Monday, December 29, 2014

’மௌலாயே ஹிந்த்’ கலீமிஷாஹ் நூரி (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்)

(23-11-2014 அன்று இவ்வுலக வாழ்வை நிறைவு செய்து மறுவுலகப் பயணம் சென்றுவிட்ட இறைநேசர் ஞானி மகான் சய்யிதுனா கலீமி ஷாஹ் நூரி (ரஹ்) அவர்களின் நாற்பதாம் நாள் நினைவு நிகழ்ச்சி இன்று. அன்னாரின் நினைவில் 'கலீமி' இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை இது.) 


சய்யிதினா பீர் முஹம்மத் உமர் ஆமிர் கலீமி ஷாஹ் நூரீ (கத்தசல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்)...

      லட்சோப லட்சம் இதயங்களில் இறைஞானத்தின் பேரொளியை ஏற்றி வைத்து மண்ணறைக்குள் மலர்ந்ததொரு சொர்க்கப் பூங்காவில் இன்று மணாளராக மகிழ்ந்திருக்கும் மகான் அவர்களின் பெயரைச் சொன்னால் போதும், முரீதீன்களின் மூச்சுக்கள் ‘அல்லாஹு அல்லாஹ்’ என்னும் திக்ரை ஓதும். இதன் பொருள் என்ன?

      ”எவரைக் கண்டால் அல்லாஹ்வின் நினைவு உங்களுக்கு வருகின்றதோ அவரே வலியுல்லாஹ்” என்னும் ஹதீஸிற்கேற்ப இம்மண்ணில் காட்சி தந்த கருணைக் குருநாதர் எங்கள் காமில் வலீ கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு).

      ’ஹதீஸெ கதீர் ஃகும்’ என்னும் நபிமொழியை இவ்விடம் நினைவு கூர்தல் வேண்டும். அதன்படிக்கு, ரசூலே கரீம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி வ சல்லம்) அவர்கள் தமது உம்மத்திற்கு ஹிதாயத்திற்காக தந்து சென்ற இருபெரும் விஷயங்கள் (ஸகலைன்) ஆவன: அல்-குர்ஆன் மற்றும் அஹ்லெ பைத் என்னும் நபிக்குடும்பத்தார் ஆவர். மறுமையில் ஹவ்ளுல் கவ்தரில் ரசூலெ கரீம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி வ சல்லம்) அவர்களை உம்மத்தினர் சந்திக்கும் வரை இவ்விரண்டும் ஒன்றை விட்டும் மற்றொன்று பிரியாது. (நூற்கள்: சஹீஹ் முஸ்லிம், திர்மிதி, முஸ்னத் அஹ்மத், அல்-முஃஜமுல் கபீர் அத்-தப்ரானீ, கன்ஸுல் உம்மால்)

      ரசூலே கரீம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி வ சல்லம்) அவர்களின் முபாரக்கான இதயத்தில் உள்ள ஏகத்துவ மெய்ஞ்ஞானப் பேரொளி அவர்களது உம்மத்தினருக்கு இந்நாள் வரை தொடர்ந்து கிடைத்து வரும் ஆன்மிக வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகப் புலனாகும். அதாவது, இஸ்லாமிய ஆன்மிகச் சுடரை உம்மத்தினரின் உள்ளங்களில் ஏற்றி வைக்கும் அரும்பணியை அவனியில் ஆற்றிவரும் தரீக்காக்களின் மாபெரும் ஆரிஃபீன்கள் அவ்லியாக்கள் முர்ஷீதீன்கள் காமிலீன்களில் பெரும்பான்மையோர் சாதாத்மார்களாக – அஹ்லெ பைத்தின் வமிசத்தார்களாக இருக்கின்றார்கள். அன்னவர்களைக் கொண்டே அல்லாஹு தஆலா தனது திருமறையின் அகமிய ஞானங்களை உம்மத்தினரிடம் சேர்ப்பித்து ஹிதாயத்தில் நடத்திச் செல்கிறான்.

      அதாவது, “விலாயத்” என்னும் இறைநேசம் அருளப்படுவதற்கு ரசூலே கரீம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி வ சல்லம்) அவர்களின் புனித வமிசம் ஃகாஸ்ஸான காரணமாக உள்ளது. இதர முஸ்லிம்களில் ’விலாயத்’ என்னும் இறைநேசம் அருளப்படுவது அந்தப் புனித நபிவமிச இறைநேசச் செல்வர்களை உரிய முறையில் மதித்துக் கொண்டாடுவதைக் கொண்டே அமையும்.

      அஃலா ஹழ்றத் அஹ்மத் ரஸா ஃகான் பரேலவி (அலைஹிர் ரஹ்மா) அவர்கள் சொல்வதுதான் எத்தனை நிதரிசனமானது:
      ”தேரீ நஸ்லெ பாக் மே(ன்) ஹே பச்சா பச்சா நூர் கா
      தூ ஹே ஐனே நூர் தேரா சப் கரானா நூர் கா”
இந்த வரிகளுக்கு வாழும் உதாரணமாக நபிவம்சத் தோன்றலான கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பரிசுத்தக் குடும்பம் பிரகாசித்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.



      கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ரசூலே கரீம் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி வ சல்லம்) அவர்களின் புனித வமிசத் தோன்றலாக – ஹஸனியுல் ஹுஸைனியாக - இருக்கின்றார்கள் என்பது மட்டுமன்று, இறைமறையாம் திருக்குர்ஆனின் விளக்கங்கள் பொங்கும் இதயம் அருளப்பட்ட மாபெரும் முஃபஸ்ஸிராகவும் இருந்தார்கள். அவர்களுடைய ஆரிஃபானா தஃப்ஸீர் லட்சக்கணக்கானோரின் அகக்கண்களைத் திறந்து வைத்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது.

      பேச்சுத் திறமை என்பது ஆலிம்கள் பலரிடமும் இருக்கலாம். ஆனால் ஆரிஃப் பில்லாஹ்வாகிய கலீமிஷாஹ் சர்கார் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இந்தக் காலகட்டத்தின் முதகல்லிம்களின் ஷாஹ்வாக – பேச்சாளர்க்ளின் பேரசரராக விளங்கியதற்குக் காரணம் கலாமுல்லாஹ்வை விளக்கித் தரும் கலீமாக அல்லாஹ் அவர்களை ஆக்கி வைத்தான் என்பதுதான்.

      அந்தச் சிறப்பான மகாமை அவர்கள் எப்படி அடைந்தார்கள் என்பதும் கவனத்திற்குரியது.

      சய்யிதுனா இஸ்மாயீல் (அலைஹிஸ் சலாம்) அவர்கள் ’தஹீபுல்லாஹ்’ என்னும் அந்தஸ்த்தினை அடைவதற்குக் காரணம் யாது? மதறஸாவில் ஓதிப் பெற்ற பக்குவம் அல்ல. அன்னாரின் தந்தையும் முர்ஷிதுமான சய்யிதுனா இப்றாஹீம் (அலைஹிஸ் சலாம்) அவர்களின் அகப்பார்வையின் அருளே அந்த நிலைக்கு அவர்களை தர்பிய்யத் செய்து உயர்த்தியது என்கிறார்கள் அல்லாமா இக்பால் (அலைஹிர் ரஹ்மா):
      ”யெ ஃபைஸானெ நழர் தா யா கெ மக்தப் கி கராமத் தீ
      கிஸ்னே சிகாயா இஸ்மயீல் கோ ஆதாபெ ஃபர்ஸந்தீ”

      ஆன்மிக அருள்கள் அகத்தில் பொங்க வேண்டும் எனில் ஷைகெ காமில் என்னும் இறைநேசச் செல்வரின் தொடர்பு அவசியமாகும். இதனை வலியுறுத்தவே மாபெரும் வலிமார்கள் எல்லாம், அவர்களில் பலரும் நபிவமிசத்தின் நஸ்ல் காரணமாக பிறப்பிலேயே விலாயத் அருளப் பெற்றவர்களாய் இருந்தபோதும் தமக்கொரு முர்ஷிதைத் தேடி அடைந்து அவர்களிடம் தம்மை ஒப்படைத்தார்கள்.

      அவ்வகையில் கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தம்மை எந்த முர்ஷிதே காமிலிடம் ஒப்படைத்தார்களோ அந்த ஞானப் பேரொளியான நூருல் மஷாஇஃக் சய்யிதுனா நூரிஷாஹ் (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களும் நபிவமிசத் தோன்றலாக, கௌதுல் அஃழம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் திருப்பேரராக விளங்குகிறார்கள். அத்தகைய நூருல் மஷாஇஃகின் புனித தாத்தில் தன்னை ஃபனா ஆக்கிக் கொண்டவர்களாக கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) இருக்கின்றார்கள்.

      மௌலானா ரூமி (அலைஹிர் ரஹ்மா) அவர்களின் நினைவு இங்கே வருகின்றது. ஏனெனில், கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் முஃபஸ்ஸிருல் குர்ஆன்-ஆகப் பிராகசித்ததோடு ஷாரிஹே மஸ்னவியாகவும் திகழ்ந்தார்கள். அன்னாரின் புனிதப் பிள்ளையாகிய அலீமிஷாஹ் நாயகம் (தாமத் பரகாத்துஹும்) அவர்களையும் ஷாரிஹெ மஸ்னவியாக நமக்குத் தந்திருக்கிறார்கள். தமது திக்ரு மஜ்லிஸில் மவ்லானா ரூமி (அலைஹிர் ரஹ்மா) இயற்றிய மஸ்னவி ஷரீஃபின் பைத்துக்களைப் பாடித் தொடங்கவும் விரும்பியிருக்கிறார்கள்.

