Sunday, July 31, 2011

3 poems


முகவரி



‘முகம் பார்க்க வேண்டும்
கண்ணாடி தா’
என்றேன் இறைவனிடம்

‘முகமூடியைக் கழற்று’
என்றான்

‘முகமூடியைக் கழற்றினால்
என் முகம் தெரியுமா?’
என்றேன்

’நீ கண்ணாடி ஆவாய்
என் முகம் தெரியும்’
என்றான்

‘முகமூடி எது?’
என்று கேட்டேன்

‘கண்ணாடியின் மீது
படியும் தூசினை
உன் முகம் என்று நினைக்கிறாய்’
என்றான்

‘தூசை எப்படித்
துடைப்பது?’
என்றேன்

இறைவன் சொன்னான்:
‘கண்ணீரால் கழுவு’

~~~~~~~~~~~~

காதல் ரோஜா



விண்ணைக் காதலிக்கும்
நிர்வாண நிலத்தின் மீது
நடந்து சென்றேன்

‘என் நெஞ்சில்
உறுத்துகிறது ஒரு முள்’
என்று
விண்ணிடம் சொன்னது மண்.

மண்டியிட்டுத் தலைசாய்த்து
கண்ணீரால் நிலம் நனைத்தேன்

‘அன்பே!
உன் மார்பில்
என் காதல் ரோஜா’
என்று
நிலத்திடம் சொன்னது வான்

~~~~~~~~~~~~~~~~~~


பேச்சுக் கலை



‘பேசாதிருப்பது எப்படி?’
இறைவனிடம் கேட்டேன்

இறைவன் சொன்னான்:
‘பேசுவது எப்படி என்று கேள்
பேசத்தெரியுமா உனக்கு?

மொழிகளை நான் படைத்தேன்
அந்த மொழிகளில்
நீங்கள் உளறுகிறீர்கள்.

உங்கள் பேச்சு
விடலைப் பையனின்
கனவு ஸ்கலிதம் போல்
உள்ளது.

நீங்கள்
செறிக்காமல் பேசுவது
வாந்தியாகவும்
செறித்துப் பேசுவது
மலமாகவும்
உள்ளன.

வேதச் சுடரையே
ஏற்றி வைத்தாலும்
புகை மட்டுமே கக்கும்
திரிகளாக இருக்கிறீர்கள்.

உங்கள் உள்ளத்தின் விதைகளே
அபூர்வமாகப்
பாறை பிளந்து முளைக்கின்றன.

தலை காட்டும் வார்த்தைகளே
தலை கட்டும் வார்த்தைகள்
ஆகட்டும்.

நான் பேசினால் வேதம்
நீ பேசினால் சேதம்.
அதனால்
பேணுக போதம்’

இவ்வாறு
இறைவன் பேசி என்
செவ்வாய் மூடினான்.

‘உலைமூடி போல் திறக்கட்டும்
உன் உள்ளத்தின் வாய்’



Friday, July 29, 2011

அன்ன தியானம்




”நாவு ருசி தேடுதற்கு ஆவி கெட்டு அலையாமல்….” என்று குணங்குடி மஸ்தான் சாகிபு ஒரு காப்பு வேண்டுவார். நாலைந்து நாட்களாக அது அவ்வப்போது நினைவில் ஓடிக்கொண்டிருக்கிறது. சாப்பாட்டு ருசியைத் தேடி அனுபவிப்பது பெரும்பாவமா என்ன? ஆனால் அதிலும் ’அடிக்ட்’ ஆகி மனம் பேதலித்து வாழ்வின் லட்சியத்தைத் தொலைத்துவிடக் கூடிய அபாயம் இருக்கத்தானே செய்கிறது, என்ன சொல்கிறீர்கள்?
இத்தனைக்கும் நான் நன்றாகச் சாப்பிடக்கூடிய பேர்வழி அல்ல. ஒரு ரமலான் மாதத்தில் என்னைச் சந்தித்த சுப்பிரமணி நான் நோன்பு வைத்திருப்பதை அறிந்து, அதுவும் முப்பது நாட்கள் ‘ரோஸா’ வைப்பேன் என்பதை அறிந்து கலவரமாகி, “அதெல்லாம் மூக்குப் புடிக்க வெட்றவாளுக்குச் சொல்லீருப்பாங்க. நீ சும்மாவே அரை வயிறு கால் வயிறுன்னு சாப்பிடற ஆளு. உனக்கெல்லாம் விரதம் கெடயாதுப்பா, நீ இருக்கிற ஸ்திதியப் பாரு” என்று ஒரு ’ஃபத்வா’ கொடுத்தான்!


 
ரமலான் மாத முப்பது நாள் நோன்பில் ஒரு சுற்று பெருத்துவிடுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்கானால் மூஞ்சியெல்லாம் வத்திப்போய் எலும்பு துருத்திக் காட்டும். நோன்பு வைக்க வேண்டுமே என்று அரக்கப் பரக்க அள்ளிப் போட்டு வண்ணாந்தாழி போல் வயிறு வீங்க ரெண்டு நாள் சாப்பாடு சாப்பிடுபவர்களை என்னால் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடியும். ரெண்டு சப்பாத்தி அல்லது கொஞ்சம் சோறு, ஒரு பூவன் அல்லது ரஸ்தாளிப் பழம் மற்றும் ஒரு க்ளாஸ் பால். இதுவே எனக்கு ரொம்ப அதிகம் என்ற கணக்கில்தான் நோன்பு பிடிப்பேன்.

வெள்ளைச் சோறும் கொழுப்பு மிதக்கும் தாழியாணமுமாகக் களை கட்டும் கந்தூரி விழாவில் இரவு இரண்டு மணி வாக்கில் வரிந்து கட்டிக்கொண்டு சாப்பிடுபவர்களைப் பார்த்தாலும் வியப்புத்தான் வருகிறது. அரைத் தூக்கத்தில் மல்லாந்தும் ஒருக்களித்தும் கிடக்கும் துப்பட்டிகள் நடுசாமத்தில் விருந்துப் பந்தி ஆரம்பமானதும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து அமர்வதும், காயசண்டிகை போல் வெளுத்து வாங்குவதும் பெரியம்மாவின் வருணனையுடன் என் நினைவுப் பரப்பில் பதிந்துபோன அதிசயக் காட்சிகள். “மூட்டுவலி, பெரடிவலின்னு புலம்பிக்கிட்டுக் கிடக்குறாங்க. சாப்பாடு போட்டதும் ஒவ்வொருத்தரு எலயிலயும் சோத்தப் பாக்கணுமே, சின்னப் புள்ள கபுறு மாதிரி!”

