Wednesday, June 18, 2025

ஃகல்வத் தர் அஞ்சுமன் (கூட்டத்தில் தனித்திருத்தல்)

 











நக்‌ஷ்பந்திய்யா நெறியின் ஆன்மிகக் கோட்பாடுகளுள் நான்காவது “ஃகல்வத் தர் அஞ்சுமன்” என்பதாகும். இதன் நேரடியான அர்த்தம் “கூட்டத்தில் தனித்திருத்தல்” என்பதாகும்.

            ஃகல்வத் என்றால் தனிமை என்று பொருள். அஞ்சுமன் என்றால் சமுதாயம், குழு என்று பொருட்படும்.

            ஃகல்வத் என்பது அறபிச் சொல். ஃபார்சி, உருது மொழிகளில் இதற்கு தன்ஹாப்பன், தன்ஹாயி என்னும் சொற்கள் உள்ளன.

            தனித்திருத்தல் என்பதன் பொருள் வேறு எவருமே நம்முடன் இல்லாமல் ‘தான் மட்டும் இருப்பது’ என்று விளங்கி விடக்கூடாது. ஏனெனில், தான் மட்டும் தனித்திருக்கும் நிலை எந்தப் படைப்புக்கும் கிடையாது. அது இறைவனுக்கு உரிய நிலை ஆகும்.

            இறைவனுடன் தனித்திருக்கும் நிலை நபி (ஸல்) அவர்களுக்கு உரியதாகும். ஏனைய படைப்புக்களை விட்டும் நபி (ஸல்) அவர்களால் விலகி இருக்க இயலும். ஏனைய படைப்புகள் அனைத்துக்கும் இறைவனுடனும் நபி (ஸல்) அவர்களுடனும் இருந்து பிறருடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கும் நிலையே ஃகல்வத் என்னும் தனிமை நிலையாகும்.

நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான்” (57:4)

என்னும் திருவசனத்தின்படியும்,

உங்களுக்குள் அல்லாஹ்வின் திருத்தூதர் இருக்கிறார் என்பதை அறிக” (49:7)

என்னும் திருவசனத்தின்படியும், நம்முடன் அல்லாஹ்வும் அவனின் திருத்தூதரும் இருக்கின்றனர். குருநாதர் (முர்ஷித்) தன் சீடர்களுக்கு இந்த உடனிருப்பின் உணர்வு நிலையை உண்டாக்கித் தருகிறார்கள்.



    

எனவேதான், “நமது ஞானவழியில் தன்ஹாப்பன் (தான் மட்டும் தனித்திருத்தல்) என்பது கிடையாது. அல்லாஹ்வுடனும் ரசூலுடனும் இருக்கும் நிலைதான் உண்டு” என்று அல்லாமா அலீமி ஷாஹ் ஆமிரி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் சொன்னார்கள்.

            உருது இலக்கியத்தில் மிகவும் புகழ் பெற்ற ஒரு கவிதை அடி ’ஃகல்வத் தர் அஞ்சுமன்’ என்னும் கருத்தினைத் தருகிறது. அதனை முஃ’மின் ஃகான் முஃ’மின் எழுதியுள்ளார்:

(தும் மேரே பாஸ் ஹோத்தே ஹோ கயா / ஜப் கோயீ தூஸ்ரா நஹீன் ஹோத்தா)

”நீ என்னுடன் எப்போதும் இருந்து விடுகின்றாய்

இரண்டாம் நபர் எவரும் இல்லாத போதெல்லாம்”

            ஃகல்வத் தர் அஞ்சுமன் என்பது வெளிப்படையில் மக்களுடன் இருப்பதும் அந்தரங்கத்தில் இறைவனுடன் இருப்பதுமாகும்” என்று நக்‌ஷ்பந்திய்யா நெறியின் குருவான ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் கூறுகிறார்.



            








தனித்திருத்தல் என்பது இரண்டு வகைப்படும்:

1.      புறத் தனிமை

2.      அகத் தனிமை

மக்கள் இல்லாத ஓர் இடத்தில் சாதகன் அமர்ந்து கொள்வது புறத் தனிமை ஆகும். இது ஆரம்ப நிலைச் சாதர்களுக்கு அமயம் சமயம் தேவைப்படுவதாகும். அப்போதுதான் அவர்கள் மன ஓர்மையுடன் இறை தியானத்தில் ஈடுபட முடியும். இதில் முதிர்ச்சி அடையும்போது அகத் தனிமை என்னும் நிலை அருளப்படும்.

திக்ருல்லாஹ் என்னும் இறைதியான நிலை ஒருவரை மிகைத்துவிடும் போது அகத் தனிமை உண்டாகிவிட்டது என்று அறிந்து கொள்ளலாம். அப்போது அவரின் இதயபூர்வமான தியானம் (திக்ரே கல்பீ) எந்த அளவுக்கு இருக்கும் என்றால் ”மக்கள் குழுமியுள்ள இடத்தில் அவர் நுழையும்போதும் அவருக்குத் தன் இதயத்தின் திக்ருடைய குரலே கேட்கும், மக்களின் பேச்சுக் குரல் கேட்காது” என்று சொல்லப்படுகிறது. இது அகத் தனிமை முழுமை அடைந்துவிட்டதன் அடையாளம் எனப்படுகிறது.

வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும்

அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் தடுத்துவிடாத நபர்கள்” (24:37)

என்று குர்’ஆன் இத்தகைய நிலையை அடைந்தோரைச் சுட்டுவதாக ஸூஃபிகள் சொல்கின்றனர்.

            இந்தத் திருவசனத்தை நக்‌ஷ்பந்திய்யா நெறியின் முதல்வரான ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் இக்கோட்பாட்டின் ஆதாரம் என்று காட்டிய சுவையான நிகழ்வு ஒன்று உள்ளது:

            பஹாவுத்தீன் அவர்கள் மக்காவை நோக்கிச் செல்லும் வழியில் ஹிரத் என்னும் ஊரினை அடைந்தபோது அவ்வூரின் அமீர் (ஆணையர்) ஆன ஹுசைன் என்பார் மகான் அவர்களை வரவேற்று கண்ணியப்படுத்தும் நோக்கில் ஒரு சபை கூட்டினார்.

சபையில் அவர் மகானிடம் கேட்டார்: “உங்களிடம் சப்தமுள்ள திக்ரு, அல்லது பயண ஆரவாரம், அல்லது ஸூஃபிகளின் இசையும் கவிதையும் என்று எதுவுமே இல்லையே? உங்கள் பாதைதான் என்ன?” 

ஷாஹ் பஹாவுத்தீன் (ரஹ்) அவர்கள் பதில் சொன்னார்கள், “அப்துல் ஃகாலிக் குஜ்தவானி அவர்களது கூட்டத்தாரின் மிகத் தூய்மையான வார்த்தைகள் ஃகல்வத் தர் அஞ்சுமன் (கூட்டத்தில் தனித்திருத்தல்) என்பதாகும். யாம் அவர்களின் வழியையே பின்பற்றுகிறோம்.”

“கூட்டத்தில் தனித்திருத்தல் என்றால் என்ன?” என்று அமீர் வினவினார்.

“வெளிப்படையில் மக்களுடன் இருப்பதும் அந்தரங்கத்தில் அல்லாஹ்வுடன் இருப்பதுமாகும்” என்று மகான் சொன்னார்கள்.

இதைக் கேட்டு அமீர் பெரிதும் வியப்படைந்தார். அப்படி இருப்பது நடைமுறையில் சாத்தியம்தானா என்று கேட்டார்.

மகான் பதில் சொன்னார்கள்: “அப்படி இருப்பது சாத்தியம் இல்லை என்றால் அல்லாஹு த’ஆலா அதனைத் தன் குர்’ஆனில் குறிப்பிட்டிருக்க மாட்டான். ஆனால் அதை அவன் இவ்வாறு சுட்டியுள்ளான்: வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் தடுத்துவிடாத நபர்கள்’ (24:37). இதுவே எமது வழியாகும்.”

