Sunday, February 24, 2019

ஒரு சூஃபியின் டைரி - 15
















#108 மலைகளின் மீது இறங்கும் வெளிப்பாடுகள்
      ஒரு மணி நேரம் கழிந்தது. என் மனதில் இறக்கம் (நுஸூல்) பற்றி நினைவு கூர்ந்தேன். தெய்வீகத்தையே ஆடையாக அணிந்த சத்தியப் பரம்பொருள் அழகும் வாஞ்சையும் துலங்க ஷீராஸில் உள்ள என் தியான மடத்தின் மேற்கூரை மீது அமர்ந்திருக்கக் கண்டேன். நான் அவன் முன் பரவமாகி நின்றேன். பிறகு நான் இணைதலின் ரகசியம், ஒருமையின் எதார்த்தங்கள் மற்றும் சக்தியின் புனிதம் ஆகியவற்றைப் பற்றி எண்ணினேன். சத்தியப் பரம்பொருள் உள்ளமையைப் பார்த்தான். மலைகள் எல்லாம் அவன் காலடி முன் வீழ்ந்து கரைந்து போகக் கண்டேன். விதானம், காற்பலகை, வானங்களும் அவற்றிலுள்ளவை அனைத்தும், பூமியும் அதிலுள்ளவை அனைத்தும், எல்லாமே சிரம் தாழ்த்தி வீழ்ந்தன. நான் அவனை கண்டேன். அவனது அந்தத் தன்மையின் வெளிப்பாடு எனக்கான கருணையும் அன்புமே ஆகும் என்று அவன் என்னை உணரச் செய்தான். போதைக்கும் தெளிவுக்கும், ஒருமைக்கும் காதலுக்கும் இடையில் நான் இருந்தேன். இந்த திரை அகற்றல்களுக்கு மத்தியில் அனைத்து மலைகளும் சத்தியப் பரம்பொருளுக்கு அருகில் வருவதைக் கண்டேன். அந்த மலைகள் ஒவ்வொன்றிலும் எனக்கான புனித பானம் ஒன்றிருந்தது. நாம் பெரிதும் மகிழ்ந்தேன். பிறகு நினைத்தேன், “இந்த ரகசியங்களின் மகத்துவ நிலையை நான் எடுத்துச் சொல்ல இவற்றைப் புரிந்துகொள்கின்ற பக்குவம் உள்ளவர் யார்தான் இருக்கிறார்?”














#109 பழத்தோட்டம்
      என் மனைவியருள் ஒருவர் இறந்த பின் பாசாவிற்கு அருகில் நானொரு பழத்தோட்டத்தை வாங்கும்படி ஆனது. நான் எண்ணினேன், “அவளுடைய மரணித்துக்குப் பிறகு இந்தப் பழத்தோட்டத்தை வைத்து நான் எப்படி வாழ்வேன்?” அப்போது மறைவிலிருந்து குரலொன்று கேட்டது, “அந்நாளில் சொர்க்கவாசிகள் தங்குமிடத்தால் மேலானர்களாகவும் ஓய்விடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்” (குர்ஆன்:25:24). இத்திருவசனத்தை நான் ஆழ்ந்து நோக்கியபோது மேலான இறைவன் சொன்ன அந்த வாசகத்தின் உட்பொருளை நான் உணர்ந்தேன், “வெளியேறு இந்தத் தோட்டத்தை விட்டு”. நரகத்தின் வாயிற் காப்பாளரான வானவர் அல்-மாலிக் அவர்கள் “நரக நெருப்பை விட்டுப் வெளியேறு” என்று சொன்னதைப் போல. இறைவன் அல்லாத எதுவும் கண்ணிமைக்கும் நேரத்தில் அழிக்கப்படுகின்றது. ஒருமையின் அழகும் முடிவின்மையின் ஆற்றலும் கொண்டிருக்கிறான் இறைவன், என்றும் திரையிடப்படாமல். அவன் சொன்னான், “அவனது முகம் அன்றி அனைத்தும் அழிகின்றன” [குர்ஆன்: 28:88]. அதுவே ஒருமை மற்றும் அழிவின் படித்தரம். நான் வியப்புற்று நின்றேன், அழிக்கப்பட்டேன், நான் எங்கிருந்தேன் என்று எனக்குத் தெரியாது.






















#110 காற்றாகின கடல்கள் எல்லாம்
       பிறகு அவன் என்னை விட்டு மறைந்தான். காற்றுப் போன்ற கடல்களுக்குள் என்னை நுழைய வைத்தான். சத்தியத்தின் வல்லமை என்னைச் சுற்றிச் சூழ்ந்தது. இந்தப் பெருங்கடல்களில் நான் என்னை ஒரு துளியாகக் கண்டேன். இடமும் வலமும் மேலும் கீழும் முன்னும் பின்னும் அதற்கு இல்லை. மகத்துவத்துக்கு மேல் மகத்துவம், சக்திக்கு மேல் சக்தி, வல்லமைக்கு மேல் வல்லமை, நித்தியத்திற்கு மேல் நித்தியம், பின்னூழிக்கு மேல் பின்னூழி என்பதல்லால் நான் கண்டது வேறில்லை. பிறகு அவன் மறைவின் கருவறைகளில் இருந்து சொன்னான், “இது முடிவற்ற நித்தியத்துவம், நித்தியமான தெய்வீகப் பிரசன்னம்”.