      இவற்றை நோக்கும்போது  மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களுக்கும் கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் இடையே ஆழமான ஒப்புமைகளை அடியேன் காண்கிறேன்.

      மௌலானா ரூமி (அலைஹிர் ரஹ்மா) அவர்களின் குருநாதர் ஷம்ஸுத்தீன் தப்ரேஸ் (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்கள். ஷம்ஸுத்தீன் என்றால் ‘மார்க்கத்தின் சூரியன்’ என்று பொருள் அல்லவா? சூரியன் என்பது இங்கே அதன் தன்மைக்கு ஆகுபெயராய் நின்று ‘நூர்’ என்னும் ஒளியைக் குறிக்கின்றது அல்லவா? அன்று மௌலானா ரூமி (அலைஹிர் ரஹ்மா) அவர்களுக்கு ஷம்ஸுத்தீன் தப்ரேஸ் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) என்னும் நூர் – ஒளி கிடைத்ததைப் போன்றே நமது கலீமி நாயகம் (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களின் குருநாதராக சய்யிதுனா நூரீஷாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) என்னும் நூர் குருநாதராக அமைந்தார்கள்.

      ஷம்ஸுத்தீன் தப்ரேஸி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் தம்மை ஒப்படைக்காத வரை விலாயத்தின் வாசல் தனக்குத் திறக்கவில்லை என்பதை மௌலானா ரூமி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அதற்கு முன் அவர்கள் மதறாவில் மார்க்கக் கல்வியைக் கற்ற மாபெரும் ஆலிமாக, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உஸ்தாதாக இருந்தார்கள். ஆனால், ரோமானியர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததால் ’ரூம்’ என்று அழைக்கப்பட்ட அக்காலத்துப் பாரசீகப் பரப்பில் வாழ்ந்த பாமரர்களின் உள்ளங்களில் எல்லாம் இறைக்காதலின் நெருப்பைப் பற்ற வைக்கும் வலியுல்லாஹ்வாக அவர்கள் ஆனது ஷம்ஸுத்தீன் தப்ரேஸி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆன்மிகத் தொடர்பினாலேயே ஆனது.
      ”மௌலவி ஹர்கிஸ் மௌலாயே ரூம் ந ஷுத்
      தா குலாமே ஷம்ஸி தப்ரேஸ் ந ஷுத்”

      கலீமி நாயகம் (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களும் இவ்வாறே தம்மை நூருல் மஷாஇஃக் அவர்களிடம் ஒப்படைத்ததால் ‘ஷம்ஸுல் முஃபஸ்ஸிரீன்’ என்னும் உயரிய அந்தஸ்த்தினை அடைந்தார்கள். ரசூலே கரீம் ((ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசஹ்பிஹி வ சல்லம்) அவர்களின் அகமியமான விளக்கங்களைத் தனது முபாரக்கான இதயத்தில் பெற்றுக்கொண்டார்கள். அன்னார் இதனைச் சொல்கிறார்கள்:
      ”ஆமிர் ந முஃபஸ்ஸிர் தா ஆலிம் தா ந ஆரிஃப் தா
      நூரீ சே படீ உஸ்னே தஃப்சீர் முஹம்மத் கீ”

      சய்யிதுனா நூரீஷாஹ் (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களுக்குப் பின் அமைந்த ’மௌலாயே ஹிந்த்’-ஆக அவர்களை நாம் காண்கிறோம். இந்தியா நெடுகிலும் அன்னாரின் பெயரால் ஆயிரக்கணக்கான மஸ்ஜிதுகள் நடைபெற்று வருவதும் லட்சக்கணக்கான முரீதீன்கள் இருப்பதும் இதற்குக் கட்டியம் சொல்லும்.

      இக்காலத்தில் ஆன்மிக ஞானமும் பேரின்பமும் நலிந்து வரும் நிலையை நாம் பார்க்கிறோம். ஹிஜாஸின் காற்றில் இஷ்க்கே ரசூலின் நறுமணம் இன்று இருக்கிறதா? நஜ்தில் உதித்த கர்னுஷ் ஷைத்தானின் வஹ்ஹாபிசக் கொம்போசையில் உம்மத்தினரின் அகச்செவிகள் செவிடாகி விட்டனவா? ஒரு நூற்றாண்டிற்கு முன்பே ஓர் இதயம் இந்த இழிநிலை கண்டு ரத்தக் கண்ணீர் வடித்தது. என்ன செய்ய வேண்டும் எனப்தையும் சுட்டிக் காட்டியது. ஆம், அல்லாமா இக்பால் (அலைஹிர் ரஹ்மா) சொல்கிறார்கள்:
      ”வக்தஸ்த் கெ பக்‌ஷாயம் மைஃகானாயெ ரூமி பாஸ்
      பீரானே ஹரம் தீதம் தர் சஹ்னெ கலீசா மஸ்த்”
      (காலம் வந்துவிட்டது, ரூமியின் பேரின்பக் கூடத்தை மீண்டும் திறக்க
      அறபு நாட்டின் மதத்தலைவர்கள் கிறித்துவத்தின் போதையில் கிடக்கிறார்கள்)

தமிழ்நாட்டில், தலைநகர் மதறாஸில், ’மைஃகானாயெ ரூமி’யைத் திறந்து ’கஷ்ஃபெ இர்ஃபான்’ என்னும் பேரின்பப் பானம் ஊட்டப்படுவதை ஆரம்பித்து வைத்தவர்கள் நமது கலீமி நாயகம் (கத்தசல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களாவர். இந்த இறைக்காதலின் போதை என்பது உஜூதே முத்லக்கின் ஷுஹூதில் லயித்திருக்கும் சுஜூதினால் உண்டாகும் ஹால் ஆகும். இதனையே நமது கலீமி நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘மஹ்வெ சுஜூத்’ என்பதாக நமக்கு அருளியிருக்கிறார்கள்.

      காமில் வலீ சய்யிதுனா முஹம்மத் உமர் ஆமிர் கலீமிஷாஹ் நூரி (கத்தசல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) அவர்களின் வசீலாவைக் கொண்டு அன்னாரின் பரிசுத்த தாத் அடைந்து கொண்ட பாக்கியத்தின் ஃபைஸானை அல்லாஹு தஆலா நம் அனைவருக்கும் காயிம் தாயிமாக அருள்வானாக.

     
      (ஓய்வு நேரம் எங்கே? வேலை இன்னும் இருக்கின்றது
       தவ்ஹீதின் ஒளி முழுமை பெற வேலை இன்னும் இருக்கின்றது
-அல்லாமா இக்பால் (ரஹ்))



யா அல்லாஹ்! உனது வலீயே காமில் சய்யிதுனா கலீமிஷாஹ் நூரீ (கத்தஸல்லாஹ சிர்ரஹுல் அஸீஸ்) ஆன்மிகப் பணியை ஊழிப் பரியந்தம் ஆழ்ந்தும் பரந்தும் இவ்வுலகெங்கும் செழிக்கச் செய்து ஆன்மிகப் பிரகாசத்தை அடியவர்களின் உள்ளங்களில் எல்லாம் இலங்கச் செய்வாயாக! பிஜாஹி முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ சஹ்பிஹி வ சல்லம்).

