தமிழின் நவீனக் கவிஞர்களுள் ஒருவரான ஈரோடு
தமிழன்பன் அவர்கள் உருதுக் கவிதைகள் மீது ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த
ஒரு செய்திதான். அவரின் ”கஜல் பிறைகள்” நூல் அதற்கான ஒரு சான்று.
அவருக்கு ஸூஃபி ஞானியர் மீது ஈடுபாடு இருக்கிறது
போலும். குறிப்பாக மவ்லானா ரூமி மீது. அதன் விளைவாக அவர் “ரூமியும் நானும்” என்று அழகான
நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்நூலுக்கு என் அருமை நண்பர் நாகூர் ரூமி
அவர்கள் முன்னுரை வரைந்திருக்கிறார். அதைப் பற்றி 11-02-2021 அன்று “மௌலானா ரூமிக்கு
தத்துவக் கவிதைகளால் ஒரு பொன்னாடை” என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றை மீண்டும்
நேற்று வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த கவிதை ஒன்றைப்
பற்றி ஆற அமர சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கவிதை இது:
செருப்புகளைத்
தலைக்கு வைத்துப்
படுத்துக்கொண்டிருந்தார்
ரூமி.
தலையணையைக்
கால்களுக்கு வைத்திருந்தார்
கேட்டேன்
ஏன்
கால்கள் மட்டமானவையா?
என்றார்.
அழகான ஒரு கவிதைதான். அது உணர்த்தும் தத்துவத்தையும்
நாகூர் ரூமி எழுதியுள்ளார்: “வாழ்வின் தத்துவச் சாரம் கூட இதுதான். உயர்வு தாழ்வு மேன்மை
தாழ்மை மேலே கீழே – இவையெல்லாம் ஒரு கோணத்தில் தெரியும் உண்மையின் ஒரு வடிவம்தான்.
சார்பு நிலைத் தோற்றங்கள் என்று சொல்லலாம். உண்மையை உண்மையாக மட்டுமே பார்த்தால் அதில்
உயர்வானது, மட்டமானது என்று எதுவுமே இல்லை.”
மவ்லானா ரூமி தன் சீடர்களுக்கு இப்படியான
ஞானங்களை போதித்திருப்பார் என்பது உண்மைதான். ஆனால், வஹ்தத்துல் உஜூது (ஏக உள்ளமை)
என்னும் படித்தரத்தில் (மர்த்தபாவில்) புரிந்துகொள்ள வேண்டிய ஞானத்தை உலகியல் என்னும்
படித்தரத்தில் கொண்டு வந்து அவர் நிறுத்தியிருக்க மாட்டார் என்பதும் நிச்சயம். அதாவது,
மஃரி’ஃபத் என்னும் இறைஞானப் படித்தரத்தில் உள்ளதை ஷரீஅத் என்னும் லௌகீகத் தளத்தில்
கொண்டு வந்து புழங்க முடியாது. இது மவ்லானா ரூமியே வலியுறுத்தும் ஒரு கருத்துதான்!
ஈரோடு தமிழன்பன் ஐயாவின் கற்பனையில் மவ்லானா
ரூமி செருப்புகளைத் தலைக்கும் தலையணையைக் கால்களுக்கும் வைத்துக் கொண்டு படுத்திருக்கிறார்.
நிஜத்தில் அவர் அப்படிச் செய்யவே மாட்டார். அதற்கான காரணங்கள் உண்டு. (அதன்படி, நான்
மவ்லானா ரூமியைக் கற்பனையில் கண்டால் அதிலும் இப்படி அவர் செய்யவே மாட்டார்.)
மவ்லானா ரூமியின் கொள்கையைச் சொல்லும்
முக்கியமான ஒரு கவிதை: ”நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் குர்’ஆனுக்குக் கட்டுப்பட்டவன்
நான் / சுயவிருப்புள்ள முஹம்மதின் பாதையில் ஒரு தூசு நான் / நான் சொன்னதில் இருந்து
இதற்கு முரணாக யாரேனும் மேற்கோள் காட்டினால் / அவன் மீதும் அவன் சொல்வதன் மீதும் வெறுப்படைகிறேன்” (மன்
பந்தாயே குர்’ஆனம் அகர் ஜான்தாரம் / மன் ஃகாக்கே ராஹே முஹம்மதே முஃக்தாரம் / ஹர் நக்லு
குனத் ஜுஸீன் கஸ் அஸ் குஃப்தாரம் / பேஜாரம் அஸூ வஸீன் சுஃகன் பேஜாரம்) (”தீவானே
ஷம்ஸ்” ருபாயியாத் #735)
இந்தக் கவிதை அவரே விதித்திருக்கும் அளவு
கோல். எனவே, இதை வைத்துத்தான் அவரைப் பற்றிய வியாக்கியானங்களை நாம் அணுக வேண்டும்.