#111 ஆதமின் தோற்றத்தில்
      அது நிகழ்ந்த பின், நான் என்னை ஏழு வானங்களுக்கு மேலே இருப்பவன் போலக் கண்டேன். வானவர்களும் இறைத்தூதர்களும் மணப்பெண்கள் போல் அமர்ந்திருந்தனர். பேரழகும் மகத்துவம் கொண்டு சத்தியப் பரம்பொருள் தோன்றி அவர்களைக் கடந்து சென்றான். அவனது வாஞ்சைக்கும் கலப்பற்ற பேரழகிற்கும் அனைவரும் ஏங்கினார்கள். அழகின் ஆடைகள் கொண்டு ஆதமின் தோற்றத்தில் இறைவன் போர்த்தப் பட்டுள்ளான். அந்த வானவர்கள் எல்லாம் இறைவனின் வாசலில் அவனது வல்லமையின் திறப்பிற்காக ஒவ்வொரு கணமும் குறைவற்ற ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. இதுவே அவர்களின் நித்தியப் பழக்கம். சத்தியப் பரம்பொருள் பூமிக்கு இறங்கி கிழக்கிலிருந்து மேற்கிக்குச் சுற்றிச் சென்றான், பிறகு அவன் என்னிடம் வந்து, “நான் உனக்காகவே வந்தேன், நீ தூங்கிக் கொண்டிருந்தாய்” என்று சொன்னான். பிறகு அவன் என் வீட்டில் ஒரு மணி நேரம் இருந்தான், நான் விண்டுரைக்க இயலாத உருவத்தில். அவனது பேரழகைக் காண்பதன் கருதுவதன் இனிமையில் எனது இதயமும் உடலும் அப்படியே உருகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். “உன்னை நான் படைப்பதற்கு முன் உன்னைத் தேடிக்கொண்டு மறைவின் கருவறையிலிருந்து நான் எழுபது முறை வெளியே வந்தேன். உனது இடங்களை உனக்காகக் கண்டேன், எனக்கும் இந்த இடங்களான மறைவுலகம், பாலைவனங்கள் மற்றும் பெருங்கடல்கள் ஆகியவற்றுக்கு இடையே எழுபதாயிரம் ஆண்டுகள் தொலைவுப் பயணம் இருந்த போதும்.” என்னை அவன் நெருங்கி வந்து நெருங்கி வந்து மேலும் நெருங்கி வரும் வரை, நான் மறைந்து அழிந்துபோகும்வரை என்னை அனுகினான். ஒவ்வொரு கற்பனை, குறிப்பு மற்றும் வெளிப்பாட்டை விட்டும் இறைவன் பரிசுத்தமானவன்.

#112 கடந்த நிலை ரகசியம்
      இது ஓர் ஆன்மிக நிலை. இதன் ரகசியம் சொல்லத் தகாது. இது தெய்விகத்தின் ரகசியங்கள், பண்பின் உருவாக்கம் மற்றும் கருணைகளின் வெளிப்பாடு ஆகியவற்றைத் தன்னுள் கொண்டுள்ளது. அவனது போதுமான கருணையும் அருட் கொடைகளும் அவனது அறிவர்கள் காதலர்கள் ஆகிய அடியார்களில் நேசத்தைத் தூண்டுகிறது. அவனது உதவி இல்லை எனில், காலத்தின் ஆவர்த்தனங்களில் சிக்கியுள்ள அவர்கள் எப்படி அவனது முகத்தின் நுட்பமான ஒளிகளை தரிசிப்பார்கள்? அவன் தனது ஆற்றலுடன் முழுமையாக வெளிப்பட்டால் இருப்பவை அனைத்தும், படைப்புக்கள் அனைத்தும் அழிந்துவிடும். 
      
      கவலைப்படாதே நண்பனே! இது போன்ற திரை விலகல்கள் இறைத்தூதர்கள் மீதும் மெய்யடியார்கள் மீதும் இறங்கியுள்ளன. ஆனால் அவர்கள் அவற்றையெல்லாம் தெய்வீகத்தினால் போர்த்தப்பட்ட வெளிப்பாடுகளின் மூலமாக மட்டுமே அறிவித்துப் பாதுகாத்துள்ளனர். தனி நபர்களின் பண்புகளில் அவனது சுயத்தையும் பண்புகளையும் பார்க்கின்ற எவரையும் விட்டு அவன் கடந்தவனாக இருக்கிறான்.

#113 தொழுகைக்கு வானவர்களை அழைத்தல்

      நடுநிசிக்குப் பின் ஒரு திரைவிலக்கத்தில் என்னை நான் ஷீராஸில் என் மடத்தில் இருப்பவனாகக் கண்டேன். தொழுகை மாடக்குழிவைக் கண்டேன். மேலான இறைவன் அதில் தன்னைத் தோற்றினான். அவனை எப்போதும் நான் கண்டதை விடவும் மிக அழகாக இருந்தான். அவனது வல்லமை மற்றும் அழகில் அவன் திருப்தியாக இருப்பதைப் போல் தெரிந்தது.  ஆனால், அவன் என்னை விட்டு ஒளிந்துகொண்டான். நான் பேருவகை மற்றும் ஆன்மிக நிலைகளில் மூழ்கியிருந்தேன். ஒரு மணி நேரம் கடந்தது. கூரையின் மீது மேலான இறைவனைக் கண்டேன். தொழுகை திசை நோக்கி அவன் தொழுகைக்கு அழைத்துக் கொண்டிருந்தான். “முஹம்மது இறைத்தூதர் ஆவார் என்று நான் சாட்சி சொல்கிறேன்” என்று அவன் சொல்வதைக் கேட்டேன். பூமி வானவர்களால் நிரம்பிற்று. மேலான சத்தியப் பரம்பொருள் தம்மைத் தொழுகைக்கு அழைப்பதைக் கேட்ட வானவர்கள் விசும்பியழுது பெருமூச்சு விட்டனர். மேலான இறைவனின் மகத்துவமும் பெருமையும் ஈர்த்தலால் அவனை நெருங்கி வராமல் இருக்க அவர்களால் இயலவில்லை. எனது பிரக்ஞையில், மேலான இறைவனின் திருவசனம் ஓதப்பட்டது, “அவர்களுக்கு மேலுள்ள அவர்களின் ரட்சகனை அவர்கள் அஞ்சுகிறார்கள்; அவர்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதனைச் செய்கிறார்கள்” [குர்ஆன்:16:50]


























