Tuesday, January 26, 2021

தேநீர்க் கடையிலொரு ஆட்டுக்குட்டி

 


(’தட்டப்பாறை’ நாவல் பற்றி)

முஹம்மது யூசுஃப் அவர்களின் மூன்றாம் நாவலான “தட்டப்பாறை” நூலினை யாவரும் பதிப்பகத்தார் அனுப்பி வைத்திருந்தனர். 09 ஜனவரி 2021-இல் தூதஞ்சலில் வரப் பெற்றேன். நான்கு நாட்களில் சுடச்சுடப் படித்து முடித்து வாசிப்பனுபவத்தை எழுதியிருக்க வேண்டும். சூழல் இடம் தரவில்லை. இத்தனை நாட்கள் ஆகிவிட்டது.

            ”தட்டப்பாறை”-யை எழுதிக் கொண்டிருக்கும்போதே பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டார் யூசுஃப். தாய்த் தெய்வ வழிபாட்டு மரபு குறித்தும் கான் வாழ்வியல் பற்றியும் பரக்க வாசித்துக் கொண்டிருப்பதாக அவர் முகநூல் இடுகைகள் இட்டபோது நானும் அசட்டுத்தனமாக ஏதேதோ சொல்லி வைத்தேன். நாவலைப் படித்தபோது வாயடைத்துப் போய்விட்டது. அசுர முயற்சி இது.

            நாவல் வரப்பெற்ற அன்று ஆறாம் அத்தியாயம் வரை படித்தேன். அப்போதே யூசுஃபுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்: “72 பக்கங்கள் வாசித்திருக்கிறேன். உள்ளே இழுத்துக் கொண்டது. இதுதான் நீங்கள் எழுதிய மூன்றில் எனக்கு நம்பர் ஒன். ஏனெனில், இது என் மண், உடல், அகநிலம் பற்றியது.”

            ஆம். “வாழ்வின் மீதான தீவிரத்தேடல் உள்ள ஒருவனுக்கு இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் அவனுடைய நிலத்தின் ஆதாரம்” என்று முஹம்மது யூசுஃபும் கூறுகிறார்.

            காடு என்னும் பொருண்மையின் மீது எனக்குத் தனி ஈர்ப்பு எப்போதுமே உண்டு. குறிப்பாக மலைக்காடுகள். காடுகளைக் களமாக வைத்து புதினம் புனைவதாக யூசுஃப் சொன்னபோது ஜெயமோகன் எழுதிய ”காடு” நாவலை நான் சுட்டியிருந்தேன். ஆனால் இது வேறு என்று யூசுஃப் சொல்லிவிட்டார். உண்மைதான்.

            எவ்வளவோ நாவல்கள் வாசித்ததில் ‘காடு’ என் மனத்தில் ஒரு தனியிடம் பிடித்துக் கொண்ட ஒன்று. அதில் ஒருவித ’ரொமாண்டிசிசம்’ உண்டு. குறிஞ்சித் திணையின் பழங்குடிப் பெண்ணைக் காதலித்த சங்கக் கவிஞன் கபிலனின் மனநிலையை நம்மில் கொண்டு வந்துவிடும் மாய வித்தையை அந்நாவல் செய்யும். ஆனால், யூசுஃபின் “தட்டப்பாறை” தரும் கானகச் சித்திரம் வேறு.

            அது காட்டின் அக ஒளி. இது காட்டின் அக வலி.

            இந்த நாவல் உணர்த்தும் செய்தியைச் சுருக்கமாக எப்படிச் சொல்லலாம் என்று யோசித்தபோது ஒன்று தோன்றியது:

            காட்டு வேடனான, பழங்குடி இனக்குழுத் தலைவனான குகனை இரவிக் குலத் தோன்றல் இராமன் ஆரத் தழுவி அணைக்கும் இடத்தில் கம்பனின் கவி மேதைமை வரைந்த வரி இது:

            ”வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா”

            முஹம்மது யூசுஃபின் “தட்டப்பாறை” அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது: “மானுடம் இன்னும் வெல்லவில்லை.”

            நாகரிகத்தின் பெயரால் வேறுள குழுக்கள் யாவும் ஆதி மானுடனான கானகனை அடிமை செய்ததில், செய்து வருவதில் மானுடம் தோற்கிறது.

            கம்பனின் கவியுளம் உணர்வெழுச்சியில் உரைத்த வரியாகலாம் அது. ஆனால் எதார்த்தத்தில் மானுடம் வெல்வதற்கு அது போதாது.

            வரலாற்றின் கசப்பை அந்தக் கற்கண்டின் சிறுதுண்டு மாற்றி விடாது.