அந்த ரீதியில் நான் ஈரோடு தமிழன்பனாரின் கவிதையைச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு தத்துவத்தை உணர்த்துவதற்காக மவ்லானா
ரூமி தலையணைக்கும் செருப்புக்கும் அநீதம் செய்வாரா? என்று ஒரு வினா எழுந்தது.
”என்னது, அநீதமா? இதுவா?” என்று கேட்கிறீர்களா?
ஆம். இதனை விளங்கிக் கொள்ள சற்று பொறுமையாக மேற்கொண்டு வாசியுங்கள்.
பாவங்கள் / குற்றங்கள் பல்விதம் ஆகும்.
அவை ஒவ்வொன்றுக்கும் வரையறை உண்டு. பாவங்களின் வகைகளில் ஒன்று ”ழுல்ம்” என்பது. அது
”அநீதம் / அநீதி / அநியாயம் / injustice” என்பதாகும். அதன் அடிப்படை “படித்தரங்களை
மாற்றிப் புழங்குதல் / சார்த்துதல்” என்பதாகும்.
பாவங்களில் மிகப் பெரிய பாவமாக, இறைவன்
மன்னிக்காத பாவமாக, ஷிர்க் (இணை வைத்தல்) என்பதை இஸ்லாம் சுட்டுகிறது. அதனை, “நிச்சயமாக
இணைவைப்பு மிகப் பெரிய அநீதம்” (இன்னஷ் ஷிர்க்க
ல-ழுல்முன் அழீம் – குர்’ஆன் 31:13).
ஷிர்க் (இணை வைப்பு) எப்படி ஏற்படுகிறது
என்பதையும் இந்த வசனத்தைக் கொண்டு விளங்க முடியும். இறைவனுக்கு உரியதை அவனின் படைப்புக்களுக்குச்
சார்த்தும்போதும், படைப்புக்களுக்கு உரியதை இறைவன் மீது சார்த்தும்போதும் இணை வைப்பு
ஏற்படுகிறது. அது மிகப் பெரிய அநியாயம் (ழுல்ம்) என்பது இப்படிப் படித்தரங்களைப் பேணாமல்
போவதால்தான். (உ-ம்: இறைவன் உண்பான், உறங்குவான், அவனுக்கு மனைவி மக்கள் உண்டு என்றெல்லாம்
கற்பனை பண்ணுவது. அவனோ இவற்றை விட்டும் பரிசுத்தமானவன், மேலானவன். அதேபோல், படைப்புக்களை
வணக்கத்திற்கு உரியவை என்று கற்பனை செய்வது. இதெல்லாம் படித்தரங்கள் பேணப்படாத அநீதமும்
இணைவைப்பும் ஆகும்.)
படித்தரங்களைப் பேணுவது என்பது நம் அன்றாட
வாழ்வில் இருந்தே, சிறு சிறு பொருட்களை நாம் புழங்குவதில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
அந்தப் பயிற்சி ஷரீஅத்தின் படித்தரத்திலான பேணுதலாகும். அதில் மாற்றிச் செய்வது அநீதம்
(ழுல்ம்) ஆகும். அது புழங்கு பொருட்களின் உரிமையை நாம் மீறுவதாகவும் அவற்றுக்கு நாம்
செய்யும் அநீதமாகவும் முடியும். அதற்கும் நாம் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளோம் என்று
இஸ்லாம் சொல்கிறது.
இறைஞானி ஹகீமி ஷாஹ் ஃபைஜி (தாமத் பரக்காத்துஹும்)
அவர்கள் என்னிடம் ஒருமுறை ”ழுல்ம் (அநீதம்) என்றால் என்ன என்று தெரியுமா?” என்று கேட்டுவிட்டு
பின்வருமாறு விளக்கம் தந்தார்கள்:
”ஒரு பொருளுக்கு நீங்கள் செய்யும் அநீதம்
மூன்று விதங்களில் நிகழக்கூடும்:
1. அப்பொருளை
அது படைக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக வேறொரு வேலையில் பயன்படுத்துவது. (உ.ம். பேனாவைக்
கொண்டு காது குடைவது.)