Wednesday, September 10, 2014

யாதும் ரோஜாவின் பெயரும் - part3

”ஷைகுல் அக்பர்” (மாபெரும் ஞானகுரு) என்று சூஃபி உலகில் போற்றப்படும் முஹய்யுத்தீன் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழிருந்த “ஸ்பெய்ன்” நாட்டில் மூர்சியா என்னும் ஊரில் கி.பி.1165-ல் பிறந்தார். அரபு மொழியில் வியத்தகு புலமையும் மிக ஆழமான ஆன்மிக வெளிப்பாடும் அருளப்பட்டவர். நூற்றுக்கணக்கில் நூற்கள் எழுதியிருந்தாலும் அவரின் மிக முக்கியமான நூற்களாக “ஃபுத்தூஹாத்தெ மக்கிய்யா” (The Meccan Openings, மக்கத்துத் திறப்புக்கள்) மற்றும் “ஃபுஸூசுல் ஹிகம்” (The Bezels of Wisdom, மெய்ஞ்ஞான ஒளிச்சுடர்கள்) ஆகிய இரண்டும் கருதப்படுகின்றன. இவ்விரண்டு நூற்களுடன் இன்னொரு நூலையும் அடியேன் இணைத்துக் கூற விரும்புகிறேன்: “தர்ஜுமானுல் அஷ்வாக்” (The Interpreter of Desires, ஆசைகளின் விளக்கவுரை). ஏனெனில், இந்நூல் இப்னு அரபியின் இளமைக் காலத்துடன் தொடர்புடையது. சிறு வயதிலேயே அவர் எத்தகைய இறைஞானியாக இருந்தார் என்பதற்குக் கட்டியம் கூறுவது. புரிந்து கொள்ள மிகவும் கடினமானது.
ஷைகுல் அக்பர் இப்னுல் அரபியின் தாக்கம் தாந்தேவின் மீது இருந்தது என்பது கிறித்துவ மற்றும் சூஃபி இலக்கியங்களில் பரிச்சயம் கொண்ட எவரும் உணரக்கூடிய ஒன்றே. அப்படி உணர்ந்து கொண்டவர்களுள் சிலரின் கருத்துக்களைத் தருகிறேன்.
இத்ரீஸ் ஷா: “தாந்தேவின் காவியமான ‘டிவைன் காமெடி’ போன்றவற்றின் மூலவூற்றுக்கள் சூஃபி இலக்கியங்களே என்பதை அண்மைக்கால ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. எனினும், ரசவாதிகளுக்கு அவரின் சூஃபித் தொடர்புகள் பற்றிய பரிச்சயம் எப்போதுமே இருந்திருக்கும்.” (Idries Shah, “The Sufis”, Anchor Books, New York, 1971, page228).
இஃது இறைவன் தன்னுடன் தானே ஆடிக்கொள்ளும் கண்ணாமூச்சி விளையாட்டின் ஒரு பகுதி என்று இந்து மற்றும் சூஃபி ஞானிகள் சொல்கிறார்கள். வாஸ்த்தவமாக, நம் இளம் ஞானி (இப்னுல் அரபி)யைப் போல் இதற்கொரு தத்துவத்தை உருவாக்கியவர் வரலாற்றில் வேறு எவரும் இல்லை. இறைக்காதல் பற்றிய அவரின் கோட்பாடுகள் அவரை இஸ்லாமிய உலகம் முழுவதிலும் பிரபலமாக்கியது. தாந்தேவுக்கு நூறு வருடங்கள் முன்பு பிறந்தவரான இப்னுல் அரபியின் கவிதைகளும் தத்துவங்களுமே பீட்ரிஸ் பற்றிய தாந்தேவின் கவிதைகளுக்குத் தூண்டுதலாகவும் வெளிச்சமாகவும் இருந்தன என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.” (’wings of desire (a parable)” http://www.tangdynastytimes.com, )
இப்னுல் அரபி பல நாடுகளுக்குப் பயணம் செய்தவர். ஸ்பெய்ன் நாட்டின் மூர்சியா நகரில் பிறந்த அவர் கி.பி.1240-ல் தனது எழுபத்தைந்தாம் வயதில் டமஸ்கஸ் நாட்டில் உள்ள ஜபல் காஸியூன் என்னும் ஊரில் இறந்தார். வட ஆஃப்ரிக்காவில் மொராக்கோ நாட்டில் உள்ள ’ஃபேஸ்’ என்னும் நகரில் குறிப்பிட்ட காலம் வசித்திருக்கிறார். அவ்வூரில் நடைபெறும் சூஃபி கலாச்சார விழா பற்றி எழுதும்போது ஃபிட்ஸ்ராய் மாரிஸ்ஸே சொல்கிறார்: “முதல் நாள் முழுவதும் சுற்றி அலைந்த பிறகு எங்களுக்கொன்று தெளிவானது. அதாவது நாங்கள் முன்பு நினைத்திருந்தது தவறு, இப்னுல் அரபி அவர்கள் ஃபேஸ் நகரில் அடக்கப் படவில்லை. ஆனால் இந்த ஊருடன் அவருக்கு ஆழமான தொடர்பு இருந்திருக்கிறது. இன்னும் திட்டமாகச் சொல்வதெனில், கி.பி.1195 முதல் 1199 வரை அவர் இவ்வூரில் வாழ்ந்திருந்த காலத்தில்தான் அவர் ஆன்மிக விண்ணேற்றத்தை விவரிக்கும் கிதாபல் இஸ்ராஃ என்னும் நூலினை எழுதினார். இந்நூலின் விவரணைகள் தாந்தேவின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகின்றது. அவரின் பாரிய நூற்கள் எழுதப்படும் முன்பே இந்நூல் எழுதப்பட்டுவிட்டது என்பதை அறிய ஃபேஸில் அவரிருந்த நான்கு வருடங்களும் அவரது சிந்தனையின் உருவாக்கத்தில் இன்றியமையாத இடம் வகிப்பதை எண்ணி எமது பயணம் உத்வேகம் பெற்றது.” (Fitzroy Morrissey  , “Ibnul Arabi and the Fez Festival of Sufi Culture”,  http://fezsufifestival.tumblr.com).

பீர் ஜியா இனாயத் ஃகான்: “மேற்கின் சூஃபி ஞான கிரகிப்பைத் தடம் பார்ப்பது மிகவும் கடினமானது. காரணம், மேற்கின் நூற்களில் அவற்றின் கடன் வாங்கலைப் பற்றிய குறிப்புக்கள் எதுவும் இருப்பதில்லை. ரேமன் லல் தனது ‘Book of Lover and the Beloved” என்னும் நூலுக்கு எழுதிய அறிமுகம் ஒரு விதிவிலக்கு. காதல் பற்றிய தனது அகதரிசனங்களுக்கு சூஃபிகளே உள்ளுணர்வை நல்கினார்கள் என்பதை அவர் குறிப்பிட்டிருக்கிறார். …. … … … … தாந்தே ஒரு சுவையான உதாரணம். குய்டோ காவால்காண்டி உடன் சமகாலத்தில் அவர் கொண்டு வந்த ’இனிமையான புதிய பாணி’யை தீவானெ மஜ்னூன் போன்ற அரபி இலக்கியப் பிரதிகளுடனும் பாரசீக ஆன்மிகக் காதல் பள்ளியுடனும் இப்னு ஹஸ்ம் போன்ற அந்தலூசியக் கவிஞர்கள் மற்றும் அழகியல் அறிஞர்களின் உளவியலுடனும் ஒப்பிட்டுக் காணும்போது அது புதிய ஒன்றல்ல என்பதை உணரலாம். …… ….. ……. தாந்தேவின் வானவரியல் அல்-ஃபாராபி, இப்னு சீனா, அல்-கஸ்ஸாலி மற்றும் இப்னு ருஷ்த் ஆகியோரின் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மிகவும் தோய்ந்திருக்கிறது. டிவைன் காமெடியில் அவர் சித்தரிக்கும் விண்ணேற்றம் என்பது நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மிஃராஜ் என்னும் விண்ணேற்றத்தை முன்மாதிரியாக வைத்து எழுதப்பட்டுள்ளது. எனவே, நரகத்தின் எட்டாவது வட்டத்தில் முஹம்மது நபி தனது நெஞ்சம் பிளக்கப்பட்ட நிலையில் இருப்பதாக தாந்தே எழுதியிருப்பது மிகவும் வஞ்சகமான முரணாகும். சூஃபி இலக்கியங்களுடனான தனது சாய்வை மறைப்பதற்காக தாந்தே இவ்வாறு எழுத வேண்டி இருந்தது என்று கூறுவது சரியல்ல. ஏனெனில் போப்பாண்டவர்களையும் நரகில் தள்ளுவதற்கான துணிச்சல் அவருக்கிருந்தது.
முஹம்மத் (ஸல்) பற்றிய தாந்தேவின் சித்தரிப்பு திருக்குர்ஆனின் 94-வது அத்தியாயத்தின் முதல் வசனத்தை வைத்துக்கொண்டு தாந்தே செய்த வஞ்சகமான கற்பனை என்று எனது நண்பர் ஓமித் சஃபி தனது புதிய நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ”இன்ஷிராஹ்” (விரிவாக்கம்) என்னும் அந்த அத்தியாயம் நபியின் நெஞ்சை இறைவன் திறந்து அன்னாரின் இதயத்தைப் பரிசுத்தம் செய்ததைக் குறிக்கிறது. எவ்வாறாயினும், மத்தியத் திரைக்கடல் பள்ளத்தாக்கில் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உண்டான ஈர்ப்பு மற்றும் பகைமைக்கு தாந்தே சிறந்த உதாரணமாக இருக்கிறார்.” (http://www.sevenpillarshouse.org/article/on_prophecy_and_time).
  • இனி, ஷைகுல் அக்பர் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் தன் வாழ்வில் நிகழ்ந்ததாக விவரிக்கும் அனுபவத்தைப் பார்ப்போம். இஸ்ஃபஹான் நகரைச் சேர்ந்த அபூ ஷஜா ழாஹிர் பின் ருஸ்தம் என்னும் சூஃபி குருநாதரின் மகளான நைஸாம் குறித்து அன்னார் கூறுகிறார்கள்: “இந்த குருவிற்கு ஒரு மகள் இருந்தாள். காண்போரின் பார்வையை ஸ்தம்பிக்க வைத்துவிடும் அழகு கொண்டவள். அவளின் இருப்பே எமது சபைக்கு அலங்காரமாகவும் ஆன்மிக ஒளிகொண்டு காணும் நபர்களை வியப்பில் ஆழ்த்துவதாகவும் இருந்தது. அவளின் பெயர் நைஸாம். “ஐனுஷ்ஷம்ஸ் வல் ஜமால்” (சூரியன் மற்றும் அழகின் கண்) என்பது அவளின் சிறப்புப் பெயர். கற்றவளாகவும் தூய குணம் கொண்டவளாகவும் ஆன்மிக அனுபவமும் பக்தி வாழ்வும் கொண்டவளாகவும் இருந்த அவள் புனித பூமி முழுவதின் தொன்மையும் நபிக்கு விசுவாசமான மாநகரின் அழகிய இளமையும் உருக்கொண்டவளாக இருந்தாள். அவளின் பார்வை, அவளது உரையாடலின் பாந்தம் ஆகியவை எத்தகைய காந்தம்! குழப்பமும் எதிர்ப்பும் செய்யும் மட்டமான மனங்கள் மட்டும் இல்லை எனில் நான் இங்கே அவளது ஆன்மாவினது போன்றே தேகத்தின் அழகுகள் பற்றியும் விளக்கிச் சொல்வேன். அது அருட்கொடைகளின் தோட்டம். அவள் எனது கவிதைகளுக்கான அகத்தூண்டுதலாக இருந்தாள். நான் அனுபவித்த மேன்மையான காதல் பற்றி, இந்த இளம்பெண்ணின் சகவாசம் என் இதயத்தில் ஏற்படுத்திய விழிப்பைப் பற்றி, என் ஆன்மா அனுபவித்த உணர்வு பற்றி எழுத இயலாதவனாக இருக்கிறேன். அவள் எனது தேடலின் பொருளாகவும் எனது நம்பிக்கையாகவும் மிகவும் தூய கன்னியாகவும் இருந்தாள்.

