Monday, December 26, 2011

என்னுள்ளே என்னுள்ளே..



ஐந்து வரிகளில் கச்சிதமாக மதிப்புரை கோரி ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்னிடம் தரப்பட்டது. ஸ்பானிய மொழியில் மூலம் கொண்ட அந்த நூல் அவிலாவின் தெரசா (St.Teresa of Avila, 1515 – 1582 A.D) எழுதிய சுயசரிதை. அதனை ஆங்கில வழி தமிழில் புனித அவிலா தெரசா – அவரது வாழ்க்கை நூல்என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார் முனைவர்.அந்தோனி குரூஸ் (திருச்சி தூய வளனார் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்.)

தியானத்தில் ஆழ்நிலைக்குச் சென்ற ஆன்மிகவாதி ஒருவரின் அனுபவப் பதிவுகள் என்னும் வகையில் இந்த நூல் என் மனதைக் கவர்ந்தது. குறிப்பாக, தரிசன்ங்கள் பற்றிய ஆய்வுகளுக்காகவும், உடல் X ஆன்மா என்னும் முரண் விளைவிக்கும் அனுபவங்களுக்காகவும் அவிலா தெரசாவின் சுயசரிதை பலராலும் வாசிக்கப்பட்டு விமரிசனங்கள் நிகழ்ந்துள்ளன. உளவியல் அறிஞர்களால் மீண்டும் மீண்டும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் ஆன்மிக ஆளுமைகளில் அவிலா தெரசா மிக முக்கியமான ஒருவர்.



நேற்று காலை இந்த நூல் என் கையில் கிடைத்தது. அதற்கு முந்திய நாள் மாலைதான் 23.12.2011 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் 'Visions of angels could just be lucid dreams' என்னும் தலைப்பில் ஒரு செய்தியைப் படித்திருந்தேன். லாஸ் எஞ்சல்ஸில் உள்ள ‘Out –Of-Body Experience Research Center’ –ல் மைக்கேல் ராதுகா என்பவரின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவாக பைபிளில் கூறப்பட்டுள்ள தேவதூதர் மற்றும் தேவதைகளின் திருக்காட்சிகள் எல்லாம் வெறும் அறிதுயில் கனவின் விளைவுகளே என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

ஆன்மிக அனுபவங்களின் மீதான இது போன்ற உளவியல் மதிப்பீடுகள் பைபிளின் பதிவுகள் மீது மட்டுமன்றி அனைத்து மதங்களின் பதிவுகள் மீதும் செய்யப்பட்டுள்ளன. இந்த விமரிசன்ங்களைத் தாண்டி ஆன்மிகம் தன்னை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பதுதான் நியாயமானதும் அதன் இருப்பிற்கு அர்த்தம் வழங்குவதும் ஆகும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். எனவே இது போன்ற உளவியல் சார்ந்த பகுப்பாய்வுகளை ஆன்மிக நாட்டம் கொண்ட ஒருவர் பயில வேண்டும் என்றும் கருதுகிறேன்.

 

அவிலா தெரசா தன் சுயசரிதையில் ஆன்மிகப் பயணத்தில் தான் சந்தித்த இடர்ப்பாடுகளை எல்லாம் மறைக்காமலும் மறுக்காமலும் எழுதி வைத்திருக்கிறார். உடல் மற்றும் மனம் சார்ந்து எழுகின்ற சிக்கல்களைப் பதிவு செய்திருக்கிறார். உளவியல் பகுப்பாய்வாளனுத் தேவைப்படும் தரவுகளை அவரின் சுயசரிதையே வழங்கிவிடுவதைப் பார்க்கிறோம்.

 

அவிலாவின் தெரசா என்னும் ஆளுமையின்மீது நம் கவனம் ஈர்க்கப்படுவதற்கு முதல் காரணம் அவர் ஒரு பெண் என்பதே. ஆண்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அல்லது ஆண்கள் மட்டுமே வெளிப்பட்டுத் தெரியும் ஆன்மிகத்துறையில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் ஞானிகளை நாம் வாசிக்க முடிகிறது. அவ்வகையில் மீரா, ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ராபியா, மேபல் காலின்ஸ் என்று யாரையெல்லாம் சொல்வோமோ அவர்கள் ஒவ்வொருவரின் ஆளுமைக்கூறுகளில் சிலவற்றுடன் தெரசாவை நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

 

அவிலா தெரசாவின் மீது உளவியல் உலகம் கொள்ளும் கவனத்திற்கான இரண்டாம் காரணம் அவர் தன் அனுபவங்களை விவரிப்பதற்குக் காதலின் மொழியைக் கையாளுகிறார் என்பது. ஆன்மிக இலக்கிய உலகில் இது புதிதல்ல. இந்திய பக்தி மரபிலும், சூஃபி மரபிலும் நாயக- நாயகி பாவனைகொண்டு எழுதப்பட்ட உன்னதமான இலக்கியங்கள் பல உள்ளன. இறைக்காதலின் அனுபவங்கள் என்னவென்றே அறியாத மக்களுக்கு அவர்கள் அறிந்த மனிதக் காதலின் கூறுகளை வைத்துத்தான் அவற்றை விளக்க வேண்டி வந்தது. மட்டுமல்ல, அதுவே வேறு எதனையும்விடச் சிறந்த மற்றும் எளிய வழியாகவும் இருந்தது.

 

குரு நித்ய சைதன்ய யதி LOVE & DEVOTION” என்னும் தலைப்பில் இது பற்றி மிக விரிவாகப் பேசியுள்ளார். அந்த நூலை எழுதுவதற்கு அடிப்படையாக நாயக-நாயகி பாவனையில் அமைந்த நான்கு இலக்கியங்களைத் தெரிவு செய்தார். சங்கரரின் சௌந்தர்ய லஹரி’, ஜெயதேவரின் ‘கீதகோவிந்தம்’, புனித ஜானின் கவிதைகள் மற்றும் புனித அவிலா தெரசாவின் ‘THE INTERIOR CASTLE’. அந்த நூலின் முன்னுரையில் அவர் இந்தப் பொருண்மை பற்றி, அதாவது காதலும் ஆன்மிகமும் பற்றிச் சொல்வதைக் கவனிப்போம்:

“பக்தியின் ஆன்மிக அனுபவங்களைக் கூர்ந்து பார்க்கும்போது அதன் அடியாழத்தில் காமத்தின் ஈர்ப்பு இருப்பதைக் கவனிக்க முடியும். இது எதிர்பாலினருக்கிடையே இயல்பாக ஏற்படும் இச்சையையோ அல்லது ஓரினக் கவர்ச்சியில் உள்ளவர்களுக்கிடையே உள்ள இச்சையையோ போன்றதுதான். முதல்வகைக் காதலின் கம்பீரமான, மென்மையின் சாயலை கிருஷ்ணனின் மீதான ராதையின், மீராவின் பக்தியிலும், கிறிஸ்துவின்மீது மேரி மெக்தலேனாவும் புனித தெரசாவும் கொண்டிருந்த பக்தியிலும், அன்னையின்மீது சங்கரரும், ஸ்ரீராமகிருஷ்ணரும், நாராயண குருவும் கொண்டிருந்த பக்தியிலும் காண முடியும். இரண்டாம் வகையிலான காதலை புத்தரின் மீதான ஆன்ந்தனின் பக்தியிலும், ராமகிருஷ்ணரின் மீதான விவேகானந்தரின் பக்தியிலும் கிறிஸ்துவின் மீதான புனித ஜான் கொண்ட பக்தியிலும் காணலாம்.

