Wednesday, April 19, 2017

இஸ்லாமிய ஆன்மிகம்

விக்டர் தான்னர்
Image result for victor danner
      (மெஹிகோ – Mexico – நாட்டில் பிறந்த டாக்டர் விக்டர் தான்னர் (1926 – 1990) அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகத்தில் அரபி மற்றும் சமயவியல் துறையின் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். சூஃபி ஞானி அதாவுல்லாஹ் இஸ்கந்தரி (ரஹ்) அவர்களின் ”ஹிகம்” என்னும் நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். அவர் 12, ஏப்ரில் 1976-ல் லண்டனில் காமன்வெல்த் இன்ஸ்டிட்யூட்டில் “இஸ்லாமிய உலக விழா”வை முன்னிட்டு “Islamic Mysticism” என்னும் தலைப்பில் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம் இது.)

      இன்றிலிருந்து கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக, இஸ்லாமிய உலகில் மிகப் பன்மை வளத்துடனும் அசலான முறையிலும் பரம்பொருள் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்துக்கும் முதலாய், இஸ்லாத்தின் தொடக்கத்தில், குர்ஆனிய வெளிப்பாட்டில், குறிப்பாக சூஃபிகள் தமது ஆன்மிகப் பாதையின் அடித்தளமாகக் கருதும் திருவசனங்களிலும், சுன்னத் என்னும் நபிவழியில், குறிப்பாக பொதுவாக விசுவாசிகள் அனைவருக்குமாய்த் தொகுக்கப்பட்டுள்ள வெளிரங்கமான அம்சங்களன்றி ஆன்மிக வாழ்விற்கான அம்சங்கள் கொண்ட நபிவழிகளில் பரம்பொருள் தன்னை நேரடியாக அறிவித்தது.

இரண்டாவதாக, பரம்பொருள் தன்னை இஸ்லாத்தின் புனிதக் கலைகளில் வெளிப்படுத்திக் கொண்டது. அவை பள்ளிவாசல் கட்டடவியல், குர்ஆன் கலையெழுத்து போன்றன. அவை, அழகியல் அதிர்வுகள் மூலம் மனிதரின் இதயங்களுள் உண்மைகளை ஊன்றுவன.

மூன்றாவதாக - இறுதியாக, நபியில் தொடங்கியதான ஞானிகள் மற்றும் இறைநேசர்களின் நீண்ட பாரம்பரியத் தொடர்ச்சியிலும் இஸ்லாத்தின் புனிதத் தலங்கள் மற்றும் புனித நபர்களுடன் தொடர்புள்ள எண்ணற்ற அற்புத மற்றும் பேரருள் நிகழ்வுகளிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

நபி வரை நீண்டு செல்லும் அந்த ஞானியர் தொடர்ச்சியின் ஆகச் சிறந்த சான்று சூஃபித்துவம். இஸ்லமிய வரலாற்றின் முதல் நூற்றாண்டில் சூஃபி என்னும் சொல் இல்லை என்றாலும், தன் சமூகத்தில் தியானத் தன்மை கொண்ட சிறுபான்மையினரிடம் நபி வழங்கிச் சென்ற ஆன்மிகப் பாதையைப் பின்பற்றுகின்ற நபரைக் குறிப்பதற்கு அச்சொல் பின்னர் தோன்றவே செய்தது. அப்போதிருந்து, கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, அதன் ஆழிய கொள்கைகள் மற்றும் ஆன்மிகானுபவப் பயிற்சிகளாலோ அல்லது அதன் மாபெரும் மேதைகளின் புனிதத்தன்மையாலோ மட்டுமன்றி இஸ்லாமியச் சமயத்தில் அது அவ்வக்காலங்களில் செய்து வந்துள்ள ஆன்மிக மீட்டுருவாக்கங்களினாலும் சூஃபிஸம் என்பது இஸ்லாமியச் சமயத்தினுள் இறையுணர்வின் அடையாளமாக இருந்து வருகிறது.

