தற்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் ஆன்மிக நூல் ஒன்றின் முதல் அத்தியாயம் இது. ஸூஃபிகள் மேற்கொள்ளும் மூச்சுப் பயிற்சி பற்றிய ஒரு விளக்கம்.
ஹோஷ் தர் தம்
(சுவாசத்தில் சுதாரிப்பாக இருத்தல்)
ஃபார்சி மொழியில் ”ஹோஷ்” என்றால்
சுதாரிப்பு, “தம்” என்றால் மூச்சு. “ஹோஷ் தர் தம்” என்றால் ’மூச்சில் சுதாரிப்பு’
என்று பொருள்.
உலகில்
தோன்றிய ஆன்மிக நெறிகள் அனைத்துமே ஆன்மிகத்தின் அடைப்படை என்று மூச்சையே சுட்டிக்
காட்டியுள்ளன. ஆன்மிகத்தில் ஈடுபடும் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் மூச்சின்
முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
மூச்சே உயிரின் அடையாளமாக இருக்கிறது. மனித உடலுக்குள் ”ரூஹ்” என்னும் உயிர் இறைவனின் மூச்சாகவே உள்ளே நுழைந்தது என்று குர்’ஆன் உணர்த்துகிறது:
மனிதனை நான் செவ்வையாக்கி அவருக்குள் எனது உயிரில் இருந்து ஊதியதும் நீவிர் அனைவரும் அவருக்குச் சிரம் பணிவீராக! (குர்’ஆன்: 15:29)
எனவே, மூச்சு என்பது உயிருடன்
இருப்பதன் அடையாளமாக நிகழ்ந்து வருகிறது. உயிர் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு
படைப்பிலும் மூச்சின் இயக்கம் இருக்கிறது.
மனிதனின்
அடிப்படைத் தேவைகள் உணவு உடை உறையுள் என்று மூன்றைச் சொல்கிறோம். ஆனால் இவை
மூன்றையும்விட மூச்சே அடிப்படை என்பது உண்மை.
அடிப்படைத்
தேவைகளின் அவசியத்தின் அளவை மதிப்பிட்டால், உறைவிடத்தை விட உடையும், உடையை விட
உணவும் மிக அவசியம் என்றாகும்.
பனி மலைகளிலும் புல்வெளிகளிலும் பாலைவனங்களிலும் உலவித் திரிந்த நாடோடி
மக்களுக்கு வீடுகள் இல்லை, ஆனால் ஆடைகள் தேவைப்பட்டன. உயிருள்ள தாவர, விலங்கு
இனங்களுக்கு ஆடைகள் இல்லை, ஆனால் உணவு தேவைப்படுகிறது. எனவே உணவே ஏனைய இரண்டை விட
அதிக அவசியம் என்று அறிகிறோம்.
ஆனால், உண்ண உணவும் குடிக்கத் தண்ணீரும் இல்லாத நிலையில்கூட ஒருவரின் /
ஒன்றின் உயிர் சட்டென்று போய்விடாது. மூச்சு ஓடிக் கொண்டிருக்கும் வரை உயிரும்
இருக்கிறது.
மூச்சு என்பது ரூஹ் என்னும் உயிருடன் மட்டுமல்லாது நஃப்ஸ் என்னும்
மனத்துடனும் தொடர்பு கொண்டுள்ளது. அதையே நாம் ஆன்மா என்றும் அழைக்கிறோம். மனத்தைத்
தூய்மையாக்கி வெற்றி பெறுவதே ஆன்மிகம். மனத்தை உயர் நிலைக்குக் கொண்டு போவதே
ஆன்மிகம்.
மனத்தைத் தூய்மையாக்கி உயர் நிலை எய்தச் செய்ய மூச்சு என்னும் கருவியை
முறைப்படிக் கையாள வேண்டியுள்ளது. இதில் இருந்தே ஆன்மிகத்தில் மூச்சு இன்றியமையாத
இடம் பெறுகிறது.
அறபியில் ‘நஃப்ஸ்’ என்னும் சொல் மனத்தையும் ‘நஃபஸ்’ என்னும் சொல் மூச்சையும் குறிக்கிறது. ஒரே வேரில் இருந்தே இவ்விரு சொற்களும் வருகின்றன. இதில் இருந்தே இவ்விரண்டும் தொடர்பு உடையவை என்பதை அறியலாம்.
”காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. இது ஒரு ஞான வாசகம் ஆகும். வயல்களில் அறுவடை முடிந்து நெல் மணிகளில் இருந்து பதர்களைப் பிரிப்பதற்காக முறத்தில் இட்டுப் புடைப்பார்கள். காற்று வீசும்போதுதான் அதைச் செய்ய முடியும். அதையே இப்பழமொழி குறிக்கிறது என்று பொதுவாக எண்ணுகிறோம். சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே ஒரு காரியத்தைச் சாதித்துவிட வேண்டும் என்பதைக் குறிப்பதாகக் கருதுகிறோம். ஆனால் இதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. “உன் உடலில் மூச்சு ஓடிக் கொண்டிருக்கும்போதே அதில் பயிற்சி செய்யும் முறையை ஒரு குருவிடம் கற்று அதன்படி பயிற்சி செய்து உன் மனத்தைத் தூய்மை ஆக்கிக் கொள்” என்பதே அதன் பொருள் என்று ஸூஃபி மகான் ‘தில்நவாஸ்’ ஃபைஜி ஷாஹ் நூரீ (கத்தசல்லாஹு சிர்ரஹுல் அஜீஸ்) அவர்கள் சொல்கிறார்கள்.
ஒவ்வொரு மூச்சிலும் இறைவனை நினைவு கூர்வதை ஸூஃபி நெறியின் புழக்க பாஷையில் (இஸ்திலாஹில்), “பாசே அன்ஃபாஸ்” என்று குறிப்பிடுகிறார்கள். இது ஒரு ஃபார்சி சொற்றொடர் ஆகும். இதன் பொருள் “மூச்சுக்களைப் பாதுகாத்தல்” என்பதாகும். [இதனைப் பாமர வழக்கில் பாசன்பாஸ் என்று கூறுவதும் உண்டு.]
மூச்சு என்பது இறைவனின் மிகப் பெரிய அருட்கொடைகளில் ஒன்றாகும். அதனை
வீணாக்காமல் இருப்பதும், அதற்கு நன்றி செலுத்துவதும் மனிதனின் மீது கடமையாக
இருக்கிறது. “குலிஸ்தான்” என்னும் நூலின் தொடக்கத்தில் இமாம் சஃ’தி
ஷீராஸி (ரஹ்) சொல்கிறார்கள்:
”உள்ளே செல்லும் மூச்சு வாழ்வை
அதிகப்படுத்துவதாக உள்ளது. வெளியே வரும் மூச்சு ஜீவனுக்கு சுகம் அளிக்கிறது. எனவே
ஒவ்வொரு மூச்சிலும் இரண்டு அருட்கொடைகள் உள்ளன. ஒவ்வொரு அருட்கொடைக்கும் நன்றி
செலுத்துவது கடமையாக உள்ளது.”
இந்த நன்றியறிதல் ஒவ்வொரு மூச்சிலும் இறைவனை நினைவு கூர்வதாலேயே
நிறைவேற்றப்பட முடியும் என்று ஸூஃபிகள் சொல்கின்றனர்.
இதில் ஒரு நுட்பமும் உண்டு. அருட்கொடை என்பது இறைவன் தன் கருணையால் நமக்கு
அருள்வதாகும். அது நம் உழைப்பால் உண்டாவது அல்ல. அவ்விதத்தில், மூச்சு என்பது முழுமையான
ஓர் அருட்கொடையே. ஏனெனில், மூச்சு நம் முயற்சி இல்லாமலேயே இயங்கிக் கொண்டுதான்
இருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டி என் ஷைஃகு நாயகம் அல்லாமா பிலாலி
ஷாஹ் ஜுஹூரி (தாமத் பரக்காத்துஹும்) அவர்கள் சொல்கிறார்கள்:
“இரவில் நீ உறங்கும்போது நீயா மூச்சு விடுகிறாய்? நீயே உன்னை மறந்து
உறங்கிக் கொண்டிருக்கிறாய்? பிறகு எப்படி நீ மூச்சு விடுவதாகச் சொல்ல முடியும்?
உன்னை மூச்சை இயக்குபவன் அல்லாஹ். அவன்தான் காற்றை உள்ளே செலுத்துகிறான், பின்னர்
வெளியேறவும் செய்கிறான். இரவில் உன் மூச்சை இயக்குபவன் அல்லாஹ் என்றால், அந்த உன்
தேவையை பகலில் உனக்கு நிறைவேற்ற வேறு ஒருவரையா வைப்பான்? அல்லது நீயே நிறைவேற்றிக்
கொள் என்றா சொல்வான்? பகலிலும் அந்தத் தேவையை அவனேதான் உனக்கு நிறைவேற்றுவான்.
எனவே, இருபத்து நான்கு மணி நேரமும் உன்னை மூச்சு விட வைப்பவன் அல்லாஹ்தான்.
