Tuesday, November 6, 2012

கண்ணீரும் புன்னகையும்


பிள்ளைகள் அரபிப் பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள். அரபி அட்சரங்களை அசைவுகளுடன் அண்ணன் சொல்லித் தர தங்கை வாசித்துக் கொண்டிருந்தாள்.
இடையிடையே அவளுக்குச் சிரிப்பு பொங்கிற்று. ஆசிரியராய்த் தன்னை பாவித்துக் கொண்ட அண்ணன் அவளிடம் சொன்னான்: “சிரிக்காதே. அல்லாஹ்விடம் பேசும்போது இப்படித்தான் சிரிப்பியா?”

இதைக் கேட்டதும் மனத்தில் ஓர் உரையாடல்:
“அல்லாஹ்வுடன் பேசும்போது சிரிக்கலாமா? அப்படி யாரும் சிரித்ததாகத் தெரியவில்லை. தொழுகை என்பது அல்லாஹ்வுடன் வசனிப்பது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அதில் சிரிப்பிற்கு இடம் இல்லைதான். ஆனால் தனிப்பட்ட முறையில் இறைவனுடன் உரையாடுவதான முனாஜாத் என்னும் வகைகளிலும் கண்ணீர் உள்ள அளவு நகை இல்லையே?”

“ஆமாம். கண்ணீரின் ஆழம் நகையில் இல்லை. எனினும் ஆண்டவனுடன் அடியான் கொண்டிருக்கும் உறவில் சிரிப்பிற்கு அறவே இடம் இல்லை என்று என்னால் எண்ண முடியவில்லை. சிரிப்புக்கள் பதியப்படாமல் போயிருக்கலாம். கண்ணீர் மட்டுமே பதிவாகியிருக்கலாம்.

கண்ணீர் ஒரு ரசவாதம். அதன் தன்மை சிரிப்பில் இல்லை. ஆனால் சிரிப்பும் ஒருவகை ரசவாதம்தான் என்பதை சூஃபிகள் அறிந்துள்ளனர். அது வலி இல்லாத அறுவை சிகிச்சை.
ஆனால் நோயில்லாத இடங்களில் எல்லாம் கத்தியை வைத்துக் கீறிக் கொண்டிருந்தால் அது அறுவை சிகிச்சை அல்ல. கோரப் படுகொலை! எனவேதான் வெற்று நகைச்சுவை என்பது ஆன்மிகத்தில் நச்சு என்று நவிலப்பட்டது. அதிகமாகச் சிரிப்பது அறியாமையின் அடையாளம் எனப்பட்டது. அதிகமாகச் சிரித்தால் இதயம் செத்துவிடும் என்பது நபிமொழி ஒன்றின் கருத்து. அதே சமயம், ‘உன் மனத்தை மிகவும் கொடுமை செய்யாதே. அது குருடாகிவிடும்’ என்று ஹழ்ரத் அலீ (ரலி) கூறியதும் முக்கியமான ஒன்று.

என்னைப் பொருத்தவரை ஞானமில்லாச் சிரிப்பு எந்த அளவு அபத்தமானதோ ஞானமில்லாக் கண்ணீரும் அதே அளவு அபத்தமானதுதான். வலிந்து சிரிப்பது போன்றே வலிந்து அழுவதும் அசிங்கமானது. இயல்பாகத் துளிர்க்கும் கண்ணீரும் இயல்பாக மலரும் புன்னகையும் ஆன்மிகத்திற்குத் தடைகள் அல்ல. இயல்பான உணர்வாய் இருக்கும் பட்சத்தில் எதுவும் இறைவனின் ஏற்பைப் பெறும் என்பதே என் தெளிவு.”

“அடடே! நீங்கள் சொன்ன சொல் கலீல் ஜிப்ரானை நியாபகப் படுத்துகிறது. அவர் தன்னுடைய ஒரு நூலுக்கு “TEARS AND LAUGHTER” (கண்ணீரும் சிரிப்பும்) என்று பெயர் வைத்திருக்கிறார். ”TEARS AND SMILES” (கண்ணீரும் புன்னகையும்) என்று வைத்திருக்கலாமே? அவர் ஏன் சிரிப்பு என்றார்?”

