Tuesday, February 25, 2014

இந்தியாவின் கிளி - part 2


அமீர் ஃகுஸ்ரோவின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் பால் லோசன்ஸ்கியும் சுனில் ஷர்மாவும் தங்களின் நூலுக்கு “காதலின் கடைவீதியில்” (IN THE BAZAAR OF LOVE) என்று தலைப்பிட்டிருக்கிறார்கள். அமீர் ஃகுஸ்ரோ எழுதிய கஜல் கண்ணி ஒன்றிலிருந்து இப்பெயர் எடுக்கப்பட்டுள்ளது:

“என் பக்கம் நீயொரு பார்வை செலுத்த
இறந்துபோகவும் ஆயத்தமாகிவிட்டேன்
பார், காதலின் கடைவீதியில் என்னைப் போல்
எத்தனைப் பேர் மரித்துவிட்டார்கள் என்று!”
(மன் பிதான் நழ்ரம் கெ கர்மீரம் பசூயம் பின்கரீ
பீன் கெ ச்சூ மன் ச்சந்த் கஸ் முர்தாஸ்த் தர் பாஸாரி இஷ்க்)

கிரேக்க ஞானி டயோஜினஸ் பகலில் கைவிளக்கு ஏந்தியபடி ‘மனிதனைத் தேடி’ கடைவீதிகளில் அலைந்த கதையை நாமறிவோம். சூஃபி ஞானிகள் பலரும் மக்கள் பெருக்கம் மிக்க கடைவீதிகளில் சுற்றி அலைந்திருக்கிறார்கள். அவர்கள் தேடி அலைந்ததென்னவோ இறைவனை மட்டுமே!


இதே போன்ற ஒரு பாடலை மௌலானா ரூமியிடம் கேட்கிறோம்:

“வீணாக அல்ல, வீதியிலும் சந்தையிலும்
அலைகின்றேன் நான்
காதலின் வசத்தில் இருக்கிறேன்,
தரிசனத்திற்காக அலைகின்றேன் நான்
(ந மன் பேஹூதா கிர்தே கூச்சாவொ பாஸார் மீ கர்தம்
மஸாக்கெ ஆஷிக்கீ தாரம் பயே தீதார் மீ கர்தம்)

      மௌலானா ரூமியின் கவிதைகளை அமீர் ஃகுஸ்ரோ கேட்டிருக்க வேண்டும். ரூமியின் தாக்கம் அவரிடம் உண்டு என்பது திண்ணம். கவிப்பணியில் அவர் பாரசீகக் கவிஞர் நிஜாமிக்கு இணையாகும் முயற்சியில் ஈடுபட்டு நிஜாமி எழுதிய ’ஷீரீன் – ஃகுஸ்ரோ’ மற்றும் ’மஜ்னூன் – லைலா’ ஆகிய காவியங்களைத் தனது பிரதிகளாக மறு ஆக்கம் செய்து எழுதினார். ஆனால் மௌலானா ரூமிக்கு இணையாகும் முயற்சியைக் கனவிலும் அவர் கருத முடியாது. நிஜாமியும் ஃகுஸ்ரோவைப் போன்றே ஓர் அரசவைக் கவிஞர். ஆனால் மௌலானா ரூமியோ ஆன்மிகக் குருநாதர், இறைநேசர்.

      நிஜாமுத்தீன் அவ்லியாவின் மீது தான் கொண்ட ஆன்மிகக் காதலுக்கு மௌலானா ரூமி தனது குருவான ஷம்ஸுத்தீன் தப்ரேஸி (ரஹ்) மீது கொண்ட காதலையே அமீர் ஃகுஸ்ரோ முன்மாதிரியாக வரித்திருப்பார் என்று கருதலாம். எனினும் மௌலானா ரூமியின் செப்பமான நிலைக்குத் தன்னால் உயர முடியவில்லை என்பதை அவர் உணர்ந்திருக்கவும் வேண்டும். பின்வரும் கஜல் அப்படி எண்ண இடம் தருகிறது:

      ”வாழ்நாள் கழிந்தது
      இறைவனின் பக்கம் இன்னமும்
முகம் திருப்பவில்லை நான்

அந்தப் பேரின்பப் பொழுதுகளைத்
தேடவில்லை நான்
வாய்ப்புகள் மறைந்துவிட்டன

இதயத்தின் அழுக்கை எப்படிக் கழுவுவேன்?
நான் செய்த அங்க சுத்திகள்
கண்ணீரைப் போல் தாபம் கொண்டிருக்கவில்லை

பாவத்தின் இருளைப்
போக்கவில்லை என் கண்ணீர்

உண்மை மனிதர்களின் வரிசையில்
ஒளிரவில்லை என் முகம்


ஓரிரு இரவுகளேனும்
நாய்களுடன்கூட நான் திரியவில்லை எனும்போது
இரவுகளில் வலம் வரும்
அந்தச் சிங்க இதயம் கொண்டோரின்
பாதையைப் பற்றி நானென்ன அறிவேன்?

