Friday, November 27, 2020

திரையோ? மறிகடலோ?

 


’திரை’ என்பது தமிழில் உள்ள ஒரு ஞானச் சொல்.

”திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்னும் முதுமொழி அனைவரும் அறிந்ததே.

அது என்ன திரைகடல்?

திரை என்றால் அலை என்று பொருள்.

புதுவை ஆகிய புதுச்சேரி என்னும் கடற்கரை மாநகரை மகாகவி பாரதியார் தனது ’குயில் பாட்டு’ என்னும் அற்புத நெடுங் கவிதையில் இப்படி அறிமுகம் செய்கிறார்:

“வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி

வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய

செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகர்”

அதே பாரதி எழுதிய வேறொரு கவிதை வரி ‘திரை’ என்னும் சொல்லின் மற்றொரு பொருளைத் தருகிறது:

”தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி – பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்”


                  Bust of veiled Mary by Giovanni Strazza. 

(இவ்வரிகளில் உள்ள வரலாற்றுப் பிழையை விரித்துப் பேச இக்கட்டுரை இடம் அன்று. அது குறித்து எளியேன் எழுதிய “பாரதி தடுமாறினான்” என்னும் கட்டுரையில் காண்க. http://pirapanjakkudil.blogspot.com/2019/09/blog-post_9.html )

திரை என்றால் மறைக்கும் துணி என்றுதான் முதன்மை அர்த்தம். அதே சொல் கடலின் அலையையும் குறிப்பதாகத் தமிழில் அமைந்திருப்பதில் ஒரு ஞானம் இருக்கிறது.

கடலும் அதன் அலைகளும் இறைவனையும் அவனது படைப்புக்களையும் சுட்டும் குறியீடுகளாக ஞானக் கவிகள் பேசியுள்ளனர்.

“பூர்வீகக் கடலில்

புதுப்புது அலைகள்”

என்கிறார் மவ்லானா ரூமி.

திரை என்பதை மறைக்கும் துணி என்று கொண்டால் அதனை வைத்தும் பிரபஞ்சம் மற்றும் கடவுள் பற்றிய ஒரு ஞான ஒளிச்சுடரை நமக்கு அவர் நவில்கிறார்:

”திரைச்சீலையின் சித்திரங்கள் - அது

மறைத்துள்ள பொருளன்று”

திரை என்பது மறைப்பதா? அல்லது காட்டுவதா?

திரை என்பது கடலின் அலை என்று கொண்டு இந்தக் கேள்வியை எழுப்பினால் அச்சொல் தரும் ஞானத்தில் போய் முடிகிறது.

அலைகள் கடலில் தோன்றுகின்றன; கடலிலேயே மறைகின்றன. அலைகளில் கடல் அன்றி வேறு எதுவும் இல்லை. (எனினும், அலைகள் கடல் இல்லை.)

அலைகள் என்று கருதிப் பார்த்தால் கடல் நம் கருத்தில் படுவதில்லை. எனவே, அலை கடலை மறைக்கும் திரை ஆகிவிட்டது.

கடல் என்று கருதிப் பார்த்தால் அலையில் கடலே காட்சி ஆகிறது. எனவே, அலை கடலைக் காட்டும் பொருளாகிறது.

(திரைப் படம் என்பதும் திரையில் காணும் காட்சிதான். ஆனால் திரைப்படக் காட்சியினும் ஆழமானது திரைக்கடல் காட்சி! கடல் என்றாலே ஆழம் அல்லவா?)

”நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்” என்னும் சொலவடையும் இதே ஞானக் கருத்தை உணர்த்துவதுதான்.

கல்லில் செதுக்கிய ஒரு நாய்ச் சிலை உள்ளது. அவ்வழியே நடந்து வந்த சிறுவன் ஒருவன் அதனை முதன்முதலில் பார்க்கிறான் என்பதால் முதற்பார்வையில் நாயே நிற்கிறது என்று எண்ணி அஞ்சி ஓடுகிறான். பின்னர் அது ஆடாமல் அசையாமல் நிற்பதைப் பார்த்து அது சிலையே என்று தெரிந்து கொள்கிறான். இப்போது அவன் கருத்தில் நாய் மறைந்து கல்லே தெரிகிறது. (எளியேனின் குருநாதர் இச் சொலவடையை அடிக்கடி தனது சொற்பொழிவுகளில் விளக்குவார்கள்).