 #114 அதிகாரப் பறையொலிகள்
      மேலான இறைவனை நான் அடிக்கடிக் கண்டேன், தியான விடுதியின் வாசலில் அவன் யாழிசைத்துக் கொண்டு நிற்பதைப் போல். அணு அணுவாய், எல்லாப் பொருளும் சிரிக்கும் வரை பேருவகையும் ஆனந்தமும் பரவிற்று. அதற்கு முன்பும் அடிக்கடி இறைவனை நான் கண்டிருக்கிறேன், ஒவ்வொரு மேலுக்கும் மேலாய், அவனே பறை கொட்டுபவனாக. தன் அரசாட்சியைத் தானே பிரகடனம் செய்வதாக அதன் மூலம் அவன் காட்டுகிறான். என் காலத்தில் என்னை அவன் அரசாட்சிக்குத் தேர்ந்தெடுத்துப் பிரதிநிதியாக்கி உலகை ஆளச் செய்தான். இதுவும் இது போலவனவும் தேர்வு, ஏற்பு, பதவியளிப்பு மற்றும் இணைவு ஆகியவற்றின் உதாரணங்கள். வானவர்கள் மற்றும் ஆன்மிகர்களின், சாதாரண மனிதர்களின் இதயங்கள் எண்ணுவதைக் கடந்த நிலையில் மேலான இறைவன் இருக்கிறான். இவை அவன் தனது நேசர்களான ஞானிகளுக்குச் செய்யும் உதவிகள். இறைத்தூதரின் வாக்குகளில் இது போன்ற விஷயங்கள் பல உள்ளன. இறைத் தூதர்களின், இறை வேதர்களின் மற்றும் ஞானிகளின் தலைவரான முஹம்மது (ஸல்) அவர்களின் சொற்களுடன் இவற்றுக்கு என்ன தொடர்பு? இத்தனைத் திரை விலகல்களுக்குப் பின்னும் எவனாவது என்னைச் சந்தேகப்பட உரியவன் என்று எண்ணுவானாகில், எவற்றைக் கொண்டு குறியீடான நபிமொழிகள் விளங்கப்படுகின்றனவோ அந்த ஞானியரின் பரவசங்கள் மற்றும் சூஃபிகளின் உணர்வெழுச்சிகள் ஆகியவற்றின் ஒற்றை நறுமணத்தைக் கூட இதுவரை முகர்ந்திராத முட்டாளே ஆவான். இறைத்தூதர் அருளினார்கள், ”மேலான இறைவன் தனது சுயத்தின் வடிவத்தை தான் நாடிய முறையில் காட்டியருள்வான்.”

(to be continued...)

Sunday, February 17, 2019

நிறமெனத் தெரிவதெல்லாம்



     











நாள்தோறும் முகநூலில் வாட்ஸப்பில் இதர சமூக ஊடகங்களில் பல்வேறு காணொளிப் பதிவுகள் வந்து சேர்கின்றன. அவற்றில் பத்து விழுக்காடாவது பார்க்கிறேனா என்பதே ஐயம்தான். சொல்லிடுகைகளின் நிலையும் அஃதே.

      பெருவணிக அலுவலங்களில் பிரதி மாதமும் ‘விழுத்தொண்டு ஆற்றினார்’ ஒருவரைத் தேர்ந்து ”இம்மாதத்தின் சிறந்த பணியாளர்” எனப் பாராட்டுகிறார்கள் அல்லவா? அதுபோல், சென்ற மாதம் நான் கண்ட சிறந்த காணொளி இதுவே என்று ஒன்றனைத் தேர்ந்து முன் வைக்கலாம். முதல் மூன்று இடங்கள் பெறும் காணொளிகள் என்றும் தேர்ந்தெடுக்கலாம். தேவை எனில், ஆறுதல் பரிசு பெறும் காணொளிகள் என்று இன்னும் மூன்றைச் சேர்த்துக் கொள்ளவும். மாதத்துக்கு ஐநூறு அறுநூறு காணொளிகள் பார்க்கும் திறன் படைத்தவரா நீங்கள்? சிலிகான் உலகின் சித்த புருஷரே! என்னை மன்னியும். தங்கள் துய்யச் சேவடிகள் படத்தகும் இடம் இதுவன்று.

      13-ஜனவரி-2019-ல் நான் கண்டு முகநூலில் பகிர்ந்த காணொளி ஒன்று இன்னமும் நினைக்குந் தோறும் நெஞ்சை நெகிழச் செய்கிறது. தனது அறுபத்தாறாவது பிறந்த நாளில் தன் மகளிடமிருந்து தந்தை ஒருவர் கிஃப்ட் பெறுகிறார். எங்கும் இயல்பாக நிகழக் கூடியதுதான். ஆனால், இங்கே அந்தத் தந்தையும் வித்தியாசமானவர். அவர் பெற்ற அன்பளிப்பும் வித்தியாசமானது.


