Friday, June 30, 2017

அவா ஹவா


தோழர் பேரா.சாதிக் பாட்சா அவர்கள் நடத்திவரும் “செம்மொழித் தமிழ்” மற்றும் “நவீனத் தமிழ்” ஆகிய இலக்கிய ஆய்விதழ்களில் அடியேன் அவ்வப்போது ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவதுண்டு. பக்க வரையறையில் எனக்கு மிகுந்த சுதந்திரம் அளிப்பார். ’இருபத்தைந்து பக்கங்கள் வருகிறது, பரவாயில்லையா?’ என்று கேட்டாலும் சிரித்துக்கொண்டே வாங்கி வெளியிடுவார். கடந்த இரண்டு வருடங்களாக அதில் ஒன்றுமே எழுதாமல் இருந்தேன். இப்போது ஒப்புக்கொண்டு ஒரு கட்டுரைக்கான முயற்சியில் இறங்கியுள்ளேன்.

Related image

மொழியியல் (philology) ஆய்வில் தமிழில் ஒரு சிகரம் என்று சொன்னால் நினைவில் தோன்றுபவர் “மொழிஞாயிறு” என்று போற்றப்படும் ஞா.தேவநேயப் பாவாணர். அன்னார் எழுதிய தமிழர் மதம் என்னும் நூலினைப் பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தேன். நீங்கள் வாசித்திருக்கலாம். அவரது “தமிழ் வரலாறு” என்னும் நூல் தமிழ் மொழியின் வரலாற்றை வேர்ச்சொல்லியல் (etymology) நோக்கில் சொல்கிறது. தமிழ்ச் சொற்கள் தம்முள் பொதிந்து வைத்திருக்கும் ஞானத்தை அறியுந்தோறும் பேருவகையும் இம்மொழியை இறைவன் நமக்கு வழங்கியமைக்கான நன்றிப்பெருக்கும் உள்ளத்தில் பொங்குகின்றன. அந்த அனுபவங்களைச் சிறு சிறு கட்டுரைகளாக உங்களுக்கு விளம்ப விழைகிறேன். இனி, மொழியியலுள் செல்வோம்.

வகர மெய்யெழுத்தின் ஓசையை (”இவ்” என) நாம் உச்சரிக்கும் போது ஏற்படும் வாயின் வடிவத்தை “ஒன்றைக் கவ்வுதலையொத்த வாய்ச்செய்கை நிலை” என்று தேவநேயப் பாவாணர் சொல்கிறார். புரியவில்லை எனில், கண்ணாடி முன் நின்றுகொண்டு நீங்கள் தொடர்ந்து “இவ் இவ் இவ்...” என்று சொல்லிப் பார்த்தால் இதனை விளங்கலாம். அந்த ஓசை பிறக்கும் முறையை “மேல்வாய்ப் பல் கீழுதட்டோடு பொருந்துவதே கவ்வும் நிலையாம்” என்றும் அவர் சொல்கிறார்.

      கவ்வுவது என்றால் பற்றுவது என்று பொருள். அதனடியாக, மூன்று வகையில் பற்றுவதைக் குறிக்க மூன்று சொற்கள் தமிழில் இருக்கின்றன என்னும் விளக்கத்தையும் அவர் தருகிறார்:

      அவ்வுதல் – மனத்தினால் பற்றுதல்.
      கவ்வுதல் – வாயினால் பற்றுதல்.
      வவ்வுதல் – கையினால் பற்றுதல்.

Image result for avvv vadivelu

இவ்விடத்தில் தேவநேயர் தரும் சொல் விளக்கம் ஒன்று என் சிந்தனையை மிகவும் தூண்டிச் செலுத்திற்று:
”அவ் – அவா – அவாவு – ஆவு – ஆவல்”

அவ் என்னும் சொல்லில் இருந்து ஆசையைக் குறிக்கும் அவா மற்றும் ஆவல் ஆகிய சொற்கள் வந்திருக்கின்றன.

அவ்வுதல் என்பது மனத்தினால் பற்றுதல் என்று கண்டோம். பற்று என்றால் ஆசை என்று ஓர் அர்த்தம் இருப்பது அனைவரும் அறிந்ததுதான். மனத்தினால் ஒரு பொருளை எப்படிப் பற்ற முடியும்? ஆசை வைப்பதன் வழியாகத்தானே? எனவே அவ்வுதல் என்றால் அவா (ஆசை) கொள்ளுதல் என்றுதான் பொருள்.

அ என்னும் தமிழின் முதல் எழுத்து பிற மொழிகளில் உள்ள ஹ என்னும் எழுத்துக்கான மாற்று. குறிப்பாக ஹ என்பது சொல்லின் முதல் எழுத்தாக வரும்போது. உதாரணமாக, ஹனுமன், ஹரி, ஹிந்து என்பன அனுமன், அரி, இந்து என்றும், ஹல்வா என்பது அல்வா என்றும், ஹாலிவுட் என்பது ஆலிவுட் என்றும் தமிழில் மாறும். எனவே, அகரம் முதலெழுத்தான சொற்கள் அந்த மொழிகளுக்குப் போனால் ஓரொரு சமயம் ஹ என்னும் எழுத்தாக மாறவும் வழியுண்டு.

இந்த அடிப்படையில், மனப்பற்றான ஆசையைக் குறிக்கத் தமிழில் உள்ள ”அவா” என்னும் சொல் அரபியில் ”ஹவா” என்னும் சொல்லுடன் ஒப்பு நோக்கற்பாலது.

அரபி மொழியில் இரண்டு ’ஹ’கரங்கள் உண்டு. மென்மையான ஹ என்றும் வன்மையான ஹ என்றும் வைத்துக்கொள்ளலாம். அல்லது, மெல்லின ஹ மற்றும் வல்லின ஹ என்றும் சொல்லலாம். ஹ1 மற்றும் ஹ2 என்று கணிதக்குறி போலும் சொல்லலாம். எல்லாம் நம் வசதிக்குத்தான்.

எவ்வொரு மொழியிலும் ஒரே ஒலியின் இரண்டு அல்லது மூன்று மாற்றுகள் (variants) இருந்தால் அவை கால ஓட்டத்தில் தோன்றியவையாக இருக்கும். உதாரணமாக, தமிழில் லகர ஓசைக்கு மேலும் இரண்டு மாற்றுக்கள் இருக்கின்றன. எனவே ல, ள, ழ ஆகிய மூன்று மாற்றொலிகள் உள்ளன. ஒருகாலத்தில் ல மட்டும் இருந்தது. பின்னர் அதிலிருந்து இன்னும் நுட்பமான ள வந்தது. பின்னர் அதனினும் நுட்பமான ழ. முன்னதை விடவும் பின்னதை உச்சரிப்பது பலருக்கும் சிரமமாக இருக்கிறது அல்லவா? இதெல்லாம் படித்தவர்கள் உண்டாக்கிய நுட்பங்கள் போலும். இந்த நியதியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எளிமையிலிருந்து நுட்பமானது பிறந்து வருகிறது. எளிதாக இயல்பாக உச்சரிக்க முடிந்த ஒலியிலிருந்து நுட்பமாக உச்சரிக்க வேண்டிய மாற்றொலி தோன்றி வருகிறது. மொழியை அழகுபடுத்திக்கொள்வதற்காக இதெல்லாம் செய்திருக்கிறார்கள். ல என்பதை மிக எளிதாக எல்லோரும் உச்சரிக்க முடிகிறது. ஆனால் ள, ழ ஆகியவற்றைச் சரியாக உச்சரிக்கப் பயிற்சி தேவைப்படுகிறது. உண்மைதானே?
Image result for tamil zh sound

இந்த நிலை எல்லா மொழிகளுக்கும் பொதுவானது. எனவே, அரபியிலும் ஹ1 என்பதிலிருந்து ஹ2 தோன்றி வந்திருக்க வேண்டும். மேலே நாம் கண்ட ஹவா (அவா, ஆசை) என்னும் சொல் ஹ2 என்னும் வல்லின ஹகரம் கொண்டது. ஹ1 என்னும் மெல்லின ஹகரம் கொண்ட ”ஹவா” என்னும் சொல்லும் அரபியில் இருக்கிறது. அதன் பொருள் காற்று. அதையும் தமிழ்ப்படுத்தினால் அவா என்றுதான் ஆகும்.

காற்று: ஹ1வா; ஆசை: அவா (தமிழ்) – ஹ2வா.

ஹ1வா என்னும் அரபிச் சொல்லிடையில் மேலுமொரு வகர மெய் சேர்த்து இரட்டை அழுத்தம் தந்து (இதனை அரபியில் ஷத் என்பர்) உச்சரித்தால் அது ”ஹவ்வா” என்றாகும். ஹ1வ்வா என்பது ஒரு பெண்பாற் பெயர்ச்சொல். ஆதம் என்னும் முதல் ஆணுக்கு ஜோடியாகப் படைக்கப்பட்ட முதல் பெண்ணின் பெயர் அது.

 ஹவ்வா என்பதைத் தமிழ்ப்படுத்தினால் அவ்வா என்றாகும். அதுவே அவ்வை என்னும் பெண்பாற் பெயர். அவ்வை என்றால் பாட்டியின் தோற்றம் மனக்காட்சியில் வருதல் இயல்பு. ஆனால் அது பெண்களுக்கான பொதுவான பெயர். குறிப்பாகப் பாட்டியைச் சுட்டப் பயன்படுகிறது. சில சமூகங்களில் பாட்டியை அவ்வா என்று கூறும் வழக்குள்ளது.

