Saturday, November 24, 2018

ஆப்பிளுடன் உயர்தல் - 2





















இனி, சாரு நிவேதிதா இறைவனிடம் கோரிக்கை வைத்தாரே, அந்த “வாட்டர் பெட்” போன்ற மெத்தைக்கு வருவோம். அதன் உளவியலை இனி விவரிக்கலாம். மெத்தை ஏன் மென்மையாக இருக்கவேண்டும் என்று மனம் கேட்கிறது? அது மிதப்பது போல் இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்ப்பார்க்கிறது?

உடல் என்பது பருப்பொருள்தான். அதாவது இப்பூமியின் பாகம். ஆனால் அவ்வுடலுக்குள் அடைபட்டிருக்கும் ஆன்மா அல்லது உயிர் என்பது இவ்வுலகினது அல்ல. மேலுலகுக்குரியது. உடல் இவ்வுலகினால் ஆனது. ஆதமின் உடலே இப்பூமியிலிருந்து மண்ணெடுத்துதான் செய்யப்பட்டது. அவரது உடலிலிருந்தே ஜோடியான ஹவ்வாவின் (ஏவாளின்) உடல் செய்யப்பட்டது. அவ்வுடல்களுடன் அவர்கள் சொர்க்கத்தில் இருந்தார்கள். விலக்கப்பட்ட கனியை ஏவாள் தானும் புசித்துப் பின் ஆதமையும் புசிக்க வைத்தாள். அதனால் அவர்களிருவரும் இப்பூமிக்கு இறக்கப்பட்டார்கள்.

இங்கே நான் இஸ்லாமிய நோக்கிலிருந்தே தொடர விரும்புகிறேன். பைபிளின் பார்வையிலிருந்து இஸ்லாமியப் பார்வை இங்கே வேறுபடுகிறது. அதாவது, பைபிளின்படி கனியைப் புசிக்கும் முன் ஆதாம் ஏவாள் இருவருக்கும் உடலிச்சை (காமம்) இருக்கவில்லை. (உயிருக்குயிரான காதல் அல்லது காமமற்ற நேசம் மட்டும் இருந்தது எனலாம். எனவேதான் ஏசுவுடன் அத்தகு நேசத்தை எய்த துறவறம் கிறித்துவத்தில் பேணப்படுகிறது). கனியைப் புசித்ததும் காமம் உண்டாயிற்று. அதற்கு சொர்க்கத்தில் இடமில்லை என்று அவர்கள் பூமிக்கு இறக்கப்பட்டார்கள். காமம் முதற்பாவத்தின் விளைவாயிற்று. (பாவத்தின் சம்பளம் மரணம். காமம் என்னும் பாவத்தின் சம்பளம் பிள்ளைகள்! உயிரை எடுக்கவே வருகிறார்கள் போலும்!).

ஆனால், இஸ்லாத்தைப் பொருத்தவரை, ஏவாளை முதன்முதலில் கண்டபோதே ஆதமுக்கு அவர் மீது இச்சை உண்டாகித் தீண்ட முனைந்தார். சொர்க்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட மட்டுமில்லை, திருமணமே நடந்துவிட்டது! அந்த உணர்வு வெறும் காதல் மட்டுமல்ல, அதேபோல் வெறும் காமம் மட்டுமல்ல. அது காதலும் காமமுமாய் இருந்தது. (’இஸ்லாத்தில் துறவறம் இல்லை’ என்றும் ‘திருமணம் எனது வழிமுறை’ என்றும் நபிகள் நாயகம் சொன்னார்கள்). அப்போது சாத்தான் அங்கே இல்லவே இல்லை. எனவே, திருமண பந்தத்திற்குள் காமம் என்பது பாவம் அல்ல என்றாயிற்று. (இஸ்லாமியக் கோட்பாட்டின்படி சொர்க்கத்தில் செக்ஸ் உண்டு. அது சொர்க்கத்தின் இன்பம். அதன் ஒரு sample-ஆகத்தான் இப்பூமியிலும் புணர்வின்பம் தரப்பட்டிருக்கிறது) அப்படியானால், விலக்கப்பட்ட கனியின் ரோல் என்ன? சாத்தானின் ஆட்டமும் இங்கேதான் வருகிறது. அவனது தூண்டலால்தான் முதலில் ஏவாளும் பின்னர் ஆதமும் விலக்கப்பட்ட கனியைப் புசித்தார்கள். அது ஆதமிலும் ஏவாளிலும் கழிவாக மாறிற்று என்று இஸ்லாம் கூறுகிறது. ஆதமும் ஏவாளும் பூமிக்கு இறக்கப்பட்டு இங்கே மல-ஜலம் கழித்தார்கள். (மல-ஜலத்தை அடக்கி வைத்தபடி தாம்பத்ய உறவு கொள்ளக்கூடாது. நிம்மதியாக ஈடுபடவும் முடியாது. சாத்தானின் குறுக்கீடு மனிதர்களில் மல-ஜலத்தைக் கொண்டு வந்தது. கழிப்பறைக்குள் செல்லும்போது சாத்தான்களின் தீங்கை விட்டும் இறைவனிடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வதற்கு நபிகள் நாயகம் கற்றுத் தந்த பிரார்த்தனை ஒன்றுண்டு. அதனை ஓதிவிட்டே முஸ்லிம்கள் கழிப்பறைக்குச் சென்று வருவர்).


















