Thursday, November 29, 2012

ஆலிஸின் க்ரைம் உலகம்



சமீபத்தில் என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் புக்‌ஷோ ஒன்று நடத்தினார்கள். பிள்ளைகள் ஆளுக்கொரு நூல் வாங்க வேண்டும் என்று திட்டமாம். நச்சரித்தார்கள். பிள்ளைகளுக்கு நூல் வாங்கித் தருவதை முழு மனத்துடன் வரவேற்பவன் வலியுறுத்துபவன் என்ற பேரில் அவர்களுடன் பள்ளிக்குச் சென்றேன். நூல் இருந்த ஹாலில் ஒரு பகுதியில் மட்டும் பிள்ளைகளின் கூட்டம் குவிந்து மொய்த்துக் கொண்டிருந்தது. இத்தனை ஆர்வத்துடன் குழந்தைகளை ஈர்க்கிறது என்றால் ஏதோ விசேஷமான நூல் அங்கே இருக்க வேண்டும். அது என்ன நூல் என்று அறியும் ஆர்வம் என் உள்ளத்தில் கிளர்ந்தது. தோதாக என் பிள்ளைகளும் இரண்டு பக்கமும் என் கையைப் பிடித்து அந்தத் திசையில் இழுத்தார்கள். போய்ப் பார்த்தால் அங்கிருந்தது ஒரு ஏஃபோர் சைஸ் கார்டூன் புத்தகம்: ச்சோட்டா பீம்!

நொந்தே போனேன். தொ.காவில் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு எதிர்ப்புச் சொல்பவன் அல்ல நான் என்றபோதும் கதை புத்தகமாகவெல்லாம் அதனை வாங்கி வைத்துப் பாதுகாப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, அது வேண்டவே வேண்டாம் என்று பிள்ளைகளிடம் மறுத்துவிட்டேன்.

வேறு நூற்களைப் பார்க்கலாம் என்று நகர்ந்த போது ‘சக்கரை வியாதிக்கு மூலிகை மருத்துவம்’, ‘சலவாத்தின் நற்பலன்கள்’, ‘யோகா செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்’, அன்னா ஹஜாரே வாழ்க்கை வரலாறு (!) போன்ற நூல்களும் இருந்தன. ‘இனிய வாழ்வுக்குத் தாம்பத்ய ரகசியங்கள்’ போன்ற நூற்களை வைக்காமல் விட்டார்களே என்று நிம்மதி அடைந்தேன். இப்படி ஒரு மூன்று ரேக்குகள் இருந்தன. நகர்ந்து வேறு பக்கம் போனதும் குழந்தைகளுக்கான நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. All time classics என்னும் லேபிலில் அடங்குபவை. பஞ்ச தந்திரம், அக்பர்-பீர்பல், தெனாலி ராமன், முல்லா நஸ்ருதீன், மரியாதை ராமன், விக்ரமாதித்யன், ஸ்நோ வைட்டும் ஏழு குள்ளர்களும், உறங்கும் அழகியும் மிருகமும், தவளையும் இளவரசியும், சின்றெல்லா, மூன்று கரடிகள், ஹாமலின் நகரத்து ஊதுகுழலோன், பரமார்த்த குருவும் சீடர்களும், கல்லிவர்ஸ் ட்ராவல்ஸ், ஆலீசின் அற்புத உலகம், விஜார்ட் ஆஃப் ஓஸ் இத்தியாதிகள்.

என் பிள்ளைகள் ஆளுக்கொரு நூல் வாங்கினார்கள். மகன் வாங்கியது ரீடிங் பூஸ்டர் என்னும் ஒரு பயிற்சி நூல். அதில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் அடியேனுக்கே புதுசு. உதாரணமாக, Sandwich உருவான கதை. படித்தால் நாலு ஆங்கில வார்த்தைகள் புதிதாகக் கற்றுக் கொள்ளலாம் என்னும் உப-பயனையும் அளிக்கும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நூலை அவன் தேர்ந்தெடுத்ததற்காக புக்‌ஷோ நடத்துபவர் விசேஷமாகப் பாராட்டினார், ”எல்லாப் பிள்ளைகளும் ச்சோட்டா பீமையே வாங்குகிறார்கள். நீ நல்ல நூலை எடுத்திருக்கிறாய். வெரி குட்” என்றார். நூலிலிருந்து சில வியப்பான தகவல்கள்:
கிரிக்கட் என்னும் பூச்சியின் காதுகள் அதன் முன்னங் கால்களின் முனையில் உள்ளன. ஒரு வெண்புள்ளி போல் அது தென்படும்.

ஐஸ் மழை தெரியும்தானே? அந்த பனிக்கட்டிகள் 25000 அடி உயரத்தில் உருவாகி விழுகின்றன.

முதலைகள் அஜீரணக் கோளாறு வராமல் இருப்பதற்காகப் பத்து முதல் பதினைந்து பவுண்டு எடைக்குக் கற்களை விழுங்குகின்றன. (பின்னே, ஹெல்த் ப்ளஸ்சுக்கு வந்து ஒரு பாட்டில் ஜெலுசில் கொடுங்கன்னா கேட்கும்?)

மின்மினிகள் மினுக்கும் என்பதை அறிவோம். ஆனால் அவற்றின் முட்டைகளும் மினுக்குமாம். (முட்டை பழக்கம் சுடுகாடு மட்டும்னு பழமொழி கிழமொழி வச்சிருக்குமோ?)