            இன்று (25-01-2021) முகநூலில் முஹம்மது யூசுஃப் தன் இடுகையில் தான் எழுதிய மூன்று நாவல்களின் ஊற்றுக் கண்ணாக அமைந்த தருணங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “விமர்சனம் எழுதிய யாருமே இன்னமும் கதையைச் சொல்லலை” என்று அங்கலாய்த்திருக்கிறார். நியாயமே இல்லை!

            அப்படி ஒரு பத்துப் பத்திகளில் நாவலின் கதையைச் சொல்லிவிட முடியும் என்றால் அது எப்படி நாவலின் வெற்றியாகும்? ஐம்பது அறுபது பக்கங்களில் கூட இதன் கதையைச் சொல்ல முடியாது என்பதுதானே இதன் வெற்றியே? நாவலின் கதை என்ன என்று கேட்போர்க்கு ஒன்று சொல்வேன்: நாவலை வாசியுங்கள்.

            நாவல் நெடுகிலும் நம் சிந்தனையைத் தூண்டுகின்ற தகவல்கள் நிறைய உண்டு. அதில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

            இது என்ன வகையான நாவல்? என்னும் கேள்விக்கு டாக்கு ஃபிக்‌ஷன் (Docufiction) என்று பதில் தருகிறார் யூசுஃப். தமிழில் ’ஆவணப் புனைவு’ என்று சொல்லலாம். இக்கதையின் தலைமை மாந்தருள் ஒருவனான டானியல் இந்தியாவின்,  குறிப்பாகத் தென்னகத்தின் மலைவாழ் பழங்குடியினர் குறித்து ஆவணப் படம் எடுக்கும் பணியில் முயல்பவனாகவே வருகிறான். (இங்கே இன்னொன்றையும் சொல்லிவிடுதல் நலம். இந்நாவலை எழுதியவர் முஹம்மது யூசுஃப் என்னும் முஸ்லிம்தான். ஆனால் இது இஸ்லாமிய நாவல் அல்ல. அவர் எழுதிய முதலிரண்டு நாவல்களிலும் முதன்மைக் கதாப்பாத்திரங்கள் முஸ்லிம்களே. கதைப் பின்னணியும் சவூதி அரேபியா, வளைகுடா நாடுகள் என்று அமைந்தன. ஆனால் இந்நாவலில் முஸ்லிம் சமூகப் பின்னணி கிடையாது. அபு என்றொரு கதாப்பாத்திரம். அவனிடமும் பெரிதாக இஸ்லாமியச் சமய வெளிப்பாடுகளை எதிர்பார்த்து இந்நாவலைக் கையில் தூக்க வேண்டாம். இதில் வரும் கதாப் பாத்திரங்களில் முதன்மை நிலை வகிக்கும் தேவசகாயமும் டானியலும் கிறித்துவர்கள். அவர்கள் இருவரும் கிறித்துவ மிஷனரியில் வளர்க்கப் பட்டவர்கள். நாவலின் திருப்புமுனையாக வரும் இருளன் ஒரு தீவிர கம்யூனிஸ்ட். ஆனாலும், யூசுஃப் எழுதிய மூன்று நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்திருப்பது இதுதான். சஹ்ருதயர்கள் இதனைப் புரிந்து கொள்ளலாம். சொல்லித் தெரிவதற்கில்லை.)



            இந்த நாவல் நம்மிடம் பல்துறை சார்ந்த கண்ணோட்டத்தைக் கோருகிறது. இந்நாவலை நீங்கள் புரிந்து கொள்ள சூழலியல் (Ecology), இனவரைவியல் (ethnography), பண்பாட்டு மானுடவியல் (Cultural Anthropology), இலக்கிய மானுடவியல் (Literature Anthropology), சமயத் தொன்மவியல் (Religious Mythology), மூல மொழியியல் (Nostratic Studies) ஆகிய துறைகளின் அறிவு என்பதினும் உணர்வு தேவைப்படும். ஆம், இவ்வத் துறைகள் சார்ந்த கணக்கெடுப்புகள், விவரச் சேகரிப்புகள், ஆராய்ச்சிகள் என்பதெல்லாம் மலையளவு கடலளவு நடைபெற்றே வந்திருக்கின்றன. அறிவு உள்ளது, உணர்வு (Consciousness) இல்லை என்பதுதான் குறை. என்ன உணர்வு தேவை? நாவல் கிடைத்தவுடன் அதன் முகப்புப் பக்கத்தில் வழக்கம் போல் என் பெயரையும், தேதியையும் கிழமையையும் எழுதி வைத்தேன். அத்துடன் இன்னொன்றும்: “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – கணியன் பூங்குன்றனார்.