 

“இங்கு ‘காமம் என்கிற வார்த்தை வியாபார நோக்கத்துடன் மலிவான பத்திரிகைகளில் உபயோகப்படுத்தப்படுகிற ‘உடல் சார்ந்த இச்சைஎன்கிற பொருளில் உபயோகிக்கப்படவில்லை. புனித அகஸ்டின் சொல்கிற ‘கடவுளின்பால் ஒருவன் உணர்கிற உத்வேகமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட ஈர்ப்புஎன்னும் பொருளிலேயே அர்த்தம் காணப்படுகிறது. மனித உணர்வுகளிலேயே கண்ணியமானதும் மிகுந்த ஆன்ந்தமளிப்பதும் காதல்என்கிற உணர்வு மட்டுமே என்பதில் சந்தேகமில்லை. காதல் கண்ணியமும் தீவிரமும் கொண்ட நிலையில் காதலர்களைப் பேரான்ந்தத்திற்கு இட்டுச் செல்கிறது. அவர்களை ஒன்றிணைக்கிறது. அந்நிலை நிர்வாணத்தை, கைவல்யத்தை, மஹாலயத்தைப் போன்றதாகும். இவை கிறிஸ்தவத்தில் சொல்லப்படும் மோட்சத்தையும் விமோசனத்தையும் ஒத்ததாகும்.

(நூல்: அனுபவங்கள் அறிதல்கள், கட்டுரை: மானுட உணர்வுகள், தமிழாக்கம்: சூத்ரதாரி, பக்.146,147)

 


நித்ய சைதன்ய யதி உதாரணம் காட்டியிருக்கும் ஆன்மிக ஆளுமைகளின் பட்டியலில் நான் சேர்க்க விரும்பும் சூஃபி ஆளுமைகள் இருவருண்டு. ஷம்ஸ் தப்ரேஸும் அவரின் புகழ்மிகு சீடர் மௌலானா ரூமியும். பாரசீக மொழியின், சூஃபிக் கவிதையுலகின் சிகரமாகக் கருதப்படுவது ரூமி எழுதிய ‘மஸ்னவிஎன்னும் காவியம். அவர் எழுதிய இன்னொரு நூல் அதைவிடவும் அளவால் பெரியது. தன் குருநாதர் மீது ரூமி எழுதிய ஆழமான காதல் பாடல்களின் – கஸல்களின் தொகுப்பு அது. “தீவானெ ஷம்ஸெ தப்ரீஸ்என்று அழைக்கப்படும் அந்த நூலில் 3230 கஸல்களும், 2000 ருபாயாத்துகளும் இதர கவிதைகளுமாக நாற்பதாயிரம் கவிதை வரிகள் உள்ளன. (மஸ்னவியில் 25000 வரிகள்.)

 

“உன் ஒளியில்

காதல் செய்யக் கற்கிறேன்.

உன் அழகில்

கவிதைகள் செய்வதற்கு.

என் நெஞ்சில் நடனம் செய்கிறாய் நீ.

யாரும் உன்னைக் காணாத அவ்விடத்தில்

நான் உன்னைப் பார்க்கிறேன்.

அந்தப் பார்வையே

இந்தக் கலை ஆகிறது.

 

தீவானே ஷம்ஸெ தப்ரீஸ் என்னும் கடலிலிருந்து இது ஒரு துளி. இப்படி ஆயிரக்கணக்கான வரிகளை ஒருவர் தன் குருவின்மீது எழுதுகிறார் என்றால் அதைப் பாமரர்களின் சிற்றறிவு எந்த விதத்தில் புரிந்துகொள்ளும்? சமீப காலத்தில் கோல்மன் பார்க்ஸின் மொழிபெயர்ப்பு மூலம் ரூமியின் கவிதைகள் அமெரிக்காவில் பிரபலமானபோது இந்த குரு-சிஷ்ய உறவு ‘கேசமூகத்தினரால் எதார்த்தத்திலேயே ஓரினப் பாலுறவாக விளங்கிக் கொள்ளப்பட்ட்து. பகுத்தறிவுரீதியில் இஸ்லாத்தைப் பேசுபவர்களும் அப்படியே விளக்கம் சொல்லக்கூடும்.

 

மேற்சொன்ன கதிதான் அவிலா தெரசாவுக்கும் நேர்ந்தது. அவரின் வரிகள் குறியீட்டுத் தளத்தில் அன்றி நேரடிப் பொருளாகவே சிலரால் விளங்கவும் விளக்கவும் பட்டன. அப்படிக் காண்பவர்கள் ஃப்ராய்டிய உளவியல் ரீதியில் பகுப்பாய்வு செய்வதற்குரிய கணிசமான புள்ளிகள் அவரின் வாழ்வில் இருந்தன.

 

தன் வழிபடு தெய்வத்திற்கென்று தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்து பக்தியில் கரைந்து போகும் பெண் ஆளுமைகளைப் பொருத்த வரை அந்தக் காதலின் விதை அவர்களின் பிஞ்சு வயதிலேயே மனதில் ஊன்றப்படுவதைக் காணலாம். மீரா, ஆண்டாள், காரைக்கால் அம்மையார்... திருவரங்கத்தில் உள்ள துலுக்க நாச்சியார் கதையும் நாம் அறிந்ததே.

 

அவரைப் பிராயம் தொடங்கி என்றும்

ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்

தொழுது வைத்தேன்...

“ஊனிடை ஆழிசங்குத்தமர்க் கென்று

உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்

மானிடவர்க் கென்று பேச்சுப்படில்

வாழகில்லேன் கண்டாய்...”

என்று ஆண்டாள் பாடுகின்ற வரிகளில் இதை நாம் தெளிவாகவே உணரலாம்.

 

இது போன்ற பாடல்கள் பாவிக மொழியின் பரிபாஷை அறிந்தவர்களுக்கானது மட்டுமே. அறிவியலின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் போன்றே இவற்றையும் கையாள வேண்டும். நாயக-நாயகி பாவனை பெண்ணுடலின் அம்சங்களை ஆன்மிகத் தளத்திற்கான பொருளுணர்த்தும் குறியீடுகளாகவே பேசுகிறது. மேற்கண்ட பாடலில் இடம்பெறும் ‘தடமுலைகள்என்பது குறியீடாக நின்று உணர்த்தும் அர்த்தம் என்ன என்று வினவலாம். பக்தி என்பதைத்தான் அது உணர்த்துகிறது.

 

முற்றிலாத பிள்ளைகளோம் முலைகள் போந்திலோமைஎன்று ஆண்டாள் பாடும்போது “பக்தி நெறியில் போதிய முதிர்ச்சி அடையாத ஆரம்ப நிலைச் சாதகர்கள்என்பதாகத்தான் விளங்கிக்கொள்கிறேன்.

 

“தழுவல் நயந்தேங்கிக்

குமையும் நின் ஸ்தனங்கள்

தீண்டிட விம்மென்னும்.

இக்கலசங்களை என் நெஞ்சில் இறக்கி வை, ராதா!

கனலும் காதலின் தீயை அணை” (12:5)

என்று ஜெயதேவர் தன் கீதகோவிந்தத்தில் பாடும் வரிகளின் உட்பொருளாக, “பக்தியும் பக்தனுக்கு ஒரு சுமையே. அது முதிரும் நிலையில் முழுமையாக இறைவனிடம் சரணடைவதன் மூலமே அதன் பாரத்தைவிட்டும் அவன் விடுதலை அடைகிறான்என்றே நான் விளங்கிக் கொள்கிறேன்.