யுவெஸ்ஸில் கிழக்கு மாநிலங்களில் மட்டும்தான் மின்மினிகள் வாழ்கின்றனவாம். மேற்கு மாநிலங்களில் அவை அறவே இல்லையாம். ஏனென்றும் யாருக்கும் தெரியவில்லையாம். (”அங்கயில்லாம் நமக்குச் சுத்தபட்டு வராதுங்க.” ”அட ஏம்ம்ப்பா?”)

எல்லாப் பூச்சிகளுக்கும் இருசோடிச் சிறகுகள் இருக்கும். ஆனால் மின்மினிப் பூச்சிக்கு மட்டும் ஒரு சோடிச் சிறகுதான் உண்டு. (இவ்விளக்கு விதிவிலக்கு!)

டாக்டர்.ஸ்யூஸ் என்பவர் குழந்தைகளுக்கான கதாசிரியர். நாற்பத்தாறு நூற்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் nerd என்று ஒரு சொல் உள்ளது. அதை அவர்தான் 1950-ல் ‘If I ran the zoo’ என்னும் நூலில் அறிமுகம் செய்தாராம். ஆமாம், nerd என்பதற்குத் தமிழில் என்ன சொல்லலாம்? மேதை என்று சொல்லலாமா? ஜீனியஸ் என்றாகிவிடும். சான்றோன் – ம்ஹும், என்ன சொன்னாலும் நெருடுகிறதே!

மகள் எடுத்தது மிகவும் மெல்லிசான ஒரு படக்கதை நூல்: LITTLE RED RIDING HOOD. அவளைப் போலவே இருந்தது, ஒல்லியாக அழகாக. எட்டுப் பக்கங்கள் மட்டுமே கொண்ட அந்த நூலில் அற்புதமான ஓவியங்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்கான படக்கதை நூல்களுக்கென்று படம் வரைவது ஒரு தனிக்கலை. ஒவ்வொரு படத்திலும் உள்ள நுணுக்கமான டீட்டெய்ல்ஸ் என்னை வியக்க வைக்கிறது. இத்தனை சிறிய 2D ஸ்பேசில் ஓவியர் எவ்வளவு பெரிய 3D ஸ்பேசைக் காட்டுகிறார் என்பதும் வியப்பாக இருக்கும். எழுத்துக்களின் ஃபாண்ட் அளவும் பாணியும்கூட குழந்தைகள் நூலில் மிக முக்கியமானது. டான் ப்ரவ்னின் நாவலுக்கான எழுத்துருவில் அதை உருவாக்கக் கூடாது. வாக்கிய அமைப்புக்களை அவர்கள் இரண்டாக உடைத்துப் போட்டிருந்தார்கள். ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு படம். அதன் மேலே சிறிய வாக்கியம். கீழே சற்றே நீண்ட வாக்கியம். மேலே உள்ளதைப் பிள்ளைகள் வாய்விட்டு வாசிக்க வேண்டுமாம். கீழே உள்ள நீண்ட வாக்கியத்தை அவர்களுக்கு மாதாஜி அல்லது பிதாஜி வாசித்துக்காட்ட வேண்டுமாம். இவ்வாறாக அந்த நூலை வாசிக்க அதனால் பிள்ளைகளின் மனத்தில் உண்டாகும் உளவியல் மாற்றங்களை எண்ணிப்பார்க்கவும்:
புதிய சொற்களை அறிகிறார்கள்.
கற்பனைத் திறன் வளர்கிறது.
கண் முன் உள்ள காட்சியைக் கூர்ந்து அவதானிக்கும் மனோபாவம் வருகிறது.
பெற்றோருடன் நெருக்கம் அதிகமாகிறது.

இத்தனை உளவியல் சமாச்சாரங்கள் அதில் இருக்கின்றன. ஆனால், மறுநாள் ஒரு பேராசிரியர் சொன்னார், அவர் தன் பிள்ளைகளுக்கு எந்த நூலுமே வாங்கித் தரவில்லையாம். பாட நூல்களைப் படித்தாலே போதுமாம். அதாவது பரவாயில்லை. ஒரு காரணமும் சொன்னார், “ஃபாரின் புக்ஸுன்னு வச்சுக்கிட்டு, ஏழெட்டுப் பக்கங்கள்தான் இருக்கு, அது எண்பது ரூவாங்கறான்.” (சரிதான், ச்சீப்பாக் கிடைக்கணும்னா குழந்தைகளுக்குக் குமுதமும் ஜூவியுமா வாங்கித்தர முடியும்?)

நம் பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான நூல்களை எந்த எந்த வயதில் வாசிக்கத் தருகிறோம் என்பதில் தமிழகச் சூழலில் என்ன மாதிரியான பிரக்ஞை இருக்கிறது என்பதை யோசித்துக் கொண்டிருந்தேன். குழந்தைகளுக்கான நூல்கள் என்பதிலும் கூட அத்தகுதி பெறுபவை எத்தனை நூற்கள் என்று ஐயமாக உள்ளது.