படிக்கும் காலம் வரை சாப்பாட்டு ருசியில் ஈடுபாடு இல்லாமல் இருந்தநிலை (ஒருவேளை நான் இப்படி நினைப்பது தவறாகவும் இருக்கக் கூடும்) பிற்பாடு மெல்ல மெல்ல மாறிவிட்டது. அறுசுவைகளின் மேலோட்டமான ருசியைத் தாண்டி அவற்றின் நுட்பங்களை (NUANCES) அவதானிக்கும் ரசனை சித்தித்தது. (சரியாகச் சொல்வதென்றால் ஐஞ்சுவை. கசப்பையும் அதீதமாய் நேசித்து ருசிக்கிறோமா என்ன? என் தங்கை ஒருத்தி குழந்தைப் பருவத்தில் கொத்துக் கொத்தாக மாத்திரைகளை வாயில் அள்ளிப் போட்டுக்கொண்டு கடக் முடக் என்று நிதானமாகக் கடித்துச் சுவைப்பாள்!) 

உணவின் சுவையில் நுட்பங்கள் தேடும் ரசனை சித்தித்தது என்றுதான் சொன்னேன். மற்றபடி சாப்பிடும் அளவு என்னவோ மாறவேயில்லை. உணவு ரசனை சித்தித்தது எப்படி? எப்போது? என்னும் கேள்விகள் எழத்தான் செய்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் திட்டவட்டமான விடை கூற என்னால் இயலவில்லை. ஞாபக அடுக்குகளுக்குள் துழாவிப் பார்த்தால் விடை என்று குறிக்கத்தக்க நாலைந்து சம்பவங்கள் தேறக் கூடும். அவற்றை உங்களுக்குச் சொல்வதில் தடை என்ன இருக்கிறது?

1
பள்ளிச் சிறுவனாக நான் இருந்த காலங்களில் மதியமும் இரவும் சோறுதான். காலை வேளைக்கு மட்டும் இட்லி, தோசை, ஆப்பம், உப்புமா, பூரி, பாம்பே டோஸ்ட் என்ற வரிசை முறையில் ஏதாவது ஒன்று மேசைக்கு வரும். இரவில் மீந்து ஆறிப்போகும் சோற்றில் (அதாவது மீந்துபோகும்படி அளவு பார்த்துக் குக்கரில் வைப்பதால்!) தண்ணீர் ஊற்றி வைத்துவிட வேண்டும். காலையில் ’பழைய சோறு’ என்ற நாமகரணத்துடன் அது என் தந்தைக்காக மேசையில் காத்திருக்கும். சில்லென்ற காவிரித் தண்ணீரில் குளித்துவிட்டுத் தலையைத் துவட்டிக் கொண்டே வரும் அத்தா அதே புத்துணர்ச்சியுடன் காலை ஆறு மணிக்குப் பழையதை உண்ணும் அழகே தனி. சிலநேரங்களில் அதில் கொஞ்சம் தயிர் விட்டுச் சாப்பிடுவார். தொட்டுக்கொள்வதற்குத் தொலி உரித்த சின்ன வெங்காயம் நாலைந்தும், பச்சை மிளகாய் இரண்டும் எடுத்துக்கொள்வார். பச்சை மிளகாயை அத்தனை ஆதூரமாக அவர் கடிப்பதைப் பார்க்கவே எனக்கு விந்தையாக இருக்கும். இந்த எளிமையான உணவுக் காம்பினேஷனில் அப்படி என்ன அதீத ருசி கொட்டிக்கிடக்கிறது என்று கேள்வி தோன்றும்.


2
கே.கே.நகரில் நாங்கள் இருந்தபோது அந்தப் பகுதியில் ஒரு எக்ஸ்-செர்வீஸ்மேன் இருந்தார். மிலிட்டரியில் கெட்டித்துப் போன அவரின் உடல் என்னவோ இரும்பால் செய்யப்பட்டது மாதிரி கிச்சென்று இருக்கும். உவமைக்கேற்ப அவர் ஆளும் இரும்பு நிறத்தில்தான் இருப்பார். முகத்தில் அப்பியது போன்ற தாடியும், தலையின் வளைவைப் போர்த்தியது போன்ற முடியும், எடுப்பான மூக்குமாக இருந்த அவரை எனக்கு இன்ஸ்டண்ட்டாகப் பிடித்துப் போனது. கரகரப்பான குரலில் ஓர் உறுதியும் லேசான அதிகாரத் தொனியும் கொண்டவர். மனதின் இமேஜ் மேப்பிங்கில் அவர் இந்தி நடிகர் நானா படேகர் சாயலில் இருப்பதாகப் பட்டது. அவரைப் பிடித்துப் போனதற்கு அதுவும் ஒரு காரணம். 



அப்போது ரமலான் மாதமும் வந்தது. ஒருநாள் தராவீஹ் தொழுகை முடிந்தவுடன் எல்லோரும் கலைந்து சென்று கொண்டிருந்தபோது யாருடனோ அவர் பேசிக்கொண்டு வந்தார். அவர் பேசுவதைக் கவனித்தபடி நான் பக்கவாட்டில் நடந்து வந்தேன். “சரியாச் சாப்பிட முடியலீங்க. நோம்பு நாள்ல சாப்பாடே எறங்காது இல்லீங்களா?” என்று அந்த நபர் இவரிடம் சொல்கிறார். இவர் சிரித்துக்கொண்டே, “அட என்னங்க பாய் நீங்க இப்படிச் சொல்றீங்க. நல்லாச் சாப்பிடுங்க. நோம்புங்கறது பின்னே எதுக்கு? நல்லாப் பசியறிஞ்சு ருசிச்சுச் சாப்பிடறதுக்குத்தானே?” என்று சொல்லி அவரை அனுப்பி வைக்கிறார். சாலமன் பாப்பையா கணக்கில் பட்டிமன்ற தீர்ப்பைப் போல் அவர் சொன்ன அந்த வாசகம் ருசித்துச் சாப்பிடுவது பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயத்தை என் மனதில் உருவாக்கியிருக்க வேண்டும் என்று இப்போது எண்ணுகிறேன். ஆனால் நோன்பைப் பற்றிய அவருடைய தத்துவம் சரியானது என்று இப்போது என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. இது சம்மந்தமாக இன்னொரு சம்பவத்தையும் சொல்லிவிடுகிறேன்.

