Saturday, October 12, 2013

நாடோடி நினைவுகள் - part 5

(stray reflections of Allama Iqbal continued)

91
மக்களாட்சியும் பேரரசுவாதமும்
மேற்கத்தியர்களுக்கு மக்களாட்சி சலித்துவிட்டது என்பதையே ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் பேரரசுவாதக் கனவுகள் காட்டுகின்றன. இங்கிலாந்து மற்றும் ஃபிரான்சில் மக்களாட்சி மீதான எதிர்வினை நிகழ்ந்துள்ளது மிகவும் முக்கியமானதாகும். ஆனால், இந்நிகழ்வின் முழுமையான புரிதலை அடைய வேண்டும் எனில் அரசியல் மாணவன் இந்நிகழ்வினைக் கொண்டு வந்த வரலாற்றுக் காரணிகளை மட்டுமே ஆராய்ந்து அறிவதோடு தன்னை நிறுத்திக் கொள்ளக்கூடாது; அவன் மேலும் ஆழமாகச் சென்று இந்த எதிர்வினைக்கான உளவியல் காரணங்கள் யாவை என்பதைத் தேட வேண்டும்.

92
அற வாசகர்கள்
நம் முன்னோர்கள் ஆளுமைகளை உருவாக்கினார்கள்; நாமோ அற வாசகர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.



93
குட்டித் தீர்க்கதரிசிகளும் முஸ்லிம் பெண்ணும்
மேற்கத்திய பாணியிலான கல்வியின் சில சொட்டுக்களைப் புகட்டிவிட்டால் போதும், இறந்து கிடக்கும் முஸ்லிம் பெண்ணுக்கு அது உயிரூட்டி அவள் தனது பழைய முக்காட்டினைக் கிழித்தெறிய வைத்துவிடும் என்று சமூக சீர்திருத்தம் செய்யும் நமது குட்டித் தீர்க்கதரிசிகள் நினைக்கிறார்கள். ஆம், இது உண்மைதான். ஆனால், தன்னை நிர்வாணமாகக் கண்டு துணுக்குறும் அவள் இந்தக் குட்டித் தீர்க்கதரிசிகளின் கண்களை விட்டும் தன் உடலை மீண்டும் மறைத்துக் கொள்ள ஓடுவாள்.

94
கவிஞர்களும் அரசியல்வாதிகளும்
தேசங்கள் கவிஞர்களின் இதயங்களில் பிறக்கின்றன; அவை வளர்ந்து அரசியல்வாதிகளின் கைகளில் மரிக்கின்றன.

95
இறைத்தூதர்
இறைத்தூதர் என்பவர் ஒரு நடைமுறைக் கவிஞர் மட்டுமே.

96
தத்துவமும் கவிதையும்
தத்துவம் என்பது மனிதப் பகுத்தறிவு என்னும் இரவின் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் ஊகங்களின் தொகுப்பாகும். கவிஞன் வந்து அவற்றில் லட்சியத்தின் சூடேற்றுகிறான்.

97
பிளாட்டோ மற்றும் கதே
கவிஞனா? தத்துவஞானியா? பிளாட்டோவை என்ன ஆக்குவது என்று இயற்கை முடிவு செய்யாமல் இருந்தது. அதே தடுமாற்றம் கதேயின் விஷயத்திலும் இயற்கையிடம் இருந்துள்ளது.


98
பூமியில் மிகவும் வசீகரமான பொருள்
சுயப் பிரக்ஞை முற்றிலும் இல்லாத, பேரழகுள்ள பெண்தான் கடவுளின் பூமியிலேயே எனக்கு மிகவும் வசீகரமான பொருள்.

99
கொள்கை இல்லாத உடன்பாடு
சகிப்புக் கண்ணோட்டம், மேலும் கொள்கையில் நம்பிக்கை இல்லாதபோதும் உடன்படுதல் ஆகியவையே பாமர மனதிற்கு மிகவும் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகும். உன் கண்ணோட்டம் அத்தகையதென்றால் மௌனமாக இருந்துவிடு, உன் நிலைக்காக வாதாடாதே.