மரியாதை ராமன் கதைகளை நினைத்தேன். ஊர்ப் பிரச்சனையில் தீர்ப்புச் சொன்னவன் அவன். ஒரு குழந்தைக்குத் தான்தான் தாய் என்று இரண்டு பெண்கள் கோர, குழந்தையைப் இரு பாதிகளாக அரிந்து அவர்களுக்குத் தரும்படி சுலைமான் நபி தீர்ப்புச் சொல்ல, உண்மையான தாய் அலறிக்கொண்டு ’வேண்டாம், அவளுக்கே தந்துவிடுங்கள், குழந்தையை கொன்றுவிடாதீர்கள்’ என்று சொல்லவும் உண்மையான தாய் அவள்தான் என்பதுணர்ந்து குழந்தை அவளிடமே வழங்கப்பட்ட கதை ஒன்றுண்டு. அக்கதை மரியாதை ராமனிலும் வருகிறது. ஆனால் இந்த செண்டிமெண்ட்டெல்லாம் பிள்ளைகளுக்குப் புரியுமா? என்று தெரியவில்லை. இக்கதையை நம் பிள்ளைகளுக்கு நாம் சொல்வதில் இருந்து, அவர்கள் நம்மை உயர்வாக எண்ண வேண்டும் என்னும் நமது எதிர்பார்ப்பே வெளிப்படுகிறது. இது போல் கதைகளை சிரிஞ்சாகப் பயன்படுத்தி உணர்வுகளை இஞ்ஜெக்ட் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்.

அப்பாஜி ராவோ தெனாலி ராமனோ அல்லது பீர்பாலோ – மூன்றிலும் கதை ஒரே தினுசாகத்தான் இருக்கும் – ஒர் கதையில் ராஜாவுக்கும் ராணிக்கும் ஊடல் எழ அதைத் தீர்த்து வைக்குமாறு அ.ரா / தெ.ரா / பீ.பா-விடம் ராஜா கேட்டுக் கொள்கிறார். இது ஒரு ஐந்து வயதுக் குழந்தை படிக்க வேண்டிய கதையா சொல்லுங்கள்?

முல்லா நஸ்ருதீனின் கதைகளைக் கூட என்னால் குழந்தகளுக்கானதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவை நிச்சயமாக அடல்ட்ஸுக்கானவைதான் – அதாவது பெரியவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய, அதுவும் எல்லாருக்கும் என்று சொல்ல இயலாது, ஆன்மிக சாதகர்களுக்கான சூஃபித் தத்துவங்களை நகைச்சுவையாகச் சொல்லுகின்ற கதைகள் அவை. உதாரணமாக, மௌலானா ரூமி தன் மஸ்னவி காவியத்தில் சொல்லும் ஒரு முல்லாக் கதையைப் பாருங்கள்:

முல்லாவின் வீட்டிற்கு அவரின் வெளியூர் நண்பர்கள் வருவதாகத் தகவல் கிடைக்கிறது. வெகு தொலைவிலிருந்து பல காலம் கழித்துத் தன்னைக் காண வரும் நண்பர்களுக்கு விருந்து கொடுப்பதற்காக முல்லா இரண்டு கிலோ ஆட்டிறைச்சி வாங்கி வந்து மனைவியிடம் தருகிறார்: “அடியே! சொல்றத நல்லாக் கேட்டுக்க. வர்றவுங்க நாலு பெரிய மனுஷங்க. நல்லவிதமா இதுல கபாப் செஞ்சு வையி. என்ன புரியுதா?” என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார். பல மாதங்களாகக் கொலை பட்டினி கிடந்து கால் வயித்துக்கும் அரை வயித்துக்கும் அல்லாடிக் கொண்டிருந்த முல்லாவின் மனைவிக்கு லம்ப்பாக இரண்டு கிலோ கறியைக் காணவும் ஆசை பொங்கிக்கொண்டு வந்தது. ஆகட்டும் பாத்துக்கலாம்னு செய்து வைத்திருந்த கபாப் அனைத்தையும் அவளே மொசுக்கிவிட்டாள். வீடு திரும்பிய முல்லா ‘கபாப் எங்கே?’ என்றார். அவள் ஒன்றுமே பேசாமல் அழுதழுது வீங்கி விண்ணாந்தது போன்ற மூஞ்சியுடன் நின்றாள். ‘என்னடி கேக்குறேன் மண்ணு மாதிரி மசமசன்னு நிக்கிற? கபாப் எங்கே?’ என்று மிரட்டினார். கண்ணைக் கசக்கிக் கொண்டே அவள் சொன்னாள், ’செஞ்சு மேஜையில வச்சிட்டுக் குளிக்கலாம்னு கொள்ளப் பக்கம் போயிருந்தேங்க. வந்து பாத்தேன், நீங்க வளக்குறீங்களே ஒரு குட்டிப் பிசாசு, அது எல்லாத்தையும் தின்னுடிச்சுங்க”. குட்டிப் பிசாசு என்றது முல்லா வளர்க்கும் செல்லப் பூனையை. பூனை வளர்ப்பது நபிவழி என்பதால் ஒரு சாம்பல் நிறப் பூனையைப் பிடித்து அதையும் ஏழ்மையான தவ வாழ்வுக்குப் பழக்கிக் கொண்டிருந்தார் முல்லா. மனைவி சொல்வதில் அவருக்குச் சந்தேகம் வந்தது. ‘கள்ளி இவள்தான் முழுங்கிவிட்டுப் பாவம் பூனை மீது பழியைப் போடுகிறாள்’ என்று நினைத்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்து அந்தப் பூனையை எடுத்து வந்தார். “அந்தத் தராசை எடுடி” என்றார். “எதுக்குங்க?” என்றாள். முறைத்தார். எடுத்துத் தந்தாள். பூனையைத் தராசில் வைத்து நிறுத்தார். சரியாக இரண்டு கிலோ இருந்தது! பூனையைத் தாட்டி விட்டு மனைவியை குறுகுறுவென்று பார்த்துக் கேட்டார்: “அடியே! இது பூனைன்னா ரெண்டு கிலோ கறி எங்கே? இல்லை இதுதான் இரண்டு கிலோ கறின்னா அதைச் சாப்பிட்ட பூனை எங்கே?”