இந்த ஞானத்தை மரத்தால் செய்யப்பட்ட யானைச் சிலையை உவமை கொண்டு விளக்குகிறார் திருமூலர்:

“மரத்தை மறைத்தது மாமத யானை

 மரத்தில் மறைந்தது மாமத யானை

 பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

 பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்”

திரைகடல் ஓடி ஓடி திரவியம் தேடுவோர் தேடட்டும்.

நாம் திரைகளில் கடல் பார்த்து ஞான திரவியம் தேடுவோம்.

Wednesday, November 25, 2020

இல்லை வேறு பிறர்

             அண்மையில் முகநூலில் வந்த இரண்டு இடுகைகள் என்னை மிகவும் கவர்ந்தன.

உண்மையில் அவை இரண்டும் தோற்றத்தில் மட்டுமே இரண்டாக இருக்கின்றன. உள்ளடக்கம் ஒன்றே!

நான் இடுகைகளைப் பற்றித்தான் சொல்கிறேன். ஆனால், இப்படிச் சொல்வதே ஏதோ ஞானச் செய்தி போன்றுதான் தொனிக்கிறது அல்லவா? ஆம். அவ்விரு இடுகைகளும் ஞானச் செய்திதான்.

ஒன்று, ரமண மகரிஷியின் கருத்துக்களைப் பகிரும் குழுவினர் இட்டது. அஃது பின்வருமாறு:

“சீடன்: நாம் பிறரை எவ்வாறு நடத்த வேண்டும்?

ரமணர்: வேறு பிறர் இல்லை.”



இது ஒரு புகழ் பெற்ற உரையாடல் என்று தெரிகிறது. இதற்குப் பலரும் தாம் புரிந்து கொண்ட வகையில் விளக்கங்கள் சொல்கின்றனர்.

பிறர் என்று, நம்மின் வேறு என்று எவரையும் காணாதே. அனைவரையும் அனைத்தையும் தான் என்பதாகவே பார். இருப்பது ஒன்றே. எனவே வேறு பிறர் இல்லை என்று இதனை விளக்கலாம்.

மற்றது, ஷைகு பக்ருத்தீன் உவைசி என்பார் இட்டது. இஸ்லாமிய இறையியல், தத்துவம் மற்றும் ஆன்மிகக் கலந்துரையாடற் குழு (Islamic Theology, Philosophy & Mysticism Discussion Group) என்னும் குழுவில் வந்தது.

சூஃபி குரு (ஷைகு) ஒருவரின் முன் பணிவாக ஒரு சீடன் (முரீது) அமர்ந்திருக்கும் புகைப்படமும் அவ்விடுகையில் இடம் பெற்றுள்ளது. படத்திற்கான செய்தி இது:

“முரீது: ஷைகே! நாம் பிறரை எப்படி நடத்த வேண்டும்?

குரு: என் மகனே! வேறு பிறர் இல்லை!”



ஒரே செய்திதான். இரண்டு வெவ்வேறு ஆன்மிக மரபுகளில் அவரவர் வார்ப்பில், சீருடையில் வெளியாகி இருக்கின்றது. ஞானச் செய்திகள் பலவும் இப்படித்தான் ஒரு மரபில் இருந்து இன்னொன்றுக்கு என்று பயணித்த வண்ணம் உள்ளன. தாவோ ஜென் சூஃபி வேதாந்தம் என்று உலக ஆன்மிக மரபுகளுக்கு இடையே இப்படியான உயர்தள உறவாடலும் உரையாடலும் உண்டு.

இது எமது நுமது என்று சண்டை பிடிக்கும் களம் அன்று. ஞானிகள் இதையெல்லாம் புன்னகையோடு கடந்து போய்க்கொண்டே இருப்பர்.

ஆனால், சில செய்திகளின் மூலப் பிறப்பிடம் நமக்குத் தெரியவே செய்யும். இந்த ஞான உரையாடலின் மூலம் ரமண மகரிஷிதான் என்று எனக்குத் தெரியும்.

ஆனால், சூஃபி குழுக்களில் அவரது பெயரைச் சொன்னால் எல்லாரும் ஏற்பார்களா என்பது ஐயமே. எனவேதான் யாரோ ஒரு புண்ணியவான் ரமண மகரிஷியை சூஃபி ஷைகாக ஆக்கிவிட்டிருக்கிறார்.