     









 பிறந்தபோதே நிறக்குருடு (Color Blindness / deuteranomaly / protanomaly) என்னும் குறைபாட்டுடன் இவ்வுலகுக்கு வந்தவர் அவர். எல்லாக் குழந்தைகளுமே முதல் சில வாரங்களுக்கு நிறங்கள் எதையும் பார்ப்பதில்லை. கண்களிலிருந்து பன்னிரண்டு இன்ச்சுகள் தூரத்தில் உள்ள பொருட்களை மட்டுமே காண்கின்றன. அவற்றையும் கறுப்பு வெள்ளையாகவும் சாம்பல் நிற அடர்த்திகளாகவும் மட்டுமே காண்கின்றன. பொருட்களின் வடிவங்களை மட்டுமே அவை கிரகித்துக் கொள்கின்றன. நான்கு மாதங்களைத் தாண்டும் போது அவற்றின் கண்களில் நரம்பமைப்புகள் வலுப்படும்போதுதான் முதன் முதலாக நிறத்தைக் காண்கின்றன. ஒரு குழந்தை காணும் முதல் நிறம் சிவப்பு. பிற நிறங்களை ஐந்தாம் மாதத்திலிருந்து காணத் தொடங்குகிறது என்று கண்ணறிவியல் கூறுகிறது.

      ஆனால், அரிதின் அரிதாகச் சில குழந்தைகளுக்குக் கண்ணின் உள்ளே நரம்புகளின் வளர்ச்சி குறைபட்டு அப்படியே அமைந்துவிடுகிறது. எனவே அவர்களால் வாழ்நாள் முழுதும் வண்ண வண்ண நிறங்களைக் காண இயலாதாகிறது. அவர்களின் உலகம் வெறும் கறுப்பு வெள்ளை மட்டுமே. பிறர் வண்ணங்களைக் கண்டு பரவசமுற்று அவற்றின் பெயர்களைச் சொல்லிக் கூவும்போதெல்லாம் இவர்கள் கறுப்பு வெள்ளையின் பிரிகைகளையே அப்படிப் பெயரிட்டு ‘நாம்’ அழைப்பதாக எண்ணி அவர்களும் கூவி மகிழக்கூடும். நாம் பார்க்கும் நிறங்களை அவர்கள் பார்ப்பதில்லை என்பதை நாம் அவர்களுக்கோ அல்லது அவர்கள் நமக்கோ நிரூபித்துக் காட்ட எவ்வழியுமில்லை. அவர்கள் நிறங்களைப் பார்க்கும் ஆற்றலைப் பெறுவது ஒன்றுதான் வழி.

அவ்வழியை நெடுங்கால ஆராய்ச்சியின், பரிசோதனைகளின் விளைவாக மருத்துவ அறிவியல் கண்டறிந்துள்ளது. நிறக்குருடு அல்லது நிறக்குறைபாடு உள்ளோர்க்கு நிறங்களை ஈடுகட்டிக் காண நல்கும் கண்ணாடிகள். அவற்றை அணிந்து கொண்டால் எல்லோரும் இப்பருவுலகை வண்ணமயமாகக் காண்பது போலவே அவர்களும் காணலாம்.

      அந்த தந்தைக்கு அது அறுபத்தாறாவது பிறந்த நாள். அன்று அதிகாலை அவர் வீட்டின் வாசலில் அவரது மகளும் நண்பர்களும் நிற்கிறார்கள். அவர் அழைக்கப்படுகிறார். காஷுவலாக டி-ஷர்ட்டும் ட்ரவுசரும் அணிந்தவராக அவர் வெளியே வருகிறார். ஹேப்பி பர்த்டே என்று எல்லோரும் கூச்சலிட்டு வாழ்த்துகிறார்கள். மகிழ்ச்சிப் புன்னகை அவர் முகத்தில் மலர்கிறது. கிஃப்ட் பை அவரிடம் வழங்கப்படுகிறது. பிறந்த நாள் பரிசை எடுத்துப் பார்க்கும்படி அவரைத் தூண்டுகிறார்கள். அதிகாலையின் பொன் இள வெயில் கீற்றுகள் முகத்தில் விழும்படியாக வீட்டின் முற்றத்தில் நின்றபடி பைக்குள்ளிருந்து ஒரு காகித டப்பாவை எடுக்கிறார். பரிசு என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முயல்கிறார். சற்றே குழம்புகிறார். தன் மகளின் மற்றும் நண்பர்களின் கண்களில் என்றுமில்லாத ஒரு புதுவித ஆர்வம் ததும்பதை அவரின் உள்மனம் உய்த்துணர்ந்திருக்க வேண்டும். இது வழமையான பிறந்தநாள் கொண்டாட்டம் அல்ல என்பதை அவர் பிரக்ஞை கண்டுபிடித்துவிட்டது. அதன் புதிரவிழ்தல் அந்த அட்டை டப்பாவினுள் உள்ளது. அதனைத் திறந்து பரிசை வெளியே எடுக்கிறார்.



       


















வெயிற் கண்ணாடி? (சன் –க்ளாஸஸ்? கூளிங் கிளாஸ்?) இதற்கு முன்பும் அவர் எத்தனையோ வடிவங்களில் கூளிங் கிளாஸ் அணிந்திருக்கிறார். பலவித பிரபலமான பிராண்டுகள். (பல்வேறு வண்ணங்களில் அந்தக் கூளிங் கிளாஸ்கள் இருந்திருக்கலாம், பச்சை நீலம் ஆரஞ்சு என. எனினும், அந்த நிறங்களை அவரால் இதுவரை பார்க்க முடிந்ததில்லையே! தான் அணிந்திருக்கும் கண்ணாடியின் நிறம்கூட அவருக்குத் தெரியாது!) இன்னொரு கூளிங் கண்ணாடிதான் பரிசா? அதற்கா இவ்வளவு ஆரவாரம்? என்றெண்ணி அவர் மனம் குழம்புகிறது.