100
ராவி நதிக்கரையில் அந்திப்பொழுது
உன் நூலகத்தில் உள்ள அனைத்து அற்புதமான நூற்களும்கூட ராவி நதிக்கரையின் ஓர் அற்புதமான அந்தி நேரத்திற்கு ஈடாகாது.

101
உண்மையான அரசியல் வாழ்க்கை
உண்மையான அரசியல் வாழ்க்கை ஆரம்பம் ஆவது உரிமைகளைக் கோருவதால் அல்ல, கடமைகளைச் செய்வதால்.



102
உண்மையான திருமணத்தின் அவசியம்
காதலனின் கண்களால் மட்டுமே இயற்கையின் அழகுகளை உணர முடியும். எனவே, உண்மையான திருமணம் அவசியம்.

103
கடவுளும் சாத்தானும்
கடவுள் மற்றும் சாத்தான் ஆகிய இருவரும் மனிதனுக்கு வாய்ப்புக்களை மட்டுமே வழங்கி, சரி என்று அவனுக்குப் படும் வகையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு விட்டுவிடுகிறார்கள்.

104
சாத்தானை நினை
”சாத்தானை நினை, அவன் கட்டாயம் வந்துவிடுவான்”. இதுவே கடவுளின் விஷயத்திலும் உண்மை.

105
நன்றியுரைத்தல்
இறைவா! சிவந்த அதிகாலைகளும், தழலும் அந்திகளும், இயற்கையின் கடந்து போன இரவுகளின் மெருகு நிரந்தரமான உறக்கத்தில் ஓய்வெடுக்கின்ற அடர்ந்த காடுகளும் உள்ளதான் இவ்வுலகில் என்னைப் பிறக்கவைத்ததற்காக உனக்கு என் நன்றிகள்!

106
உளவியலாளனும் கவிஞனும்
உளவியலாளன் நீந்துகிறான்; கவிஞன் பாய்கிறான்.

107
நற்சான்றிதழ்கள் சேர்க்கும் மனப்பான்மை
இந்தியக் குடும்பங்களின் சில வகையறாக்களில் – அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் ஜந்துக்கள் – பல்வேறு அதிகாரிகளிடமிருந்து நற்சான்றிதழ்களைப் பெறுவதும் அவற்றை அச்சாக்குவதும் ஒருவகை உள்ளுணர்வாகவே மாறிவிட்டது. அது சில நேரங்களில் அவர்களின் சந்ததிகளிலும் தெளிவாக வெளிப்படுகிறது. ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் உருவான அற-ஈனம் என்றே இதனை நான் பார்க்கிறேன்.

108
மனித மனத்தின் கூறியல்
மனித மனக்கூறியல் பற்றி நீங்கள் கற்க விரும்பினால் வுண்ட், வார்ட், ஜேம்ஸ் அல்லது ஸ்டவ்ட் ஆகியோரிடம் நீங்கள் செல்லலாம். ஆனால் மனித இயல்பு பற்றிய உண்மையான அகப்பார்வையை நீங்கள் கதேயிடம் மட்டுமே பெறமுடியும்.



109
மனிதனும் முடிவிலியும்
நீரோடையின் கரையில் வளரும் செடி ஒன்று மறைவிலிருந்து அதனைப் பாலிக்கும் இனிய வெள்ளி இசையைக் கேட்க முடியாதது போல முடிவிலியின் விளிம்பில் வளரும் மனிதன் அவனது ஆன்மாவின் வாழ்வையும் ஒத்திசைவையும் உருவாக்குகின்ற தெய்வீக அடிநாதத்தைக் கேட்பதில்லை.

110
கவிஞன் என்னும் மனிதன்
வா அருமை தோழனே! நீ என்னை ஒரு நுண்ணிய சிந்தனையாளனாகவும் உயர்ந்த லட்சியங்களைக் கனவு காண்பவனாகவும் மட்டுமே அறிந்திருக்கிறாய். என்னை என் வீட்டில் பார், குழந்தைகளுடன் விளையாடுபவனாக, அவர்களுக்கு அடிக்கடி மரக்குதிரை போல் முதுகில் சவாரி தருபவனாக! ஆஹ்! குடும்பத்தினருடன் நான் இருக்கும்போது, தலை நரைத்த எனது தாயின் காலடியில் நான் அமர்ந்திருக்கும் போது, அவர்களின் கைகள் என் தலையை வருடுகையில் என் உயிர் புதிதாகிக் காலம் பின்னோக்கி ஓடி எனக்கு என் பால்ய பருவத்தை மீட்டுத்தருகிறது, இத்தனை கீட்ஸுகளும் ஹெகல்களும் என் மண்டைக்குள் இருக்கும்போதும்! இங்கே, நீ என்னை ஒரு மனிதனாகக் காண்பாய்!