இந்நூலில் நான் எப்பெயர் சொல்லினும் அவளையே அது குறிக்கின்றது. எந்த வீட்டிற்கு நான் சரமம் பாடினும் அவளின் வீட்டையே எண்ணுகிறேன் நான். தெய்வீக உதிப்புக்கள், ஆன்மிகச் சந்திப்புகள், வானவருலகின் அறிவுகளுடனான இந்தப் பூவுலகின் இயைபுகள் ஆகியன பற்றிக் கூறுவதில் நான் ஒருபோதும் சுணங்குவதில்லை. இது ஏனெனில், இந்த உலகை விடவும் மறைவான உலகின் விஷயங்களே என்னை மிகவும் கவர்கின்றன. நான் எதைப் பற்றிக் கவிதை எழுதுகிறேன் என்பதை இந்த இளம்பெண் மிக நன்றாகவே அறிந்திருந்தாள்.”
இவ்வாறு இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் அறிமுகப்படுத்தும் நைஸாம் அன்னாரின் புனிதப் பயணத்தில் வேறொரு பரிமாணத்தில் அவர் முன் தோன்றுகிறாள். அவர் சொல்கிறார், “ஓர் இரவு நான் கஃபாவை இடஞ்சுற்றிக் கொண்டிருந்தேன். சட்டென்று சில கவிதை வரிகள் என் இதயத்தில் உதித்தன. கேட்கும் அளவு அவற்றை நான் சப்தமாகப் பாடினேன். அவற்றை முடிக்கும் முன், பட்டினும் மென்மையான கை ஒன்று என் தோளைத் தொடுவதை உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் முன் இளம்பெண் ஒருத்தி நின்றிருக்கக் கண்டேன். ஈரானில் பிறந்தவள் அவள். கிரேக்கத்து இளவரசிகளில் ஒருத்தி அவள். புனித மக்காவில் வாழ்கிறாள். முகத்தின் அழகிலும், பேச்சின் மென்மையிலும், இதயத்தின் நுட்பத்திலும் அவளினும் மேம்பட்ட ஒரு பெண்ணை அதுவரை நான் கண்டிருக்கவில்லை.” இந்நிகழ்வு கி.பி.1201-ல் நடைபெற்றது.
இப்னுல் அரபி (ரஹ்) அவர்களின் இந்த அனுபவங்களின் உள்ளே பொதிந்து கிடக்கும் ஞானத்தைக் காண்பதற்கு முன் இந்த நிகழ்ச்சி விவரணையின் தாக்கம் கலீல் ஜிப்ரானின் மீது எவ்வாறு இருந்தது என்பதை முறிந்த சிறகுகள் நாவலின் சில பகுதிகளைப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம். தாந்தேவிடம் காணப்படாததும் இப்னுல் அரபியிடம் காணப்படுவதுமான இந்தச் சரித நிகழ்வின் சாயலை நாம் கலீல் ஜிப்ரானிடம் பார்க்கிறோம். இந்தத் தாக்கத்தை, அடியேன் அறிந்த அளவில், இதுகாறும் எவரும் கண்டறிந்து எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. லெபனான் நாட்டின் மகாகவியான கலீல் ஜிப்ரான் அரபி மூல மொழியிலேயே இமாம் கஸ்ஸாலி, இப்னுல் அரபி, இப்னு சீனா போன்றோரின் நூற்களைப் படித்த கிறித்துவர் என்பதை இங்கே நினைவில் வைப்போம். இனி அவரது “முறிந்த சிறகுகள்” நாவலின் சில பகுதிகள்:

“சில நாட்களில் தனிமை என்னைப் பீடித்தது. நூற்களைப் பார்த்தாலே அலுப்பாக இருந்தது. வாடகைக்கு வண்டி எடுத்துக் கொண்டு ஃபாரிஸ் எஃப்பாண்டியின் இல்லத்திற்குக் கிளம்பினேன். மக்கள் சுற்றுலாவிற்கு வருகின்ற பைன் மரங்களை அடைந்த போது வண்டியின் ஓட்டுநர் சற்றே ஓய்வெடுக்க ஒதுங்கினார். இருபுறமும் வில்லோ மரங்கள் நிழலிட்டிருந்தன. அவற்றைக் கடந்த போது பசும்புல்லின் அழகு பரந்து கிடந்தது. அப்பால் திராட்சைத் தோட்டங்களும் வசந்த கால ஆரம்பத்தின் பல வண்ண மலர்களும் காட்சி அளித்தன.
சில நிமிடங்களில், அழகிய தோட்டம் ஒன்றின் நடுவில் தனித்து நின்ற ஒரு வீட்டின் முன்னால் வண்டி நின்றது. ரோஜா மற்றும் மல்லிகையின் நறுமணம் காற்றில் நிறைந்திருந்தது. இறங்கி நான் அந்த விசாலமான தோட்டத்தில் நடந்த போது என்னை வரவேற்க ஃபாரிஸ் எஃப்பாண்டி வருவதைக் கண்டேன். இதயம் தோய்ந்த வரவேற்புடன் அவர் என்னை வீட்டினுள் அழைத்துச் சென்று என்னருகில் அமர்ந்து கொண்டார். தன் மகனைக் காணுமோர் அன்பான தந்தை போல் எனது எதிர்கால வாழ்க்கை பற்றிய திட்டங்களையும் எனது படிப்புப் பற்றியும் விசாரித்தார். என் குரலில் உற்சாகமும் தெம்பும் பொங்க நான் பதில் கூறினேன். ஏனெனில், அப்போது எனது செவிகளில் மகத்துவத்தின் கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது, நான் நம்பிக்கையான கனவுகளின் கடலில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது, வெண்ணிறப் பட்டாடை அணிந்த ஓர் இளம்பெண் வெல்வெட் திரைகளின் ஊடாகத் தோன்றி என்னை நோக்கி நடந்து வந்தாள். நானும் ஃபாரிஸ் எஃப்பாண்டியும் எழுந்து நின்றோம்.
“இவள் என் மகள் சல்மா” என்று அந்த வயோதிகர் சொன்னார். என்னை அவளிடம் அறிமுகம் செய்துவைத்துச் சொன்னார், ”விதி இந்த மகனின் ரூபத்தில் எனது பழைய நண்பனை என்னிடம் மீண்டும் கொண்டு வந்துள்ளது.” சல்மா என்னை ஒருகணம் பார்த்தாள், அந்நியன் ஒருவன் தமது இல்லத்தினுள் எப்படி நுழைந்தான் என்று துணுக்குற்றது போல். அவளின் கை வெண்ணிற அல்லி மலர் போல் இருந்தது. அதை நான் தொட்டபோது ஒரு வினோத வலி என் இதயத்தைத் தைத்தது.” (”முறிந்த சிறகுகள்”, அத்தியாயம் #3: ‘ஆலயப் பிரவேசம்’).
சல்மாவின் சந்திப்பு அவரில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றிப் பின்வரும் அத்தியாயங்களில் கலீல் ஜிப்ரான் சொல்கிறார். சில பத்திகள்:
“ஒவ்வொரு சந்திப்பும் அவளின் அழகிற்கான புதிய அர்த்தத்தை எனக்குத் தந்து அவளின் இனிய ஆன்மாவின் மீதான அகப்பார்வையை நல்கிற்று. ஒவ்வொரு பக்கத்தையும் நான் புரிந்து கொண்டு அவளின் புகழ்களைப் பாடும்படியான, ஆனால் ஒருபோதும் நான் படித்து முடிக்க இயலாததான புத்தகமாக அவள் ஆனாள். தெய்வீக ஆட்சியால் ஆன்மாவிலும் உடலிலும் அழகு நல்கப்பட்ட ஒரு பெண் சத்தியம் ஆவாள். ஏகநேரத்தில் அவள் வெளிப்பாடாகவும் ரகசியமாகவும் இருக்கிறாள். காதலால் மட்டுமே அவளை நாம் புரிந்துகொள்ள முடியும், நற்பண்பால் மட்டுமே தொட இயலும். அத்தகைய ஒரு பெண்ணை நாம் விவரிக்க முயலும் போது அவள் நீராவி போல் மறைந்து விடுகிறாள்.”
“அதிகம் பேசுவதை விடவும் சல்மா மிக ஆழமாக சிந்தனை வயப்பட்டவளாக இருந்தாள். அவளின் மௌனம் ஒருவித இசையாக இருந்தது. அது ஒருவரை கனவுகளின் உலகிற்கு அழைத்துச் சென்று தமது இதயத்தின் துடிப்பைக் கேட்க வைப்பதாகவும் அவரது எண்ண ரூபங்களையும் தன் முன்னே நின்று கண்களுக்குள் பார்க்கும் உணர்வுகளையும் காண வைப்பதாகவும் இருந்தது.
அவள் தனது வாழ்க்கை நெடுகிலும் ஆழமான துக்கத்தின் ஆடையை அணிந்திருந்தாள். அது அவளின் அபூர்வ அழகையும் கண்ணியத்தையும் கூட்டுவதாக இருந்தது. பூத்த மரம் ஒன்று வைகறைப் பனித்திரையின் ஊடாகக் காணும்போது மேலும் அழகாகத் தெரிவதைப் போல்.”