      ”அணிந்து பார் குழந்தாய்!” என்கிறார்கள் சூழ்ந்து நிற்பவர்கள், “இவை சாதாரண கண்ணாடி அல்ல”

       அவர் மெல்ல அந்தக் கண்ணாடியை அணிகிறார். ஓடிக்கொண்டிருக்கும் கால நதி ஒரு கணம் அப்படியே நின்று விட்டதாக உணர்கிறார். ஒருவேளை, அவரின் இதயமும் ஒரு துடிப்பைத் தவற விட்டிருக்கலாம். தாயின் கருவறையுலகம் வெளிச்சம் மற்றும் இருள்களால் ஆனது. இமைகளை மூடியே வைத்திருப்பினும் கருக் குழவியால் வெளிச்சத்தையும் இருளையும் வேறுபடுத்தி அறிய முடியும். அங்கே வடிவங்கள் உருவங்கள் ஏதுமில்லை. அத்தகைய ஓர் உலகிலிருந்து வெளியேறி இப்பருவுலகில் வந்து விழுந்து கண் விழித்ததும் குழந்தை வடிவங்களைக் காண்கிறது. பிறப்பு அதனை ஒரு புதிய உலகிற்குக் கொண்டு வந்துள்ளது.

        அதுபோல், அறுபத்தாறு ஆண்டு காலம் வண்ணங்களையே பார்க்காமல் வளர்ந்து வாழ்ந்து வந்திருக்கும் அவர் முதன் முதலாக வண்ணங்களைக் காணும் அத்தருணம் அவரைப் புதியதொரு உலகிற்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கும் பிறப்புதான் அல்லவா? வண்ணமற்ற உலகைப் பொருந்த வரை அவருக்கு அது அறுபத்தாறாவது பிறந்தநாள். ஆனால், நிறங்கள் நிறைந்த உலகைப் பொருத்த வரை அவருக்கு அதுவே பிறக்கும் நாள் அல்லவா?


     














 அதிர்ச்சியில் அவர் அழ ஆரம்பிக்கிறார். ஆம், உணர்ச்சிக் கொந்தளிப்பில் விம்மிக்கொண்டு அவர் அழுகிறார். முகத்தில் கண்ணீர் வழிகிறது. வண்ணங்களை இன்னும் துல்லியமாகப் பார்ப்பதற்காக அவரின் கண்கள் தம்மைத் தாமே கழுவித் தூய்மை அடைகின்றனவா? அந்தக் கண்ணீர், வண்ணங்களின் திருக்காட்சிக்காக விழிகள் நிகழ்த்தும் ஞான ஸ்நானமா? 

      ”என்ன தெரிகிறது பேபி? அதோ பலூன்களைப் பார்” என்கிறார் ஒருவர். அவர் திரும்பிக்கொண்டு பலூன்களைப் பார்க்கிறார், ஒன்றரை வயதுக் குழந்தையைப் போல! மேலும் கீழும் பல பொருட்களைப் பார்க்கிறார். பொருட்களையா? அல்ல அவை முதன் முதலாக இன்றுதான் காட்டும் வண்ணங்களை. ’இதை நீலம் என்பார்களே? நானும் கிளிப்பிள்ளை போல் ஒப்பித்தேனே? இதுதான் நீலமா? அதை சிவப்பு என்பார்களே? நானும்கூட அப்பெயரைப் பலமுறை சொன்னதுண்டே? இதுதான் சிவப்பா? இப்பொது அறிவேன், இப்போதுதான் அறிவேன், இதுதான் பச்சை, இதுதான் ஊதா, இதுதான் மஞ்சள்…” அவருக்குள் இப்படித்தான் எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று ஊகம் செய்துதானே நம்மால் எழுதிப் பார்க்க முடியும்?

      அவர் தன் கைகளை அசைத்து ஒன்றுடன் ஒன்று குத்துகிறார். கைகளை வீசுகிறார். தடுமாறுகிறார். இப்போது அவர் பிம்பம் பெரிதாக்கப்பட்ட ஓர் இரண்டு வயதுக் குழந்தைதான். தன் மகளை அழைக்கிறார். அழுதபடி அணைத்துக் கொள்கிறார். அவரது வாழ்நாளின் சிறந்த அன்பளிப்பை அவர் பெற்றுவிட்டார். இத்துடன் அக்காணொளி முடிகிறது. சில நிமிடங்களே ஓடும் அக்காணொளியை இதுகாறும் பத்து முறையாவது பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் அது என் உள்ளத்தை உருக்கத் தவறவில்லை.

      சிறு வயதிலிருந்தே வண்ணங்களின் மீது எனக்கு ஒரு தனித்த ஆர்வம் உள்ளது. பொதுவாகவே குழந்தைகளுக்கு வண்ணங்கள் மீது அதீத ஈர்ப்பு இருக்கும். அதனால்தான் வண்ணப் படங்கள் அச்சிடப்பட்ட பாட நூற்களிலிருந்து அவர்களின் கல்வியைத் தொடங்குகிறோம். கோட்டோவியங்கள் கொடுத்து அதில் வண்ணம் தீட்டச் சொல்கிறோம். பிள்ளைகள் மிக உற்சாகமாக அவற்றிற்கு வண்ணங்கள் தீட்டுகிறார்கள். அது அவர்களுக்கு ஓர் அலகிலா விளையாட்டு.