காதலின் கோலால்
ஒருபோதும் அடிபடவில்லை
என் இதயத்தின் பந்து

என் பேரரசனின் பிரசன்னத்தால்
பரவசம் கொள்ளவில்லை என் தலை!

படைப்பின் வாசம்கூட எட்டாது
அடைத்திருக்கும் என் நாசி
காதலின் கஸ்தூரியை
எங்கிருந்து நுகரும்?

தீய பழக்கங்களை விட்டுவிடு என்கிறார்கள்
விட்டுவிடுதல் என் பழக்கம் இல்லையே?

என் முழு வாழ்வையும் பொய்களில் போக்கிவிட்டேன்
ஒருபோதும் இறைவனின் முன்
உண்மையாய்ப் பணிந்ததில்லை நான்

கவிதை எனது தொழுநோய் ஆயிற்று
அந்தோ! ஃகுஸ்ரோ ஒருபோதும்
’மௌனம்’ என்று சொன்னதில்லை;
பேச்சை நிறுத்தியதில்லை நான்”

இக்கவிதையின் இறுதிக் கண்ணியில் ஃகுஸ்ரோ பயன்படுத்தியிருக்கும் ‘ஃகாமூஷ்’ (மௌனம்) என்பதுதான் குறிப்புச் சொல். மௌலானா ரூமியின் ‘தீவானே ஷம்ஸி தப்ரேஸ்’ என்னும் காவியத்தில் செம்பாகம் கஜல்கள் இச்சொல் கொண்டு முடிக்கப் பட்டுள்ளன.

      புலனின்பங்களை அள்ளிக் கொட்டும் அரசச் சூழலில் வாழ்ந்தவர் அமீர் ஃகுஸ்ரோ. அரசனின் அவைக்கும் ஆன்மிக குருவின் அவைக்கும் இடையில் அவர் ஆரம்ப காலத்தில் அல்லாடியிருக்க வேண்டும். ”மனமே! நிறைவின் நிலத்தில் உன் கொடியை உயர்த்து” (அய் தில் ‘அலம் ப-முல்க்கெ கனாஅத் புலந்த் குன்) என்று தன் நெஞ்சுக்கு அவர் சொல்லும் அறிவுரை நமக்கும்தான்.

      ’வறுமை எனது பெருமை’ என்பது நபிமொழி. தற்பெருமை அழியும் ஃபனா என்னும் நிலையே வறுமை என்பதன் உட்பொருள். இவ்வறுமை நிலையை எய்தும் வழிமுறைக்கு வெளி வறுமையும் ஓர் உபாயம் ஆகலாம். தேவைகளை நிறைவேற்றும் பொருட்களை மட்டும் தேடிக்கொள்வதும், அதற்கு மேல் குன்றிமணி அளவும் தேடாதிருப்பதும் ஆசைகளை அறுக்கும் வழி ஆகும். அந்நிலையில் தம்மைப் புடம் போட்டுக் கொண்ட சூஃபிகளுக்கு ’ஃபக்கீர்’ என்னும் பெயரும் குறிக்கப் பெறும். இந்நிலையை அடைய அமீர் ஃகுஸ்ரோ முயன்று தன் குருவின் வழிகாட்டலால் வெற்றியும் அடைந்தார் என்றே சொல்ல வேண்டும். அவரே சொல்வதைக் கேட்போம்:

“உலகப் பண்டங்களின் குவியலை விட்டும்
எமது ஆடைகளை இழுத்துக் கொண்டோம்
எமது அங்கிகளைச் சுருட்டிக் கொண்டு
இரவலர்களின் வீதிக்குச் சென்று விட்டோம்

சகியே! பேரின்ப மது வார்ப்பாயாக!
வானின் நீலக் குடுவையிலிருந்து
நிறையவே அருந்திவிட்டோம்
கண்ணீரை

பூமியின் பச்சை விரிப்பில்
உருண்டு கொண்டிருக்கும்
இந்தக் கறுப்பு வெள்ளை தாயக்கட்டை
மிகவும் சூதானது என்பதறிந்து
எம் ரத்தமே எமது பானமாயிற்று!

வறுமையின் நுட்பங்களே இழைகளாக
நாம் பின்னியிருக்கும் இந்தப் போர்வயால்
தலையை மூடிக்கொள்கிறோம் இன்று

உலக அறுவடை ஒருபோதும்
பேராசைக்காரரின் பையை நிரப்பாது
என்பதறிந்து
எமது லட்சியங்கள் எல்லாம்
நிறம் மாறி விட்டன

கருமானின் கட்டளைக்கல்லை
உடைத்தெறிந்து விடுக;
ஞானத்தில் உரசிப் பார்க்கும்போது
தங்கம் வெறும் மஞ்சள் நிறக் களிமண்தான்!