2. ஒரு
பொருளை அதைப் பயன்படுத்த வேண்டிய அளவுக்கு மீறி அதிகமாகப் பயன்படுத்துவது. (உ.ம் ஒரு
இயந்திரத்தை அதிக நேரம் ஓட்டிப் பழுதாக்குவது; கால்நடைகள் மீது அளவுக்கு அதிகமாக பாரம்
ஏற்றுவது போன்றவை.)
3. ஒரு
பொருளை பயன்படுத்தாமல் போட்டு வைத்து வீணாக்குவது (உ.ம்: மாத்திரை மருந்துகளை வாங்கிப்
பயன்படுத்தாமல் போட்டு வைத்து அவற்றைக் காலாவதி ஆக்குவது; பழங்கள், காய்களை வாங்கிப்
போட்டு வைத்து அவை அழுகிப் போகச் செய்வது போன்றவை.)”
எனவே,
செருப்பைத் தலைக்கும் தலையணையைக் காலுக்கும் வைத்துப் படுப்பது அவற்றுக்குச் செய்யும்
அநீதம் ஆகிறது. அதை மவ்லானா ரூமி ஒருபோதும் செய்ய மாட்டார் அல்லவா? (மருத்துவர் ஆலோசனைப்படி
காலுக்குத் தலையணை வைத்துப் படுக்க வேண்டும் என்றால் தாராளமாகச் செய்யுங்கள். அப்போது
அநீதம் ஆகாது. ஆனால், எந்த மருத்துவரும் செருப்பைத் தலைக்கு வைத்துப் படுக்கச் சொல்ல
மாட்டார் என்று நம்புகிறேன்!)
கால்கள்
மட்டமானவை அல்ல என்பதற்கு வேறு விதத்தில் விளக்கம் உண்டு. பெரியோர்களின் பாதங்களை முத்தமிடுவது
நபிவழி ஆகும்! அந்த வகையில் மவ்லானா ரூமி அவர்கள் தன் குருநாதரான ஷம்ஸுத்தீன் தப்ரீஸ்
(ரஹ்) அவர்களின் பாதங்களைப் பல முறை முத்தமிட்டிருப்பார்கள். தன் தலையை விடத் தன் குருவின்
பாதம் மேலானது என்றே ஓர் உண்மைச் சீடன் எண்ணுவான். தன் பாதமும் தன் குருவின் பாதமும்
சமம் என்று எண்ணுவது இருக்கட்டும், தன் தலையும் தன் குருவின் பாதமும் சமம் என்று அவன்
எண்ணுவதுமே கூட அநீதமாகிவிடும்!
இன்னொன்றும்
நியாபகம் வருகிறது. “லா இலாஹ இல்லல்லாஹ்” என்னும் திருக்கலிமாவை நாவால் மொழிந்து தன்
உள்ளத்தால் மெய்ப்படுத்துபவரிடம் அவர் சொர்க்கத்தில் நுழைவார் என்று நன்மாராயம் சொல்லும்படி
நபி (ஸல்) அவர்கள் அபூ ஹுரைரா (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அதற்கு அடையாளமாக நபி
(ஸல்) தனது காலணிகளை (நஃ’லைன் ஷரீஃப்) அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் கொடுத்து அனுப்பினார்கள்
(ஸஹீஹ் முஸ்லிம்; ரியாளுஸ் ஸாலிஹீன் #709). நபியின் பாத ரட்சைகளைக் கைகளில் ஏந்தி நெஞ்சில்
அணைத்தபடிதான் அபூ ஹுரைரா (ரலி) சென்றிருப்பார்களே அன்றி அதைத் தன் பாதத்தில் அவர்கள்
அணிவார்களா என்ன? அது நபிக்குச் செய்யும் மரியாதைக் குறைவு ஆகிவிடும் அல்லவா? நபியின்
காலணிகளுக்கான மரியாதை அதை நெஞ்சிலும் தலையிலும் நாம் தாங்க வேண்டும் என்பதாகும்.