            ஞான வழியில் தனிமைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் சகவாசத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று கருதிவிடக்கூடாது. தனிமையும் சகவாசமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. அவற்றுக்குச் சம மதிப்பு உண்டு. இதனால்தான், நக்‌ஷ்பந்திய்யா நெறியின் முதல்வர் ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: ”சகவாசமே நமது வழியாகும், நன்மை சேர்ந்திருப்பதில் உள்ளது(தரீக்கத்துனா அஸ்-ஸுஹ்பத் வல் ஃகைரு ஃபில் ஜமிய்யத்) புறத் தனிமையில் பிரபல்யம் உண்டாகிவிடுகிறது. பிரபல்யத்தில் இருந்து சீர்கேடு உண்டாகிறது. நமது நலம் நம் சபையிலும் சகவாசத்திலும் இருக்கிறது. ஆனால் ஒன்றுக்கு ஒன்றில் சுயத்தின் அழிவு (ஃபனா) இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.”

            அப்துல் ஃகாலிக் குஜ்தவானி (ரஹ்) சொன்னதாவது: “குருநிலையின் சடங்கு என்னும் கதவை மூடிவிடு, தோழமையின் கதவைத் திறந்துவிடு. ஃகல்வத்தின் (தனிமையின்) கதவை மூடிவிடு, ஸுஹ்பத்தின் (சகவாசத்தின்) கதவைத் திறந்துவிடு.”



            









மக்களை விட்டு ஒதுங்கித் தனிமையில் இருத்தல் என்பது ஆரம்ப நிலையில் உள்ள சாதகர்களுக்கு பரிந்துரைக்கப்படும் ஒன்றுதான். பக்குவம் அடைந்தோர் மக்களுடன் இருக்கும்போதே இதயத்தால் தனித்து இறைவனுடனும் இருக்க வேண்டும் என்பதுதான் இக்கோட்பாடு. அதனால்தான் இது வெறுமனே ஃகல்வத் என்று சொல்லப்படாமல் ஃகல்வத் தர் அஞ்சுமன் எனப்படுகிறது. இக்கருத்தில் சய்யித் அல்-ஃகர்ராஸ் (ரஹ்) சொல்வதாவது:

            ”பூரணத்துவம் என்பது அற்புத சக்திகளை வெளிப்படுத்துவதில் இல்லை. ஆனால், மக்களுடன் அமர்ந்திருப்பது, கொடுக்கல் வாங்கல் செய்வது, திருமணம் செய்து பிள்ளைகள் பெறுவது என்று எல்லாம் செய்தபடி ஒரு கணம் கூட அல்லாஹ்வின் பிரசன்னத்தை விட்டு நீங்காமல் இருப்பதே பூரணத்துவம் ஆகும்.”

            இது எப்படிச் சாத்தியப்படும்? என்று வினா எழலாம். உங்களின் அனைத்துக் காரியங்களிலும் வெளியில் ஈடுபடும் அதே நேரத்தில் அகத்தில் அதை விட்டும் விடுதலையாகி இருக்க வேண்டும். அதாவது தாமரை இலை மீது உருளும் தண்ணீரைப் போல் நீங்கள் படைப்புக்களில் மனத்தை ஒட்டாமல் வைத்திருக்க வேண்டும். எது ஒன்றிலும் உங்களை அடையாளப்படுத்தாமல் இருங்கள் என்று ஞானியர் கூறுகின்றனர்.

            அப்துல் ஃகாலிக் குஜ்தவானி (ரஹ்) அவர்களின் ஃகலீஃபாக்களில் ஒருவரான ஃகாஜா அவ்லியா கபீர் (ரஹ்) அவர்கள் இக்கோட்பாடு பற்றி இப்படி விளக்கினார்கள்: “கூட்டத்தில் தனித்திருத்தல் என்பதாவது நீ சந்தையில் நடந்து போனாலும் ஒரு வார்த்தையையும் கேட்காத அளவுக்கு இறை தியானத்தில் மூழ்கியிருப்பதாகும்.”

            அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களின் தோளைப் பிடித்து அவரிடம் நபி (ஸல்) சொன்னார்கள்:

“இவ்வுலகில் ஒரு அந்நியனைப் போல் இரு, அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல் இரு.” (ஸஹீஹுல் புஃகாரி #6416).

            ”இவ்வுலகில் அந்நியனைப் போல் இரு” என்பது மக்களுக்கு மத்தியில் இருந்தபோதும் இறைவனுடன் தனித்திருக்கும் நிலையைக் குறிப்பதாக ஸூஃபிகள் சொல்கின்றனர்.

            இக்கருத்தில் ஷைஃகு அபூ சயீத் அஹ்மத் இப்னு ஈசா அல்-ஃகர்ராஸ் (ரஹ்) அவர்கள் பாடுகிறார்:

            ”உன்னுள் காதலியுடன் உவந்தே இருப்பதில்

            உலகிற்கு நீ ஓர் அந்நியன் ஆகிவிடு!

            அத்தகைய அழகு அருளப்பட்ட நபர்கள்

            அரிது அரிது இவ்வுலகில் அரிதே!”

            இத்தகைய மகான்களின் இதயம் என்பது மிகவும் விரிவடைகிறது. எந்த அளவுக்கு என்றால், “கல்புல் முஃமினி அர்ஷுல்லாஹ்” – இறை நம்பிக்கையாளனின் இதயம் அல்லாஹ்வின் சிம்மாசனம் என்னும் நபிமொழிக்கு அவர்களே உதாரணங்கள் ஆகின்றனர். இந்த நபிமொழியை, “இறைவனின் அர்ஷு இறைநம்பிக்கையாளனின் இதயம் ஆகிவிடுகிறது” என்றும் அர்த்தப் படுத்தலாம். அதாவது, இறைநேசர்களின் இதயமும் அர்ஷும் வேறு வேறு அல்ல என்னும் நிலை உண்டாகிவிடுகிறது.

Monday, June 16, 2025

சஃபர் தர் வதன் (ஆன்மிகத்தின் உள்முகப் பயணம்)

 (நக்‌ஷ்பந்திய்யா ஸூஃபி நெறியின் 11 கோட்பாடுகளில் மூன்றாவது கோட்பாடு பற்றிய விளக்கங்கள்.)











நக்‌ஷ்பந்திய்யா ஸூஃபி நெறியின் மூன்றாவது கோட்பாடு “சஃபர் தர் வதன்” என்பதாகும். ”சொந்த ஊர் நோக்கிப் பயணித்தல்” என்பது இதன் நேரடியான அர்த்தமாகும் [சஃபர் = பயணம்; வதன் = சொந்த ஊர் /  நாடு].

            எனினும், இத்தொடரை ஸூஃபிகள் ஆன்மிகத்தின் உள்முகப் பயணம் என்றே பொருள் கொள்கின்றனர்.

            வெளிப்படையில் மனிதர்கள் அனைவரும் அவ்வப்போது தம் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதும் மீண்டும் கிளம்புவதுமாகப் பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்தப் புறப் பயணத்தைதான் இந்தத் தொடர் குறிக்கும் என்றால் அவர்கள் எல்லோருமே ஸூஃபிகள் என்று கூற வேண்டி வரும் அல்லவா? அது பொருந்தாது என்பது விளக்கிச் சொல்லாமலே புரியும்.

            வதன் என்னும் சொல் நேரடிப் பொருளில் ஒருவரின் சொந்த ஊரை அல்லது நாட்டைக் குறிக்கும் என்று பார்த்தோம். இந்தச் சொல் “ஹதீஸ்” என்று பிரபலமாகி உள்ள ஒரு வாசகத்தில் இடம் பெறுகிறது.

ஹுப்புல் வதன் மினல் ஈமான்

”தன் நாட்டின் / ஊரின் மீதான நேசம் இறை நம்பிக்கையில் உள்ளதாகும்”

            இது நபிமொழி அல்ல. நபிகள் நாயகம் சொன்னதாகப் பரப்பப்பட்டுள்ள ஒரு வாசகம் (ஹதீஸே மவ்ளூ) என்று இமாம் அல்-சகானீ (ரஹ்), அல்லாமா முல்லா அலீ காரீ (ரஹ்) முதலிய ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். அல்லாமா முல்லா அலீ காரீ (ரஹ்) சொல்கிறார்கள்: “ஒருவேளை இந்தச் சொற்றொடர் ஆதாரமான நபிமொழியே என்று நிரூபிக்கப்படும் எனில் இதில் உள்ள ‘வதன்’ (தாய் நாடு / சொந்த ஊர்) என்பது ஜன்னத் (சொர்க்கத்)தைக் குறிக்கும் அல்லது மக்கா நகரைக் குறிக்கும்.” (நூல்: அல்-அஸ்ராருல் மர்ஃபு’ஆ).