அதனால், ஒவ்வொரு மூச்சிலும் அவனை நீ திக்ரு (தியானம்) செய். விழித்திருக்கும்போது
நீ உன் மூச்சில் அவனை திக்ரு செய்தால், நீ தூங்கும்போது உன் மூச்சில் அவனே திக்ரை
நடத்தி அதன் பலனை உனக்கு எழுதிவிடுவான்!”
பாசே அன்ஃபாஸ் என்னும் இந்த மூச்சு திக்ரு ஆன்மிகப் பயிற்சியின் அடிப்படை
ஆகும். இது செம்மை ஆகாமல் வேறு பயிற்சிகள் நடக்காது. மவ்லானா ரூமி (ரஹ்) கணிச்சி /
குந்தாலி (pickaxe) என்னும் கருவியைக் குறியீடாகக் கொண்டு இந்த மூச்சு பயிற்சியை
விளக்கியுள்ளார்.[அன்ஃபாஸ் = மூச்சுகள்; ஃபாஸ் = கணிச்சி என்னும் நிலக் கோடரி].
அவர் சொல்கிறார்:
“உன் வீட்டின் அடித்தளத்தில் ஒரு பொக்கிஷம் மறைந்துள்ளது.
எழு, கையில் கணிச்சியை எடுத்துக்கொண்டு வேலையில்
இறங்கு.
உன் இந்த பழுதுபட்ட வீட்டின் தரையைப் பெயர்த்து எடு,
உள்ளே மறைந்து கிடக்கும் பொக்கிஷத்தை அடைந்துகொள்.
அந்த மாணிக்கக் கற்களைக் கொண்டு செல்வந்தன் ஆகிவிடு.
இது போல் ஆயிரம் வீடுகளை அது உனக்குப் பெற்றுத் தருமே!
இன்னும் நீ ஏன் இந்த அற்ப வீட்டில் வாழ்கிறாய் என்
அன்பே!
கூடிய விரைவில் இவ்வீடு தானகவே விழத்தான் போகிறது;
அப்போது இந்த பொக்கிஷம் வெளிப்பட்டால் அது உனதாய்
இராது
நீ இவ்வீட்டை இடிக்கும் வேலையைத் தொடங்கு இக்கணமே
அந்தப் பொக்கிஷம் உன் உழைப்புக்கான சன்மானமே
பிய்ந்து போகும் கூரைக்கு ஒட்டுப் போடுவதையும்
இடிந்து விழும் சுவருக்குப் பூசுவதையும் விட்டுவிடு
இப்போதே.
சீக்கிரம்! குந்தாலியைக் கையில் எடுத்து தரையைத்
தோண்டு!
ஒட்டுப் போடுதலும் பூச்சு வேலையும் என்பதென்ன?
உண்பதும் குடிப்பதும் ஆகும்.
உன் இந்த உடல் எனும் அங்கி அவ்வப்போது கிழிகிறது,
உணவாலும் இழி மனத்தின் திருப்திகளாலும்
அதை நீ அன்றாடம் ஒட்டுத் தைப்பதில் மூழ்கியுள்ளாய்;
நிலக் கோடரியால் அடித்தளத்தில் ஓரிடத்தைப் பிளந்து
பார்,
உன் நிலத்தினுள் மாணிக்கம் ஒன்று சுடர் விடுவதைப்
பார்!”
(மஸ்னவி
ஷரீஃப்)
”அல்லாஹ்” என்னும் திருநாமத்தைக்
கொண்டே ஸூஃபிகள் இந்த மூச்சு திக்ரு என்னும் பயிற்சியைச் செய்கின்றனர். “அல்லாஹு
அல்லாஹ்” அல்லது “அல்லாஹ் அல்லாஹ்” என்று ஒரு மூச்சு சுழற்சியில் (அதாவது
உள்மூச்சு + வெளிமூச்சு) உள்ளத்தால் உச்சரித்து மூச்சை லயப்படுத்தி நிதானமாகச்
செய்வதே பாசே அன்ஃபாஸ் என்னும் மூச்சுப் பயிற்சி ஆகும். இதன் தொடர்பாக இரண்டு ஹதீஸ்கள்
கவனத்திற்குரியன:
”உலகில் அல்லாஹு அல்லாஹு என்று
சொல்லப்படாமல் ஆகும் வரை உலக முடிவு நிகழாது (லா
தகூமுஸ் ஸாஅத்து ஹத்தா லா யுகால ஃபில் அர்ளி அல்லாஹு அல்லாஹு).” (சஹீஹ்
முஸ்லிம் #148-அ)
”அல்லாஹு அல்லாஹு என்று ஒருவர்
சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் உலகமுடிவு ஏற்படாது (லா தகூமுஸ் ஸாஅத்து அலா அஹதின்ய் யகூலு அல்லாஹு அல்லாஹு).” (சஹீஹ்
முஸ்லிம் #148-ஆ)
இந்த ஹதீஸில் குறிப்பிடப்படுவது
வெறுமனே நாவால் அல்லாஹ் அல்லாஹ் என்று உச்சரித்துக் கொண்டிருப்பதை அல்ல, ஒருவரின்
உடலும் உள்ளமும் உயிரும் இறைவனின் திக்ரில் ஊறியிருப்பதைக் குறிக்கும் என்றும்
அதற்கான பயிற்சியே மூச்சு திக்ரு என்றும் ஸூஃபிகள் கூறுகின்றனர்.