Image result for nooriya sufi

சூஃபிஸம் என்பது பொதுவாக ‘இஸ்லாமிய ஆன்மிகம்’ என்று வழங்கப்படுகிறது. ‘ஆன்மிகம்’ என்பது சரியான கோணத்தில் புரிந்துகொள்ளப்பட்டால் இது பொருத்தமான விளக்கப் பெயரே ஆகும். அதாவது ஆன்மிகம் என்பது கொண்டு மறை வெளிப்பாட்டிலிருந்து பெறப்பட்ட ஆன்மிக போதனைகள் மற்றும் பயிற்சிகளை நாம் குறிக்கிறோம் எனில் சூஃபிஸம் என்பது இஸ்லாமிய ஆன்மிகம்தான். மாறாக, ஆன்மிகம் என்பது கொண்டு நாம் ஏதோ மர்மமான பூடகமான தெளிவற்ற, இன்னும் சொல்வதெனில், இயல்பல்லாத ஒன்றைக் குறிக்கிறோம் எனில் சூஃபிஸம் என்பது ஒருபோதும் ஆன்மிகம் அன்று. ஏனெனில் அது மிகவும் அறிவார்ந்த, மிகவும் ஸ்படிகத் தெளிவான மற்றும் இஸ்லாமியச் சமயத்தின் மிகவும் இயல்பானதொரு பரிமாணம் ஆகும்.
உண்மையில், சூஃபிஸம் என்பது எப்போதும் தன்னை இஸ்லாத்தின் இதயம் என்றே கருதி வந்துள்ளது. அது கொண்டுள்ள மையத்தன்மையை அச்சமயத்தின் வேறு எந்த அம்சமும் கோரவியலாது. ஏனெனில், அது மட்டுமே இஸ்லாமிய வெளிப்பாட்டின் பிரபஞ்சத் தன்மையைத் திறக்கின்றது. ஒப்பிட்டு நோக்கும்போது, மறைவெளிப்பாட்டின் இதர பொருள் விளக்கங்கள் (Interpretations) எல்லாம் மிகவும் வறுமைப்பட்டனவாக (போதாதவையாக), ஏதோ அவையெல்லாம் ஓர் உன்னதமான வைரத்தின் சில முகப்புகளை மட்டுமே பார்ப்பவை போன்றும், ஆனால் சூஃபிஸம் என்பது அதன் அனைத்து முகப்புகளையும் ஒரே நேரத்தில் காண்கிறது என்பது போன்றும் தெரிகின்றன.

எந்த இறைவெளிப்பாடும் பொதுவான ஒற்றை கிரகிப்பு நிலையை நோக்கி மட்டுமே அருளப்படுவதில்லை என்பதால் புரிதலுக்கும் பதில்வினைக்குமான பல தளங்களும் இருக்க வேண்டும் என்பது போதரும். இஸ்லாத்தின் உள்ளேயே, தியானத்திற்கான அந்தரங்க நிலை மற்றும் செயலுக்கான வெளிரங்க நிலை என்று இரண்டு பரிமாணங்களைப் பற்றிப் பேசப்படுவது மரபு. இப்பிரிவுக்கான முன்மாதிரி இறைவனின் திருநாமங்களில் பெறப்படும்: அல்-பாத்தின் (அந்தரங்கமானவன்) என்றும் அல்-ழாஹிர் (வெளிப்பட்டவன்) என்றும் அல்லாஹ் அழைக்கப்படுகிறான். இவ்விரு திருநாமங்களின் எதார்த்தங்களில் இருந்து இஸ்லாத்தின் அந்தரங்க மற்றும் வெளிரங்க அம்சங்கள் உருவாகின்றன. இறைச்செய்தியின் வெளிரங்க அம்சம் செயல்களில் (அஃமால் / அமல்கள்) ஈடுபட்டுள்ள பெரும்பான்மை விசுவாசிகளை நோக்கிச் சொல்லப்படுகிறது; அதன் அந்தரங்க அம்சம் செயல்களுடன் தியானத்தையும் வாழ்வில் கடைப்பிடிக்கும் சிறுபான்மை விசுவசிகளை நோக்கிச் சொல்லப்படுகிறது.