“ரமலான் நோன்பு என்பதே பசிக்கொடுமையை நாம் அறிந்து கொள்வதற்குத்தான். பசியின் கொடுமையை அறிந்தால்தான் ஏழைகள் படும் பாடு நமக்குத் தெரியும். அப்போதுதான் அவர்களின் பசியைப் போக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு உருவாகும். ரமலான் நோன்பு அதற்கு வழி திறக்கிறது” என்று என் நண்பர் ஒருவர் நோன்பின் மாண்புகள் பற்றிப் பிரசங்கம் செய்தார். முடித்துவிட்டு நேராக என்னிடம் வந்து “எப்பிடிஜீ நம்ம பயான்? நல்லாயிருந்துச்சா?” என்று கேட்டார். சும்மா இருந்த சங்காகிய என்னை ஊதிக் கெடுத்துவிட்டாரா? என் அபிப்பிராயத்தை நான் சொல்லித்தானே ஆகவேண்டும். அப்போது நல்ல மூடில் வேறு இருந்து தொலைத்திருக்கிறேன் போல. நான் அவரிடம் ஒரு குட்டிப் பிரசங்கம் செய்தேன்! அதன் சாரம் இதுதான்:

“தோழரே! உங்கள் பயானில் கம்யூனிஸ நெடி கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருந்தது. இஸ்லாம் என்ற மோஸ்தரில் நீங்கள் மார்க்சிய-லெனினிய சித்தாந்தங்களை விதைக்கிறீர்கள் என்று படுகிறது. நோன்பின் நோக்கம் ஏழைகளின் பசித்துயரை அகற்றுவதுதான் என்று நீங்கள் சொன்னீர்கள். நோன்பில் அப்படி ஒரு விளைவு வருமென்றால் எனக்கும் சந்தோஷம்தான். ஆனால் நோன்பின் நோக்கமே அதுதான் என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னைப் பொருத்தவரை நோன்பு என்பது ஓர் ஆன்மிகப் பயிற்சி. முழுக்க முழுக்க ஆன்மிக நோக்கில் வகுக்கப்பட்ட ஒன்று என்றே கருதுகிறேன். “நோன்பு என்னுடையது, அதற்கு நானே கூலி தருகிறேன்” என்ற ஹதீஸ் குத்ஸியைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அது மட்டுமல்ல, நீங்கள் சொல்வது போல் நோன்பின் நோக்கம் ஏழைகளின் பசிக்கொடுமையைப் போக்குவதற்குத்தான் என்றால் வருடமெல்லாம் உணவுத் தட்டுப்பாட்டால் வாடி வதங்கிய ஏழையின் மீதும் நோன்பு கடமையாவது ஏன்? அவனும் முப்பது நாட்கள் நோன்பு வைக்க வேண்டும் அல்லவா? வருடமெல்லாம் அரைகுறை உணவு மட்டுமே கிடைக்கும் அவனது லைஃப் ஸ்டைலால் நோன்பு வைப்பதற்கான சக்தி அவனிடம் இல்லாமல் போகக்கூடும். அந்த நிலையில் அவன் நோன்பு வைக்காவிட்டால் அதற்கான அபராதத் தொகையை அவன் தர்மம் செய்ய வேண்டும். ஆனால் அவன் பணத்திற்கு எங்கே போவான்? பணம் இருந்திருந்தால்தான் இப்படியொரு தரித்திர நிலையில் அவன் இருக்கவே மாட்டானே? இது ஒரு பக்கம் இருக்கட்டும் நண்பரே, முப்பது நாட்கள் நோன்பு வைக்கும் வசதி படைத்தவர்களின் நிலை எப்படி இருக்கிறது? நோன்பு வைப்பது, பசியை உணர்வது, ‘அம்மாடியோவ், பசின்னா இதுதானா?’ என்று கேட்டபடி வகை வகையான பழங்கள், ஜூஸ்கள், ஸ்வீட்கள் இத்தியாதிகளோடு நோன்பு திறப்பது. ஏப்பம் விட்டபடி வல்ல ரஹ்மானுக்கு நன்றி சொல்வது. இதில் ஏழைகளின் வறுமை நீங்குவதற்கான வழி எங்கே இருக்கிறது? நன்றாகப் பாருங்கள், நோன்பில் ஒருவர் உணர்வது தன் பசியைத்தான், ஏழையின் பசியை அல்ல. நம் சமுதாய நிலையைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.” 

அதாவது, மேலே பார்த்த, ‘நானா படேகர்’ சாயல் கொண்ட பாயின் நோன்புத் தத்துவம்தான் அனைவராலும் கடைப்பிடிக்கப் படுகிறது என்று தோன்றுகிறது. 


3
என் பள்ளிப் பருவத்தில் நாங்கள் கிராமத்தில் வசித்தபோது நாங்கள் இருந்த தெருவில் மூன்று குடும்பங்கள் மட்டுமே முஸ்லிம்கள். ஒரு கிறித்துவக் குடும்பமும் இருந்தது. ஆர்சி. மற்றவர்கள் இந்துக்கள்தான். யார் யார் என்ன ஜாதி என்றெல்லாம் நினைவில்லை. மூப்பனார், வன்னியர் போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால் இங்கே பிரஸ்தாப நோக்கம் ஓர் ஐயங்கார் குடும்பம். அவர்கள் அந்தத் தெருவிற்குக் குடி வந்த சில மாதங்களிலேயே எங்கள் குடும்பத்துடம் நெருங்கிவிட்டார்கள். நானும் தம்பியும் தங்கையும் பாதி நாள் அவர்கள் வீட்டில்தான் சாப்பிட்டோம். சில வருடங்கள் அவ்வளவு அந்யோன்யமாகப் போய்க்கொண்டிருந்தது. நாங்கள் வளர்ந்த பிறகு மனதில் அன்னியத் தன்மை படிந்துவிட்டது. நட்பின் எல்லைகள் ஸ்பஷ்டமாகத் தெரிந்தன. 
 