            






இந்தச் சொற்றொடருக்கு மவ்லானா ரூமி (ரஹ்) மிக அற்புதமான விளக்கம் தருகிறார்கள்: “வதன் என்பது இந்தப் பூமியில் நீ வசித்துக் கொண்டிருக்கும் ஊரையோ நாட்டையோ குறிக்காது. இதெல்லாம் அழிந்து போகக்கூடிய உலகில் பகுதிகள். அதை நேசிப்பதை இறை நம்பிக்கையின் பகுதி என்று கூறுவது பொருந்தாது. வதன் என்பது நீ இந்த உலகத்தை விட்டுச் சென்ற பின்னர் நிர்ந்தரமாக எங்கே தங்கிவிடப் போகிறாயோ அந்த இடத்தைக் குறிக்கும். இறை நம்பிக்கையாளருக்கு அது சொர்க்கம் ஆகும். எனவே சொர்க்கத்தை நேசிப்பது இறை நம்பிக்கையில் ஒரு பகுதி என்பதே அதன் சரியான பொருத்தமான அர்த்தம்.”

            தமிழில் வீடு என்று ஒரு சொல் இருக்கிறது. இந்த மண்ணுலக வாழ்வில் நாம் எங்கே அதிக நிம்மதியுடனும், அதிக காலங்களும் தங்குகிறோமோ அந்த இடம் வீடு என்று சொல்லப்படுகிறது. தற்காலிகமாகத் தங்கும் இடங்கள் அலுவலகம், விடுதி, சத்திரம் போன்றவையாகும். அவற்றை வீடு என்று நாம் சொல்ல மாட்டோம்.

            ஆனால், வீடுபேறு என்று சொல்லும்போது அது சொர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த பூமியில் உள்ள வீட்டை அல்ல. சொர்க்கத்துடன் ஒப்பிடும்போது இந்த உலகம் ஒரு அலுவலகமாகவும், சத்திரமாகவும், விடுதியாகவும் இருக்கிறது. அறபியிலும் சொர்க்கத்தை தார் (வீடு) என்று அழைப்பது உண்டு. அது தாருல் பகா (நிரந்தர வீடு) என்று சொல்லப்படுகிறது.

            நாம் சொர்க்கத்திற்குச் செல்வது எதற்காக? அங்கே கிடைக்கும் மிக உச்சமான நற்பேறு, அருள் எது? அது இறைவனின் தரிசனம் (லிகாஉல்லாஹ்) ஆகும். இந்த உலகில் இறைவனை அகக் கண்ணாலும் மறுமையில் இறைவனை அகக் கண்ணாலும் புறக் கண்ணாலும் தரிசிக்க வேண்டும் என்று பீரானே பீர் முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

            எனவே, சொர்க்கத்தை நோக்கிப் பயணித்தல் என்பது அகமியத்தில் இறைவனை நோக்கிப் பயணித்தல் ஆகும். நாம் இறைவனிடம் மீண்டு கொண்டுள்ளோம் என்கிறது குர்’ஆன்:

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

 “நாம் அல்லாஹ்வுக்கு உரியவர்கள்; நிச்சயமாக அவனிடம் மீள்கிறோம்” (2:156)

            இறைவனிடம் மீளும் இந்தப் பயணம் ஆன்மிக ரீதியானது. ருஜூ இலல்லாஹ் (அல்லாஹ்விடம் மீளுதல்) அல்லது ருஜூ இலல் ஆஃகிரா (மறுமைக்கு மீளுதல்) என்பது இதயத்தால் செய்யப்பட வேண்டிய அகப் பயணம் ஆகும். இதற்கு நபி (ஸல்) அழகிய மும்மாதிரியாக இருக்கின்றார்கள் என்பதை குர்’ஆன் சொல்கிறது:

உங்களில் எவர் அல்லாஹ்விடமும் மறுமை நாளிடமும் மீண்டவராக

அல்லாஹ்வை அதிகமாக தியானிக்கின்றீர்களோ அவர்களுக்கு

அல்லாஹ்வின் திருத்தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது” (33:21)

            நபி (ஸல்) அவர்களை அழகிய முன்மாதிரியாக அடைவதற்கு இவை இரண்டும் இறைவனால் சுட்டப்படும் நியதிகள் ஆகும். எனவே இறைவனிடமும் மறுமையிடமும் இதயம் திரும்பாமலும், இறைவனை அதிகமாக திக்ரு செய்யாமலும் (தியானிக்காமலும்) இருக்கின்ற நிலையில் அந்த அழகிய முன்மாதிரியைப் பின்பற்றுவதாக ஒரு முஸ்லிம் சொல்வது அர்த்தமற்ற வெற்றுப் பிதற்றல் ஆகும். இந்தத் திருவசனத்தை எதார்த்தத்தில் செயற்படுத்துவோர் ஸூஃபிகள் மட்டுமே என்பது உறுதி.

            இனி இந்தக் கோட்பாட்டுக்கு நக்‌ஷ்பந்திய்யா நெறியின் பெரியோர்களும் அறிஞர்களும் தருகின்ற விளக்கங்களைக் காண்போம்.

வெளிரங்கமான அர்த்தமும் விளக்கமும்:

            இந்தக் கோட்பாட்டிற்கு வெளிரங்கமான அர்த்தம் ஒன்று உண்டு என்று அவர்கள் சொல்கின்றனர். அதாவது, தனக்கு வழிகாட்டக் கூடிய ஒரு குருவைத் தேடி சாதகன் இம்மண்ணுலகில் தேடி அலைந்து அவரைக் கண்டடைவதாகும். ஞான வானில் ஒளி வீசும் சூரியன்களாக உள்ள மாபெரும் ஸூஃபிகள் பலரும் பல்வேறு ஊர்களுக்கும், நாடுகளுக்கும் சுற்றித் திரிந்து தம் குருநாதரை அடைந்திருக்கிறார்கள். இந்தப் புறப்பயணம் சீடனால் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை குர்’ஆனின் பின்வரும் வசனம் சுட்டிக் காட்டுகிறது:

”இறை விசுவாசியரே! அல்லாஹ்விடம் பயபக்தி செய்யுங்கள்; அவனிடம் இணைத்து வைக்கும் வசீலாவை (இடைத்தொடர்பை)த் தேடிக்கொள்ளுங்கள்; மேலும், அவனின் பாதையில் கடுமுயற்சி செய்யுங்கள், நீங்கள் வெற்றியடையலாம்.” (5:35)

            இறைவனை அடைவதற்காகக் கடுமுயற்சி (முஜாஹதா) செய்வது பற்றி இன்னொரு திருவசனம் குறிப்பிடுவதும் கவனத்திற்கு உரியது:

“எவர் நம்மில் கடுமுயற்சி செய்வார்களோ

அவர்களுக்கு நாம் நம் பாதைகளில் நேர்வழி காட்டுவோம்” (29:69)

            இறைவனை அடைவதற்கான நேர்வழிகாட்டல் (ஹிதாயத்) கிடைப்பதில் குருவைத் தேடி அடைவதும் அடங்கும் என்று இந்தத் திருவசனங்கள் காட்டுகின்றன. இறைவனுடன் இணைத்து வைக்கும் வசீலா இறைநேசரான முர்ஷித் (வழிகாட்டி)தான் என்றும் குர்’ஆன் சொல்கிறது:

 “எவனை நான் வழிகேட்டில் விட்டுவிட்டேனோ

அவனுக்கு நேர்வழிகாட்டும் இறை நேசரை அடையமாட்டீர்  (18:17)

            இறைவனால் அருள் செய்யப்பட்டோர் என்று வகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ள இறைத்தூதர்கள் (நபிய்யீன்), மெய்யாளர்கள் (ஸித்தீக்கீன்), உயிர் தியாகியர் (ஷுஹதா’) மற்றும் நல்லடியார்கள் (ஸாலிஹீன்) ஆகியோருள் ஸித்தீக்கீன்களின் சகவாசத்தில் இருக்க வேண்டும் என்றும் இறைவன் கட்டளை இட்டுள்ளான்:

 “இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை பயபக்தி செய்யுங்கள்,

மேலும், மெய்யாளர்களுடன் இணைந்திருங்கள்” (9:119)

            ஸூஃபிகளே விலாயத் என்னும் இறை நேசத்தை அடைந்த ஸித்தீக்கீன்களாக உள்ளனர். ஒரு  வலியே முர்ஷிதை (வழிகாட்டும் இறைநேசரை) அடைந்து அவருடன் இருக்கும்போது ஏற்கனவே மெய்யாளர் என்னும் நிலையை அடைந்த மூத்த சீடர்களுடன் சகவாசம் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. அது கூனூ ம’அஸ் ஸாதிக்கீன் – மெய்யாளர்களுடன் இணைந்திருப்பதாகிறது.