இஸ்லாமிய இறைவெளிப்பாடு முழுவதும் தியான வாழ்வை மேற்கொள்ளும் அந்தரங்கமான சிறுபான்மையினரை நோக்கி மட்டுமே சொல்லப்பட்டிருக்கும் எனில் பெரும்பான்மை இறைவிசுவாசிகள் தமது ஈடேற்றித்திற்காக உழைப்பதை விட்டும் முடங்கிப் போயிருப்பர். ஏனெனில், அவர்கள் தியானத்திற்காகவோ அல்லது இம்மை வாழ்விலேயே இறைவனுடன் இணைவதற்காகவோ படைக்கப்பட்டவர்கள் அல்லர். இதற்கு நேரெதிர், இஸ்லாமிய இறைவெளிப்பாடு என்பது செயல்களுக்கான வாழ்வைப் பின்பற்றும் பெரும்பான்மையினரை நோக்கி மட்டுமே சொல்லப்பட்டிருக்கும் எனில் ஆழ்நிலை தியானம் வழியாக இறைவனை அடையும் ஆன்மிக இணைவை விழையும் சிறுபான்மை விசுவாசிகள் தமக்கு அருளப்பட்டிருக்கும் கொடைகளான நுண்ணறிவையும் (அக்லு) தூய நாட்டத்தையும் (இராதத்) பயன்படுத்த முடியாமல் வீணாகப் போயிருக்கும். ஆனால், இறைவன் அருளாளருக்கெல்லாம் அருளாளன் என்றே குர்ஆன் சொல்கிறது. அதனால், இறைவெளிப்பாட்டில், நற்காரியங்களின் வழி மறுமையில் ஈடேற்றத்தை நாடுகின்ற பெரும்பான்மையினருக்கும் வழிகாட்டல் உள்ளது, நற்காரியங்களுடன் மேலான சத்தியமான அல்லாஹ் மீதான அன்பாலும் ஞானத்தாலும் இம்மை மறுமை இரண்டிலும் ஈடேற்றத்தை நாடுகின்றவர்களுக்கும் வழிகாட்டல் உள்ளது.

குர்ஆனும் நபியின் சுன்னத் (வழிமுறை)யுமே இஸ்லாத்தின் இருபெரும் அடிப்படைகள். அவை ஒன்றை ஒன்று உறுதிப்படுத்துகின்றன: குர்ஆன் என்பது முழு உண்மையைச் சுட்டி நிற்கின்ற நிலையான கொள்கையைப் போன்றது; சுன்னத் என்பது அந்த உண்மைக்கு மனித குலம் மொத்தமும் வழங்கும் பதில்வினையை நடைமுறைப்படுத்துகின்ற அனுபவ இயங்கியல் கூறாக இருக்கிறது.

அத்தனை நூற்றாண்டுகளிலும், ஆதாரபூர்வமான இஸ்லாம் என்பது குர்ஆன் மற்றும் சுன்னத்தைச் சுற்றியே இயங்கிவந்துள்ளது. அதன் புனிதச் சட்டவியலான ஷரீஅத் என்பதும் அதன் ஆன்மிகப் பாதையான தரீக்கத் என்பதும் முதன்மையாக குர்ஆன் மற்றும் சுன்னத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

சூஃபிகளைப் பொருத்தவரை நபியவர்கள் சட்டம் மற்றும் பாதை இரண்டையுமே கொண்டு வந்தார்கள், சட்டத்தை மட்டுமோ அல்லது பாதையை மட்டுமோ அவர்கள் கொண்டுவரவில்லை. ஏனெனில் இஸ்லாமியச் செய்தி அனைத்து ஆர்வங்களையும் தொழில்களையும், பெரிதாயினும் சிறிதாயினும் தழுவி, குறைபாடு என்று கூற வழிவகுக்கும் எந்தவொரு விசயத்தையும் இல்லாமலாக்கி விட்டது.