’அல்லாஹ்’ என்பது இறைவனின்
சுயநாமம் (இஸ்மே ஜாத்) ஆகும். முச்சு என்பது உயிருள்ள ஒருவரின் ஜாத்துடன்
தொடர்புடையதாக இருக்கிறது. எனவே, இறைவனின் சுயநாமத்தைக் கொண்டு திக்ரு செய்யும்
சாதகனின் ஜாத் (சுயம், being) வரை அது தாக்கம் ஏற்படுத்துகிறது. அந்நிலையை அடைந்த
ஒருவரின் அசைவிலும் அந்த லயம் வெளிப்படுகிறது. அவர் நிதானமாகவும் அமைதியாகவும்
இருக்கிறார்.
நக்ஷ்பந்திய்யா நெறியின் பதினோரு
அடிப்படைக் கோட்பாடுகளுள் முதல் எட்டுக் கோட்பாடுகளை வரையறுத்த ஷைஃகு அப்துல் ஃகாலிக்
அல்-குஜ்தவானி (ரஹ்) சொல்கிறார்: “விவேகமான சாதகன் தன் உள்ளே சென்று வெளியேறும்
தன் மூச்சை அலட்சியத்தை விட்டும் பாதுகாப்பதன் மூலம் தன் இதயத்தை எப்போதும்
இறைவனின் பிரசன்னத்திலேயே வைத்திருக்க வேண்டும். வழிபாடுகளாலும் சேவைகளாலும் தன்
மூச்சுக்கு அவன் உயிரூட்ட வேண்டும். இந்த வழிபாட்டை அவன் தன் ரட்ச்கனுக்கு முழு
ஜீவனுடன் சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில் இறை நினைவுடன் உள்ளே இழுக்கப்படும்,
வெளியே விடப்படும் ஒவ்வொரு முச்சும் உயிருள்ளதும் இறைவனுடன் தொடர்புடையதும் ஆகும்.
அலட்சியமாக உள்வாங்கவும் வெளியிடவும் படுகின்ற ஒவ்வொரு மூச்சும் செத்ததும்,
இறைவனுடன் தொடர்பற்றதும் ஆகும்.”
மகானின் கருத்துக்கு அடிப்படையாக ஹதீஸ் ஒன்று அமைந்துள்ளது: நபி (ஸல்) சொன்னார்கள்: ”தன் ரட்சகனை தியானிக்கும் ஒருவருக்கும் தியானிக்காத ஒருவருக்கும் உதாரணமாவது உயிருள்ளவரும் செத்தவரும் போன்றதாகும்.” (ஸஹீஹுல் புஃகாரி #6407).
நக்ஷ்பந்திய்யா ஆன்மிக நெறியின்
முதல்வரான ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்ஷ்பந்த் (ரஹ்) சொல்கிறார்கள்: ”நம் நெறி
மூச்சை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. ஒவ்வொரு உள்மூச்சையும் வெளிமூச்சையும்
கவனித்துப் பேணுவது அவசியம் ஆகும். மேலும், உள்மூச்சுக்கும் வெளிமூச்சுக்குமான
இடைவெளியையும் பாதுகாக்க வேண்டும்.”
ஷைஃகு உபைதுல்லாஹ் அஹ்ரார் (ரஹ்)
சொல்கிறார்: “இந்த நெறியில் ஈடுபடும் சாதகனின் மிக முக்கியமான பணியே தன் மூச்சைப்
பாதுகாப்பதுதான். தன் மூச்சை எவனால் பாதுகாக்க முடியவில்லையோ ’அவன் தன்னையே
தொலைத்துவிட்டான்’ என்று சொல்லப்படும்.”
