Friday, June 23, 2017

மூன்று கவிதைகள்

Image result for ant on pomegranate flower
யாத்திரை

மேலும் கீழுமாய்
அசையும் மாதுளங் கொப்பின்
பவழப் பூவில்
முன்னும் பின்னுமாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
கட்டெறும்பு

அவ்விரு திசைப்பரிமாணங்களின்
யாத்திரையில்
எங்கே போகிறதோ?

இத்தனை வலஞ்சுற்றியும்
ஒருபோதும் பூவின் சந்நிதிக்குள்

அது நுழையாதிருப்பதும் ஏன்?


Related image
நகர்ந்து போயின மேகங்கள்

திரவ வைரங்கள் என
மழைத்துளிகள் விழுதல் கண்டு
தோட்டத்தில் ஓடி நின்றேன்

கவிழந்த பெருங்கடலாய்
வானைப் பார்க்கும்
பால்ய காலத்துக் கற்பனையைக்
கிளர்த்திக்கொண்டு
உச்சி நோக்கி நின்றேன்
கருந்திரள் மேகங்களினடியில்
பசுஞ்சிறு செடியைப் போல

நறும்புனல் நயந்த
விழிகளை விரிய வைத்து
முகிலுதிர்க்கும் தண் துளிகள்
முகத்தில் வந்து மோதுமின்பம்
அருளின் அருஞ்சுவை

அடடாவும் ஆகாவும்
அவ்வப்போது...
மழைக்கோர் இசை உண்டல்லவா?

தோளில் மோதின ஓரிரு துளிகள்
எதிர்பாரா முத்தம் போல்
சட்டென்று உதட்டில்
வீழ்ந்து வழிந்தது ஒன்று

சுவைக்கத் தூண்டும் ஆசை அறுத்து
நோன்பு காத்தேன்

மழையின் இளைத்த பிரதியாய்
மண்குடுவை நீருண்டு
உணவு மேசையின் மீதில்

எனினும்
மண் தீண்டா மழைத்துளியின்
மின்சுவைக் குளிர்மை
வேறு பொருள் எது தரும்
இவ்வையத்தில்?

மிக இயல்பாய்
எப்போதும் போலாய்
நிகழ்ந்திருக்கும்
பெருங்காட்சி அல்லவா இது?

ரசிகனுக்கும் என்றிலாத
தூய கலைஞனைப் போல்
தியானத்தில் இருப்பதல்லவா இயற்கை?

தீவில் ஒதுங்கிய ஒருவன்
காணக் காண
நகர்ந்து போகுமொரு கப்பலைப் போல
போயிற்றே மேகத்திரள்


Related image 
அழைப்பொலி

அழைப்பொலி கேட்கவும்
துயில் களைந்தெழுந்தேன்

கிறக்கம் நீங்கா நிலையில்
காற்றோடு போகும் இலைபோல் நடந்து
வெளியே பார்க்க
யாருமில்லை

அவதானித்ததில்
நிஜமாகவே ஒரு பறவையின் ஒலிதான்

விதவிதமான பறவை ஒலிகளினிடையே
ஒரு ரிதமான ஒலிப்பாய் இருந்தது அது
என் வீட்டின் அழைப்புமணி ஓசையைப் போன்றே

இன்னமும் மூடப்படாத துயிலின் கதவு வழி
மிக இயல்பாய் நுழையும் ட்வீட்டொலிகளை
அனுபவித்தபடி அமர்ந்திருந்தேன்

அவனொருவனின் அழைப்புதான்
இந்தப் புள்ளினங்களின் ஆர்ப்பொலிகள் எல்லாம்
என்னும் உணர்வில்
சிறகு விரித்தபடி பறந்திருந்தேன்



No comments:

Post a Comment