“நீங்கள் கேட்ட கேள்விக்கு ஓஷோவிடம்தான் பதில் கேட்க வேண்டும். ‘ஞானம் அடைந்தவுடன் நீங்கள் செய்த முதல் காரியம் என்ன?’ என்று அவரிடம் கேட்கப்பட்டது. அவர் சொன்னார், ‘ஞானம் அடைந்தவுடன் நான் சிரித்தேன்! என் முயற்சி எத்தனை அபத்தமானது என்று எண்ணிச் சிரித்தேன். ஏனெனில் நானல்லாத ஒன்றைத்தான் அடைவது சாத்தியம். ஏற்கனவே என் இயல்பாக இருக்கும் ஒன்றைக் கண்டுகொள்ளாமல் நான் இத்தனை காலம் அதைத் தேடி அலைந்ததை நினைத்துச் சிரித்தேன்’

எவன் உள்ளத்தில் உண்மை உறைகின்றதோ அவனது கண்ணீரின் முடிவில் புன்னகை தோன்றும். சூரியன் சுடரும் பகலில் மழை பெய்யும் போதுதான் வானவில் தோன்ற முடியும். அது இரவில் மழை பெய்தால் தோன்றுவதில்லை அல்லவா?

நீங்கள் வானவில்லை மழையின் அடையாளம் என்கிறீர்கள். நான் வானவில் என்பது சூரியனின் அடையாளம் என்கிறேன்.

அதுபோல் கண்ணீரை உலர்த்தும் புன்னகை உண்மையின் முகவரியாய் உள்ளது.
எனினும் கண்ணீரின் முடிவில் ஒருவன் புன்னகை செய்தால் அது மிகவும் இயல்பானது என்றே நாம் எடுத்துக் கொள்வோம். ஆனால் கண்ணீரின் முடிவில் ஒருவன் வெடிப்புறச் சிரித்தான் என்றால் நாம் மிரண்டுவிடுவோம். ஏன்?

கண்ணீர் கழுவிய கணத்தில் உண்மையின் நிழலை மட்டுமே கண்டவன் புன்னகை செய்கிறான். அதன் முகத்தை முதல் முறையாக தரிசிப்பவன் சிரிக்கிறான். கலீல் ஜிப்ரான் அதனால்தான் ‘TEARS AND LAUGHTER’ என்கிறார்.

“விலாவறச் சிரித்திட்டேனே” என்கிறார் அப்பர்.

விலா எலும்புகள் நோகச் சிரித்தாராம். அதாவது கண்ணீர் வரும் வகையில் சிரித்திருக்கிறார்.

கண்ணீரில் இருந்து சிரிப்பும், சிரிப்பில் இருந்து கண்ணீருமாக அதுவே ஒரு ஞான வேள்வி!
’இந்த உலகத்தை உற்று நோக்கும் எவனும் சிரிக்காமல் இருக்க முடியாது’ என்கிறார் ஓஷோ. அத்தனை அபத்தங்கள் இங்கே கொட்டிக் கிடப்பதை ஞானியின் கண்கள் கண்டுகொள்கின்றன.

மீண்டும் அந்த வினா: “அல்லாஹ்வுடன் பேசும்போது சிரிக்கக் கூடாதா அத்தா?”
“நீ உன் நண்பனுடன் பேசும்போது சிரிப்பாயா மாட்டாயா?”

“சிரிப்பேன்”

“அல்லாஹ்வும் நீயும் நண்பர்கள் என்றால் அவனுடன் பேசும்போது ஏன் சிரிக்கக் கூடாது?”
’அறிக, நிச்சயமாக இறைவனின் நேசர்களுக்கு அச்சம் இல்லை. அவர்கள் கவல்வதும் இல்லை’ என்பது திருக்குர்ஆன் சொல்லும் சேதி. அச்சமும் கவலையும் இல்லாதவன் சிரிப்பதற்குத் தடைகள் ஏது?

எனினும் அவர்களின் சிரிப்பு சராசரி மனிதர்களின் சிரிப்பினின்றும் வேறுபட்ட ஒன்று.
சராசரி மனிதர்களின் சிரிப்புணர்வை நினைத்தால் எனக்கு அழுகையே வந்துவிடும் போலிருக்கிறது. அற்பமான நகைச்சுவைத் துணுக்குகளுக்கும் காட்சிகளுக்கும் மக்கள் நக்கிச் சிரிப்பதைப் பரவலாகப் பார்க்க முடிகிறது.

கிச்சு கிச்சு மூட்டினால் சிரிக்கும் குழந்தையின் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். அதில் ஏதும் தப்பில்லை. ஆனால் சொறி பிடித்த கைகளால் தங்கள் மனத்தின் அக்குளை அடிக்கடி கிச்சு கிச்சு மூட்ட வைத்துச் சிரிக்கிறார்கள்!

நம் சிரிப்பு வெளியே இருந்து வருகின்றது.
ஞானிகளின் சிரிப்பு உள்ளே இருந்து வருகின்றது.
நம் சிரிப்பு சப்தங்களால் ஆனது.
ஞானிகளின் சிரிப்பு மௌனங்களால் ஆனது.
நம் சிரிப்பு மாற்றாரைப் புண்படுத்துவதாக உள்ளது
ஞானிகளின் சிரிப்பு மாற்றாரைப் பண்படுத்துவதாக உள்ளது.