அதே
போல், வானவர்கள் மரப் பேழை ஒன்றைச் சுமந்து வந்தது பற்றியும் அதில் மூசா (அலை) மற்றும்
ஹாரூன் (அலை) ஆகிய இறைத்தூதர்களின் சந்ததியர் விட்டுச் சென்ற பொருட்கள் இருந்தன என்றும்
குர்’ஆன் (2:248) பேசுகிறது. அந்தப் பேழைக்குள்
இறைத்தூதர்களின் காலணிகளும் இருந்தன விரிவுரைகள் இயம்புகின்றன. வானவர்களின் தலைக்கு
மேல் இறைத்தூதர்களின் காலணிகள் இடம் பெறலாம். அதுதான் இறைத்தூதர்களுக்கான மரியாதை,
கண்ணியம். அதைச் செய்யாவிட்டால் ழுல்ம் என்னும் அநீதம் ஆகிவிடும்.
இவை எல்லாம் பெரியோர்களின் பாதங்களும், காலணிகளும் சிறியோர் மதிக்கத் தக்க அளவில் மேலானவையே என்று காட்டுவதாகும். ஆனால், பொதுவில் நோக்கும்போது, ஒருவர் தன் செருப்பைத் தலைக்கு வைத்துக் கொள்வதும் தலையணையைக் காலுக்கு வைத்துக் கொள்வதும் ழுல்ம் என்னும் அநீதம் ஆகும். அதை ஸூஃபி ஞானி ஒருவர் செய்ய மாட்டார்.
நாகூர்
ரூமி எழுதியுள்ள முன்னுரையில் பெரியவர் நரியம்பட்டு எம்.ஏ.சலாம் அவர்களின் சாதனையைச்
சுட்டிக் காட்டியுள்ளார். மவ்லானா ரூமியின் ”மஸ்னவி ஷரீஃப்” என்னும் பெருநூலினை அவர்
மூல வரிகளுடனும் ஒலிபெயர்ப்பும் நல்கி தமிழாக்கம் செய்துள்ளார். மொத்தம் ஏழு பாகங்கள்.
அதன் முதல் பாகத்தில் மவ்லானா ரூமி பற்றி ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார். அதில் ரூமியின்
முக்கியமான மேற்கோள் ஒன்றைத் தந்திருக்கிறார்:
ஹர் மர்த்தபா அஸ் உஜூத் ஹுக்மே வாரித்
கர்
ஃபர்கெ மராதிப் நகுனீ ஜிந்தீக்கி
பொருள்:
”உள்ளமையின் ஒவ்வொரு படித்தரத்திற்கும் ஒரு கட்டளையுண்டு; படித்தரங்களுக்கு உரிய வேறுபாட்டை
நீ கவனிக்கவில்லை என்றால் நிச்சயம் நீ ஒரு நயவஞ்சகனே” (ப.11)
ஜிந்தீக்
என்றால் வழிகெட்டவன் என்று பொருள். படித்தரங்களுக்கு இடையே வேறுபாடுகளின் நியதிகளைப்
பேணவில்லை எனில் ழுல்ம் உண்டாகி அவன் சத்தியப் பாதையில் இருந்து தவறிவிடுவான். அத்தகைய
ழுல்ம் அதன் உச்சத்தில் ஷிர்க் என்னும் இணைவைப்பாக இருக்கும். எனவே ஷிர்க்கை விலக்கி
ஏகத்துவத்தைப் பேண வேண்டும் எனில் படித்தரங்களின் வித்தியாசங்களை, அதில் உள்ள உயர்வு
தாழ்வுகளைப் பேண வேண்டியதும் அவசியமாகும்.
இன்னோர்
உதாரணம்: மூன்று தங்கக் கட்டிகள் உள்ளன. அவை பணிப்பொற் கட்டிகள். ஒவ்வொன்றும் 100 கிராம்
எடை. எனவே தங்கத்தின் மதிப்பைக் கவனித்து அவை மூன்றும் சமம்தான். ஆனால், ஒன்றை வைத்து
மாலையும் இன்னொன்றை வைத்து வளையலும், மற்றொன்றை வைத்து கொலுசும் செய்யப்படுகிறது. இப்போது
மூன்றும் அவற்றின் உள்ளமைப் பொருளான பொன்னை கவனித்து சம மதிப்பில் இருந்தாலும் அவை
சமமே என்று காட்டுவதற்காக கொலுசைக் கழுத்தில் போட முடியாது, மாலையைக் கையில் சுற்றிக்
கொள்ள மாட்டார்கள், வளையலைக் காலில் அணிய மாட்டார்கள். இந்த அறிவு எல்லோருக்கும் இயல்பிலேயே
உள்ள நியாய உணர்ச்சியாகும். இது ழுல்ம் செய்யக்கூடாது என்னும் விவஸ்த்தை ஆகும்.