டேவிட்.சி.ஸ்காட் (DAVID C.SCOTT) என்னும் கிறிஸ்துவ இறையியல் பேராசிரியர் எழுதிய அருமையானதொரு ஆராய்ச்சிக் கட்டுரை “RADHA IN THE EROTIC PLAY OF THE UNIVERSE. ஜெயதேவரின் கீதகோவிந்தத்தின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இந்த ஆய்வில் அதன் ஆன்மிகத் தொனிகளை விளக்குகிறார். கிறிஸ்துவ சமய இலக்கியப் பரப்பில் இது போன்ற நாயக-நாயகி பாவனையில் அமைந்த நூல்கள் அதிகமாக இல்லை என்பதையும் இருப்பவை இத்தனை ரஸமிக்கதாக இல்லை என்பதையும் கிறிஸ்துவ மனத்தில் அதற்கான தயக்கம் இருப்பது பற்றியும் குறிப்பிடுகிறார். இறுதியாக ஜெயதேவரின் பாடல்களோடு பழைய ஏற்பாட்டில் உள்ள ‘SONG OF SONGS’ எனப்படும் சாலமோனின் பாடலை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

 

சாலமோனின் கீதம் என்றழைக்கப்படும் இந்தப் பாடலைக் கொஞ்சம் கவனிப்போம். நாயக-நாயகி பாவனையில் அமைந்த இந்தப் பாடலே கிறிஸ்துவ சமய இலக்கியப் பரப்பில் அப்பொருண்மையில் கிடைக்கின்ற முதல் பாடலாகும். அவ்வகையில், ஆன்மிக அனுபவங்களைக் காதலின் மொழியில் பேசுவதற்கு இப்பாடலே கிறிஸ்துவ ஞானிகளுக்கு முன்னோடி / முன்மாதிரி. இப்பாடலில் உள்ள காமிய வருணனகளின் குறியீட்டுப் பொருள் கிறித்துவ ஆன்மிகவாதிகளால் அவ்வப்போது விளக்கப்பட்டு வந்துள்ளது. (யூதர்களுக்கும் இப்பாடல் மிகவும் முக்கியமானது. அதனை அவர்கள் ஹீப்ரூ மொழியில் வைத்துப் பயில்கிறார்கள். இறைத்தூதர் சாலமோனுக்கும் ஷீபாவின் அரசிக்கும் இடையிலான காதல் உறவை இறைவனுக்கும் இஸ்ரேலுக்குமான உறவின் குறியீடாக அவர்கள் விளக்குகின்றார்கள். கி.பி.90-ம் ஆண்டு கூடிய யூதமத குருமார்களின் சபையில் (COUNCIL OF JAMNIA) ரப்பி அகீபா இவ்வாறு பேசினார்: “இஸ்ரவேலுக்கு இந்த மகாகீதம் (SONG OF SONGS) வழங்கப்பட்ட நாளுக்கு நிகராக முழு உலகிலும் வேறு எதுவும் இல்லை. வேதத்தின் அனைத்து எழுத்துக்களும் புனிதமானவைதாம் என்றாலும் கீதங்களின் கீதம் புனிதங்களின் புனிதமாகும். (the Song of  Songs is the Holy of  Holies)”).

 

“உன் முலைகள் மதுவினும் சிறந்தவை

கமழும் உன் நறுமணம்

அனைத்து திரவியங்களினும் மேலானது” (1:1,2)

என்னும் வரிகளுக்கு நைஸாவின் புனித க்ரிகோரி (கி.பி.335-394) தருகின்ற உட்பொருள் விளக்கம்: “என் கருத்தில் இந்த வரிகள் சுட்டுவது மேலோட்டமானதோ முக்கியத்துவமற்றதோ அல்ல. தெய்வீக ஸ்தனங்களின் பாலுடன் மதுவில் பெறப்படும் களிப்பை ஒப்பிட்டு நாம் அறிந்துகொள்வது என்ன எனில், நான் நினைக்கிறேன், அறிவியல் – கற்பனைத்திறன் – அவதான சக்தி என்று மனிதக்கல்வி அனைத்தும் தெய்வீக்கல்வியின் (ஆன்மிகக் கல்வியின்) எளிமையான ஊட்டத்திற்குக் கூட நிகராகாது. குழந்தைகளின் உணவான பால் முலைகளில் இருந்து வருகிறது. ஆனால் மது, அதன் வலுவாலும் சூடேற்றும் தன்மையாலும் வளர்ந்தவர்களுக்கானது. எனினும், இவ்வுலகின் முழுமை பெற்ற கல்வி தெய்வீக உலகின் பிள்ளைத்தனமான கல்வியைவிடத் தாழ்ந்ததே. எனவே தெய்வீக ஸ்தனங்கள் மனித மதுவினும் சிறந்தவை; தெய்வீகத்தின் நறுமணம் அனைத்து திரவியங்களினும் மேலானது.

 

இப்போது நான் எழுந்து

நகரின் அகன்ற சாலைகளில் செல்வேன்,

என் ஆன்மாவின் காதலனைத் தேடி.

நான் தேடினேன்

ஆனால் அவனைக் காணவில்லை.” (3:2)

என்னும் வரிகளுக்கு சிலுவையின் புனித ஜான் (24.06.1542-14.12.1591) தருகின்ற விளக்கம்: “என்னைப் புலம்பவிட்டு, என் காதலனே, எங்கே மறைந்தாய் நீ?காரணம் என்னவெனில், அவன் மறைந்திருக்கின்றான்; அவனைச் சந்தித்து அனுபவிக்க நீ உன்னை மறைக்கவில்லை. மறைந்திருக்கும் பொக்கிஷத்தைத் தேடும் எவரும் அது இருக்கும் மறைவிடத்திற்குள் ரகசியமாய்ப் புகவேண்டும். அதனைக் கண்டடையும் போது அந்தப் பொக்கிஷத்தைப் போன்றே அவனும் மறைக்கப்படுவான். உன் காதலனே விளைநிலத்தில் மறைந்த பொக்கிஷம். எனவே, ஞானமுள்ள வணிகன் அதனைப் பெற தன் உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டான் (மத்தேயு:13:44). உன் ஆன்மாவெ அந்த விளைநிலம். அவனைக் கண்டடைய நீ உன் உடைமைகளையும் அனைத்துப் படைப்புக்களையும் மறந்துவிட்டு உன் ஆன்மாவின் அந்தரங்க உள்ளறையில் உன்னை ஒளித்துக்கொள். அங்கே, உன் முதுகின் பின்னால் (அனைத்துப் பொருட்களுக்கும் உன் இச்சை என்னும்) கதவைச் சாத்திவிட்டு நீ உன் ஆண்டவரிடம் தனிமையில் பிரார்த்திப்பாயாக (மத்தேயு:6:6). அவனுடன் மறைந்திருந்து, மறைவில் அவனை நீ அனுபவிப்பாய், மறைவில் அவனை நீ காதலிப்பாய், அவனைச் சுகிப்பாய், மறைவில் அவனில் நீ பரவசம் கொள்வாய், அதாவது, அனைத்து மொழிகளையும் உணர்வுகளையும் கடந்து அப்பால் ஆவாய்.