(to be continued...)

Friday, August 22, 2014

...என்றார் சூஃபி - part-8

33 

’நகர்ந்து கொண்டிருக்கும் நத்தைக்குத் திடீரென்று பார்வையுடன் கண்கள் கிடைத்துவிட்டால் என்ன செய்யும்?’ என்று கேட்டார் சூஃபி.

நாங்கள் ஒவ்வொருவரும் யோசிக்கத் தொடங்கினோம். நத்தைக்குக் கண்கள் இல்லை. எனவே அது பிரபஞ்சத்தை இரட்டைப் பரிமாணமாகவே உணர்ந்து கொண்டு வாழ்கிறது. இரு பரிமானத்திலேயே நகர்கிறது. அல்லாமா இக்பாலின் “Six Lectures on the Reconstruction of Religious Thought in Islam” என்னும் நூலில் இக்கருத்து விளக்கப்படுவதை நினைவு கூர்ந்தேன். ஒருவேளை அதனால்தான் அது நிதானமாக நகர்கிறதோ என்னவோ? என்று நினைத்துக் கொண்டு பதில் சொன்னேன், ‘நத்தைக்குக் கண்கள் கிடைத்து விட்டால் அதன் வேகம் அதிகமாகிவிடும்.”

”நிச்சயமாக இல்லை. நத்தை திகைத்து நின்றுவிடும் அன்பர்களே! ”’எங்கே’ இருக்கிறோம்?’ என்றொரு புதிய குழப்பம் வந்து ஸ்தம்பித்துவிடும். மேலும் இடம் என்பதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும். எங்கே செல்வது என்னும் பிரச்சனை புதிதாக முளைத்துவிடும். அதற்கு விடை தெரியாமல் முழிக்கும், புதிகாகக் கிடைத்த கண்களை வைத்துக் கொண்டு! இதயத்தில் இரண்டு விழிகள் உண்டல்லவா? அது சட்டென்று திறந்து கொண்டதும் பக்தன் சிறிது காலத்திற்கு மௌனியாகி விடுகிறான்” என்றார் சூஃபி.

34

“குர்ஆன் ஓதப்படுகிறது. அதனைச் செவியுறும் நீங்கள் யாரை நினைவு கூர்வீர்கள்?” என்று கேட்டார் சூஃபி.

இதற்கென்ன கேள்வி? என்பது போல் எண்ணினேன். ”அல்லாஹ்வைத்தான் நினைவு கூர்வோம்” என்று எங்களில் சிலர் பதில் சொன்னோம். மௌனமாக இருந்தவர்களின் பதிலும் அதுதான். அவர்கள் ஆமோதித்துத் தலையாட்டினார்கள்.

“அதாவது, குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வேதம். அவனின் பேச்சு – கலாம். எனவே அதனைச் செவியுறும்போது அவனின் நினைவு வருகிறது. சரி. மற்ற ஒலிகளில் ஓசைகளில் அவனை நீங்கள் நினைவு கூர்வதில்லை அல்லவா? ஆனால், ஒலிகளுக்கெல்லாம் ஆதாரமாக இருப்பதே அவனின் சிஃபத்தெ கலாம் என்னும் தெய்விகப் பண்புதான் அல்லவா? ஒலிகளுக்குள் அவனின் குரலைக் கேட்க வேண்டும் எனில் வேறு இரு செவிகள் வேண்டும்.

’இறைவா!
உன் நினைவிற்காக
என் இதயத்தின் செவிகளைத்
திறந்திடுவாயாக!’
என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள் (அல்லாஹும் மஃப்தஹ் மசாமிஅ கல்பீ லிதிக்ரிக்).

இந்த அனுபவத்தில் ஆழ்ந்திருந்த ஒரு நேரத்தில்தான் தெருவில் நாய் ஒன்று குரைத்த போது அபூயஜீத் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் சட்டென்று ‘லப்பைக்க’ – ‘உனக்குச் செவிசாய்த்தேன்’ என்று பரவத்தில் கூறினார்கள்.


இதயத்தின் செவிகள் திறந்துவிட்டால் கேட்கும் மொழிகளில் எல்லாம், ஒலிகளில் எல்லாம் உள்ளுறையும் இறைநாதம் கேட்கும்” என்றார் சூஃபி.

Saturday, August 16, 2014

அந்தரிசை


உன் பெயரின்
உச்சாடனம்
சிலபோது
குருவியின்
கூடு பின்னல்
சிலபோது
வண்ணத்துப்பூச்சியின்
கூடு கலைதல்

உரக்க நான்
உச்சரிக்கும்
உன் பெயர்
எல்லோரின் செவிக்கும்
எட்டலாம்

உன் பெயருக்கான
என் இதயத்தின் இசை
நீ கேட்க மட்டுமே

எல்லா மொழியிலிருந்தும்
என்னிடம் பேசினாய்
மௌனமாய்

எல்லா மொழியிலும்
உன்னைக் கேட்டுக்கொண்டேன்
மௌனமாய்

இப்படித்தானே
மெல்ல மெல்ல
அழைத்துச் சென்றாய்
உன் அந்தரிசைக்கு
என்னை நீ

Monday, August 11, 2014

தவளையும் எலியும்


       பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் இறைவனின் இருப்புக்கான அத்தாட்சி. அவனது அறிவின் வெளிப்பாடு. அவன் தன் உள்ளமையில் காட்டிக் கொண்டிருக்கும் அடையாளம். அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஊடகம். என் குருநாதர் அடிக்கடி கூறுவது போல் ‘ஹக் ழாஹிர் ப சூரத்தெ ஷை’ (பொருளின் கோலத்தில் சத்திய ஏகப் பரம்பொருளின் வெளிப்பாடு’).

      ”ஒவ்வொரு பொருளும் தனித்தன்மையானது. நகல் பிரதிகளை இறைவன் படைப்பதில்லை. கோடிக் கணக்கான மரங்களில் கோடானு கோடி இலைகள் இருக்கலாம். ஒன்றைப் போல் மற்றொன்று இல்லை. நீயும் அப்படியே. நீ இல்லை எனில் இப்பிரபஞ்சம் குறையுள்ளதாகவே இருந்திருக்கும்” என்பார் ஓஷோ.

      சூஃபி ஞானிகளில் ஒருவரான ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) அவர்கள் ஒருமுறை நதிக்கரை ஒன்றில் நடந்து கொண்டிருந்தார்கள். அழகான கூழாங்கற்கள் நெடுக விரவிக் கிடந்தன. அதிலொரு கல் வித்தியாசமான வடிவில் அழகாக இருக்கவே அதனை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஜுனைது தன் கையில் எடுத்துக் கொண்டார்கள். உடனே அவர்களின் மனத்தில் ஒரு ஞான மின்னல் வீசியது. இப்பிரபஞ்சத்தில் எது எது எங்கே இருக்க வேண்டும் என்னும் நியதி இறைவனின் ஞானத்தில் உள்ளது. அந்த நியதியின் படி இந்தக் கற்கள் இங்கே இருக்கின்றன. அந்த அமைப்பை மாற்றுவதற்கு நாம் யார்? என்னும் சிந்தனை அவர்களின் மனநிலையின் மீது மிகைத்து நின்றது. உடனே அந்தக் கல்லை அது முன்பு இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு நகர்ந்து சென்றார்கள்.

      இதைச் சொல்லும் போது எனக்கொரு சம்பவம் நினைவு வருகிறது. எம் தாதா பீர் (குருநாதரின் குருநாதர்) ஜுஹூரி ஷாஹ் நூரீ (ரஹ்) அவர்களின் தர்கா ஷரீஃபில் நடைபெறும் உரூஸ் என்னும் வருடாந்திர விழாவிற்காக மூன்று மாதங்களுக்கு முன் கேரளாவின் கருவாரக்குண்டு என்னும் ஊருக்குச் சென்றிருந்தோம் (பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு வழியாக இரண்டு மணிநேரப் பயணம், காரில்). அழகிய கிராமமான கருவாரக்குண்டில் கானாறு ஒன்று ஓடுகிறது. ஒன்றரை மணிநேரம் அதில் சிறுவர்களைப் போல் குளித்து விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த நதியின் படுகையெங்கும் பெரிய சைஸ் கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன. இப்றாஹீம் மவ்லா தன் வீட்டின் நடுவில் வைத்திருக்கும் இண்டோர் தோட்டத்திற்காக ஏற்கனவே கூழாங்கற்கள் தேடிக் கொண்டிருந்தார். இது ஒரு அருமையான ஜாக்பாட். ஞானப் பக்கிகளாகிய நாங்கள் முடிந்த வரை அள்ளி ஒரு சாக்கில் போட்டுக் கொண்டோம். இறைவனின் ஞானத்தில் உள்ள நியதியின் படியான அமைப்பை நாங்கள் மாற்றி விட்டோமா? இல்லை என்று சொல்லலாம். அவை இப்றாஹீம் மவ்லாவின் வீட்டுத் தோட்டத்தில் இருக்க வேண்டும் என்பது இறைவனின் நியதி! அதனால்தான் எங்கள் மனத்தில் அவற்றை அள்ளிக் கொண்டுவரும் உணர்வு மிகைத்திருந்தது என்று சொல்லலாம் அல்லவா?

