Saturday, June 28, 2025

நிகாஹ் தாஷ்த் (ஆன்மிக நிலை விழிப்புணர்வு, சுதாரிப்பு)

 (நக்‌ஷ்பந்திய்யா நெறியின் ஏழாம் கோட்பாடு குறித்த விளக்கம்)











நிகாஹ் என்றால் பார்வை என்று பொருள் (நழர் என்பது இதற்கு நிகரான அறபிச் சொல்.) இது இதயத்தைத் தொடர்ந்து கண்காணித்தல் என்னும் பயிற்சியாகும். அதாவது, உள்ளத்தில் தகாத, வீணான எண்ணம் ஒன்று கூட நுழைந்துவிடாமல் / எழுந்துவிடாமல் கவனித்துக் கொள்வதாகும். ஏனெனில், ஸூஃபித்துவத்தின் அடிப்படையான பயிற்சி தஸ்கியத்துந் நஃப்ஸ் – உள்ளத்தைத் தூய்மை செய்தல் என்பதுதான். அது மீண்டும் அழுக்காகி விடாமல் பாதுகாப்பதே நிகாஹ் தாஷ்த் என்னும் பயிற்சியாகும்.

            ”ஒரு சாதகர் தொடர்ச்சியாக பதினைந்து நிமிடங்கள் தன் மனத்தை வீண் எண்ணம் எழாமல் பாதுகாத்துவிட்டால் அது பெரிய சாதனை என்றும் அப்போதுதான் அவர் உண்மையில் ஸூஃபி ஆகிறார் என்றும் நக்‌ஷ்பந்திய்யா நெறியில் கருதப்படுகிறது” என்கிறார் ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன்.

            இந்த காலக் கணக்கு மேலும் அதிகமாகிக் கொண்டே செல்லும். எப்போதும் மனத்துக்கண் மாசிலன் ஆகியிருக்கும் நிலையை ஒருவர் அடைய வேண்டும். ஷைஃகு சஃ’துத்தீன் அல்-கஷ்காரி (ரஹ்) சொல்வது போல், “சாதகன் ஒன்று அல்லது இரண்டு அல்லது தன்னால் இயன்ற மணி நேரம் அதனது மனத்தில் கைருல்லாஹ்வின் (அல்லாஹ் அல்லாதவற்றின்) சிந்தனை நுழைந்துவிடாமல் பாதுகாத்து வர வேண்டும்.”

            ”தன் உள்ளத்தை அறிந்தவன் தன் இறைவனை அறிவான்” (மன் அரஃப நஃப்சஹு ஃபகத் அரஃப றப்பஹு) என்று ஹழ்ரத் அலீ (ரலி) சொன்னதாக பிரபலமான வாசகம் ஒன்றுண்டு. இதன் கருத்துப்படி, இறைவனை ஒருவர் அறிவதற்கு இதயத் தூய்மை மிகவும் அவசியமாகிறது.

            ”பத்து இரவுகள் நான் என் உள்ளத்தைக் காவல் காத்தேன். அது இருபது ஆண்டுகளாக என்னைக் காவல் காக்கிறது” என்று ஸூஃபி குரு ஒருவர் சொல்லியுள்ளார்.

            அபூ பக்ருல் கஹ்த்தானி (ரஹ்) சொல்கிறார்கள், “நான் என் இதயத்தின் வாசலில் நாற்பது ஆண்டுகள் காவலுக்கு நின்றேன். அது எல்லாம் வல்ல அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் அறியாத நிலையை அடையும்வரை அதனை நான் அல்லாஹ்வுக்காகத் தவிர வேறு எதற்காகவும் திறக்கவில்லை.”

            ஷைஃகு அபுல் ஹசன் அல்-ஃகரகானீ (ரஹ்) சொன்னார்கள், “நாற்பது ஆண்டுகளாக அல்லாஹ் என் உள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதில் தன்னைத் தவிர வேறு எதையும் அவன் காணவில்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் என் உள்ளத்தில் இடம் இல்லை.”