 


சிலுவையின் புனித ஜான், அவிலா தெரசாவின் சமகாலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. (அவிலா தெரசாவைவிட ஜான் இருபத்தேழு ஆண்டுகள் இளையவர்.) அவிலாவிற்கு அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்த இவர் பால்ய பருவத்தில் தந்தையை இழந்து வறுமையில் வாடி, இக்னேஷியஸ் லொயோலாவின் இயக்கத்தைச் சேர்ந்த பள்ளியில் கல்வி கற்றார். தன் இருபத்தோராம் வயதில் கார்மெலிய சபையில் சேர்ந்தார். (அவிலாவின் தெரசாவும் இந்தச் சபையைச் சேர்ந்தவரே. இச்சபை கி.பி.12-ம் நூற்றாண்டில் துவங்கப்பட்டது. ஜெருசலேத்திற்குப் பாதயாத்திரை செய்யும் துறவிகளால் கார்மெல் என்னும் மலையில் திட்டமிடப்பட்டதால் இச்சபை அந்த மலையின் பெயரால் அழைக்கப்படுகிறது. தற்போது இஸ்ரேலின் விளிம்பில் மத்தியத்திரைக்கடலின் அருகில் இருக்கும் கார்மெல் மலைக்கு ‘ஜபல் மார் இல்யாஸ்’ (எலிஜாவின் மலை) என்னும் பெயரும் உண்டு.) ஜான், பின்னர் ஃப்ரே லூயிஸ் தெ லியான் என்பவரிடம் கிறிஸ்துவ இறையியலைப் பயின்றார். (இந்த லியான் ‘சாலமோனின் கீதம்பாடலை ஸ்பானிய மொழியில் பெயர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.) 1567-ம் ஆண்டு மதினா தெல் காம்போ என்னும் ஊரில் அவிலா தெரசாவை அவர் சந்தித்தார். அவிலா தெரசா கார்மெலிய இயக்கத்தில் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டுவந்தார். ஜான் 1577 வரை அவிலா தெரசாவிற்குப் பக்கபலமாக நின்று பணியாற்றினார். இந்த இருவரின் தொண்டர்கள் மரபான கார்மெலிய சபையிலிருந்து விலகித் தங்களை “DISCALCED CARMELITES” – வெற்றுப்பாதக் கார்மெலைட்டுகள் என்று அழைத்துக் கொண்டார்கள். அவிலா தெரசாவும் புனித ஜானும் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் மிகவும் கடுமையானவை என்று மரபான கார்மெல் குருமார்கள் கருதினார்கள். அனால் இவர்கள் இருவரும் எழுதிய ஆன்மிக அனுபவப் பதிவுகளில்தான் நாயக-நாயகி பாவனை காணப்படுகிறது என்பது மேலோட்டமாகப் பார்க்கையில் முரண்பாடாகத் தெரியலாம். மட்டுமல்ல, அவர்களைச் சந்தேகிக்கவும் தூண்டலாம். அப்படி நடக்கவும் செயத்து. மரபான சபை இருவரையும் கலகக்காரர்களாகக் கருதியது. (ஓஷோவின் சொல்லாடலில் ‘கிளர்ச்சியாளர்கள் REBELS. கிளர்ச்சியாளன் ஆன்மிகத்தின் ஆதார சுருதிஎன்பார் அவர்!)

 

என் ஆன்மாவை அதன் ஆழ்மையத்தில்

மென்மையாய்க் காயப்படுத்தும்

காதலின் ஜீவ சுடரே!

இப்போது நீ முரடல்ல என்பதால்

இக்கணமே இணைவாய்.

அதுவே உன் விருப்பம் எனில்

இந்த இனிய சந்திப்பின்

திரையைக் கிழித்துச் செல்

(THE LIVING FLAME OF LOVE:1)

 

அந்த இனிய இரவில் ரகசியமாய்

யாரும் என்னைப் பாராதபோது

நானும் எவரையும் பாராமல்

என் மனதில் புதைந்த ஆசை தவிர

விளக்கோ வழிகாட்டியோ இன்றி

இந்த ஒளி என்னை இட்டுச் சென்றது

நன்பகல் வெளிச்சத்தினும் நிச்சயமாய்,

எனக்காக அவன் காத்திருக்கும் இடத்திற்கு

யாரும் வராத அந்த இடத்திற்கு.

என்னை வழிநடத்திய அந்த இரவு,

விடியலினும் இனிதான அந்த இரவு,

காதலியைக் காதலியுடன் இணைத்த அந்த இரவு,

காதலி காதலனில் கரைந்தாள்.

அவனுக்கு மட்டுமென்றே வைத்த

என் மென்முலைகளின் மீது

தலை சாய்த்திருந்தான் அவன்

என் விரல்கள் அவனை வருடியிருக்க

தேவதாரு மரங்கள் காற்றில் அசைய.

(DARK NIGHT OF THE SOUL)

 

என்னைப் புலம்பவிட்டு, என் காதலனே!

எங்கே மறைந்தாய் நீ?

என்னைக் காயம் செய்துவிட்டு

அம்பு போல் பறந்துவிட்டாய்

உன் பின்னால் ஓடிவந்தேன் அழுதபடி

ஆனால் நீ சென்றுவிட்டாய்.

 

மந்தைகளுடன் மலையேறும் இடையர்களே!

நான் பெரிதும் நேசிக்கும் அவனைக் கண்டால்

சொல்லுங்கள்

நான் மருகித் தவிக்கிறேன் என்று

சாகிறேன் என்று.

(THE SPIRITUAL CANTICLE: 1,2)

 

புனித ஜானின் மீது மரபார்ந்த குருமார்கள் கோபம் கொண்டதில் வியப்பேதும் இல்லை. இறைவனுடன் இணைவது பற்றி இப்படித் தளையற்ற சுதந்திரத்துடன் எழுதினால் வேறு என்ன நடக்கும்? இஸ்லாமிய உலகில் வரட்டு அறிஞர்களிடம் சூஃபி ஞானி மன்சூர் ஹல்லாஜ் அடைந்த கதிதான் ஜானுக்கும் வாய்த்தது!

 

இடையில் மறைந்த இழை மீண்டும் கிடைத்துவிட்டது. அவரைப் பிராயம் தொடங்கி...அவிலா தெரசாவின் மனதில் கிறிஸ்துவின் மீதான ஆழமான காதல் அவரின் சிறு பிராயத்திலேயே விதைக்கப்பட்டுவிட்டது. அவருடைய பிள்ளைப் பருவத்தை, கார்மெல் சபையில் சேர்வதற்கு முன்புள்ள பருவத்தை இரண்டு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். அவை ஒன்றுக்கொன்று முரணான போக்குடையவை. உளவியலின் பார்வையில் மிகவும் கவனத்திற்குரியவை.

(தொடரும்...)  

 

 

 

 

Thursday, December 22, 2011

ஸ்கூல் ஆட்டோ



மதியம் மூன்றேகால் மணி என்பதை நம்பவே முடியவில்லை. மாலை ஆறு மணி ஆகிவிட்டது போல் தோன்றியது. வானம் அவ்வளவு மப்பும் மந்தாரமுமாக இருந்தது. ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்பி, பின்னால் சகதர்மினியை வைத்துக்கொண்டு ஐம்பது கி.மி வேகத்திலிருந்து அறுபது கி.மியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன். பதறிப்போன சகதர்மினி மெதுவாகவே செல்லுமாறு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து அள்ளிக்கொண்டு /  அழைத்துக்கொண்டு வரும் ஸ்கூல் ஆட்டோ மூனறரை மணிக்கெல்லாம் வந்துவிடும். அதற்குள் நாங்கள் வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும். தன்னைவிட இரண்டு மடங்கு எடை கொண்ட புத்தகப் பைகளைச் சுமந்து படியேறிவந்து வீட்டின் கதவு பூட்டியிருப்பதைப் பார்த்தால் இரண்டு பிள்ளைகளும் அழுது அரற்றித் தீர்ப்பார்கள். பெண்பிள்ளையாவது மூச்சைப் பிடித்துக்கொண்டு பையைச் சுமந்தபடி மேலே ஏறி வந்துவிடுவாள். அவளின் அண்ணனுக்கு அது ஆகவே ஆகாது. ஆட்டோவிலிருந்து இறங்கியவுடன் அவன் பையை வாங்கிக்கொள்ள நான் ஓடிவர வேண்டும். இல்லையெனில் அப்படியே தொப்பென்று தெருவில் போட்டுவிட்டு வருவான். மகள் முயற்சி திருவினையாக்கும் என்று நினைக்கிறாள் போலும். ஆனால் மகன் நிச்சயமாக தாவோ ஞானிதான்!