Related image

ஆதம் – ஹ1வ்வா – ஹ2வா என்னும் மூன்று சொற்களைக் கருதுவோம். அவை முறையே ஆண் – பெண் – அவா என்று பொருட்படுகின்றன.

ஆதம் என்னும் ஆணுக்கு இணையாக ஹவ்வா என்னும் பெண் படைக்கப்பட்டார். ஆதம் ஹவ்வாவைப் பார்த்தார். அதாவது, ஆண் பெண்ணைப் பார்த்தான். ஆதமுக்கு ஹவ்வா மீது ஹவா ஏற்பட்டது. அதாவது, ஆணுக்குப் பெண் மீது அவா (ஆசை, பற்று) உண்டாயிற்று. அது முதலில் அவரின் மனத்தில் உண்டாயிற்று. எனவே அது அவா என்னும் மனப்பற்று ஆகும்.

இது ஆணுக்கு ஜோடியாகப் பெண்ணைப் படைத்ததன் நோக்கமாகவும் இருந்தது என்பதைக் குர்ஆனின் வசனமொன்று காட்டுகிறது: ”அல்லாஹ்தான் உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான்; மேலும், அதிலிருந்தே அதனுடைய துணையைப் படைத்தான்; அதனிடம் அது அமைதி பெறுவதற்காக!” (7:189). எனவே அவ்வை என்னும் தமிழ்ப்பெயரின் பொருளாக அவாவுதற்குரியவள் என்று கொண்டால் இத்திருவசனத்தின் கருத்தை அந்தப் பெயர்ச்சொல்லே பிரதிபலிக்கின்றதாகிறது.

இனி, ‘அவ்’ (மனப்பற்று, அவா) என்பதில் ஆணுக்குப் பெண்ணின் மீது அவா தோன்றும் நிலை இயற்கையானது என்பதால் அதுவே பிற பற்றுக்களை விடவும் முதன்மையானது என்று சொல்ல வேண்டும். இக்கருத்தினைத் திருக்குர்ஆனின் வசனம் ஒன்று நவிலக் காண்கிறோம்: “பெண்கள், பிள்ளைகள், பொன் மற்றும் வெள்ளிப் பெருங்குவியல்கள், உயர் குதிரைகள், கால்நடைகள், வேளாண் நிலங்கள் ஆகியவற்றின் மீதான இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை இம்மை வாழ்வின் சுகப்பொருட்கள். திண்ணமாக, அல்லாஹ்விடமே அழகிய தங்குமிடம் உள்ளது. ” (3:14)

இத்துடன், நபி (ஸல்) அவர்கள், “உங்களின் உலகிலிருந்து பெண்களும் நறுமணமும் எனக்கு விருப்பமாக்கப்பட்டுள்ளன. எனது கண்ணின் குளிர்ச்சி தொழுகையில் ஆக்கப்பட்டுள்ளது” (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி...); பதிவு நூல்: முஸ்தத்ரக் ஹாகிம்; மேற்கோள்: http://hadithanswers.com/three-things-beloved-to-nabi) என்று நவில்வதையும் கவனிக்க வேண்டும்.

மேலும், இன்னொரு ஹதீஸும் இக்கருத்தை வலியுறுத்துகின்றது. நபி (ஸல்...) நவின்றார்கள், “இவ்வுலகம் தற்காலிகச் சுகம் ஆகும். இம்மையின் இன்பங்களில் மிகவும் சிறந்தது ஒழுக்கமுள்ள பெண் (மனைவி)தான்” (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி...); பதிவு நூற்கள்: சஹீஹ் முஸ்லிம்: 1467, இப்னு மாஜா: 1855; மேற்கோள்: https://islamqa.info/en/171295) ”பெண்ணின் பெருந்தக்க யாவுள?” என்று வள்ளுவர் வியந்து கேட்பதும் “காணும் பொருள் யாவினும் இப்பெண்மை இனிதடா!” என்று பாரதி வியந்து சொல்வதும் ஒப்புநோக்கற்பாலன.

ஆணுக்குத் தன் இணையான பெண் மீது உண்டாகும் பற்றை, ஆசையை, அவாவைக் காமம் என்னும் சொல்லால் குறிப்பிடலாம் அல்லவா? கவ்வு என்னும் சொல்லில் இருந்து கிளைத்து உருவாகும் முப்பத்தொரு சொற்களை தேவநேயர் எடுத்துக்காட்டுகிறார். அவற்றுள் காதல் மற்றும் காமம் ஆகிய சொற்களும் உண்டு.

அவ்வுதல் என்பது மனப்பற்று. அதன் பின் கவ்வுதல் என்னும் வாய்ப்பற்று. அதன் பின் வவ்வுதல் என்னும் கைப்பற்று என்னும் வரிசையில் காண, முதலில் அவா என்னும் மனப்பற்று உண்டானது. அது காதல். பின்னர் வாய்ப்பற்றான முத்தமும், அதன் பின் மெய்யுறு புணர்ச்சியும் (கை என்பது இங்கே தொடுவுணர்ச்சிக்கான குறியீடாகிறது என்னும் நிலையில்) ஏற்படுகின்றன. அந்நிலைகள் காமம். அவ்-கவ்-வவ் என்பது அகரமுதலி நிரலுக்கிணங்க உள்ள வரிசைக்கிரமம் என்பதால் இதனை வரிசை மாற்றிப் பிசகாகப் பொருள் கொள்ள முடியாது. இவ்விளக்கம் நபி (ஸல்...) அவர்கள் புணர்ச்சி பற்றி வழிகாட்டிய ஹதீஸ் (அருள்மொழி) ஒன்றின் கருத்தைப் பிரதிபலிக்கின்றது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்...) நவின்றார்கள்: ‘உங்களில் எவரும் தனது மனைவியிடம் விலங்கினைப் போல் தனது (காமத்) தேவையைத் தீர்த்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்கிடையில் முத்தமிடுதல் மற்றும் உரையாடுதல் ஆகிய முன்புணராட்டம் இருக்க வேண்டும்.” (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி…; பதிவு நூல்: முஸ்னத் அல்-ஃபிர்தவ்ஸ் அல்-தைலமி 2/55; மேற்கோள்: www.zawaj.com/articles/kissing-and-foreplay.html

இவ்வாறு, அவ்-கவ்-வவ் என்னும் (Gesticulatory Sounds) வாய்ச்செய்கை ஒலிகளுக்குத் தமிழ் தந்திருக்கும் அர்த்தங்கள் பொது நிலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் அன்பு நிலைகளை விளக்குவதாகவும், குறிப்பாக ஆதம் ஹவ்வா குறித்த பழங்கதையை விளக்குதாகவும் இருக்கின்றன.

Monday, June 26, 2017

சாரா ஜோசஃப் – ஒரு நேர்காணல்

Related image

சாரா ஜோசஃப் இங்கிலாந்து நாட்டவர். நவோமி கேம்ப்பெல் போன்ற விளம்பர மாடல்களை அறிமுகம் செய்த முன்னணி மாடலிங் ஏஜென்சி ஒன்றின் முதலாளியின் மகள். தற்போது உலகின் முதல் இஸ்லாமிய வாழ்முறை (Lifestyle) இதழான “அமல்” (துருக்கிய உச்சரிப்பின்படி EMEL என்று எழுதுகிறார். அரபியில், செயற்பாடு என்று பொருள்.) என்பதன் தலைமை நிர்வாகியாகவும் ஆசிரியராகவும் இருக்கிறார். ஜோர்டானிலும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்திலும் இயங்கி வரும் ராயல் இஸ்லாமிக் ஸ்ட்ரேட்டஜிக் ஸ்டடீஸ் என்னும் அமைப்பால் உலகின் ஐந்நூறு ஆற்றல்மிகு முஸ்லிம்கள் என்னும் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். சமயங்களுக்கிடையிலான உரையாடலுக்காகவும் பெண்ணுரிமைக் குரலுக்காகவும் 2004-ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசவையின் OBE – Most Excellent Order of the British Empire என்னும் விருதினைப் பெற்றுள்ளார். தனது பதினாறு வயதில் இஸ்லாத்தைத் தழுவிய சாரா ஜோசஃப் பின்னர் கிங்ஸ் கல்லூரியில் இறையியல் மற்றும் சமயவியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றார். அவரின் கணவர் மஹ்மூதல் ரஷீத் ஒரு மனித உரிமை வழக்கறிஞர்.  Association of Muslim Lawyers (AML) என்னும் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். அவரே அமல் இதழை வெளியிடுகிறார். சாரா ஜோசஃப் தற்போது லண்டனில் தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசிக்கிறார்.

(அமல் இதழில் 11, டிசம்பர் 2010-இல் வெளியான நேர்காணலின் தமிழாக்கம் இது)
Image result for sarah joseph emel magazine

உங்கள் சகோதரின் மாற்றத்தைத் தொடர்ந்து நீங்களும் உங்கள் பதினாறு வயதில் இஸ்லாத்திற்கு மாறினீர்கள் என்று அறிகிறோம். உங்களின் சகோதரர் இஸ்லாத்திற்கு மாறியதைப் பற்றியும் அது உங்களின் மாற்றத்தை எவ்வாறு பாதித்தது என்பதைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்.