            மனிதனுக்குள்ள முக்கியமான அருட்கொடைகளில் ஒன்று கற்பனை ஆற்றலாகும். அதன் வழியாகப் பல்வேறு துறைகளில் பற்பல சாதனைகளை அவன் நிகழ்த்தியுள்ளான். “கல்வியறிவை விட கற்பனையாற்றல் முக்கியமானது” என்று விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகிறார். ஆனால், கற்பனை என்பது நேர்வழியில் செலுத்தப் பெறாவிடில் அது அழிவு சக்தியாக மாறிவிடும். அது மின்சாரம் போன்றது. அதை ஆகுமான வழியில் பயன்படுத்தினால் நன்மை விளையும், ஆகாத வழியில் செலுத்தினால் தீமை விளையும்.

            ஸூஃபித்துவத்தின் முக்கியமான பயிற்சிகளில் ஒன்று குருவின் உருவத்தை நினைத்தல். இது ”தஸவ்வுரே ஷைஃகு” எனப்படும். ஒரு நபரின் குரலைக் கேட்கும்போது அவரின் உருவம் நமக்குச் சிந்தனையில் வரும் அல்லவா? குருவின் போதனைகளை நினைவு கூரும்போது அவரின் திருவுருவம் சாதகனுக்கு நினைவு வராமல் போகாது. ஷைஃகு திக்ரு செய்வது போன்றுதான் முரீது செய்ய வேண்டும். அதற்கும் இந்தக் கற்பனை ஆற்றல் உதவும். அத்தகைய நல்வழியான சிந்தனைகளுக்கு கற்பனை ஆற்றல் உதவுகிறது. அதனால் ஆன்மிகத்தில் மிகப் பெரிய பலன் கிடைக்கிறது.

            ஆனால், சராசரி மனிதர்களிடம் கற்பனை ஆற்றல் என்பது அவர்தம் உள்ளத்தில் சந்தேகம், இச்சைகள், குழப்பங்கள் முதலிய தகாத எண்ணங்களும் உணர்ச்சிகளும் உண்டாகிவிடக் காரணம் ஆகிறது. அதை அவர்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால் மனம் அழுக்காகிப் போய்விடுகிறது. எனவே ஸூஃபித்துவத்தின் ஆரம்ப நிலையில் உள்ள சாதகன் தன் கற்பனைக்குக் கடிவாளம் போட வேண்டிய அவசியம் இருக்கிறது.

            இதனால்தான், ”அறமற்ற, ஒழுக்கமற்ற உருக்காட்சிகளைக் கற்பனை செய்வதை விட்டும் மனத்தைப் பாதுகாத்து வைப்பது நிகாஹ் தாஷ்த் ஆகும்” என்கிறார் உஸ்மான் நூரீ தோப்பாஷ்.

            சாதகன் ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடும்போது அவனின் உள்ளத்தில் இறைவனிடம் இருந்து மேன்மையான ஓர் உணர்வு நிலை (ஹால்) உண்டாகிறது. நிகாஹ் தாஷ்த் என்பது அவன் ஆழ்நிலை தியானத்தில் இருந்து வெளிவந்து உலகிற்குத் திரும்பிய பின்னரும் அந்த உணர்வு நிலை மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளும் பயிற்சி என்றும் ஒரு விளக்கம் உண்டு. 

            இது பற்றி மின்ஹாஜுஸ் ஸாஇர் என்னும் நூலில் இப்படி எழுதப்பட்டுள்ளது: “மேன்மையான திக்ரில் இருந்து உண்டான விசேடமான விழிப்பையும் இறையுணர்வையும் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், ஹக்கு அல்லாதவற்றின் நினைவு உள்ளத்திற்குள் புகுந்து விடக்கூடாது.”