இறைச்சட்டம் தனது ஏவல்கள் விலக்கள்களுடன் செயல்களின் அம்சத்தைக் குறித்து நிற்கிறது. எனவே, இறப்பிற்குப் பின்னர் கிடைக்கும் ஈடேற்றமான சுவர்க்கத்தை அடைவதற்கு முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டிய செயல்களையும், இறைவனின் தண்டனையிலிருந்து தப்புவதற்கு முஸ்லிம்கள் செய்யாதிருக்க வேண்டிய செயல்களையும் அது வரையறுக்கிறது. தனிமனித நிலையிலும் கூட்டு நிலையிலுமான செயல்களைப் பற்றி அது பேசுவதால் இறைச்சட்டம் (ஷரீஅத்) என்பது இஸ்லாத்தின் வெளிரங்கத்தைக் குறிக்கிறது. தரீக்கத் என்னும் பாதை, தன் பங்கில், தியானத்தைக் குறித்து நிற்கிறது. இஸ்லாத்தின் அந்தரங்கத்தைக் குறிக்கும் அது அவ்வப்போது வட்டத்தின் சுற்றளவான ஷரீஅத்தை அவ்வட்டத்தின் மையப்புள்ளியான அல்லாஹ்வுடன் இணைக்கின்ற ஆரமாகக் காட்டப்படுகிறது.

சூஃபிப் பாதையைப் பின்பற்றுவோர் உட்பட அனைத்து முஸ்லிம்களும் ஷரீஅத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது நியதியாக உள்ள நிலையில் அதன் நேரெதிர் நிலை நியதியாக இல்லை, விசுவாசிகளில் பெரும்பாலோர் ஆன்மிக அனுபவத்தில் ஆர்வமுள்ளோர் அல்லர் என்பதால் அப்படி இருக்கவும் இயலாது. இது இஸ்லாத்தின் நிலை மட்டுமன்று, ஆன்மிகச் சிறுபான்மையினர் வெறும் சிறுபான்மையினராகவே இருக்கின்ற நிலையை எல்லா மதங்களிலும் காண்கிறோம். இஸ்லாமிய இறைச்செய்தி, மற்ற வெளிப்பாடுகளைப் போன்றே, ஆன்மிக வாழ்வின் மீது பெரும்பான்மையர் காட்டும் அலட்சியத்தை அனுமதித்துக்கொண்டு அவர்களின் ஈடேற்றத்திற்கான வழிமுறையாக நற்செயல்களை அவர்களுக்கு வழங்கியிருக்கும் நிலையில் அப்பெரும்பான்மையினரை அவர்கள் ஆன்மிகத்தின் மீது அலட்சியம் காட்டுகிறார்கள் என்று எதிர்ப்பது வீணான வேலையாகும். இது எப்படி உள்ளதெனில், அனைத்து மனிதர்களும் இறைவனை தியானிக்க விரும்பார்கள், எனினும் அவர்கள் இருப்பதற்கு வெறுமனே செயல்படவாவது வேண்டும் என்று கண்ட பரம்பொருள் தீச்செயல்களால் உண்டாகும் துன்பத் தளையிலிருந்து அவர்களை விடுதலை செய்ய அவர்களுக்கு நற்செயல்களின் வழியைக் காட்டியுள்ளது. தனி மனிதனின் மீது அல்லது பொதுவாக மக்களின் மீது, எப்படிச் சுமத்தப்பட்டுள்ளதாக நாம் கண்டாலும், ஷரீஅத் என்னும் இறைச்சட்டம் இக்காரணம் பற்றியே இஸ்லாத்தில் இருக்கிறது. வேறு விதத்தில் சொல்வதெனில், ஷரீஅத் என்னும் இறைச்சட்டம், மறுமையிலான ஈடேற்றத்தைத் தனது மேலான இலட்சியமாக வைத்துக்கொண்டு தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமான உலகாயதச் சமநிலையை நிறுவுகிறது. ஏனெனில் மறுமையில் வரப்போகும் வாழ்வை மறந்த நிலையிலும் தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமான சமநிலை இருக்கவியலும் என்பதால் அந்தச் சமநிலை என்பது தன்னளவிலேயே ஓர் இலட்சியம் அல்ல.

