இறைவனை நினைவு கூர்வதற்கு ஓர் எல்லை இல்லை. ‘இறை விசுவாசியரே! அல்லாஹ்வை
அதிகமாக நினைவு கூருங்கள்’ என்றே திருமறை சொல்கிறது. எனினும், தஸ்பீஹ் (இறை நாமம் அல்லது
இறை வாசகம் ஓதுதல், ஜபம்) அல்லது ஔராது (அன்றாட ஓதுதல்) என்னும் முறைகளுக்கு எண்ணிக்கை
குறிப்பிட்டுப் பேணப்படுகிறது.
எண்ணிக்கை வைத்து ஓதுதல்
நபிவழியில் உள்ளதாகும். இதற்கு ஹதீஸில் பல உதாரணங்கள் உள்ளன.
தனக்கு ஒரு பணிப்பெண் வேண்டும்
என்று நபி (ஸல்) அவர்களிடம் அன்னாரின் அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) கேட்டபோது, ஒருவருக்கு
ஓர் உதவியாளர் இருப்பதை விட மேலான ஒன்றை அறிவித்துத் தருவதாகச் சொல்லி, நபி (ஸல்) தஸ்பீஹ்
ஒன்றை ஓதக் கற்றுத் தந்தார்கள். அதாவது, உறங்கச் செல்லும்போது சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, மற்றும் அல்லாஹு அக்பர் 34 தடவைகள் ஓத வேண்டும் (ஸஹீஹ்
முஸ்லிம் #2728)
நபி (ஸல்) சொன்னார்கள்,
“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தினமும் நான் அல்லாஹ்விடம் இஸ்திக்ஃபார் (மன்னிப்பு)
தேடுகிறேன், எழுபது முறைக்கும் மேல் அவனிடம் திரும்புகிறேன்.” (ஸஹீஹுல் புகாரி
#1870 & 6307)
நபி (ஸல்) சொன்னார்கள்,
“சில நேரங்களில் நான் என் உள்ளத்தின் மீது திரை ஒன்றைக் காண்கிறேன். எனவே அல்லாஹ்விடம்
நான் ஒரு நாளைக்கு நூறு தடவை மன்னிப்புக் கோருகிறேன்.” (ஸஹீஹ் முஸ்லிம் #2702)
இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்,
“நபி (ஸல்) அவர்கள் ஒரே அமர்வில், எழுவதற்கு முன், ‘என் ரட்சகனே! என்னை மன்னிப்பாயாக,
என் திரும்புதலை ஏற்பாயாக. நிச்சயமாக, நீயே தவ்வாபுர் கஃபூர் (திரும்புவோனும் மன்னிப்போனும்)’
என்று நூறு முறை ஓதினார்கள்.” (சுனன் திர்மிதி #3434)
ஒரே ஓதலுக்கு 70 என்றும்
100 என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதை வைத்துக் குழம்ப வேண்டியதில்லை. சூழ்நிலை மற்றும்
தருணங்களுக்கு ஏற்ப எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம் என்பதை இது காட்டுவதாக மார்க்க
அறிஞர்கள் கருதுகின்றனர். அதிகப்படுத்திக் கொள்வது சிறந்ததுதான். ஏனெனில், இறைவனை அதிகமாக
நினைவு கூர்தலே குர்’ஆனில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தஸ்பீஹ், தஹ்லீல், தக்தீஸ் ஆகியவற்றை ஓதுவதற்கு விரல்களைப் பயன்படுத்துமாறும், அவை அல்லாஹ்விடம் சாட்சி பகரும்
என்றும் நபி (ஸல்) அறிவுறுத்தியதாக ஹதீஸ் கூறுகிறது (சுனன் திர்மிதி #3583).