               நிகாஹ் தாஷ்த் என்பது ஓதுகின்ற வாசகங்களின் அர்த்தம் உள்ளத்தில் வெளிச்சமாகும்படி திக்ரு செய்வதாகும் என்றும் ஸூஃபிகள் விளக்குகின்றனர். எனவே அப்பயிற்சி திக்ரு செய்யும்போதே நிகழ்வதாகிறது.

            உதாரணமாக, சுப்ஹானல்லாஹ் (இறைவன் பரிசுத்தன்), அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே), மற்றும் அல்லாஹு அக்பர் (இறைவன் மிகப் பெரியோன்) ஆகிய வாசகங்களை ஒருவர் திக்ரு செய்கிறார். அதை வெறுமனே வாயால் அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரின் உள்ளம் பல்வேறு சிருஷ்டிகளையும் அவற்றின் காரியங்களையும் நினைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது ஒழுங்கான திக்ரு ஆகுமா? அதனால் அவருக்கு ஆன்மிகத்தில் முன்னேற்றம் (தரக்கீ) ஏற்படுமா? ஓதுவதற்கான குறைந்த பட்ச நன்மை அவருக்குக் கிடைக்கும். அவ்வளவுதான்.

            ”திக்ரே லிசானீ லக்லகா / திக்ரே கல்பீ வஸ்வஸா” – ’நாவால் மட்டுமே செய்யும் திக்ரு உளறல் ஆகும், மனத்தால் மட்டுமே செய்யும் திக்ரு ஊசாட்டமாகும்’ என்று ஸூஃபிகள் சொல்லியுள்ளதை நினைவில் வையுங்கள்.

ஆனால், அந்த வாசகங்களின் அர்த்தத்தை உணர்ந்து அவர் ஓதும்போது, அதன் விளக்கங்களும் அவற்றின் உணர்வுகளும் அவரின் உள்ளத்தில் உண்டாகும்போதுதான் அது ஆன்மிகம் ஆகும். எனவேதான், திக்ரு செய்வதற்கு குருநாதர் போதிக்கும் தஃலீம் தல்கீன் ரீதியிலான அறிவு அவசியமாகிறது. ஸூஃபித்துவத்தின் போதனை முறை ‘நெஞ்சில் இருந்து நெஞ்சுக்கு’ (சீனா ப சீனா) என்று சொல்லப்படுகிறது. குருவின் இதயத்தில் இருந்து இல்மு என்னும் அறிவு ’அலம்’ (அச்சுப் பதித்தல்) என்பது போல் அப்படியே முரீதின் இதயத்தில் பதிந்துவிடுகிறது. இந்த முறையில் மிகக் குறுகிய காலத்தில் சாதகர் மிக அதிகமான முன்னேற்றத்தை அடைந்து விடுகிறார். இதைத்தான், “அறிஞர் நடக்கிறார், ஞானி பறக்கிறார்” என்னும் ஸூஃபி சொலவடை உணர்த்துகிறது. அத்தகைய சாதகர் மிக விரைவாகவே நிகாஹ் தாஷ்த் என்னும் நிலையை அடைய முடியும்.

மேற்சொன்ன வாசகங்களின் விளக்க ரீதியில், சுப்ஹானல்லாஹ் என்பது இறைவனின் ஷஃ’னே தன்ஸீஹ் (transcendence) என்பதை, அதாவது ’அவன் படைப்புக்களுக்கு அப்பாலாக இருக்கும் நிலை’யையும், அல்ஹம்துலில்லாஹ் என்பது ஷஃ’னே தஷ்பீஹ் (immanence) என்பதை, அதாவது அவன் படைப்புக்களுக்கு உடனிருக்கும் நிலை’யையும், அல்லாஹு அக்பர் என்பது இறைவனின் கமாலிய்யத் (perfection) என்பதை, அதாவது தன்ஸீஹ் தஷ்பீஹ் இரண்டும் சேர்ந்திருக்கும் பூரண நிலையையும் குறிக்கிறது. இந்த விளக்கங்களை எளிதில் கவனத்தில் கொண்டு வந்து ஓதும் வகையில் சுப்ஹானல்லாஹ் என்பதை கண்களை மூடி, சிருஷ்டிகளைப் பார்க்காமலும், அல்ஹம்துலில்லாஹ் என்பதை கண்களைத் திறந்து சிருஷ்டிகளைப் பார்த்தபடியும், அல்லாஹு அக்பர் என்பதை இரண்டு நிலைகளும் கலந்ததாக கண்களை மூடியும் திறந்தும் ஓதும்படியாக ஒரு உக்தி இருக்கிறது.