      நானொரு பக்தியுள்ள ரோமன் கத்தோலிக்காக இருந்தேன். என் சகோதரர் ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலித்தார். அவரைத் திருமணம் செய்துகொள்வதற்காக அவன் இஸ்லாத்திற்கு மாறினார். அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, ஆனால் எனது வாழ்க்கையை அது மிக ஆழமாக பாதித்தது. அல்லாஹ் என்னைத் தன் பாதையில் செலுத்தினான், இஸ்லாத்தைப் பார்க்கச் செய்தான். எனது சகோதரரின் மனைவியின் மதத்தைப் பற்றி என் அம்மா என்னிடம் சொன்ன முதல் விசயம், “சரிதான், உனக்குத் தெரியுமா, ஏசுவே முஸ்லிமான ஒரு கன்னிப் பெண்ணுக்குத்தான் பிறந்தார்”. அம்மா சொன்னதை நான் அப்போது நம்பவில்லைதான். ஆனால் பின்பொரு நூலகத்திற்குப் போனபோது அங்கே குர்ஆன் இருந்ததைக் கண்டேன். அதன் பின்னிணைப்பில் “கன்னி மைந்தன் ஏசு” என்பதைத் தேடினேன். அதுவே இஸ்லாத்துடன் எனது முதல் தொடர்பு. பின்னர் கத்தோலிக் திருச்சபை மீதான எனது நம்பிக்கையை இழந்தேன். இஸ்லாத்தைப் பற்றிய என் படிப்பிற்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால் எனது பயணத்தால் அது நடந்தது. அது ஓர் ஆழமான இழப்பு, அதிக நோவு தந்த ஒன்று. எனினும் நான் கடவுளின் மீதான நம்பிக்கையை இழந்துவிடவில்லை. அது தொடர்ந்தது. இஸ்லாத்தைப் பற்றித் தொடர்ந்து பயின்றேன். அது மிகவும் ஆர்வமூட்டிற்று. நான் கேள்விகள் தொடுத்திருந்தேன்; அது விடைகளைக் கொண்டுவந்தது. நேர்மையாகச் சொல்வதெனில், நான் எப்போதுமே கடவுளுக்கு என்னைத் தந்து அர்ப்பணமாகிவிட வேண்டும் என்றே நினைத்திருந்தேன். என் ஞாபகம் சரி எனில், ஒரு சிறுமி சஜ்தா (சிரந்தாழ் வணக்கம்) செய்வதைப் பார்த்த ஒரு கணத்தில்தான் நான் மனதளவில் தெரிந்து வைத்திருந்ததன் புற வெளிப்பாடு அதுவே என்றும் இஸ்லாம் என்பது இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்தலே என்றும் உணர்ந்துகொண்டேன். அத்தருணத்திலேயே இஸ்லாத்தைத் தழுவ முடிவு செய்தேன்.

      கிறித்துவத்தை அல்லது கத்தோலிக்கத்தை விட்டும் உங்களைத் திருப்பிய குறிப்பிட்ட விசயம் எது?

      எனது கத்தோலிக்க நம்பிக்கையை நான் கேள்வி கேட்கும்படிச் செய்த ஒரு பெரிய காரணம் என்றால் அது ”போப்பின் பிழையின்மை” என்பதே. போப்பின் ஆட்சிப்பகுதிகள் அச்சுறுத்தலுக்கு ஆளானபோதுதான் அக்கோட்பாடு உதித்தது, பத்தொன்பதாம் நூற்றாண்டில், 1860-70-களில். பின்னர் போப் ’தப்பில் விழாத தன்மையர்’ ஆனார். அவருடைய அதிகாரம் அச்சுறுத்தப்பட்டதை என்னால் ஏற்க முடியவில்லை. திருச்சபையில் பாவமாகிய இந்த விதி 19-ஆம் நூற்றண்டில் ஓர் அரசியல் சூழலினால் உருவாயிற்று என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. அது என் நம்பிக்கையை முழுவதுமாகக் குலைத்துவிட்டது. பிற விசயங்களும் இருந்தன, உதாரணமாக நிசியாவின் திருக்கூட்டம் (Council of Nicea) – அதில் நாற்பது சுவிசேஷங்கள் ஒப்படைக்கப்பட்டு வெறுமனே நான்குதான் ஏற்கப்பட்டன. அது எனக்கு ஜீரணிக்க மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், போப் ‘தப்பில் விழாத தன்மையர்’ என்பதுதான் அதனை நொறுக்கிவிட்டது. வேறு சில உணர்தல்களும் இருந்தன என்று அனுமானிக்கிறேன். ‘முதற்பாவம்’ என்பதை நான் ஒருபோதும் ஏற்கவில்லை. சிலுவைப்பாட்டை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கான ஒருவித முன் யோசனையாகவே அது தேவைப்படுகிறது என்று நான் உணர்ந்திருந்தேன். எனவே, இவை எல்லாம் ஒருசேர வந்தபோது எனது நம்பிக்கையை நான் இழந்தேன்.
Image result for council of nicea
First council of Nicea.

      இறைத்தூதர்கள் அல்லது தூதுத்துவம் பற்றிக் கத்தோலிக் மற்றும் இஸ்லாத்திற்கு இடையிலான வேறுபாடுகள் என்ன? முஸ்லிமாவதற்கான உங்களின் முடிவை அது எப்படி பாதித்தது?

      முஸ்லிம்கள் ஆதம் (அலை...) முதல் நபி (ஸல்...) வரையிலான இறைத்தூதர்களின் முழுமையான பாரம்பரியத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், பெயர் தெரிந்த மற்றும் தெரியாத அனைத்து இறைத்தூதர்கள் மீதும். நாம் பெயரிடப்பட்ட இருபத்தைந்து இறைத்தூதர்களை மட்டுமே அறிகிறோம், ஆனால் மொத்தம் 1,24,000 இறைத்தூதர்கள் உண்டு. அது ஓர் இடையறாத திருப்பணித் தொடர்ச்சி. எனவே அனைத்து மக்களுக்கும் இறைத்தூதர்கள் உண்டு. இறைத்தூதர்கள் பற்றிய இஸ்லாமியப் பார்வை எப்படி எனது முந்தைய கிறித்துவ நம்பிக்கையுடன் ஒத்துப்போகிறது என்பதல்ல, மாறாக அது எப்படியெல்லாம் வேறுபடுகிறது என்பதே எனது ஆர்வத்தைத் தூண்டுகிறது. எனவே, ஆதம் (அலை...) மற்றும் அவரது மனைவி ஹவ்வா ஆகியோரது கதையைப்  பார்த்தீர்கள் என்றால், வீழ்ச்சிக்கு அவ்விருவருமே பொறுப்பாளிகளாக இருக்கிறார்கள். ஆனால் திண்ணமாக, கிறித்துவத்தில் ஏவாள் மட்டுமே பொறுப்பாளி. இஸ்லாத்தில், அவர்கள் இறைவனால் மன்னிக்கவும் படுகிறார்கள், எனவே தந்தையரின் பாவங்களைப் பிள்ளைகள் சுவீகரிப்பது என்பது இல்லை என்றாகிறது. அதாவது, நான் அதாம் மற்றும் ஏவாளின் பாவத்தைச் சுவீகரிக்கவில்லை. ஏனெனில், இறைவன், அவனது கருணையால் மன்னிக்கிறான். பாவமன்னிப்பு என்பது இறைவனின் ரஹ்மத் (கருணை) மூலமாக என்பதை இது காட்டுகிறது.
      மேலும், நூஹ் (அலை...) போன்றோரின் கதைகளும்கூட. கிறித்துவ மரபில் அவருக்கு ஒரு குடும்பம் இருக்கிறது, அக்குடும்பமே தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆனால் இஸ்லாமியப் பிரதியில், அவர் போதிக்கிறார். இதில் வேறுபாடு என்னவென்றால், கிறித்துவப் பிரதியில் மக்கள் மூழ்கப்போகிறார்கள், துயர்படப் போகிறார்கள். ஆனால், இஸ்லாமியப் பிரதியில் அம்மக்களுக்கு ஒரு வாய்ப்பு அருளப்படுகிறது. “வாருங்கள்” என்று நோவா அவர்களை அழைக்கிறார். ஆனால் கிறித்துவத்தில் அது வெறுமனே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டோர் மாத்திரமே, அவர்களின் தேர்வு அல்ல, ஆனால் இறைவனின் முடிவு மட்டுமே. இறைத்தூதர்கள் மீதான முஸ்லிம் கண்ணோட்டங்களை நான் படித்துக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தபோது இந்தச் சிறு வேறுபாடுகள்தாம் என்னை மிகவும் ஆழமாக பாதித்தன. இஸ்லாமியச் செய்தியில் இறைத்தூதர்களின் நிகழ்வுகளும் கதைகளும் மிக ஆழமானவையும் உண்மையில் குர்ஆனின் அடிப்படைக்கு மிக அவசியமானவையும் ஆகும்.