ஈரோடு
தமிழன்பன் தன் கவிதையின் வழி – அதாவது அவரின் கற்பனையில் வரும் மவ்லானா ரூமி அவருக்கு
– சமத்துவத் தத்துவத்தைப் போதிக்கிறார் என்று நாகூர் ரூமி அவர்கள் இப்படி விளக்கி எழுதியுள்ளார்:
”கருப்பர்கள், அடிமைகள் என்பதால்
நபித்தோழர்கள் பிலால், அம்மார் போன்றவர்களைத் தீயில் நிர்வாணமாகப் படுக்க வைத்து உடலை
வதைத்தார்கள் குறைஷிகள். ஒரு கருப்பரின் கழுத்தில் தன் வெள்ளைத் தொடையை வைத்து நசுக்கி
உயிர் பறிக்கும் வேலையைச் செய்கிறான் துப்பாக்கி ஏந்திய ஒரு வெள்ளை அமெரிக்கன் இன்று.
சாத்தான்குளத்தில் துப்பாக்கி ஏந்திய சில சாத்தான்கள் ஒரு தந்தையையும் மகனையும் கொடுமையாக
அடித்துக் கொல்கிறார்கள். ஒரு சின்னக் குழந்தையை அது முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக
துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்கள் சிரியாவில்.
இப்படிப்பட்ட வன்கொடுமைகள்
ஏன் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளன? ஒரு பக்கச் சார்புதான். சிலரை செருப்பாகவும் சிலரைத்
தலையணையாகவும் நினைப்பதால்தான்.
இந்த உயர்வு தாழ்வு நிலைகள்
உண்மையானவை அல்ல என்று இக்கவிதைகள் மிக அழகாகச் சொல்கின்றன. தலை என்றால் உயர்வு கால்
என்றால் தாழ்வு என்ற நினைப்புதான் எல்லா வலிகளுக்கும் வேதனைகளுக்கும் காரணம். தலையால்
மட்டுமே ஒருவர் வாழ்ந்துவிட முடியாது. தலையில்லாமலும் வாழமுடியாது. அதைப் போல கால்களால்
மட்டுமே ஒருவர் வாழவும் முடியாது. தலையைக் காலும், காலைத் தலையும் சார்ந்துள்ளன என்று
தலையும் காலும் புரிந்துகொள்ள வேண்டும்.”
ஒரு
கோணத்தில் நாகூர் ரூமி அவர்களின் விளக்கம் நன்றாகவும் சரியாகவும் இருக்கிறது என்றாலும்
அதற்கான எல்லைகளும் உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
சமத்துவம்
என்று வந்தால் உடனே உணர்ச்சி வசப்பட்டுப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். தலை உயர்வானது
கால் தாழ்வானது என்று வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். அதற்காகத் தொப்பியைக் காலுக்கும்
காலுரையைத் தலைக்கும் அணிவிக்க முடியுமா? காலுரையைக் கைக்குக்கூட அணிவிக்க முடியாதே!
ஏனெனில், ஒவ்வொன்றின் வடிவமைப்பும் வேறு.
கருப்பு
வெள்ளை என்று நிறத்தை வைத்து உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாதுதான். அது அநீதம் ஆகும்.
