Tuesday, October 29, 2013

ரூமியின் வைரங்கள் - part 11


காதலரின் சபையைக்
காணும்போது
கடந்து போய்விடாதே
அவர்களுடன் அமர்ந்துகொள்

காதலின் அக்னியில்
கதகதப்பாய் உள்ளது உலகம்

எனினும்
தீயும் இறந்துபோகிறது
சாம்பல்களின் சகவாசத்தில்
*

காதலனைப் போல்
மெதுவாகப் பேசு என்னிடம்

இவ்வுலகில்
அரிதாக உள்ளது மென்மை

மண்ணால் படைக்கப்பட்டோரிடம்
காதலின் மந்திரத்தைச் சொல்வதும்
மிகவும் கடினம்தான்
*

நண்பர்களுடன்
வளர்கின்றன உன் சிறகுகள்

தனித்துவிடில்
காற்றில் அலையும் ஒற்றை இறகு நீ

நண்பர்களுடன்
காற்றின் கடிவாளம் உன் கையில்

தனித்துவிடில்
எல்லாத் திசைகளிலும் அலைச்சல்தான்
*

எத்தனை மகிழ்ச்சியான நாள் இன்று
துயரத்திற்கு இடமில்லை இதில்

ஞானத்தின் கோப்பையிலிருந்து
நம்பிக்கையின் மதுவை அருந்துகிறோம்

ரொட்டியும் நீரும் மட்டும்
உயிர்வாழ போதாது நமக்கு

வாருங்கள், கடவுளின் கையிலிருந்து
ஒரு கவளம் உண்போம்
*

அறிந்தவை அனைத்தையும் விட்டு
உடைத்துக்கொண்டு விலகினேன் நான்

தொலைந்து போனேன் இடமேதுமின்றி
அலைந்து திரிகின்றேன் நான்

பித்தனைப்போல்
நடனமாடுகிறேன் கைகள் தட்டியபடி

நீயின்றி நான் வாழ்வது எப்படி?
எங்குமிருக்கிறாய் நீ எனினும்
எங்குமே காணவில்லையே ஏன்?
*

உலகின் ரகசியங்களை
ள்ளி அள்ளித் தருகிறார் சூஃபி

அவரின் சொற்கள்
விலைமதிப்பற்ற அன்பளிப்பு

அன்றாட ரொட்டியை
இலவசமாய்க் கேட்கவில்லை அவர்

உயிரையே தந்துவிட்டு அமர்ந்திருக்கிறார்
எதையுமே எதிர்பாராமல்
*

உன் ஒரு முத்தம் வேண்டும்
என்றது என் இதயம்

”சரிதான், உன் உயிரே விலை”

இன்பத்தில் துள்ளுகிறது இதயம்
விலையைப் பற்றி யாருக்கு அக்கறை?
*

எந்த வேடத்திலும்
இறைவன் அறிவான் உன்னை

நீ பேசாத சொற்களையும்
கேட்கிறான் அவன்

பேச்சுத் திறமையால்
தூண்டப்படுகிறார்கள் எல்லோரும்

ஆனால் நானோ
மௌனத் தலைவனின் அடிமை!
*

’என் கண்களின் விஷயம் என்ன?’
என்றேன்
கண்ணீரால் அவற்றை நிறைப்பேன்

‘என் இதயத்தின் விஷயம் என்ன?’
என்றேன்
துயரத்தால் அதனை உடைப்பேன்

’என் உடலின் விஷயம் என்ன?’
என்றேன்
நானே அதனைச் சிதைப்பேன்
*

காதலில் பேரம் இல்லை
தேர்ந்தெடுப்பவன் நீ அல்ல அதில்

காதல் ஒரு கண்ணாடி
அதில் நீ முகம் பார்க்கும்போது
உன் சுயமே அதில் பிரதிபலிக்கின்றது
*

சிறிது கால நோன்பும்
தூய்மை செய்கிறது உன்னை

உள்ளத்தின் தூய்மையுடன்
சொர்க்கத்திற்குள் நுழைவாய் நீ

ஒளியாய் மாற
மெழுகுவத்தி போல்
நோன்பில் எரி

ஒவ்வொரு கவளமும்
உன்னை மண்ணில் பிணைக்கும்
சங்கிலியின் கண்ணி
*

உன் காதலால் தூண்டப்பட்டு
இரவில் ஒரு மெழுகுவத்தியாய்
சுடர்விடத் தத்தளிக்கிறேன்

எனினும் எனினும்
என்னை மீண்டும் மீண்டும் கேட்கிறாய்
‘ஏன் இந்த முறையீடு?’
*

உன்னைக் காண முடியாத நெருக்கத்தில்
என்னுடன் இருக்கிறாய் நீ

ஒரு மூடனைப் போல்
சுற்றிலும் தேடியிருந்தேன் உன்னை

உன் தீண்டல் தொடாதபடி
எத்தனைப் போர்வைகளால் சுற்றப்பட்டுள்ளேன்
என்னிதயம் தேம்புகிறது, ஆறுதலின்றி
*