      ”உன்னுடைய எந்தக் காரியத்தையும் நீ இழிவாகப் பார்க்காதே. அந்தக் காரியத்தைப் படைத்து தன் உள்ளமையில் வெளிப்படுத்தி வைத்த போது இறைவன் அதனை இழிவு படுத்தவில்லை” என்கிறார்கள் முஹையுத்தீன் இப்னுல் அரபி (ரஹ்) (நூல்: ஃபுத்தூஹாத்தெ மக்கிய்யா, அத்தியாயம்#67, பகுதி:4.9.)

      இதே பார்வையில் ஒவ்வொரு வஸ்துவையும் நோக்கும் போது அதை இறைவன் தன் உள்ளமையில் காட்டிக் கொண்டிருப்பதே அந்த வஸ்துவை நாம் இழிவாகப் பார்க்க வேண்டாம் என்பதற்குப் போதுமானதாகிறது என்று உணர்கிறோம். நேற்றைய முன் தினம் நடந்த தியானக் கூட்டத்தில் பேசும்போது ஒரு கருத்தைச் சொன்னேன்:

      ”அனைத்து அறிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன் ’அலீம்’. அறிவு முழுமையும் அவனின் திருக்கல்யாண குணம். அவன் அருளிய வேதம் சொல்கிறது: ‘வஹுவ மஅக்கும் ஐனமா குன்தும்’ (நீங்கள் எங்கிருந்த போதும் அவன் உங்களுடன் இருக்கிறான்’. ஒரு மனிதரை அறிவாளி என்று மக்கள் புகழ்கிறார்கள். காரணம் அவரின் பேச்சு அறிவுபூர்வமாக இருக்கிறது. விஷயம் என்னவெனில் அல்லாஹ் அவருடன் இருந்து அவரைத் தன் ஞானத்தில் அறிஞராகக் கண்டு அவரில் அந்த அறிவுகளை வெளிப்படுத்தி வைக்கிறான். அதாவது அறிவு என்று மக்கள் பார்ப்பவற்றை அவரில் வெளிப்படுத்தி வைப்பது இறைவனின் அறிவுதான். எனவே அவரில் வெளிப்படும் ’அறிவு’ இறைவனின் அறிவிற்கான அத்தாட்சியாக உள்ளது. ஒரு மனிதரை மக்கள் முட்டாள் என்று ஏளனம் செய்கிறார்கள். காரணம் அவரின் பேச்சு முட்டாள்தனமாக இருக்கிறது. விஷயம் என்னவெனில் அல்லாஹ் அவருடன் இருந்து அவரைத் தன் ஞானத்தில் விகடனாகக் கண்டு அவரில் அந்த அபத்தங்களை வெளிப்படுத்தி வைக்கிறான். அதாவது தமாஷ் அல்லது அபத்தம் என்று மக்கள் பார்ப்பவற்றை அவரில் வெளிப்படுத்தி வைப்பது இறைவனின் அறிவுதான். எனவே, அவரில் வெளிப்படும் ‘முட்டாள்தனம்’ இறைவனின் அறிவிற்கான அத்தாட்சியாகவே உள்ளது. சிருஷ்டியில் வெளிப்படுவது அறிவாக இருந்தாலும் முட்டாள்தனமாக இருந்தாலும் அவை இறைவனுக்கான அத்தாட்சிகளாகவே உள்ளன. ஏனெனில் அவை இரண்டிற்கும் பின்னணியாக இருப்பது இறைவனின் பேரறிவே!”

      இப்படி இருக்க, பிரபஞ்சத்தில் எவரையும் எதனையும் நாம் கேவலமாகப் பார்க்க முடியாது. ஒவ்வொன்றிலும் அவனின் வெளிப்பாட்டைக் கவனிக்கும் போது, ’படைப்பு அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பம் என்று ’நபி (ஸல்) அவர்கள் சொன்னதன் உட்பொருளை நம் அகப்பார்வை ஆகிறது.

      இப்படியாக ஒரு புள்ளியிலிருந்து விரிந்து பரந்து, ‘யாதும் ஊரே யாதும் கேளிர்’ என்று தேவதேவன் சொன்ன நிலையில் மனம் திளைத்திருந்த போது சையத் இப்றாஹீம் மவ்லாவிடம் சொன்னேன்: ‘இலக்கியங்களை வாசிப்பதன் பயன் இந்த நோக்கமாதல் வேண்டும். பிரபஞ்சத்தில் ஒவ்வொரு மனிதனுடையவும் ஒவ்வொரு உயிரினத்துடையவும் ஒவ்வொரு பொருளினுடையவும் இருப்பின் இன்றியமையா அழகை ரசிக்க. ஒரு சில கதைச் சொல்லிகளை நான் உங்களுக்குச் சிபாரிசு செய்கிறேன். இந்தியா நெடுகப் பல இடங்களில் பணியாற்றி இன்று சென்னைவாசி ஆன பின்னும் உள்ளத்தில் இன்னமும் கரட்டுப் பட்டிக்காரராகவே இருக்கும் யுவன் சந்திரசேகர். தற்கால எழுத்தாளர்களில் என்னை வெகுவாகக் கவர்ந்த கதைச் சொல்லி. படித்துப் பாருங்கள்.’

      இதை நான் சொல்லி சில நாட்களே ஆகின்றன. யுவன் எழுதிய “ஏமாறும் கலை” என்னும் சிறுகதைத் தொகுதி நூலைக் கல்லூரியிலிருந்து எடுத்து வந்து வாசித்துக் கொண்டிருந்தேன். அதற்குக் காரணமாக அமைந்தது ஒரு மன உந்துதல்.

      கடந்து போன ரமலான் மாதத்தில் ஒளிபரப்பான சஹர் நேர ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகான் சுபூரி ஷாஹ் ஃபைஜி அவர்கள் ஒருநாள் சொன்னார்கள்: “முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பொதுவில் புகழ்ந்து பேசுவார்கள். தமக்குள் பரிகசித்துப் பேசுவார்கள். நபியின் பள்ளியிலேயே வந்திருந்து அப்படிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அபூபக்கர் (ரலி) அங்கே வந்தால் உடனே நபியைப் பற்றி வானளாவப் புகழ்ந்து பேசுவார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் மிகவும் மகிழ்ந்து போவார்கள்; அந்த முனாஃபிக்குகளின் பேச்சை அப்படியே நம்பி விடுவார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களின் மனம் அத்தனை வெள்ளையாக இருந்தது. சூது வாது என்றால் என்னவென்றே அறியாத பரிசுத்த உள்ளம் அவர்களுடையது.”

      யுவன் எழுதிய ‘ஏமாறும் கலை’ என்னும் சிறுகதையில் வரும் தணிகாசலம் சொல்கிறான்: “சொல்லலாம்டா, ஏமாளின்னு யாரெ வேணும்னாலும் சொல்லலாம். யாரையுமே ஏமாத்தறதும் ஈஸிதான். ஆனா, ஏமார்றது இருக்கே, அது எல்லாராலெயும் முடியாது பாத்துக்க. அது ஒரு தனீக் கலெ. ஏமார்றதுக்கு எம்புட்டு சுத்தமான மனசு வேணும்ங்கிறே?’

      இதே நூலினுள் ‘மறுவிசாரணை’ என்றொரு சிறுகதை. அதிலிருந்து ஒரு பகுதி: “அவதார் சிங் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பக்கத்தில் நின்று பாவ் பாஜி தின்று கொண்டிருந்த இளம்பெண் முறைத்தாள். அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவதார் சிங் தொடர்ந்தார்: ... இவள் அந்த ஆள்மீது நாலைந்து வழக்குகள் போட்டிருக்கிறாள். தொழில்ரீதியாக வாங்கிய லஞ்சத்துக்கு ஏற்ப அவர் காரியங்களை முடித்துக் கொடுக்காததுதான் காரணம் என்று பேசிக் கொள்கிறார்கள். ஏதாவது ஒரு வழக்கில் எதிர்மறையாகத் தீர்ப்பு வந்தாலும் போதும், அந்த ஆளின் அரசியல் தொடர்புகள் எல்லாமே அதோ கதியாகிவிடும் என்கிறார்கள். இவள் தன் உயிருக்கு ஆபத்து என்று பாதுகாப்பு கோரி மனுக் கொடுத்திருப்பதாகவும் கேள்வி. ஆக, கயிற்றால் கட்டிக்கொண்டு நட்பு வளர்த்த தவளையும் எலியும், அடிபட்ட புலியும் தப்பி ஓடும் இரையுமாக இப்போது மாறிவிட்டன.”