    












  எழுத்தல்லாத கலை வடிவங்களில் ஓவியத்தின் மீதுதான் என் மனம் ஈடுபாடு கொள்கிறது. உருவமற்ற வண்ணங்களின் கலந்துறவாடலான சூக்கும ஓவியங்கள் (Abstract Paintings) ஒரு கனவுலகமாக என் நினைவுகளில் விரிகின்றன. ஓவியத்திலிருந்துதான் நான் எழுத்துக்கு வந்து சேர்ந்தேன்.

      ”தென்றல் வந்து தீண்டும்போது
      என்ன வண்ணமோ மனசுல?...
      திங்கள் வந்து காயும்போது
      என்ன எண்ணமோ நெனப்புல?...
      வந்து வந்து போகுதம்மா
      எண்ணமெல்லாம் வண்ணமம்மா...
      எண்ணங்களுக்கேத்தபடி
      வண்ணமெல்லாம் மாறுமம்மா...
      உண்மையில உள்ளது என்ன? என்ன?
      வண்ணங்கள் என்ன? என்ன?”
     
      கவிஞர் வாலி எழுதிய வரிகள், அக எழுச்சி நல்கும் அற்புத இசையுடன் அடிக்கடி நான் நினைவில் ஒலிக்கவிட்டு அனுபவிக்கும் பாடல். “உண்மையில் வண்ணங்கள் உள்ளனவா?” என்னுமோர் மெய்யியல் தேடலின் வாசலை இந்த வரிகள் திறக்கின்றன.

பேசுவோம்...

Saturday, February 16, 2019

ஒரு சூஃபியின் டைரி - 14






















#101 “கவலைப்படாதே”
      அதற்கு முன் நான் ஏக்கமும் துடிப்புமானதொரு நிலையிலிருந்தேன். அதற்கும் முன்பு இதயத்தை ஒருமுகமாக்குவது பற்றிய சிந்தனையில் இருந்தேன். அறிவுரை பகர்வது போல் அவன் என்னிடம் சொன்னான், “நீ எதைப் பற்றி யோசிக்கிறாய்? கவலைப்படாதே”. ஒவ்வொரு பொருளிலும் அவன் இருக்கிறான் என்றாலும், அவனது படைப்புக்கள் எதனின் சிந்தனையிலும் உள்ள கருத்துருவத்துக்கு அவன் அப்பாலானவன். மாலைத் தொழுகைகளின் இடைவேளையில் நான் அவனது பிரசன்னத்தினுள் ஆனேன். அதன் ஒளியைக் கண்டேன். வானவருலகின் ஆட்சியின் விரிவைக் கண்டேன். நித்திய சௌந்தர்யத்தின் திரைவிலகல் நோக்கினேன். நான் விண்டுரைக்க இயலாத வகையில் அவன் என்னை நெருங்கியபோது பிரசன்னத்தின் மாடத்தில் அவனது வல்லமையிலும் அழகிலும் அந்த சத்தியப் பரம்பொருளை தரிசித்தேன். ஏகத்துவத்தின் கடலுள் வீழ்ந்தேன். அதன் பின் அவனை மீண்டும் மீண்டும் பார்த்தேன். ஒவ்வொரு மணியும், வல்லமையிலும் அழகிலும் மகத்துவத்திலும்.














#102 மின்னலெனத் தாக்கும் மனநிலைகள்
      இரவில் செம்பாகம் கடந்தது. மேலான இறைவன் என்னை நோக்கி வரக் கண்டேன். அவன் என்னை விதானம் மற்றும் காற்பலகையிலிருந்து மேலேற்றினான். சுவர்க்கத்தில் ஆதமுக்கும், மாபெரும் தரிசனத்தின் பின் எல்லை மரத்தின் இடத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் தன்னைக் காட்டித்தந்தது போல் எனக்குத் தோற்றமளித்தான். அந்நிலையில் அவனை நான் கண்டபோது, அவனது முகத்தின் நுட்பங்களிலிருந்து மின்னல்கள் போன்ற மனநிலைகள் என் மீது பொழிந்தன. அவனில் யான் கண்ட பரவசத்தால் அவனில் யான் மறைந்துபோகும்வரை அவன் என்னை விட்டும் மறையாதிருந்தான். பிறகு அவன் மறைந்து மீண்டும் பேரழகும் வல்லமையும் மகத்துவமும் மிகுந்ததொரு ரூபத்தில் தோன்றினான். ஒரு மணி நேரம் கடக்கும்வரை அவன் எனது நிம்மதியைப் பறித்துக்கொண்டான். அதன் பின் என்னைக் கடத்திச் சென்று மறைவுலகினுள் சுற்றவைத்தான்.
















 #103 குருமார்களின் ஏக்கம்
      அவனுக்கு மிகவும் நெருக்கமாக நானிருந்த நிலையில் அவன் என்னை அழைத்துச்சென்று மறைவின் திரைகளுக்குள் நுழைய வைத்தான், மறைவை விட்டும் நான் மறையும் வரை. நான் புறப்பட்டபோது கணமொன்று கடந்து போயிற்று. நான் ஷீராஸ் நகரில் இருப்பது போல் கண்டேன். வானத்தின் கதவுகள் திறந்துகொண்டன. நான் காற்பலகை மற்றும் விதானம் ஆகியவற்றைக் கண்டேன். குரு மகான் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு ஃகஃபீஃப் அவர்களைக் கண்டேன். அவர்களும் பிற குருமார்களும் பிரிந்தபடியும் குழுமியபடியும் இருந்தனர். சத்திய இறைவன் என்னை அங்கே அழைத்து வருவதை அவர்கள் எதிர்பார்த்திருப்பது போல் தோன்றியது. சத்தியப் பரம்பொருள் அவர்களுக்குக் காட்சியானபோது அவர்களனைவரும் பெருமூச்சுடன் விம்மி அழுதனர். அந்நிலை அவர்கள் எனக்காக ஏங்குவதிலிருந்தே உண்டாயிற்று!


