            கணியன் பூங்குன்றன் என்பதுதான் அந்த மூதாதையின் பெயரா? கணியன் என்றால் கணித்துச் சொல்லும் சோதிடனா? அப்படியும் சொல்கிறார்கள். கணியன் என்பது பழங்குடிப் பெயர் என்றும் பகரலாம், புரிந்து கொள்ளலாம். பூங்குன்றம் என்பது அவன் வாழ்ந்த ஊரின் பெயர். (மகிபாலன்பட்டி?). ‘ஆர்’ என்று பின்னொட்டி அழைக்கிறோமே அதில் இருக்கிறது அந்தப் பழங்குடி மூதாதைக்கு நாம் தரும் மரியாதை. “உலகில் உள்ள இலங்கையைச் சார்ந்த மலைவாழ் இந்தியத் தமிழர்களுக்கும், என் தமிழ் சொந்தங்களுக்கும் இந்த நூல் சமர்ப்பணம்” என்று எழுதியுள்ளார் முஹம்மது யூசுஃப்.

            இந்த நாவலின் ஒட்டு மொத்தச் செய்திகளையும் ஒரு புள்ளியில் குவித்துச் சுட்டிக்காட்ட முடியுமா? அப்படி ஏதாவது குறிப்பு இந்த நாவலுக்குள் இருக்கிறதா? என்று கேட்டால். முயலலாம். நாவலின் 31-ஆம் அத்தியாயத்தின் இறுதியில் (423-ஆம் பக்கத்தில்) கிடைக்கிறது விடை: “செப்புச் சாமானும் மரப்பாச்சி பொம்மைகளும் வரையாடும்.” இந்த மூன்றையும் தமிழகம் தொடங்கி உலகம் முழுவதும் நிலம் சார்ந்து விரித்துச் சென்றால் இந்த நாவலின் கதையாக மலரும் என்று படுகிறது. செம்பு என்பதுடன் மரகதமும் தங்கமும் வைரமும் இத்தியாதி உலோகச் செல்வங்களும் விரிவடையும். மரப்பாச்சி என்பதுடன் ஈத்தல், வன்னி, பனை என்று பற்பல மரங்கள் விரிவடையும். வரையாடு என்பதுடன் குறும்பாடு, கன்னி, கொடி, மோளை, பள்ளை, செம்போரை என்று ஆட்டின் பல்வேறு வகைகளும் விரிவடையும். இவற்றுடன் இந்த இயற்கை வளங்களுடன் இயைந்து வாழ்ந்த பல்வேறு பழங்குடிகள் வந்து நிற்பர். அவர்களை அடிமைகளாக்கிய ஆதிக்க அரசியல். அதை நிகழ்த்தியவர்களிடம் இருக்கும் சாதியம் என்னும் கட்டமைப்பு என்று விரிகின்றது இந்நாவலின் கதை.

            நாவலை வாசிக்கையில் மேலதிகமாக என் சிந்தனையில் பட்டவை, நான் எழுதி வைத்த குறிப்புகள் ஆகிய்வற்றில் சிலவற்றை சொல்ல நினைக்கிறேன்.

            இருளர் சமூகம் வாழ்ந்த பெருங்காடு கார்ப்பரேட் சாமியாரிடம் சிக்கிக் கொள்கிறது. இருளர்கள் வேறிடத்திற்குத் துரத்திவிடப் படுகின்றனர். அச்சூழலில், அழுகின்ற தன் குழந்தைக்குக் கதை சொல்கிறாள் பழங்குடித் தாய். அவ்விடத்தில் யூசுஃப் எழுதுகிறார்: “அவளுக்கு அமெரிக்கா ஆஸ்திரேலியா எல்லாம் சொல்லத் தெரியாது. எட்டுத் திசையில இருந்து ஆளுங்க வந்தாங்கன்னு சொல்லுவா.” இப்படித்தான் அமெரிகாவில் கொலம்பசின் கப்பல் வந்து இறங்கியபோது அங்கிருந்த செவ்விந்தியப் பழங்குடிகள் உணர்ந்திருப்பார்கள். மெல் கிப்சன் இயக்கிய “அபோகேலிப்டோ” திரைப்படத்தில் வரும் இறுதிக் காட்சியை இவ்வரி எனக்கு நினைவூட்டிற்று. கொலம்பஸும் அவரது ஆட்களும் வந்திரங்கிய கப்பலைச் சுட்டிக்காட்டி அது என்ன என்று பழங்குடிப் பெண் தன் கணவனிடம் கேட்கிறாள். “அது என்னன்னு தெரியல. அது ஆட்களை இங்க கொண்டு வருது” என்று அவன் சொல்கிறான். உலகெங்கிலும் பழங்குடியினர் ஒன்றுதான்.