Image result for sarah joseph emel magazine

      உங்கள் அம்மாவின் மாடலிங் ஏஜன்சியில் அவரின் அருகில் ஒரு சிறுமியாக வளர்ந்ததில், பெண்களை ஒரு காட்சிப்பொருளாக்கும் வாழ்முறையை முன்னெடுப்பது என்பது கத்தோலிக்க நம்பிக்கைக்கு அல்லது பொதுவாக மதத்திற்கு முரண்பட்டது என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா?
      அந்த வாழ்முறை ஒருபோதும் எனக்கானதல்ல என்றே நினைக்கிறேன். அது எப்போதுமே நான் பார்த்து, அது சரியில்லை என்று எண்ணிய ஒன்றாகவே இருந்தது. அது என்னுடைய ஃபித்ரத்தாக (சுபாவமாக), நல்லதை நோக்கிய இயற்கையான சாய்வாக இருக்கலாம். அந்த வாழ்முறை சரியல்ல என்பதை மிக இயல்பாகவே நான் உணர்ந்தேன். என் அன்னை தனி நபராக ஐந்து பிள்ளைகளை வளர்த்து வந்தார். அவர் மிகவும் நடைமுறைத் தன்மை கொண்டவர். உண்மையில் அவர் ஒருபோதும் முழுமையான மாடலிங் வணிகத்தில் ஈடுபடவில்லை. எனவே அவரில் மிக அதிகமாகவே இயல்புத்தன்மை இருந்ததைப் பார்த்திருக்கிறேன். எனது பாட்டியிடம்கூட அந்தத் தன்மையை நான் கண்டிருக்கிறேன். அப்படி இருந்தும், ஏதோ ஒரு பிசகு இருப்பதாகவே உணர்ந்தேன். குறிப்பாக, எனது எட்டாம் வயதில், அதை என்னால் முழுமையாக விவரிக்க முடியவில்லை, எனது சின்னஞ்சிறு பிராயத்தில் இருந்தே, பெண்களைக் காட்சிப் பொருளாக்குவது எனக்குப் பெரிதும் சங்கடமாக இருந்தது.

Related image
      நீங்கள் வளர்ந்து வந்த சூழலைக் கருத, உங்களின் இப்போதைய ஆடைத் தேர்வு ஒரு முரணாகப் பார்க்கப்படலாம். முக்காடு அணிவதற்கான உங்கள் முடிவை தீர்மானித்தது எது?
      தொழுகை. முக்காடு அணிவது என்பது எனக்கு மிகவும் கடினமான முடிவாக இருந்தது. ஏனெனில் என் குடும்பம் அதனை எதிர்த்தது. முக்காடு மட்டும் இல்லை எனில் முஸ்லிம் ஆவதற்கான எனது முடிவு எளிமையானதாகவும் இலகுவானதாகவும் இருந்திருக்கும். ஆங்கிலேய மரபில் நீங்கள் உங்கள் மதத்தைக் கையில் அணிவதில்லை, தலை அணிவது ஒருபக்கம் இருக்கட்டும். உங்கள் மதத்தன்மையை நீங்கள் பொதுவெளியில் காட்டுவதில்லை. மதமும் அரசியலும் இரண்டு வேறுபட்ட விஷயங்களாகவே வைக்கப்படுகின்றன. எனவே இக்கோலத்தில் வெளியே செல்வது என்பது எனது பாட்டியின் பார்வையிலேயே என்னை ஒரு அன்னியளாகக் காட்டிற்று. எனது அம்மாவுக்கோ, நான் பெண் விடுதலையைத் தொலைத்து விட்டதாக இருந்தது. நான் பின்னடைந்துவிட்டேன். எனது வாழ்க்கையை உருவாக்கும் சாத்தியமுள்ள அனைத்து வாய்ப்புக்களையும் நான் வெட்டி எறிந்துகொண்டிருந்தேன் என்றும் நான் விலகி ஓடிக்கொண்டிருப்பதாகவுமே அவர்கள் பார்த்தனர். பெண்ணைக் காட்சிப்பொருளாக்குவதை ஒருவித நவீன, பகுத்தறிவுச் சார்புலத்தில் எதிர்கொள்வதற்கான எனது வழி இது என்று நான் விளக்க நீண்ட காலம் ஆனது. ஆனால் அனைத்துக்கும் மேலாக என்னை முக்காடு அணிய வைத்ததும் தொடர்ந்து அணிய வைப்பதும் தொழுகைதான். நான் ஓர் எல்லையில் ஊசாடிக்கொண்டிருந்தேன், கடவுளே தயவு செய்து இந்தப் பாரத்தை என்னை விட்டு நீக்கு என்று கேட்டுக்கொண்டிருந்தேன். நான் தொழும்போதும் குர்ஆனைத் திறக்கும்போதும் திரையணிதல் பற்றிய வசனத்தை அவன் எனக்குக் காட்டுவான். எனவே நான் தொடர்ந்து அணிந்து வருகிறேன்.

      நீங்கள் இஸ்லாத்தைத் தழுவியது உங்கள் சகோதரரை எப்படி பாதித்தது?

      அது அவரை பாதித்ததாகவே நான் காணவில்லை. அதனை ஒரு விசித்திரமான நிகழ்வாகவே அவர் பார்க்கிறார். ஏனெனில் அவரது வாழ்வில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாத ஒன்று எனது வாழ்வையே மாற்றிவிட்டது. இப்போது அவர் தனது முஸ்லிம் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு முஸ்லிமல்லாத ஜப்பானியப் பெண் ஒருவரின் கணவராகிவிட்டார். அவர் ஜப்பானில் வசிக்கிறார், நான் இங்கிலாந்தில் வசிக்கிறேன். அவர் இங்கிருந்திருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த வருடங்களில் பெரிதாக வேறு எதுவும் எமக்குள் இல்லை.
      ஹிஜாப் அணிந்த ஒரு பிரிட்டிஷ் முஸ்லிமாக இங்கிலாந்தில் எப்போதாவது நீங்கள் செனோஃபொபியாவுக்கு (அன்னிய வெறுப்புக்கு) ஆளானதுண்டா?
      நானொரு சாதாரண ஆங்கில வெள்ளைச் சிறுமி என்னும் நிலையிலிருந்து ஒரு ’பாக்கி’யாக மாறியவள். 1988-இல் நான் முதன்முதலில் முக்காடு அணியத் தொடங்கியபோது முஸ்லிம் பெண்கள் பலரும் அதனை அணிந்திருக்கவில்லை; அது ஒரு மத அடையாளமாகவும் பார்க்கப்படவில்லை. மக்கள் அதனை மதம் என்று புரியவில்லை. அது ஓர் இன அடையாளமாகப் பார்க்கப்பட்டது. எனவே நானொரு ’பாக்கி’ போல் தோன்றினேன். எனவே நான் இனவாதத்தை எதிர்கொண்டேன், மதவாதத்தை அல்ல. பதினேழு வயதுக்கு அது மிகவும் சங்கடமான அனுபவம், நீங்கள் ஒரு சராசரியான, அழகான, தனது கூந்தலுக்கு நேர்மறையான கவனத்தை ஈர்க்குமொரு வெள்ளைப் பெண்ணாக இருந்ததை விட்டு திடீரென்று இனவாத எதிர்ப்புக்குரல்களைப் பெறுபவளாக ஆவது. அது மிகவும் வலி தருவதாகவும் கடினமாகவும் இருந்தது, இக்கட்டான நிலை என்பதைச் சொல்லத் தேவையில்லை. எனினும், நான் நேர்மையாகச் சொல்ல முடியும், நான் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவள் மற்றும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இதனை அணிகின்றதால் எனக்கு மிகவும் குறைந்தபட்ச பிரச்சனைகளே இருந்தன. சில பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறேன், ஆமாம். இராக் போரின்போது, குறிப்பாக இராக்கின்மீது குண்டு வீசுவதன் பதற்றம் இருந்தபோது, போதையேறிய சில வாலிபர்கள் ரயிலில் ஏறிக்கொண்டு “புஷ் சரியாகவே சொன்னார் ஃப---ங் முஸ்லிம்ஸ், ஃப---ங் முஸ்லிம்ஸ்” என்று குதூகலமாகக் கத்தினார்கள். அந்நிலையை அவர்கள் கையாள்வது அப்படித்தான் இருந்தது. ”நீ கொலை செய்யப்பட வேண்டும். ஒரு குடிகாரனால் சுடப்பட வேண்டும்” என்பதையும் கேட்டிருக்கிறேன். மக்கள் குடித்திருக்கும்போது மிகவும் கொட்டித் தீர்க்க நினைக்கிறார்கள். துர்லபமாக, நான் இருமுறை அப்படி நடத்தப்பட்டேன், ஆனால் மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். என்ன இருந்தாலும், ப்ரிட்டன் ஒரு சுதந்திரமான, மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. அதில் எப்போதுமே விசித்திரமான மக்கள் நிரம்பியிருக்கிறார்கள். எனவே எல்லாம் சரியாகிவிடுகிறது.

      கல்கத்தாவின் அன்னை தெரசா உங்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் என்ன? இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அவரைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்?
      அவர் ஒரு முன்மாதிரி. அவர் அப்படியொரு அழகிய மனிதப்பிறவி. தொண்டும் பக்தியும் மிக்க அந்த வாழ்வும் அவரது நம்பிக்கை எப்படி அவரை அத்தகைய சமூக நீதியின் வாழ்வுக்கு இட்டுச் சென்றது என்பதுமே போதுமானது. அது சுயநலமான ஒரு நம்பிக்கை அல்ல, எனக்கான என் வாழ்வுக்கான என் இறைதியானத்திற்கான நம்பிக்கை. அது ஒரு தன்னலமற்ற நம்பிக்கை. அதில் அவர் தனது வாழ்வையே பிறருக்குத் தொண்டு புரிவதில் அர்ப்பணித்தார். மதம் என்பது அமைதியையும் அழகையும் இறைநம்பிக்கையில் நிறைவையும் நான் அனுபவிப்பது என்பதல்ல, ஆனால் அதை நான் அனுபவித்தபோதும் அது என்னை சமூக நீதி மற்றும் சமூகச் செயல்பாட்டிற்குச் செலுத்த வேண்டும் என்ற எனது நம்பிக்கையை அவரிடம் கண்டேன்.

