Monday, December 30, 2013

தேவநேயத் தேடல் - part1


     கல்லூரிக் கருத்தரங்கம் ஒன்றிற்காக கடந்த இரண்டு வாரங்கள் கடுமையான உழைப்பு. பழைய நூற்கள் பலவற்றைப் படிக்க வேண்டியிருந்தது. செந்தமிழ் நடையில் அமைந்த நூல்கள். தேவநேயப் பாவாணர், மறைமல அடிகள், கா.அப்பாதுரையார், க.அன்பழகன் போன்றோர் எழுதியவை. இவர்களின் செந்தமிழ் நடையைச் சிலர் கடுந்தமிழ் என்று கருதலாம். ஏன், கொடுந்தமிழ் என்றும்கூட சிலர் சொல்லக்கூடும். எப்படியோ, இளம்பூரணர் நச்சினார்க்கினியர் என்று தொடங்கி சுஜாதா வரைக்கும் வந்த பல்வகைத் தமிழ் நடைகளையும் அடியேன் ரசிப்பதுண்டு. மான் நடப்பது ஒரு போக்கு, யானை நடை ஒரு தினுசு. குறை சொல்ல என்ன இருக்கிறது?


      கடவுள் உண்டா? என்று ஒரு கேள்வி. பலரிடம் பலரும் கேட்ட கேள்வி. பெரியாரிடம் சிறியார் பலர் கேட்ட கேள்வி. இதே கேள்வி ஒருமுறை அ.ப.ஜ.அப்துல் கலாம் அவர்களிடம் பள்ளி மாணவி ஒருத்தி கேட்டிருக்கிறாள். உண்டு என்று தான் நம்புவதற்கான ஒரு காரணத்தை அவர் செப்பினார். “பிரபஞ்ச வெளியில் கோடிக் கணக்கான கிரகங்களும் விண்மீன்களும் விண்கற்களும் குடும்பங்களாக அமைந்து தத்தமது இடத்தில் ஒழுங்கான பாதையில் சீராக இயங்கி வருகின்றன. அனைத்திற்கும் ஆதாரமாகவும் அனைத்தையும் கடந்ததாகவும் உள்ள ஓர் இறையாற்றல்தான் இவற்றை இப்படி இயக்கி வருகிறது என்று நம்புகிறேன்.” இக்கருத்துப்பட அவர் பதில் சொல்லியிருந்தார்.


      ”தமிழர் மதம்” என்னும் தலைப்பில் ஒரு நூல். 15 செப்டம்பர் 1972-ல் வெளியிடப்பட்டது. எழுதியவர் தேவநேயர். ’மொழி ஞாயிறு’ என்றழைக்கப்படும் ஞானதேசிகன் தேவநேயன் என்னும் தேவநேயப் பாவாணர் அவர்களேதான். கடவுள் உண்டு என்பதற்கு தான் கருதும் ஏதுக்களாக அவர் ஒன்பது குறிப்புக்கள் தருகிறார். முதற்குறிப்பு மேலே அ.ப.ஜ.அ.க அவர்கள் சொன்ன அதே கருத்து! தேவநேயர் இஸ்ரோ விஞ்ஞானி அல்ல. அவர் சொல்லும் ஒன்பது கருத்துக்களை அப்படியே தருகிறேன். (1 முதல் 9 வரையிலான எண்களைத் தமிழில் கொடுத்துள்ளார். அதையும் தெரிந்துகொள்ளுங்கள்.):

கடவுள் உண்டென்பதற்குச் சான்றுகள்

 (க) கதிரவக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள் எல்லாம் இடையறாது ஓர் ஒழுங்காக இயங்கி வருகின்றன.

      ஓர் ஊரில் ஊர்காவலனோ அரசிய லாட்சியோ சிறிது நேரம் இல்லா விடினும், கலகமுங் கொள்ளையும் கொலையும் நேர்கின்றன. உயிரற்ற நாளும் கோளும் பாவை யாட்டுப் போல் ஒழுங்காக ஆடி வரின், அவற்றை ஆட்டும் ஓர் ஆற்றல் இருத்தல் வேண்டும். அவ் வாற்றல் அறிவற்றதாயிருக்க முடியாது. அவ்வறிவே இறைவன்.
(உ) இவ்வுலகம் முழுவதற்கும், கதிரவன் பகல் விளக்காகவும் திங்கள் இரா விளக்காகவும் எண்ணிற்கும் எட்டாத காலத்திலிருந்து விளங்கி வருகின்றன.