சூஃபிகளுக்கு இறைச்சட்டம் மற்றும் ஆன்மிகப் பாதை இரண்டுக்குமே இறைத்தூதர்தான் வழிகாட்டி ஆவார். சட்டம் பாதை இரண்டிற்கும் குர்ஆனும் சுன்னத்தும்தான் அடிப்படைகள் என்பது உண்மைதான் என்றபோதும் குர்ஆனிலும் சுன்னத்திலும் அவை சமப்பங்கீடாக இடம்பெறவில்லை என்பதும் உண்மைதான். முரண்பாட்டு அச்சமின்றிச் சொல்லலாம், இஸ்லாமியச் சமூகத்தின் ஸ்தூலபாகவும் ஆன்மிக நெறியின் பக்கம் ஈர்ப்பற்றவர்களாகவும் இருக்கின்ற பெரும்பான்மை முஸ்லிம்களின் வாழ்வை நிர்வகிக்கும் ஷரீஅத் சட்டத்தின் பக்கமே குர்ஆனும் சுன்னத்தும் வலு சேர்க்கின்றன. இன்னொரு வகையில் சொல்வதெனில், தனது சமூகத்திற்கு இறைத்தூதர் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டுமெனில் மெலிதான சமயவுணர்வு கொண்டிருக்கும் முஸ்லிமும்கூட பின்பற்றத் தக்கவராக அவர்கள் இருந்தாக வேண்டும். அதானால்தான், இஸ்லாமிய ஷரீஅத், தனது பிரபலமான ஐந்து தூண்களுடன், அனைத்து முஸ்லிம்களையும் நோக்கிப் பேசியபடி, அத்தூண்களுடன் மேற்கொண்டு தேவைப்படும் அம்சங்களைத் தமது அறிவுக்குப் பொருத்தமாக அல்லது நம்பிக்கை மற்றும் பக்தியுணர்வுக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளும் பணியை ஆன்மிக நாட்டமுள்ள முஸ்லிம்களிடம் விட்டுவிடுகிறது.

Related image

எண்ணிக்கையானது பெரும்பான்மை முஸ்லிம்களின் பக்கமே சாய்வதாகத் தெரியினும், இறைத்தூதர் என்பவர் ஷரீஅத் என்னும் புனிதச் சட்டத்தை வடிவமைப்பவர் என்பதாக மட்டும் அவரது பணியைக் குறுக்கிவிடக் கூடாது. ஏனெனில், முன்பே சொல்லப்பட்டது போல், பிற்காலத்தில் சூஃபித்துவம் என்று பெயர் பெற்ற தரீக்கத் என்னும் பாதைக்கான ஆன்மிகக் கூறுகள் குர்ஆன் மற்றும் சுன்னத்தில் இருக்கின்றன. குர்ஆனின் அன்மிகத் திருவசனங்கள், நபிமொழிகளில் “புனிதமொழிகள்” (ஹதீசே குத்ஸி) என்று அழைக்கப்படுபவை (அல்லாஹ் கூறுவதாக நபி அறிவித்த ஹதீஸ்கள்), நபியின் வாழ்வில் காணலாகும் ஆன்மிக அம்சங்கள் ஆகியனவெல்லாம் நபியை ஓர் ஆன்மிக நெறியின் ஸ்தாபகராகவே காட்டுகின்றன. தலைமுறை தலைமுறையாக ”பரக்கத்துல் முஹம்மதிய்யா” என்னும் முஹம்மதிய அருளை தொடர்ந்து வழங்கிவருவதாகச் சொல்லப்படும் அனைத்து சூஃபிப் பள்ளிகளின் தீட்சைத் தொடர்களும் (சில்சிலா / ஷிஜ்ரா) நபி(ஸல்) அவர்களிடமே சென்று சேர்கின்றன என்பதை இங்கே நினைவுகூர வேண்டும். சூஃபித்துவத்தில் நபி பெற்றுள்ள முக்கியமான நிலையை இது காட்டுகிறது.