இக்கதையைச் சொல்லும் மௌலானா ரூமி இதன் உள்ளிருக்கும் தத்துவத்தையும் விளக்குகிறார்கள்: “எது பருப்பொருள்? எது ஆன்மா? எது ஸ்தூலம்? எது சூக்குமம்? எது உடல்? எது உயிர்? இதுவே அதுவாய் அதுவே இதுவாய் இருக்கும் நிலையில் எப்படிப் பிரித்துச் சொல்வது அன்பர்களே!”

இவ்வாறு, குழந்தைகளுக்கான கதைகள் என்று கிடைப்பனவற்றில் பெரும்பாலானவை குழந்தைகளுக்காக என்றே பிரத்யேகமாக இயற்றப்பட்டவையாக இல்லை. 1001 அரேபிய இரவுக் கதைகளை எடுத்துக் கொள்ளுங்கள், கொடுங்கோல் அரசன் ஒருவனுக்கு அவனின் புதிய மனைவி ஒவ்வொரு இரவும் ஒரு கதை சொல்லியாக வேண்டியிருக்கிறது. விடியும்போது ஒரு புதிர் வைத்துக் கதையை முடிக்கிறாள் அவள். இல்லையெனில், சுவாரஸ்யம் போய்விட்டால் அந்த மன்னன் அவளைக் கொன்றுவிடுவான். கதை சொல்லத் தெரியாத அரசிகள் பலரை அப்படி ஏற்கனவே அவன் கொன்றிருக்கிறான். இந்த அழகிய இளம் அரசி அவனின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கதைகளை 1001 இரவுகள் சொல்கிறாள். அவளே தன் ஆத்மா தேடிக்கொண்டிருந்த பெண் என்பதை ஆழமாக உணர்ந்து அவளை அவன் முழுமனதாக ஏற்றுக் கொள்கிறான். அவள் சொல்லும் கதைகள் அவனின் ஆளுமையை மாற்றிவிடுகின்றன. இதுதான் 1001 இரவு அரபிக் கதைகளின் பின்னணி. இந்தக் கதைகள் அவற்றைப் படிப்பவரின் ஆளுமையையும் மாற்றிவிடும் ஆற்றல்கள் கொண்டவை என்று சொல்லப்படுகிறது. சூஃபிகள் இந்தக் கதைகளைத் தங்கள் ரகசிய ஞானங்களை மறைத்துச் சொல்வதற்கான குறியீட்டுக் கருவிகளாகப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. இதிலிருந்து எடுத்தாளப்படுகின்ற அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் போன்ற கதைகள் குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ப எளிமைப் பட்டவையே அன்றி அவற்றின் ஒரிஜினல் வடிவத்தில் அவற்றைச் சிறார்கள் படிக்க முடியாது.

குழந்தைகள் கதை என்று சொல்லி நாம் அவர்களுக்குத் தருபவற்றின் இன்னொரு அம்சம் அவற்றில் நாம் ஏதேனும் சமயக் கருத்தையோ அறக் கருத்தையோ வைத்து ‘இந்தக் கதையின் நீதி யாதெனில்’ என்னும் விதமாக முடிப்பதுதான். ஈசாப் நீதிக் கதைகள் இதற்கு நல்ல உதாரணம். ஆனால் ஈசாப் தன் கதைகளைப் பெரியவரகளுக்காகவே எழுதினார், குழந்தைகளுக்காக அல்ல! இத்தகைய கதைகளுமே கூட குழந்தகைகளின் கற்பனையை, வியக்கும் ஆற்றலை, அவர்களின் மனங்களில் இயல்பாகவே உள்ள ‘empathy’ என்னும் அருளுணர்வை வளப்படுத்தும் நோக்கில் அமைந்திருக்காது. நீதி போதிக்காத குழந்தைக் கதை வெட்டித்தனமானது என்று நமக்கு இருக்கும் ஒரு தவறான பார்வையே இதற்குக் காரணம்.

விக்டோரிய இங்கிலாந்தில் உருவான குழந்தைக் கதைகள் எல்லாம் ஏதேனும் வரட்டு அறக்கருத்தை, நீதியை, நன்னெறியை போதிப்பதாகவே இருப்பதைக் கண்டு மனம் வெம்பினார் லூயி கரோல். இது ஒரு மோசமான அணுகுமுறை என்று அவருக்குத் தோன்றிற்று. குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடவேண்டும், அவர்களின் மீது கருத்துக்களைத் திணிக்கக் கூடாது என்பது அவரின் கருத்து. எந்த விழுமியமும் அவர்களிடம் இயல்பாகவே அவர்களின் உள்ளிலிருந்து முளைத்து வர வேண்டும். அதற்குத் துணை செய்யும் வகையில் எழுதப்படும் கதைகளையே அவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று எண்ணினார்.

1862-ஆம் ஆண்டு லூயி கரோல் தன் நண்பர் ஒருவருடனும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அப்போதிருந்த ஹென்றி லிட்டலின் மூன்று மகள்களுடனும் ஐந்து மைல்கள் படகுச் சவாரி சென்றார். அந்தப் பிள்ளைகளுக்கு முறையே 13, 10 மற்றும் 8 வயது. நடுப்பெண்ணின் பெயர் ஆலிஸ் லிட்டல் (Alice Liddell). அந்தப் படகுப் பயணத்தில் அவர்கள் ஒரு கதை கேட்கவே ஆலிஸின் பெயரை வைத்தே ஒரு சிறுமியின் கதையைக் கற்பனையாக லூயி கரோல் மனம் போன போக்கில் சொன்னார். அக்கதை அந்த மூன்று சிறுமிகளுக்கும் மிகவும் பிடித்துப் போனது. கணித அறிஞரான லூயி கரோல் ஒரு குழந்தை இலக்கியவாதியாக மாறியது அப்படித்தான். அவருடைய அக்கதை நூலுருப் பெற்று 1865-ல் வெளிவந்தது.