      ஒரு வீட்டில் விளக்கேற்றி வைப்பது அதிற் குடியிருக்கும் மக்கட்கே. மக்களில்லா வீட்டில் விளக்குத் தானாகத் தோன்றி எரியாது. பல உலகங்கட்கும் இரு சுடரையும் விளக்காக ஏற்படுத்தியவன் ஒருவன் இருத்தல் வேண்டும். வேலை செய்யாத தூக்க வேலையாகிய இராக் காலத்திற்கு, வெப்பமான நெருப்பொளி விளக்காகாது குளிர்ந்த நிழலொளி விளக்காக விருப்பதும், கவனிக்கத் தக்கது.

(ங) பிற கோள்களைப் போற் சுற்றாது ஒரே இடத்திலிருக்கும் கதிரவன், பத்துத் திசையும் ஒளி சமமாகப் பரவுமாறு உருண்டையா யிருப்பதும், அளவிடப் படாத நீள் பெருங்காலம் எரிந்து வரினும் அதன் எரியாவி குன்றி யணையா திருப்பதும், இயற்கைக்கு மாறான இறும்பூதுச் செய்தி யாதலால், அதை யியக்கி யாளும் ஒரு பரம் பொருள் இருத்தல் வேண்டும்.

(ச) கோள்கள் ஒன்றோடொன்று முட்டாது தன் தன் பாதை வட்டத்தில் இயங்குமாறும், இவை சுழலுங்கால் அவற்றின் மேலுள்ள பொருள்கள் நீங்காவாறும், ஒவ்வொன்றையுஞ் சூழ ஒரு கவர்ச்சி மண்டலம் அமைந் திருப்பதும், இயற்கைக்கு அப்பாற் பட்ட ஓர் ஆற்றலின் அமைப்பே.

(ரு) காலமும் இடமும் தொடக்கமும் ஈறும் இல்லாதவை யாதலால், இற்றை மக்களுலகந் தோன்று முன், எண்ணிக்கை யற்ற உயிருலகங்கள் தோன்றி யழிந் திருத்தல் வேண்டும். இதைத் தான்,
      ”படைத்து விளையாடும் பண்பி னோனும்
      துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
      தன்னில் வேறு தானொன் றிலோனும்
      அன்னோன் இறைவ னாகுமென் றுரைத்தனன்”
மணிமேகலைக்கு அறிவுறுத்திய சிவனியத் தருக்கி (சைவவாதி).

(சா) மாந்தன் தோன்றி ஐம்பதினாயிரம் ஆண்டாயிற்றென வைத்துக் கொள்ளினும், நூற்றுக் கணக்கான தலைமுறைகள் கழிந்திருத்தல் வேண்டும். பத்துக் கணக்காகத் தொடங்கிய மக்கட் தொகை இன்று நூறு கோடிக் கணக்காகப் பெருகி யுள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் எத்தனைய ராயினும், அத்தனையரும் அடையாளங் காணுமாறு வெவ்வேறு முகவடிவி லுள்ளனர். கை வரையும் வேறுபட்டுள்ளது. இது அறிவு நிரம்பிய ஒரு பேராற்றலின் செயலேயாகும்.

[குறிப்பு: உள்ளங்கையில் உள்ள ரேகைகளைத்தான் ”கைவரை” என்று குறிப்பிடுகிறார்.]

(எ) “கடவுளை நம்பினோர் கைவிடப் படார்” என்பது, இன்றும் சிலர் வாழ்க்கையில் மெய்ப்பிக்கப் படுகின்றது.

(அ) உடல்நலம், மனநலம், மதிநலம் முதலிய நலங்கள் உள்ளாரும் இல்லாரும் படைக்கப் பட்டிருத்தல்.

(கூ) பஞ்சம், கொள்ளைநோய், பெருவெள்ளம், நில நடுக்கம் முதலிய இயற்கை அழிவு நிகழ்ச்சிகள் நேர்தல்.”