            
ஏரலுக்கு அருகில் இருக்கும் மொட்டச்சி குடியிருப்பு என்னும் கிராமத்தில் புல்லாங்குழல் செய்யும் கலைஞர் பற்றி ஆறாம் அத்தியாயத்தில் பேசுகிறார் யூசுஃப். தஞ்சாவூர்ப் பகுத்யிலும் புல்லாங்குழல் செய்கிறார்கள் என்பது என் பால்ய காலத்து நினைவு. சரி, ஒரு முக்கியமான குறிப்பு. “திருநெல்வேலிக்கு பழைய பேரு ’வேணுவனம்’-தான்.” இதனினும் பழைய பெயர் இருந்திருக்க வேண்டும் என்றே நான் ஊகிக்கிறேன். மூங்கில் வனம்? இருக்கலாம். வேணுவனம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பெயர்களே தம்முள் ஒரு நெடிய வரலாற்றை வைத்திருக்கின்றன. வேணுவனம் என்பது வேட்டுவப் பழங்குடி வாழ்ந்த காலத்துப் பெயராகவும் பிறகு அது மருதத் திணையின் நாகரிகம் ஏற்பட்டதும் நெல்லையூர் ஆகி அதன் பின் வருண வர்க்க கட்டமைப்புகள் இறுகிய நிலையில் திரு-நெல்-வேலி (திரு- பிராமணீயம் / புரோகிதம்; நெல் – வேளாளர் – விவசாயம்; வேலி – உரிமையாளர் – பண்ணையார்) என்றாகியிருக்க வேண்டும். அதேபோன்று, மான் கூட்டம் – மரை – மேய்ந்திருந்த இயற்கையான வனப்பகுதி ‘மரைக்காடு’ என்பது ‘மறைக்காடு’ என்றாகித் திரு என்பதும் இடப்பட்டுப் பின்னர் ‘திருமறைக்காடு’ என்பதும் வடமொழியில் பெயர்க்கப்பட்டு “வேதாரண்யம்” ஆகிவிட்டது. இதுபோல் எத்தனை எத்தனை ஊர்ப்பெயர்கள் மாறினவோ? அவை எல்லாம் பழங்குடியினரிடம் இருந்து நிலங்கள் ஆதிக்க சக்திகளின் கைக்கு சென்று சேர்ந்த வன்முறை வரலாற்றின் அடையாளங்கள்.

            செமித்தியச் சமயங்கள் என்று குறிப்பிடப்படும் யூதம் கிறித்துவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்றும் உலக மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மூதாதை இணையரையே சுட்டுகின்றன: ஆதம் – ஹவ்வா (ஆதாம் ஏவாள் – Adam and Eve.) சொர்க்கத்தில் இருந்து ஆதம் நபி இறக்கப்படட இடம் சிரந்தீப் என்று அழைக்கப்படும் இலங்கை (ஈழம்) என்று இஸ்லாமியச் சமய மரபு கூறுகிறது. எனில், உலகின் முதல் மாந்தர் தமிழராதல் வேண்டும் என்னும் கோட்பாட்டுடன் ஆதி மனிதன் குறித்த தேடல்களை நாம் நிகழ்த்துவதில் தமிழன் என்கிற முறையில் தனி ஈடுபாடு எனக்குண்டு. அந்த ஈடுபாடு முஹம்மது யூசுஃபுக்கும் இருப்பதை இந்த நாவல் நெடுகிலும் பார்க்க முடிகிறது. அந்தக் குறிப்புக்களை எல்லாம் திரட்டி மேலாய்வு செய்து பார்க்க வேண்டும்.

            உகாய் என்றொரு மரம். அதற்கு “உவா” என்றும் பெயருள்ளது. பிலு என்கிறது மகாபாரதம். அறபிகள் அதனை அராக், மிஸ்வாக் என்னும் பெயர்களால் அழைக்கின்றனர். தமிழகத்தில் இருக்கும் அந்த மரம் அரேபியாவிலும் இருக்கிறது. நபிகள் நாயகத்தின் வாழ்வியல் பதிவில் அந்த மரம் இடம் பெற்றுள்ளது (புகாரி: 3406) என்னும் செய்திகளை யூசுஃப் தருகிறார். “உவா” என்பது பாலை நில மரம். தமிழ் மரபில் பாலைத் திணையின் தெய்வம் கொற்றவை. எனில், உவா என்பது ஹவ்வா என்னும் முதற்பெண்ணைக் குறிப்பதாகலாம். ஹவ்வா என்பது அறபி உச்சரிப்பு. தமிழில் அது அவ்வை / அவ்வா. ஆங்கிலத்தில் Eve. ஆங்கிலத்தில் இருந்து மீண்டும் தமிழுக்கு ஒலிபெயர்த்து ஏவாள் என்று ஆக்கியுள்ளார்கள். இது ஒரு தொடர்புத் துலக்கம். இப்படி பன்னூறு சொற்களுக்கு இடையிலான தொடர்புகள் ஒவ்வொன்றாகத் துலங்கி அவை யாவும் ஒரே சித்திரத்தை வரைந்து காட்டும்போது ஏற்படும் உணர்வு அற்புதமானது.