ஃகுஸ்ரோ! நாம் சிறு பிள்ளைகள் அல்ல
மினுமினுக்கும் மஞ்சள்களையும் சிகப்புகளையும்
தேடித்திரிந்து கொண்டிருக்க;
வளர்ந்துவிட்டவர்களைப் போல் நாமும்
தங்கம் மற்றும் முத்துக்களை விட்டும்
இதயத்தை உயர்த்திவிட்டோம்!"

      இந்த நிலையை ஃகுஸ்ரோ தனது குருநாதரான நிஜாமுத்தீன் அவ்லியா அவர்களின் சகவாசத்தால் அடைந்தார்கள். குரு, நபியை அடைவதற்கான வாசலாக இருக்கிறார்; நபி(ஸல்), இறைவனை அடைவதற்கான வாசலாக இருக்கிறார்கள். குருவின் மீது கொள்ளும் காதல் நபிக்காதலுக்கு இட்டுச் செல்கிறது; நபியின் மீது வைக்கும் காதல் இறைக்காதலுக்கு இட்டுச் செல்கிறது. அமீர் ஃகுஸ்ரோவின் பாடல்களில் இம்மூன்று நிலைகளும் விரவியுள்ளன, சில இடங்களில் வெளிப்படையாகவும், சில இடங்களில் குறியீடுகளால் மறைக்கப்பட்டும்.

      நிஜாமுத்தீன் அவ்லியாவின் மீது அமீர் ஃகுஸ்ரோ பாடியுள்ள பல பாடல்கள் கவ்வாலிக் கலைஞர்களால் மிகப் பரவசமுடன் பாடப்பட்டு உலகப் புகழ் அடைந்துள்ளன. அவற்றில் சில பாடல்களைப் பார்ப்போம்.

      அமீர் ஃகுஸ்ரோ பாடிய ஓர் இலக்கிய வகை ’ரங்’ எனப்படுகிறது. ரங் என்றால் வண்ணம் / நிறம் என்று பொருள். இஸ்லாமிய மெய்ஞ்ஞான சூஃபி உலகிலும், இந்து ஞான மரபிலும் நிறம் என்னும் குறியீடு இறைப்பண்புகளைக் குறிப்பதற்குக் கையாளப்பட்டு வந்ததை அமீர் ஃகுஸ்ரோ அவதானித்திருக்கிறார். எனவே, பாரசீக மொழியையும் இந்தி மொழியையும் இணைக்கும் பணியையும், பாரசீக இசை மரபினையும் இந்திய இசை மரபினையும் இணைக்கும் பணியையும் செய்த அவர் இலக்கிய உலகில் இந்தக் குறியீட்டையும் பயன்படுத்திப் பாடி இந்திய இலக்கிய மரபில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியத்திற்கான ஓர் இணக்கமான இடத்தை நிறுவித் தந்திருக்கிறார் எனலாம்.

      ’ரங்’ (நிறம்/வண்ணம்) என்பது சூஃபிகளின் மெய்ஞ்ஞானத்தில் குறியீடாக அமைவது பற்றி முதலின் தெரிந்து கொள்வோம்.

      ”அல்லாஹ்வின் வண்ணம். வண்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வை விடவும் அழகன் யார்? அவனுக்கே யாம் அடியவர்கள்” (சிப்கதல்லாஹி; வ மன் அஹ்சனு மினல்லாஹி சிப்கா; வ நஹ்னு லஹூ ஆபிதூன் -2:138)

என்று சொல்கிறது குர்ஆன். இவ்வசனத்தில் வரும் ’சிப்கதல்லாஹ்’ (அல்லாஹ்வின் வண்ணம்) என்பதில் சிப்கா (வண்ணம்) என்பது சமயத்தைக் குறிக்கும் என்று அறிஞர் பலரும் பொருள் கொள்கின்றனர். எனினும், அச்சொல் இறைவனின் திருப்பண்புகளைக் குறிப்பதாக சூஃபிகள் பார்க்கின்றனர்.

      குருவும் நபியும் தூரிகைகளே. அவர்கள் நம் மீது தீட்டும் வண்ணங்கள் இறைவனின் திருப்பண்புகளே ஆகும். எனவே, குருவின் மீதான காதலிலும், நபியின் மீதான காதலிலும் சீடன் இறைப் பண்புகளில் தோய்கிறான். குருவின் பண்புகள் சீடனில் வந்துவிடுகின்ற நிலை ஃபனாஃபிஷ் ஷைஃக் (குருவில் அழிதல்) என்றும், நபியின் பண்புகள் சீடனில் வந்து விடுகின்ற நிலை ஃபனாஃபிர் ரசூல் (இறைத் தூதரில் அழிதல்) என்றும், இறைப் பண்புகள் சீடனில் வந்துவிடுகின்ற நிலை ஃபனாஃபில்லாஹ் (இறைவனில் அழிதல்) என்றும் சொல்லப்படும். எதார்த்தத்தில் மூன்று நிலைகளிலும் சீடன் தோய்வது இறைவனின் திருப்பண்புகளில்தான். ஏனெனில், குருவிலும் நபியிலும் பிரதிபலித்துச் சீடனைக் காதலில் மூழ்கடிப்பவை இறைப் பண்புகளே.