            இவை எல்லாம் சஃபர் தர் வதன் என்பதன் வெளிரங்கமான அர்த்தப்படி கிடைக்கும் விளக்கங்கள் ஆகும்.











அந்தரங்கமான அர்த்தமும் விளக்கமும்:

            ”சஃபர் தர் வதன் என்பது ஒருவர் தன் தாய்நிலம் திரும்புதலாகும். அதாவது சாதகன் படைப்புக்களின் உலகை விட்டும் படைத்தவனின் உலகிற்குத்  திரும்புவதாகும். மேலும் சுருக்கமாக, படைப்புக்களை விட்டும் படைத்தவனிடம் – மினல் ஃகல்க் இலல் ஹக்கு  - திரும்புவதாகும். இந்தப் பயணம் தடுக்கப்பட்ட (ஹராமான)வற்றின் மீதான ஆசையை விட்டு விலகி இறைவனின் பிரசன்னம் மீதான ஆசைக்குப் பயணிப்பதாகும்” என்கிறார் ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன்.

            இதில் பின்வருமாறு பல நிலைகள் இருக்கின்றன:

  1. தடுக்கப்பட்டவற்றை விட்டும் அனுமதிக்கப்பட்டவற்றிடம் திரும்புவது (மினல் ஹராம் இலல் ஹலால்). இது இறைச்சட்டங்களின் – ஷரீஅத் – நிலையில் செயற்படுத்தப்பட வேண்டிய பயணம் ஆகும். ஆரம்ப நிலைச் சாதகர்கள் இதில் உறுதிப்பட்ட பின்னரே அடுத்த நிலைக்கு உயர முடியும்.
  2. அனுமதிக்கப்பட்டவற்றிலும் தனக்குத் தேவையற்ற விடயங்களை விட்டுவிடுவதாகும். இந்த நிலை ஜுஹ்து (Zuhd) என்றும் இதனைக் கடைப்பிடிப்பவர் ஜாஹித் (Zahid) என்றும் சொல்லப்படுகிறார். இது ஆன்மிக நெறியில் முன்னேறிக் கொண்டிருப்போர் இருக்கும் நிலையாகும்.
  3. படைப்புக்களை விட்டும் படைத்தவனிடம் திரும்புவது (மினல் ஃகல்க் இலல் ஹக்கு). அதாவது ஆகுமான, அவசியத் தேவையான பொருட்களிலும்கூட படைப்பைக் காணாமல் அகக்கண்ணால் படைத்தவனை ஷுஹூது (சாட்சி தரிசனம்) செய்வது. இது இறைவனை நெருங்குவோரின் (முகர்ரபீன்) நிலையாகும்.
  4. இறைவனை விட்டும் இறைவனிடம் திரும்புவது (மினல்லாஹ் இலல்லாஹ்). அதாவது இந்த நிலை சைர் ஃபில்லாஹ் (இறைவனிடம் பயணித்தல்) என்றும் சொல்லப்படும். இது இறைத்தூதர்கள் (அன்பியா) மற்றும் ஸித்தீக்கீன் என்னும் இறை நேசர்கள் (அவ்லியா) ஆகியோரின் நிலையாகும்.

இறைவனிடம் திரும்பிவிட்டோருக்கு மீண்டும் திரும்பி வருதல் இல்லை – புறத்திலும் அகத்திலும், உடலாலும், இதயத்தாலும். இது குறித்து ஸூஃபி கவிதை ஒன்று சொல்கிறது:

            ”நான் எனது மூல இடத்திற்குப் பயணிக்கின்றேன்;

             ஆம், நான் ஒருவேளை திரும்பி வரவே மாட்டேன்!”

            (முசாஃபிரம் ப-ஷஹ்ரே மன் / ஷாயத் கெ பாஸ் ந-கர்தம்)

            ”சஃபர் தர் வதன் என்பது சாதகன் தன் மனித சுபாவத்தினுள் நிகழ்த்தும் பயணமாகும். அதாவது மனித குணங்களில் இருந்து வானவரின் குணங்களை நோக்கி உயர்வதாகும், இழிவான குணங்களை விட்டுப் போற்றத்தக்க குணங்களை நோக்கி உயர்வதாகும்” என்று ரஷாஹத்தே ஐனல் ஹயாத் என்னும் நூலில் எழுதப்பட்டுள்ளது.

            ஷைஃகு அஹ்மத் சிர்ஹிந்தி (ரஹ்) சொல்கிறார்கள்: “சஃபர் தர் வதன் என்னும் இந்த பாக்கியமான கோட்பாடு சுயத்தினுள் பயணிப்பதைக் குறிக்கிறது. குர்’ஆனில் அல்லாஹ் சொல்கிறான்:

”வெளியுலகிலும் அவர்களுக்கு உள்ளேயும்

அதிவிரைவில் அவர்களுக்கு நம் அத்தாட்சிகளைக் காண்பிப்போம்,

அவன்தான் சத்தியம் என்று அவர்களுக்குத் தெளிவாகும் வரை.” (41:53)

            இதன்படி தொடுவானங்களில் பயணித்த பிறகு மட்டுமே இந்த அகப் பயணம் இதர ஞான நெறிகளில் (தரீக்காக்களில்) கிடைக்கின்றது. நக்‌ஷ்பந்திய்யா நெறி அதனை ஆரம்பத்தில் வைக்கிறது.”

             ஒரு ஸூஃபி கவிதை இப்படிச் சொல்கிறது:

                        ”வெளியுலகில் வசித்திரு, உன் இதயம் பயணிக்கட்டும்;

                        கால்கள் இல்லாமல் பயணிப்பதே சிறந்த பயணமாகும்!”

            ”சாதகனுக்குப் பல்வேறு அகநிலைகளும் படித்தரங்களும் (ஹால் வ மகாம்) கிடைக்கும். எந்த ஓர் அனுபவத்தையும் அவன் இறுதியானது உச்சமானது என்று கருதிவிடக் கூடாது. அதிலேயே அவன் சிக்கி நின்றுவிடக் கூடாது. அவன் எப்போதும் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஒரு படித்தரத்தில் இருந்து அடுத்த படித்தரத்திற்கு எப்போதும் பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதைதான் சஃபர் தர் வதன் என்று சொல்கிறோம்” என்கிறார் உஸ்மான் நூரீ தோப்பாஷ்.

            மகாகவி அல்லாமா இக்பால் (ரஹ்) இக்கருத்தில் ஒரு கவிதை சொல்லியிருக்கிறார்:

காம் அப்னா ஹே ஸுப்ஹ் ஒ ஷாம் ச்சல்னா / ச்சல்னா ச்சல்னா மதாம் ச்சல்னா

”நம் பணி காலையும் மாலையும் சென்று கொண்டு இருப்பதே;

செல்வது செல்வது, எங்கும் நில்லாமல் செல்வதே!”

            ”சாதகன் தன் குருவை அடையும்வரைதான் அவனின் வெளிரங்கமான பயணங்கள் நிகழ்கின்றன. அவன் குருவை அடைந்ததும் புறத்தில் பயணிப்பது நின்று அவனின் அகப் பயணம் ஆரம்பம் ஆகிவிடுகிறது” என்கிறார் அபூ உஸ்மான் அல்-மக்ரிபி (ரஹ்) அவர்கள்.

