Thursday, November 1, 2012

இளையராஜா




கான்க்ரீட் அறைக்குள்
காடு விரிக்கும் உன்
கானம்

இளவெயில் உடையும்
மூங்கிற் காட்டில்
நிறுத்தும் என்னை
உன் குழலிசை

வயலின் ஊடாய்
வளையும்
மருத மாருதமாய்
மயக்கும் உன்
வயலின் இசை!

கிதார் கருவி-
நீ மீட்டுகையில்
இசையின் அருவி!

ஏழு ஸவரங்கள்
ஏழு கடல்கள்
என்பதறிந்தேன்
உன் பாடல்களின்
அலைகளில்

ஆர்மோனியச் சாவிகளில்
ஆன்மாவின் பூட்டுக்களைத்
திறப்பவன் நீ

நவரசங்களை
நாதத்தில் தோய்த்து நீ
நவில்கையில்
நான்காம் பரிமாணம்
நெற்றிபுள்ளியில் குவிந்து
நெருப்புப் புள்ளியாய்
ஒளிரும்

விண் வாசமும்
மண் வாசமும்
இணைந்த
பெண் வாசமாய்
உன்
பண் வாசம்

சிற்றின்பம் பேசும்
சிறுவாசகத்திலும்
பேரின்பம் பேசும்
திருவாசகத்தின்
பக்திச் சுவையை
பாவிப்பாய்

இருவரை
ஒருவராக்கும்
காதலின் சந்நிதியில்
கடவுளைத் தரிசித்து
சேவிப்பாய்!

உன்
ராகங்களில்
மோகங்கள்
யோகங்கள்
ஆவதுண்டு

உன் இசை
பிம்பங்களுக்குப்
பின்னணி ஆனாலும்
வாழ்வின்
நிஜம் தேடியே
நீள்கின்றன

உன் இசை
செயற்கைச் சூழலில்
செல்லுலாய்ட் கனவுகளுக்குச்
செப்பப்பட்டாலும்
இயற்கையின்
இதயத்துடிப்பை
இயம்பாமல்
இருந்ததில்லை

மழைக் காலத்தின்
மத்தியான
மஞ்சள் வெய்யிலில்
தலை சிலுப்பி நிற்கும்
தென்னை மரத்துக்கும்
தெம்மாங்கு போடுவாய்

வயற்காட்டின்
வரப்பில் கால் வைத்து
வாய்க்காலில் முகம் பார்க்கும்
புல்லின் மடலுக்கும்
பூபாளம் பாடுவாய்

உன்
இசைக் குறிப்புக்கள்
எழுதப்பட்ட காகிதம்
திசைக் குறிப்புக்கள்
தென்படாத
கா கீதம்!

மும்மூர்த்திகள்
மூளை பிசைந்து
இழைத்துத் தந்த
இசை இயலில்...
நாட்டுப்புறத்தின்
நாயகனாய்
நீ வந்து
நாத்து நட்டாய்
இசை வயலில்!

காப்பியில் அமிர்தம்
கடைந்தவன் நீ!

தன்யாசியைத்
தழுவும்
சன்யாசி!

அம்சத்வனியின்
அம்சங்களை
இம்சை செய்யாமல்
இன்னிசை ஆக்கியவன்!

மோகனம்
மௌனத்தின்
வாகனம்
என்னும்படியாய்
மெட்டமைத்தாய்

செவிகள் எளிதில்
செரிக்க முடியாத
செவ்விசையை
எவ்விசையும்
ஏற்கும் வண்ணம்
கட்டமைத்தாய்!

வார்த்தை வாணர்
வடித்துத் தரும்
வரிகளுக்கு
உன் இசை
ஆடையாய் இருப்பதுண்டு;
அறிந்தே அவசியாமாய்ப்
பாடையாய் இருப்பதுண்டு;
முன்னிறுத்தும்
மேடையாய் இருப்பதுண்டு;
வளர நீர் பாய்ச்சும்
ஓடையாய் இருப்பதுண்டு;
வரள வெயில் பாய்ச்சும்
கோடையாய் இருப்பதுண்டு!