கல்யாணி மாமியின் கைப்பக்குவத்தில் உருவான அனேக பதார்த்தப் பட்சணங்களில் ஒன்று மட்டும் என் நினைவில் முட்டிக்கொண்டு முன்னே வந்து நிற்கிறது. இந்நாள் ரசனையை வைத்துப் பார்க்கும்போது நியாயமாகக் ’காஃபி’தான் வந்து நிற்க வேண்டும். ஆனால் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது சர்க்கரைப் பொங்கல். வருடா வருடம் தைப்பொங்கல் வரும்போதெல்லாம் டிஃபன் கேரியர்களிலும் தூக்குகளிலும் பல வீடுகளில் இருந்து சக்கரை+வெண் பொங்கல், கரும்புத் துண்டங்கள் மற்றும் வேறு சில பட்சணங்கள் எங்கள் வீடு வந்து சேரும். உண்ண முடியாமல் திண்டாடுவோம். நான் கல்லூரியில் மாணவனாக இருந்த காலம் வரை அப்படி வந்துகொண்டிருந்தது. தீபாவளிக்கென்றால் ரவா லாடு, நெய்யுருண்டை போன்றவை வரும். இனிப்புக் கொழுக்கட்டை இன்னொரு மாதத்தில். அரிசி வெல்லம், காரச் சுண்டல் போன்றவை வேறொரு மாதத்தில். இப்படியாகப் பண்டிகைக்கு ஒரு ஸ்பெஷல் வந்துவிடும். இவற்றுக்கெல்லாம் தக்க கைம்மாறு செய்யவேண்டும் என்பது அம்மாவின் கொள்கை. எனவே ஆள் வைத்து பெரிய சட்டியில் பிரியாணி சமைத்து தயிர்சட்னி, கோழிப் பொறியல் மற்றும் ஒரு ஸ்வீட் சகிதம் தெரிந்தவர் வீடுகளுக்கெல்லாம் கொடுத்து அனுப்புவார், பெருநாட்கள் இரண்டிலும்.
எத்தனையோ பேர்களிடமிருந்து சர்க்கரைப் பொங்கல் வந்திருந்தாலும் கல்யாணி மாமி அனுப்பும் சர்க்கரைப் பொங்கல் மட்டும் தனியே தூக்கலாகத் தெரியும். அதன் அலாதியான ருசிக்காக ஆளாய்ப் பறப்போம். மூடியைத் திறந்ததுமே மூக்கைத் துளைக்கும் வாசனை அதன் முதல் ப்ளஸ் பாய்ண்ட் என்றால் ஒரு கை அள்ளினால் அதில் அரை முட்டை நெய் வழிவது அதன் இரண்டாம் கூட்டல் புள்ளி! 


4
“ஆன்மிகத்தில் ஈடுபாடு இருக்குதுன்னு சொல்றீங்க, அப்பறம் ஏன் இவ்வளவு மேம்போக்காச் சாப்பிடறீங்க?” என்று என்னை அவர் கேட்டபோது நான் கொஞ்சம் குழம்பித்தான் போனேன், இது என்ன, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் இந்த மனிதர் முடிச்சு போடுகிறாரே என்று. ”நாவு ருசி தேடுதற்கு ஆவி கெட்டு அலையாமல்” என்ற மஸ்தானப்பா வரிகள்தான் அப்போதும் என் மனதில் ஓடியிருக்க வேண்டும். “ஆஹா, தால்ச்சா செம டேஸ்ட்டா இருக்கு. இன்னுங் கொஞ்சம் ஊத்துங்க பாய்” என்று பந்தியில் உரத்தக் குரலில் உரிமையோடு கேட்டு அப்படியே தால்ச்சாவுக்காக ரெண்டு அன்னக்கை பிரியாணியும் வினயமாகப் பெற்றுக்கொண்டு ருசிப்பவர்கள் எல்லாம் ஆன்மிகத்திற்குள் நுழையாதவர்கள் என்ற அபிப்பிராயம் அப்போது இருந்தது உண்டு. அதை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டது நஸ்ருல்லாஹ் சாகிப் சொன்ன விளக்கம்:

”உங்க நெனப்பு வேற திசையில இருக்கு. சோத்துப் பக்கியா அலையறது வேற. அல்லாஹ் கொடுத்த ரிஜ்க்ன்னு பாத்து அந்த இத்ராக்கோட சாப்பிடறது வேற. ’அத்அமனா வ அன்அமனா’ – அவனே புகட்டினான், அவனே குடிப்பாட்டினான்னு ஓதிப்பிட்டு நான் எடுத்துச் சாப்பிடறேன் நான் எடுத்துக் குடிக்கிறேன்னு நெனச்சா எப்பிடி? அவந்தான் ஊட்டுறான் அவந்தான் குடிப்பாட்டுறாங்கற உணர்வோட சாப்பிடனும். நாக்குல ரிஜ்க்கை வச்சதும் அதோட சுவைய அவந்தான் காட்டித்தர்றான்னு பாக்கணும். ஆகுமான சுத்தமான உணவை இந்த விதமா நெறயா சாப்பிட்டாலும் தப்பில்ல. கொஞ்சமாச் சாப்பிடறது நபிவழிதான். அதுக்காக நெறயா சாப்பிடறவங்களுக்கு ஆன்மிகம் வராதுன்னு நெனக்கிறது சரியில்ல. நான் சொன்ன கணக்குல திக்ரோட சாப்பிடறவங்களுக்கு ஆன்மிக அந்தஸ்த்து கெடைக்குமா கெடைக்காதா சொல்லுங்க?”



சொன்னது மட்டுமல்ல, தான் சொன்னதைச் செயலிலும் காட்டினார் நஸ்ருல்லாஹ் சாகிப். மேஜையில் தேநீரும், ஒரு தட்டில் சில பழங்களும், ஒரு கிண்ணத்தில் புட்டரிசி ஹல்வாவும் வைத்தேன். ஒவ்வொன்றையும் நாவில் கரைய விட்டுச் சுவை பார்த்து நிதானமாகச் சாப்பிட்டார். உண்பது ஓர் உயர்ந்த தியானம் என்பதை அவரைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன்.
o
 
 
இந்தக் கட்டுரையைத் தட்டிக்கொண்டிருப்பதற்கு உந்துதலாய் அமைந்த நிகழ்ச்சியை இப்போது சொல்கிறேன். நாலு நாட்களுக்கு முன் நடந்தது. பணி முடித்து வீடு திரும்பினேன். வாசலில் காலணியைக் கழற்றிக் கொண்டிருக்கும்போதே உறவினர்கள் ஊரிலிருந்து வரும் விஷயத்தையும் வீட்டில் ஸ்நாக்ஸ் ஒன்றுமே இல்லை என்னும் விஷயத்தையும் என் சகதர்மினி தெரிவித்தாள். வடை வாங்கி வருகிறேன் என்றேன்.
“முந்தாநாளு வாங்கிட்டு வந்த வடைன்னா வேண்டவே வேண்டாம். மொந்து மொந்துன்னு வாய்ல வைக்க வெளங்கல. யாருமே தொடல. அப்படியே தூக்கிக் குப்பையில போடறாப்ல ஆயிடுச்சு” என்றாள்.