இது குறித்துப் பிரபலமான ஹதீஸ் ஒன்றுண்டு. பொ.ஆ 623-இல் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாளில்
நபி (ஸல்) நிகழ்த்திய இறுதிப் பேருரையில் இப்பகுதி இடம் பெற்றுள்ளது: ”மனிதர்களே! நிச்சயமாக
உங்களின் ரட்சகன் ஒருவனே, மேலும் உங்கள் தந்தையும் ஒருவரே (யா அய்யுஹன்னாஸு இன்ன றப்பக்கும் வாஹிதுன் வ இன்ன பாகும் வாஹிதுன்). அறபி
ஒருவருக்கு அறபியல்லாதவர் மீது சிறப்பில்லை, அறபியல்லாத ஒருவருக்கு அறபியர் மீது சிறப்பில்லை,
வெள்ளையர் ஒருவருக்கு கறுப்பரின் மீது சிறப்பில்லை, கறுப்பர் ஒருவருக்கு வெள்ளையர்
மீது சிறப்பில்லை, பயபக்தியைக் கொண்டே தவிர (அலா லா ஃபள்ல
லி-அறபிய்யி அலா அஜமிய்யி வ லா லி-அஜமிய்யி அலா அறபிய்யி வலல் அஹ்மர அலா அஸ்வத வ லா
அஸ்வத அலா அஹ்மர இல்லா பித்-தக்வா). இதைச் சொல்லிவிட்டு நபி (ஸல்) பின்வரும் குர்’ஆன்
வசனத்தை ஓதினார்கள்: “நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடம் சிறந்தவர் அதிக பயபக்தி உடையவரே
(இன்ன அக்ரமக்கும் இந்தல்லாஹி அத்காக்கும்
- 49:13)” (அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி); நூல்: சுஹைபுல் ஈமான்
#4706)
இந்த
ஹதீஸில் அடிக்கோடிட வேண்டிய விடயம் “இல்லா பித்-த்க்வா” – “பயபக்தியைக் கொண்டே தவிர”
என்பதுதான். அதாவது ஃபள்லு (உயர்வு, மேன்மை, சிறப்பு) என்பது மனிதர்களுக்கு இடையே உண்டு.
அதற்கான அளவுகோல் தக்வா (பயபக்தி) என்று இந்த ஹதீஸும் அதற்குச் சான்றாக நபி (ஸல்) ஓதிக்காட்டிய
குர்’ஆன் திருவசனமும் வலியுறுத்துகின்றன. உயர்வு தாழ்வுக்கான அளவுகோல் இங்கே சுட்டப்படுகிறது.
அதை நாம் மறுதலித்தால் ழுல்ம் என்னும் அநீதம் உண்டாகும்.
”பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்” என்பதையும் இந்த ஹதீஸ் வலியுறுத்துகிறது. மற்றபடி, இறைநம்பிக்கையின்
அடிப்படையில் அதனை உடையவரும் இல்லாதவரும் சமமல்லர் என்பதையும் சுட்டிக்காட்டி விடுகிறது.
இறை நம்பிக்கையாளரிலும் அவரவர் பயபக்தியின் நிலைகளுக்கு ஏற்ப உயர்வு தாழ்வு உண்டு என்றும்
வலியுறுத்துகிறது. இதனால்தான் விசுவாசிகளுக்குப் பற்பல படித்தரங்கள் உண்டாகியுள்ளன.
”நாம்
நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகிறோம்; கல்வியறிவுள்ள ஒவ்வொருவருக்கும் மேலான
அறிஞன் ஒருவன் இருக்கவே செய்கிறான்!” (நர்ஃப’உ
தரஜாத்தின் மன் நஷாஉ, வ ஃபவ்க்க குல்லி தீ-இல்மின் அலீம் – 12:76) என்று குர்’ஆன்
சொல்வதன்படி அறிவு என்பது உயர்வு தாழ்வுக்கான அளவுகோல் ஆகிறது.
”அவனின்
தூதர்களில் எவரையும் நாம் பிரித்து வேறுபடுத்த மாட்டோம்” (லா நுஃபர்ரிக்கு
பைன அஹதிம் மிர் ருசுலிஹி – 2:285) என்று சொல்லும் அதே குர்’ஆன் இப்படியும் சொல்கிறது:
“அந்தத் திருத்தூதரகள் – அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கியுள்ளோம்; அவர்களில்
சிலருடன் அல்லாஹ் பேசியுள்ளான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியுள்ளான் (தில்கர் ருசுலு ஃபள்ளல்னா பஃ’ளஹும் அலா பஃ’ளின்
மின்ஹும் மன் கல்லமல்லாஹு வ ரஃப’அ பஃ’ளஹும் தரஜாத்தின் – 2:253). இவ்விரண்டு திருவசனங்களும்
ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை அல்ல. ஒவ்வொன்றுக்கும் அதை விளங்குவதற்கான புழங்குவதற்கான
படித்தரம் இருக்கிறது.