வலியில் மறைந்திருக்கும்
நிவாரணம் நீ

கோபத்திலும் ஏமாற்றுதலிலும் மறைந்துள்ளன
உன் கருணையும் நம்பகமும்

விண்ணில் மட்டும் இருப்பவனல்ல நீ
மண்ணில் எங்கெங்கும் காண்கிறேன்
உன் காலடிச் சுவடுகள்
*

கருணை என் இதயத்தை நிறைக்கும்போது
ஆசைகளையெல்லாம் விட்டு விடுதலையாகி
மண்ணைப் போல்
ஓசையற்று அமர்கிறேன் நான்

என் மௌனத்தின் இடிமுழக்கம் பரவுகிறது
இப்பிரபஞ்சம் எங்கும்
*

ராஜாளி போல் முனைப்புக் கொள்
அட்டகாசமாய் வேட்டையாடு

சிறுத்தை போல் கம்பீரம் கொள்
போராடி வெற்றி பெறு

குயில்களுடனும் மயில்களுடனும்
நேரத்தை வீணடிக்காதே

ஒன்று வெறும் சப்தம்
மற்றொன்று வெறும் நிறம்
*

தூய முழுமை காதல்,
தூய முழுமை!

மாயத் தோற்றம் உன் மனம்,
மாயத் தோற்றம்!

இக்காதலொரு மகத்துவம்,
அடடா, மகத்துவம்!

இந்நாள் இணைதலின் நாள்,
நம் இணைவின் நாள்!
*

பாலைவனத்தில்
வழிகாட்டிப் பலகைகள் ஏதுமில்லை
விண்மீன்களே திசை சொல்கின்றன
பயணக்குழுவிற்கு

நிராசையின் இருளில்
நம்பிக்கை மட்டுமே ஒளி

எனினும் என் அன்பே,
உன் வாழ்க்கையின் சோலையில்
பேரிக்காய் மரம் உனக்கு
பேரீச்சங்கனிகளைத் தரும் என்று
நம்பிக்கை வைக்காதே
*

வெறுமையாய் இருந்தேன் நான்
மலையினும் வலியவன் ஆக்கினாய் என்னை

பின் தங்கினேன் நான்
முன்னுக்குத் தள்ளினாய் என்னை

சிதறிப்போயிற்று என் இதயம்
முழுமையாக்கினாய் அதனை நீ

நானே என்னைக்
காதலிக்கத் தொடங்கினேன்!
*

என் இதயம், என் நம்பிக்கை, என் பணி
எனதனைத்தையும் அர்ப்பணித்து
என்னில் திளைத்திருக்கிறேன்

“கொடுப்பதற்கு உன்னிடம்
இத்தனை இருப்பதாய்
நினைக்கின்ற நீ யார்?
எங்கிருந்து வந்தாய் என்பதை
மறந்துவிட்டவன் போலும் நீ”
என்றாய்
*

உன்னைக் கைவிட்டு
ஏக்கத்தின் வலியில்லாமல்
வாழ முயன்றேன்

உனக்கான தகிப்பை விட்டு
வெறுமையாகிவிட முயன்றேன்

இப்போது தெரிந்துகொண்டேன், காதலனே!
நிஜ மனிதனாய் இருந்திருப்பின்
முயன்றிருக்க மாட்டேன் என்று
*

என் தேடலில்
குழம்பி ஓய்வின்றித் தவிக்கிறேன்

தீயில் இடப்பட்டதாய்
பிரிவின் துயரத்தில் நைகிறது மனம்

சிக்கித்தான் இருக்கவேண்டும்
இந்தப் போராட்டத்தில்
“நீயும் நானும்” என்பதைக்
கடக்கும் வரை
*

என் வேலையைக் கைவிட்டுத்
தொழிலையும் துறந்துவிட்டேன்
மாறாக,
கவிதை எழுதுகின்றேன்

என் பார்வை என் இதயம் என் வாழ்க்கை
எல்லாம் அவனுடையதே
மூன்றையும் ஒன்றாக்கிவிட்டேன்:
காதல்

*

Thursday, October 24, 2013

ரூமியின் வைரங்கள் - part 10


துக்கங்களுடன் ஒவ்வொரு நாளையும்
பின் தங்க விட்டுச் செல்
பாய்ந்தோடும் ஒரு நதியைப் போல்

