Tuesday, April 18, 2017

இஸ்லாமியக் கலையின் செய்தி - part 2

Related image
Jean Louis Michon

(1)  கலை : முஸ்லிம் வாழ்வின் ஒருங்கிணைந்த கூறு

குர்ஆனில், இறைவன் மனிதனைப் பற்றிச் சொல்கிறான், ’என்னை வணங்குவதற்காகவே அன்றி அவனை நான் படைக்கவில்லை’ (51:56). மேலும் சொல்லப்பட்டுள்ளது, “இறை ஞாபகம் மகத்தானது” (29:45). இதனால் அறியலாகிறது, மனிதனின் உண்மை நோக்கம் இறைவனை வணங்குவது. அதாவது, மனிதனின் உள்ளமை முழுவதும் அவனது படைப்பாளனுக்கான வழிபாடாகவும் தியானிப்பாகவும் இருக்க வேண்டும்.

தியானம் நினைவுகூர்தல் (திக்ரு, தத்கீர்) என்னும் கோட்பாடு இஸ்லாத்திற்கு அடிப்படை ஆகும். திக்ருல்லாஹ் – இறைநினைவு என்பது குர்ஆனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களில் ஒன்றாகும். மேலும் அப்பெயர் இறைத்தூதர் முஹம்மதுக்கும் கொடுக்க்ப்பட்டுள்ளது. அஃது ஏனெனில், அவரே குர்ஆனை பரப்பும் பொறுப்பு வழங்கப்பட்டவர் என்பதால் மட்டுமல்ல, ஆனால் அவரின் பண்பும் சொல்லும் போதனைகளும் – சுருங்கச் சொல்வதெனில் சுன்னாஹ் என்னும் நபிவழியைக் கட்டமைக்கும் அனைத்தும் – அவர் தனது ரட்சகனை எந்த அளவுக்கு நினைவு கூர்ந்தார், அந்த இடையறாத நினைவின் விளைவாக எந்த அளவுக்கு இறைநெருக்கம் பெற்றார் என்பதைக் காட்டுகின்றன என்பதாலுமாம்.

இறை நினைவில், இறை தியானத்திலான இந்தப் பிடிப்பு, ஏன் பித்தென்று கூட சிலர் சொல்லக்கூடும், தனிமனித முழுமையாக்கத்திற்கான காரணி மட்டுமன்று. அஃது சமூக வாழ்வுக்கும் கலை வளர்ச்சிக்குமான உந்து சக்தியாகும். இறைவனை அதிகமாக நினைவுகூர, முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்கள் சடங்கான தொழுகை நேரங்களில் மட்டும் இல்லாது அனைத்து நேரங்களிலும் அதற்கான சூழலில் தம்மை வைத்துக்கொள்வதற்குப் பாடுபடுதல் இன்றியமையாதது. அத்தகு சூழல் அழகும் அமைதியும் நிரம்பியதாய் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், அச்சூழலில் ஒருவர் சந்திக்கும் ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு பொருளும் (இயற்கையாயினும் செயற்கையாயினும்) திக்ரு என்னும் இறைநினைவுக்கான தருணமாகவும் உறுதுணையாகவும் இருக்கும்.

தனிமனித மற்றும் சமூகச் சூழலை நோக்க, அத்தகு சூழல் என்பது ஷரீஅத் (அனைவரும் கீழ்ப்படிய வேண்டியதான வெளிப்படுத்தப்பட்ட சமயச் சட்டவியல்) நடைமுறையால் அடையப்படுகிறது. எவ்வளவு தனிமனிதமோ அவ்வளவுக்குச் சமூகத் தன்மையுமான, ஐம்பெருங் கடமைகளும் தூய நடத்தை விதிகளும் கொண்ட இந்த சமயச்சட்டம் உம்மத் என்னும் சமூகத்தின் இதயத்தில் வேர்பிடித்துள்ளது.

புறவுலகின் இச்சூழல் ஆன்மிக உலகின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்னும் கோரிக்கை எழும் தருணத்தில்தான், மிகச்சரியாக, ஒருவர் புனிதக்கலை என்பதன் களத்தினுள் நுழைகிறார். அந்தப் புனிதக் கலையைப் பற்றிச் சிந்தனையாளர் ஃப்ரிட்ஜாஃப் ஷுவான் கூறுகிறார், “அது முதலில் வேத வெளிப்பாட்டின் காட்சி மற்றும் கேட்டல் வடிவங்களாக இருக்கிறது. பின் அது அதன் இன்றியமையாத வழிபாட்டு வடிவமாக இருக்கிறது” (Fritjof Schuon, “Understanding Islam”, Ch.4).

