(நக்ஷ்பந்திய்யா நெறியின் ஐந்தாவது ஸூஃபிக் கோட்பாடு)
திக்ரு (அறபி), யாத் (ஃபார்சி)
ஆகிய சொற்கள் நினைவு கூர்வது, நினைப்பது, ஞாபகம் செய்வது என்று அர்த்தப்படும்.
திக்ருல்லாஹ்
என்றால் அல்லாஹ்வை நினைவு கூர்தல் என்று அர்த்தம். அது இறை தியானத்தைக் குறிக்கிறது.
இறைவனை நினைவு
கூர்வதே வழிபாடுகள் அனைத்தின் சாராம்சமும் உயிருமாக உள்ளது. இறை தியானம் இல்லை எனில்
எந்த ஒரு வழிபாடும் உயிரற்ற உடல் ஆகிவிடும்.
தொழுகை, நோன்பு,
ஈகை, புனிதப் பயணம் முதலிய வணக்க வழிபாடுகளின் எல்லா வடிவங்களும் உடல்தான். அவற்றில்
உயிராக இருப்பது இறை தியானமே ஆகும்.
எனவே, வழிபாட்டு
வடிவங்களுக்கு இடம், காலம் என்னும் எல்லைகளை வைத்த இறைவன், திக்ரு என்னும் இறை தியானத்திற்கு
எல்லை வகுக்கவில்லை.
அதாவது, நாளொன்றுக்கு
ஐந்து வேளை தொழுகை, ஆண்டில் ஒரு மாதத்தில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு, செல்வந்தர்களுக்கு
ஓராண்டின் சேமிப்பில் 2.5 விழுக்காடு தூயவரி, இயலுவோருக்கு ஆயுளில் ஒரு முறை ஹஜ் என்னும்
புனிதப் பயணம் என்று எல்லை உண்டு. ஆனால், இறை தியானத்திற்கு இவ்வளவு போதும் என்று வரம்பு
இல்லை. அதனை அதிகமாகச் செய்ய வேண்டும் என்பது இறைநம்பிக்கையாளர் ஒவ்வொருவரின் மீதும்
கட்டாயக் கடமை (ஃபர்ளு) ஆகும்.
”இறைநம்பிக்கை கொண்டோரே! அதிகமான நியாபகமாக
அல்லாஹ்வை நினைவு கூருங்கள்” (33:41)
என்று இறைவன் கட்டளை இடுகிறான். ”திக்ரன் கஸீரா” (அபரிதமான அதிகமான
நியாபகம்) என்று சொல்லியிருப்பதன் பொருள் “இடை விடாது தியானித்தல்” என்று சொல்லப்படுகிறது.
எனவே இது எப்போதும் இறைவனின் நினைவிலேயே மூழ்கி இருப்பதைக் கோருகிறது. அதனை ஸூஃபிகளே
நிறைவேற்றுகின்றனர்.
குரு ஒருவரிடம்
”பைஅத்” என்னும் தீட்சை அடைந்து அவரின் சீடராகி அவரின் வழிகாட்டுதல் படி பயிற்சிகள்
செய்வதால் இந்நிலை அடையப்படுகிறது. தீட்சையின் நோக்கம் (மக்ஸதே பைஅத்) என்பது யாதே ஹக் அலத் தவாம், வ யாஃப்த்தே ஹக் – அதாவது
சதா காலமும் இறைவனை நினைவு கூர்வதும், இறைவனை அடைவதும் ஆகும் என்று ஸூஃபிகள் சொல்கின்றனர்.
ஒரு குருவின் நேரடித் தொடர்பில் இப்பயிற்சியை செய்ய வேண்டியது அவசியம். குருவின் தொடர்பின்றி
தானாக முயல்வோருக்கு இந்த நிலை ஒருபோதும் வாய்க்காது.
இறைவனை சதா காலமும்
நினைவு கூரும் நிலையை அடைந்த பின்னரே அவனை அடைகின்ற நிலை கிடைக்கிறது. இறைவனை அடைந்த
பின்னரே அவனை அகக் கண்ணால் தரிசிக்கும் ஷுஹூத் என்னும் நிலை கிடைக்கும்.
இறைவனை நினைவுகூர்தல்
என்பது இரண்டு நிலைகளில் உள்ளது.
1. இறைவனை அவனின் அழகிய திருநாமங்கள் கொண்டு நினைவு கூர்தல். இது அவனின்
ருபூபிய்யத் என்னும் ரட்சகத் தன்மையில், அவனின் சிஃபாத் என்னும் திருக்கல்யாண குணங்களின்
படித்தரத்தில் நினைவு கூர்வதாகும்.