இவற்றின் எண்ணிக்கை சிறிய
அளவாக இருப்பதால் விரல்களில் கணக்கு வைப்பது எளிது. கணக்குத் தப்பாது. 33-33-34 என்ற
கணக்கில் ஓதுவதற்கு விரல்களைப் பயன்படுத்துமாறு நபி (ஸல்) சொல்லியிருப்பதால் குறைந்த
எண்ணிக்கையிலான இந்த திக்ரு மற்றும் ஏனைய திக்ருகளை ஓதுவதற்கு விரல்களைப் பயன்படுத்துவதே
சிறந்ததும் நபிவழியும் ஆகும்.
ஆனால், அதிக எண்ணிக்கையில்,
ஆயிரம் இரண்டாயிரம் என்று ஓதுவதற்கு விரல்களைப் பயன்படுத்தும் போது கணக்கு வைப்பது
எளிதன்று. கணக்குத் தவறிப் போவதற்கான வாய்ப்புதான் அதிகம். எனவே, ஔராதுகளை ஓத மணிமாலை
பயன்படுத்தப்படுகிறது. நவீனக் கருவிகளாக ‘டிஜிட்டல் கவுண்டர்’ போன்றவையும் வந்துவிட்டன.
அவற்றைப் பயன்படுத்துவதும் சரிதான்.
பேரீத்தம் கொட்டைகளை வைத்து
எண்ணியபடி தஸ்பீஹ் செய்த ஒரு பெண்மணியை நபி (ஸல்)அ வர்கள் சந்தித்தார்கள் என்று சய்யிதுனா
சஃ’து இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் (சுனன் திர்மிதி #3568, ஸஹீஹ் இப்னு
ஹிப்பான் #837, முஸ்தத்ரக் ஹாகிம் பாகம்-1). நபி (ஸல்) அந்த தஸ்பீஹ் எண்ணும் முறைக்கு
மறுப்புக் கூறவில்லை. எனவே, பேரெண்ணிக்கையில் தஸ்பீஹ் செய்ய அதற்குத் தோதான கருவியைப்
பயன்படுத்துவது நபி (ஸல்) அவர்களின் ஏற்பைப் பெற்றுள்ள ஒன்றுதான். அந்த அடிப்படையில்
கருவியைப் பயன்படுத்துவதும் நபிவழியே என்றாகிறது.
அபூ தர்தா (ரலி) அவர்கள்
ஒரு பையில் பேரீத்தம் கொட்டைகளை வைத்திருந்தார்கள். வைகறைத் தொழுகைக்குப் பின்னர் அவற்றைக்
கொண்டு தஸ்பீஹ் செய்தார்கள் என்று அல்-காசிம் இப்னு அப்துர் ரஹ்மான் அரிவிக்கிறார்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடமும்
கூழாங்கற்கள் அல்லது பேரீத்தம் கொட்டைகள் நிரப்பப்பட்ட பை ஒன்று இருந்ததாகவும் அதனைக்
கொண்டு அவர்கள் தஸ்பீஹ் செய்தார்கள் என்றும் அபூ நத்ரா அல்-கஃப்பாரி சொல்கிறார்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம்
ஒரு கயிறு இருந்தது, அதில் ஆயிரம் முடிச்சுகள் போடப்பட்டிருந்தன. அதை வைத்து அவர்கள்
தஸ்பீஹ் செய்யாமல் உறங்கப் போக மாட்டார்கள் என்று நயீம் இப்னு முஹர்ரர் இப்னு அபீ ஹுரைரா
அறிவிக்கிறார். இச்செய்தியை சயீது இப்னு அபூ வக்காஸ், அபூ சயீதுல் குத்ரி, நபி (ஸல்)
அவர்களின் பணிப்பெண்ணான அபூ சஃபிய்யா, ஹுசைன் (ரலி) அவர்களின் மகளாரான சய்யிதா ஃபாத்திமா
ஆகியோரும் அறிவிக்கின்றனர்.