ஆலிஸின் அற்புத உலகம் கதையில் லூயி கரோல் நிறைய கணிதப் புதிர்களையும் கணிதத்தின் அற்புதத் தன்மைகளையும் இடம்பெறச் செய்துள்ளார். ஆனால் அவை எதுவும் துருத்திக் கொண்டு இதோ பார் கணிதச் சிக்கல், இதற்கு விடை சொல் பார்ப்போம் என்று பூச்சாண்டி காட்டாது. அதனால்தான் இக்கதையைக் குழந்தைகள் விரும்புகின்றார்கள். எனினும் அவர்களின் உபமனத்தில் கணித்திற்கான கண்ணோட்டத்தை இக்கதை அவர்களையே அறியாமல் வளர்க்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரு நல்ல கதை இப்படித்தான் செயல்பட வேண்டும்.

ஆலிஸின் அற்புதவுலகம் கதையின் பாதிப்பில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இன்னொரு குழந்தைகள் கதை நூல் ‘The Wonderful Wizard of Oz’. எல்.ஃப்ரான்க் பாம் என்பவரால் எழுதப்பட்ட இந்நூல் 1900-ல் வெளிவந்தது. இது போன்ற சின்ன சின்ன கதைகள் ஆங்கிலத்தில் அனேகம். இங்கே தமிழில் வால்யூம் வால்யூமாக கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் போல, அங்கே குழந்தைகளுக்கான காவியங்களை எழுதியிருக்கிறார்கள். சி.எஸ்.லூவிஸ் ஏழு புதினங்களாக எழுதிய “The Chronicles of Narnia”, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜே.ஆர்.ஆர்.டால்க்கியன் மூன்று பாகங்களில் எழுதிய ‘Lord of the Rings’ மற்றும் ஜே.கே.ரவ்லிங் ஏழு நாவல்களாக எழுதிய Harry Potter ஆகியவை நூற்களாகவும் பின்னர் திரைப்படங்களாகவும் வந்து உலகெங்கும் பெரியவர்களையும் வசீகரித்தன. அதி கற்பனை ஆக்கங்கள (high fantasy) என்பதே அவற்றின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. தமிழில் இது போல் குழந்தைகளுக்கான அதி கற்பனை நூல்கள் வெளிவந்ததில்லை என்பது வருத்தம் தரும் உண்மை.

இக்கதைகள் குழந்தைக் கதைகள் என்று சொல்லப்பட்டாலும் இவற்றின் மீதுள்ள ஒரு குற்றச்சாட்டு இவை ”FREEMASONS” என்னும் ரகசிய இயக்கத்தினரின் கொள்கைகளை மறைமுகமாக குழந்தைகளின் மனங்களில் திணிப்பவை என்பதாகும். லூயி கரோல், எல்.ஃப்ரான்க் பாம் போன்ற குழந்தை எழுத்தாளர்களும் அமெரிக்க ஜனாதிபதிகளாகவும் தொழிலதிபர்களாகவும் ஹாலிவுட் திரைப்பட அதிபர்களாகவும் கலைஞர்களாகவும் வருகின்றவர்கள் பொதுவாக ஃப்ரீமேசன் இயக்கத்தின் உறுப்பினர்களே என்றொரு கருத்து உண்டு. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி விவாதிக்கப்பட்டு வரும் விஷயமாகும்.

ஃப்ரீமேசன்ஸ் இயக்கத்தில் இந்திய வாமசார சடங்குகளை ஒத்த செயல்பாடுகள் உண்டு என்று கூறப்படுகிறது. Pagan கலாச்சாரக் கூறுகளைப் பற்பல குறியீடுகளின் வழியே அவர்கள் நவீன நாகரிகமாக உருக்கொள்ளச் செய்து உயிருடன் வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. லூயி கரொலின் போன்றோர் எழுதும் கதைகள் உண்மையில் பிள்ளைகளின் மனங்களை வசியப்படுத்தித் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஃப்ரீமேசன்ஸ் பயன்படுத்தும் ஒரு கருவியே என்று ஒரு பார்வை உண்டு. லூயி கரோலே அப்படித்தான் ஆலிஸின் அற்புத உலகத்தை எழுதினார் என்கிறார்கள். ’கதையின் ஆரம்பத்தில் ஒரு வெண்முயல் வருகிறதே, அது பாதாள உலகில் உருமாற்றம் கொண்டதும் ஏன் கைகளில் வெள்ளை உறை அணிந்திருக்கிறது? ஏனெனில் அது ஃப்ரீமேசன்ஸ் இயக்கத்தின் உறுப்பினர்களின் அடையாளம்’ என்று தொடங்கி, ’அந்த வெண்முயலே பாலியலுக்கான ஒரு குறியீடுதான், ப்ளே பாய் முயல் அது’ என்கிற ரீதியில் வாதங்கள் தொடர்கின்றன.