 ஆதம்-ஏவாள் கதை இத்துடன் நிற்கட்டும். இப்போது அற்புதமான விஞ்ஞானி ஒருவரைப் பார்ப்போம். ஐசக் நியூட்டன் என்னும் அந்த அறிவியல் மேதை ஒருநாள் ஆப்பிள் மரத்த்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது ஓர் ஆப்பிள் கனி மரத்தின் கிளையைவிட்டு அவர் மீது விழுந்தது. அதை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு அவர் தியானத்தில் ஆழ்ந்தார். (தியானமாவது? தவமாவது? என்று கேட்க வேண்டாம். விஞ்ஞானிகளுக்கு ஆழ்ந்த சிந்தனையே தியானமும் தவமும். தன்னையே மறந்து சிந்தனைக்குள் மூழ்கித்தான் அறிவியலிலும் மெய்ப்பொருள் காண்கிறார்கள்.) அப்போது அவர் ஆப்பிள் எப்படி வீழ்ந்தது? என்று சிந்தித்தார். அதற்கான விடையாகப் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்தார். மேலும், நிலா ஏன் கீழே விழவில்லை என்றும் சிந்தித்தார். அதன் மூலம் வேறொரு பெரிய கண்டுபிடிப்பையும் செய்தார். இங்கே அதனை விளக்க இடமில்லை. நமக்கு இப்போது ஆப்பிள்தான் முக்கியம்.

புவியின் ஈர்ப்பு பருப்பொருளான, அப்பூமியின் சாரத்தால் விளைந்த ஆப்பிளை ஈர்த்து கீழே விழவைத்தது. நியூட்டன் உண்மையாகவே ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருக்கவில்லை என்றொரு தரப்புவுண்டு. ஆனால் ஆப்பிளின் வீழ்ச்சி பற்றி அவர் சொல்லியிருக்கிறார். இக்கூற்றுக்குப் பின்னால் அவருடைய கிறித்துவ ஆன்மிகப் பார்வை இருப்பதாக மறைஞானத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில், நியூட்டன் தனது கணித அறிவைக்கொண்டு பைபிளைத் துருவி ஆராய்ந்தவர். பைபிளின் பல வசனங்களையும் புதிரவிழ்த்து உட்பொருள் காண முயன்றவர். அவர் ஓர் ஆன்மிகவாதியும்கூட. ஆப்பிள் பூமியில் விழுந்தது என்பது ஆதம் – ஏவாளின் வீழ்ச்சியைக் குறிக்கிறது. பொதுவாக, fall of Adam என்றுதான் சொல்வார்கள். நியூட்டனின் வாசகம் அதை “fall of Eve” என்றாக்குகிறது. எனில், அந்த ஆப்பிள் ஏவாள்தான்! ஏவாளின் செல்லப்பெயர் ஆப்பிள்! அதாவது, ஆப்பிள் என்பது ஏவாளுக்கான, பெண்ணுக்கான குறியீடு.




















Detail from Birth of Venus by Alessandro Botticelli.
 