      ”மோஹே அப்னே ஹி ரங் மேன் ரங் தே” என்று அமீர் ஃகுஸ்ரோ தனது குருநாதர் நிஜாமுத்தீன் அவ்லியா (ரஹ்) அவர்களை நோக்கிப் பாடிய பாடலைக் காண்போம்:

“உங்கள் வண்ணத்தில் என்னை வண்ணமயமாக்குங்கள்
நிஜாம்! நீங்களே எனது தோழர்!
(மெஹபூபே இலாஹி) இறைவனின் காதலரே!

எனது முகத்திரை
உங்களின் தலைப்பாகை
இரண்டிலும் வசந்தத்தின் ஒரே வண்ணம் ஆக்குக!

வண்ணத்தின் விலையாக என்னதான் வேண்டும்?
இதோ, எனது வாலிபம் உங்களுக்கே அர்ப்பணம்!

உங்கள் சபையின் வாசலில் வந்து நின்றுவிட்டேன்
என் மானம் காப்பீர், எனது குருவே! நிஜாமுத்தீன்!”


(to be continued)

Sunday, February 9, 2014

இந்தியாவின் கிளி


      சூஃபி உலகில், கி.பி.13-ஆம் நூற்றாண்டு என்றால் நினைவுக்கு வரும் பெயர் ’ரூமி’ என்பதாகத்தான் இருக்கும். இறைக்காதலின் நாவாக இருந்து அவர் தந்திருக்கும் மஸ்னவி என்னும் காவியம் ‘பாரசீக மொழியின் குர்ஆன்’ என்று போற்றப் படுகிறது. குர்ஆன் என்றால் ஓதப்படுவது என்று பொருள். அரபி மொழியில் உள்ள நூற்கள் அனைத்திலும் அதிகமாக ஓதப்படும் நூல் குர்ஆன் என்பது போல் பாரசீக மொழியில் உள்ள அனைத்து நூற்களிலும் அதிகமாக ஓதப்படும் நூல் மௌலானா ரூமியின் மஸ்னவி காவியம்தான்.

      ரூமியின் பூர்வீகம் ஆஃப்கானிஸ்தானில் உள்ள பல்ஃக் என்னும் பகுதி. செங்கிஸ் கானின் படையெடுப்பு நிகழ்ந்த அக்காலத்தில் ரூமியின் தந்தையான பஹாவுத்தீன் வலத் தனது பரிவாரங்களுடன் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேறி இரான் இராக் அரேபியா ஆகிய நாடுகளுக்குச் சென்று பின் துருக்கியில் உள்ள கோன்யா என்னும் ஊரில் குடியமர்ந்தார். ரூமியின் பரம்பரை இன்னமும் அங்கே இருக்கிறது.

      அதே காலகட்டத்தில் ஆஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இன்னொரு குடும்பம் கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தியாவில் குடியமர்ந்தது. சைஃபுத்தீன் ஷம்ஸி என்பவர் அன்றைய நாளில் தில்லியில் ஆட்சி செய்திருந்த சுல்தான் இல்துமிஷ்-இன் காவல் துறையில் பணி பெற்றார். அரசனின் ராஜாளி, குதிரை ஆகியவற்றைப் பராமரிக்கும் பணியில் இருந்த இமாதுல் முல்க் என்பவரின் மகளை அவர் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு கி.பி.1253-ல் பிறந்தார் அபுல் ஹசன்.

      தில்லியை ஆட்சி புரிந்த ஐந்து அரசர்களின் அவையை அலங்கரித்த அவரின் புனைபெயர் இன்றும் ஈரமும் வாசமும் உலராமல் உச்சரிக்கப் படுகிறது: அமீர் ஃகுஸ்ரோ.

      அண்மையில் அடியேன் வாங்கிப் படித்த அழகான நூல் “IN THE BAZAAR OF LOVE The Selected Poetry of Amir Khusrau”. ப்ளூமிங்க்டன்னில் உள்ள இந்தியானா பல்கலைக் கழகத்தில் ஃபார்ஸி பேராசிரியராகப் பணியாற்றும் பால் லோசன்ஸ்கி மற்றும் போஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஃபார்ஸி பேராசிரியராகப் பணியாற்றும் சுனில் ஷர்மா ஆகியோர் இணைந்து அமீர் ஃகுஸ்ரோவின் கவிதைகளை ஆங்கிலம் ஆக்கியுள்ளனர்.