லிட்டல் சகோதரிகள் மூவரில் இரண்டாமவளான பத்து வயது ஆலிஸ் லிட்டல் மீது லூயி கரோலுக்கு உண்டான பாலியல் ஈர்ப்புத்தான் அவரின் கதைக்கு அவளின் பெயரையே அவர் தேர்ந்தெடுக்க வைத்தது என்றும், ஆலிஸை அவர் ‘abuse’ செய்து கொண்டிருந்ததாகவும், ஃப்ரீமேசன்ஸ் இயக்கத்தில் உறுப்பினரான ஹென்ரி லிட்டலின் சம்மதத்துடன் தான் இக்காரியங்கள் நடந்தன என்றும் சொல்லப்படுகின்றது. லூயி கரோல் ஒரு paedophile என்று வசை பாடுபவர்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது Alice in Wonderland என்பதன் பின்னணி ஆலிஸின் ரகசிய உலகம் (Alice in Secretland) என்பதாகவும் ஆலிஸின் க்ரைம் உலகம் என்பதாகவும் மாற்றம் கொள்கிறது.

இதற்கு வேறான பார்வை கொண்டவர்களும் இருக்கிறார்கள். ’செ, செ, என்னப்பா இது, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்றாப்ல இருக்கு. லூயி கரோல் ஒரு மேதை. கணித அறிஞர் மட்டுமல்ல, குழந்தைகளின் உளவியலை அறிந்தவர் மட்டுமல்ல, ஒரு குழந்தைக் கதை மூலம் அற்புதமான ஆன்மிக விஷயங்களைச் சொன்னவர். மறைஞான (OCCULT) ரகசியங்களை மிக லாவகமாக அவர் தன் கதையில் மறைத்துச் சொல்லியிருக்கிறார்’ என்று அவர்கள் வாதிடுகிறார்கள். ’ஆலிஸின் அற்புத உலகம்’ நூலில் வரும் சில காட்சிகளின் குறியீட்டு விளக்கங்களாக ”Masonic Forum of Light” என்னும் விவாதக் குழுமத்தில் லொவிட்டே என்னும் பெயரில் ஒருவர் எழுதியிருப்பவை வியப்பூட்டுகின்றன:

“ஒரு நவீனச் செவ்வியல் பிரதிக்குள் நாம் நுழைகிறோம். பல குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கற்பனையைச் சமவீச்சில் தூண்டிய ஒரு கதை. வளர்வதின் சிக்கல்கள், மொழியின் விசித்திரங்கள், மெய்ம்மை பற்றிய நம் பார்வைகள் ஆகியவை பற்றி இக்கதை விவாதங்களை எழுப்புகிறது என்றபோதும், இது நம்மிடம் ஓர் ஆழ்நிலையில் உரையாடுகிறது என்று நான் நம்புகிறேன்.

ஆலிஸ் ஓர் வெண்முயலின் பின்னால் ஓடிச் சென்று பூமியில் உள்ள ஒரு குழிக்குள் விழுகிறாள் என்று இக்கதை ஆரம்பம் ஆகிறது. (இந்தக் காட்சியின் மீது ஃப்ராய்டின் கராறான உளவியல் பார்வையைப் போட்டால் அதன் விளக்கம் பின்வருமாறு அமையும்: ஆலிஸ் என்னும் பத்து வயதுப் பெண்ணை வசீகரித்துத் தன் பின்னால் ஓட விடும் அந்த வெண்முயல் பாலியலின் குறியீடு. பூமியில் உள்ள அந்தத் ஆழ்துளை என்பது பெண்ணுடலின் புழையைக் குறிக்கும். அதனுள் ஆலிஸ் வீழ்கிறாள் என்பது ஆலிஸ் தன் உடலில் / உடலின் பாலியலை முதன் முதலில் உணர்ந்துகொள்ளும் தருணத்தைக் குறிக்கிறது.) கதை நினைவு மனத்திற்குக் கீழே உள்ள நினைவிலி மனத்தில் (Unconsious Mind) நடக்கிறது என்பதை இது சொல்ல வருகிறது. இது நினைவுலகிலிருந்து கனவுலகிற்கான ஒரு பெயர்வு ஆகும். வனங்களுக்கும் ஓடைகளுக்கும் அடியிலிருக்கும் தேவதையின் உலகிற்கு இறங்குவதாகும்.

அலமாரிகளையும் புத்தக அடுக்குகளையும் கடந்தபடி அவள் மிகவும் மெதுவாக விழுகிறாள் என்பது ஒழுங்கு முறைகளைப் பின்னே விட்டு நாம் நினைவிலிக்குள் ஆழமாகச் செல்கிறோம் என்பதைக் காட்டுகிறது. தன்னுடைய அனுபவங்கள் நெடுக ஆலிஸ் இந்த இரண்டு உலகங்களில் எது உண்மையானது என்று குழம்பிக்கொண்டே இருக்கிறாள். அவை இரண்டுமே உண்மைதான் என்பது விடையாக இருக்கக்கூடும்!

அவளுடைய முதல் சவால், வெண்முயலைப் பின்தொடர்வதற்காக அவள் ஒரு கதவின் வழியே கடந்து செல்ல வேண்டும் என்பது. அந்தக் கதவை ஒரு தங்கச் சாவியால்தான் திறக்க முடியும். தங்கம் என்பது ஞானத்தைக் குறிக்குமாதலால் தங்கச் சாவி என்பது ஞானத் திறவுகோல் என்பதன் குறியீடு எனலாம். அந்தக் கதவின் வழியே அப்பால் செல்லும் முயற்சியில் ஆலிஸ் தன் அளவில் பல மாறுதல்களை அடைகிறாள். ஒவ்வொரு முறையும் அந்த மாற்றம் அவள் உண்ணும் பண்டத்தால் ஏற்படுகிறது. உண்பது என்பது சுயம் ஞான போதனையை உள்வாங்கிக் கொள்வது என்பதைக் குறிக்கும். ஒரு மனிதனின் அளவு என்பது அவனுடைய சுயத்தின் அடையாளத்தைக் குறிக்கும். ‘நான் யார்?’ என்னும் கேள்வி இக்கதையில் பல முறை கேட்கப்படுகிறது.