ரமண மகரிஷி மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டி வந்த ஒரு ஞானப் புள்ளி இது. இச்செய்தியின் மூல முகவரியைத் தேடியபோது “ரமண மகரிஷியுடன் உரையாடல்” (Talks with Ramana Maharishi) என்னும் பதிவுகளில் இருபதாம் உரையில் இச்செய்தி இருக்கக் கண்டேன். அது நிகழ்ந்த நாள் 30 ஜனவரி 1935.

எவான்சு வெண்ட்சு (Evans Wentz) என்பார் “தனித்திருத்தல்” என்னும் பொருண்மை பற்றி ரமண மகரிஷியிடம் நிகழ்த்திய சிறு உரையாடல் அது.

ஞானிகள் தனித்திருப்பதால் யாருக்கு என்ன பயன்? என்றொரு வினாவைத் தொடுத்து அதனை ஒட்டி எவான்சு வெண்ட்சு கேட்கும் வினாவும் ரமணர் பகர்ந்த விடையும் இவை:

”எ.வெ: அவர் பிறருடன் கலந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா?

ர.ம: கலப்பதற்குப் பிறர் இல்லை. ஆன்மா என்பது ஒன்றேயான ஒற்றை உண்மையே. (There are no others to mx with. The Self is one and only Reality).”

மேற்சொன்ன இடுகைகளில் ரமணர் குழுவின் இடுகைக்கு வந்திருந்த பின்னூட்டங்களில் ஒருவர் சொன்னது கவனத்தைக் கவர்ந்தது: “As always, straight to the bull’s eye”.

ஆம், இது நேராக எருதின் கண்ணில் எய்த கணை என்பது சரிதான்.

Thursday, November 19, 2020

கூட்டிக் கழித்துப் பார்

 


வீடு கூட்டணும், பாத்திரம் தேய்க்கணும்…” – வேலையாள் சேர்க்கும்போது ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்ளும் நிபந்தனைகள்தான்.

வீடு கூட்டுவது என்னும் சொலவடையின் மீது சிந்தனை ஊன்றிற்று. “வீடு பெருக்கணும்” என்று சொல்லப்படுவதுமுண்டு.

கூட்டுதல், பெருக்குதல் – இரண்டுமே கணிதச் செயல்பாடுகள்தாம். எல்லாமே இங்கே இதில் ஒரு கணக்குதானே?

சரி. என்ன வேறுபாடு?

பெருக்குவது என்பது அதிகப்படுத்துவது.

கூட்டுவது என்பது ஒன்று சேர்ப்பது.

வீடு பெருக்குவது என்பதில் எது அதிகப்படுத்தப் படுகிறது? வீடு கூட்டுவது என்பதில் எது ஒன்று சேர்க்கப்படுகிறது?

வீடு கூட்டுவது என்பதில் துடைப்பம் (விளக்குமாறு, தூர்மாறு) கொண்டு வீட்டில் உண்டாகிக் கிடக்கும் குப்பைகளை, தூறுகளை, தூசுகளை எல்லாம் ஒன்று சேர்க்கிறோம், பிறகு நீக்குகிறோம் என்பது விளங்குகிறது. ஆனால் ’வீடு பெருக்குவது’ என்று ஏன் சொல்கிறோம்? குப்பைகளை, தூறுகளை, தூசுகளை நாமா பெருக்குகிறோம்?

ஆம். உண்மைதான். அவற்றை நாம்தானே உண்டாக்கினோம்? நம் புழக்கம்தானே அவற்றை உருவாக்குகிறது. அதை ஒப்புக்கொள்ளும் நேர்மை தமிழ் வாழ்வியலில் இருக்கிறது. எனவேதான் “வீடு பெருக்குதல்” (அதாவது, வீட்டில் பெருகிக் கிடக்கும் தூசு தும்புகளை வாரிச் சேர்த்தல்) என்னும் சொலவடை உண்டாகியிருக்கிறது!

சரி. பெருக்கிய தூசு தும்பு குப்பைகளை எல்லாம் கூட்டிச் சேர்த்து முறத்தில் அள்ளி மூலையில் கொட்டி ஆயிற்று. இனி என்ன?