இப்பகுதியைத் தொடர்ந்து கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன் வைக்கும் ஐந்து கருத்துக்களைக் கூறுகிறார். பாவாணர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதால் அவற்றை இங்கே சொல்ல வேண்டியதில்லை. அதைத் தொடர்ந்து, ’பகுத்தறிவு’க்கு ஒன்று சொல்கிறார்:

“மாந்தன் மதியாற்றல் மட்டிட்ட தாகலின், இறைவன் ஆட்சியிலுள்ள எல்லாவற்றையும் அறிய முடியாது.
      ’ஆழ வமுக்கி முகக்கினும் ஆழ்கடல்
      நாழி முகவாது நானாழி” (மூதுரை. ககூ)’”


ஔவை பாட்டியின் இந்த வரிகள் புரியாதோர்க்கு:
“நம்பகிட்ட ஒரு சொம்பு இருக்கு. கடலுக்குப் போய் அந்தச் சொம்பை முக்குனாக்க அதுல ஒரு சொம்பளவு தண்ணிதான்யா வரும். நாலு சொம்பளவுத் தண்ணி வராது.”
(கு.குசலாவின் குறுக்குச் சால்: ’நாலு சொம்பளவுத் தண்ணி வேணும்னா அந்தச் சொம்ப நாலு தபா முக்க வேண்டியதுதானே?’ ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட்.)

”மதத்தை அழிக்க முடியுமா?” என்றொரு கேள்வி எழுப்பி அதன்கீழ் பாவாணர் சொல்லிச் செல்வதில் முடிவாக வரும் உளவியல் கருத்து என்னைக் கவர்ந்தது:

“கனவு காணாது உறங்கும் நேரம் தவிர, மற்றெல்லா நேரத்திலும் – இருப்பினும், நடப்பினும், வேலை செய்யினும், உரையாடினும் உண்ணினும் – இறைவனை நினைக்கவும் வழுத்தவும் வேண்டவும் இயலுமாதலின், மனம் உள்ளவரை  மதத்தை ஒருவராலும் அழிக்க முடியாதென அறிக.”

ஹாரூன் யஹ்யா என்ற பெயரைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இன்று முன்னணியில் இருக்கும் இஸ்லாமியப் பரப்புநருள் ஒருவர். பேச்சாளர் அல்ல. அவரின் களம் எழுத்து. நூற்றுக் கணக்கான நூற்களை நெய்திருக்கிறார், அதாவது எழுதியிருக்கிறார். நான் வியக்கும், விரும்பும் நபர்களுள் ஒருவர். அவர் ஒருவர்தானா அல்லது ஒரு குழு அமர்ந்து அப்பெயரில் எழுதித் தள்ளுகிறதா என்று ஐயம் உண்டு. அவ்வளவு நூற்கள் வெளிவந்துள்ளன. அறிவியல், வரலாறு என்னும் இரு துறை சார்ந்து திருக்குர்ஆன் பற்றி அவர் எழுதுகிறார். டார்வின் முன்வைத்த கூர்தலறக் கோட்பாடு (பரிணாமக் கொள்கை, Theory of Evolution) பொய் என்று நவீன அறிவியல் ரீதியாக அவர் மறுத்து எழுதியுள்ள நூற்கள், குறிப்பாக “DARWINISM REFUTED” என்னும் நூல், உலகப் புகழ் பெற்றது. டார்வினியலாளர்களின் மூக்குக்குள் புலிகேசியின் மீசையை விட்டு மூளையைக் குதறுவது!


ஹாரூன் யஹ்யா குறிப்பிடும் சில வாதங்களை தேவநேயப் பாவாணர் தனது நூலில் சொல்லியிருக்கிறார் என்பது வியப்பாக இருந்தது. அப்பகுதியைப் படியுங்கள்:

“இறைவனின்றி எல்லாம் இயற்கையாகத் தோன்றிய தென்பதையே, அறிவியற் பொது அடிப்படையாக இக்காலத்துப் புதுப் புனை வாராய்ச்சியாளர் பலர் கொண்டுள்ளனர். தார்வின் (Darwin) கொள்பும் (theory) இதற்குத் துணையெனக் கருதுகின்றனர். ஆயின் தார்வினெ தம் இறுதிக் காலத்தில் தம் இளமைக் காலக் கொள்பு பற்றி வருந்தின தாகத் தெரிகின்றது.