வீட்டின் முன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு மேலே பார்த்தபோது பிள்ளைகள் வந்திருக்கவில்லை என்று தெரிந்தது. ‘அப்பாடாஎன்று ஒரு பெருமூச்சினை அனுபவித்துவிட்டு நானும் அவளும் வீட்டினுள் சென்றோம். அவள் அடுக்களைக்குள் சென்றுவிட்டாள். நான் மடிக்கணினியை எழுப்பி இணையத்திற்குள் ப்ரவ்ஸ் செய்ய, அதாவது மேயத் தொடங்கினேன்.

“என்னங்க, மூனு நாற்பதாச்சு இன்னும் ஆட்டோ வரலியே? – அடுப்படியிலிருந்து அவள் கேட்டாள்.

“வர்ர நேரந்தானே...”  - கணினித் திரையிலிருந்து கண்ணெடுக்காமல் நான் சொன்னேன்.

மீண்டும் அதே போல் அவள் கேட்டபோது மணி நான்கு. அத்தனை தாமதமாவதற்கு நியாயம் தோன்றாததால் கணினியை அணைத்துவிட்டு எழுந்தேன். சரசரவென்று கைலியிலிருந்து பேண்ட்டுக்கு மாறி ஸ்கூட்டர் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

“ஸ்கூல்ல போய் பாத்துட்டு வர்றென்...

ஸ்கூல் வாசலுக்குள் வட்டமடித்து ஸ்கூட்டரில் நான் நின்றபோது வாட்ச்மேன் சல்யூட் வைத்து மாலை வணக்கம் செய்தார்.

குடீவினிங், பிள்ளைங்க இன்னும் வரலியே?

“எல்லா ஆட்டோவும் அப்பவே போயிடிச்சே சார்

நான் குழம்பிக்கொண்டு நின்றேன். சீருடை அணிந்த நாலைந்து பிள்ளைகள் புத்தக மூட்டைகளைப் புல்லில் வைத்துவிட்டு நடைக்கட்டையில் அமர்ந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் பெரிய க்ளாஸ் பிள்ளைகள். பள்ளி மைதானத்தில் ஒரு கும்பல் கிரிக்கட் விளையாடிக்கொண்டிருந்தது. அவர்களும் பெரிய க்ளாஸ் பசங்கள்தான். என்றாலும், பந்து பொறுக்கிப் போடும் உப்புக்குச் சப்பாணிகளாக வாண்டுகள் யாராவது இருக்கிறார்களா என்று பார்வையால் துழாவினேன்.


ஸ்கூட்டரைத் திருப்பி வீட்டிற்கு விட்டபோது மனதில் இருவிதமான உணர்வுகள் கலந்து வந்தன. பிள்ளைகளுக்கு என்னாயிற்று என்ற பயம் ஒருபக்கம். ஆட்டோ முன்பே வந்திருக்கும். வீடு பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டு இந்த வாண்டுகள் என் பெரியம்மா வீட்டிற்குச் சென்றிருப்பார்கள். அதனால் பயப்படத் தேவையில்லை என்ற ஆறுதல் மறுபக்கம். இந்த ஆறுதலின் இருந்ததால் சகதர்மினியைப் பயமுறுத்திக் கொஞ்சம் விளையாட்டு காட்டலாம் என்றொரு எண்ணமும் மனதில் எழுந்து குதூகலித்தது. 

தெருவில் வரும்போதே பால்கணியில் நின்றபடி அவள் எட்டிப்பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. நான் மட்டும் தனியே வருவதைப் பார்த்துவிட்டு நெற்றிச் சுருக்கி ‘என்ன?என்று முகபாவனையால் கேட்டாள். நான் உதட்டைப் பிதுக்கிச் சிரித்தேன். மீண்டும் அதே கேள்வி. இப்போது கையும் சேர்ந்துகொண்டு கேட்ட்து.

“ஆட்டோலாம் அப்பவே போயிடிச்சாம். ஸ்கூல்ல பிள்ளைங்க இல்ல. பெரிம்மா வீட்ல இருப்பாங்கன்னு நெனக்கிறேன். கூட்டிட்டு வர்றேன்

பெரியம்மா வீட்டிலும் பிள்ளைகள் வரவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு திரும்பி வரும்போது மனதின் நிலை மாறிக் குழப்பமும் எரிச்சலுமாக இருந்தது. அது ஆட்டோக்காரரின் மீது கோபமாக மாறிக் கொண்டிருந்தது. தெருவில் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்த பசங்களிடம் விசாரித்தேன். ஆட்டோ வந்த்தைப் பார்க்கவே இல்லை என்று சொன்னார்கள். போடியத்தா வீட்டிற்குள் போய் பார்க்கலாமா என்று காம்ப்பவ்ண்ட் அருகில் ஸ்கூட்டரை நிறுத்தினேன். அங்கில்லை என்று உள்மனம் சொல்லவே ஸ்கூட்டரை உருட்டிக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்தேன். அண்டை வீட்டில் விசாரித்தபோதும் ஆட்டோ சத்தம் எதுவும் கேட்கவில்லை என்றே சொன்னார்கள். வயிற்றில் லேசாகப் பிசையத் தொடங்கியது.

ஃபோன் போட்டுப் பாருங்களேன்என்றாள் அவள்.

“பிலால் பாய் நம்பர்தான் இருக்கு. இவர் நம்பர நான் வாங்கி வைக்கலியே?என்றேன்.

பிலால் பாய்க்கு நண்பர் ஒருவர் நல்ல மனுஷன், நம்பகமானவர்என்று சான்றிதழ் தந்ததன் பேரில்தான் அந்த ஆட்டோவையே அமர்த்தினேன். மூன்று மாதங்களாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. சென்ற மாதம் பிலால் பாய் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காகப் புறப்பட்டுப் போனார். அவரின் மச்சானைப் பொறுப்பில் அமர்த்தியிருந்தார். அந்த மச்சான் டிரைவர்தான் நாற்பது நாற்களாக ஓட்டிக்கொண்டிருக்கிறார். அவரின் பெயர்கூட எனக்குத் தெரியவில்லை. அவரின் நம்பரும் இல்லை.

“பிலால் பாய்க்கு மச்சான்தானே அவரு. ஃபோன் பண்ணிக் கேளுங்களேன், தெரியுமான்னு

சகதர்மினியின் உள்ளுணர்வு என் இலக்கியப் பிரக்ஞையைவிடப் பல மடங்கு துல்லியமானது என்பதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன். ஆகையால், மறு பேச்சு பேசாமல் செல்லெடுத்தேன். மறுமுனையில் செல்ஃபோன் மௌன விரதத்தில் இருந்த்து.

“எதுக்கும் திரும்பவும் போய் ஸ்கூல்லயே பாத்துட்டு வர்றேன்என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். ஒரு டேஜாவூ அனுபவம்போல் எல்லாம் மீண்டும் நடந்தேறின. (அதை நீங்கள் அனுபவிக்க ஆசைப்பட்டால் இக்கதையில் ‘மீண்டும் அதே போல் அவள் கேட்டபோதுஎன்று தொடங்கும் பத்தியில் ஆரம்பித்து ‘பார்வையால் துழாவினேன்என்பது வரை படிக்கவும்.)