      மௌலானா ரூமியுடன் அமீர் ஃகுஸ்ரோவை ஒப்பிட்டு அவர்கள் தரும் அவதானிப்புக்கள் சுவையானவை. ரூமி முழுமையாக ஆன்மிகத்தில் திளைத்த ஞானக் கவிஞர். ஃகுஸ்ரோ, அரசர்களின் அவைக் கவிஞராக இருந்து பெரிதும் அரச பாடல்களைப் பாடியவர். எனவே ரூமிக்கு ‘மௌலானா’ (எமது ஆசான்) என்னும் பட்டமும் ஃகுஸ்ரோவுக்கு ‘அமீர்’ (அதிகாரி/ இளவரசன்) என்னும் பட்டமும் சொல்லப் படுவது பொருத்தமானதே.

      ரூமியும் ஃகுஸ்ரோவும் தத்தமது ஆன்மிக குருநாதர்களின் மீது கொண்டிருந்த காதல் சூஃபித்துவத்தில் உதாரணங்களாகத் திகழ்கின்றன. குருவை எந்த அளவு நேசிக்க வேண்டும் என்பதற்குச் சீடர்கள் கற்க வேண்டிய பாடங்களாக இவர்கள் இருவரும் இருக்கிறார்கள். ரூமியின் குருநாதர் ஷம்ஸுத்தீன் தப்ரேஸி (ரஹ்); அமீர் ஃகுஸ்ரோவின் குருநாதர் நிஜாமுத்தீன் அவ்லியா (ரஹ்).

      அமீர் ஃகுஸ்ரோ வாழ்ந்த காலத்தில் உருது மொழி உருவாகவில்லை. அவரின் கவிதைகள் பெரும்பான்மையும் ஃபார்ஸி மொழியில் அமைந்திருக்கின்றன. எனினும் தில்லியின் வட்டார மொழியாக இருந்த ஹிந்த்வி மொழியில் நாட்டுப்புற பாணியில் அவர் பல பாடல்கள் எழுதியிருக்கிறார். வசந்த விழா, ஹோலி பண்டிகை ஆகியவற்றில் பெண்கள் பாடுவது போல் அவை அமைந்திருக்கின்றன. மேலும், அவர் இயற்றிய விடுகதைகளும் சிலேடைக் கவிதைகளும் மக்களிடம் பெரிதும் பரவி வழங்கின. ’தோத்தாயெ ஹிந்த்’ (இந்தியாவின் கிளி) என்று அவர் செல்லமாக அழைக்கப் பட்டார்.

      பாரசீகமும் ஹிந்த்வியும் கலந்து உருது மொழி உருவாகிட முன்னோடியாக அமீர் ஃகுஸ்ரோ இருந்தார் என்பது மட்டுமல்ல அவரின் பணி. இவ்விரு மொழிகளின் பின்னணியாக இருந்த பண்பாடுகளின் இணைவிற்கும் அவர் முன்னோடியாக இருந்தார். அவரின் தந்தை ஆஃப்கானியராகவும் தாய் இந்தியராகவும் இருந்ததால் அவரின் ரத்தத்திலேயே இந்த உணர்வு இருந்ததில் வியப்பில்லை.

      சூஃபிகளின் ஆன்மிக இசை வடிவமாக இன்று உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் கவ்வாலி என்னும் வகையை உருவாக்கியவர் அமீர் ஃகுஸ்ரோதான். ஃபாரசீக கஜல் மரபு மற்றும் இந்திய பஜன் மரபு ஆகியவற்றின் கலவைதான் கவ்வாலி. மேலும், சிதார் மற்றும் தப்லா ஆகிய இசைக் கருவிகளை உருவாக்கியவர் என்றும் அவர் சுட்டப்படுகிறார்.

      இந்தியச் சூழலில் சூஃபிகளுக்கான கவிதை மற்றும் இசையை வடிவமைத்ததில் அவர் உருவாக்கிய பண்பாட்டுத் தாக்கம் இன்றளவும் கஷ்மீர் முதல் ஹைதராபாத் வரை வாழும் முஸ்லிம் சமூகத்தில் உயிரோட்டமாக உள்ளது. (கேரளம் மற்றும் தமிழகத்தில் இப்பண்பாட்டுத் தாக்கம் அழுத்தமாக இல்லை.)

      உலகெங்கிலும் பரவியிருக்கின்ற பல்வேறு சூஃபிப் பள்ளிகளில் (தரீக்கா) இசையைத் தங்களின் தியான முறைக்குள் வரித்துக் கொண்டிருக்கும் முதன்மையான சூஃபிப்ப் பள்ளிகள் இரண்டுதான்: மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் அமைத்த மௌலவிய்யா தரீக்கா மற்றும் ஃக்வாஜா மொய்னுத்தீன் ச்சிஷ்தி (ரஹ்) அவர்களிலிருந்து தொடரும் ச்சிஷ்திய்யா தரீக்கா.