111
தத்துவம் மற்றும் கவிதையின் விளைவு
தத்துவம் முதுமையாக்குகிறது; கவிதை இளமையாக்குகிறது.



112
ஷேக்ஸ்பியரும் கதேவும்
ஷேக்ஸ்பியர் மற்றும் கதே ஆகிய இருவரும் இறைவனின் படைப்புச் சிந்தனையை மீண்டும் சிந்திக்கிறார்கள். எனினும், அவர்களுக்கிடையில் முக்கியமான வேறுபாடு ஒன்று உள்ளது. எதார்த்தவாதியான ஆங்கிலேயன் தனிநபரை மீள்சிந்தனை செய்கிறான், லட்சியவாதியான ஜெர்மானியன் பிரபஞ்சத்துவத்தை. அவனுடைய ‘ஃபவ்ஸ்ட்’ பார்வைக்கு தனிமனிதனாக இருக்கிறான். உண்மையில் அவனில் மனிதகுலமே தனிமனிதனாக்கப் பட்டுள்ளது.

113
கணத்தின் மதிப்பு
நான் எனது நாட்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகளை அவை கொண்டு வரும் அனுபவங்களை வைத்தே மதிப்பிடுகிறேன். சில நேரங்களில் என்னை வியப்படைய வைப்பது என்னவெனில் ஒரு கணம் ஒரு வருடத்தை விடவும் மதிப்புடையதாக அமைந்துவிடுகிறது என்பதுதான்!

114
அனுபவமும் அறிவும்
ஒவ்வொரு அனுபவமும் மனிதனின் ஆன்மாவில் எதையாவது தூண்டவே செய்கிறது. பாவத்தின் அனுபவமும் கூட உன் ஆன்மா பற்றி இதற்குமுன் நீ அறியாத ஓர் அம்சத்தை உனக்கு உணர்த்தவே செய்யும். எனவே அனுபவம் என்பது இரண்டு வழிகளில் அறிவின் ஊற்றாக உள்ளது. அது உனக்கு வெளியே உள்ளவை பற்றிய அகப்பார்வையையும் உனக்கு உள்ளே உள்ளவை பற்றிய அகப்பார்வையையும் உனக்கு வழங்குகிறது.

115
பொதுத் தகவல்கள்
தகவல்களைப் போல் பொதுவானவை வேறெதுவும் இல்லை. எனினும், பேகன் வந்து அவர்களின் கண்களைத் திறக்கும் வரை மக்கள் அவற்றைப் பற்றிக் குருடர்களாகவே இருந்தனர்.

116
ஹொரேஸ், மாண்டய்ன் மற்றும் ஆசாத்
”கானக மரங்கள் அசைக்கப்படுகையில்
நாமும் அசைக்கப்படுகிறோம்
ஒவ்வொருவரின் தசைநார்களால்
அசைகப்படுவதைப் போல்”

ஹொரேஸின் இந்த வரிகள் பற்றி மாண்டய்ன் சொல்கிறார்:
“நாம் செல்வதில்லை, கொண்டு செல்லப்படுகிறோம், மிதக்கும் பொருட்கள் அவ்வப்போது இலகுவாகவும் அவ்வப்போது ஆர்ப்பரிப்புடனும் நீரின் அமைதி அல்லது கொந்தளிப்பிற்கு ஏற்ப அசைவது போல்.”