இரண்டாம் முறையும் நான் தனியே வருவதைப் பார்த்த சகதர்மினியின் முகம் வெளிறிவிட்டது. அவள் கண்களில் நீர் நிறைந்து நின்றாள். என் மனதிற்குள் ஆட்டோ ஓட்டுநரின் மீது கோபம் குமுறியது. ஸ்கூட்டரை நிறுத்திக் கொண்டிருந்தபோது “ட்ர்ர்ர்..டொட்ரட்டொட்டொட்என்று ஆட்டோ வரும் ஓசை கேட்டுத் திரும்பினேன். அதன் முகத்தில் பச்சை நிறத்தில் பிலால் என்று எழுதியிருப்பது கண்ணில் பட்ட்து. மெல்ல ஊர்ந்து வரும் ஆட்டோவிற்குள் இருந்து பிள்ளைகள் கோரஸாக “யே...என்று கத்தும் சத்தம் காதில் மோதிற்று. ஆட்டோ நின்றதும் “யே...என்று மீண்டும் கத்திக்கொண்டு முக்கால் டஜன் வாண்டுகள் இரண்டு பக்கமும் வெளியே குதித்தார்கள். ஒவ்வொருவரின் கையிலும் ஒரு பலூன் இருந்தது. என் கொடுக்குகள் எல்லோருக்கும் டாட்டா சொல்லிவிட்டு மேலே ஓடினார்கள். அவர்களின் புத்தகப் பைகளையும் டிஃபன் பைகளையும் வாங்கிக்கொண்டே டிரைவரைப் பார்த்து, “என்னங்க இப்படிப் பண்ணிட்டீங்க? சொல்லாம கொள்ளாம எங்க போனீங்க?என்றேன்.

சதைப்பத்தான தன் மங்கோலிய முகத்தில் இயல்பாகப் பூத்த ஒரு சிரிப்புடன் அவர் சொன்னார், “பிலால்பாய் ஹஜ் முடிச்சு வந்துட்டார். திங்கக் கெளமைலேர்ந்து அவர் வருவார். அதுனால இன்னிக்குப் புள்ளைங்க எல்லோருக்கும் கேக், சாக்லேட், பலூன் வாங்கித் தந்தேன்.

சிரிக்கும் புத்தரைப் போல் அவர் சிரித்துக்கொண்டே இருந்தார். சட்டென்று மனதில் கவிந்துவிட்ட மௌனத்தின் ஊடே சில நொடிகள் அவரை நான் நோக்கி நின்றேன். குழந்தைகளின் நடுவே ஆட்டோவின் ஓட்டுநராக ஒரு குழந்தை அமர்ந்திருப்பதைப் பார்த்தேன்.

Monday, December 19, 2011

வறுகடலை வாசம்


நல்ல மனுஷன்... இப்படிப் போய்ச் சேரணும்னு ஆண்டவன் விதியில எழுதீருக்கான்என்று ஒருவர் சொல்லிப் பெருமூச்சு விட்டுக்கொண்டே நகர்ந்தார். குறிப்பாக யாரிடமும் அதை அவர் சொல்லவில்லை. தனுக்குத் தானே பேசிக்கொள்வதுபோல் அல்லது பள்ளியில் கூடியிருந்த அனைவருக்கும் பொதுவாகச் சொல்வதுபோல் ஒரு நாலு பேரின் காதில் விழும் சத்தத்தில் சொன்னார்.

அந்த நல்ல மனுஷன்சில ஆண்டுகளுக்கு முன் என் அண்டை வீட்டுக்காரராக இருந்தவர். மை நெய்பர். அண்டை வீடு என்றால் பக்கத்து வீடாக அல்ல. நாங்கள் குடியிருந்த ஃப்ளாட்ஸில் எதிர் போர்ஷனில் அவரும் குடியிருந்தார். ஊரில் அவர் ஒரு பிரபலமான தோல் வியாபாரி. ஆள் நல்ல தாட்டியான சரீரம். அவரின் இரண்டு மகன்களும்கூட அப்படித்தான் இருந்தார்கள். பார்த்தால் சலாம் சொல்லிப் புன்னகைப்பார். எப்போதாவது நாலு வார்த்தையில் குசலம். அவருடன் எனக்கிருந்த உறவு அவ்வளவுதான்.
அப்துல் சமது சாஹிபின் இம்மை வாழ்வு முடிந்துவிட்ட செய்தியை இப்போது நான் குடியிருக்கும் ஃப்ளாட்ஸின் கீழ்த்தள வீட்டினர் என் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது நான் பால்கணியில் நின்றபடி யாரிடமோ செல்பேசிக் கொண்டிருந்தேன். முடித்த்தும் செய்தியை என்னிடம் சொல்லிவிட்டு “இப்பயே கெளம்பி மவ்த் வீட்டுக்குப் போய் பாத்துட்டு வந்திருங்கஎன்றாள்.

கைலி களைந்து குழாயணிந்து நான் கிளம்பிக்கொண்டிருக்கும்போது மனதில் ஒரு வினோதபாவம் உருவாகியிருந்தது. அரைமணி நேரத்திற்கு முன்புதான் மரணம் பற்றிய ஒரு குறிப்பைப் படித்து அது என் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த்து. புனத்தில் குஞ்ஞப்துல்லா எழுதிய ‘மீஸான் கற்கள்நாவலின் ஆரம்பப் பகுதியில் வரும் வரிகள்:

“கூடத்தின் நடுவே போடப்பட்டிருந்த மாம்பலகைக் கட்டிலில் பாலப்புரை மம்மது ஹாஜியார் நீண்டு நிமிர்ந்து கிடந்தார். மூடியிருந்த வெள்ளைத் துணியை விலக்கி சடலத்தின் முகத்தைப் பார்த்ததும் எரமுள்ளான் பயந்து விட்டார். வாய் திறந்தபடியே இருந்தது. கதிமோட்சம் அடையாத உடலின் அடையாளம். இறந்த பிறகும்கூட ஆசையடங்காத வாய்!



இந்தக் குறிப்பு என் மனதில் பயங்கரமாகக் கிலிமூட்டியிருந்தது. இது உண்மையா? உயிர் உச்சந்தலை வழியாக ஊதப்பட்டு மேலிருந்து கீழாக இறங்கிப் பாதம் வரை பரவும்னு ஒரு கிரந்த்த்தில் படித்ததுண்டு, ஆதம் நபிக்குள் ஊதப்பட்ட ரூஹ் அப்படித்தான் இறங்கியது என்று. எப்படி இறங்கியதோ அதற்கு எதிர் திசையில்தான் அது வெளியேற வேண்டும் என்னும் லாஜிக்கின்படி அது கபால உச்சியின் வழியாகத்தான் எஸ்கேப் ஆக வேண்டும். என் நினைவின் அடுக்குகளுக்குள் துழாவிப் பார்த்தபோது பலரின் சடலங்கள் லேசாக வாய் பிளந்துகொண்டு கிடந்த்தைப் பார்த்த ஞாபகங்கள் வந்தன. என் முன்னோர்கள், பெரியோர்கள், உறவினர்கள். நினைக்கவே பெரும் பீதியாக இருந்தது. ஒருவேளை எரமுள்ளான் தியரி சரியாக இருந்துவிடும் பட்சத்தில் அவர்களின் கதி?

உடனே அதற்கொரு எதிர்-தீசிஸும் ஞாபகம் வந்தது. நல்லவர்களின் உயிர் ரிலீஸ் ஆகாமல் உடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, உயிர் வாங்க ஆஜராகும் இஸ்ராயீல் மலக்கு தன் கையில் அல்லாவின் பேரை எழுதி அதை அந்த நபரிடம் காட்டுவார்கள். அல்லாவின் பேரைப் பார்த்த சந்தோஷத்தில் உடனே உயிர் அவரின் வாய் வழியாகப் பாய்ந்துகொண்டு இஸ்ராயீலின் உள்ளங்கையில் ஒட்டிக்கொள்ளும். பொம்மையிடம் தாவும் குழந்தையைப் போல!