      ஃக்வாஜா மொய்னுத்தீன் ச்சிஷ்தி (ரஹ்) à குத்புத்தீன் பஃக்தியார் ஃகாக்கீ (ரஹ்) à பாபா ஃபரீதுத்தீன் கன்ஜெ ஷக்கர் (ரஹ்) à நிஜாமுத்தீன் அவ்லியா (ரஹ்) என்று தொடர்ந்த சூஃபி குருவழியில் நிஜாமுத்தீன் அவ்லியாவின் சீடராக விளங்கியவர் அமீர் ஃகுஸ்ரோ. (பாபா ஃபரீதுத்தீன் (ரஹ்) அவர்களின் தாய்மொழி பஞ்சாபி ஆகும். அன்னார் இயற்றிய ஆன்மிகப் பாடல்கள் சீக்கியர்களின் புனித நூலான ’குரு கிரந்த் சாஹிப்’-ல் சேர்க்கப்பட்டுள்ளன. மட்டுமன்று, ஃக்வாஜா மொய்னுத்தீன் ச்சிஷ்தி (ரஹ்) அவர்களின் ஆன்மிகப் பிரதிநிதிகளில் ஒருவரான அப்துல்லாஹ் பியாபானி பூர்வீகத்தில் அஜைபால் என்னும் பெயரில் மாந்திரீகவாதியாக இருந்தவர். எனவே இன்றளவும் அஜ்மீர் தர்காவிற்கு சீக்கியர்களும் இந்து சாதுக்களும் அருள் நாடி வந்து செல்வதைக் காண்கிறோம்.) 

Hazrath Syed Noori Shah (rah) at Ajmer Sharif

      மௌலானா ரூமி அமைத்த மவ்லவிய்யா தரீக்கா கிளைகள் இன்றி அப்படியே தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் பரவிய சிஷ்திய்யா தரீக்கா அதன் கொடிவழியில் பல்வேறு மகான்களின் பெயர்களால் கிளைகளுடன் பரவியிருக்கிறது. அக்கிளைகள் நிஜாமுத்தீன் அவ்லியாவிலிருந்து கிளைத்துள்ளன. அன்னாரின் ஆன்மிகப் பிரதிநிதிகளில் ஃக்வாஜா சாபிர் கில்யாரீ (ரஹ்) அவர்களின் வழி வடமேற்கு நோக்கியும், ஃக்வாஜா கேஸு தராஸ் (ரஹ்) அவர்களின் வழி தெற்கு நோக்கியும் பரவிற்று. அவ்வழியில் ஹைதராபாதில் வாழ்ந்த சூஃபி மகான் நூரீ ஷாஹ் (ரஹ்) அவர்களிலிருந்து வரும் கிளைகள் தமிழகத்திலும் கேரளத்திலும் பரவியுள்ளன. என் குருநாதரை இவ்வழியில் அடியேன் அடைந்து கொண்டேன்.

      அமீர் ஃகுஸ்ரோவின் குருநாதரான நிஜாமுத்தீன் அவ்லியா (ரஹ்) வரையிலான நான்கு குருமகான்கள் பற்றிய பாடல் வரிகள், உத்தமப்பாளையம் அன்வாருல்லாஹ் ஷாஹ் நூரீ (ரஹ்) அவர்கள் இயற்றிய ’கொடிவழிக் கும்மி’ என்னும் நூலிலிருந்து:

      ”தீனுக் குறுதுணை ஆனவராம் – அருட்
            செம்மலாம் காஜா முயினுத்தீனாம்
      ஞானக் குருபரன் தம்பொருட்டால் எங்கள்
            நாடு செழிக்கச் செய் நாயகனே!

      காஜாவாம் குத்புத்தீன் காக்கிவலீ – மிகக்
            கண்ணியம் வாய்ந்த பரீதுவலீ
      தேசுறு நாதாக்கள் தம்பொருட்டால் – நாங்கள்
            தீனை வளர்க்கத் திறனருளாய்!

      நானிலம் போற்றிடும் நிஜாமுத்தீன் அவ்லியா
            நல்லடி யாரவர் தம்பொருட்டால்
      மானில வாழ்க்கையும் மறுவுலகப் பேறும்
            மகிழ்ந்தளித் தாட்கொள்வா யெங்களையே!”


     நிஜாமுத்தீன் அவ்லியா அவர்கள் அடங்கியிருக்கும் தர்கா தில்லியில் இருக்கிறது. அதன் வளாகத்திலேயே அமீர் ஃகுஸ்ரோவின் தர்காவும் இருக்கிறது. அமீர் ஃகுஸ்ரோ தன் குருநாதர் மீது பாடிய பாடல்கள் அங்கே இன்றளவும் கவ்வாலி இசையுருவில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கவ்வாலி இசைக் கலைஞர்களில் அன்னாரின் பாடல்களைப் பாடாத ஒருவரையும் காட்ட இயலாது. அல்லாஹ் பக்‌ஷ், முபாரக் அலீ கான், நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான், முன்ஷி ரஜியுத்தீன், ஃபரீத் அயாஜ், சாப்ரி பிரதர்ஸ், வார்ஸி பிரதர்ஸ், ஆபிதா பர்வீன், ஜாஃபர் பதாயூனி என்று தொடரும் கவ்வாலிப் பாடகர்கள் அனைவருமே அமீர் ஃகுஸ்ரோவின் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடியிருக்கிறார்கள். (நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான் அவர்கள் முந்நூறு வருடங்களாகக் கவ்வாலி பாடி வரும் பரம்பரையில் பிறந்தவர். சூஃபி இசையின் சிகரம் என்று உலகம் போற்றும் அத்தகைய ஆளுமை பரிணமித்து வர அத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன!)