இதன் நோக்கம் திக்ரு செய்யப் பயன்படுத்தும் சொற்கள் / வாசகங்களின் அர்த்தம் சிந்தையில் வெளிச்சமாகி அவற்றின் உணர்வு நிலை (conscience) உண்டாக வேண்டும் என்பதுதான். இதன் காரணமாகவே திருக்கலிமாவின் விளக்கத்தை அதன் பல்வேறு படித்தரங்களுக்கு ஏற்ப வியாக்கியான வாசகங்களாகக் கோர்வை செய்திருக்கிறார்கள். லா இலாஹ இல்லல்லாஹ் என்பதற்கான வியாக்கியான வாசகங்களாக 1) லா மஃ’பூத இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை அன்றி வேறில்லை), 2) லா மக்ஸூத இல்லல்லாஹ் (தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ்வை அன்றி வேறில்லை), 3) லா மவ்ஜூத இல்லல்லாஹ் (உள்ளமைக்கு உரியவன் அல்லாஹ்வை அன்றி வேறில்லை), மற்றும் 4) லா மஷ்ஹூத இல்லல்லாஹ் (வெளியாகியிருப்பவன் அல்லாஹ்வை அன்றி வேறில்லை) ஆகிய வாசகங்கள் கோர்வை செய்யப்பட்டுள்ளன. இந்த அர்த்தங்கள் சிந்தையில் வெளிச்சமாகும்படியாக திருக்கலிமாவை தியானம் செய்ய வேண்டும். [இப்படியான வாசகங்கள், மா ஃகலக்துல் ஜின்ன வல் இன்ச இல்லா லி-ய’ஃபுதூன் – ’ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை’ (51:56) என்னும் திருவசனத்திற்கு அய்யு லி-யஃ’ரிஃபூன் – ’அதாவது, அவனை அறிவதற்காகவே’ என்று ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வியாக்கியானம் கொடுத்து திருவசனத்தின் அமைப்பிலேயே தஃப்சீர் வாசகத்தைக் கோர்வை செய்ததைப் போன்றதாகும்.]

            உள்ளத்திற்குள் படைப்புக்களைப் பற்றிய எண்ணமே நுழையாமல் இருப்பது சாத்தியமா? என்று வினா எழலாம். ஆரம்ப நிலையில் சாதகரின் மனத்தில் அதிகமான எண்ணங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அப்போது சாதகன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஒன்று உரைக்கலாம். நீரோடைக் கரையில் மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கு தனக்குரிய மீன் – உறுமீன் – வரும் வரையில் கவனம் சிதறாமல் ஒரே இலக்கில் பார்த்துக்கொண்டு நிற்கும். அக்கம் பக்கத்தில் ஆயிரம் மீன்கள் ஓடினாலும் அவற்றை அது அலட்சியப் படுத்திவிடும். தனது இலக்கு வைக்கப்படும் இடத்தில் ஒரு மீன் வரும்போது சட்டென்று கொத்தி எடுத்துக் கொள்ளும். அது போல் இறைவனையே லட்சியமாகக் கொண்டு தியானத்தில் மனத்தைக் குவித்து வைத்திருக்கும்போது அவனல்லாதவை பற்றிய சிந்தனைகள் உள்ளே வரத்தான் செய்யும். சாதகர் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டும். அவற்றின் மீது கவனம் செலுத்தக் கூடாது. ஓர் எண்ணத்திற்கு அளிக்கப்படும் கவனமே அதனை பலப்படுத்தும். கவனம் அளிக்கப்படாத எண்ணங்கள் பலமிழந்து போகப் போக மறைந்துவிடும்.