அவள் பூதாகரமாகப் பெருத்துவிடும் போது எக்கச்சக்கமாக அழுது வைக்கிறாள். அப்போது சட்டென்று அவளின் உருவம் மிகவும் சிறியதாகிவிடத் தன் கண்ணீரில் தானே மூழ்கிக் கொண்டிருப்பதை உணர்கிறாள். இந்தக் கண்ணீர்க் குளியல் என்பது ஒருவகை ஞான ஸ்நானத்தைக் குறிக்கும். எவ்வொரு நிலையிலும் அவளுடன் ஏதேனும் ஒரு விலங்கு இருக்கிறது. அவை நாமும் விலங்குகள்தான் என்றும் இயற்கையுடன் இணைந்தே இருக்கும் அதனொரு பகுதி என்றும் நமக்கு உணர்த்தும் கருவிகளாகத் திகழ்கின்றன.

விரைவில், ஆலிஸ் அந்த வெண்முயலின் வீட்டிற்குள் நுழைந்து விடுகிறாள். அந்த முயலுக்கு அதன் கையுறைகளையும் விசிறியையும் எடுத்துச் செல்ல வேண்டிய பணி அவளுக்கு. அவை அவளுக்கு எட்டாத உயரங்களில் உள்ளன. அதை எடுக்க வேண்டும் எனில் அவள் வளர வேண்டும். அவள் எதையோ தின்கிறாள். உடனே அந்த அறையையே நிரப்பிவிடும் அளவு பெரிதாகி விடுகிறாள்! பொருட்களை எடுத்துக் கொள்கிறாள். இப்போது எப்படி வெளியேறுவது? இன்னொரு பொருளை உண்கிறாள். சட்டென்று சின்னதாகி வெளியே வந்துவிடுகிறாள். சில நேரங்களில் நாம் இப்படி நம் வேலைக்கு மிகப் பெரியவர்களாகவும் – ‘இதையெல்லாம் நான் செய்யவேண்டியிருக்கு, என்ன சொல்ல?’ – சில நேரங்களில் நம்மை நாமே மிகவும் பலகீனமாகவும் சின்னவர்களாகவும் – ’இதெல்லாம் நம்மால நடக்குற காரியமா சொல்லுங்க? உசரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுங்களா?’ – உணர்கிறோம் அல்லவா? (இது மிகவும் அற்புதமான உளவியல் விஷயம். இதன் உள்ளர்த்தமாக எனக்குத் தோன்றுவது என்னவெனில் நம் வாழ்வில் சில நேரங்களில் குழந்தைகளின் உளவியல் நமக்குத் தேவைப்படுகிறது. பெரியவர்களின் உளவியலால் தீர்க்க முடியாத விஷயங்கள் அவை. சில நேரங்களில் முதிர்ந்த உளவியல் தேவைப் படுகிறது. திறமை என்னவெனில், இவ்விரு நிலைகளுக்கு நம் உளவியலை நம்மால் மாற்றத் தெரிய வேண்டும் என்பதுதான்த்ட். வேறு விதமாகச் சொல்வதெனில், வாழ்வின் சில கட்டங்களில் நமக்கு அறிவியல் பார்வையும் சில கட்டங்களில் கலையியல் பார்வையும் தேவைப்படும். காதலியுடன் படகுச் சவாரி செய்யும் தருணத்தில் கவித்துவ மனநிலை இருந்தால் அனுபவம் சோபிக்கும். அங்கு போய் அக்கவுண்ட்ஸ் ச்சார்ட் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. வீட்டின் மாத பட்ஜெட்டைத் திட்டமிடும்போது கவித்துவச் சிந்தனைகள் உதவாது. சில நேரங்களில் நமக்கு தர்க்க நோக்கு தேவைப்படும், சில நேரங்களில் அதர்க்க நோக்கு தேவைப்படும். இரண்டையுமே கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.)

இப்போது அவள் காளான்மீது அமர்ந்திருக்கும் கம்பளிப்பூச்சி ஒன்றைக் காண்கிறாள். “நீ யார்?” என்று அது அவளை வினவுகிறது. அவள் சொல்கிறாள், “இன்று காலை எழுந்த போதாவது நான் யார் என்பதை அறிந்திருந்தேன். ஆனால் இப்போது நான் பல முறை வேறு வேறு ஆளாக மாறிவிட்டேன் என்று நினைக்கிறேன்.” இதைச் சொல்லிவிட்டு அவள் அந்த காளானை நுள்ளி உண்கிறாள். உடனே அவளின் அளவு மீண்டும் மாறி ஓர் இலகுவான நிலையை அடைகிறது. அதன் பின் தான் ஒரு குறிப்பிட்ட அளவானவள் என்னும் பிரக்ஞயே அவளில் இல்லாமலாகிறது.

அவளின் பயணங்களில் அவள் ஒரு பூனையைச் சந்திக்கிறாள். அது மந்திர சக்திகள் உள்ள பூனை. அதன் உதவியால் தான் மீண்டும் வீட்டுக்குத் திரும்பிவிடலாம் என்று அவள் நம்புகிறாள். ஆனால் அந்தப் பூனை செய்யும் மந்திர ஜாலங்கள் எதுவும் அவளுக்குச் சாதகமாக அமையவில்லை. நம்முள் அற்புதமான மனோ சக்திகள் இருப்பது உண்மைதான் என்றாலும் அவை கட்டுப்பாட்டையும் வழிகாட்டுதலையும் வேண்டி நிற்கின்றன. நம்முள் குழப்ப நிலை உள்ளவரை நம் அந்தரங்க ஆற்றல்கள் சரியாக வேலை செய்யாது என்பதை அந்தப் பூனை உணர்த்துகிறது.