      தன் குருநாதரான நிஜாமுத்தீன் அவ்லியாவின் மீது அமீர் ஃகுஸ்ரோ கொண்டிருந்த ஆழிய அன்பை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சிகள் பல உண்டு. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

      குருவின் மீது சீடன் எத்தகைய நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பது அவ்வப்போது சோதிக்கப் படலாம். அமீர் ஃகுஸ்ரோவும் அப்படிச் சோதிக்கப் பட்டிருக்கிறார்.

      ஒரு நாள், தன் சீடர்களுடன் தில்லியின் கடைவீதிகளில் பகலெல்லாம் நடந்திருந்த நிஜாமுத்தீன் அவ்லியா அவர்கள், பொழுது சாய்ந்து இருள் கவிந்த பின், விலைமகள் ஒருத்தியின் வீட்டின் முன் சென்று நின்றார்கள். அந்த விலைமகள் மிகுந்த கண்ணியத்துடன் மகான் அவர்களைத் தன் வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். சீடர்கள் அனைவரும் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்கள். குரு தாமதிக்காமல் உடனே வெளியே வந்துவிடுவார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. மகான் இன்னும் வரவில்லை.

      அந்த விலைமாது மிகவும் வியந்து போயிருந்தாள். தன் விதியில் இப்படி ஒரு நல்லருள் எழுதப்பட்டுள்ளதா? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். இத்தகைய புனிதமான மகான் பெரும்பாவியான தன் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்பதை அவளால் எப்படி நம்ப இயலும்? ”தங்களின் வருகையால் நான் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறேன். உங்களுக்கு நான் என்ன சேவை செய்ய முடியும்?” என்று அவள் கேட்டாள். “ஒரு தட்டில் உணவும், மதுக்குப்பியில் தண்ணீரும் கொண்டு வரும்படி உன் பணிப்பெண்ணிடம் கூறு. என் சீடர்கள் அதைக் கண்டு நான் உணவும் மதுவும் கொண்டுவரச் சொன்னதாக நினைத்துக் கொள்ளும்படி அவள் கொண்டுவர வேண்டும்” என்று மகான் சொன்னார்கள். அப்படியே நடந்தது.

      சீடர்களில் சிலரின் சிந்தனையில் ஊசாட்டம் வந்துவிட்டது. ”நாம் வசியத்தில் மாட்டிக் கொண்டிருந்தோம். குரு நாம் நினைத்தது போல் புனிதமானவர் அல்ல. இதோ அவர் மது அருந்துகிறார். விலைமாதுடன் இருக்கிறார்! எத்தனை மோசமான பேர்வழி!” என்று பலவாறு எண்ணியபடி அவ்விடத்தை விட்டு அகன்று போய்விட்டார்கள்.

இரவு செல்லச் செல்ல, மேலும் பல சீடர்கள் விலகிச் சென்று கொண்டே இருந்தனர். இறுதியில் அங்கே அமீர் ஃகுஸ்ரோ மட்டும் நின்றார். விடிந்தது. மகான் அவ்வீட்டில் இருந்து வெளியே வந்தார்கள். ”எல்லோரும் எங்கே?” என்று கேட்டார்கள். “அவர்கள் போய்விட்டார்கள் குருவே” என்றார் அமீர்.

      ”நான் மது வரவழைத்ததையும் தாசியுடன் இரவைக் கழித்ததையும் நீ பார்க்கவில்லையா? நீ மட்டும் ஏன் நிற்கிறாய்? நீயும் போக வேண்டியதுதானே?” என்று மகான் கேட்டார்கள்.

      ”குருவே! நானும் போகலாம்தான். ஆனால் தங்களின் திருவடிகள் அன்றி எனக்குப் போக்கிடம் வேறு எங்கே இருக்கிறது?” என்றார் அமீர் ஃகுஸ்ரோ.

      நிஜாமுத்தீன் அவ்லியாவின் இதயத்தில் அருள் சுரந்து அவர்களின் கனிவான முகத்தில் பேரொளி பொங்கி இலங்கியது. ”உன் காத்திருப்பு முடிந்தது. நீ முழுமை அடைந்துவிட்டாய்” என்று அமீர் ஃகுஸ்ரோவை அவர்கள் திருவாய் மலர்ந்து ஆசீர்வதித்தார்கள்.