Image result for sarah joseph emel magazine
      ”முஸ்லிம் வாழ்முறை” (Muslim Lifestyle) என்னும் கோட்பாட்டுடன் உங்கள் இதழான ”அமல்”-ஐ நீங்கள் பதிப்பிக்க உங்களைத் தூண்டியது எது?

      இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை முறை என்று காட்ட நாங்கள் விரும்பினோம். முன்பும் காட்டப்பட்டது போலும் இப்போது காட்டப்படுவது போலும் அது வெறுமனே அரசியல் பற்றியதோ அல்லது அத்துடன் மதச் சடங்குகள் பற்றியதோ, அத்தகைய இரு பரிமாண வழமை பிம்பம் கொண்டதொரு நம்பிக்கையோ அல்ல என்பதை உலகிற்குக் காட்ட நாங்கள் விரும்பினோம். மேலும், அன்றாட வாழ்வில் ஓர் அழகு உள்ளது என்பதையும். எனவே, உதாரணமாக, அமல் இதழின் முகப்பு அட்டை பிரபலங்களின் நேர்காணலைக் காண்பிக்கிறது, பெருஞ் செய்திகளைச் சொல்கிறது, நிஜ வாழ்வுகளை மற்றும் கல்வி உடல்நலம் வணிகம் ஆகியவற்றைச் சொல்கிறது. மேலும் அது வாழ்முறைக் கூறுகளை – உள்வீட்டியல், தோட்டங்கள், ஃபேஷன் முதலியவற்றைப் பேசுகிறது. இந்தப் புலனங்கள் எல்லாம் நமது வாழ்வின் பகுதிகள். நாம் அனைவருமே ஆடை உடுத்துகிறோம், நம் அனைவருக்குமே வீடுகள் உள்ளன, நாம் தோட்டங்கள் வைத்திருக்கிறோம், உண்மையில் இந்த பின்னைத் தொழிற்சாலை மயமான நவீனச் சமூகத்தில் இவையெல்லாம் நமது வாழ்வின் பெரும் பகுதிகளாகிவிட்டன. அவை நமது வாழ்வின் செம்பாகம். எனவே நாம் அவற்றை நமது இறைதியானத்திற்கு அருகில் கொண்டுவருவோம் எனில் நமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் இறைதியானத்திற்கு அருகில் கொண்டு வருபவர்கள் ஆவோம். உதாரணமாக, உங்களுக்கொரு தோட்டம் இருந்து, அதிலே நீங்கள் ஒரு நீர்நிலையை வைத்தால், ஜன்னத் (சொர்க்கம்) பற்றிக் குர்ஆன் சொல்வதை நீங்கள் ஒருவேளை ஞாபகம் செய்யக்கூடும்: ”அடியில் நதிகள் பாய்ந்திருக்கும் தோட்டங்கள்”. அல்லது உங்கள் வீட்டில் ஓர் உணவு மேஜை வைத்திருந்தால் அது வெறும் மேஜை மட்டுமன்று, குழுமி ஒன்றாக உண்பதை உங்களுக்கு நினைவூட்டும் பொருளாகும். ஏனெனில் இங்கே மேற்கில் எல்லோரும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன் அமர்ந்து உண்பது பழக்கமாகியிருக்கிறது. இது ஒவ்வொருவரையும் குடும்பத்தை விட்டே அன்னியமாக்கிவிட்டது. எனவே அது குடும்பத்தையும் சமூகத்தையும் நினைத்துக்கொள்ள ஏதுவாகும். நேர்மறை உண்மைகள் என்றொரு கோட்பாடு வைத்திருக்கிறோம். அதன்படி ஒவ்வொரு கட்டுரையிலும், அது எதைப் பற்றியதாக இருந்தாலும், குறைந்தது ஒரு நேர்மறை உண்மையாவது இருக்கும். உதாரணமாக, வாசனை மெழுகுபத்திகளைப் பற்றிய கட்டுரை எனில் அது நறுமணம் என்பது சதக்கா (தர்மம்) என்று நபி சொன்ன கருத்தை நினைவூட்டும் என்பதனால்தான். எனவே, அது வாழ்முறை, ஆனால் தன் பின்னணியில் சிந்தனை கொண்ட ஒரு வாழ்முறை. இந்தப் புலனங்கள் மக்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகிறது என்றறிந்ததால் இப்படிச் செய்கிறோம்.

      உங்கள் அம்மாவுடன் அவருடைய வணிகத்தில் நீங்கள் இருந்து பெற்ற அனுபவங்கள் உமது இதழின் வெற்றிக்கு உதவியிருக்கிறதா?

      பிறந்து முக்கால் மாதக் குழந்தையாக நான் இருக்கும்போதே எனது அம்மா தனது மாடலிங் ஏஜென்சியில் தொலைப்பேசியில் வேலையாக இருந்தார் என்பதைக் கருத, அப்படியொரு வாழ்முறையை ஏற்கின்ற, வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணை, ஐந்து பிள்ளைகளை வளர்த்துக்கொண்டே இதனைச் செய்ய முடிந்த ஒரு துணிச்சல்காரப் பெண்ணை எனக்கு அது காட்டியது. அது மிக அதிகமான தன்னம்பிக்கையை எனக்கு ஊட்டியது. அவர் ஒரு செம்மைவாதி. நானுமோர் செம்மைவாதி. விஷயங்கள் மிக நேர்த்தியாக முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். அமல் பத்திரிகையின் சிறப்புத் தன்மைகளுள் ஒன்று அதில் ஒவ்வொரு புலனமும் மிக அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கும். மிக உயர்ந்த தயாரிப்பு மதிப்புகள் வைத்திருக்கிறோம். எனவே சில கூறுகள் என் மீது அவரின் தாக்கத்தால் விளைந்தவை என்பதில் ஐயமில்லை.

Image result for sarah joseph emel magazine
Introducing "Emel" to Prince Charles.

      இஸ்லாமோஃபோபியா (இஸ்லாம் குறித்த அச்சம்) பற்றி உங்கள் கருத்து என்ன? மேற்கில் உயர்ந்து வரும் இந்த அச்சத்தைக் களைய முஸ்லிம்கள் செய்ய வேண்டிய சிறந்த அணுகுமுறை என்று எதனைக் கூறுவீர்கள்?

      அது வளர்ந்து வருகின்றதொரு பிரச்சனைதான். நாம் அதை உதாசீனப்படுத்த முடியாது. இருந்தாலும், அதே நேரம், நாம் வன்முறைக்கு எதிரானவர்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் சொல்லி முதலில் நாம் தற்காப்பாக எதிர்வினை ஆற்றினால், நாம் வெறுமனே “எதிர்மறை” மக்களாக ஆகிவிடுவோம் என்று நினைக்கிறேன். அது நிஹிலிசம் (மறுப்பியல்) என்ற நிலையிலேயே நின்றுவிடும். நாம் எதற்கானவர்கள் என்பதை நாம் சொல்லியாக வேண்டும். நாம் நீதிக்கானவர்கள், சுற்றுச்சூழலைப் பேணுதலுக்கானவர்கள், நன்மைக்கானவர்கள், அழகிற்கானவர்கள். நமது கட்டுக்கு வெளியே உள்ள உலகளாவிய பிரச்சனை ஒவ்வொன்றுக்கும் நாம் எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்காமல் நம்மை நாம் தெளிவாக்கிக்கொள்ள வேண்டும். ஏதோ ஓர் அசம்பாவிதம் நடக்கிறது. உடனே நாம் எதிர்வினை ஆற்றுகிறோம். இன்னொரு அசம்பாவிதம், அதற்கும் நம் எதிர்வினை. இப்படி யோசனை இன்றிப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கான குற்றவுணர்வு நம்மிடம் தேய்கிறது, ஆனால் எதிர்வினை ஆற்றுவதன் மூலம் நாம் ஒருவகையில் அதனுடன் நம்மைப் பிணைத்துக்கொள்கிறோம். நமது திட்டம் அல்லாத ஏதோவொரு பெருந்திட்டத்திற்கு நாமெல்லாம் பகடைகளாக அல்லது ஆட்டிவைக்கப்படும் பாவைகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். ”அமல்” குழுவில் நாங்கள் நான்கு “C”-க்கள் வைத்திருக்கிறோம்: தன்னம்பிக்கை (Confidence), பங்களிப்பு (Contribution), பொதுநலம் (Common good), மற்றும் நற்தொடர்பு (Connectivity). நாம் தன்னம்பிக்கையை முன்னெடுக்க வேண்டும். நம் மீதே நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். ஏனெனில், நம்பிக்கையாளர்களே சமூகத்திற்குச் சிறப்பான முறையில் பங்களிப்பாற்ற முடியும். அது பொதுநலத்திற்கான பங்களிப்பாக அமையும். நபி (ஸல்...) அவர்கள் அகில உலகிற்குமோர் அருட்கொடையாக வந்தார்கள், மனிதகுலம் முழுமைக்கும், முஸ்லிம்களுக்கு மட்டும் என்றல்ல. எனவே, நற்தொடர்பு என்பது, மக்களைக் கதைகளுடன் இணைப்பது போல, உலக நாடுகளை எல்லாம் இணைப்பது போல, மக்களை இறைவனுடன் இணைப்பது போல. நமது அன்றாடக் கிடைமட்ட வாழ்க்கை, நமது பணி, நமது தொழில்களும் குடும்பங்களும் ஆகியவற்றைத் தாண்டி நமக்கு ஒரு செங்குத்தான வேர்ப்பிடிப்புத் தேவை. அது, இறைவனுடன் நமக்குள்ள உறவுதான்.   