நேற்றென்பது கடந்துவிட்டது
அதன் கதையும் முடிந்துவிட்டது

புதிய விதைகள் முளை விடுகின்றன இன்று
*

உன் பாதப் புழுதியில் கிடக்கிறேன்
உன் கூந்தலின் நெளிவுகளில்
சிக்கியுள்ளது என் இதயம்
போதும் போதும் என்றாகிவிட்டது
உன் உதடுகளைக் கொண்டு வா அருகில்
ஒரு முத்தத்தால் என் உயிரை விடுதலை செய்
*

அல்லும் பகலும்
காதலர்கள் மது குடித்து
மனதின் திரைகளைக் கிழித்தெறிகின்றனர்
காதலின் மதுவால் போதையுறும்போது
உடலும் உள்ளமும் உயிரும்
ஒன்றாகிவிடுகின்றன
*

நேற்றிரவு காதலன் இருந்தான்
நிலா தோற்கும் அழகாக
சூரியனை விடவும் சுடர்பவனாய்

என் அறிவிற்கு எட்டாததாய்
இருந்தது அவனின் அரவணைப்பு

பிறகு நடந்ததெல்லாம்
சொல்வதற்கில்லை நான்
*

உன் பாதையில் நடந்து
தனக்குத் தானே மரணிப்பவன்
வாழ்வை அடைகிறான்

“போதையேறி உன்னை இழக்காதே”
என்கிறாய் நீ

உன் மதுவை அருந்தியவன்
சுதாரிப்புடன் இருப்பது எங்கே?
*

ஞானத்தின் ஆயிரம் படிகளுக்கு அப்பால்
நன்மை தீமை என்பதை விட்டும்
விடுதலை ஆகியிருப்பேன்

திரைகளுக்கு அப்பால்
அத்தனை மகத்துவமும் அழகும்
அடைந்திருப்பேன்

என்மீது நானே காதலாகிப் போகும்படி!
*

செல்ல இதயமே!
நியாயமாய் இல்லை நீ
காதலில் வீழ்கிறாய்
பின்பு வாழ்வைப் பற்றிப் புலம்புகிறாய்
கள்ளமாய்த் திருடுகிறாய்
பின்பு சட்டத்திற்கு அஞ்சுகிறாய்
காதலில் இருப்பதாய்ச் சொல்கிறாய்
பின்பு ஊராரின் பேச்சு பற்றிக் கவலை ஏன்?
*

சுடர் ஏற்றப்படக் காத்திருக்கும்
ஒரு மெழுகுவத்திதான் இதயம்

காதலனை விட்டுப் பிரிந்ததாய்
மீண்டும் முழுமையாக ஏங்குகின்றது அது
எனினும் நீ வேதனையைப்
பொறுத்துக்கொள்ள வேண்டும்

காதலை நீ கற்க இயலாது
ஒரு பாடத்தைப் போல்

காதல் வருவதெல்லாம்
கருணையின் சிறகுகள் மீதே!
*

அறிவின் ஊற்றான அவனிடம்
கெஞ்சினேன் நேற்றிரவு
உலகின் ரகசியத்தைச் சொல்லும்படி

மென்மையாய் நயமாய் என் காதில் சொன்னான்
“சப்தமிடாதே
பேசக்கூடியதல்ல ரகசியம்
அது மௌனத்தினுள் மறைக்கப்பட்டுள்ளது”
*

காதலே கிழக்கின் ரஸவாதம்

மேகங்களைப் போல் அதனுள்
மின்னல்கள் ஆயிரம் மறைந்துள்ளன

என்னுள்ளே ஆழத்தில்
அவனது மகத்துவத்தின் பெருங்கடல்
அசைகின்றது

அதிலிருந்து வெளிப்படுகின்றன
படைப்புக்கள் எல்லாம்
*

“மிகவும் சிறியது என் இதயம்
எப்படி நீ அதன் மீது
இத்தனை பெரிய சுமைகளை வைக்கிறாய்?”
என்றேன்

“உன் கண்கள் அதைவிடச் சிறியவை
ஆனால் அவை
பிரபஞ்சத்தையே பார்க்கின்றன அல்லவா?”
என்றான்

*

Wednesday, October 23, 2013

அழகின் முகவரி


ஒப்பனை ஏதும் இன்றியே குழந்தைகள் அழகாக இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?
வளர்ந்த பின் அந்த இயல்பான அழகிற்கு என்ன ஆகிறது?

விலங்குகள் ஒப்பனை செய்து கொள்வதில்லை. மனிதனிடம்தான் இது ஒரு கலையாக வாய்த்தது. ஒப்பனை வேடமாகவும் பரிணமித்தது.

வேடத்திற்கும் ஒப்பனைக்கும் இடையிலான கோடு தேய்ந்து வருகிறது; மனிதனுக்கும் மிருகத்திற்குமான கோடும்தான்.

அழகு பற்றிய தவறான தத்துவங்களால் அகில உலகும் அலங்கோலமாகிக் கிடக்கிறது.