“நும் ரட்சகனின் பெயரை நினைவு கூர்க. மேலும்,
அனைத்தையும் விட்டு ஒதுங்கி அவனுடன் சேர்ந்துவிடுக” (73:8)
2.
அழகிய திருநாமங்களுக்கு உரியவனான
அந்த இறைவனையே நினைவு கூர்வதாகும். இது அவனின் சுயத் திருநாமம் (இஸ்மு ஜாத்) ஆன “அல்லாஹ்”
என்னும் திருநாமத்தால் நிகழ்த்தப்படும். மேலும், அவனின் உலூஹிய்யத் (தெய்வத்தன்மை)
பற்றிய பிரகடனம் ஆன ”லா இலாஹ இல்லல்லாஹ்” என்னும் திருக்கலிமாவைக் கொண்டும் நிகழ்த்தப்படும்.
“என்னை நினைவு கூருங்கள், உங்களை நினைவு கூர்கிறேன்” (2:152)
என்னும்
திருவசனத்தில் அவனையே நினைவு கூரும்படியாகக் கட்டளை உள்ளது.
”திக்ரு என்பதன்
உண்மையான அர்த்தம் இறைவனைப் பற்றிய அக விழிப்பாகும். திக்ரின் நோக்கம் இந்த பிரக்ஞையை
(உணர்வை) அடைவதுதான்” என்கிறார் ஃகாஜா உபைதுல்லாஹ் அஹ்ரார் (ரஹ்) அவர்கள்.
ஆரம்ப நிலையில்
சாதகன் நாவால் திக்ரு செய்கிறான். இது திக்ரே
ஜலி என்று சொல்லப்படும். அவன் பக்குவம் அடையும்போது அடுத்தடுத்து திக்ரே கல்பி என்னும் இதயத்தின் தியானம், திக்ரே அஃக்ஃபா அல்லது திக்ரே ரூஹி என்னும் உயிரின் தியானம், திக்ரே ஃகஃபிய்யுல் அஃக்ஃபா அல்லது திக்ரே சிர்ரி என்னும் ரகசியத்தின் தியானம்
முதலிய அகவயமான தியானங்களுக்கு முன்னேறுகிறான்.
இது பற்றி சய்யிதுனா
முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: “ஆரம்ப நிலையில்
ஒருவர் இறைவனின் திருப்பெயரைத் தன் நாவால் உச்சரிக்கிறார். இதயம் உயிர் பெற்றதும் அவர்
அதனை அந்தரங்கமாக உச்சரிக்கிறார். ஆரம்பத்தில் ஒருவர் தான் நினைவு கூரும் வார்த்தைகளை
வெளிப்படுத்திச் சொல்ல வேண்டும். அப்புறம் படிப்படியாக அந்த தியானம் ஒருவரின் சுயம்
வரை பரவிவிடுகிறது. முதலில் அது இதயத்தில் இறங்குகிறது. அப்புறம் ஆன்மாவுக்கு ஏறுகிறது.
அப்புறம் அது மேலும் நகர்ந்து ரகசியங்களின் ஸ்தானத்தை அடைகிறது. மேலும் முன்னேறி மறைவையும்,
மறைவின் மறைவையும் அடைகிறது.”
திக்ரு என்னும்
இறை நினைவுதான் மனிதனைப் புனிதனாக்கும் ஆன்மிக ரசவாதத்தின் அடிப்படை ஆகும். இறைக் காதலையே
ரசவாதம் என்று மவ்லானா ரூமி போன்ற ஸூஃபி மகான்கள் சொல்லுகின்றனர். இரண்டும் முரணான
கருத்துக்கள் அல்ல. ஏனெனில், இறைவனைக் காதலிக்காமல் நீங்கள் அவனை எப்போதும் திக்ரு
செய்யும் நிலையை அடைய முடியாது. “ஒருவன் ஒன்றை நேசிக்கும்போது அதனை அதிகமதிகம் நினைவு
கூர்கிறான்” (மன் அஹப்ப ஷைஅன் அக்ஸர திக்ரஹு)
என்பது ஓர் அறபி முதுமொழியாகும்.