தாழ்ந்த இனத்தினின்று உயர்ந்த இனம் படிமுறையாகத் தோன்றிற்று என வைத்துக் கொள்ளினும், அடிப்படை யுயிரியான ஒற்றைப் புரையன் (unicellular being) எங்ஙனம் தானே தோன்றும்?

சடத்தினின்று சித்துத் தோன்றுமோ? தோன்றாதே!

ஆதலால் திரிபாக்கக் கொள்கை (Evolution Theory) தவறென்றே கொள்ள வேண்டியுள்ளது.

இனி, கதிரவனின்று ஞாலம் வீழ்ந்ததெனின், கதிரவன் எதனின்று வீழ்ந்தது?

இக்கொள்பாளர் கணக்கற்ற கதிரவக் குடும்பங்கள் பெரு விசும்பில் (Grand Universe) உள்ளதை அறிந்தாரா? அறிவியலாராய்ச்சியாளர் இயற்கையிலுள்ள, இறும்பூதுகளைக் கண்டு இறைவன் பெருமையை உணர்ந்து வியப்பதற்கு மாறாக, திறவுகோல் பெற்ற வேலைக்காரன் திருடனாக மாறிவிடுவது போல், தனக்கு நுண்மதி யளித்த இறைவனையே இல்லையென மறுப்பது, விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவது போன்றதன்றோ!”


(to be continued)

Thursday, December 12, 2013

கூஜா நாமா


(உமர் ஃகய்யாமின் ’ருபாயாத்’ பாடல்களில் ஒரு பகுதியாக அமைந்திருப்பது ’கூஜா நாமா’ என்பது. களிமண் கூஜாக்கள் தமக்குள் குயவனைப் பற்றியும் தம் வாழ்வைப் பற்றியும் பேசிக்கொள்ளும் பாணியில் மனிதர்கள் இறைவனைப் பற்றியும் வாழ்வைப் பற்றியும் பேசிக்கொள்வதாக உட்பொருள் தொனிக்க அவர் எழுதியுள்ளார். அந்தப் பெயரையே இந்தக் கவிதைக்குச் சூட்டுகிறேன்)

ஈரம் காயாத களிமண்
இன்னமும் நான்
குயவனின் கைகளில் இருக்கின்றேன்
இன்னமும் நான்

ஒவ்வொரு கணமும் வனைகிறது
அவனின் இயக்கம் என்னை
ஒவ்வொரு கணமும் புனைகிறது
அவனின் நாட்டம் என்னை

என் கட்டமைப்பில் தெரிவதெல்லாம்
அவனின் கைவண்ணமே
பொய்வண்ணம் அல்ல இது
சத்திய மெய்வண்ணமே!

வெறுமை என்னும் வடிவில்
வரைந்த பாத்திரம் நான்
ஏழு கடல்களின் தண்ணீர்
நிறைந்த பாத்திரம் நான்!

அவனின் மூச்சு கடலானது
என்னுள் எழும் அலைகளுக்கெல்லாம்
அவனின் காதலே வேர் ஆனது
என் கிளைகள் இலைகளுக்கெல்லாம்

விண்ணுக்கும் மண்ணுக்கும் இறைவனே
ஒளியாக இருக்கின்றான்
இறைவன் பார்வை எனில் மனிதனே
விழியாக இருக்கின்றான்

உடைவோம் என்ற அச்சத்தில்
சாகிறது கூஜா ஒன்று
உடைந்தோம் என்ற கவலையில்
வேகிறது கூஜா ஒன்று

’தோழர்களே! உடையுங்கள் என்னை’
என்கிறது ஒன்றின் முழக்கம்
’நேசர்களுக்கில்லை அச்சமும் கவலையும்’
என்பதே இறை வழக்கம்


(குறிப்பு: ”‘தோழர்களே! உடையுங்கள் என்னை’ என்கிறது ஒன்றின் முழக்கம்” என்பது மன்ஸூர் அல்-ஹல்லாஜின் கவிதை ஒன்றிற்கான சுட்டுதல் ஆகும். “உக்தூலூனீ யா ஸிகாத்தீ / இன்ன ஃபீ கத்லீ ஹயாத்தீ” (என் நண்பர்களே! என்னைக் கொல்லுங்கள்! நிச்சயமாக, நான் கொலை செய்யப்படுவதில் என் வாழ்க்கை உள்ளது!) என்பதே அந்தக் கவிதை வரிகள்)