            ”ஆதம் – ஏவாள் – பாம்பு (சாத்தான்) – விலக்கப்பட்ட கனி” என்பது ஆதி மனித இணை குறித்த யூத கிறித்துவ இஸ்லாமியத் தொன்மக் கதையின் குறிப்புக்கள் (சாத்தான் பாம்புருவம் கொண்டிருந்ததாக இஸ்லாமியப் பிரதியில் குறிப்பில்லை.) இது பற்றி இன்னொரு இடத்தில் யூசுஃப் எழுதுகிறார்: “Python வார்த்தைக்கு அரபி அர்த்தம் ‘அல் சஅபன்’. Sapan மருவி செர்பன் (லத்தீன்) ஆனது. பின் அது வழக்கில் serpent ஆனது. ஆக, மலையும் மலை சார்ந்த “பூமித்தாயின் முதல் கருவறை” என கருதும் இலங்கையில் ஆதம் மலை உள்ளது. ஊவா மாகாணமும் உள்ளது.” (ப.97). இலங்கையின் இந்தப் பகுதிகளில் அதிகமாக ”விளா” மரங்கள் உள்ளன. விளாம்பழத்தை ஆங்கிலத்தில் Wood Apple என்றே அழைக்கிறார்கள். “இனி மீதம் இருப்பது ஆப்பிள் மட்டுமே. நான் அந்த ஆதிக் கதைக்கு விளாம்பழத்தை (Wood Apple) சாட்சியாக முன்வைக்கிறேன் இப்படியும் இருக்கலாம் என்ற அதீத ஆசையில்.” (ப.97) என்கிறார் யூசுஃப்.

            நாவலின் பத்தாம் அத்தியாயத்திற்கு இலங்கையின் நுவரெலியா (அறபியில் நுவரா எலியா என்றால் ‘வசந்த காலத்தில் பூக்கும் முதல் பூ’ என்று அர்த்தமாம்) என்னும் பெருங்காடுதான் களம். அங்கே, ‘உலகப் பிரசித்திப் பெற்ற ஆதி அனாதை’ என்று யூசுஃப் குறிப்பிடும் ஏவாள் தன் முதல் பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள். கருவுற்றது முதல் உடலில் ஏற்படும் மாற்றங்களை அவள் எதிர்கொள்வதும் பேறுவலி ஏற்பட்டு - ‘சுயப் பிரசவம்’ என்று ’கருவாச்சி காவிய’த்தில் வைரமுத்து சொல்வது போல் – பிள்ளை பெற்றெடுப்பதுமான காட்சிகள் அடிவயிற்றில் பந்துருள வைக்கின்றன. (பிரசவத்தின் போது ஆதி பிதா ஆதம் நபி அங்கே அருகில் இருக்கவில்லையா? என்று யோசிக்க வேண்டியுள்ளது.)