இந்தக் கருத்து எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. ஸ்கூட்டரைக் கிளப்பும்போது ஒரு விஷயத்தைக் கவனித்தேன். அதாவது ஒருசில நாட்களாகவே மரணச் சிந்தனை மீண்டும் மீண்டும் என் மனதில் உருண்டுகொண்டிருந்தது. இந்தப் பூமியில் நான் இல்லாத ஒரு நாள் நிச்சயம் வரப்போகிறது. எதைப் பார்த்தாலும் இந்த உணர்வே மனதில் எழுந்தது. நசிகேத்தன் ஞாபகம் வந்தான். அவன் மனதில் இதே உணர்வு எனக்கிருந்ததைப் போல ஆயிரம் மடங்கு அழுத்தமாக இருந்திருக்கும் என்று புரிந்துகொள்ள முடிந்தது. திருச்சுழியிலிருந்து புறப்பட்டுப் போய் திருவண்ணாமலையில் உள்ள ஒரு குகையில் ‘நான் இறந்துவிட்டேன்என்று சொல்லிக்கொண்டு கட்டையை நீட்டிப் படுத்துவிட்ட ரமணமகரிஷியின் மனதிலும் இந்த உணர்வு எத்தனை அழுத்தமாக இருந்திருக்கும் என்று வியந்தேன்.



மரணம் பற்றிய பல ‘அகப்பார்வைகள்மனதில் நிழலாடின. குறிப்பாக, மரணத்தை அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றிப் போட்டு ஓஷோ பேசியவை. அவற்றிலும் குறிப்பாக மரணத்திற்கும் காமத்திற்கும் உள்ள தொடர்பு! எந்த அளவு ஒருவனுக்கு மரணத்தைப் பற்றிய அறியாமை இருக்கிறதோ அந்த அளவுக்கு அதன்மீதான அச்சமும் இருக்கும். எந்த அளவு மரணபயம் இருக்கிறதோ அந்த அளவு காமத்தின் மீதான கவர்ச்சியும் இருக்கும். ஏனெனில் அது உயிர்ப்பின் அடையாளமாக இருக்கிறது, வாழ்வின் அடையாளமாக இருக்கிறது. மேலும் அது சந்ததி விருத்திக்கான உபாயமாகவும் உள்ளது. என் சந்ததியில் எனக்கான ஒரு சாஸ்வதத் தன்மையை நான் உணர்கிறேன். நான் இல்லாமல் ஆகிவிடப்போவதில்லை, இதோ என் தொடர்ச்சி என்னும் ஆறுதலை சந்ததி தருகிறது. எனவே, மரணத்திலிருந்து தப்பிப்பதற்கான ஒரு அடைக்கலமாக நினைவிலி மனம் காமத்தை நாடும்!

இன்னொரு கோணத்திலும் இதைப் பார்க்கலாம். மரணத்திற்கு முன்னுரையாக இருப்பது நோய். நோய்ப்படும்போது காமம் குறைந்துவிடும். (பிங்கோ: love in the time of cholera என்று கேப்ரியல் கேர்ஷியா மார்க்யுவஸ் தன் நாவலொன்றிற்குத் தலைப்பிட்டிருக்கிறாரே தலீவா?) எனவே காமத்தை நம் மனம் ஆரோக்கியத்தின் அடையாளமாகக் காண்கிறது. மரணத்தின் இன்னொரு அடையாளம் முதுமை. முதுமை அடைய அடைய காமம் குறைந்துவிடுவது இயற்கை. எனவே காமத்தை நம் மனம் இளமையின் அடையாளமாகக் காண்கிறது. (வயசாயிட்டே போவுதே, எப்ப கல்யாணம் பண்றதா உத்தேசம்? என்னும் வகையிலான வசனங்கள் சர்வ சாதாரணமாகவே புழங்குகின்றன அல்லவா?) இவ்வகையில், மனித குலத்தின் பொது மனதில் முதுமை, நோய் ஆகிய இரண்டும் மரணத்திற்கு அருகில் இருப்பவை. எனவே, இளமையும் காமமும் மரணத்திற்கு வெகு தொலைவில் இருப்பவை என்னும் எளிதாக அது கணக்குப் போட்டுவிடுகிறது. (ஒருவர் இறந்துவிட்டால் எதனால் இறந்தார் என்று விசாரிக்கிறோம். எந்த நோயின் காரணமாக என்று அறிந்துகொள்ள விரும்புகிறோம். அதை அவர் எப்படியெல்லாம் தவிர்த்திருக்கலாம் என்பன போல் உளறுகிறோம். அல்லது, எண்பது தொண்ணூறு வயசாளியாக இருந்தால் முதுமையில் மரணிப்பது இயற்கைதான் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால், தோல் வியாபாரி அப்துல் சமது சாஹிபின் உயிர் பிரிந்த்து கார் விபத்தில். அவர் புதிதாக வாங்கியிருந்த கார்!)

ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைத்தே தீரும்” (3:185) என்பது இறைவாக்கு. அதைவிட்டு யாரும் எங்கும் ஓடி ஒளிய முடியாது. நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களைப் பற்றும், வலிய உயரமான கோட்டைக்குள் நீங்கள் இருந்தாலும்.” (4:78)  இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். மரணத்திலிருந்து தப்பிப்பதற்கான பாதுகாப்பு என்று எதை நினைக்கிறீர்களோ அதிலேயே மரணம் இருக்கும்! இளமை மரணத்திற்கு எதிரானது என்று நீங்கள் நினைத்தால் அதிலும் மரணம் இருக்கும். காமம் மரணத்திற்கு எதிரானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதிலும் மரணம் இருக்கும். சிருஷ்டிகரம் என்று நினைப்பதில் எல்லாம் மரணம் உள்ளது. ஒன்றின் அழிவில்தான் இன்னொன்று உருவாகிறது.
ஆச்சரியம், இன்று அந்திமாலை அப்துல் சமது சாஹிபின் அடக்கத்திற்கான ஜனாஸா தொழுகையில் நின்றேன். நேற்று அந்தித் தொழுகைக்குப் பின்னர்தான் மரணம் என்பது அழகின் வாகனம்என்னும் கோட்பாட்டை யோசித்துக்கொண்டிருந்தேன். அது மிகவும் ஆழமான ஒரு சிந்தனையாகத் தோன்றியது. ஷேக்ஸ்பியரின் முதல் சானட்டில் அதைக் கண்டேன்.


From fairest creatures we desire increase, 
That thereby beauty's rose might never die, 
But as the riper should by time decease, 
His tender heir might bear his memory:
But thou, contracted to thine own bright eyes,
Feed'st thy light's flame with self-substantial fuel,
Making a famine where abundance lies, 
Thyself thy foe, to thy sweet self too cruel.
Thou that art now the world's fresh ornament 
And only herald to the gaudy spring, 
Within thine own bud buriest thy content 
And, tender churl, makest waste in niggarding. 
    Pity the world, or else this glutton be, 
    To eat the world's due, by the grave and thee.

(அழகிய பொருட்களில் ஆசை வளர்க்கிறோம்
அழகின் ரோஜா அழியாதிருக்கும் என்று.
கனிந்து காலம் மறைந்திடும் போது
இளம்பிள்ளையில் இருக்கும் அவன் நினைவு.
நீயோ உன் கண்களுக்குள் விழுந்து
அகத்தீயில் வார்க்கிறாய் சுயநல நெய்.
வளம்தங்கும் இடத்தில் வரட்சி செய்து
நீயே உன் பகைவனாய் உன்னையே நசிக்கிறாய்.
இக்கணம் உலகின் இனிய அணிகலன் நீ,
ஒளிமிகு வசந்த்த்தின் ஒரே தூதுவன் நீ.
உன் மொட்டில் புதைந்துள்ளது உன் நிறைவு,
செல்லப் பைத்தியமே!
உன் கஞ்சத்தனத்தில் வீணடிக்காதே.
உலகின்மேல் இரக்கம் கொள், அல்லது
கல்லறையில் அமர்ந்தொரு பேராசைக்காரனாய்
உலகின் பங்கும் தன் பங்கும் தின்பாய்.”)