வீட்டிலேயே வைத்திருக்கவா அது? கழித்துவிட வேண்டியதுதான். அதாவது, அதனை நீக்கி விட வேண்டியதுதான். நீக்குதல், கழித்தல்  என்பதும் ஒரு கணக்குத்தான்.

இப்படி, பெருக்கிக் கூட்டிக் கழிப்பதை எப்போதெல்லாம் செய்ய வேண்டும். அன்றாடம் செய்ய வேண்டும். தினப்படி வேலைதான் இது. முடிந்தால் நாளொன்றுக்கு இரண்டு மூன்று முறை செய்தாலும் நல்லது. இப்படி ஒரு வாழ்க்கை முறையை ’வகுத்து’ வைத்திருக்கிறது பண்பாடு. அதுவும் ஒரு கணக்குத்தான்!

இதெல்லாம் புறத்திலே இருக்கும் வீட்டில் நிகழ்வதுதானா?

வீடு என்பதற்குத் தமிழில் இன்னொரு பெயர் அகம் அல்லவோ?

அகம் என்றால் மனம் அல்லவோ?

அப்படியானால், மனத்திலும் இந்தக் கணக்கெல்லாம் நிகழும்தானே?

ஆம். நிகழ்கிறது.

மனத்தில் சிந்தனைகள் – எண்ணங்கள் பெருகுகின்றன.

சிதறிக் கிடக்கும் சிந்தனைகளைக் கூட்டுபவன் சிந்தனையாளன் ஆகிறான். (அதாவது, சிந்தனையை ஆளத் தெரிந்தவன்). சிந்தனைகளை அவன் தொகுத்துக் கொள்கிறான். வகைமைப் படுத்துகிறான். கூறு கட்டுகிறான். அப்படிச் செய்யத் தெரியாதவனைத்தான் “உனக்கு கூறு இருக்கா?” என்று வைவது.

தியானம் என்பதே மனதை அன்றாடம் பெருக்கிக் கூட்டும் வேலைதான் என்று ஞானியர் சொல்கிறார்கள். அது ஒரு துப்புறவுப் பணிதான். ஆன்மிகவாதி என்பவன் அகத் துப்புறவுத் தொழிலாளிதான்.

”காதலியின் அழகு” என்று பொருட்படும் “ஹுஸ்னே ஜானா” என்னும் தலைப்பில் 1997-இல் முசப்பர் அலி அவர்கள் இசைப்பேழை ஒன்றை வெளியிட்டார். 13-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சூஃபி ஞானிகளின் கவிதைகள் சிலவற்றுக்கு அவர் இசையமைத்திருந்தார். அதில் மீர் தகீ மீர், நாசிர் அக்பராபாதி, குலி குதுப்ஷா மற்றும் அமீர் குஸ்ரோ ஆகியோரின் கவிதைகல் அதிலிருந்தன. எழுதியவர் யாரென்று தெரியாத பழம்பாடல் ஒன்றும் அதில் இருந்தது. “நிகுரே நிகுரே புகாரோ ஆங்கனுவா ஓ கோரியா நிகுரே” என்னும் அந்தப்  பாடல் “தும்ரி” என்னும் இசை வடிவிலானது. வீடு பெருக்கிக் கொண்டிருக்கும் காதலியை வருணிப்பது அப்பாடலின் கருத்து. இக்காட்சி ஒரு சூஃபிக் குறியீடாகப் பயன்படுத்தப் படுகிறது. இறைவனின் ஒளி தியானிப்போனின் மனத்தைத் தூய்மை செய்வதாக அதனைப் பொருட்படுத்தலாம். துடைப்பம் கொண்டு அக வீட்டைத் தூய்மை செய்யும் வாலைக் குமரி!

பெருக்கிக் கூட்டிய குப்பைகளை எல்லாம் எப்படிக் கழிப்பது? என்றொரு கேள்வி எழுகிறது.

சும்மா கொண்டு போய் ’அந்தண்டை’ போட்டுவிடலாம். தெருவுக்குத் தெரு முக்கில் மாநகராட்சிக் குப்பைத் தொட்டிகள் முன்பெல்லாம் இருந்தன. இப்போது குப்பை சேகரிப்பு வாகனம் வருகிறது. ஆட்கள் வாங்கிக் கொண்டு போகிறார்கள். அப்படிக் கழித்து விடலாம்.