#104 இடையில் யாருமில்லை
      பிறகு அவன் சிறப்பானதொரு நிலையில் எனக்குத் தோன்றினான். அவனுக்கும் எனக்கும் இடையில் யாருமில்லை. அவன் சொன்னான், “முந்நூறாயிரம் ஆண்டுகள் தொலைவிலிருந்து நீ என்னைக் காண்கிறாய்!” ஒரு மணி நேரம் கடந்தது. நான் வருணித்துச் சொல்லவியலாத இசை ஒன்றைத் தன்னிலிருந்தே எனக்குக் கேட்கச் செய்பவன் போல் மறைவுலகிலிருந்து அந்த மேலான இறைவன் என்னை நோக்கியிருக்கக் கண்டேன். அவனது இனிமையில் அக்கணத்தில் நான் உருகிப் போனேன். அவனினும் தித்திப்பாக எதனையும் நான் கண்டதில்லை. பிறகு நான் மேலான இறைவனை எனது வீட்டில் கண்டேன், “மிக்க அழகான தோற்றத்தில்”. நான் கதறினேன், அழுதேன், நெருக்கத்தின் கடலினுள் மூழ்கினேன். பிறகு அவன் எமக்கிடையில் இடைவெளி ஏதுமின்றி நெருங்கினான். நான் அவனுடன் அமர்ந்திருக்கையில் அவன் என்னிடம் சொன்னான், “நான் உனக்காகப் பெரிதும் ஏங்குகிறேன்”. நான் சொன்னேன், “என் கடவுளே! என் நண்பனே! இவ்வுலகிலிருந்து கிளம்பும் நேரத்திற்கு நான் வந்துசேரும்போது நீயே என்னை எடுத்துக்கொள்வாயாக! உன்னுடன் மறைவுலகின் திரைகளுக்குள் நான் நுழையும்படிச் செய்வாயாக!”. மேலான இறைவன் சொன்னான், “அப்படியே ஆகட்டும்”. பிறகு நான் அவனைவிட்டும் மறைந்தேன். அதன்பின் வைகறைத் தொழுகைக்கு அழைப்பு ஒலிக்கும் நேரம் வந்தது. பூர்வீகத்திலேயே இந்த மகத்தான படித்தரங்களுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த இறைவனுக்கே எல்லாப் புகழும். அவன் அப்பாலானவன். அவனை தரிசிக்கத் தோதான இடங்களில் அவன் தன்னை வெளிப்படுத்தும் போது காலத்தின் மாற்றத்தில் அவனது சுயம் மாறுவதில்லை. அவனைப் பற்றிய ஒவ்வொரு விவரிப்பிலும் அவனை வருணிப்போரின் அகநிலைகளுக்கு ஏற்ப அவன் உருக்கொள்கிறான். எனினும், காலத்தின் எந்தத் தன்மையிலும் வரையறுக்கப்படாமல் பூர்வீகத்தில் அவன் எப்படி இருந்தானோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறான்.

#105 இறை விதானத்துக்கும் காற்பலகைக்கும் இடையில்
      இறை விதானத்துக்கும் காற்பலகைக்கும் இடையில் அவன் தன்னை வெளிப்படுத்திய விதம் பற்றி நான் வியப்படைந்தேன், “அவன் விதானம், காற்பலகை மற்றும் முழு இடத்தையும் கடந்தவன்”. இச்சிந்தனை எனக்குத் தோன்றியபோது அவனது திருமுகத்தில் விதானத்தையும் காற்பலகையையும் கண்டேன். அவை வெறும் துகள்கள் போன்றும் அவனது வல்லமையின் வியப்பில் அழிந்தன போன்றும் தோன்றின. உனக்கு நான் சொன்ன இது, என் நண்பனே!, இறைவனை அவனது இறங்கு நிலையில் அறிவோரின் நிற்குமிடம் இதுவே. அவனது திருப்பண்புகளின் அரங்கம் காலத்தின் சாயைகளுக்கு அப்பாற்பட்டது.