மவ்லானா சஃ’துத்தீன் காஷ்கரீ (ரஹ்)
சொல்கிறார்கள்: “ஹோஷ் தர் தம் என்பது அலட்சியத்திற்கு அல்லது மறதிக்கு இடம் தராமல்
இறைவன் தன்னுடன் இருக்கிறான் என்ற பிரக்ஞையுடன் ஒரு மூச்சில் இருந்து இன்னொரு
மூச்சுக்கு நகர்வதாகும். அப்படியாக, நம் ஒவ்வொரு மூச்சிலும் ஹக்கின் நியாபகம்
இருப்பதாகும்.”
ஷைஃகு நஜ்முத்தீன் குப்ரா (ரஹ்)
தனது ஃபவாத்திஹுல் ஜமால் என்னும் நூலில் எழுதியுள்ளதாவது: “உயிரினம் ஒவ்வொன்றின்
உடலிலும் அவற்றின் மூச்சினால் திக்ரு ஓடிக் கொண்டே இருக்கிறது, அவை நாடாமலேயே. அது
அவற்றின் அடிபணிதலின் ஓர் அடையாளம் ஆகும். அது அவை படைக்கப்பட்டதன் ஓர்
அம்சமாகும். தம் மூச்சால், அல்லாஹ் என்னும் திருநாமத்தின் “ஹா” என்னும் எழுத்தின்
ஓசை ஒவ்வொரு உள்மூச்சிலும் வெளிமூச்சிலும் செய்யப்படுகிறது. அது, மறைவான சுயம்
இறைவனின் தனித்தன்மையை வலியுறுத்துவதன் அடையாளம் ஆகும். எனவே படைத்தவனின் சுயத்தை
உணர அந்த மூச்சுடன் நாம் சுதாரிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.”
”இல் ஸூஃபிஸ்மோ” என்னும் தன் நூலில்
நக்ஷ்பந்திய்யா குருவான ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் மிக நுட்பமான சில
அவதானங்களை நமக்குச் சொல்கிறார்: “அக விழிப்படைந்த எந்த ஷைஃகும் ஒரே ஒரு மூச்சைக் கூட
பேணாமல் இல்லை. அது அனைத்து குருநாதர்களையும் அனைத்து ஆன்மிக நெறிகளையும்
(தரீக்காக்களையும்) இணைக்கின்ற மெல்லிய இழை ஆகும். அது நம் சுயங்களை நம்
சில்சிலாவின் (கொடிவழியின்) முன்னோர்களுடன் இணைத்து வைக்கிறது. … … ’ஒரே ஒரு
மூச்சைக்கூட தவறவிட்டுவிடாதே’. இதுதான் திறவுகோல்.”
ஆன்மிகத்தின் அடிப்படையான ஒரு பயிற்சிக்கு மூச்சு ஏன் தேர்ந்து வைக்கப்
பட்டுள்ளது என்பதற்கு ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் அழகான காரணம் ஒன்றைச்
சொல்கிறார்: “நக்ஷ்பந்தி நெறியின் பயணம் மிக இலகுவான, துரிதமான, அனைவருக்கும்
கிடைக்கக் கூடிய பொதுவான விடயங்களில் இருந்து ஆரம்பிக்கிறது. அது உங்கள் வாழ்வின்
அடிப்படையான இயக்கங்களின் மீது கவனம் குவிக்குமாறு அழைக்கிறது.”
இறை தியானம் பண்ணாத சராசரி மனிதருக்கு, ஒரு மூச்சுக்கு மூன்று நொடிகள் என்று
கணக்கு வைத்தால் ஒரு நிமிடத்திற்கு இருபது மூச்சுகளும், ஒரு மணிநேரத்திற்கு 1200
மூச்சுகளும், நாள் ஒன்றுக்கு 28,800 மூச்சுகளும் ஆகின்றன. மூச்சு திக்ரில்
ஈடுபடுவோரின் மூச்சு ஆழமாகி நிதானமாகி வரும்போது இந்த எண்ணிக்கை குறையும். ஆனால்,
இறை நினைவில் கழிக்கப்பட்ட மூச்சு மட்டுமே மனிதனை அவன் படைக்கப்பட்டதன் லட்சியத்தை
நோக்கி முன்னேற்றும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, ஸூஃபி நெறியில் செல்லும் சாதகன் அதிகம் மௌனமாக இருக்கிறான். பேசினால்
அவசியம் கருதி சில சொற்கள் மட்டுமே பேசுகிறான். “பேச்சை சுருக்கு, மூச்சைப்
பெருக்கு” என்பதை அவன் கடைப்பிடிக்கிறான்.
No comments:
Post a Comment