Friday, April 28, 2017

செடியன்

Image result for dicotyledon seedling

நெகிழிக் குழாய் கொண்டு
தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச ஆயத்தமாகையில்
கண்டேன் அதை

மதிலினும் உயரமாய் வளர்ந்துவிட்ட
சாமரப் புல்லின் நிழலடியில்
நின்றிருந்தது அது

ஒளிவிட்டுக் குழைத்த வண்ணத்தால்
இழுக்கப்பட்ட சிறு கோடு போல்
சுட்டுவிரல் உயரச் சிறு பசுஞ்செடி

சிசுவின் சருமம் போலும்
பொடித் தளிர்களிரண்டு
அதன் உச்சியில்

இசை கேட்கும் செடி போலும்
செவிப்பொறிகள் மாட்டியது போல்
பிளந்த விதைப் பாதிகள் வைத்திருந்தது

இறைவா!
விதைகளைப் பிளக்கும் நின்
கைவண்ணம் தரிசித்திருந்தேன் அதில்

மலரின் ஸ்பரிசத்தினும்
நீரின் சாயலினும்
குழந்தையின் மூச்சினும்
மெல்லிய ஞானத்தால்
அப்படிப் பிளந்திருக்கிறாய் நீ

எல்லாம் வல்ல ஏகன் என்றும்
சர்வ வல்லமை கொண்டோனென்றும்
நினைத் துதிக்கும் மானுடம் எனினும்
அச்செடியை முன்னோக்கிய தருணத்தில்
எல்லாம் மெல்ல இறைவா!
சர்வ மெல்லோனே!
என்றுனைத் துதித்தேன்

”அல்லாஹ் மெல்லோன்
மென்மையை நேசிப்போன்”
என்றார் நபியும்


No comments:

Post a Comment