”குருடரும்
பார்வையுடையோரும் சமமாகார்; அவ்வாறே இறைநம்பிக்கை கொண்டு நற்காரியம் ஆற்றுவோரும் தீயோரும்
சமமாகார்” (குர்’ஆன் 40:58)
”மரணித்த
ஒருவனை நாம் உயிர்ப்பித்தெழுப்பி அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன்
மனிதரிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக் கிடக்கிறான். அதைவிட்டு அவன்
வெளியேறவே முடியாது – இவ்விருவரும் சமமாவரா?” (குர்’ஆன் 6:122)
சமத்துவத்துக்கு
ஒரு படித்தரம் இருக்கிறது. எல்லை இருக்கிறது. சமமின்மைக்கும் படித்தரம் இருக்கிறது!
உயர்வு தாழ்வு என்பது அறவே கிடையாது என்று பேசப்படும் சமத்துவம் ’அதாலத்’ என்னும் நீதி
பரிபாலணத்தைக் காவு கேட்கிறது! நீதியை பலி கொடுத்து சமத்துவம் பேச முடியாது.
அனைவருக்கும்
கல்விக்கான வாய்ப்பு என்பது சமத்துவம். அதற்காக, நன்றாகப் படிக்கும் மாணவனையும் படிக்காத
மாணவனையும் சமம் என்று ஒரே மதிப்பெண் வழங்க முடியாது. பின்னர் தேர்வுகள் எதற்கு? ஏற்றத்
தாழ்வைக் காட்டத்தானே?
நல்லவரும்
தீயவரும் எப்படிச் சமமாக முடியும்? எனில் நன்மையும் தீமையும் சமம் என்று ஆகிவிடாதா?
நல்லவராக இருக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் உள்ளது. ஆனால் நல்லவர் உயர்வானவர், தீயவர்
தாழ்வானவரே.
வாய்ப்புகளில்
அனைவருக்கும் சமத்துவம்; அதன் விளைவுகளில் உயர்வு தாழ்வு. இதுதான் உலக நியதி. இவற்றில்
குழப்பிக் கொள்ளக் கூடாது. இந்த விளக்கங்கள் போதும் என்று கருதுகிறேன்.
மவ்லானா ரூமியின் கவிதைகளை அவரவர் தத்தமது
அறிவு நிலைக்கேற்ப வாசிக்கின்றனர். அவரை நவீனப் படுத்தும் போக்கு என்று சொல்லிக்கொண்டு
அவரது கவிதையின் அர்த்தங்களைத் திரித்துவிடுவோரும் உண்டு. அவரைத் தம் கற்பனைக்குள்
இழுத்து தம் இஷ்டத்துக்கு மாற்றி வடிவமைத்துக் காட்டப்படுவதும் உண்டு. மவ்லானா ரூமியை
எப்படி வாசிக்க வேண்டும் என்று நான் சமய ரீதியான குறிப்புகளைத் தருகிறேன் என்பதை எழுத்தாளர்
வசுமித்ர ஒரு குற்றச் சாட்டாகவே வைத்தார். எனினும் நான் தொடர்ந்து என் பணியைச் செய்து
கொண்டுதான் வருகிறேன்.
மவ்லானா ரூமி ஒரு ஸூஃபி ஞானக் கவிஞர்,
இறைநேசர். அவரின் கவிதைகளை ஸூஃபி ஞான நெறியில் முறைப்படி – ஆம், முறைப்படி – பயிற்சி
பெறுவோரால் மட்டுமே சரியாக விளங்க முடியும். ரூமி அன்பரான ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களுக்கு
அந்த நல்வாய்ப்புக் கிட்டட்டும்.
“அந்தத் திருத்தூதரகள் – அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கியுள்ளோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியுள்ளான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியுள்ளான் (தில்கர் ருசுலு ஃபள்ளல்னா பஃ’ளஹும் அலா பஃ’ளின் மின்ஹும் மன் கல்லமல்லாஹு வ ரஃப’அ பஃ’ளஹும் தரஜாத்தின் – 2:253).
ReplyDeleteமுகவரியும் பதிலும் இல்லாத கடிதமொன்றுமௌனத்தில் கதறுவதை
ஏன் என்று வியக்கின்றேன்
நல்லவரும் தீயவரும் எப்படிச் சமமாக முடியும்? எனில் நன்மையும் தீமையும் சமம் என்று ஆகிவிடாதா? நல்லவராக இருக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் உள்ளது. ஆனால் நல்லவர் உயர்வானவர், தீயவர் தாழ்வானவரே
ReplyDelete