செத்தைக் குப்பைகள் சேர்ந்தால் என்ன செய்கிறோம்? கொளுத்தி விடுகிறோம். அதுவும் ஒரு கழித்தல் முறைதான்.

தமிழில் இச்சொல்லும் அறிவுடன், ஞானத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. அறிவு கற்பித்தலை “அறிவு கொளுத்துதல்” என்று சொல்லும் வழக்கம் தமிழில் உண்டு.

தேவையில்லாத எண்ணங்களை கூட்டிச் சேர்த்துக் கொளுத்தி இல்லாமல் ஆக்கும்போதுதான் உண்மை அறிவு வாய்க்கும் என்று இது சுட்டுகிறது.

இப்பொருளில்தான் சூஃபி ஞானி மவ்லானா ரூமி அவர்கள் “நூறு நூல்களையும் நூறு தாள்களையும் கொளுத்தி விடு” (சத் கிதாபோ சத் வரக் தர் நார் குன்) என்று பாடியுள்ளார்கள.



painting on top

A girl with hookah and broom by Raja Ravi Varma

Monday, November 2, 2020

சிறுந்தொகை?


          எம்.ஃபில் என்று ஆங்கிலத்தில் சுருக்கி அழைக்கப்படும் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புச் சேர்க்கைக்கான நேர்காணலைத் தொலைபேசி வழி நிகழ்த்திக் கொண்டிருந்தேன். பள்ளி ஆசிரியர் ஒருவர் பேசினார்.

            ”உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் எதில் ஆய்வு நிகழ்த்துவீர்கள்?” என்று அனைவரிடமும் கேட்கும் வழக்கமான கேள்விகளுள் ஒன்றை அவரிடமும் கேட்டேன்.

            ”தமிழ்லதான்” என்று சொல்லி அசத்தினார்!

            ”தமிழ் இலக்கிய நெடும்பரப்பில் பல வகையான இலக்கியங்கள் இருக்கின்றன. அவற்றில் எது உங்களுக்குப் பிடிக்கும்?” என்று கேட்டேன். புரியாமல் தடுமாறினார்.

            ”சங்க இலக்கியம்னா பத்துப் பாட்டு எட்டுத் தொகை நூற்கள் இருக்கு. அதுல சிலர் ஆய்வு செய்வாங்க. உதாரணமாக, ’குறுந்தொகையில் தமிழர் பண்பாடு’ங்கற மாதிரி செய்வாங்க. நவீன இலக்கியம்னா நாவல் சிறுகதை கவிதை நாடகம்னு வகைகள் இருக்கு. அதுல ஏதாச்சும் ஒன்ன எடுத்து ஆய்வு செய்வாங்க…” என்கிற போக்கில் மூன்று நான்கு நிமிடங்கள் (’ஈ’யப் பாத்திரத்தைப் புளி போட்டுத் தேய்த்து) விளக்கிவிட்டு மீண்டும் கேட்டேன், “இப்ப சொல்லுங்க உங்களுக்கு எதுல ஆய்வு செய்ய ஆர்வம்?”

            ”குறுந்தொகை” என்று ஒற்றைச் சொல்லில் முத்தாய்ப்பாக விடை வந்து செவிக்குள் விழுந்தது.

            ”மகிழ்ச்சி. குறுந்தொகைல உங்களுக்குப் பிடிச்ச பாடல் ஒன்று சொல்லுங்க” என்றேன்.

            எதிர்பாராத இந்தத் தாக்குதலில் அவர் திக்குமுக்காடிப் போய்விட்டார் என்பது தெரிந்தது. “நீங்க எதுல செய்யச் சொன்னாலும் செய்யலாம்ங்கய்யா” என்று பம்மினார்.

            ”எதுல வேண்டாலும்னா?” என்றேன் எரிச்சலுடன். மிகப் பணிவாகத் தோற்றம் தருகின்ற ஆக அவமரியாதையான விடை இது என்பது பலருக்கும் புரிவதில்லை.

            ”இந்த… குறுந்தொகை நாவலு சிறுந்தொகை அப்டீன்னு சொன்னீங்கள்லய்யா… அதுல நீங்க சொல்றதுல பண்ணீர்லாங்கய்யா” என்றார் அதே அடக்கத்துடன். மடமை காட்டும் பணிவைப் போல் எரிச்சலூட்டுவது பிறிதொன்று உண்டோ?