            உலகின் முதல் பெண் ஆப்ரிகாவைச் சேர்ந்த கறுப்பினப் பெண்தான் என்று மரபணு ஆய்வு ஒன்று கண்டறிந்திருப்பதாக நாளிதழில் வந்த செய்தி ஒன்றை முன்பு கண்டிருக்கிறேன். “மைட்டோகாண்ட்ரியா (Mitochondrial Eve) எனும் விஞ்ஞான கூற்றுப்படி அவள் ஒரு கறுப்பு நிறப் பெண். மேற்கு தொடர்ச்சி மலை வழியாக அவள் நடந்து சென்று சேர்ந்த இடம் கிழக்கு ஆஃப்ரிக்காவின் பாலே மலைக்குன்றின் (Bale mountain – Harenna forest) ஹரென்னா காடு” (ப.140) என்று எழுதுகிறார் யூசுஃப். இது தொடர்பாக இன்னொரு முக்கியமான செய்தியையும் தருகிறார். ஃபிரான்ஸிஸ் புருட்டன் என்பவர் மரபணு அடிப்படையில் மனித குலப் பரவலை ஆராய்ந்து ஒன்று சொல்கிறார்: “ஆப்பிரிக்க மரபணு ஆப்பிரிக்கா முழுவதும் இல்லை.” பின்னாளில், இத்தாலிய மரபணு ஆராய்ச்சியாளர் லூகாகவாலி சக்போர்ஸா ஆப்பிரிகாவிலும் ஆஸ்திரேலியாவிலும் ஆராய்ந்த பின் தமிழகத்தில் தனது ஆராய்ச்சியை நிகழ்த்தினார். தேனி மாவட்டம் உசிலம்பட்டியில் ஜோதிமாணிக்கம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ’விருமாண்டி’ என்பவரை ஆய்வுக்குட்படுத்தினார். கச்சிதமாகப் பொருந்தியது. “ரிச்சர்ட் பிரான்ஸிஸ் புருட்டன் இன்று இருந்திருந்தால் அவர் எத்தியோப்பிய ஹராராவில் தங்கி இருந்ததற்குப் பதில் தமிழகத்தில் தேனியைச் சுற்றி அலைந்திருப்பார்.” (ப.178) என்கிறார் யூசுஃப். இது போன்ற ஆய்வுச் செய்திகளை எழுதுவதற்கு அவர் ஒரு பயோமெடிக்கல் இஞ்சினியர் என்பது கை கொடுக்கிறது. மொழி ஆய்வென்று இந்தியாவுக்கு வந்தவர்கள் வடநாட்டில் மட்டுமே கூடாரம் போட்டுவிட்டு இந்தியாவில் அனைத்துக்கும் மூல ஊற்று சமற்கிருதமே என்று முடிவு கட்டிக்கொண்டு போய்விட்டார்கள். தமிழகத்தின் மீது ஆய்வுப் பார்வை விழவும் உண்மை உலகுக்குச் சொல்லப்படவும் போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மானுடவியல் ஆய்விலும் இதுதான் நிலை.

            தமிழரின் தோற்றமும் பரவலும் என்று ஆய்வு செய்யப் புகுந்தால் நான்கைந்து கோட்பாடுகள் ஆதாரங்களின் பலத்துடன் நம் முன் வந்து நிற்கும். குமரிக்கண்டம் (லெமூரியா) என்னும் கோட்பாடு மிகப் பிரசித்த்மான ஒன்று. இந்தியா முழுவதும் தமிழர்கள் பரவியிருந்தனர், பின்னர் ஆரியரின் ‘வருகை’யால் கீழ் நோக்கி அடைபட்டனர் என்பதொரு பார்வை. அண்மையில் இரா.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் செய்திருக்கும் ஆய்வுகள் சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே என்று நவீன செயற்கைக்கோள் தொழில்நுட்ப உதவியுடன் உறுதிப்படுத்துகிறது. துறைமுகப் பொறியாளர் பா.பிரபாகரன் அவர்கள் செய்திருக்கும் ஆய்வு (’குமரிக்கண்டமா?சுமேரியமா?) தமிழரின் ஆதிநிலம் சுமேரியா என்றும், மெசப்பொட்டோமியாவில் இருந்த யூஃப்ரேட்ஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகள்தாம் பழந்தமிழிலக்கியம் குறிப்பிடும் குமரியாறும் பஃறுளியாறும் ஆகும் என்றும், கிரெட்டெ (Crete) தீவுகளில் தமிழர் வாழ்ந்த தொல்லியல் சான்றுகள் இருக்கின்றன என்றும், அதன் முன்பு ஆட்களே இல்லாத நிலையில் இந்தியாவிற்குள் முதன் முதலில் குடியேறியவர்கள் சுமேரியத்திலிருந்து வந்த தமிழரே என்றும் காட்டுகின்றது. இவையெல்லாம் இன்னும் தொகுத்து முடிக்கப்படாத பெருங்கதை ஒன்றின் சிறு சிறு பகுதிகள் என்றே கருதுகிறேன். அந்த ஒற்றைப் பெருங்கதையை மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் வாசித்துப் பார்ப்பதற்கு வசதி நல்கும் நூல்களில் முஹம்மது யூசுஃபின் இந்த நாவலும் ஒன்றாகிறது.

            உலகில் மருதத் திணையின் விவசாய நாகரிகத்தை முதன் முதலில் உண்டாக்கியவர்கள் தமிழர்களே என்று ஏற்றால், தமிழர்கள் பாரசீகப் பகுதிகளில் இருந்தனர் என்பதையும் ஏற்க வேண்டும். “வேட்டையாடி விவசாயகுடியா மாறுன நிலம் பாரசீகம்தான்.  … … … விவசாயம்னு வரலாற்றில் எதைத் தேடுனாலும் மெசபடோமியா, யூப்ரடிஸ், டைகிரிஸ்னு வளைகுடா மண்ணைத்தான் சாட்சியா காட்டும்” (ப.193) என்கிறார் யூசுஃப்.