வீணையை
விறகாக்கும்
விரகத்தை
வர்ணங்களால்
வரைந்து காட்டினாய்
ரக ரகமாய்

அதில்-
ஆதி தாளத்தின்
ஆகர்ஷனங்களை
அனுபவிக்கத் தந்தாய்
சுக சுகமாய்!

சிருங்காரம் ஒரு
ஆகாரம் --அதற்கு
ஆன்மிகம்
ஆதாரம்
என்றபடி -
எழுதினாய் இசை
இந்திய மரபில்
நின்றபடி!

வான்கா
தஞ்சாவூர் ஓவியம்
வரைந்ததுபோல்
கிராமஃபோன் காணாத
கிராமிய இசைக்குள்
மொஸார்ட்டை
மொழிவாய்!

தத்தகாரம்
தொட்டெடுத்து
தழைய தழைய
மெட்டெடுத்து
அதற்குள்
’பாக்’கின் பாணியைப்
பிழிவாய்!

திரையிசையில் நீ
தீட்டிய
பாட்டோவியங்கள் – வெறும்
கோட்டோவியங்கள் - அந்த
மெட்டுக்கள் என்னும்
மொட்டுக்களை நீ
மலர்த்தினால்
ஆயிரம் ஆல்பங்கள் ஆகும்!

இருதயத்தின் துடிப்பில்
இருக்கின்ற ஒருலயம்
உன்னிடம் ஆனது
வாத்தியத்தில்
வசம்!

’இசைஞானி’ என்றுனக்கு
இயம்பப்படும் பட்டம்
பொய்யல்ல,
நிசம்!

நாயன்மார் தமிழின்
நயங்களை
ஓசையில் நீ
ஓர்கிறாய் என்று
செப்பலாம்

’அவர்
ஆழ்வார் போல்வார்’
என்றுனை உரைத்தால்
அட்டியின்றி
ஒப்பலாம்

சித்தர் வாக்கியங்கள்
சிந்திப்பவனே!
மஸ்தானை மனதில்
வந்திப்பவனே!
மகரிஷியின் வழியில்
மோனிப்பவனே!
கரைந்துருகி என்றும்
கானிப்பவனே!

’இசையின் மூலம்
மௌனம்’
என்பதறியும்
உன் தியானம்

ஒருபோது-
’வெறும் காற்றன்றி
வேறென்ன?’
என்பாய் எளிதாக

மறுபோது-
’எப்படிப் பெயரிடுவேன்?’
என்று வியப்பாய்
மெலிதாக!

பால் நிலாப்
பாதையில்
பாட்டுக்கள்
பகர்ந்தபடி

நாளும் நடைபோடு
கடல் நோக்கி செல்லும்
நதியாய் நகர்ந்தபடி!

’அவனன்றி ஓர்
அணுவும் அசையாது’
என்பதுபோல்
’அவனின்றி ஒரு
ஸ்வரமும் இசைக்காது’

இதனைக்
கண்டவனும்
கொண்டவனும்
விண்டவனும்
ஆனாய்

அதனால்தான்
இன்னமும் உன்
இசை பாய்கிறது
எம் காதுகளில்
தேனாய்!


a

2 comments:

  1. வாரே...வா...பிரமாதம்...படம் தேர்வும் அருமை...இவரின் பரபரப்பான சினிமா நாட்கள் இவரை விட்டு போய் 20வருசமாச்சு.ஆனாலும் பேசப்படுகிறார்.எல்லா இடத்திலும் இன்னும் கேட்டு கேட்டு அலுக்காமல் பாராட்டுகிறார்கள்...ரசிகர்கள்,வெறியர்கள்,மௌன ஆதரவாளர்கள்,பண்டிதர்கள்...

    ReplyDelete
  2. அடி பின்னிட்டீங்க..! அற்புதம். :-)

    ReplyDelete