            சாதகன் அகப் பயணம் மேற்கொள்ளும்போது அவனின் நிலை இறைத்தூதர் இப்றாஹிம் (அலை) அடைந்த மனநிலையை ஒத்ததாகிவிடுகிறது. அதாவது:

 “மேலும் அவர் கூறினார்: ‘நிச்சயமாக நான் என் ரட்சகனிடமே செல்கிறேன். நிச்சயமாக அவன் எனக்கு வழிகாட்டுவான்” (37:99)

            அதாவது, குருநாதர் தன்தானே சுயமாக வழிநடத்துவதில்லை. அவர் இறைவனின் கருவியாக இருக்கிறார். அவர் ‘மகாமே றப்’பாக (இறைவனின் தங்குமிடமாக), ’மழ்ஹரே றப்’பாக (இறைவன் வெளிப்படும் ஊடகமாக) இருக்கிறார். அவரைக் கொண்டு இறைவனே ஒருவருக்கு நேர்வழி காட்டுகிறான். இந்தத் தெளிவுடன் சாதகன் தன் அகப் பயணத்தைத் தொடர்கிறான்.


Sunday, June 15, 2025

நழர் பர் கதம் (காலடியைக் கண்காணித்தல்)

(நக்‌ஷ்பந்திய்யா ஸூஃபி நெறியின் 11 கோட்பாடுகளில் இரண்டாவது கோட்பாடு பற்றிய விளக்கங்கள்.)












இறைவனின் படைப்புக்கள் அனைத்திலும் மனிதன் தனித்தன்மை ஆனவன். படைப்புக்களின் உச்சம் அவன். இறைவனுக்கும் ஏனைய படைப்புக்களுக்கும் நடுவில் அவன் இருக்கிறான். ”மனிதன் ஒரு பாலம்” என்று சொல்லப்படுவது உண்டு. இறைவனின் திருப்தியை அடையும்படி அவன் வாழ்வதற்கே தீன் என்னும் வாழ்க்கை நெறியை இறைவன் தன் தூதர்களின் வழியாக மனித இனத்துக்கு அருளியுள்ளான். அதில்தான் மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் நிம்மதியும் அமைதியும் இருக்கிறது என்பதால் அதற்கு “தீனுல் இஸ்லாம்” என்று பெயர் உள்ளது.

தீன் என்பதை ஆங்கிலத்தில் religion என்று சொல்கிறார்கள். தமிழில் சமயம், மதம், மார்க்கம் என்றெல்லாம் சொல்கிறோம். மார்க்கம், நெறி ஆகிய சொற்கள் ’பாதை’ என்று பொருட்படும். தீனுல் இஸ்லாம் நேர்வழியாக, இறைவனை அடைவதற்கான பாதையாக உருவகிக்கப்படுகிறது:

“எம்மை நேர்வழியில் நடத்துவாயாக” (அல்-குர்’ஆன் 1:5)

இப்பாதை, “இறைவனால் அருள் செய்யப்பட்டோர்” நடந்த பாதை என்று திருமறையின் அடுத்த வசனம் சொல்கிறது (ஸிராத்தல்லதீன அன்’அம்த அலைஹிம் – 1:6)

இறைவனால் அருள் செய்யப்பட்டோர் நான்கு வகையினர் என்றும் குர்’ஆன் சொல்கிறது: ”எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த இறைத்தூதர்கள், சத்தியவான்கள், உயிர்த் தியாகியர், மற்றும் நல்லடியார்கள் ஆகியோருடன் இருப்பர். இவர்கள்தாம் மிக அழகிய தோழர்கள்” (வ மன்ய் யுதி’இல்லாஹ வர்-ரசூல ஃப’உலாஇக்க ம’அல்லதீன அன்’அமல்லாஹு அலைஹிம் மினந் நபிய்யீன வஸ்-ஸித்தீக்கீன வஷ்-ஷுஹதாஇ வஸ்-ஸாலிஹீன்; வ ஹசுன உலா’இக்க ரஃபீக்கா – 4:69)

            இந்த படித்தரங்களில் உள்ளோர் நடந்த ”நேர்வழி” என்பது ஸ்தூலமான பாதை அல்ல. அது இதயம் நடக்கும் பாதையாகும். எனவே நடப்போரின் தன்மைக்கு ஏற்ப இதில் பல அம்சங்கள் உள்ளன.



           









ஸூஃபிகள் இதனை ஷரீஅத், தரீக்கத், ஹகீக்கத், மஃரிஃபத், மற்றும் வஹ்தத் ஆகிய ஐந்து பாதைகளாகச் சொல்லியுள்ளனர். இவை ஐந்தும் ஒரே பாதையின் ஐந்து அம்சங்கள் ஆகும். இவற்றுக்கு உரிய பயிற்சிகளை மேற்கொள்வதே இவற்றில் நடப்பதாகும். இவை ஐந்தும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்தவை அல்ல. நடப்பவனின் கவனத்திற்குத் தக புலப்படுபவை ஆகும். “இறைவனை அடைய நாடுபவர் ஏக காலத்தில் இந்த ஐந்து பாதைகளிலும் நடக்க வேண்டும்” என்று ஸூஃபி மகான் ஃபைஜி ஷாஹ் நூரீ (ரஹ்) சொல்லியுள்ளார்கள்.

            இந்த நேர்வழி நடப்பதையே நக்‌ஷ்பந்திய்யா நெறியில் “நழர் பர் கதம்” என்னும் கோட்பாடாகச் சொல்லியுள்ளனர்.

கதம் என்பதன் நேரடிப் பொருள் ‘பாதம்’ என்பதாகும். எனவே, ‘நழர் பர் கதம்’ என்பதன் நேரடி அர்த்தம் “பாதத்தில் பார்வை வைத்தல்” அல்லது “காலடியைக் கண்காணித்தல்” என்பதாகும்.

            கதம் என்பதன் குறிப்புப் பொருள் நடவடிக்கை, செயல்கள் என்பதாகும். உதாரணமாக, ஆங்கிலத்தில் steps என்னும் சொல் நடக்கும்போது எடுத்து வைக்கும் காலடிகளைக் குறிக்கும். எனினும், “to take necessary steps” என்றால் தேவையான நடவடிக்கைகள் எடுத்தல் என்று பொருட்படும். “my steps are measured” என்றால் என் நடவடிக்கைகள் எச்சரிக்கையுடன் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன என்று பொருளாகும்.

            ஸூஃபி நெறியில் இந்தக் கோட்பாடு நேரடியான பொருளிலும் குறிப்புப் பொருளிலும் செயல்படுத்தப் படுகிறது. இரண்டிற்கும் உரிய பங்களிப்பு இருக்கிறது. இரண்டையும் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.









நழர் பர் கதம் – நேரடிப் பொருளில்

             முதலில், நழர் பர் கதம் என்பதை நேரடிப் பொருளில் எடுத்துக் கொண்டு அதற்கான ஸூஃபித்துவ விளக்கங்களைக் காண்போம்.

            ஆன்மிகத்தில் ஈடுபடும் சாதகனிடம் உண்டாக வேண்டிய முதல் மாற்றம் “தஸ்க்கியத்துந் நஃப்ஸ்” (உளத்தூய்மை, அகத்தூய்மை) என்பதாகும். மனம் என்பதை ஒரு கலம் (பாத்திரம், vessel) என்று உருவகம் செய்து கொள்ளுங்கள். பாத்திரம் சுத்தமாக இருந்தால்தான் அதில் பாலை ஊற்ற முடியும். அழுக்கான கலத்தில் தூய பாலை ஊற்றினால் பால் கெட்டுவிடும். அதுபோல், அழுக்கான மனத்தில் இறை ஞானத்தைப் புகட்டினால் அந்த ஞானம் திரிந்துபோய் வழிகேடு ஆகிவிடும். எனவே மனத்தைத் தூய்மை செய்தலே ஸூஃபிப் பயிற்சிகளின் முதல் நிலையாக உள்ளது.