      முஸ்லிமல்லாதாருக்கு நபி முஹம்மது பற்றி நீங்கள் தரும் விவரிப்பு என்ன?

      அது அந்த நபரைச் சார்ந்தது. எனக்கு அவர் மனிதகுலத்துக்கே அருளாக வந்தவர். அவர் ஒரு கசையாகவோ அல்லது ஒரு சர்வாதிகாரியாகவோ அல்லது ஒரு பேரச்சமாகவோ வரவில்லை. மனிதகுலம் முழுமைக்கும் அவர் ஓர் அருளாகவே வந்தார். அந்தச் செய்திதான் நாம் வெளிப்படுத்த வேண்டியது. அனைவருக்கும் நீதி என்பதே அவரது வாழ்வும் வாக்குமாக இருந்தது. நாம் இன்னமும் அடைய முனைகின்ற மிக முக்கியமான செய்தி அதுதான் என்று நினைக்கிறேன். அவர் வெறுமனே ஒரு முஸ்லிம் தீர்க்கதரிசி மட்டுமல்ல. அவர் அனைவருக்காகவும் வந்தவர்.

      இன்று நீங்கள் நபி முஹம்மதைச் சந்திக்க நேர்ந்தால், அவரிடம் என்ன கேட்பீர்கள்?

      நல்லது. நான் பேச்சற்றுவிடுவேன் என்று நினைக்கிறேன். ஒருவேளை எனது கேள்வி இதுவாக இருக்கலாம்: “முஸ்லிம்களில் உள்ள வெறுப்பையும் கோபத்தையும், அவை வளர்ந்து மிக அழகற்றதாகி வருகிறதே, அவற்றை நீங்கள் எப்படி ஆற்றுவீர்கள்? தாம் உங்களை நேசிப்பதாகவும் அறிந்திருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் அவர்கள் மிக மிக மிகக் கோபமாக இருக்கிறார்கள். அதனை நாம் ஆற்றுவது எப்படி? நாம் என்ன செய்யலாம்?”.



Sunday, June 25, 2017

திறக்கும் இன்பம்

Image result for child eating

புனித மாதத்தின்
கடைசி நோன்புத் திறப்பு

மதியத்திலிருந்தே
வரத்தொடங்கிவிட்டன
வாழ்த்துச் செய்திகள்

இன்னும் ஐந்து நிமிடங்களே
இருக்கும் நிலையில்
மேசையில் அமர்கிறோம்
தெளிந்த முகங்களுடன்

முதல் நாளில் எப்படி இருந்தாய்
சோர்வுடன் இறைஞ்சியவனாக
ஒரு கும்பிடும் பூச்சியைப் போல்

போகப் போக என்னாயிற்று?
வழமை உன்னை ஏமாற்றுகிறது

இந்தத் தெளிவு அன்றேன் இல்லை?
அல்லது
அன்றின் சோர்வு இன்றேன் இல்லை?

மனனமிட்ட வரிகளை ஒப்பிக்கின்றாய்
பிரார்த்தனை செய்வதாய்

உன் மனதில் கிளர்ந்துள்ளதை மட்டும்
நீ கேட்டுவிட்டால்
எத்துனை நேர்மையாய் இருக்கும் அது

பேரீத்தங் கனி சுவைத்து
மண்ணில் குளிர்ந்த நீரருந்தி
கண்களை மூடிக்கொள்ளும்போது
நீ காண்பதுதான் என்ன?

“தாகம் தணிந்துவிட்டது
நரம்புகள் நனைந்துவிட்டன
அல்லாஹ் நாடினால்
நற்கூலி உறுதியாகிவிட்டது”
என்னும் பிரார்த்தனையை முணுமுணுக்கிறாய்

உனக்குத் தெரிந்த ஞானச் செய்திதானே
அவனே நற்கூலி ஆகிறான் என்பது?

நோன்பு திறத்தலின் இன்பம் என்று
நவிலப்பட்டதன் உட்பொருள் என்ன?

ஒரு மின்னல் போல் வெளிச்சமிடுகிறது
ரூமியின் தந்தையைப் பற்றி
கோல்மன் பார்க்ஸ் எழுதுமொரு பத்தி,
அதிலொரு வரி:
“தேகத்தை போஷிப்பதே
ஆன்மாவைப் போஷிக்கிறது”

யா றப்பீ (என் போஷகனே!)
என்று கதறுகின்றது உன் உள்மனம்

நோன்பு திறத்தலின் இன்பம்
என்னவென்பதை அறிவாய் நீ
முலையுண்ணுமொரு குழந்தையின்
ஞானம் அது

நாளெல்லாம் நோன்பிருந்து
உடலுக்கு அப்பால்
உன் ஆன்மா தேடித் தவித்ததை
உன் உடலில் அடைந்துகொள்வது அது




வலது கையால் எழுதவில்லை


இந்தக் கல்வி ஆண்டுக்காகக் கல்லூரி திறந்ததும் வழக்கம்போல ஆசிரிய மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. NLP (Neuro-Linguistic Programming – நரம்பிய மொழிபியல் நிரலாக்கம்) என்னும் அணுகுமுறையில் வல்லுநரான திரு.தட்சிணாமூர்த்தி அந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக வந்து மூன்று நாட்கள் வகுப்பெடுத்தார். பொதுவாகவே இது மாதிரியான நிகழ்ச்சிகளில் முடுக்குநர்கள் எல்லாம் குறிப்பிட்ட கலைச்சொற்களையே மீண்டும் மீண்டும் பொழிந்து போரடிக்கச் செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இம்முறை முதலிரு நாட்களில் கொஞ்சம் அலுப்புத் தட்டினாலும் மூன்றாம் நாள் நிகழ்வு கலகலப்பாக இருந்தது. அதில் ஒரு பயிற்சி அடியேன் இக்கட்டுரை எழுதக் காரணம்.

Image result for hemispheres of the brain

      நமது மூளையின் இரு பாதிகளான இட மற்றும் வல மூளைகளின் தனித்தன்மையான செயல்பாடுகளைப் பற்றி விளக்கினார். இட மூளை உடலின் வலது பக்கத்துடன் நரம்பிணைப்புக் கொண்டுள்ளது, வல மூளை உடலின் இடது பக்கத்துடன் நரம்பிணைப்புக் கொண்டுள்ளது. இட மூளை தர்க்கம் பகுத்தறிவு கணித அறிவியற் சிந்தனைகள், ஆராய்ச்சி முதலிய ரீதியில் இயங்குகிறது. எனவே வலக் கரத்தால் எழுதுபவர்கள் இந்த அடிப்படைகளிலேயே சிந்தனைகளைச் சிறப்பாகப் பதிவு செய்வார்கள். வல மூளை கற்பனை, கவித்துவம், உள்ளுணர்வு, மாற்றுச் சிந்தனைகள், கலைத்துவம் முதலிய ரீதியில் இயங்குகிறது. எனவே இடக் கரத்தால் எழுதுபவர்கள் இந்த அடிப்படைகளில் சிந்தனைகளைச் சிறப்பாகப் பதிவு செய்வார்கள். இச்செய்திகளை அவர் ஓர் வரைவாக விளக்கிய பின்னர் அதைச் செயல் ரீதியில் கண்டுகொள்ள பயிற்சி ஒன்றைக் கொடுத்தார்.
      
”உங்கள் ஏட்டில் ஒரு பக்கத்தில் பட்டாம்பூச்சியைப் பற்றி எழுதுங்கள். இரண்டு நிமிட அவகாசம்” என்றார். அந்த அரங்கில் ஐந்நூறு பேராசிரியர்கள் இருந்தோம். இரண்டு நிமிடங்கள் கழித்து, “இப்போது உங்கள் ஏட்டில் அதற்கு எதிர்ப்பக்கத்தில் உங்கள் இடது கையால், பட்டாம்பூச்சியைப் பற்றி என்ன தோன்றுகிறதோ அதை எழுதுங்கள். இரண்டு நிமிட அவகாசம்” என்று சொன்னார். நான் ஏற்கனவே இடது கையால்தான் எழுதியிருந்தேன்! குசும்பு அல்ல. அடியேன் இடது கை எழுத்தாளன், எல்கேஜியில் இருந்தே!

      அவருக்கும் இந்தச் சந்தேகம் வந்திருக்க வேண்டும். “உங்களில் யாராவது இடது கையர் இருக்கின்றீர்களா?” என்று கேட்டார். நான் வலது கையைத் தூக்கினேன். அந்த அரங்கில் அடியேன் ஒருவன் மட்டுமே இடது கையன்! அவர் சொல்லாவிட்டாலும், நான் பிறகு பட்டாம்பூச்சியைப் பற்றி எனது வலது கையால் எழுதிப் பார்த்தேன். இரண்டு வயதுக் குழந்தை ஒன்று அப்படி எழுதுமெனில் அந்தக் கையெழுத்தை நிச்சயம் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்!