இவற்றின் வழியாக, அதிகமான
எண்ணிக்கையில் ஓதுவதற்கு அதற்குத் தோதான கருவியைப் பயன்படுத்துவதும் நபியால் ஏற்கப்பட்டது
என்ற அடிப்படையில் நபிவழியே என்று உறுதிப்படுகிறது. இதில் சர்ச்சைகளும் விவாதங்களும்
பயன் தரப் போவதில்லை. மனதிற்குள்ளேயே ஓதுகின்ற ஒரு தஸ்பீஹும்கூட வீணாகிவிடாது. அல்லாஹ்
அதை அறிவான், அதற்கான நற்கூலி அருள்வான். அப்படி இருக்க, மணிமாலை, அல்லது கவ்ண்ட்டர்
கருவி வைத்து ஓதினால் அது வீணாகிவிடும் என்று நினைக்க முகாந்திரம் இல்லை. விரலில் ஒரே
இடத்தில் எத்தனை முறை அழுத்தினாலும் அதற்கான சாட்சியையும் விரல் கூறத்தானே செய்யும்?
அதன்படி, தஸ்பீஹ் மணியை விரல்தானே நகர்த்துகிறது, இத்தனை முறை ஓதினார் என்று அது சாட்சி
சொல்லுமே! இந்தத் தெளிவுடன் அதிகமாக ஓதுவதில் ஈடுபடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்
புரிவானாக!
உகூஃபே அததி என்னும்
கோட்பாடு குறித்து மேலும் சில விளக்கங்களைக் காண்போம்.
எண்ணிக்கை பேணி
ஓதுவது என்பது ஆரம்ப நிலைச் சாதகருக்கு மன ஓர்மையையும், கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும்
(தர்தீப்) உண்டாக்க உதவுகிறது.
பல காலம் ஆன்மிகப் பாதையில் பயணித்துப்
பக்குவம் அடைந்த மூத்தோரும்கூட எண்ணிக்கை வைத்து ஓதுதலைப் பேணுகின்றனர். எண்ணிக்கை
வைத்து ஓதுவதில் அகமிய ஞானம் இருக்கிறது என்று அவர்கள் உணர்ந்துள்ளனர். உதாரணமாக, ஷைஃகு
புர்ஹானுத்தீன் ஹெர்மன் சொல்கிறார்:
”ஆரம்பக் கட்டங்களில்
அகத் தூண்டலும் உள்ளுணர்வும் ஏற்பட உதவுகின்ற இந்த முறைமை முன்னேற்றம் அடைந்த சீடர்களுக்கு
’பன்மியத்தில் ஒருமை’ (வஹ்தத் தர் கஸ்ரத்)
என்பதன் பிரக்ஞையை உண்டாக்குகிறது.
இந்தப் பன்மியமும் பெருக்கமும் தோற்ற மயக்கமே!
அனைத்திலும்
அந்த ஏகனே வெளியாகியுள்ளான்.
அகப் பார்வையால் நோக்கும்போது பன்மியம் என்பது ஒருமையே அன்றி வேறன்று.
சிலருக்கு இதில் சந்தேகம் இருக்கலாம். எமக்கு ஐயமில்லை. தோற்றம் பல எண்ணிக்கைகள் காட்டினும்
உள்ளமை ஒன்றே.”
உருது மகாகவி அல்லாமா இக்பால் (ரஹ்) அவர்கள் “ஜுக்னூ” (மின்மினி)
என்னும் கவிதையில் சொல்கிறார்கள்:
(கஸ்ரத் மேன் ஹோ கயா ஹே வஹ்தத் கா ராஸ் மஃக்ஃபி
ஜுக்னூ மேன் ஜோ ச்சமக் ஹே ஒ பூல் மேன் மெஹக் ஹே)
“பன்மையில்
ஒருமையின் ரகசியம் மறைந்துள்ளது
மின்மினியில் ஒளியாக இருப்பதே பூவில் நறுமணமாக உள்ளது”
எண்ணிக்கை வைத்து ஓதுவதன் ஆற்றலை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்.