Related image

இஸ்லாத்தின் கோட்பாடுகளை அழகியல் மொழியில் பெயர்த்தளிப்பதே கலைஞர்களின் பணியாகும். வேறு விதத்தில் சொல்வதெனில், மிகப் பிரம்மாண்டமான கட்டிடங்கள் முதல் அன்றாட எளிய புழங்கு பொருள் வரை அனைத்துக் கட்டமைப்பிலும் அலங்காரங்களாக இடம்பெற வல்ல வடிவங்களாகவும் சின்னங்களாகவும் இஸ்லாமியக் கோட்பாடுகளை அமைவாக்கம் செய்வதாகும். “அல்லாஹ் அழகன்; அவன் அழகை விரும்புகிறான்” (அல்லாஹு ஜமீலுன் யுஹிப்புல் ஜமால், அறிவிப்பு நூல்: முஸ்னத் அஹ்மத்) என்னும் ஹதீஸ், முஸ்லிம் அழகியலின் கோட்பாட்டு அடித்தளம் என்று கருதலாம்.

மனித உரிமைகளின் மேலாக இறைவனது உரிமைகளின் முற்றான ஆதிக்கம் உள்ளது என்பதை அடிக்கோடிட்டுரைக்கும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தின்படி, கலைப் படைப்பாக்கம் என்பது இறைவனிடம் மனிதனை இட்டுச் செல்லும் பாதையில் உதவியாய் இருக்குமாறு மனிதனில் இறைவன் வைத்ததொரு மனவியல்பே அன்றி வேறில்லை. இதனால், கலைஞன் என்பவன் இறைவனின் அடியார்களில் ஒருவனே தவிர விதிவிலக்கான வகையினன் அல்லன். எனவே அவன், சுயநலமற்ற சுயவிருப்பற்ற சேவையின் மூலம்  தான் சார்ந்த மரபினை தெள்ளத் தெளிவாக புலப்படுத்துவதில் சமூகத்தில் தனக்குள்ள பங்களிப்பை நிறைவேற்ற முனைய வேண்டும். எனவேதான், முஸ்லிம் கலைஞர்களில் ஒழுக்கங்களைப் பேணுதலுக்கும் அவர்களது கலைத்தொழிலுக்கும் இடையிலான உறவுநிலை எப்போதும் இருந்துள்ளது. நபி சொன்னார்கள், “உங்களில் ஒருவர் ஏதேனுமொன்றைச் செய்தால் அதனைத் தொடர்ச்சியாகச் செய்வதை இறைவன் விரும்புகிறான்”. இந்தப் போதனையைக் கலைஞர்கள், குறிப்பாக ஒவ்வொரு கலைத்துறையிலும் வாக்குறுதி பெற்று இயங்கி வந்த செவ்வியற்காலத்துச் சகோதர அமைப்புக்கள், முழுமையாக நிறைவேற்றியுள்ளார்கள் எனலாம்.

இஸ்லாத்தின் கலைப்படைப்பாக்கம் ஒருபோதும் புலனின்ப நுகர்வின் பொருட்டுச் செயல்படுத்தப்படுவதில்லை என்பது அதன் இன்னொரு பண்பாகும். அது தீர்க்கமான முடிவு நிலைகளை நோக்கிச் செல்வதாகும். நவீன மேற்குலகில் தூய கலை என்றும் கலை கலைக்காகவே என்றும் பயன்பாட்டுக் கலை அல்லது பயனுறு கலை என்றும் முதல் வகையானது அழகியல் உணர்வைத் தூண்டுதற்கென்றும் இரண்டாம் வகையானது ஏதேனுமொரு தேவையைத் தீர்ப்பதற்கென்றும் ஆகியுள்ளது போன்ற பாகுபாட்டினை இஸ்லாமியக் கலை ஒருபோதும் கண்டதில்லை. இஸ்லாமியக் கலை எப்போதுமே இயங்குதலாக (functional) இருந்துள்ளது, குர்ஆன் வசனங்கள் மெக்காவில் உள்ள கஃபாவை மூடியிருக்கும் கறுப்புத் துணியில் தைக்கப்பட்டுள்ள நிலை அல்லது ஏதேனுமொரு தர்காவின் கட்டிடங்களில் செதுக்கப்பட்டுள்ள நிலை போல் அதன் பயன்பாடு நேரடியாக ஆன்மிகம் சார்ந்ததாக இருப்பினும் சரியே, பூப்பின்னலும் ஜியோமிதி சார்ந்த சித்திரவேலைகளும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கிண்ணங்கள் அல்லது சரவிளக்குகள் போன்று அதன் பயன்பாடு ஒரே சமயத்தில் பல தளங்களில் இருப்பினும் சரியே.

