Friday, June 18, 2021

ரொட்டியும் நகைகளும்

 


            முற்காலத்தில் அரசன் ஒருவன் ஒருமுறை தன் செல்வத்தின் ஒரு பகுதியை பயன் கருதாத தர்மமாகக் கொடுத்துவிடுவது என்று முடிவு செய்தான். அதே சமயம், தான் வழங்கும் தர்மம் என்னவாகிறது என்று பார்க்கவும் விரும்பினான். எனவே, நம்பகமான ரொட்டிக்காரன் ஒருவனை அழைத்து இரண்டு பெரிய மென் ரொட்டிகள் சுடும்படி அவனிடம் சொன்னான். ஒரு ரொட்டிக்குள் இன்னின்ன நகைகள் பொதிந்து வைக்கப்பட வேண்டும் என்றும், மற்றொன்று வெறுமனே மாவும் நீரும் கொண்டு செய்யப்பட வேண்டும் என்றும் திட்டம்.

            தான் கண்டுபிடிக்க முடிந்த மிகவும் பயபக்தி உள்ள ஒருவனிடமும், பயபக்தி அறவே இல்லாத ஒருவனிடமும் அவற்றை அந்த ரொட்டிக்காரன் கொடுத்துவிட வேண்டும்.

            அடுத்த நாள் ரொட்டிக்கடைக்கு இரண்டு பேர் வந்து சேர்ந்தனர். ஒருவன் தர்வேஷ் உடை அணிந்திருந்தான். பார்க்க மிகவும் பயபக்தி உள்ளவனாகத் தோன்றினான். ஆனால், உண்மையில் அவர் வெறும் ஏமாற்றுக்காரனே. மற்றொருவன் எதுவும் பேசாமல் மௌனமாக நின்றான். அவன் மூஞ்சியைப் பார்த்தாலே ரொட்டிக்காரனுக்குப் பத்திக்கொண்டு வந்தது. ஏன் என்று காரணம் தெரியவில்லை. அவன் முகம் மிகவும் கெட்டவன் யாரையோ ஞாபகப் படுத்துவதாக ரொட்டிக்காரன் நினைத்தான். எனவே இவனையும் அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

            அதனால், ரொட்டிக்காரன் ஒரு முடிவுக்கு வந்தான். நகைகள் பொதிந்த ரொட்டியை அவன் அந்த போலி தர்வேஷுக்குக் கொடுத்தான். வெற்று ரொட்டியை மற்றவனிடம் தந்தான்.

            போலி தர்வேஷ் தன் கையில் ரொட்டியை வாங்கியவுடன் அது மிகவும் கனமாக இருப்பதை உணர்ந்தான். அதை அமுக்கிப் பார்த்து உள்ளே இருக்கும் நகைகளை உணர்ந்தான். ஆனால், அதெல்லாம் சரியாகப் பிசையப்படாத மாவுக் கட்டிகள் என்று நினைத்தான். மீண்டும் அவன் ரொட்டியைத் தன் கையில் வைத்து எடையை நிதானித்தான். பொதுவாக ரொட்டி அவ்வளவு கனம் இருக்காது. ஆனால் இது ரொம்பவும் கனமாக இருப்பதாக அவனுக்குப் பட்டது. ரொட்டியைத் திருப்பிக் கொடுத்துவிடலாமா என்று எண்ணியபடி அவன் கடைக்காரனைப் பார்த்தான். கடைக்காரன் சற்று முசுடனாகத் தெரிந்தான். அவனிடம் ஏச்சு வாங்க வேண்டாம் என்று எண்ணிய போலி தர்வேஷ் தனக்கு அருகில் நிற்கும் இரண்டாமவனிடம் சொன்னான்: “நண்பரே! நாம் ஏன் நமது ரொட்டிகளை மாற்றிக் கொள்ளக்கூடாது? உங்களைப் பார்த்தால் மிகவும் பசித்தவராகத் தெரிகிறது. எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள ரொட்டியோ பெரிதாகவும் கனமாகவும் இருக்கிறது.”

            இறைவன் தன் கையில் எதைக் கொடுக்கிறானோ அதை மனமுவந்து ஏற்றுக் கொள்வது என்னும் முடிவில் இருந்த அந்த இரண்டாம் ஆள் உடனே ஒப்புக்கொண்டான். ரொட்டிகள் கை மாறின.

            அடுமனையின் உள்ளிருந்து கதவு விரிசலின் வழியாக இதைப் பார்த்துக் கொண்டிருந்த அரசன் மிகவும் ஆச்சரியப்பட்டான். ஆனால் இப்போது இந்த இரண்டு பேரின் நன்மை தீமை கணக்குகள் என்ன என்பதை அவனால் சொல்ல முடியவில்லை.

            போலி தர்வேஷ் சாதாரண ரொட்டியை அடைந்தான். ஆனால் அவனை உண்மையான தர்வேஷ் என்று எண்ணிய அரசன் வேறு விதமாகச் சிந்தித்தான். அதாவது, துறிவியான தர்வேஷை செல்வத்தை விட்டும் பாதுகாப்பதற்காக விதியே குறுக்கிட்டு அவருக்குச் சாதகமாக வேலை செய்திருக்கிறது என்று அவன் நினைத்தான். உண்மையில் நல்லவனான இரண்டாமவன் வீட்டிற்குப் போய் ரொட்டிக்குள் நகைகள் இருப்பதைக் கண்டான். அதைக் கொண்டு அவன் தன் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொண்டான். இந்த நிகழ்வை அரசனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

            ”செய்யச் சொன்னதை நான் செய்துவிட்டேன்” என்றான் ரொட்டிக்காரன்.

            ”விதியை நீங்கள் ஒருபோதும் மாற்ற முடியாது,” என்றான் அரசன்.

            ”நான் எவ்வளவு பெரிய புத்திசாலி!” என்று கூறிக்கொண்டான் போலி தர்வேஷ்.

db


    

  1089-இல் மறைந்த சூஃபி குரு காஜா அப்துல்லாஹ் அன்ஸார் அவர்களின் தர்காவில் (காஸர்காஹ், மேற்கு ஆஃப்கானிஸ்தான்) இக்கதை வாசிக்கப்பட்டது. ஒரு மனிதனின் எதிர்காலத்திற்குப் பெரு மதிப்புக் கொண்ட ஒரு பொருளை முன் கூட்டியே அவனிடம் தந்தால் அதன் மதிப்பை அவன் விளங்கிக் கொள்வான் என்று கூறமுடியாது என்பதே இக்கதையின் முதல் நிலை அர்த்தம்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கதையும் கதையின் கருத்துக்களும் மிக அருமை...

    ReplyDelete