ஆப்பிளை நிற்கவைத்து (பழத்தைதான் சொல்கிறேன்) பூமத்திய ரேகை போல பாதியாக வெட்டினால் அதனுள் விதைகளின் அமைப்பு ஐமுனை நட்சத்திரம் (five-pointed star) போலக் காணும். ஐமுனை நட்சத்திரம் என்பது விடிவெள்ளியான வீனஸ் கிரகத்தைக் குறிக்கும். ரோமானியத் தொன்மவியலில் வீனஸ் என்பது காதல், காமம், அழகு மற்றும் வளமை ஆகியவற்றின் குறியீடு. கிரேக்கத் தொன்மவியலில் காதலை (அல்லது காமத்தை)யும் இச்சையையும் குறிக்கும் தொமம் “Eros”. இச்சொல்லின் anagram (அதாவது, எழுத்து முறை மாறியமையும் சொல்) Rose (ரோஜாப்பூ). சிவப்பு ரோஜா உலகெங்கும் காதலின் குறியீடு என்றாகிவிட்டது. ரோஜாப்பூ தொன்மவியலின்படி யோனியின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. (தமிழில் ‘பூப்படைதல்’ என்னும் சொல்லாடல் உள்ளதை ஓர்க). இப்படியாக ஒன்றைத் தொட்டு ஒன்று பின்னிப் பிணைந்ததொரு குறியீட்டியல் இதனைச் சுற்றி உருவாகியுள்ளது (இச்செய்திகளை டான் ப்ரௌன் எழுதிய ”டாவின்சி கோட்” நாவலில் முதன் முதலில் அறிந்தேன்).



ஆதமின் வீழ்ச்சிக்கு ஏவாளே காரணம் என்பது பைபிள் குர்ஆன் இரண்டின்படியும் தேற்றமாகிறது. பெண்ணால் மண்ணுக்கு வந்தவன் பெண்ணைக் கொண்டே மீண்டும் விண்ணுக்கு உயர முனைகிறான். இழந்த சொர்க்கத்தை மீண்டும் அடைந்துவிட வேண்டும் என்னும் தவிப்பு ஆண் பெண் இருவரிலும் இருக்கிறது. காமத்தில் சொர்க்க இன்பத்தின் சாயை இருக்கிறது. எனவே, கலவியென்பது விண்ணுயர்தலின் பாவனையாகிறது. 















Le-Ravissement-De-Psyche-The-Rapture-Of-Psyche (detail)
 
விண்ணுக்கு உயர வேண்டும் எனில் அதற்கு அடையாளமாக மனிதன் அன்றாடம் காண்பது பறவைகளைத்தான். வானவர்களுக்குச் சிறகுகள் இருப்பதை வேதங்கள் மனிதனுக்குச் சொல்கின்றன. பறவைகளிடம் காதலிருக்கிறது. அவை ஆகாயத்தில் ஜோடியாகப் பறந்தபடிக் கொஞ்சி விளையாடுகின்றன. இரு பறவைகள் ஒரே பறவையின் இணைச்சிறகுகள் போல் வளைந்து அலையாடியபடிக் காற்றில் விளையாடிச் செல்வதை மனிதன் காண்கிறான். ”விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்தச் சிட்டுக் குருவியைப் போலே!” (பாரதியார்) என்னும் குரல் அவனின் அகத்தில் ஒலித்தபடி இருக்கிறது. விலங்குகளிடம் சிறகுகள் இல்லை; ஆனால் காமம் உண்டு. அவற்றின் காமம் மண்ணில் பிணைந்து கிடக்கிறது. வானவர்களிடம் (தேவர்களிடம்) ஒளியும் சிறகுகளும் இருக்கின்றன; ஆனால் காமம் இல்லை. பறவைகளிடம் காமும் சிறகுகளும் இருக்கின்றன. எனவே, ஒருவகையில் பறவைகள் விலங்குகளின் இனத்தில் கட்டுப்பட்டவை அல்ல. அறிவின் விழிப்புள்ள எந்த மனிதனும் தனது காமம் விலங்குகளின் நிலைக்கு இழிந்து மண்ணில் தளைப்படுவதை விரும்பமாட்டான். மண்ணின் தளையறுத்து எவ்விச் சிறகடித்து விண்ணில் மேலெழுந்து மீண்டும் சொர்க்கத்தை அடைய அவன் ஏங்குகிறான். அவன் வானவர்களின் சிறகுகளையும் ஒளிமையயும் தேர்கிறான். (வானவர்களைப் போல் ஆகிவிட வேண்டும் என்னும் ஆசை சொர்க்கத்திலேயே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இருந்தது. விலக்கப்பட்ட கனியைப் புசிக்க வைக்க அவர்களுக்கு ஆசையூட்டும் சாத்தான் அக்கனி அவர்களுக்கு அந்தப் பயனை நல்கும் என்று அதையே சொல்கிறான். மேலும் நீங்கள் நிரந்தரமாக சொர்க்கத்தில் தங்கிவிடுவீர்கள் என்றும் சொல்கிறான். இது குர்ஆனில் உள்ள செய்தி. அதன்படி நோக்க, விலக்கப்பட்ட கனியைப் புசிக்காமல் இருந்திருந்தாலே ஆதமும் ஏவாளும் சொர்க்கத்தில் நிரந்தரமாக இருந்திருப்பார்கள் என்றாகிறது. எனவே, விலக்கப்பட்ட கனிதான் அவர்களின் காமத்தைத் தற்காலிகம் ஆகிவிட்டது! கலவியாடல் நீடித்திருக்க வேண்டும் என்று மனிதன் ஏங்குவதன் பின்னணி இதுவே.)