      இந்தப் பகுதியைப் படித்த போது என் வாசிப்பு சற்று நேரம் நின்றுவிட்டது. ‘கயிற்றால் கட்டிக் கொண்டு நட்பு வளர்த்த தவளையும் எலியும்’ என்னும் குறிப்பு இன்னொரு நூலுக்குள் என்னை கடத்திச் சென்றுவிட்டது. மனதிற்குள் திறந்து கொண்ட அந்த நூலுக்குள் சில நேரம் மானசீகமாக உலவினேன். நான் மிகவும் நேசிக்கும் சூஃபி ஞான நூல்களில் முக்கியமானதொரு நூல் அது. மவ்லானா ரூமியின் ’மஸ்னவி’. தவளையும் எலியும் கயிற்றால் தம்மைக் கட்டிக் கொண்டு நட்பு வளர்த்த ‘ஞானக் கதை’யை அதில் ரூமி சொல்லித்தான் முதன் முதலில் கேட்டேன். அந்தக் குறிப்பை இங்கே போகிற போக்கில் யுவன் சொல்லிச் செல்கிறார். ஒருவேளை அந்தக் கதை ‘பஞ்ச தந்திரா’ நூலில் இருப்பதாக வேண்டும். பஞ்ச தந்திரத்தின் வேறு சில கதைகள் மஸ்னவியில் காணப்படுகின்றன. சிங்கத்திடம் சென்ற முயல், குருடர்கள் தரிசித்த யானை போன்ற கதைகள். அந்தக் காலத்தில் கதைகள் நாடு விட்டு நாடு பயணம் போயிருக்கின்றன. நாடோடிகள் என்பவர்கள் கதைச்சொல்லிகளாகத் திரிந்திருக்கிறார்கள். மவ்லானா ரூமி அவர்களே பல தேசங்களில் பயணம் செய்தவர்தான். வேடிக்கைக் கதைகள் அவனின் பார்வையில் சூஃபி ஞானக் கதைகளாக மாறின. இந்தத் தவளை-எலி நட்புக் கதையும் அப்படித்தான். இனி கதையைக் கேளுங்கள் (கோல்மன் பார்க்ஸ் பிரதியின் வழியாக அடியேனின் வெர்ஷன்).

“ஒரு எலியும் ஒரு தவளையும் தினமும் வைகறை நேரத்தில் ஆற்றங்கரையில் சந்தித்துக் கொண்டன. தரையின் ஒரு மூலையில் அமர்ந்து அவை உரையாடின.

ஒவ்வொரு காலையும், அவை ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்ட கணத்தில், இலகுவாக மனம் திறந்து கொண்டன, கதைகளும் கனவுகளும் ரகசியங்களும் பேசியபடி, சொல்வதா வேண்டாமா என்பதில் அச்சமோ தயக்கமோ ஏதுமில்லாமல்.

அவை இரண்டையும் பார்த்தால் கவனித்தால் நமக்குப் புரியும், முன்னோர் எழுதியிருக்கும்படி, சில நேரங்களில் இரு ஆன்மாக்கள் ஒன்றாகும்போது அங்கே இறைவன் காட்சியாகிறான்.

சட்டென்று சிரிப்புடன் அந்த எலி சொல்லத் தொடங்குகிறது, ஐந்து வருடங்களில் அது சிந்தித்தே பார்க்காத ஒரு கதையை! அது சொல்வதைப் பார்த்தால் கதை முடிய இன்னும் ஐந்து வருடங்கள் ஆகலாம் போல! அனைத்தையும் வாரி அள்ளி அடித்துச் செல்லும் அந்தப் பேச்சு நதியின் பாய்ச்சலைத் தடுப்பது எதுவுமில்லை. உண்மையான நெருக்கம் அது.

இவ்விரண்டிடம் விரக்திக்கு ஒருபோதும் வாய்ப்புக் கிடைப்பதில்லை.
இறையடியார் கிள்ரு, வறுத்த மீனைத் தொட்ட மாத்திரத்தில் அது உயிர் பெற்றுப் பாத்திரத்திலிருந்து வெளியே துள்ளி குதிக்கிறது.

நண்பனுடன் நண்பன் அமர்கிறான். வேதவரிகள் விரிகின்றன. ஒருவர் நெற்றியில் ஒருவர் ரகசியங்களை வாசிக்கின்றனர்.

ஒரு நாள் எலி குறைப்பட்டுக் கொள்கிறது, ‘உன் அருகிருத்தலை (சுஹ்பத்) நான் தேடும் நேரங்கள் உண்டு. நீயோ அப்போது என் குரலைக் கேட்க முடியாத இடங்களில் நீருக்குள் மூழ்கித் திரிகிறாய்.

குறிப்பிட்ட இந்த நேரத்தில் சந்திக்கின்றோம் நாம். ஆனால் குர்ஆன் சொல்வது என்ன? நேசர்கள் நிரந்தரமாகத் தொழுகையில் இருக்கிறார்கள்!

நாளில் ஒருமுறை, வாரத்தில் ஒருமுறை, தினமும் ஐவேளை, இதெல்லாம் பத்தாது. நாம் மீன்களைப் போல. எப்போதும் நம்மைச் சுற்றிலும் கடல் வேண்டும் நமக்கு!

’அடுத்த வெள்ளிக்கிழமை மாலை சந்திப்போம்’ என்றா ஒட்டக மணிகள் சொல்கின்றன? அபத்தம்! ஒட்டகம் நடக்க நடக்க அவை தொடர்ந்து ஒன்றாக ஒலிக்கின்றன, இனிமையாகப் பேசிக்கொண்டு.

உன்னிடம் நீயே நேரம் குறித்துத்தான் வருகை தருவாயா?
விவாடதம் செய்யாதே, தர்க்கமாகப் பேசாதே.
சாவோம் வா. இக்கேள்விக்கு, மரணித்துப் பதில் சொல்வோம்.’

அன்பான தவளையிடம் எலி கேட்கிறது, ‘நீ எனக்கு என்னவென்று தெரியுமா உனக்கு? பகலில், என் உழைப்பிற்கான ஆற்றல் நீ. இரவில், நீயே என் ஆழ்ந்த நித்திரை. காலத்திற்குள் நாம் ஒன்றாய் இருப்பது போலவே காலத்திற்கு வெளியேயும் இருக்க முடியுமா?

ஸ்தூலத்தில் நாம் சந்தித்துக் கொள்வது காலையில் மட்டுமே. மீதி நேரங்களில் எல்லாம் நீ இல்லாதது என்னைத் துளைத்தெடுக்கிறது! ஐநூறு மடங்கு அதிகமாகக் குடித்துத் தொலைக்கிறேன். சாவதற்காக என்பதுபோல் சாப்பிட்டு வைக்கிறேன். தயவு செய்!

எனக்குத் தெரியும், நான் அருகதை அற்றவன். ஆனால் உன் தாராளம் மிகவும் பெரிது!
உனது சூரிய ஒளி இந்தச் சாணிக்குவியலின் மீது விழட்டும், காய வைக்கட்டும். அப்போதேனும் அது குளியலறைக்குச் சூடேற்றும் அடுப்பிற்கு எரிபொருள் ஆகும் அல்லவா?

நான் செய்து வைத்திருக்கும் அபத்தமான கேவலமான காரியங்களை எல்லாம் பார். அந்த எருவிலிருந்து மூலிகைகளும் வாசனைச் செடிகளும் வளர்கின்றன.

நிலத்தில் இந்த அற்புதங்களைச் சூரியன் செய்கிறது. எனில், பாவங்களின் எருவிலிருந்து இறைவன் எத்தகைய அற்புதங்களைச் செய்வான்!

எலி தொடர்ந்து கெஞ்சுகிறது, ‘என் நண்பனே! எனக்குத் தெரியும், உனக்கு நான் அசிங்கமானவன். எனக்கே நான் அசிங்கமானவன்! நான் அசிங்கத்தில் குறையே இல்லை!
ஆனால் பார், நான் இறந்து போய்விட்டால் மிகவும் வருத்தப்படுவாய், இல்லையா? என் கல்லறையின் அருகில் அமர்ந்து சற்றே கண்ணீர் வடிப்பாய், இல்லையா?

நான் கேட்பதெல்லாம், நான் உயிரோடிருக்கும் இந்தச் சில கணங்கள் மட்டும் என்னுடன் இரு என்பதே. இப்போ, நீ எனக்கு வேண்டும் இப்போ!

செல்வந்தன் ஒருவன் சூஃபியிடம் கேட்டான், ‘என் ஆன்மாவின் தலைவரே! இப்போதே ஒரு வெள்ளிக்காசு வேண்டுமா? அல்லது நாளை காலையில் மூன்று வேண்டுமா?’

சூஃபி சொன்னார், ‘நேற்றிலிருந்து ஏற்கனவே என் கையில் உள்ள அரை வெள்ளிக் காசு போதுமானது. இன்றைக்கான முழுக்காசோ நாளைக்கான நூறு காசுகளின் வாக்குறுதி எனக்கு எதற்கு? சூஃபி என்பவன் இக்கணத்தின் குழந்தை (சூஃபி இப்னுல் வக்த் புவத்)’
எலி மேலும் சொல்கிறது, ‘இக்கணம் என் கன்னத்தில் அறையட்டும். அதன் கையில் ரொக்கப்பணம் உள்ளது. எனக்கு அறைகள் கொடு, கழுத்தில், எங்கெங்கும்!’