முன்பு நாம் கண்ட முதல் கோட்பாடான “ஹோஷ் தர் தம்” (மூச்சில் விழிப்புடன் இருத்தல்) என்பதில் மூச்சுக்கும் மனத்துக்கும் இடையே உள்ள தொடர்பைப் பார்த்தோம். மூச்சை ஒழுங்குபடுத்தினாலே மனம் ஒரு கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். அது ஒரு பாத்திரத்தை ஆட்டாமல் அசைக்காமல் நிலையாகப் பிடித்து வைப்பதைப் போன்றதாகும். அப்போதுதான் பால் ஊற்றும்போது சிந்தாது, கொட்டாது.

ஆனால், பாத்திரம் அசைவு ஆட்டம் இல்லாமல் ஸ்திரமாக பிடிக்கப்பட்டால் மட்டும் போதாது, அது அழுக்கில்லாமல் சுத்தமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் ஊற்றப்படும் பால் கெடாது.

மனம் செம்மை ஆவதற்கு ஸ்திரம் மற்றும் தூய்மை இரண்டுமே வேண்டும். மனம் தூய்மை ஆவதற்கான பயிற்சியாக முதல் கோட்பாட்டுடன் இந்த இரண்டாம் கோட்பாடான “நழர் பர் கதம்” என்பதும் சேர்க்கப்படுகிறது.

மனம் என்பது ஐந்து புலன்களின் வழியாகச் செயற்படுகிறது. அவை ஸ்பரிசம் (தொடுவுணர்ச்சி), சுவைத்தல், முகர்தல், பார்த்தல், மற்றும் கேட்டல். இந்த ஐம்புலனும் நிகழ ஐம்பொறிகள் கருவிகளாக உள்ளன. அவை உடல், நாக்கு, மூக்கு, கண், மற்றும் காது. இந்த ஐந்து பொறிகளின் வழியாகவே உலகத்திலிருந்து மனத்திற்கு உள்ளீடுகள் வருகின்றன.

ஐம்புலன்களில் பார்வை என்பதே மிகவும் ஆற்றலுள்ளதாக இருக்கிறது. அதன் வழியாக மனத்தில் தொடர்ந்து பிம்பங்கள், உருவங்கள் பதிவாகின்றன. மனம் சதா அந்த உருவங்களைச் சலித்துக் கொண்டே இருக்கிறது. பார்வை உலகைத் துழாவிக் கொண்டே இருந்தால் ஆகுமான காட்சிகள் மட்டுமல்லாது ஆகாத, தகாத காட்சிகளும் அதில் பதிவாகின்றன. அதன் காரணமாக மனம் கெட்டுப் போகிறது. தீமையைத் தூண்டும் மனமாக – நஃப்ஸுன் அம்மாரத்துன் பிஸ்-ஸூஇ – ஆகிவிடுகிறது.

இதைக் கட்டுப்படுத்த ஒரு வழி இருக்கிறது. கண்கள் தேவையான விடயங்களைத் தவிர வேறு எதையும் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்வையைக் கட்டுப்படுத்த வேண்டும். எனவே ஒருவர் தன் பார்வையைத் தன் பாதத்தில் வைத்தவராக இருக்க வேண்டும் என்று ஸூஃபி மகான்கள் வலியுறுத்துகின்றனர்.

“(நபியே!) விசுவாசிகளிடம் கூறுவீராக,

அவர்கள் தம் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளட்டும்.

(24:30)

என்னும் திருவசனத்தின்படி இந்தப் பயிற்சி இறைக்கட்டளையாக உள்ளது.

பார்வையைத் தாழ்த்தாமல், கட்டுப்படுத்தாமல் அதனை எல்லாத் திசைகளிலும் அவிழ்த்துவிடுவது என்பது ஹராமான – இறைவனால் தடுக்கப்பட்ட – தகாத காட்சிகளைக் காணவும் அதன் பிம்பங்கள் மனத்தை அழுக்காக்கவும் வழியாகிவிடும்.

நபி (ஸல்) சொன்னார்கள்: “அலீயே! (அந்நியப் பெண் மீது) ஒரு பார்வையை இன்னொரு பார்வையால் தொடர வேண்டாம். நிச்சயமாக, முதலாவது உன்னுடையது, இரண்டாவது உன்னுடையதல்ல (யா அலிய்யு! லா துத்பி’இந்-நழ்ரத்தந்-நழ்ரத்த ஃப’இன்ன லகல் ஊலா வ லைச லகல் ஆஃகிரா).”  (அறிவிப்பாளர்: புரைதா (ரலி); நூல்: சுனன் திர்மிதி #2777).

அதாவது, எதார்த்தமாக அனிச்சையாக படுகின்ற முதல் பார்வை மன்னிக்கப் பட்டுவிடுகிறது. தெரிந்த பின்னரும் திருப்பிக் கொள்ளாமல் தொடர்ந்து பார்க்கும் பார்வை ஷைத்தானுடையது ஆகிறது. அப்போது நழர் (பார்வை) ஷைத்தானைப் பின் தொடர்வதாகி விடுகிறது.

எனவே ஜஹ்வர் அலீ நக்‌ஷ்பந்தி அல்-ஹசனீ அல்-ரப்பானீ சொல்கிறார்: “இன்றைய காலத்தில் இணையம், சமூக வலைத்தளம் போன்றவை நட்புப் பட்டியலில் பெண்கள் பலரைக் கொண்டு வந்துவிடுகிறது. அவர்கள் ஆபாசமான படங்களைக்கூட அதில் பதிவேற்றி விடுகின்றனர். அல்லது, ஹிஜாப் (முகத்திரை) இல்லாமல், இஸ்லாமிய கண்ணியம் இல்லாமல் படங்கள் போடுகின்றனர். அவற்றை நீங்கள் நீக்கி விடுங்கள். அல்லது, அத்தகையோரின் தொடர்பைத் துண்டித்து விடுங்கள். எனவே, இன்றைய காலத்தில் நழர் பர் கதம் – காலடியை கவனித்தல் என்னும் சொற்றொடருக்கு விரிவான கண்ணோட்டம் உள்ளது. நீங்கள் கஸ்டமர் கேருக்கு அழைத்துப் பேசும்போது தொலைபேசியில் ஒரு பெண் பேசக்கூடும், அல்லது விமானத்தில் ஏர்ஹோஸ்டஸ் அல்லது வியாபாரத்தில் ஒரு பெண் முகவர் உங்களை அணுகிப் பேசுகிறார். அத்தகைய நிலையில், உன் பார்வையை உன் உள்ளத்தின் பாதத்தில் வை! இதன் பொருள் நீங்கள் எல்லோரிடமும் கடுகடுப்பாக இருக்க வேண்டும் என்பதில்லை. அனைவரிடமும் கனிவாகவும் பரிவாகவும் இருங்கள். அது வேறு.”









24-11-2002 ஞாயிற்றுக் கிழமை இரவு ரமலான் 19-ஆம் பிறையில் தராவீஹ் தொழுகைக்குப் பின்னர் நான் என் குருநாதர் சய்யிதுனா பிலாலி ஷாஹ் ஜுஹூரி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்களின் திருக்கரங்களில் பைஅத் செய்து அன்னாரின் சீடன் ஆனேன். அன்று அவர்கள் முரீதீன்களுக்கு ஆற்றிய உரையில் மேற்குறிப்பிட்ட ஹதீஸை மேற்கோள் காட்டிப் பேசினார்கள் என்பது பசுமையாக நினைவில் உள்ளது. அந்த ஹதீஸின் மீது இப்படி ஒரு விளக்கத்தையும் சொன்னார்கள்: “முதல் பார்வை உன்னுடையது. இரண்டாம் பார்வை ஷைத்தானுடையது. ஆனால், முதல் பார்வை அனிச்சையாக விழுந்ததும் அந்நியப் பெண்ணை விட்டும் நீ சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டால் அந்தப் பார்வை யாருடையது? நீ யார் சொன்னதைப் பின்பற்றி உன் பார்வையை விலக்கினாய்? நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் பின்பற்றித்தானே விலக்கினாய்? எனவே அப்போது உன் பார்வை நபியில் ஃபனா ஆகிவிட்டது. அது நபி (ஸல்) அவர்களின் பார்வை ஆகும்! அதற்கான நற்கூலியை அல்லாஹ் உனக்கு அளிப்பான்.”