அவனது அக ஏக்கங்களுக்குத் தீர்வு நல்கும் பொருட்களைப் பருவுலகிலேயே உருவாக்க அவனது கூர்மதி முனைகிறது. அது படுக்கை உருவாக்கத்திலும் சயன அறை சார்ந்த இதரப் பொருட்களிலும் பிரதிபலிக்கிறது. உடலுறவில் ஆன்மா அந்த மேலுலகுக்குப் பறந்துவிடத் துடிக்கிறது, உடலுடனேயே! அந்த உணர்வை அது அடைய வேண்டும் எனில் உடலின் எடை, சுமை இல்லாத பாவனையை அது பெற்றாக வேண்டும். அதற்குத் துணையும் தூண்டுதலும் தரும் புறக்காரணிகளை மனிதன் உண்டாக்கிக் கொண்டே வருகிறான். (சுற்றுலாத் தலங்களான மலைகளில், உயரமான மரங்களின் உச்சியில் குடில்கள் கட்டிவைத்திருக்கின்றன. அதில் தம்பதிகளாகத் தங்கிக் களிக்கிறார்கள். இதன் பின்னணியில் உள்ள உளவியலும் இதுவே. அக்குடில்கள் பெரிய அளவிலான கூடுகள்தான்! காதற் பறவைகளாக மாறிவிட்ட பாவனையை அவை எளிதில் சித்திக்க வைக்கின்றன. மண்ணை உதறி விண்ணில் எழுந்துவிட்ட விடுதலையுணர்வை நல்குகின்றன.)

படுக்கையை மட்டும் கவனியுங்கள். தரையிற் படுத்தல் என்பது மண்ணுடன் நம்மைத் தளைப்படுத்துவதன் குறியீடாகிறது. கட்டில் அவனைச் சற்றே மேலுயர்த்துகிறது. இரண்டடி உயர விடுதலை! மெத்தை சற்றே எடையிழத்தலை பாவிக்க வைக்கிறது. அகத்தில் அதன் பொருள் சிறகு விரித்தல் என்றாகிறது. 

















பருமையின் முந்நிலைகளை கவனிக்கவும். மண் என்பது திடம் (solid). அதனினும் சற்றே சூக்குமமானது திரவம் (liquid). அதில் கிடைப்பது மிதத்தல் நிலை. மிதக்கும் பொருள் எடையிழக்கும். வாட்டர்பெட் (நீர்ப்படுக்கை) அத்தகு அனுபவத்தைத் தருகிறது. திரவத்தினும் சூக்குமமானது வளி (காற்று). அதில் கிடைப்பது பறத்தல் நிலை. மிதத்தலினும் மேலும் எடையை இழக்கும் நிலை. (”Angels could fly because they are light!” என்று இருபொருட்பட அழகாகச் சொல்கிறார் கேரி ஃபெல்லர்ஸ்) ஸ்விங்ஸ் (ஊஞ்சல்கள்) பறத்தலின் பாவனையைத் தருகின்றன. (“கட்டிலினும் கூடிக் களிகூர்ந்து கொண்டிருப்போம் / தொட்டிலினும் ஆடிச் சுகிப்போம் மனோண்மணியே!” – குணங்குடி மஸ்தான் சாகிப்(ரஹ்)) இன்னும் வரும், பறப்பது போல், புவியீர்ப்பு விசையே இல்லாத ஜீரோ கிராவிட்டி சூழலில் உறவாடல் நிகழ்த்தவியலுமா என்னும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் செய்துவருகிறார்கள். இரண்டு பருப்பொருட்களுக்கு இடையில் ஜீரோ கிராவிட்டி சாத்தியமே இல்லை என்றும், நுண்ணளவு ஈர்ப்புவிசை (மைக்ரோ கிராவிட்டி) இருக்கும் என்றும், வளி தாண்டிய வெளியில் (ஸ்பேஸ்) கலவினால் என்னென்ன சாதக பாதகங்கள் ஏற்படும் என்றும் சீரியஸ்லி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். “We choose to bone on the moon, not because we are easy, but because we are hard” – Chuck Sonnenburg, SF Debris).