சதா இறைவனை நினைவு
கூர்வதால் மனிதன் எப்படிப் புடம் போடப் படுகிறான் என்பதை உஸ்மான் நூரீ தோப்பாஷ் இப்படி
விளக்குகிறார்:
”இதயத்தில் இருந்து
கிளம்பும் திக்ரின் சூக்குமமான சூடு முழு உடலிலும் பரவும்போது மனிதனின் உப நினைவு மனத்தில்
மறைந்து கிடக்கும் உணர்ச்சிகள் யாவும் உயிர் பெற்றுவிடுகின்றன. அவை செயல்படும் பிரக்ஞையாக
மாறி விடுகின்றன. அது ஒருவரின் நடத்தையில் பிரதிபலிக்கிறது. தன் எண்ணங்கள் முழுவதும்
இறைவனைப் பற்றிய நினைப்பாகவே ஆகிவிட்ட ஒருவர் கருணை, பொறுமை, தாராளம், மன்னிப்பு முதலிய
புனிதப் பண்புகளை விட்டும் நீக்கப்பட்டவராக இருப்பார் என்று கற்பனை செய்யவும் இயலாது.
இவை அனைத்தும் ஒருவர் பக்குவமான மனிதர் ஆவதற்கு இன்றியமையாத பண்புகள் ஆகும். திக்ரின்
மூலம் இதயத்தை உயிருள்ளதாக்குவது என்பது தஸவ்வுஃபில் (ஸூஃபித்துவத்தில்) மிக முக்கியமான
நியதிகளில் ஒன்றாகும்.”
திக்ரு செய்யும்
முறைகள் பல இருக்கின்றன. மூச்சில் இறை நினைவை இணைத்துச் செய்யப்படும் பாசே அன்ஃபாஸ் என்னும் மூச்சு திக்ரு எல்லா
ஞான நெறிகளிலும் பொதுவானதாகவும் அடிப்படையானதாகவும் இருக்கிறது. எனினும், ஒவ்வொரு மகானும்
வெளிரங்கத்தில், செய்முறை வடிவத்தில் சிறு சிறு வேறுபாடுகளுடன் தியானப் பயிற்சிகளை
நடைமுறைப் படுத்துகின்றனர். நக்ஷ்பந்திய்யா நெறியில் திக்ரு முறை அமைந்திருக்கும் முறையை
ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் பின்வருமாறு விளக்குகிறார்:
”சாதகன் தன் இதயத்தில்
(முராக்கபா) என்னும் தியானநிலையை அடையும் வரை தன் நாவால் நஃபீ (மறுத்தல்) மற்றும் இஸ்பாத்
(உறுதிப்படுத்தல்) ஆகியவற்றைக் கொண்டு திக்ரு செய்ய வேண்டும்.
”அந்த நிலையை
அடைய அவர் ஒவ்வொரு நாளும் லா இலாஹ என்னும் நஃபி மற்றும் இல்லல்லாஹ் என்னும் இஸ்பாத்
ஆகியவற்றை ஐயாயிரம் முதல் பத்தாயிரம் தடவைகள் தன் நாவால் சொல்லி, தன் இதயத்தில் இருந்து
அதனைத் துருவேற வைத்து மழுங்கடிக்கும் விடயங்களை எல்லாம் நீக்க வேண்டும்.
”இந்த திக்ரு
இதயத்தை மெருகூட்டி சாதகனை ஜுஹூர் என்னும் வெளிப்பாட்டின் நிலைக்கு இட்டுச் செல்லும்.
”அவர் அந்த அன்றாட
திக்ரை தன் உள்ளத்தாலோ நாவாலோ செய்து வர வேண்டும். அல்லாஹ் என்னும் சுயத்திருநாமத்தை
(இஸ்மு ஜாத்) உச்சாடனம் செய்ய வேண்டும். அந்தத் திருநாமம் ஏனைய அனைத்து நாமங்களையும்
பண்புகளையும் தன்னுள் அடக்கியதாகும். அல்லது, லா இலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லி நஃபி
மற்றும் இஸ்பாத் செய்தபடி திக்ரு செய்ய வேண்டும்.
”இந்த அன்றாட
திக்ரு சாதகனை அந்த திக்ரு செய்யப்படுவோனின் பூரணமான பிரசன்னத்திற்கு இட்டுச் செல்லும்.
”நக்ஷ்பந்தி
ஸூஃபி குருமாரின் வழிமுறைப்படி நஃபி மற்றும் இஸ்பாத் திக்ரு செய்வதற்குப் பின்வரும்
நியதிகளை ஒருவர் பேண வேண்டும்
-
சாதகர் தன் கண்களை மூடியிருக்க
வேண்டும்.
-
வாயை மூடியிருக்க வேண்டும்.
-
பற்களை இறுக கெட்டித்து வைக்க
வேண்டும்.
-
தன் நாக்கை மேலண்ணத்தில்
ஒட்ட வைத்திருக்க வேண்டும்.
-
மூச்சைப் பிடித்து வைக்க
வேண்டும்.