மேலும் என், குருநாதர் சொல்கிறார்கள்: “நீ ஒரு கடை வைத்திருக்கிறாய் என்றால் அங்கே பெண்களும் பொருள் வாங்க வருவார்கள். அவர்களிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டு வியாபாரம் செய்ய முடியாது. அப்படி நிர்ப்பந்தமாக அவசியம் கருதி அந்நியப் பெண்ணைப் பார்க்க வேண்டி இருந்தால் என்ன செய்வாய்? உன்னை விட மிகவும் வயதில் மூத்தவராக இருந்தால் உன் அம்மாவாகப் பார், சற்று மூத்தவர் என்றால் உன் அக்காவாகப் பார், உன்னை விட இளைய பெண் என்றால் உன் தங்கையாகப் பார், மிகவும் இளைய பெண் என்றால் உன் மகளாகப் பார். இவர்களை நீ இச்சையோடு பார்க்க மாட்டாய் அல்லவா? அப்படிப் பார். இச்சையோடு மனைவியாகப் பார்க்காதே.”

”நழர் பர் கதம்” என்னும் பயிற்சிக்கு வெளிப்படையான அர்த்தத்தின்படி இன்னொரு விளக்கத்தையும் காண்போம். அது பின்வரும் ஹதீஸ்படி நபிவழியாகவும் இருக்கிறது:

            [சய்யிதுனா அல்-ஹசன் இப்னு அலீ (ரலி) அவர்கள் தன் தாய்மாமன் (ஃகால்) ஆன ஹிந்திப்னு அபீ ஹாலா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் வருணிப்பை (ஹில்யா) வினவியபோது அவர் சொன்ன விரிவான வருணிப்பிலிருந்து ஒரு பகுதி]: ”நபி (ஸல்) நடக்கும்போது மலையில் இருந்து இறங்குவது மாதிரி நடப்பாரகள். அவர்கள் கண்ணியமான முறையிலும் இலகுவாகவும் நடப்பார்கள். அவர்கள் துரிதமாக நடப்பார்கள். அவர்கள் நடக்கும்போது சரிவில் இறங்குவது போல் இருக்கும். அவர்கள் எவரிடமேனும் பேசுவது என்றால் தன் முழு உடலாலும் அவரின் பக்கம் திரும்பி நின்று பேசுவார்கள். நபி (ஸல்) தன் பார்வையைத் தாழ்த்தி இருப்பார்கள். மேலே பார்ப்பதைவிட அதிகமாகக் கீழே பார்ப்பார்கள். நபி (ஸல்) தன் பார்வையைக் கட்டுப்படுத்திக் கொள்வார்கள். தன் தோழர்களிடம் முதலில் அவர்களே பேசுவார்கள். தான் சந்திக்கும் எவருக்கும் முந்தி சலாம் சொல்வார்கள்.” (காழி இயாள் (ரஹ்) அவர்களின் அஷ்-ஷிஃபா, அத்தியாயம்: 2: பகுதி: 25).

            மேட்டில் இருந்து கீழே இறங்குபவர் பார்வையைத் தன் பாதத்தில்தான் வைத்திருப்பார். அவர் மேலே பார்த்தபடி இறங்க மாட்டார், கீழேதான் பார்ப்பார். எனவே, நபி (ஸல்) அவர்களின் நடையைப் பின்பற்ற ’நழர் பர் கதம்’ என்னும் பயிற்சி வழி செய்கிறது. அப்படி நடப்பது பணிவின் அடையாளமாக இருப்பதையும் மகான்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

”அருளாளனின் அடியார்கள் – அவர்கள்தாம்

பூமியில் பணிவுடன் நடப்பார்கள்” (25:63)

என்றும்,

“பூமியில் கர்வமாக நடக்காதீர்” (17:37)

என்றும் இறைவன் கட்டளையிடுவதற்கு ஏற்ப நல்லடியார்களான ஆன்மிக சாதகர்கள் நடப்பதற்கும் இந்த “நழர் பர் கதம்” என்னும் பயிற்சி வழி கோலுகிறது.

 

நழர் பர் கதம் – குறிப்புப் பொருளில்

            காலடியை கவனித்தல் என்பது அதன் நேரடியான வெளிப்படையான பொருளில் கருதப்படும்போது சாதகன் தன் பார்வையை அலையவிடாமல், தகாத காட்சிகளில் படவிடாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதைக் கண்டோம். அதே சமயம், ஒருவர் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பார்க்கவே கூடாது என்பது அதன் அர்த்தமன்று. அப்படி ஒருவர் புற உலகத்தைப் பார்க்கமாலேயே இருப்பதும் குர்’ஆனுக்கு மாற்றம் ஆகும். ஏனெனில் நம்மைச் சுற்றியுள்ள இறை அத்தாட்சிகளை நோக்கும்படி அல்லாஹ் ஆணை இடுகிறான் என்பதை ஜஹ்வர் அலீ நக்‌ஷ்பந்தி அல்-ஹசனீ அல்-ரப்பானீ சுட்டிக் காட்டுகிறார். ஓர் உதாரணம்:

            அவனே விண்ணிலிருந்து மழையை இறக்கினான்.

            அதனைக் கொண்டு யாம்

அனைத்து வகை தாவரங்களையும் வெளியாக்கினோம்,

அதிலிருந்து பசுமைகளை வெளிப்படுத்தினோம்,

அதிலிருந்து அடர்த்தியான கதிர்களாக வித்துக்களை வெளியாக்கினோம்.

பேரீச்சம் மரப் பாளையில் இருந்து

வளைந்து தொங்கும் பழக்குலைகளும் உள்ளன;

திராட்சைத் தோட்டங்களையும்,

ஒன்று போலவும் வெவ்வேறாகவும் உள்ள

மாதுளை, ஆலிவ் ஆகியவற்றையும் (வெளிப்படுத்தினோம்).

அவை காய்ப்பதையும் பின்பு கனிந்து பழமாவதையும்

நீவிர் உற்று நோக்குவீராக!

இறைநம்பிக்கை கொள்வோருக்கு

நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் உள்ளன.

(குர்’ஆன் 6:99)

            இவ்வாறு வானங்களையும் பூமியையும் உற்று நோக்கி இறை அத்தாட்சிகளை விளங்கும்படி இறைவன் ஆர்வமூட்டுகிறான். அதை எல்லாம் நாம் பார்க்கத்தான் வேண்டும். எனவே, நழர் பர் கதம் என்பது குறியீட்டு ரீதியில் உட்பொருள் காண வேண்டிய ஒரு கோட்பாடு என்றும் கருத இடம் உண்டாகிறது.

நக்‌ஷ்பந்திய்யா தரீக்காவின் முதல்வரான ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) சொல்கிறார்கள்: “கதம் அல்லது காலடிகள் என்பது நாட்டம் (இராதத்) என்பதைக் குறிக்கும். நமது நாட்டம் நம் ஷைஃகின் நாட்டத்துடன் பொருந்த வேண்டும். அடுத்து அது நபி (ஸல்) அவர்களின் நாட்டத்துடன் பொருந்த வேண்டும். அடுத்து அது இறைவனின் நாட்டத்துடன் பொருந்த வேண்டும். ஏனெனில் அல்லாஹ் சொல்கிறான்:

இறை விசுவாசிகளே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்,

இறைத்தூதருக்கு அடிபணியுங்கள், மேலும் உங்களில் இருந்து

அதிகாரமுள்ளோருக்கு அடிபணியுங்கள்.’ (4:59)”

இமாமுர் ரப்பானீ அஹ்மத் அல்-ஃபாரூக்கி (ரஹ்) அவர்கள் தனது ’மக்தூபாத்’ என்னும் கடிதத் தொகுப்பின் 295-ஆம் கடிதத்தில் இப்பயிற்சியின் அகமியம் குறித்துப் பின்வருமாறு விளக்குகிறார்கள்:

            ”பார்வை காலடியை முந்துகிறது. காலடி பார்வையைத் தொடர்கிறது. மேலான படித்தரத்திற்கு உயர்வது முதலில் பார்வையாலும் அடுத்துக் காலடியாலும் ஆகும். பார்வை உயர்ந்து சென்ற இடத்தைக் காலடி அடைந்தவுடன் பார்வை அதனினும் மேலான படித்தரத்திற்கு உயர்த்தப்படுகிறது. காலடி அதனை மீண்டும் பின் தொடர்கிறது. அப்படியாக பார்வை செம்மை நிலையை நோக்கி உயர்ந்து அந்த நிலைக்குக் காலடியை இழுக்கிறது. நாம் சொல்கிறோம், ‘பார்வையைக் காலடி தொடரும்போது நபி (ஸல்) அவர்களின் காலடியை அணுக ஆயத்தம் ஆகும் நிலையை முரீது எட்டிவிட்டான். எனவே, நபி (ஸல்) அவர்களின் காலடிகளே அனைத்துக் காலடிகளுக்கும் மூலம் என்று சொல்லப்படுகிறது.’”