இந்தப் பாடலில் ஷேக்ஸ்பியர் என்னதான் சொல்கிறார்? காலா காலத்தில் கலியாணம் பண்ணிக்கொண்டு பிள்ளைகுட்டிகள் பெத்துப்போடும் வழியைப் பாரப்பாஎன்று தன் பிரம்மச்சாரி நண்பனுக்கு அவர் சொல்லும் அறிவுரை இது என்கிறார்கள். அழகைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தால் அது அழிந்துவிடும். அழகைப் பாதுகாக்க ஒரே வழி அதை ஒரு உருவத்தில் அழித்து அதன் சந்ததியான இன்னொரு உருவத்திற்கு மாற்றிவைப்பதுதான் என்று இதில் அவர் சொல்கிறார். இப்படியாக அழிவும் ஆக்கமும், மரணமும் வாழ்வும், அச்சமும் கவர்ச்சியும் ஒன்றுள் ஒன்று ஒளிந்துகொண்டு விளையாடுகின்றன!

அப்துல் சமது சாஹிபின் வீடு தற்போது பீம நகரில் இருக்கிறது என்று சொன்னார்கள். நான் வாகனத்தைத் துருப்புப் பள்ளிவாசல் பக்கம் செலுத்தினேன். பள்ளிவாசலில் எப்படியும் மையத் இருப்பிடம் என்று முகவரி எழுதிப் போட்டிருப்பார்கள், பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்பில் சென்றேன். ஜனாஸாவே அங்குதானாம். சந்தூக்கில் வைத்து தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். ஒரே கூட்டமாக இருந்த்து. மக்ரிப் தொழுதுவிட்டு வெளித் திடலில் ஜனாஸாத் தொழுகை நடந்த்து. “எங்கள் அண்ணன் யார் மனமாவது புண்படும்படி எதாவது பேசியிருந்தாலோ அல்லது செய்திருந்தாலோ அல்லாஹ்வுக்காக அவரை மன்னித்துவிடுங்க. அவரின் மக்ஃபிரத்துக்காக (பாவமன்னிப்புக்காக) துஆ (பிரார்த்தனை) செய்யுங்க. அவர் யாருக்காவது பணம் கொடுக்கவேண்டியிருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கஎன்று அவரின் தம்பி சந்தூக்கின் முன் நின்றுகொண்டு வரிசையில் நின்ற மக்களைப் பார்த்துச் சொன்னார். உருக்கமாக இருந்தது. தொழுகையும் பிரார்த்தனையும் முடிந்து சந்தூக்கை வெளிச்சமுள்ள இடத்துக்கு நகர்த்திவைக்க வேண்டியிருந்தது. தலைமாட்டின் பக்கமாக நின்ற நானும் தூக்கினேன். பத்தடி தள்ளி ட்யூப் லைட்டின் வெளிச்சத்தில் இறக்கி வைத்தோம். “தீதார் பார்க்கணும். சந்தூக்கத் தெறங்கஎன்று யாரோ ஒரு மக்கள் பிரதிநிதி குரல் எழுப்பினார். யோசிக்காமல் நான் சந்தூக்கின் மீது போர்த்திக் கட்டியிருந்த பச்சைத் துணியின் உருவாஞ்சுருக்கை அவிழ்த்தேன். உள்ளே வெண்ணிறக் கஃபனுக்குள் மய்யித். உச்சந்தலைக்கு மேல் திருகி வைத்துக் கட்டப்பட்டிருந்த கஃபன் முடிச்சை அவிழ்த்துத் துணியை விலக்கினேன். அப்துல் சமது சாஹிபின் சிரித்த முகம் தெரிந்த்து. (அல்லது மனப்பிரம்மையில் எனக்கு அப்படித் தெரிந்த்தோ என்னமோ? அவரை சிரித்த முகமாகத்தான் எப்போதும் நான் பார்த்திருக்கிறேன்.)

இறப்புச் செய்தியைத் தெரிவிக்கப் பயன்படுத்தப் படும் வார்த்தைகள் பலவும் சட்டென்று உள்ளீடற்று வெறும் தக்கையாக இருப்பதை உணர்ந்தேன். அவற்றின் போதாமை வெளிப்படையாக உருத்தியது. “.... காலமாகிவிட்டார் அல்லது “..... அகால மரணமடைந்தார்என்கிறோம். காலம் என்றால் என்ன என்று தெரியாமலேயே. “நீங்காத் துயில் அடைந்தார்”, “இறைவனடி சேர்ந்தார்”, “உயிர் நீத்தார்”  “இறப்பு எய்தினார்” “மரணம் அடைந்தார்இத்தியாதி இத்தியாதி எல்லாம் நம் வாயில் வெறும் தக்கை வாசகங்கள் என்றே தோன்றுகிறது.

வீடு வந்து மனைவியிடம் ஒரு போஸ்ட்-ஜனாஸா வருணனை பேசி முடித்த பின்பும் இது போன்ற சிந்தனைகளே மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. ஏதோ மளிகைப் பொருட்கள் வேண்டும் என்று சகதர்மினி சொல்ல எட்டு மணி வாக்கில் நாடார் கடைக்குச் சென்றேன். கடையில் வாங்கிக்கொண்டு நிற்கும்போது ‘டின் டின் டின்என்று சத்தம் கேட்ட்து. கடலை வண்டி வந்து வெளிச்சம் இல்லாத ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் நின்றது. கடலை வறுக்கும் பம்ப் ஸ்டவ்வின் வெளிச்சம் மட்டும்தான் தெரிந்த்து. ஆட்டோக்காரர்கள் கடலை வாங்கினார்கள். ஐந்து ரூபாய்க்குக் கடலை கேட்டு நானும் நின்றேன். மணலில் வறுபட்டுக் கொண்டிருந்த கடலைகளின் வாசம் மூக்கில் நுழைந்து (இழைந்து) மனமெல்லாம் நிறைந்தது. ஒரு சல்லடைக் குவளையை எடுத்து அப்படியே அவ்ற்றை மணலோடு அள்ளி மணலை மட்டும் வானலியில் வடிகட்டிவிட்டுக் கடலைகளை அலக்காக மேலே புரளவிட்டுப நாலைந்து தடவை புடைத்தார். தொலிச் சருகுகள் காற்றில் பறந்து போயின. ஒரு கூம்புப் பொட்டத்தில் இட்டுக் கொடுத்தார். வாங்கிச் சட்டைப் பையில் வைத்தேன். அதன் சூடு என் நெஞ்சில் இதமாகப் பரவியதை அலாதியாக ரசித்தேன். வீட்டிற்கு வந்து மனைவி மக்களுடன் கடலைகளைப் பகிர்ந்து ருசித்த கணங்களில்...

பிறகுதான் யோசித்தேன், அந்த கடலைக் கணங்களில் மரணம் பற்றிய சிந்தனைகள் எல்லாம் மனதை விட்டு முற்றிலும் மறைந்தே போயிருந்தன. ஒரு இழை அறுபட்டுக் காணாமல் போய்விட்டதைப் போல். ஒரே சப்ஜெக்டைப் போட்டுக் குடைந்த்தில் மனம் வெறுத்துப்போய் அப்படி ஒரு ஆட்டோ ஷட்டௌன் செய்துகொண்ட்து போலும். ஆனால் அந்தக் கடலையைச்  சுவைக்கையில் மரணத்தை மறந்து திளைத்து அனுபவித்தேனே, அது என்ன?

வாழ்வின் ருசி!