ஸ்கூட்டரைக் கிளப்பிக்கொண்டு நான் (என் வாழ்க்கைக்கு) வடை தேடி ஒரு புதிய திசையில் பயணித்தேன். வாய்க்கு ருசியாக ஒரு வடைகூட வாய்க்காத எங்கள் ஏரியாவை விட்டு வெளியேறினேன். சுப்ரமணியபுரம் போனால் நல்ல வடை கிடைக்கக்கூடும் என்று ஒரு யோசனை வரவே வண்டியைக் கல்லூரிக்குள் விட்டேன். ஒரு மனிதன் இதயச் சுத்தியுடன் வடை தேடி அலையும்போது இறைவன் அவனுக்கொரு வழி காட்டாமலா போய்விடுவான்? அரபிப் பேராசிரியர் காஜா மொய்தீன் கண்ணில் பட்டார். முதல்வர் அறை நோக்கிச் சென்று கொண்டிருந்தவரை மடக்கிக் குசலம் விசாரித்துவிட்டு என் பிரச்சனையைத் தெரிவித்தேன்.

”பருப்பு வடைதான் சார் வேணும். சின்ன வடையா இருக்கணும் சார். அப்பத்தான் முழுசா பொறிஞ்சிருக்கும். பெரிய வடைலாம் உள்ளே வெந்தும் வேகாமயும் இருக்கு.”

“இங்கயே கிடைக்குதே, க்ரிஷ்ணா ஸ்டோர் பக்கத்துல. ஒரு கிழவி ஐம்பது காசுக்குப் போடுது. நல்ல டேஸ்ட்டா வேணும்னா இன்னும் கொஞ்ச தூரம் தள்ளிப் போங்க. சகாயமாதா க்ளினிக்கல் லேப் இருக்கே, அந்தச் சந்துக்கு முன்னாடி ஒருத்தர் வண்டியில வச்சுப் போடுறார், ஒர்ருவான்னு.”

புன்முறுவலுடன் அவர் என்னை ஆற்றுப்படுத்தியபோதே என் மனதில் நம்பிக்கை பிறந்துவிட்டது, நல்ல முறுவலான பருப்பு வடை கிடைத்துவிடும் என்று. வண்டியைக் கிளப்பும் முன் அவரிடம் சொன்னேன்:

“ருசியா வேணும்னு வந்துட்டா இப்படித்தான் தேடித் தேடி அலையணும் சார்”
o



”துலுக்கன் தின்னு கெட்டான்” என்று ஒரு சொலவடை உண்டு. முஸ்லிம்களின் வாழ்வியல் சம்மந்தமான பல சொலவடைகளில் இதுவும் ஒன்று. சமீபத்தில் உருதுச் சேனல் ஒன்றில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியைப் பார்த்த போது மேற்படிச் சொலவடைக்குத் தமிழக முஸ்லிம்கள் தகுதியானவர்கள் அல்ல என்று தோன்றியது. அதில், காஷ்மீர் ச்செஃப் ஒருவர் பிரியாணி ஆக்கிக் காட்டினார். பாஸ்மதி அரிசி, கோஷ்த் (ஆட்டிறைச்சி), தயிர், புதினா, முந்திரிப் பருப்பு, பாதாம் துருவல், உலர் திராட்சை, பட்டை, ஏலக்காய் போன்ற பொருட்கள் எல்லாம் நாமும் இங்கே பயன்படுத்துபவைதான் என்றாலும் அவர் நீட்டிக் கொண்டே போன பட்டியலில் நான் கேள்வியே பட்டிராத  பொருட்களும் இருந்தன. நிறத்திற்காக ஒரு கொத்து குங்குமப் பூவைத் தூவினார். கேவ்டா துளிகள் கொஞ்சம் தெளித்தார். ஜாவித்ரிப் பொடி என்று சொல்லி அந்த வஸ்து கொஞ்சம் தூவினார்.(இது நம்மூரில் கிடைக்கும் ஜாதி பத்ரி போலும்.) ரோஜா எஸ்ஸென்ஸ் ரெண்டு சொட்டு விட்டுக்கொண்டார். ஏதோ ஒரு இலையை இடையிடையே செருகி வைத்தார். ”தம்” போட்டு முடித்து மூடியை அவர் திறந்த போது ஆவி பறந்தது. அன்னக்கையால் அள்ளி எடுத்துத் தட்டில் வைத்தார். மூன்று நிறங்களில் இருந்தது பிரியாணி. பார்த்துக் கண்கள் கலங்கி விசித்தேன்!



சொலவடை இப்படி இருக்கிறதே என்பதற்காக நாவு ருசிக்கு வாழ்க்கையை அர்ப்பணிப்பதில் வேறு சமயத்தவர்கள் சோடை போனவர்கள் என்று சொல்ல முடியுமா? அதுவும் தி.ஜானகிராமனைப் படித்த பிறகு?
சைவ உணவு ரசனைக்கு என் வாத்தியார் என்று தி.ஜாவைத்தான் சொல்வேன். “நளபாகம்” என்று பெயர் வைத்து அவர் எழுதிய நாவல் அவர் எழுதிய கடைசி நாவலாக அமைந்ததில்கூட ஓர் அர்த்தம் இருக்கிறதோ என்னவோ? கடுகு உலுத்தம்பருப்பு தாளிப்பதை வைத்தே பதினைந்து பக்கங்களில் ஒரு சிறுகதையை உருவாக்கி விடக்கூடிய அபாரமான எழுத்துத் திறமை கொண்டவர் அவர். தஞ்சை ஜில்லாவின் கிராமத்து நெய்க் கத்திரிக்காயை அவர் அரிந்து காட்டும் போது அதில் சொர்க்கத்தின் சுவையைக் காட்டிவிடுவார். கீரைக் கடைசலை நம் மனதில் கடைந்து நாவில் நீர் சொட்ட வைத்துவிடுவார்.