      இன்னொரு நிகழ்ச்சி.
      அமீர் ஃகுஸ்ரோ அரசனுடன் வெளியூருக்குச் சென்றிருந்த சமயம். ஏழ்மையால் மிகவும் அவதிப்பட்ட ஒருவர் நிஜாமுத்தீன் அவ்லியாவிடம் பொருளுதவி கேட்க வந்தார். மகான் மஸ்ஜிதில் தியானத்தில் அமர்ந்திருந்தார்கள். அந்த நபர் மெல்ல அவர்களை அணுகித் தனது தேவையைச் சொன்னார். “வெளியே என் செருப்புகள் கிடக்கின்றன. அதை எடுத்துச் செல்” என்னும் உத்தரவு மகானின் உதடுகளில் பிறந்தது. அந்த நபர் செய்வதறியாது விழித்தார். செருப்புக்களை எடுத்துச் சென்று என்ன செய்வது? அவருக்குத் தேவைப்பட்டது நாற்பதாயிரம் பொற்காசுகள்! செருப்பு நாலு காசுகளுக்கு மேல் வராதே? எனினும், மகானின் உத்தரவைத் தட்டவும் அவருக்குப் பயமாக இருந்தது. தேய்ந்து போன செருப்புக்களைக் கையில் சுமந்து செல்லவும் வெட்கப்பட்டார். எனவே, மகானின் காலணிகளை ஒரு துணியால் சுற்றித் தன் கைகளில் எடுத்துச் சென்றார்.

தில்லிக்கு வெளியே அவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். எதிர் திசையிலிருந்து அமீர் ஃகுஸ்ரோ ஒரு குதிரையின் மீது இவர்ந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அந்த நபரின் அருகில் வந்ததும் குதிரையிலிருந்து சட்டென்று குதித்து இறங்கினார் அமீர். “உங்களிடம் ஏதோவொரு பொக்கிஷம் இருக்கிறது. அதை உடனே எனக்கு விற்றுவிடுங்கள்” என்று அந்த நபரிடம் சொன்னார். “என்னிடம் எந்தப் பொக்கிஷமும் இல்லையே. நான் பரம ஏழை ஐயா” என்று அவர் சொன்னார். “இல்லை, உம்மிடம் என் குருநாதரின் நறுமணம் வருகிறது! ஏதோ ஒரு பொருள் உங்களிடம் இருக்கிறது. மறைக்காமல் சொல்லுங்கள்” என்று அவரிடம் அதட்டலாகச் சொன்னார் அமீர். அந்த நபர் தன் கையிலிருந்த துணிப்பொட்டலத்தைப் பிரித்துக் காட்டினார். தன் குருநாதரின் காலணிகளைக் கண்களில் ஒற்றியபடி எடுத்துக் கொண்டார்கள் அமீர் ஃகுஸ்ரோ. அதற்கு விலையாக அந்த நபரின் கையில் ஒரு பணமுடிப்பை வைத்தார்கள். நாற்பதாயிரம் பொற்காசுகள்!

தில்லி திரும்பிய அமீர் ஃகுஸ்ரோ தன் குருநாதரை எதிர்பார்த்து மஸ்ஜிதின் வாசலில் நின்றார்கள். நிஜாமுத்தீன் அவ்லியா வெளியே வந்தபோது அவர்களின் காலணியைப் பணிவுடன் முன் வைத்தார்கள். “இதை எவ்வளவு கொடுத்து வாங்கினாய்?” என்றார்கள் மகான். “நாற்பதாயிரம் பொற்காசுகள்” என்றார் அமீர். புன்முறுவல் பூத்தபடி மகான் சொன்னார்கள், “மிகவும் மலிவாக வாங்கிவிட்டாய், அமீர்!”

இன்னொரு நிகழ்ச்சி.
ஒருமுறை நிஜாமுத்தீன் அவ்லியா அவர்கள் குதிரை மீது இவர்ந்து தில்லியின் கடைவீதியில் வந்து கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சி அங்கே வந்த அமீர் ஃகுஸ்ரோவின் உள்ளத்தில் பரசவத்தை மூட்டியது. ஓடோடிச் சென்று தன் குருநாதரின் கையில் முத்தமிட்டார். ”இன்னும் கீழே” (அவ்ர் நீச்சே ரே) என்றார்கள் மகான். உடனே மகானின் பாதத்தில் முத்தமிட்டார். “இன்னும் கீழே” (அவ்ர் நீச்சே ரே) என்று மீண்டும் மகான் சொனார்கள். சட்டென்று கீழே விழுந்த அமீர் ஃகுஸ்ரோ குதிரையின் குளம்பில் முத்தமிட்டார். “உன் காதல் ஏற்கப்பட்டது” என்று மகான் அருளினார்கள்.

புறத்திலிருந்து பார்ப்போருக்கு இந்நிகழ்ச்சிகள் எல்லாம் கடைவீதியில் நடந்தவை. அகத்தில் இருந்து காண்போருக்குத் தெரியும், இவை எல்லாம் காதலின் வீதியில் நடந்தவை. இனி, அமீர் ஃகுஸ்ரோவின் கவிதை வீதியில் உலா வருவோம்.


(to be continued)