            ஆதமுக்கும் ஏவாளுக்கும் வெவ்வேறு மரபுகளில் உள்ள வெவ்வேறு பெயர்கள் யாவை? இந்நாவலில் விடைகள் உள்ளன. அத்தகைய பெயர்களை எல்லாம் திரட்டி மேலாய்வு செய்யலாம். “உலகின் ஆதி அனாதையான ஆதமின் மனைவி சுசாவின் காலடி சுமக்கும் நினைவுத் துகள்கள்” (ப.204) என்று யூசுஃப் தரும் குறிப்பு ஓர் உதாரணம். ஆதிப் பெண்ணுக்குத் தமிழில் எத்தனைப் பெயர்eeகள் இருக்கலாம், மூதாதையின் மீதான மதிப்பு என்பது காலப்போக்கில் தெய்வமாக்குதல் (deification) என்னும் நிலையை எட்டி அதன் மீது தத்துவக் குறியீட்டாக்கங்களும் தொன்மங்களும் ஏற்றப்பட்ட பிறகு அது என்னென்னெ பரிணாமங்களை அடைந்திருக்கும் என்றெல்லாம் ஆய்வு செய்யும்போது இலங்கை மற்றும் தமிழகத்து ஊர்ப்பெயர்களே ஆதன் என்னும் ஆதம் (திரிபு: ஆதாம்) மற்றும் அவரது மனைவியான அவ்வை என்னும் ஹவ்வா ஆகியோரின் அடையாளங்களை நமக்குச் சுட்டுவதைக் காணலாம். பாய் நெசவுக்குப் பெயர் போன பத்தமடை என்னும் ஊரினருகே இருக்கிறது ‘மூலச்சி’ என்னும் சிற்றூர். ‘மூலச்சி’ என்பதே முதற் பெண்ணைக் குறிக்கும் சொல் அல்லவா?

            மூலச்சி என்னும் ஊரைப் பற்றிப் புவிசார் குறிப்பு ஒன்றை யூசுஃப் தருகிறார்: “அகத்திய மலைக்கும் மாஞ்சோலைக்கும் இடையில் உள்ள ஊர் என்பதால் வாலில் வெண்ணிற பட்டை கொண்ட பெரிய செதில்களை உடைய பனை வீரியன் பாம்பு தலை தூக்கி செங்குத்து வாக்கில் கண் விழித்தபடி அவுரிக்காட்டின் வாசலில் இருந்து மூலச்சி ஊரையே பார்த்துக் கொண்டிருந்தது” (ப.241). இந்த வரிக்கு அருகில் நான் எழுதி வைத்திருக்கும் குறிப்புகள் இவை: ”அகத்தி – வீட்டுக்காரி (மனைவி) – அகத்திலிருந்து (விலா எலும்பிலிருந்து) வெளிப்பட்டவள் – ஹவ்வா (மூலச்சி – Eve) – அகத்தியன் = ஆதம் – மாஞ்சோலை = பெருஞ்சோலை (ஏதேன்) - பனை வீரியன் (பாம்பு – Serpent) – பனை (நுங்கு – Ice Apple) – மூலச்சி = மூத்தவள் = ஜித்தா (பாட்டி)”  சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறக்கப்பட்டபோது ஆதம் நபி இலங்கையிலும் (ஆதம் மலை = சிவனடிபாத மலை) ஹவ்வா எனும் ஏவாள் ஜித்தாவிலும் இறக்கப் பட்டனர் என்பது இஸ்லாமியச் சமயம் தரும் செய்தி. அறபகத்தில் இன்று ஜித்தா என்றொரு நகரம் இருக்கிறது. ஜித்தா என்றால் மூதாட்டி (கிழவி, பாட்டி) என்று பொருள். இப்பொருள் ஹவ்வா என்னும் பெயரின் ஒலிக்கு அருகில் வர வேண்டுமெனில் தமிழில்தான் வரும். அவ்வா என்றால் பாட்டி என்று பொருள். மூலச்சி என்னும் ஊரே அவ்வா இறக்கப்பட்ட ஊராக ஏன் இருக்கக் கூடாது? அதனை அறபியில் ஜித்தா என்று குறிப்பிட்டிருக்கலாம். அதே பெயர் பின்னர் அறபகத்தில் உள்ள ஒரு ஊருக்கும் இடப்பட்டிருக்க வேண்டும். ஆதாமும் ஏவாளும் அருகருகில்தான் இறங்கியிருக்க வேண்டும். சொல்லப்போனால் ஒரே இடத்தில் இறங்கினார்கள் என்று கருதுவதே பொருத்தம். ஆதம் மலைக்கும் மூலச்சி ஊருக்குமே கூட இடைவெளி அதிகம்தான்.  இதை இன்னும் ஆராய வேண்டும்.

