Tuesday, October 15, 2013

கஸல் துளிகள்




உன் பார்வையின்
பரவசத்தில்
நான் பேசியது
ஒருவருக்கும் புரியவில்லை
உன்னைப் பார்க்கும்
பரவசத்தில்
நான் பேசுவது
எனக்கே புரியவில்லை
*

ஒன்றை
வேறொன்றாய்க் காட்டும்
மதுவின் போதை
என்கிறார்…
உன் போதையில்
கேட்டுக் கொண்டேன்
‘ஒன்று’தானே இருக்கிறது
’வேறொன்று’ எங்கே?
*

நிலா உனக்கு
நிகரில்லை நெஞ்சே!
தழும்பு தென்படுவதில்லை
தீ இன்னும் அணையாதபோது
*

இறைவா!
உன்னிடம் நான் கொண்டுவந்ததெல்லாம்
கிழிந்து போன செல்லாத பணம் மட்டுமே
எனினும், 
கொண்டுவந்ததில்லை நான்
கள்ளப்பணத்தை ஒருபோதும்
*

பாலைகள் கடந்து
சோலைகள் கடந்து
வந்தேன் உன் முன்னால்

நிறைய இருந்தன சொற்கள்
நின்றது ஒன்று மட்டும்

கண்ணீரில் நனைந்த
உன் பெயர்
*

வயிறெனும் மண்ணறை மீது
வாழ்வைத் தொடங்குகிறான் மனிதன்

உயிருடன் புதைபட்டுப் போன
உள்ளங்கள் எத்தனையோ!

வயிறெனும் ஒருசாண் கயிறு
கட்டியுள்ளது கால்களை...

இல்லையெனில்
இதயப் பறவை
ஏழு வானங்களுக்கு அப்பால்
எப்போதும் பறந்திருக்கும்
*

பறவைக்குக் கூடு
மனிதனுக்கு வீடு

சிறகுகள் விரிக்கப்
பறவைக்கு வானம்
உன் சிறகுகள் விரியும்
வானம் எது?

வீடு என்பது
கனவு காணும் இடம்

வீடே கனவல்ல எனக்கு
*


கல்லைத் துளைக்கும் கூர்மை
கண்களில் ஏன் வைத்திருக்கிறாய்?
மெழுகை விடவும்
மென்மையாகத்தானே
என் உள்ளம் இருக்கிறது?

a


No comments:

Post a Comment