“திக்ரில் எண்ணிக்கை பேணுவது என்பது தெய்வீக அறிவை (இல்முல் லதுன்னி) அடைவதற்கான முதல் படியாகும்” என்று ஃகாஜா பஹாவுத்தீன்
ஷாஹ் நக்ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள். மேலும், “திக்ரில் மீண்டும் மீண்டும்
ஓதுவதில் எண்ணிக்கையைப் பேணுதல் என்பது எண்ணங்கள் சிதறிப் போகாமல் ஒன்று திரட்டப்பட
உதவுகிறது” என்றும் கூறியுள்ளார்கள்.
”உகூஃபே அததி என்பது திக்ரில் ஓதப்படும் எண்ணிக்கையைப்
பேணுவதாகும், அப்படிச் செய்வது பயன் தந்தாலும் தராவிட்டாலும்” என்று மவ்லானா நூருத்தீன்
அப்துர் ரஹ்மான் ஜாமி (ரஹ்) அவர்கள் இதனை வலியுறுத்துகிறார்கள். ஒருவருக்கு அவரின்
குருநாதர் எவ்வளவு எண்ணிக்கை குறித்துள்ளாரோ அந்த எல்லையை மீறாமல் அவர் நியமமாக ஓதி
வருவது சீடரின் மீது கடமையாகும். தானாக அவர் அந்த எண்ணிக்கையை மாற்றக் கூடாது. குருவிடம்
தன் நிலையை அவர் தெரிவிக்கலாம். ஆனால் எண்ணிக்கை நிர்ணயிக்கும் உரிமை குருவுக்கே உண்டு.
சீடருக்கு எது நல்லது என்பது குருவுக்கே தெரியும்.
”எவ்வளவு முறை
திரும்பத் திரும்ப ஓதுகிறோம் என்பது முக்கியமன்று. ஆனால், அவற்றை எவ்வளவு விழிப்புடனும்
அமைதியுடனும் ஓதுகிறோம் என்பதுதான் முக்கியமானது” என்று ஃகாஜா அலாவுத்தீன் அல்-அத்தார்
(ரஹ்) சொல்கிறார்.
ஆரம்ப நிலைச்
சாதகர்களுக்கு தரீக்காவின் ஷைஃகுமார் எண்ணிக்கை குறிப்பிட்டு ஓதச் சொல்வதில் உளவியல்
ரீதியான காரணங்களும் உள்ளன. தொடக்கத்திலேயே அதிகமாக ஒருவர் ஓத ஆரம்பித்தால் அதன் தாக்கத்தைத்
தாங்காமல் மனம் பேதலித்து விடுகின்ற அபாயம் இருக்கிறது. அப்படி அதீதமாக ஓதுதலில் ஈடுபட்டதால்
சிலருக்கு சித்தம் கலங்கிப் போன நிகழ்வுகளும் உண்டு. எனவே, எண்ணிக்கை வரம்பு என்பது
ஆரம்ப நிலைச் சாதகருக்கு மிகவும் தேவையான கடிவாளம் ஆகிறது.
”திக்ரு என்பது
அதன் அளவு மற்றும் தரம் (quantity and quality) ஆகிய இரண்டு அம்சங்களிலும் பேணபப்ட
வேண்டும். இவ்விரண்டில் திக்ரின் தரம்தான் அதிக முக்கியத்துவம் உடையது என்பதில் ஐயமில்லை.
எனவே, கொடுக்கப்பட்ட எண்ணிக்கை வரம்புக்குள்ளேயே இதயத்தில் திக்ரின் தரத்தை ஆழப்படுத்த
வேண்டும். இவ்வகையில், எண்ணிக்கை வரம்பு என்பது திக்ரின் தரத்தை அடைவதற்கு உறுதுணையாகவே
இருக்கிறது” என்கிறார் உஸ்மான் நூரீ தோப்பாஷ்.
எண்ணிக்கை என்பது இறைப் பேரறிவில் உள்ளதாகும். அதனைப்
பேணுவதில் நிச்சயமாக அர்த்தமுள்ளது.
No comments:
Post a Comment