            இந்தியாவில் 645 பழங்குடிகள் இருப்பதாகப் பதிவாகியுள்ளது என்கிறார் யூசுஃப். அவற்றில் ஒரு நூறு பெயர்களையாவது இந்த நாவலில் சுட்டியிருப்பார் என்று கருதுகிறேன். அதே போல், பழங்குடியினர் வாழும் ஊர்ப்பெயர்கள் என்று குறைந்தது நூறு ஊர்களாவது இதில் சுட்டப்பட்டிருக்கலாம். அவை அனைத்தையும் இங்கே திரட்டி விமரிசனம் எழுதினால் அது ஒர் தனி நூலாக விரிந்துவிடும். அது ஒரு பேராய்வுக்கான களம். பழங்குடியினரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லலாம் என்று எண்ணி மானுடவியல் அறிஞர் பக்தவச்சல பாரதி மற்றும் ஆ.சிவசுப்பிரமணியம் ஆகியோரின் நூற்களை எடுத்த்ப் புரட்டினால் தலை சுற்றுகிறது. ஓரிரு நாட்கள் படித்துவிட்டுச் சில பக்கங்களில் சொல்லி முடிக்க வேண்டிய செய்திகள் அல்ல.



            நாவலில் ஓரிடத்தில் ‘பைம்பொழில்’ என்னும் கிராமத்தில் ஒரு தேநீர்க்கடையில் வரையாட்டுக் குட்டி ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. அது டானியலுடன் கை குலுக்குகிறது. ஆடு என்பது ஆதி மனிதனின் வாழ்வியல் சாட்சியங்களில் ஒன்று. அதனைப் பொன்னிழையின் ஒரு முனையாகப் பிடித்துக் கொண்டு தேடலை நிகழ்த்தி உலகெங்கிலும் உள்ள ஆட்டு வகைகளில் வழியே மானுட வரலாற்றைப் பற்றிய புதிய திறப்புக்களை டானியல் கண்டடைகிறான். வாசிப்புச் சுகம் (Pleasure of the text) பொழுது போக்கு என்றெல்லாம் சொல்லித்தான் நீங்கள் நாவல் வாசிப்பீர்கள் எனில் இந்த நாவல் தேநீர்க் கடையில் உங்களுடன் கை குலுக்கும் வரையாட்டுக் குட்டி என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதன் வழியாக நீங்கள் அறியவும் உணரவும் வேண்டியவை இன்னும் ஏராளம்.

            ’மணல் பூத்த காடு’ குறித்து முன்பு நான் எழுதிய விமரிசனக் கட்டுரையை ஆய்விதழ் ஒன்றுக்காக ஆராய்ச்சிக் கட்டுரையாக மாற்றியமைத்தபோது அதன் முடிவுரையில் ஒரு கருத்தினை எழுதினேன். அதை இங்கே குறிப்பிட்டு நிறைவு செய்கிறேன்:

            நவீனத் தமிழிலக்கிய உலகில் முஸ்லிம் புனைகதையாளர்கள் என்று போற்றப்படும் தோப்பில் முகம்மது மீரான், அர்ஷியா, மீரான் மைதீன் முதலியோரின் வரிசையில் குறிப்பிடத்தக்க இடம் ஒன்றை முஹம்மது யூசுஃப் பெறுவார் என்னும் நம்பிக்கையை நல்குகிறது “மணல் பூத்த காடு” என்னும் அவரது முதல் நாவல். முதல் நாவலின் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போன எழுத்தாளர்கள் உண்டு. ஆனால், முஹம்மது யூசுஃப் தொடர்ந்து வெளியிட்ட “கடற் காகம்” மற்றும் “தட்டப்பாறை” ஆகிய நாவல்கள் எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறிவிட்டது என்றே சொல்ல வைக்கின்றன. அதிலும், முஸ்லிம் சமூக வாழ்வியல் குறித்து இதுகாறும் சொல்லப்படாத கூறுகளைக் கையாளவதும் அதற்குத் தனது பரந்து பட்ட வாசிப்பின் பேருழைப்பை ஒரு துணைக் கருவியாகக் கொள்வதும் அவருக்குத் தனித்தன்மையை வழங்குகின்றன. அவ்வகையில், அவருக்கு முன்னோடி என்று சொல்லத் தக்கார் யாருமில்லை. அவர் ஒரு முதன்மையர் எனலாம்.