என் உயிரின் உயிரே! நூறு பிரபஞ்சங்களின் ஆன்மாவே! இந்த நிகழ்கால நதியின் நீராக இரு. அதன் விளிம்பில் மல்லிகைப் பூக்கள் எழட்டும். தொலைவிலிருந்து காண்போர் இங்கு நீரிப்பதை அறிந்து கொள்ளட்டும்.

’அடையாளம் முகத்தில் உள்ளது’. தோட்டத்தைப் பார்த்து நீங்கள் சொல்லிவிடலாம், நேற்றிரவு மழை பெய்ததை. அதன் புத்துணர்ச்சியே அடையாளம்.

மீண்டும், அந்த எலி, ‘நண்பனே! நான் மண்ணால் படைக்கப்பட்டவன், மண்ணுக்கானவன். நீயோ நீரிலிருந்து. எப்போதும் நான் கரையில் இருந்தபடிக் கத்திக் கொண்டிருக்கிறேன். கருணை காட்டு. உன்னைப் பின் தொடர்ந்து நான் நீருக்குள் வர முடியாது. நாம் தொடர்பில் இருப்பதற்கு வேறு வழியேதும் இல்லையா? ஏதேனும் தூதுவர்? ஏதேனும் ஞாபகச் சின்னம்?’

இரு நண்பர்களும் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். நீளமானதொரு கயிறு! அதன் ஒருமுனை எலியின் காலிலும் மறுமுனை தவளையின் காலிலும் கட்டப்பட்டன. அந்தக் கயிற்றைச் சுண்டி இழுப்பதன் மூலம் அவற்றின் ரகசியத் தொடர்பு நினைவூட்டப்பட்டு இருவரும் சந்தித்துக் கொள்ளலாம். ஆன்மா உடலிடம் தொடர்பு கொள்வது போல்.
தவளையைப் போன்ற ஆன்மா அடிக்கடி உடலை விட்டுத் தப்பித்து ஓடிவிடுகிறது. நீரில் ஆனந்தமாய் நீந்துகிறது. பிறகு எலியான உடல் கயிற்றை இழுக்கிறது. ஆன்மா நினைக்கிறது, ‘கைசேதமே! மீண்டும் நான் கரைக்குச் சென்று அந்தக் கூறுகெட்ட எலியுடன் அரட்டை அடிக்க வேண்டும்!’

மறுமை நாளில் உயிர்த்தெழுப்பப் படும்போது இதைப் பற்றி நீங்கள் இன்னும் அதிகமாகக் கேள்விப்படுவீர்கள் அன்பர்களே!

எனவே, எலியும் தவளையும் கயிற்றைக் கட்டிக்கொண்டன, (கண்ணாலங் கட்டிக் கொண்டன!) எனினும், ஏதொ விபரீதம் நடக்கப் போகிறது என்ற மன அரிப்பு அந்தத் தவளைக்கு இருந்தது.

அத்தகைய உள்ளுதிப்புக்களை ஒருபோதும் உதாசீனம் செய்யாதீர்கள். ஒரு காரியத்தைச் செய்வது பற்றி லேசுமாசாக தயக்கம் இருப்பினும் அதற்குச் செவிகொண்டுங்கள். இந்த முன்னெச்சரிக்கைகள் இறைவனிடமிருந்து வருபவை.

அப்ரஹா கொண்டு வந்த யானைப் படையை நினைவு கூர்க. கஃபா இருக்கும் திசையில் அவை நகர மறுத்தன. அந்தத் திசையில் வாதமடித்தது போல் கிடந்தவை, யமன் தேசத்தின் திசைக்குத் திருப்பினால் வேகமாக ஓடின. மறைவிலிருந்தான ஒருவித முன்னறிவு அவற்றுக்கு இருந்தது.

அதே போல் யஃகூப் (அலை) அவர்களின் நிலை இருந்தது. அருமை மகனான யூசுஃப் நபியை அவரின் பிற மகன்கள் இரண்டு நாட்களுக்கு வெளியூருக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னபோது அது பற்றி அவரின் மனத்தில் வேதனை உண்டாயிற்று. அது உண்மையும் ஆனது. எனினும் அவரின் முன்னெச்சரிக்கையை மீறி, வழக்கம் போல், விதியில் இருந்ததே நடந்தது.

குழிக்குள் வீழ்வது எப்போதுமே குருடனாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சில நேரங்களில் பார்வை உள்ளவனும் படவேண்டி இருக்கிறது.

மகானும் சில நேரம் வீழ்ந்து விடுகிறார். ஆனால் அந்தச் சோதனையால் அவர் மேலும் உயரத்திற்கு எழுந்து, பல மாயைகளை விட்டும் தப்பித்து, சடங்குகளை விட்டும் விடுதலையாகி, காரண காரியத் தளைகளுக்கு அப்பாலாகிறார்.

இல்லாமை என்னும் பாலையிலிருந்து இந்தக் காரண காரியம் எப்படிப் புறப்பட்டு இந்த பருவுலகிற்கு வந்தது என்று சிந்திப்பாயாக.

காலையும் மாலையும் அவை வரிசையாக வந்து சேர்ந்து ஒன்றிலிருந்து ஒன்று பொறுப்பெடுத்துக் கொள்கின்றன, ‘தள்ளுப்பா, இப்போ நான் பாத்துக்கிறேன்!’

மகன் பெரியவனாகிறான். தந்தை மூட்டையைக் கட்டிவிடுகிறார்.

காரண காரியத்தாலான இந்த உலகம், ஓர் அகல நெடுஞ்சாலை. ஒவ்வொன்றும் இதில் குறுக்கும் நெடுக்குமாக விரைந்து கொண்டிருக்கின்றன.

நாம் இன்னமும் உட்கார்ந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் உண்மையில் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். திரை மறைவிலான எண்ணங்களைப் போல் காரண காரியக் கற்பனைகள் நம் வழியாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் நம்முள் இருக்கும் காதலின் ஆழமான கிணற்றுக்குச் செல்கின்றன. அங்கே அவை தமது பானைகளை நிரப்பிக் கொண்டு கிளம்புகின்றன.

அவை புறப்பட்டு வரும் மூலம் ஒன்றுண்டு. இங்கே உள்ளே ஊற்று ஒன்றுண்டு. 

தாராளமாய் இரு. நன்றியுடன் இரு. இல்லாதபோது அதை ஒப்புக்கொள்.
இறைப்பேரறிவின் மனத்தில் என்ன உள்ளதென்று நமக்குத் தெரியாது.

இந்த எண்ணப் போக்குவரத்தின் நடுவில் நின்று கொண்டிருக்கும் நான் யார்?

ஆற்றங்கரையில் இருந்த அந்த எலியை நினைவிருக்கிறதா? தவளையை எதிர்பார்த்து நீருக்குள் நீளுமொரு காதல் கயிறு உண்டு.

சட்டென்று ஓர் அண்டங் காக்கை அந்த எலியை லாவிக்கொண்டு பறக்கிறது. ஆற்றின் ஆழத்திலிருந்து மேலெழுந்து, அந்தத் தவளையும், அதன் காலொன்றில் கட்டப்பட்ட மெல்லிய கயிற்றால் காற்றில் தொங்கியபடித் தொடர்கிறது. வியப்படைந்த முகங்கள் கேட்கின்றன, ‘எந்தக் காலத்தில் காக்கா நீருக்குள் சென்று தவளையைப் பிடித்திருக்கிறது?’
தவளை பதில் சொல்கிறது, ‘இது நட்பின் வலிமை’.

நண்பர்களை அருகே இழுப்பது இயற்கை விதிகளுக்குக் கட்டுப்படுவதில்லை. ஆன்மிக நெருக்கம் பற்றி உருவம் ஏதும் அறியாது.

அரிசித் துகள் ஒன்று இன்னொரு அரிசித் துகளை நோக்கி நெருங்குகிறது எனில் அவற்றை எறும்புகள் சுமந்து செல்கின்றன என்று பொருள். கருப்பு நிறத் தரையில் கருப்பு எறும்பு. உங்கள் பார்வைக்கு அவை தெரிவதில்லை. ஆனால், தானியங்கள் ஒன்றிடம் ஒன்று நகர்கினறன எனில் அவை அங்கே இருக்கத்தான் செய்கின்றன.

நம் பறவைக் கூண்டுகளை கை ஒன்று இடம் மாற்றி வைக்கிறது. சில நெருக்கமாகக் கொண்டு வரப்படுகின்றன. சில தூரமாக. பகுத்தறிவு கொண்டு இதனை சிந்திக்க முயலாதே. யார் உன்னை அருகே இழுக்கிறார், யார் இழுக்கவில்லை என்பது பற்றிச் சுதாரிப்பாக இரு.
ஏசுவுடன் எப்போதும் ஜிப்ரீல் இருக்கவே செய்தார், அடர்நீல விதானம் கொண்ட இரவுக் கோட்டையான இந்த உலகிற்கு மேல் அவரைத் தூக்கிச் சென்றபடி, ஏக்கத்தின் கரிய காகம் தவளையைப் பறக்க வைத்தது போல்.