            இறைவனுக்கும் அவன் திருத்தூதருக்கும் அதிகாரிகளுக்கும் நாம் அடிபணிய வேண்டும் என்று குர்’ஆன் சொல்கிறது. இங்கே ஆன்மிக ரீதியாக அதிகாரம் உள்ளோரை இவ்வசனம் குறிப்பதாகக் கொள்வது இவ்வுலக ஆட்சியில் அதிகாரம் உள்ளவர்களையும், உறவு ரீதியாக அதிகாரம் உள்ள பெற்றோர்கள் மற்றும் வயதில் மூத்தவர்கள் ஆகியோரைக் குறிக்கும் என்று கொள்வதை விட அதிகம் பொருத்தமானது ஆகும். அதே சமயம் ஷைத்தான், ஹவா (நஃப்ஸின் இச்சை) ஆகியவற்றைப் பின்பற்றக்கூடாது என்றும் வலியுறுத்துகிறது. பின்வரும் திருவசனங்கள் இதனைத் தெளிவாக்கும்:

“இறை விசுவாசிகளே! ஷைத்தானின் காலடிகளைப் பின்பற்றாதீர்” (24:21)

”இறை விசுவாசிகளே! நீவிர் இஸ்லாமில் முழுமையாக நுழைந்துவிடுவீராக!

ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர். நிச்சயமாக,

அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.” (2:208)

“(நபியே!) தன் இச்சையை தெய்வமாக எடுத்துக்கொண்டோனை நீவிர் பார்த்தீரா? அறிவுடனேயே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டுவிட்டான்;

மேலும், அவனின் செவியின் மீதும் இதயத்தின் மீதும் முத்திரை இட்டுவிட்டான்;

மேலும், அவனின் பார்வை மீது திரையிட்டுவிட்டான்;

எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காட்டுவோன் யாவன்?

நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?” (45:23)

            நாம் யாரைப் பின்பற்ற வேண்டும், யாரைப் பின்பற்றக் கூடாது என்று மேற்காணும் திருவசனங்கள் தெளிவாக்குகின்றன. இவற்றின் வெளிச்சத்தில் நழர் பர் கதம் என்னும் கோட்பாட்டை ஜவ்ஹர் அலீ நக்‌ஷ்பந்தி அல்-ஹசனீ அல்-ரப்பானீ இவ்வாறு விளக்குகிறார்:

            ”நக்‌ஷ்பந்திய்யா நெறியில் காலடியைக் கவனித்தல் என்பது ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதையும் எல்லா நேரங்களிலும் அதை நேராகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதையும் குறிக்கும். உன் காலடிகளையும் அசைவுகளையும் நீ கவனிக்கவில்லை என்றால் நீ ஷைத்தானைப் பின் தொடர்கிறாய் என்பதற்கான சாத்தியம் உண்டு! எனவே நழர் பர் கதம் என்பது அல்லாஹ்வின் சட்ட எல்லைகளுக்குள் ஒருவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதைக் குறிக்கும்.”

            இஸ்லாமை ஏற்று அதில் நக்‌ஷ்பந்திய்யா ஞான நெறியிலும் தன்னை இணைத்துக் கொண்டவரான ரென்ஸ் நூனிஸ் என்பார் நழர் பர் கதம் என்பதற்கு மூன்று விதமான வியாக்கியானங்கள் உள்ளன என்று சுட்டுகிறார்:

            ”சாதகன் தன் இறைவனைத் தவிர வேறு எதையும் முன்னோக்காமல் இருப்பது பயபக்தியின் அடையாளம் ஆகும். ஓர் இலக்கை அடைய நினைப்பவரைப் போல் அல்லாஹ்வின் தெய்வீக பிரசன்னத்தைத் தேடுபவரும் அதனை நோக்கி விரைந்து செல்கிறார்,

            ”நம் காலடியை கவனித்தல் என்பது சூழ்நிலைகளை கவனிப்பதையும் குறிக்கும். அதாவது செயல்படுவதற்கும் சும்மா இருப்பதற்குமான சூழ்நிலைகளை உணர்தல். எப்போது செயல்பட வேண்டும், எப்போது நிறுத்த வேண்டும் என்று தெரிவது. நழர் பர் கதம் என்பது ஒருவரின் இயற்கையான சுபாவத்தில் (ஃபித்ரத்) பொதிந்துள்ள ஞானம் என்றும் அதனை அவர் கண்டடைவதே நழர் பர் கதம் ஆகும் என்றும் சிலர் கூறியுள்ளனர். ஷைஃகு ஃபக்ருத்தீன் அலீ இப்னு ஹுசைன் அஸ்-ஸஃபீ வாஇழ் காஷிஃபி (கத்தஸல்லாஹு சிர்ரஹு) அவர்கள் சொல்கிறார்கள்: ’நழர் பர் கதம் என்பது உள்ளமையின் படித்தரங்களில் கடந்து போகின்றவரும் சுயேச்சையைத் துறப்பவரும் ஆன சாதகருக்கு உரியதாகும்.’

            ”இந்த மூன்று வியாக்கியானங்களில் முதலாவது ஆரம்ப நிலையில் உள்ள சாதகர்களையும், இரண்டாவது நடுவழியில் உள்ளோரையும், மூன்றாவது இலக்கை அடைந்தோரையும் குறிக்கும் என்று கருதலாம்.”

            நழர் பர் கதம் என்பதற்கு உட்பொருள் நோக்கில் இப்படிப் பல்வேறு விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை இறைஞானியர் ஒவ்வொருவருக்கும் இறைவன் திறந்து தந்த உள்ளுதிப்பான விளக்கங்கள் ஆகும். முத்தாய்ப்பாக, நூருல் மஷாஇஃக் (குருமார்களின் பேரொளி) என்று போற்றப்படும் சய்யிதுனா நூரீ ஷாஹ் அல்-ஹசனி வல்-ஹுசைனி (ரஹ்) அவர்கள் தரும் விளக்கம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அறபியில் காஃப்-தால்-மீம் ஆகிய மூன்று எழுத்துக்களை ஒரு சொல்லாக ஒலிக்குறியீடுகள் இன்றி எழுதும்போது அதனை கதம் என்றும் வாசிக்கலாம், கிதம் என்றும் வாசிக்கலாம்.

            இதனை ‘கதம்’ என்று வாசித்தால் பாதம் என்று பொருட்படும். கிதம் என்று வாசித்தால் “பூர்வீகம்” என்று பொருட்படும். பூர்வீகம் என்பது தனக்கொரு ஆரம்பம் இல்லாத ஆதி (அவ்வல் பிலா இப்திதாஃ’) ஆகும். அது இறைவனைக் குறிக்கும். படைப்புக்களின் சுயங்கள் (ஜாத்) புதுமையானவை (ஹாதிஸ்) ஆகும், மேலும் சுய உள்ளமை அற்றவை (அதம்) ஆகும். இறைவனின் சுயம் (ஜாத்) பூர்வீகமானது (கிதம்) ஆகும்.

எனவே, நழர் பர் கதம் எனறால் ”காலடியை கவனித்தல்” என்பதாகும். சய்யிதுனா நூரீ ஷாஹ் அல்-ஹசனி வல்-ஹுசைனி (ரஹ்) அவர்கள் அதனை நழர் பர் கிதம் என்று குறிப்பிட்டு “உன் அகப்பார்வையை எப்போதும் பூர்வீகனான (கதீம்) அல்லாஹ்வின் மீதே வை” என்று சொன்னார்கள்.