         எண்ணங்களுக்கு நீ சக்தி ஊட்டிவிடாதே என்றுதான் இறைஞானியர் வழிகாட்டுகின்றனர். அதுதான் இப்பயிற்சியின் யுக்தி (knack) என்று புரிந்து கொள்ளுங்கள்.

            ஃகாஜா அப்துல் ஃகாலிக் இப்னு அப்துல் ஜமீல் அல்-குஜ்தவானி (ரஹ்) சொல்கிறார், “உள்ளத்திற்குள் எண்ணங்களே நுழையாது என்பது கிடையாது. ஆனால், அவை சில நேரங்களில் வரும், சில நேரங்களில் வராது.”

            இதே கருத்தில் ஃகாஜா அலாவுத்தீன் அல்-புஃகாரி (ரஹ்) சொல்கிறார், “எண்ணங்களை ஜெயிப்பது என்பது மிகக் கடினம், சாத்தியமில்லை என்றே சொல்லலாம். நான் என் இதயத்தை எண்ணங்களை விட்டும் இருபது ஆண்டுகள் பாதுகாத்து வைத்தேன். அதன் பின்னரும் அவை தோன்றிக் கொண்டுதான் இருந்தன. ஆனால் அவற்றால் என் இதயத்தின் மீது தாக்கம் செலுத்த முடியவில்லை.”

            இந்தக் கருத்திற்கு ஏற்ப ”நிகாஹ் தாஷ்த் எனபதன் அர்த்தம் உள்ளத்திற்குள் வரும் எண்ணங்கள் உள்ளத்தைப் பாதிக்காமல், அதன் மீது தாக்கம் செலுத்தாமல் இருப்பதாகும்” என்று ஷைஃகு அப்துல் மஜீத் இப்னு முஹம்மத் அல்-ஃகானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்.

            இக்கருத்தில் ஃகாஜா உபைதுல்லாஹ் அல்-அஹ்ரார் (ரஹ்) அவர்கள் தரும் விளக்கம் சுவையானது: “நிகாஹ் தாஷ்த் என்பதன் அர்த்தம் தொடக்க நிலையிலேயே சாதகர் எண்ணங்கள் எழாமல் இருப்பார்கள் என்பதன்று. ஆனால், இறை நினைவையும் உணர்வையும் எண்ணங்கள் பாதிக்காது என்பதுதான். இதற்கு ஓர் உதாரணம் சொல்லலாம். எண்ணங்கள் ஆற்றில் விழுந்த வைக்கோல் போன்றவை. அவை ஆற்றின் நீரோட்டத்தைத் தடுத்துவிடாது. ஆறு எங்கே போக வேண்டுமோ அதன் போக்கில் அது ஓடிக்கொண்டே இருக்கும்.”

            எண்ணங்களும் இறைவனின் படைப்புதான். அவன் படைக்காமல் அவை சுயமாகத் தோன்றிவிட முடியாது. எனவே, வீணான எண்ணங்கள் உண்டாகாமல் இருக்க இறைவனிடம் இதயத்தை ஒப்படைப்பது ஒன்றே வழியாகும். மவ்லானா ரூமி (ரஹ்) சொல்கிறார்கள்:

                        ”எண்ணங்களைப் பற்றிச் சிந்திக்காதே

                         எண்ணங்களைப் படைப்பவனைப் பற்றி யோசி.”

No comments:

Post a Comment