      சில வாலுண்டியர்களை (volunteers – ஓ, தமிழில் தன்னார்வளர் அல்லவா?) எழுப்பி அவர்கள் எழுதியதை வாசிக்கச் செய்தார். கணினிப் பேராசிரியை ஒருவர் ஆங்கிலத்தில் தான் எழுதியதை வாசித்தார். புழு நிலையிலிருந்து கூட்டுப்புழுவாகிப் பின் அது படிப்படியாகப் பட்டாம்பூச்சியாக மாறும் ”metamorphosis of a butterfly” – பட்டாம்பூச்சியின் மீவுருமாற்றம் பற்றி அவர் (வலக்கரத்தால்) எழுதியிருந்தார். இடது கையால் யார் என்ன எழுதினீர்கள் என்று கேட்டதற்கு அரபிப் பேராசிரியர் ஒருவர் எழுந்து ‘அது ஓர் வண்ணமயமான பூச்சி’ என்று வாசித்தார். அதாவது வல மூளை கவித்துவமாக சிந்திக்கிறதாம்! முடிந்தது பயிற்சி.

      இங்கே ஒருவன் இடது கையால் இரண்டு கவிதைகளை எழுதி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேனே, என்னை எழுப்பிக் கேட்கவேண்டும் என்று தோன்றாமல் போயிற்றே அவருக்கு? யாருக்கோ ஏதோ ஒரு வகை நல்லூழ் போலும்! இத்தனைக்கும் இரு கைகளாலும், எழுதிய கவிதைகளுக்கருகில் பட்டாம்பூச்சிப் படமும் போட்டு வைத்திருந்தேன். அதில் குறிப்பாக அடியேன் வலக்கரத்தால் வரைந்த பட்டாம்பூச்சி இருக்கிறதே, அடடா!, ஹிட்லரின் நாஜிப் படையினரிடம் சிக்கி வன்கொடுமைக்கு ஆளானது போல் இருந்தது! இறைவன் என்னை மன்னிப்பானாக!

Image result for lonely butterfly pictures

 நீங்கள் இருக்கிறீர்களே, அக்கவிதைகள் இரண்டும் உங்களுக்காகவே. ஹைகூ போன்று சிறிய கவிதைகள்தான். முதற்கவிதை,

      ”பூக்களே இல்லாத இவ்வனத்தில்
      எதைத் தேடிப் பறக்கிறது
      வண்ணத்துப் பூச்சி?”

      சிந்தித்ததில் இது ஒரு ஜப்பானிய ஹைகூ ஒன்றின் தழுவல் என்பது தெரிந்தது. செடிகளெல்லாம் காய்ந்து தீய்ந்து போன கோடை கால உக்கிரத்தைச் சொல்ல வந்த கவிஞர் ஒருவர் பின்வரும் ஹைகூவை எழுதினார்:

      ”ஆலய மணி மீது
      ஓய்ந்து அமர்ந்தது
      பட்டாம்பூச்சி”

Image result for butterfly

      நான் எழுதிய இரண்டாம் ஹைகூ, மேலே சொன்னபடி, பேராசிரியை தான் எழுதியதை வாசித்துக் காட்டியபோது அடியேன் என் ஏட்டில் கிறுக்கியது. அவர் சொன்ன அறிவியற் கருத்தை அப்படியே என் மனம், மன்னிக்கவும், வல மூளை கவிதையாக்கிற்று.

      ”இலை தின்ற புழு ஒன்று
      பூவாய் மலர்ந்த அதிசயம்
      பட்டாம்பூச்சி!”

      நினைத்துப் பார்த்ததில் இந்த ஹைகூவும்கூட ஏற்கனவே ஜப்பானிய கவிஞர் ஒருவர் எழுதியதை நினைவூட்டியது. இதில் என்ன இருக்கிறது? பட்டாம்பூச்சியை ஒரு பூவுடன் ஒப்பிட்டு சிலிர்த்திருக்கிறது. தோட்டத்தில் நடந்துகொண்டிருந்த கோபாயாஷி இஸ்ஸா என்னும் ஜப்பானியக் கவிஞருக்கு இதே ”காட்சிப்பிழை” (Visual Illusion) தோன்றியிருக்கிறது. அப்போது அவர் எழுதினார்,

      ”உதிர்ந்த மலர்
      கிளைக்குத் திரும்புகிறது
      வண்ணத்துப்பூச்சி!”

      இந்த ஹைகூ நினைவுக்கு வந்ததால் ஹைகூவை வேறு மாதிரி செப்பம் செய்தேன். இலை எங்காவது பூ ஆகுமா? கறிவேப்பிலை போல் புதினா போல் இலைக்கு மணம் இருக்கலாம். ஆனால் அது பூ ஆகுமா? இலை பூ ஆகத்தான் செய்கிறது. அதையே நான் உணர்த்த விரும்பினேன், இப்படி:

      ”இலை
      பூவாகப் பரிணமித்த
      அதிசயம்
      பட்டாம்பூச்சி!”

      அறிவியல் சொல்லும் மீவுருமாற்றம் என்னும் செயல்பாடு இங்கே ஒரு சிறூ கவிதையில் வியப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது. எப்படி? புழு இலையைத் தின்கிறது. அந்த இலையுணவு அதனுள் திரவங்களாக தசைகளாக மாறுகிறது. கூட்டுப்புழுவில் அது மெல்ல மெல்ல வண்ணத்துப்பூச்சியாய் வடிவ மாற்றம் பெறுகிறது. அவ்வகையில், இலை பட்டாம்பூச்சி ஆகிவிட்டதுதானே? இது அறிவியலின் தர்க்கம் அன்று. கவிதையின் தர்க்கம். ஒருவகையில் இது ஆன்மிக தர்க்கமும் கூட.

      இக்கட்டுரையின் தலைப்பை ஒட்டிய செய்தி இனிதான் தொடங்குகிறது!

Image result for ambidextrous

      மனித மூளையின் இட வலப் பகுதிகளின் செயல்பாடுகள் பற்றி திரு.தட்சிணாமூர்த்தி விளக்கிக்கொண்டிருந்த போது என் மூளையில் ஒரு மூலையில் பல்பு ஒளிர்ந்தது. இச்செய்திகள் எல்லாம் ஏற்கனவே தெரிந்திருந்தும், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஓஷோவின் நூலொன்றில் படித்தது, இதுவரை இந்த அடிப்படையில் இப்படிச் சிந்திக்காமல் போனோமே என்று வியப்பாகவும் இருந்தது. அது என்ன என்று சொல்லும் முன் ஒரு கொசுறுச் செய்தி: திரு.தட்சிணாமூர்த்தி ஓர் இரு-கையர். என்னங்க, எல்லாருக்குமே இரு கைகள் இருக்கிறதே? என்று கேட்க வேண்டாம். இரு-கையர் எனில் வலது மற்றும் இடது கைகள் இரண்டையும் ஒப்பான திறனுடன் பயன்படுத்துகின்றவர். குறிப்பாக, எழுதுவதில்! அவர் அப்படி எழுதியும் காட்டினார். இரண்டு கையெழுத்துக்களும் இரட்டைக் குழந்தைகள் போல் இருந்தன! அல்லது அவை இரண்டும்... ...  வேண்டாம் இது நோன்புக் காலம். (‘அழகான கண்களைப் போல் இருந்தன’ என்று சொல்லி உங்கள் கற்பனையை நான் தடுமாற வைக்க விரும்பவில்லை.)

      சரி, சீரியஸான விஷயத்திற்கு வருவோம். அவ்வரங்கில், மனித மூளையின் இரு பகுதிகளின் தனித்தன்மையான செயல்பாடுகள் பற்றிக் கேட்டுக்கொண்டிருக்கையில், சட்டென்று அதன் பின்புலத்தில் என் உள்மனம் குர்ஆனின் வசனப் பகுதி ஒன்றை வைத்துப் பார்த்தது. புதிய விளக்கங்கள் விரிந்தன. இறைப் பேரறிவின் அதிசயங்களை அந்த அர்த்தங்கள் உணர்த்திக்கொண்டே போயின. நபி (ஸல்...) அவர்களுக்கு குர்ஆன் என்பது மறைவெளிப்பாடாக அருளப்பட்ட நூல். அதை அவர்கள்தான் எழுதினார்கள் என்னும் தவறான கருத்து அவர்களின் காலம் தொட்டே இருந்துவருமொன்று. அதனை அவர்களின் எதிரிகள் ஒரு குற்றச்சாட்டாகவே வைக்கின்றனர். (பைபிளிலிருந்து நபியவர்கள் காப்பியடித்து எழுதிக்கொண்டார்கள் என்று யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரும் தூஷணம் செய்திருக்கிறார்.) இக்குற்றச்சாட்டுக்கு பதிலளித்து இறைவன் திருவசனமொன்றை அருளினான்:

      ”மேலும், இதற்கு முன்னிலிருந்து எதனையும் நீங்கள் ஓதவில்லை; மேலும், நீர் உமது வலது கையால் எழுதவுமில்லை; அப்படி இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்” (29:48).

      இத்திருவசனத்தின் நடுப்பகுதியை நான் நியாபகம் செய்தேன்: “வ லா தஃகுத்துஹு பியமீனி(க்)க” – ’நீங்கள் உமது வலது கையால் எழுதவில்லை’ என்று சொல்லியிருபப்தன் தாத்பர்யம் என்ன?

      ”வ லா தஃகுத்துஹு பியதி(க்)க” – நீங்கள் உமது கையால் எழுதவில்லை என்று பொதுவாகச் சொல்லியிருக்கலாம். அல்லது, இன்னும் பொதுவாக, ‘வ லா தஃகுத்துஹு’ – நீங்கள் எழுதவில்லை என்பதுடன் நிறுத்தியிருக்கலாம். ஏனெனில் எழுதுவது என்பதே கையால்தானே? அப்படித்தான், சில மொழிபெயர்ப்புக்கள் ’வலது’ என்பதைக் குறிப்பாகச் சிறப்பாக கவனிக்காமல் விட்டபடி மொழிபெயர்த்துள்ளனர்.