இஸ்லாத்தின் முதல் தலைமுறையில் ஷரீஅத்தும் தரீக்கத்தும் பிற்காலத்தில் ஆனது போல் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்கப்படவில்லை என்பது வெளிப்படை. அப்போதிருந்த இறைச்செய்தியின் தொகுப்பு நோக்கு அந்தரங்கப் பாதைக்கும் வெளிரங்கச் சட்டத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை மறைத்துவிட்டிருந்தது. ஹிஜ்ரத்தின் பின் இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டுகளில்தான், மறைவெளிப்பாட்டின் ஆரம்பப் பிரகாசம் சற்று மங்கத் தொடங்கிய நிலையில், சமய அறிஞர்கள் (உலமாஃ) இறைச்செய்தியின் மீதான தமது பார்வைகளை வரையறுக்கத் தொடங்குவதைக் காண்கிறோம். அதே காலகட்டத்தில்தான் ஆன்மகப் பாதையின் அறிஞர்கள் (ஷைஃகு) சஃபி என்னும் பெயருடன் வெளிப்படுகிறார்கள் (சஃபி எனில் கம்பளி  (சுஃப்) உடுத்தியவர். அந்தப் பாதையின் மேதைகளுக்கான அடையாளமாக் அப்போது அது இருந்தது). சஃபி என்னும் பெயருடனும் இதர அடைமொழிகளுடனும் ஆன்மிகப் பாதையின் குருமார்கள் வெளிவந்த போது, மறைவெளிப்பாட்டின் மீதான தமது பார்வைக்கு மாற்றமான நிலையில் குறுகிய மற்றும் துண்டமான நோக்கு கொண்டிருந்த ஆரம்பக் கால சுன்னியிச மற்றும் ஷியாயிசப் பிரிவுகளை விட்டும் தம்மை வேறுபடுத்திக் கொண்ட நிலையிலேயே வெளிவந்தார்கள். இஸ்லாத்தின் புறப்ப்பகுதியான ஷரீஅத்தைக் காக்கின்ற மார்க்க அறிஞர்களுடன் இஸ்லாத்தின் அந்தரங்கப் பகுதியான ஆன்மிகத்தைப் பாதுகாக்கும் சூஃபி ஷைஃகுகளைக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். சமயத்தின் இந்த ஆரம்ப சுழற்சிக் காலத்தில் ஆன்மிக அந்தரங்கத்தைக் உயிருடன் வைத்திருந்ததன் மூலம் அவ்வாறு சூஃபிகள் இஸ்லாத்தின் முழுமையான செய்தியைப் பாதுகாத்தார்கள். அதே சமயம், சூஃபிசத்தையும் ஆன்மிகப் பாதையையும் ஒன்றாக அடையாளப்படுத்திய சூஃபி குருமார்கள் தம்மை முஸ்லிம் சமூகத்தின் உண்மையான ஆன்மிக அதிகார வட்டமாகத் தெளிவாக நிறுவினர். தம்மை சூஃபிகள் என்று அழைத்துக்கொண்டதன் மூலம் இஸ்லாத்தினுள் அற்றை நாளில் இயங்கியிருந்த பல்வேறு துறவற மற்றும் பக்திவழிக் கூட்டங்களை விட்டும் அவர்கள் தம்மை வேறுபடுத்திக் காட்டினார்கள். சூஃபிகள் அல்லாத அந்தக் கூட்டங்களில் ஒன்றுதான் அலீ மற்றும் ஃபாத்திமாவின் வழி வந்த நபி வாரிசுகளாகத் தம்மை முதன்மைப்படுத்தியபடித் தமக்குத் தனி அடையாளங்கள் ஏற்படுத்திக்கொண்டு இஸ்லாத்தின் பெருந்திரளான சுன்னிய்யாக்களை விட்டும் தம்மைப் பிரித்துக் கொண்ட நிலையில் இப்போதும் இருக்கின்ற ஷியா இமாம்கள் அணி.

to be continued...

No comments:

Post a Comment