காஸ்மெடிக்ஸை காயகல்பம் என்று மூளைச் சலவை செய்து வருகின்றன விளம்பரங்கள். மக்கள் மனங்களோ விளம்பரங்கள் சுழற்றும் பம்பரங்கள்.

புற அழகிற்கு ஆராதனை காட்டும் அரிதார நெருப்பு அக அழகிற்குக் கொல்லி வைக்கிறது. அது புற-அழகு மட்டுமே வாழ்க்கைக்குத் துருப்புச் சீட்டு என்று சொல்லி வைக்கிறது.


’அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’

இதயத்தில் தீபம் ஏற்றும் இந்த வாசகம் கிழக்கின் ஞானத்திற்குச் சொந்த வாசகம். கிழக்கு கண்ட அழகின் முகவரி இதுதான்.

மேற்கு என்பது அறிவியல், கிழக்கு என்பது ஆன்மிகம் என்று பார்க்கப்படுவதில் நியாயம் உண்டு என்று ஓர்ந்திருக்கிறேன். ஓஷோ, இக்பால் ஆகியோரிடம் இருந்து இக்கருத்தைத் தேர்ந்திருக்கிறேன். கிழக்கு தன்னை மெல்ல மெல்ல மேற்கில் தொலைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து வேதனைப்பட நேர்ந்திருக்கிறேன்.

அதன் அடிப்படையில் ஒரு கருத்தை அடியேன் நவில்கிறேன்:
மனிதனை ஒளியால் அலங்கரிப்பது கிழக்கின் வழிமுறை; மனிதனை மண்ணால் அலங்கரிப்பது மேற்கின் வழிமுறை.

தியானமே நமது அலங்காரமாக இருந்தது; இன்றோ ஒப்பனையே பலரின் தியானம் ஆகிவிட்டது.

காயாக இருக்கையில் ’பச்சை’யாய்  இருக்கும் ஆப்பிள் கனிந்து கனிந்துதான் சிவப்பாக வேண்டும். ஆப்பிள்-காய் மீது சிவப்புச் சாயம் பூசி விட்டால் அது ஆப்பிள்-பழம் ஆகிவிடாது.

அழகு எப்படி இருக்க வேண்டும்? இயல்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இதற்குச் சரியான பதிலாக அமையும் என்று நினைக்கிறேன்.

இயல்பு என்பது தோற்றத்திலும் பண்பிலும்.

அழகு என்பது சீதை போல் இயற்கையாக இயல்பாக இருப்பது. ஒப்பனையோ ராமனை மயக்க வந்த சூர்ப்பனகை.

பெண்ணின் அழகைப் பேரழகு ஆக்குவது தன் அழகைப் பற்றிய அவளின் பிரக்ஞையின்மையே என்னும் கருத்துப்பட அல்லாமா இக்பால் பின்வருமாறு சொல்கிறார்:
“சுயப்பிரக்ஞை இல்லாத, பேரழகு நிறைந்த பெண்ணே இறைவனின் இவ்வுலகில் எனக்கு மிகவும் வசீகரமான பொருள்”

“அழகானதொரு பொருள் நிரந்தர ஆனந்தம்” என்று கீட்ஸ் பாடியதும் இத்தகைய அழகைப் பற்றித்தான் என்று சொல்லலாம்.

புன்னகையைத் தவிர வேறு நகையேதும் அணியாத அன்னை ஆயிஷா (ரலி) – நபிகள் நாயகத்தின் இளைய மனைவி – ஒருநாள் தன் கைகளில் இரண்டு வெள்ளி வளையல்களை அணிந்து கொண்டார்கள். வீடு வந்த நபிகள் நாயகம் “என்ன இது?” என்று கேட்டார். “தங்களுக்காக என்னை அலங்கரித்துக் கொண்டேன்” என்று நவின்றார் ஆயிஷா. “இந்த அலங்காரம் வேண்டாம். அவற்றைக் கழற்றிவிடு” என்று நபிகள் நாயகம் சொல்லிவிட்டார்கள்.

ஆன்மிகத்தின் கண்கள் இயல்பானவற்றில்தான் இறைவனின் அழகை தரிசிக்கின்றன. ஆன்மிக ஒளி கொண்ட கண்கள் உள்ள ஆண் தனது பெண் இயற்கையான அழகுடன் இருப்பதையே விரும்புவான்.

காமோஷ் கஸியாபூரி என்று ஒரு கஸல் கவிஞர். தன் காதலியிடம் வினயமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறார் இப்படி:

கன்னங்களும் உதடுகளும்
இயல்பாகவே இருக்க விடு...
வண்ணங்கள் பூசாதே
தாஜ்மகாலின் மீது

(ஆரிஸ்-ஒ-லப் சாதா ரெஹனே தோ
தாஜ்மஹல் பெ ரங் ந டாலோ)