ளிருப்பதை உணர்ந்தால்தான் நட்ட கல்லும் பேசும்’ என்று சொல்வது போல்,

      ”உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில்
      உள்ளேயும் காண்பாயடி”

என்று பாடுகின்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

      செல்வர்கள் சிவனுக்குக்
      கோயில்கள் சமைப்பர்

      ஏழை நான்
      என்ன செய்வேன்?

      என் கால்களே தூண்கள்
      ஊனுடம்பு ஆலயம்

      தலையே
      தங்க விதானம்

என்று பாடுகிறார் கன்னட பக்திக் கவி பசவண்ணா.

      உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டில் அமைந்துள்ள கஃபா என்னும் ஆலயம் இருக்கும் திசையை நோக்கியே இறைவனைத் தொழுகின்றார்கள். அந்த ‘கஃபா’வே உலகின் ஆதி ஆலயம் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. எனினும், நடமாடும் ஆலயங்களான ஞானியரின் புகழை உலகுக்கு உணர்த்தும் வகையில் நபிகள் நாயகம் நவின்றார்கள், “இறைவனிடம் சில விசுவாசிகளின் இதயங்கள் கஃபாவை விடவும் கண்ணியம் மிக்கவை”.

Image result for inner light 
 
      தமிழில் இந்தத் தத்துவப் பார்வையை நல்கும் சொல் ஒன்று உண்டு. அதுதான் ’அகம்’ என்னும் சொல். 

      அகம் என்றால் உள்ளம் என்று பொருள். அகம் என்றால் வீடு என்றும் பொருள். எனவே உள்ளமே வீடு என்றாகிறது.

      இல் என்றால் வீடு என்று பொருள். கோ என்றால் அரசர்கெல்லாம் அரசன் என்று பொருள். படைப்புக்கள் அனைத்தையும் படைத்து ரட்சித்து ஆளும் கோ இறைவன் ஒருவனே. எனவே அவனது ஆலயம் ’கோயில்’ எனப்பட்டது. அந்த அர்த்தத்தில் அகம் என்பது கோயில் என்றாகிறது.

      கணவனை வீட்டுக்காரன் என்பதும் அகத்துக்காரர் என்பதும் தமிழ் மரபு. ஆன்மாக்கள் எல்லாம் பெண்கள். அவற்றின் ஒரே கணவன் இறைவன் மட்டுமே என்று நாயக நாயகி உத்தி கொண்டு ஞான உறவின் உண்மை உரைக்கப்படும். அகத்துக்காரன் என்றால் அகம் ஆகிய இதயத்தில் இருப்பவன் என்றும் பொருள்படும். எனவே, இறைவனே அகத்துக்காரன் என்றாகிறது.

      வீடு என்றால் சொர்க்கம் என்றும் அர்த்தமுண்டு. ’வீடுபேறு’ என்று சொர்க்கத்தை அடைதல் குறிக்கப்படும். எனவே அகம் என்பது சொர்க்கம் என்றாகிறது. இறைவன் இருக்கும் இதயம் ஆலயம் மட்டுமா என்ன? அது சொர்க்கமும்தானே?

      அகம் புறம் என்னும் இரு பிரிவும்கூட அறிவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்க்கே. ஏகத்துவ ஞானம் அருளப்பட்டோர்க்கு அகம் புறம் என இரண்டில்லை. அகமே புறம், புறமே அகம்.

      அகத்திலும் புறத்திலும் ஏகனைக் காணும் உண்மை ஆன்மிகம் உற்று உய்க இவ்வுலகு.