பி.ஏ.கிருஷ்ணனின் “புலிநகக் கொன்றை” நாவலுக்கு யாரோ எழுதிய விமரிசனத்தில் அந்த நாவலின் முக்கியமான அம்சமாக வைணவ பிராமணர்களின் கலாச்சாரக் கூறாக இருக்கும் உணவு ரசனையை அவர் குறிப்பிட்டிருந்தார். அதை இலக்கியப் பதிவாக்கிய முன்னோடி எழுத்தாளர் தி.ஜாதான் என்று நினைக்கிறேன். லா.ச.ராமாமிருதம் அதே சமூகம் பற்றி இவ்வளவு எழுதியிருந்தும் அன்னபூரணி பற்றி எழுதியிருக்கும் அளவு அவர் அன்னத்தைப் பற்றி எழுதவில்லை. 

“குழந்தைகள் பாலை விரும்புகின்றன
 வளர்ந்தவர்கள் பாலூட்டுபவளைக் காதலிக்கிறார்கள்”
என்று மௌலானா ரூமி (ரஹ்) சொல்கிறார்கள்!

Sunday, July 24, 2011

மீன் வித்தை

(சிறுகதை)
 

காவிரி ஓடிக்கொண்டிருந்தது. ஆறுதல் சொல்லிக்கொள்வது போன்ற நீரோட்டம். பாதி மணலும் பாதி நீருமாய் விரிந்த காட்சி. ‘வளநாடு மகவாய் வளர்க்கும் தாய்’ என்றார் இளங்கோ. இப்போதெல்லாம் வருடத்தில் பல மாதங்கள் இப்படி மடி வற்றிய கோலம்தான். கோடையில் முழுதாக வரண்டு கிடப்பதும் உண்டு. நுரை மிதக்கச் சுழித்துக்கொண்டு ஓடும்  வெள்ளோட்டத்தை ஆடிப்பெருக்கில் பார்க்கலாம்.

நதி தனக்கென்று தானே உருவாக்கிக்கொண்ட பாதையில் வேறு எதுவும் ஓடுதற்கில்லை. தன் அழகை உலகம் கண்டு ரசிக்க மட்டுமல்ல, இரண்டு கரைகளும் ஒன்றை ஒன்று ரசிப்பதற்காகவும் நதி நடுவில் ஓடுகிறது போலும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள். இங்கே இரண்டு கரைகளுமே பச்சைதான்.

பொன்னாவரைக்குப் போகும் படுகைப் பாதை நெடுக வாழைத் தோப்புகளும் மூங்கிற் புதர்களும் மரங்களுமாகத்தான் இருக்கும். இடையில் ஒரு படித்துறை மண்டபம் உண்டு. படிகள் உடைந்து பாதி தண்ணீருக்குள் சாய்ந்து கிடந்தன.
நடுக்கடைக்கும் திருவையாற்றுக்கும் இடையில் நிற்கும் பாலம் தூரத்தில் தெரிந்தது. அரசர் கல்லூரிப் படித்துறை, செவ்வாய்க்கிழமைப் படித்துறை, தியாகராஜ சுவாமி மண்டபப் படித்துறை என்று அந்தக் கரையில் வீடுகளும் மண்டபங்களும் நெட்டுக்கு. தியாகராஜர் சமாதிக்கு அடுத்தாப்ல சுடுகாடு. அப்புறம் தோப்புகள்.



சூரியன் சாயத் தொடங்கியிருந்த நேரம். முழங்கால் அளவிலிருந்து வயிறு வரை மட்டுமே ஆழமுள்ள அந்த நீரோட்டத்தில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். மணலே தென்படாமல் நதி முழுவதும் தண்ணீராக ஓடினாலும் சரி, தண்ணீரே இன்றி முழுவதும் மணலாகக் கிடந்தாலும் சரி, அதிலே விளையாட்டு சுவைப்பதில்லை. மணற்பரப்பின் ஊடாக வளைந்து வளைந்து ஓடும் இந்த அளவு தண்ணீரில்தான் விதவிதமாக விளையாட முடிகிறது. குளித்துக்கொண்டே விளையாடுவது அல்லது விளையாடிக்கொண்டே குளிப்பது. பள்ளிக்கூட வியர்வையின் கசகசப்பை நீரின் குளுமையால் நீக்கும் விளையாட்டு, கசப்பை நீக்கும் இனிமை.

கல்யாணபுரம் அக்ரஹாரத்தின் விளிம்பில் படுகை ரோட்டின் ஓரத்தில் உள்ள குடிசைப் பகுதியிலிருந்து ஓடிவந்தான் அவன். காலிலும் கையிலும் தாடையிலும் துருத்திக் கொண்டிருந்த கணுக்கள் அவன் விளிம்பு நிலை மக்களின் வாரிசு என்பதை, சத்துணவுத் திட்டத்தின் ஆதரவில் வளரும் சோனிப் பிள்ளை என்பதைக் காட்டின. படுகைச் சரிவில் நாணல்களின் ஊடாக லாவகமாக பாய்ந்திறங்கி ஆற்று மணலில் குதித்தான். பாதங்கள் செருகச் செருக நடந்தான். பகலெல்லாம் சூடேறிக்கிடந்த மணல் இன்னமும் தகித்தது. தண்ணீரில் இறங்கி ஏறி நடந்தான். ஆற்றின் நடுவில் அவனது சகாக்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். உடையாத பிள்ளைக் குரலில் அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியாகக் கத்தினான். அவர்கள் அவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

“டேய், ஒங்கப்பாரு ஊட்ல இல்லியா?”
“இன்னிக்குத் தேர்முட்டில மீட்டிங்கு. எங்கப்பா ராத்திரி ஒரு மணிக்குத்தான் வருவாரு”
“வீட்டுப்பாடம் முடிச்சுட்டியா?”
“இல்ல. வெளயாடிட்டுப் போயி படிச்சுக்கலாம்”
“ஒங்கம்மா எப்படிடா விட்டாங்க?”
“தெரியாம ஓடியாந்துட்டேன்”
“மீனு புடிக்க வர்றியா?”
“ம்… நல்ல ஐடியாதான். பெரிய கெண்டையா ரெண்டு மூனு மாட்டிச்சுன்னா கொண்டுபோய் அம்மாட்ட குடுத்தா அடி உளுவாது”
“பெரிய கெண்டையெலாம் இங்கிட்டு வராதுடா. அதையெலாம் புடிக்க நரம்பு வச்ச தூண்டி வேணும். இங்க அயிரக் குஞ்சுதான் வருது. நான் இப்பயே பத்து புடிச்சுட்டேன். என்னை ஜெயிக்க முடியுமா ஒன்னால?”
“ம்.. ஜெயிப்பேன்”
”போடா புளுகு மூட்ட. நீ எப்பயாச்சுந்தான் வர்ற. ஒன்னால முடியாதுடா”