            ”என்னது… குறுந்தொகை நாவல் அப்புறம் என்னமோ சொன்னீங்களே?” என்றேன்.

            ”சிறுந்தொகை ஐயா” என்றார் மீண்டும்.

            சரிதான். தமிழ்ப் பகைவர்கள் வேறு எங்கோ இல்லை. பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் என்னும் போர்வையில் தமிழ்க் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

            நெடுந்தொகை குறுந்தொகை என்று இலக்கியங்கள் உண்டு. பெருந்தொகை என்று சொற்றொடர் வரலாம். பெருமை + தொகை = பெருந்தொகை எனில் சிறுமை+தொகை = சிறுந்தொகை என்பதுதானே என்று அந்த தமிழாசிரியர் நினைக்கிறார்.

            பெருமை என்பதுடன் வல்லின முதலெழுத்துச் சொற்கள் வருங்கால் இனவெழுத்து மிகுந்து வரும். பெருமை+கடமை = பெருங்கடமை; பெருமை+சினம் = பெருஞ்சினம்;  பெருமை+தலைப்பு = பெருந்தலைப்பு; பெருமை+பண்பு = பெரும்பண்பு. ஆனால் சிறுமை+கடமை = சிறுகடமையே அன்றி சிறுங்கடமை என்று வராது. அப்படித்தான், சிறுதலைப்பு, சிறுபண்பு என்று வருமே அன்றி சிறுந்தலைப்பு, சிறும்பண்பு என்றெல்லாம் வராது.

            காமராசர் பெருந்தலைவர் ஆகலாம்; ஆனால் இரசினி சிறுந்தலைவர் ஆகார்.

            பெருங்காப்பியம் என்பதைப் போல பாவித்துச் சிறுங்காப்பியம் என்று பேசிய பேராசிரியரை யான் அறிவேன்.

            பெரும்பாணாற்றுப்படை என்பதைப் போல் கருதிக்கொண்டு சிறும்பாணாற்றுப்படை என்று எழுதி வாசிக்கப்பட்டதையும் கேட்டிருக்கிறேன்.

            சிறுகாப்பியம், சிறுபாணாற்றுப்படை என்பதே சரி.

            இலக்கண வகுப்பெடுப்பது இவண் நோக்கமன்று.

            அண்மையில் அருமையான ஓவியம் ஒன்றைக் கண்டேன். ஜெர்மனி நாட்டாரான கேப்ரியல் ரிட்டர் வான் மாக்சு என்பாரால் தீட்டப்பட்டது. ஓவியத்தின் உட்பொருள் கருத்துச் சுவை மிக்கது.

            இரண்டு குரங்குகள் (கவிகள்?) நூல் ஒன்றினை எடுத்து வாசிக்க முயல்கின்றன. அதன் சில பக்கங்களைக் கிழித்துப் போட்டிருக்கின்றன. ஒரு குரங்கு தன் கையில் பெருக்காடி (magnifier glass - லென்சு) ஒன்றை வைத்திருக்கிறது. நிறைய வாசித்ததில் அதன் பார்வை சற்றே மழுங்கிவிட்டது போலும். குரங்குகள் இரண்டும் ஒன்றை ஒன்று பார்க்கின்றன. கையில் ஆடி வைத்திருக்கும் குரங்கின் முகம் கடுகடுப்பாக இருக்கிறது. மற்றொரு குரங்கின் கையை அது பிடித்திருக்கிறது. அந்த இரண்டாம் குரங்கு மிகப் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு பெருங்குரங்கைப் பார்க்கிறது. இதுவே அந்த ஓவியம் தரும் காட்சி.



            வான் மாக்சு இவ்வோவியத்திற்கு “The Scholars” (அறிஞர்கள்) என்று  பெயர் சூட்டியிருக்கிறார்!

            எனக்குப் பட்டது, அவர் பொதுவாக வைத்துள்ள பெயருக்கு இரத்தினச் சுருக்கமாக ஒரு பொழிப்புரை செய்ய வேண்டும் என்றால் “நெறியாளரும் ஆய்வாளரும்” என்று சொல்லலாம் போலும்!