”நஃபி மற்றும் இஸ்பாத் ஆகியவற்றைக்
கொண்டு தன் இதயத்தில் திக்ரு செய்ய வேண்டும். இதற்காக அவர் லா என்னும் சொல்லைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். இதை அவர் தன் நாபியிலிருந்து
தன் மூளைக்கு உயர்த்த வேண்டும்.
“லா என்னும் சொல் மூளையை அடைந்ததும் இலாஹ என்னும் சொல்லினை வெளிக்கொண்டு வருகிறது. அதனை மூளையில் இருந்து வலது
பக்கத் தோளுக்கு நகர்த்த வேண்டும்.
“அங்கிருந்து இல்லல்லாஹ் என்னும் சொல் கொண்டு இதயத்தில்
அடிக்க வேண்டும்.
“அச்சொல் இதயத்தை அடித்தவுடன்
அதன் சக்தியும் சூடும் உடலின் அனைத்து பாகங்களுக்கும் பரவுகிறது. லா இலாஹ என்னும் நஃபி
கொண்டு சாதகன் இந்த உலகத்தையும் அதில் உள்ள அனைத்தையும் மறுத்துத் தள்ளுகிறான். அப்புறம்,
இல்லல்லாஹ் என்னும் இஸ்பாத் கொண்டு அவை அனைத்தும் அல்லாஹ்வின் தெய்வீகப் பிரசன்னத்தில்
அழிந்துவிட்டன என்பதை உறுதிப்படுத்துகிறான்.
”இதை அவன் ஒவ்வொரு மூச்சிலும்
– உள் மூச்சிலும் வெளி மூச்சிலும் – மீண்டும் மீண்டும் நிகழ்த்துகிறான். எப்போதும்
அது தன் இதயத்திற்கு வருமாறு பேணுகிறான். தனக்குத் தன் குருநாதர் பரிந்துரைத்த எண்ணிக்கைப்படி
இதனைச் செய்கிறான்.
”இவ்வழியில் ஒரே மூச்சில்
இருபத்து மூன்று தடவைகள் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லும் நிலையைச் சாதகன் படிப்படியாக
அடைகிறான்.
“பூரணமான ஷைஃகு ஒருவர் ஒவ்வொரு
மூச்சிலும் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதை எண்ணற்ற தடவைகள் சொல்ல முடியும்.
“அல்லாஹ் மட்டுமே நம் இலக்கு,
நமக்கு வேறு இலக்கு இல்லை என்பதே இந்தப் பயிற்சியின் அர்த்தம் ஆகும்.
“இந்தப் பயிற்சின் விளைவாக,
இறைவனின் பிரசன்னம் மட்டுமே ஒரே உள்ளமை என்று காண்பது முரீதின் இதயத்தில் இறைத்தூதரின்
காதலை உண்டாக்குகிறது. அப்போது அவர் ’முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று சொல்கிறார். அது
இறைப் பிரசன்னத்தின் இதயத்தில் உள்ளதாகும்.”
இஸ்லாமின் அல்-கலிமத்துத்
தய்யிபா என்னும் பரிசுத்தக் கொள்கை வாசகத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. லா இலாஹ இல்லல்லாஹ் – அல்லாஹ்வைத் தவிர தெய்வம்
இல்லை என்னும் முற்பகுதி உலூஹிய்யத் (தெய்வநிலை)
என்பதைப் பிரகடனம் செய்கிறது. முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
– முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதராக உள்ளார்கள் என்னும் பிற்பகுதி ரிசாலத் (தூதுத்துவம்) என்பதைப் பிரகடனம் செய்கிறது.
எனவே, நபியை நினைவு கூராமல்
இறை தியானம் நிறைவு பெறாது. எதார்த்தத்தில் திக்ரு என்னும் காரியம் நடைபெற நினைப்பவன்
(தாக்கிர்) மற்றும் நினைக்கப்படுபவன் (மத்கூர்) ஆகிய இருவர் வேண்டும் என்பது நியதி.
இறைவன் மத்கூராகவும் அடியான் தாக்கிர் ஆகவும் இருப்பதில், அடியானின் பலகீனத்தைக் கருதி
அல்லாஹ் தன் திருத்தூதரை தனக்கும் அடியானுக்கும் இடையில் முதக்கிர் (நினைவூட்டக்கூடியவர்)
ஆக வைத்திருக்கிறான்.
”(நபியே!) நினைவூட்டுவீராக. நிச்சயமாக நீவிர் நினைவூட்டக் கூடியவரே” (88:21)
No comments:
Post a Comment