Image result for islamic artisans

இஸ்லாத்தின் கலை வெளிப்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்வோரை, கலைஞன் மற்றும் கலைவினைஞன் என்னும் சொற்களால் பாகுபடுத்திக்கொள்ளாமல் பொதுவாக நான் அழைப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இஃது ஏனெனில், அரபி மொழியில் தனது கைகளால் கலைப்பொருட்களை வடிவமைத்து உருவாக்குபவனைச் சுட்டுவதற்கு ஒரே ஒரு சொல்தான் இருக்கிறது: ஸானிஃ. அவன் கலை வினைஞன், ஒரு கைத்தொழிலை அல்லது கைவினையைப் பழகுபவன், அதன் பொருட்டு கைவினைத் தொழில்நுட்பத்தைக் கற்பதற்காக மாணவனாய் இருப்பவன். இங்கே கலை என்பது மத்தியக் காலங்களில் புரிந்துகொள்ளப்பட்ட பொருளிலே அன்றி நவீன உலகிலான அர்த்தத்தில் அல்ல. ஃபன் (கலை) என்னும் அரபிச் சொல்லும் அதே பழைய அர்த்தத் தொனி கொண்டதுதான். “வித்தை அற்ற அறிவு பாழ்” என்னும் முதுமொழி இதனைக் காட்டும். இதனை அக்காலத்தில் முஸ்லிம் கைவினைஞர்கள் உருவாக்கியிருக்க வேண்டும். இக்காலத்து தொழில்நுட்பத் துறையினருக்குப் பொருந்தும். எனவே, கலைஞன் என்று நாம் இக்காலத்தில் காண்கிறோமே, தனது தனிப்பட்ட வெளிப்பாட்டினைத் தேடியவனாக, சமுதாயத்தில் விளிம்பு நிலையில் இருப்பவனாக, அந்த நிலை ஒருபோதும் இஸ்லாமிய மரபில் இருந்ததில்லை. கலைஞன் அல்லது கலைவினைஞன் என்னும் சொற்கள் இப்பின்னணியில் எவ்விதக் குழப்பத்தையும் தவறான புரிதலையும் உண்டாக்கிவிடக் கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

பிரத்தியட்சமான கலைப்பொருட்களாய் வெளிப்பாடு கொள்ளாத இயல்பு கொண்ட  கைவினைகள் சில இருக்கின்றன என்பது உண்மைதான். சில தொழில்சார் கலைகள், தோல் பதனிடுதல், நூற்றல், சாயமேற்றுதல் போன்றவை அப்படி ஆயினும் அவை இன்றியமையாது இடம் பெற்றிருக்கும் பணிகளின் இறுதி வெளியீடு ஒரு கலைப்பொருள்தான் (உதாரணமாக, ஒரு தொழுகை விரிப்பு). வேறு சில கலைக் கூறுகள், உதாரணமாக வேலைப் பாடல்கள் அல்லது விழாக்களில் அணியப்படும் சிறப்பு ஆடைகள் அணிகள் போன்றன எப்போதும் மரபார்ந்த கைவினைகளுடனே தொடர்புள்ளவை. முஸ்லிம் சமூகத்தின் வாழ்விற்கு அவற்றின் பங்களிப்பு மிகப் பெரிது.


சுருக்கமாக, இஸ்லாமியக் கலைத் தயாரிப்பின் இரண்டு முக்கியமான பண்புகள் உள்ளன. முதலில், ஆன்மிக மற்றும் அற நோக்கில், அது தான் பொதுத் தளத்திற்கு எடுத்துச் செல்லும் மதிப்பீடுகளை குர்ஆனின் செய்தியிலிருந்து அடைகிறது. இரண்டாவதாக, தொழில்நுட்ப நோக்கில், அது தந்தையிலிருந்து மகனுக்கு அல்லது ஆசானிலிருந்து மாணவனுக்கு தொடர்ச்சியாய் வழங்கப்படும் மாற்றமில்லாத விதிகளையும் பயிற்சிகளையும் கொண்டுள்ளது. இந்தப் பாரம்பரியத்தின் பொருள் தேக்கமோ அல்லது முந்தைய வடிவமைப்புக்களை யந்திரத்தனமாக மீண்டும் செய்தலோ அல்ல. மாற்றமாக, அது பல நேரங்களில் கலைஞர்களுக்கு மிகுந்த ஊக்கத்தையளிக்குமொரு ஊற்றாகவும் பிரதியாகா நிலை கொண்ட எண்ணற்ற மேதமைப் படைப்புக்கள் உருவாகுவதற்கான தொழில்நுட்ப ஸ்திரத்தன்மையாகவும் இருந்துள்ளது. ஏதேனும் தருணங்களில் மரபான கோட்பாடுகள் பன்முறை மீண்டும் செய்தலினால் நீர்த்துப் போயிருக்குமெனில் அதன் சீர்கேட்டிற்கான காரணத்தை அக்கோட்பாடுகளில் அல்லாது வேறு இடங்களில்தான் தேடிப்பார்க்க வேண்டும்.

to be continued

No comments:

Post a Comment