      ”உங்களுடைய கையால் நீங்கள் அதனை எழுதி(ப் பழகி)யவரும் அல்லர்” என்று பெயர்க்கிறார் அ.கா.அப்துல் ஹமீது பாகவி. ”உம்முடைய கையால் எழுதியதுமில்லை” என்று தருகிறது இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT) தமிழாக்கம். எழுதுதல் என்றாலே அது கையால்தானே, அதுவும் வலது கையால்தானே என்பது போன்ற பொதுப் புத்தியில் செய்யப்பட்ட தமிழாக்கங்கள் இவை. இப்படியான மழுப்பல்களால் அவ்வசனப் பகுதி தரும் ஆழமான அறிவுகளை நாம் அடையமுடியாமல் போகிறது.

      வார்த்தைக்கு வார்த்தை உள்ளபடி மொழிபெயர்த்துக்கொண்டு “நீர் உமது வலது கையால் எழுதவில்லை” என்று வாசிக்கும்போது பல ஆழ்ந்த அர்த்தங்கள் நம்மறிவில் விரிகின்றன.

      வலது கையால் எழுதுவது எனில் அங்கே இடது மூளையின் செயல்பாடு மிகைத்திருத்தல் வேண்டும். அது தர்க்க ரீதியாக, கணக்கிடல் ரீதியாகச் செல்லும். ’வலதுகையால் எழுதவில்லை’ என்பதன் உள்ளர்த்தம் தர்க்க ரீதியாகச் சிந்தனை செய்து எழுதவில்லை என்றாகிறது.

ஒரு நபியின் அறிவு என்பது மனித மூளையமைப்பைத் தாண்டியதாகும். உண்மையில் அது வல மூளையின் இயக்கமான தர்க்கத்துக்குக் கட்டுப்பட்டதும் அல்ல, இட மூளையின் இயக்கமான கற்பனைக்குக் கட்டுப்பட்டதும் அல்ல. அது தர்க்க ரீதியாக இயங்கலாம், கவித்துவமாகப் பேசலாம். ஆனால் அவ்விரண்டின் எல்லைக்குள் அடங்காது. அதற்கு அப்பாலான இறைத்தொடர்பின் உள்ளுதிப்பினைக் கொண்டே அனைத்தையும் பார்க்கிறது.

எனவே, குர்ஆன் என்பது வல மூளையின் இயக்கத்தில் நிகழும் கவித்துவக் காவியமும் அல்ல. இதனை இன்னொரு வசனம் நவிலக் காண்கிறோம்: ”வ மா அல்லம்னாஹுஷ் ஷிஃர வ மா யம்பகீ லஹு; இன் ஹுவ இல்லா திக்ருன்வ்வ குர்ஆனும் முபீன்” – “மேலும் நாம் அவருக்குக் கவிதையைக் கற்றுத்தரவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; திண்ணமாக இது இறைதியானமும் தெளிவான குர்ஆனுமே அன்றி வேறல்ல” (36:69)

Image result for old quran

”நீர் உமது வலது கையால் எழுதவில்லை” என்னும் வசனப் பகுதியை இவ்வாறு உளவியல் ரீதியாக விளங்கிக்கொள்ள ஒரு நிகழ்வை நோக்கலாம். நபியின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த, வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு அது. ஹுதைபிய்யா உடன்படிக்கை.

அந்நிகழ்வின் தன்மையை இங்கே ஞாபகம் செய்துகொண்டால் போதுமானது. மக்கத்திலிருந்து வந்த நிராகரிப்பாளர் குழு முன் வைத்த வரைவு மிகவும் தர்க்க ரீதியாகச் சிந்தித்துத் தமக்குச் சாதகமாகவும் முஸ்லிம்களுக்குப் பாதகமாகவும் அமைகின்ற நியதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனைக் கேட்ட உமர் (ரலி...) அவர்கள் உள்ளிட்ட அணுக்கச் சகாக்களும்கூட நபி (ஸல்…) அவர்கள் அந்த உடன்படிக்கையில் கையெழுத்து இடக்கூடாது என்று கருத்துச் சொன்னார்கள். ஏனெனில் அவர்களும் அந்த உடன்படிக்கையை தர்க்க அறிவிலேயே அப்போது காண்கிறார்கள். ஆனால், அகத்திலும் முகத்திலும் புன்னகை தவழும் நபி (ஸல்...) அவர்கள் அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு ஒப்பமிடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் அந்த உடன்படிக்கையை, தர்க்க அறிவின் எல்லைகளைத் தாண்டிய உள்ளுதிப்பின் அறிவு நிலையிலிருந்து நோக்கியிருந்தார்கள். அந்த நியதிகள் எல்லாம் பின்னாளில் தமக்கும் தம் குழாத்திற்கும் சாதகமாக மாறிவிடப் போவதை அவர்களின் தீர்க்கதரிசன அறிவு காண்கிறது.


எனவே, குர்ஆன் என்பது இதுபோல் நபி (ஸல்...) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களின் பின்னணியில் பொருத்தமுற அவ்வப்போது திருவசனங்கள் இறக்கப்பட்டு இருபத்துமூன்று ஆண்டுகளில் தொகுக்கப்பட்டது என்றபோதும் அது தர்க்க ரீதியாக எழுதிக்கொண்ட நூல் அல்ல; உள்ளுதிப்பாக நபிக்கு அறிவிக்கப்பட்டதே என்னும் கருத்தை “வலது கையால் எழுதவில்லை” என்னும் சொற்றொடர் கொண்டு அறிகின்றோம்.

அறுதி உண்மையை இறைவனே அறிவான்.


Friday, June 23, 2017

மூன்று கவிதைகள்

Image result for ant on pomegranate flower
யாத்திரை

மேலும் கீழுமாய்
அசையும் மாதுளங் கொப்பின்
பவழப் பூவில்
முன்னும் பின்னுமாய்
ஓடிக்கொண்டிருக்கிறது
கட்டெறும்பு

அவ்விரு திசைப்பரிமாணங்களின்
யாத்திரையில்
எங்கே போகிறதோ?

இத்தனை வலஞ்சுற்றியும்
ஒருபோதும் பூவின் சந்நிதிக்குள்

அது நுழையாதிருப்பதும் ஏன்?


Related image
நகர்ந்து போயின மேகங்கள்

திரவ வைரங்கள் என
மழைத்துளிகள் விழுதல் கண்டு
தோட்டத்தில் ஓடி நின்றேன்

கவிழந்த பெருங்கடலாய்
வானைப் பார்க்கும்
பால்ய காலத்துக் கற்பனையைக்
கிளர்த்திக்கொண்டு
உச்சி நோக்கி நின்றேன்
கருந்திரள் மேகங்களினடியில்
பசுஞ்சிறு செடியைப் போல

நறும்புனல் நயந்த
விழிகளை விரிய வைத்து
முகிலுதிர்க்கும் தண் துளிகள்
முகத்தில் வந்து மோதுமின்பம்
அருளின் அருஞ்சுவை

அடடாவும் ஆகாவும்
அவ்வப்போது...
மழைக்கோர் இசை உண்டல்லவா?

தோளில் மோதின ஓரிரு துளிகள்
எதிர்பாரா முத்தம் போல்
சட்டென்று உதட்டில்
வீழ்ந்து வழிந்தது ஒன்று

சுவைக்கத் தூண்டும் ஆசை அறுத்து
நோன்பு காத்தேன்

மழையின் இளைத்த பிரதியாய்
மண்குடுவை நீருண்டு
உணவு மேசையின் மீதில்

எனினும்
மண் தீண்டா மழைத்துளியின்
மின்சுவைக் குளிர்மை
வேறு பொருள் எது தரும்
இவ்வையத்தில்?

மிக இயல்பாய்
எப்போதும் போலாய்
நிகழ்ந்திருக்கும்
பெருங்காட்சி அல்லவா இது?

ரசிகனுக்கும் என்றிலாத
தூய கலைஞனைப் போல்
தியானத்தில் இருப்பதல்லவா இயற்கை?

தீவில் ஒதுங்கிய ஒருவன்
காணக் காண
நகர்ந்து போகுமொரு கப்பலைப் போல
போயிற்றே மேகத்திரள்


Related image 
அழைப்பொலி

அழைப்பொலி கேட்கவும்
துயில் களைந்தெழுந்தேன்

கிறக்கம் நீங்கா நிலையில்
காற்றோடு போகும் இலைபோல் நடந்து
வெளியே பார்க்க
யாருமில்லை

அவதானித்ததில்
நிஜமாகவே ஒரு பறவையின் ஒலிதான்

விதவிதமான பறவை ஒலிகளினிடையே
ஒரு ரிதமான ஒலிப்பாய் இருந்தது அது
என் வீட்டின் அழைப்புமணி ஓசையைப் போன்றே

இன்னமும் மூடப்படாத துயிலின் கதவு வழி
மிக இயல்பாய் நுழையும் ட்வீட்டொலிகளை
அனுபவித்தபடி அமர்ந்திருந்தேன்

அவனொருவனின் அழைப்புதான்
இந்தப் புள்ளினங்களின் ஆர்ப்பொலிகள் எல்லாம்
என்னும் உணர்வில்
சிறகு விரித்தபடி பறந்திருந்தேன்