இதெல்லாம் எல்லோரிடமும் பிரக்ஞையாக இருக்கிறதா? என்றால் இல்லை. ஆனால், கூட்டு நினைவிலியில் இந்த ஆழுணர்வுகள் நிச்சயம் உள்ளன. இல்லை எனில், சொல்லி வைத்தாற்போல் ஒரே காலத்தில் உலகெங்கிலும் ஒரே விதமான விருப்பங்கள் எப்படி வெளிப்படுகின்றன? எப்படி ட்ரெண்டிங் ஆகின்றன?  

 உடலுடன் மேலுயர்தல் என்பதில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. அது ஏசுநாதரின் உயிர்த்தெழுதலுடன், விண்ணுக்கு உயர்தலுடன் உங்களை இனம் காணச் செய்கிறது! ஏசுநாதர் உடலுடனேதான் விண்ணுக்கு உயர்த்தப்பட்டார். அவர் மட்டுமல்ல, நபி இத்ரீஸ் (எனோக், ஹெர்மிஸ் ட்ரைமெஜிஸ்டஸ்) அவர்களும் உடலுடன் உயர்த்தப்பட்டதோடு, சொர்க்கத்திற்குள்ளும் நுழைந்து அங்கேயே தங்கிவிடார்கள் என்று சமயப் பதிவுகள் கூறுகின்றன (நூல்: ஹயாத்துல் குலூப்). தாம்பத்ய உறவாடலை விண்ணுயர்தலுக்கான பாவனை என்று கண்டால் அது உயிர்த்தெழுதலும் ஆகிறது. ஃப்ரெஞ்சில் கலவியின் உச்ச இன்பத்தைக் குறிக்க “La petite mort(e)” (லா பெட்டீட் மோர்(ட்)) என்றொரு சொலவடையுண்டு. “சிறிய மரணம்” என்பது அதன் அர்த்தம். கலவியின் உச்சத்தில் எண்ணங்களற்ற பிரக்ஞை நிலை உண்டாவதை அது அப்படி சுட்டுகிறது. அதை ஆணவம் (ego) அழிந்துபோவதாகவும் காண்கிறார்கள். மனிதனில் ஆணவம் அழிகையில்தான் அவனது ஆன்மா உண்மையில் உயிர்த்தெழுகிறது. எனவே கலவியென்பது ஒரே சமயத்தில் சிறிய மரணமாகவும் சிறிய உயிர்த்தெழுதலாகவும் இருக்கிறது எனலாம். ஆணும் பெண்ணும் ”சிலுவை”யின் கைகள் என்று அர்த்தப்படுத்துவதுண்டு.
  
 அகத்தின் ஏக்கங்களுக்கான தீர்வுகளைப் புறப்பொருட்களில் அடைந்துவிட முனையும் தீவிரமே நாகரீகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான விசையாக இருக்கிறது. எனினும், அகத்தில் எழுச்சி கொள்ளாமல் புற வசதிகள் பயனைத் தராது. ஏமாற்றமும் சலிப்புமே மிஞ்சும். எனவேதான் கிழக்கின் ஆன்மிகம் அகவெழுச்சியில் தனது சிந்தனையைக் குவித்தது. மேற்கும் கிழக்கும் ஒன்றிலொன்று ஊடுறுவிக் கலக்கும் காலம் இது. இந்த ஊடுறுவல் (intersection) விரைவில் ஒரே வட்டமாகிவிடும். அப்போது அகத்திலும் புறத்திலும் ஒருசேர எழுவோம். அகத்தால் உயர்வோம்! ஆப்பிளுடன் உயர்வோம்!!

No comments:

Post a Comment