அவன் அவர்களைப் பார்த்தான். வேகமாக நடந்து வந்த இரைப்பு இன்னும் அடங்கவில்லை. சூரியனின் ஒளியில் தேன் நிறமாக மின்னிய பூனை முடியில் நெற்றி வியர்வை ஓரமாக வழிந்தது. புறங்கையால் துடைத்துக்கொண்டே அவர்களைப் பார்த்தான். நீரோட்டத்தை ஒட்டிய மணல்மேட்டில் ஆளுக்கொரு ஊற்று தோண்டி வைத்திருந்தார்கள். பிடிபட்ட அயிரை மீன்கள் அவற்றினுள் திகிலுடன் திரிந்து கொண்டிருந்தன. ஓடும் நீர் விடுதலை. தேங்கும் நீர் சிறை. ஆற்றோட்டத்தில் ஓடியிருந்த மீன்களுக்கு இப்போது நீர்ச்சிறை. 



ஒரு பையன் பெரிய கண்ணாடி பாட்டில் ஒன்று கொண்டுவந்திருந்தான். அதனுள்ளும் நான்கு மீன்கள் சுற்றிச் சுற்றி வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன.
அவன் ஓர் இடத்தில் அமர்ந்து வேகவேகமாக மணலைத் தோண்டினான். அரையடி ஆழத்திலேயே, அள்ளிய மணலில் நீர் வழிந்தது. சரியும் மணலை ஒதுக்கி ஒதுக்கி ஒரு சின்ன ஊற்று தோண்டினான். நீர் ஊறி வந்து தெளிந்து நின்றது. மீன் பிடித்துப்போட வேண்டும். விளையாட்டுதான். போகும்போது அப்படியே விட்டுவிட்டுப் போவதும் உண்டு. பாட்டிலில் எடுத்துக் கொண்டும் போகலாம். ஆனால் பொன்ராசு எப்போதும் அப்படியே மணலைத் தள்ளி மூடிவிட்டுப் போவான்.

”அதெல்லாம் சாவாதுறா. அப்படியே கொடஞ்சுக்கிட்டு தண்ணிக்குப் போயிரும்”
“நெசமாவா?”
“வேணும்னா நாளக்கி வந்து தோண்டிப் பாரு. இருக்காது”

அவன் சொல்வது உண்மையாகவே பட்டது. மறுநாள் ஊற்று தோண்டும்போது மீன்கள் இருப்பதில்லை. மணலடியாகச் சுரங்கம் குடைந்து தப்பித்துவிடும் வித்தை அறிந்த வீரர்களாகவே அந்தச் சின்ன மீன்கள் மனதில் பதிந்துவிட்டன.
அவன் ஆற்றுநீரில் இறங்கினான். கால் பாவிய இடத்தில் மணல் பதிந்து எழுந்தது. நீரோட்டத்தில் நீண்டு அடங்கியது. புருவங்களை நெறித்துக் கண்களைச் சுருக்கிக் கொண்டு குனிந்து நீரில் தேடினான். கைகள் குடமிட்டுத் தயாராக இருந்தன. அயிரை மீன்கள் பொடி மீன்கள். நீருக்குள் இருக்கும்போது கண்ணில் படுவதும் லேசில்லை. வேகமாக நகர்ந்து மாயமாய் மறைந்துவிடக் கூடியவை. அலக்காக அள்ளி உள்ளங்கையில் எடுத்து வந்து தோண்டி வைத்த ஊற்றுக்குள் போடுவது ஒரு தனிக் கலைதான்.



சூரியன் உக்கிரம் குறைந்து வெளிச்சமடித்துக் கொண்டிருந்தது. தென்னை ஓலைகள் பளபளக்க, காற்றில் மாலை நேரத்தின் லேசான குளுமை வெளிப்பட்டது. அதில் ஒரு புதிய விசையும் இருந்தது. மண்டபத்திலும், தேக்கு மரங்களிலும் காகங்கள் கரைந்தபடி அலைந்து கொண்டிருந்தன. இன்னும் முக்கால் மணிநேரத்தில் அந்தி சாய்ந்துவிடும்.
அவன் ஐந்து மீன்கள் பிடித்திருந்தான். ஆறாவதைத் தேடி நீரில் நகர்ந்து கொண்டிருந்தான்.



கூச்சலும் சிரிப்புமாக ஒரு கும்பல் படுகை ரோட்டிலிருந்து இறங்கி மணலில் நடந்து வந்துகொண்டிருந்தது. இளைஞர்கள், சிறுவர்கள். ஆண்கள், பெண்கள். மீன் பிடிப்பதை விட்டுவிட்டு அவர்கள் அந்தப் புதிய கும்பலைப் பார்த்தார்கள். வெளியூர்க்காரர்கள். அக்ரஹாரத்திலிருந்து வருகிறார்கள் என்று தெரிந்தது. ஒருவன் காதில் ஏர்ஃபோன் மாட்டியிருந்தான். என்ன இசை கேட்கிறானோ தெரியவில்லை, அவன் கைகளும் கால்களும் விலுக் விலுக்கென்று இழுத்துக் கொண்டிருந்தன. தியாக பிரும்மத்தின் சமாதி மண்டபத்தைப் பார்த்ததும் அவர்களில் ஒரு பெண் ‘ஜகதானந்(ந்ந்ந்ந்ந்)தகாரகா…” என்று நடுவில் அழுத்தி இழுத்து ‘கா’வில் நீட்டி முகத்தில் அழகு காட்டினாள். கீர்த்தனையை ஏதோ பஜ்ஜியாக்கி சாப்பிடுவது போல் இருந்தது அதை அவள் அஞ்சலி செய்தவிதம். அவர்களுக்கு இடையில் சில பொடிசுகளும் ஓடியபடி வந்தன.