ஒருமுறை அவள் ஒரு முயலின் வீட்டில் விருந்துக்கு வருகிறாள். அந்த முயல் நீளமான தொப்பி அணிந்திருக்கிறது. அங்கே மேஜையைச் சுற்றிலும் பல காலி நாற்காலிகள் இருக்கின்றன. ஆனால் அந்த முயல் அவளைப் பார்த்து, ‘உனக்கு இங்கே இடம் காலியாக இல்லை பெண்ணே!’ என்று கூறுகிறது. அந்தத் தொப்பி கண்காணிக்கப்படாத அறிவுக்குக் குறியீடு. அது நம்மை வழிகெடுக்கிறது, திசை திருப்புகிறது. ’ஏற்கனவே பல பேர் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள், நான் இப்பச் செயதால் என்ன ஆகப்போகிறது?’ என்பது போல் நொட்டைச் சொல் சொல்லிக்கொண்டு நம் கடமையில் இருந்து நாம் விலகும்படிச் செய்கிறது. ஆனால், எத்தனைப் பேர் செய்துகொண்டிருந்தாலும் நம் பணியை நாம் செய்வதற்கான இடம் இப்பிரபஞ்சத்தில் எப்போதும் உண்டு!

இறுதியாக, ஆலிஸ் அந்த அற்புத உலகின் அரசியுடன் சீட்டு ஆடுகிறாள். இந்த அரசி நம்முடைய ego - தன்முனைப்பைக் குறிப்பவள். ஈகோ என்றால் தற்பெருமை மட்டுமல்ல. நம்முடைய குறுகிய மனநிலையும்கூட. வெற்றி பெற விடாமல் நம்முள்ளிருந்தே நம்மைக் கட்டிப் போடும் மனப்பான்மை. ஒவ்வொரு முறை ஆலிஸ் பாசிட்டிவாக விளையாடும் போதும் அந்த ராணி வெறி வந்தவளைப் போல் “அவளின் தலையை வெட்டுங்கள்” என்று ஆணையிடுகிறாள். உடனே ஆலிஸ் நைச்சியமாகப் பேசி அந்த அரசியின் கோபத்தை ஆறப்போடுகிறாள். மீண்டும் சீட்டாட்டம். கடைசியில் அரசி பிடிவாதமாக ஆலிஸுக்கு மரண தண்டனையை விதித்துவிட்ட தருணத்தில் வாழ்வே இருண்டு போய்விட்டதாக ஆலிஸுக்குத் தெரியும் நிலையில் சட்டென்று அவள் தன் ஆரம்ப அளவுக்குப் பெரிதாகிறாள். நம்முடைய அனுபவங்களின் பலனாக நம் ஆளுமை கொள்ளும் வளர்ச்சி நிலை அது. நம்முடைய அகக்கட்டமைப்பில் குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறந்துவிடுகிறது. சத்திய தரிசனம் கிடைக்கிறது. ஆலிஸ் அந்த அரசியை நோக்கி ‘நீ வெறும் சீட்டுக் குவியல்தான், போ’ என்று கத்த, அவள் சீட்டுக்களாகச் சிதறிப்போகிறாள். தன்முனைப்பின் அழிவு என்று இதனைச் சொல்லலாம். ஆலிஸ் மீண்டும் தன்னை நினைவுலகில் கண்டுகொள்கிறாள்.

இந்தக் கதை நம் ஆன்மிக வளர்ச்சியின் பாதையை மிக விரிவாக எடுத்துரைக்கிறது. யாத்ரிகனின் முன்னேற்றத்தில் (Pilgrim’s Progress) வரும் நடுப்பகுதியை இது விளக்குகிறது. தெய்விக அறிவு நம்மில் விழிப்பதற்கான முன்னேற்பாடாக அகத்தைத் தூய்மை செயவதன் விளக்கம் அது. அகக் குழப்பத்தை நீக்குவது அதன் ஆரம்ப நிலை. எனவேதான் ‘உன்னை அறிவாய்’ என்று நமக்குச் சொல்லப்படுகிறது. இதுவரை நாம் பார்த்த கதை அகப் போராட்டத்தைச் சொன்னது. ஆனால் அதன் நுட்பங்களுக்குள் செல்லவில்லை.”

உஃப். குழந்தைகளுக்கான கதைகள் இப்படியெல்லாம் உள்விவகாரங்கள் உள்ளவை என்பதை அறியும்போது சற்று பயமாகத்தான் இருக்கிறது. ஒன்று தோன்றுகிறது, குழந்தைகள் தங்களுக்கென்று தாங்களே கதைகளை எழுதிக்கொள்ள வேண்டியதுதான். பெரியவர்கள் திருந்த மாட்டார்கள் என்று தோன்றுகிறது!

சமீபத்தில் என் மகன் ஒரு கதை எழுத ஆரம்பித்தான். கீபோர்டின் பெயரையே தன் கதையின் நாயகிக்குச் சூட்டியிருந்தான். “Once there was a girl named Qwerty.”

ஆமாம், அது ஏன் girl என்று எழுதுகிறான்?
அடப் பெரியவங்களா, திருந்த மாட்டீங்கய்யா!

No comments:

Post a Comment