#106 அனைத்துக்கும் அப்பாலான முகம்
       மேலான சத்திய இறைவனைச் சந்திக்கும் ஏக்கம் முழுமையான போது ஆழிரவில் அவனைக் கண்டேன். நதிகளோடும் சோலைகள் கண்டேன். அவன் ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தான். அவன் என்னை நோக்கி முகத்தைத் திருப்பினான். அதன் அழகில் திருப்தியின் ஆனந்தம் இருக்கக் கண்டேன். நான் நெருக்கமும் களிப்பும் கொண்ட நிலையிலிருந்தேன். அலட்சியமும் உவகையும் தன்னை மிகைத்த நிலையில் பெருங் குடிகாரன் ஒருவன் செய்யும் செயல்களை செய்யாதிருக்க இயலாமல் ஆனேன். குடிகாரன், இருவகையான செயல்களையும் செய்வான். பிறகு அவன் என்னை விட்டும் மறைந்தான். பிறகு அவன் அழகின் அம்சங்கள் அலங்கரித்த நிலையில் பேரன்பில் தனது இதயத்திற்கு மகிழ்வூட்டியவனாக நிற்கக் கண்டேன். பின்னர், எனது இதயத்தைக் கொள்ளையிடும் வண்ணம் அவன் தனது அழகான திருப்பண்புகள் துலங்கும்படி அவனை எனக்குக் காட்டிக்கொண்டு நிற்கக் கண்டேன். அப்போது அவனது முகம் ஏழு வானங்கள், ஏழு பூமிகள், விதானம் மற்றும் காற்பலகை ஆகியவற்றை விடவும் விசாலமானதாக இருந்தது. அவனது திருமுகத்தில் அனைத்தும் அழிந்தபடியுள்ளன (காண்க: குர்ஆன்: 28:88). சகோதரனே!, ரட்சகமான (றப்பானிய்யூன்), நித்தியமான, மகத்துவமான, புனிதமான, வானவர்களான, வல்லமையான நபர்களேயன்றி வேறெவரும் இதனையும் இது போன்றவற்றையும் அறியார். மேலான இறைவன் சொல்கிறான், “அல்லாஹ்வும் ஞானத்தில் ஊன்றப்பட்டோரும் அன்றி வேறெவரும் அதன் உட்பொருளை அறியமாட்டார்” [குர்ஆன்: 3:7]. ஏனெனில், குறியீடான திருவசனங்கள் (ஆயாத்தே முதஷாபிஹாத்) காதிலின் இதயங்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. நித்தியமான பேரழகைக் காதலிக்காத எவரும் இறைவனின் செயல்களில் உள்ள அவனது திருப்பண்புகளின் அறியவியலாத அம்சங்களை ஒருபோதும் அறியமாட்டார். இறைவனை மனிதத் தன்மைகளில் அறிகின்ற அல்லது அவனை சூக்கும நிலைக்குக் குறுக்கி விடுகின்ற அனைவரின் வருணனைகளை விட்டும் அவன் மேலானவன்!









































 #107 வானவர்களின் படித்தரம்
      மறைவுலகின் குரலிலிருந்து என் இதயம் கேட்டது, “அணியணியாய் நிற்போர் மீது சத்தியமாக! தீவிரமாக விரட்டுவோர் மீது சத்தியமாக! தியானத்தை ஓதுவார் மீது சத்தியமாக!” [குர்ஆன்:37:1-3]. இந்தத் திருவசனங்களை நான் சிந்திக்கிறேன். ஆனால், இப்பேச்சில் இறைவன் என்ன நாடுகிறான் என்பது எனக்குத் தெரியவில்லை.
இறை பிரசன்னம் வானவர்களால் நிரம்பியிருக்கக் கண்டேன். அவர்கள் கழுநீர்ப் பூக்களாலும் ரத்தினங்களாலும் செய்யப்பட்டோர் போலிருந்தனர். (கருநீலமும் சிவப்புமாக ’மணி மிடைப் பவளம்’ போல் இருந்தனர்!) பேரரசனின் முன் துருக்கிகள் நிற்பது போல் வரிசையாக நின்றனர். “அணியணியாய் நிற்போர் மீது சத்தியமாக!” என்னும் திருவசனத்தின் பொருளை இப்போது நான் அறிவேன்.
பிறகு, மேலான சத்திய இறைவன் அவர்களுக்குத் தனது வல்லமை, பேரழகு, மகத்துவம் மற்றும் பெருமையின் ஒளிச்சுடர்களை (தஜல்லியாத்) வெளிப்படுத்துகிறான். விதானம் முதல் பூமி வரை உள்ள ஒவ்வொரு அணுவும் எனக்கொரு நாவு ஆனபோதும் மேலான இறைவனை அவனது பூரணமான சௌந்தர்ய நிலையில் என்னால் வருணிக்க இயலாது. அவன் தன்னை வெளிப்படுத்திய போது அவன் மீதான ஏக்கத்தாலும் அவனுக்கு அருகில் நெருங்க வேண்டும் என்னும் விருப்பத்தாலும் அந்த வானவர்களில், சிலர் மீது சிலர் வீழ்ந்தனர், சிலரினும் சிலர் மேலே சென்றனர், சிலரைச் சிலர் மறைத்தனர், சிலரைச் சிலர் விரட்டினர். எனவே, “தீவிரமாக விரட்டுவோர் மீது சத்தியமாக!” என்னும் திருவசனத்தின் பொருளை இப்போது நான் அறிவேன்.
அவர்கள் அவனை நெருங்கியபோது அவர்களை போதையும் களிப்பும் மிகைத்தது. குடிகாரர்களின் பேச்சினைப் போல் சொற்கள் அவர்களின் நாவினின்றும் வெளிப்பட்டன. [அதாவது, குடிகாரர்கள் சுயேச்சையாகப் பேசுவதில்லை. அவர்கள் அருந்திய மதுவே அவர்களைப் பேச வைக்கிறது. எனவே, வானவர்கள் சுய இச்சையில் பேசுவதில்லை. இறைக்காதலின் உணர்வே அவர்களைப் பேச வைக்கிறது என்பதுதான் ரூஸ்பிஹான் பக்லி (ரஹ்) அவர்கள் சொல்லவரும் கருத்து – மொ.பெ.] அப்பேச்சுக்கள் பீற்றுதல் போன்றும், களிப்புரைகள் போன்றும், இறை நெருக்கத்தின் பரவசங்களில் நான் சொல்வது மாதிரியான பூடக உரைகளாகவும் இருந்தன. எனவே, “தியானத்தை ஓதுவார் மீது சத்தியமாக!” என்னும் திருவசனத்தின் பொருளை இப்போது நான் அறிவேன்.
அது, நெருக்கத்தில் வியப்பின் நிலை, காதலில் ஆனந்தத்தின் நிலை, இனிய இணைதலில் ஏக்கத்தின் நிலை!
 
(to be continued...)