மாண்டய்னின் இந்த வரிகளைப் படிக்கும்போது என் மனத்தில் ‘ஆசாத்’ எழுதிய வரிகள் நியாபகம் வந்தன. மறைந்த அந்தக் கவிஞர் இந்தச் சிந்தனையை ஹொரேஸ் மற்றும் மாண்டய்ன் ஆகியோரை விடவும் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்:

“கடந்தேகும் வாழ்வின் படகை ஓட்டிச் செல்கிறோம்
இல்லை, வெறுமனே அமர்ந்திருக்கிறோம் அதில், சுய நாட்டமின்றி.”
(ஜஹாரெ உம்ரெ ரவான் பர் சவார் பைட்டே ஹைன்
சவார் கஹே கொ பே இஃதியார் பைட்டே ஹைன்)

117
இலக்கிய விமரிசனம்
இலக்கிய விமரிசனம் என்பது இலக்கியப் படைப்பை எப்போதும் பின்பற்றிச் செல்லும் என்று சொல்ல இயலாது. லெஸ்ஸிங்கை நாம் ஜெர்மன் இலக்கியத்தின் வாசலில் வைத்தே காண்கிறோம்.

118
கதேவும் ஹைனேவும்
ஜெர்மானியர்களைப் போல் கொடுத்து வைத்த தேசத்தினர் வேறில்லை. கதே தன் உச்ச ஸ்தாயியில் பாடிக்கொண்டிருந்த போதே அவர்கள் ஹைனேவைப் பெற்றெடுத்தார்கள். தடங்கலற்ற இரண்டு நீரோடைகள்!

119
ஹாஃபிழ்
பட்டை தீட்டப்பட்ட வைரங்களைப் போன்ற வார்த்தைகளில் வானம்பாடியின் இனிய ஆழ்மன ஆன்மிகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஹாஃபிழ்.

120
காதல் ஒரு விளையாட்டுப் பிள்ளை
காதல் ஒரு விளையாட்டுப் பிள்ளை. அவள் நம் தனித்தன்மையை உருவாக்கிவிட்டுப் பிறகு நம் காதுகளில் கிசுகிசுக்கிறாள் – “அதைத் துறந்துவிடு!”

121
ஞானத்தேடல்
ஞானத்துடன் நான் அடிக்கடி கண்ணாமூச்சி ஆடியிருக்கிறேன். அவள் எப்போதும் தீர்மானம் என்னும் பாறையின் பின்னால் ஒளிந்துகொள்கிறாள்.

122
ஒற்றைச் சிந்தனை மனிதன்
இவ்வுலகின் இரைச்சலில் நீ கேட்கப்பட வேண்டும் என்று விரும்பினால் உன் ஆன்மா ஒற்றைச் சிந்தனைக்கு ஆட்பட்டிருக்கட்டும். ஒற்றைச் சிந்தனை கொண்ட மனிதன்தான் அரசியல் மற்றும் சமூகப் புரட்சிகளை உண்டாக்கிப் பேரரசுகளை நிறுவி உலகிற்குச் சட்டத்தை வழங்குகிறான்.

123
கலை மட்டுமே எல்லையற்றது
அறிவியல், தத்துவம், சமயம் அனைத்திற்கும் எல்லை உண்டு. கலை மட்டுமே எல்லையற்றது.

(குறிப்பு: 1917-ல் ’நியூ எரா’ இதழில் இக்கருத்து மாற்றப்பட்டு வெளிவந்தது: “அறிவியலுக்கும் தத்துவத்திற்கும் எல்லைகள் உள்ளன. கலை மட்டுமே எல்லையற்றது”)



124
முழுமையான அறிவும் ஒழுக்கத்தில் வளர்தலும்
முழுமையான அறிவு சாத்தியமில்லை என்பதே அனைத்துத் தத்துவச் சிந்தனைகளின் முடிவு. கவிஞர் ரொபர்ட் ப்ரவ்னிங் இந்த சாத்தியமின்மையை மிகவும் சமார்த்தியமான வாதத்துடன் பயன்படுத்திக் கொள்கிறார். மனித அறிவின் நிச்சயமின்மை ஒழுக்கமுடன் வளர்தலுக்கான நியதி ஆகும்; ஏனெனில், முழு அறிவு என்பது மனிதனின் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அழித்துவிடும் என்கிறார் கவிஞர்.

125
முகஸ்துதி
முகஸ்துதி என்பது நற்பண்புகளின் மிகைப்பாடுதான்.

No comments:

Post a Comment