ஞானிகள் சிரிக்கும்போது மனம் வித்தாகவும் வாய் பூவாகவும் இருக்கின்றன. பலர் சிரிப்பதைப் பார்க்கும்போது வாயை வள்ளலாக்கி அதனிடம் மனத்தை ஒரு பிச்சைப் பாத்திரமாக ஏந்தி நிற்பது தெரிகிறது.

சிரிப்பு மனிதனின் தனிச்சிறப்பு என்கிறார்கள். விலங்குகள் சிரிப்பதில்லையாம். மனிதன் மட்டுமே சிரிக்கின்றானாம்.

காட்டில் யானை ஒன்று இறந்துவிட்டால் சக யானைகள் சூழ நின்று துக்கம் பேணுகின்றன. அவற்றின் கண்களில் கண்ணீர் கசிகின்றது. பிறருக்காக அழும் குணம் விலங்குகளிடமும் உள்ளது என்பதை இது காட்டுகின்றது.

மனிதனிடமோ பிறருக்காக அழும் குணம் அரிதாகிவிட்டது. அது ஏதோ மாமனிதர்களின் – மனிதப் புனிதர்களின் பண்பு என்பது போல் அவன் ஆக்கிவிட்டான். பிறரின் துன்பத்தைப் பார்த்து அவன் சிரிக்கிறான். இதுதான் சிரிப்பு மனிதனின் தனிச்சிறப்பு என்பதன் லட்சணமா? வரமாகக் கிடைத்த ஒன்றை அவன் எவ்வளவு பெரிய சாபமாக மாற்றிவிட்டான்!

’இறைவா! பிறர் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலை வந்த போதும் பிறருக்காக அழும் நிலையில் என்னை ஆக்கி வைப்பாயாக!’ என்று பிரார்த்திப்போம்.

“சரி, அப்படியே, ‘என்னையே நான் பார்த்துச் சிரிக்கும் நிலையும் அருள்வாயாக!’ என்றும் கேட்போம். இதெல்லாம் இருக்கட்டும். ஞானிகளில் சிரிப்பவர்களும் இருக்கிறார்கள் சிரிக்காதவர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் கவனித்திருக்கிறேன். இது ஏன்?”

“ஞான நிலைகள் பல. அவற்றில் யார் எந்நிலையில் இருக்கிறார்களோ அதற்குத் தக அவர்களின் அகமும் முகமும் அசைவும் உரையும் அமைகின்றன.
நண்பர்கள் உரையாடும் போது சிரிப்பும் கலகலப்பும் இருக்கும் என்றேன். ஆனால் காதலில் அந்த அளவு இருக்காது.

காதலின் உரையாடலில் சிரிப்பு உப்பைப் போல் இருக்கும். அதன் உணவு வேறு உணர்வு. அதன் சுவை மௌனத்தில்தான் தெரியும்.

ஆரம்பத்தில் இருக்கும் பேச்சும் சிரிப்பும் கலவியின் ஆழத்தில் மௌனமாகிவிடும். எதுபோல் எனில், கரையில் சப்தமிட்டுப் புரளும் கடலின் அலைகள் அதன் ஆழத்தில் அமைதியாய் அசைவது போல்.

ஞானக் காதலிலும் இந்நிலைகள் உள்ளன.”

”சில ஞானிகளிடம் சிரிப்பும் கலகலப்பும் அறவே இல்லையே?”

“அது இன்னும் மேலான ஒரு நிலை. காதலி என்ற மறுநபர் உள்ள நிலையில்தான் காதலன் பேசிச் சிரிக்கிறான். இருவர் ஒன்றாகும் கணங்களில் அவை மறைந்து போகின்றன.
நீ தனிமையில் அமர்ந்திருக்கும் போது பேச்சும் சிரிப்பும் இருக்குமா? நீ மட்டும் இருக்கும் போது அங்கே மௌனமாகத்தானே இருப்பாய்?

இறைவனே இருக்கிறான் என்னும் அனுபவத்தில் தான் அற்று இருக்கும் ஞானியிடம் காதலின் பேச்சும் சிரிப்பும்கூட மறைந்து விடுகின்றன.”


1 comment:

  1. Enga Hazrath oru hadeethu solli koduthaargal, "enakku terinthathellaam ungalukku terinthaal neengal kuraivaaga sirippeergal athigamaaga aluveergal" - ithu thaan hatheethu, aanaakkaa itharku vilakkam sollum pothu aluveergal endraal aluvathu endru artham alla pesaamal iruppeergal endru thaan artham endru sonnaargal - ithu enakku yeppo nyabagam vanthuchunnaa, "ngaanigalin sirippu mounangalaal aanathu .." Endru neengal eluthi iruppathai padikkum pothu vanthathu

    ReplyDelete