“யாருடா இவுங்க?”
“தெரியலடா. கல்யாணபுரத்துக்கு வந்திருக்காங்கன்னு நெனக்கிறேன்”
“ஆமாண்டா. அய்யிருங்கதான். அந்தம்மா சாமி பாட்டு பாடுறாங்க”
“டேய், எங்கம்மா வேல செய்யிற வூட்டுக்கு வந்திருக்கற விருந்தாளிங்கடா. பர்சன்னா வர்றான் பாரு”

சொல்லிக்கொண்டே அவன் தண்ணீரை விட்டு மேலேறினான். தன் எசமானின் உறவுக்காரர்கள் என்ற உரிமையில் தேங்காச் சில்லு போன்ற பல்லைக் காட்டி ஒரு சல்யூட் போட்டான். அவர்கள் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒற்றை நாடியாக நெடு நெடு என்றிருந்த ப்ரஸன்னா என்ற அந்தச் சிவப்புப் பையன் தன் குரலில் சற்றே அதிகாரம் தொனிக்கப் பேசினான்.

“இங்க என்னடா பண்ற?”
“விளையாடறேன். மீன் புடிச்சிருக்கேன்”



தான் தோண்டியிருந்த ஊற்றுக்கு அருகில் குத்தவைத்து அதனுள் இருந்த மீன்களைக் காட்டினான். கையின் நிழல் நீரில் விழுந்ததும் ஐந்து அயிரை மீன்களும் கலைந்து ஓடி அலைந்தன. சூரியன் செம்பழமாய்ச் சாய்ந்து கொண்டிருந்தது.
ப்ரஸன்னாவின் பின்னால் நின்றிருந்த ஒரு பெண்பிள்ளை ஆர்வமாக முன்னால் வந்து முழங்காலில் முட்டுக்கொடுத்துக் குனிந்து ஊற்றினுள் பார்த்தாள். தங்க சரிகையிட்ட வெண்பட்டுப் பாவாடை உடுத்திய அந்தச் சிறுமியின் கண்கள் அவனைப் பார்த்தன. வெயில் பட்டு வெண்பட்டு மின்னிற்று.

“இந்த மீன என்ன செய்வ?”
“ஆக்கித் திம்போம்”

அருகிலிருந்த பசங்க சிரித்தார்கள். அந்தச் சிறுமியின் பேதைமை தோன்றிய கேள்வியை எள்ளிய சிரிப்பு. கேள்வியின் சொற்களில் அல்ல, அதன் தொனியில் பேதைமை இருந்தது. அந்தத் தொனியை உருவாக்கிய குரலில். அந்தக் குரலுக்கு பாவம் காட்டிய முகத்தில். அதன் பெரிய விழிகளில்.

ஒரு கணம் மௌனமாக இருந்தாள். சட்டென்று முழங்காலிட்டு அமர்ந்து ஆற்று நீரின் பக்கமாக ஊற்றை உடைத்தாள். முழங்கைகள் வரை ஒட்டிய ஈர மணல் அவளின் வெண்பட்டாடையில் தெறித்து நனைத்தது. ப்ரஸன்னா அவளைப் பிடித்து இழுத்துத் தூக்கினான். அவள் தன் பாதத்தை நீருக்குள் வைத்து மணலை எற்றித் தள்ளினாள். ஊற்று நீருடன் அயிரை மீன்கள் விடுதலை அடைந்து ஆற்றுக்குள் ஓடிப்போயின. பசங்களின் கைத்தட்டல்களும் ஆரவாரச் சிரிப்பும் வேடிக்கையாய் இருந்தன. திமிரிக்கொண்டு ப்ரஸன்னாவின் கைகளைத் தட்டிவிட்டாள் அவள். நீர் துளித்த கண்களில் ஒருவித உக்கிரத்துடன் உதடுகளில் புன்னகை துடிக்க ‘அவனை’ ஒரு பார்வை பார்த்துச் சென்றாள். அந்தக் கும்பல் மெல்ல அப்பால் நகர்ந்தது. சூரியச் செம்பழத்தின் கனற்சாறு முகத்தில் வழிய அவன் செய்வதறியாது அமர்ந்திருந்தான்.

ஊற்று காலியாகியிருந்தது. ஆற்று நீர் அதனுள் அலையடித்தது. மீன்கள் ஓடிவிட்டன. மனதில் ஒன்றுமே தோன்றாத வெறுமை கவிந்திருந்தது. பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை.

அவனது சகாக்கள் அவனைக் கேலி பேசத் தொடங்கினர். கண்ணாடி பாட்டிலில் இருந்த மீன்களைக் காட்டி அவன் முகத்தின் முன் ஒருவன் ஆட்டினான். பெண்பிள்ளையிடம் இவன் அவமானப் பட்டுவிட்டதாகக் கிண்டல்கள் விளையாடின. சிறுவனின் ரோசத்தைக் கிள்ளும் பகடிகள். சூரியன் மறைந்து இருள் பூசத் தொடங்கியிருந்தது.
அவன் சட்டென்று கையில் மணலை அள்ளி அவர்கள் மீது வீசினான். எழுந்து அவர்களின் சட்டையைப் பிடித்துத் தள்ளினான். முகம் சுருக்கி அழுதபடி ஒருவனை எட்டி உதைத்தான். மண்ணில் விழுந்து புரண்டெழுந்தான். சக்தி அவனுக்குள் ஊற்றெடுத்துப் பொங்க ருத்ர தாண்டவம் ஆடினான். சுடுகாட்டுக் காளி அவன்மீது ஏறிவிட்டதாகக் கிண்டல் செய்தபடி அவர்கள் ஓடினார்கள். சிறிது தூரம் துரத்திக்கொண்டு போய் மணலை அள்ளி வீசிவிட்டு தொப்பென்று அமர்ந்தான்.

மூச்சிரைத்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சினான். உடலெல்லாம் மணலாகியிருந்தது. கண்களை மூடினான். மூச்சின் சப்தமும் இருதயத் துடிப்பும் அவனுக்கே இரைந்து கேட்டது. மனதில் அவளின் முகம், அந்த உக்கிரமான பார்வை நிழலாடிற்று. அந்த முகத்தில் அவனது மனம் குவிந்திருந்தது. கிணற்றுக்குள் ஆழிருட்டில் பளிச்சிடும் மீன்களைப் போல் அவளின் கண்கள் மின்னின. “போடி சுடுகாட்டுக் காளி” என்று அவளைத் தன் மனதினுள் வைதான். கண்கள் திறந்து வானத்தைப் பார்த்தான். அவள் முகம் கறுப்பாகி விரிந்து இப்போது ஆயிரம் கண்களுடன் அவனைப் பார்ப்பதாகப் பட்டது.