Monday, August 12, 2013

ஏசுவின் பறவைகள்

ஏசுநாதரைப் பற்றி சூஃபிகளிடம் உள்ள கதைகளில் இதுவும் ஒன்று. சூஃபிகளின் நூற்களில் அவரின் பெயர் ’ஈசா’ என்றும் அவரின் புனிதத் தாயாரின் பெயர் ’மர்யம்’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். இனி சூஃபிகள் சொல்லும் கதையைக் கவனிப்போம்.


மர்யமின் மகனான ஈசா சிறுவராக இருந்தபோது ஒருநாள் களிமண்ணில் பறவைகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தார். அவர் செய்தது போல் செய்ய முடியாத மற்ற பிள்ளைகள் ஓடிச் சென்று பெரியவர்களிடம் பல அவதூறுகளைக் கூறினார்கள். அன்றைய தினம் ’சப்பாத்’தாக (வாராந்திரப் பெருநாள். வழிபாட்டுக்கு மட்டுமே உரிய விடுமுறை தினம். யூதர்களுக்கு அது பிரதி சனிக்கிழமை ஆகும்) இருந்தபடியால் பெரியவர்கள் சொன்னார்கள், “இன்றைய தினம் எந்த வேலையும் அனுமதிக்கப் பட்டதல்ல. நாம் அவரைத் தடுக்க வேண்டும்.”

மர்யமின் மகனான ஈசா ஒரு குளத்தின் அருகில் அமர்ந்திருந்தார். மக்கள் திரண்டு அங்கே வந்து அவர் செய்த பறவைகள் எங்கே என்று அவரிடம் கேட்டார்கள். சிறிது தூரத்தில் இருந்த பறவைகளை அவர் சுட்டிக் காட்டினார். அவை உயிருள்ள பட்சிகளாகப் பறந்து சென்றன.

”பறக்கும் பறவைகளைச் செய்வது இயலாத காரியம். எனவே இது சப்பாத் பெருநாளை முறித்ததாக ஆகாது” என்று ஒரு முதியவர் கூறினார்.

”நான் இந்தக் கலையைக் கற்றுக் கொள்வேன்” என்றார் இன்னொருவர்.

”இது ஒரு கலை அல்ல. இது ஏமாற்று வித்தையே அன்றி வேறல்ல” என்றார் இன்னொருவர்.

எனவே சப்பாத் பெருநாளும் முறிக்கப் படவில்லை, அந்தக் கலையும் கற்பிக்கப் படவில்லை. ’ஏமாற்று வித்தை’ என்பதைப் பொருத்த வரை அந்த மக்கள் - சிறியவர்களும் பெரியவர்களும் – தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டார்கள். ஏனெனில் பறவைகளை வடிவமைத்து உயிரூட்டுவதின் தாத்பரியம் என்ன என்பதை அவர்கள் அறியவில்லை.

சனிக்கிழமையில் உலக வேலைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டியது ஏன் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். எது ஏமாற்று வித்தை எது அல்ல என்பது பற்றி அந்த முதியவர்களுக்கே தெளிவு இல்லை. கலையின் ஆரம்பம் மற்றும் செயலின் முடிவு பற்றிய அறிவு அவர்களிடம் இல்லை. பலகையை நீட்டுவித்தது பற்றிய செய்தியும் இப்படித்தான்.
அந்த நிகழ்வு யாதெனில், மர்யமின் மகனான ஈசா, தச்சரான யூசுஃபின் கடையில் இருந்தார். தேவைப்பட்டதை விடவும் நீளம் குறைவாக இருந்த ஒரு மரப்பலகையைத் தன் கைகளால் அவர் இழுத்தார். அந்தப் பலகை நீளமாகிவிட்டது!

இந்த நிகழ்ச்சி மக்களிடம் பரவிய போது சிலர் சொன்னார்கள், “இது ஓர் அற்புதம். எனவே அந்தப் பையன் ஒரு ஞானியாக இருக்கவேண்டும்”

வேறு சிலர் சொன்னார்கள், “நாங்கள் இந்தக் கட்டுக்கதையை நம்பமாட்டோம். மீண்டும் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம்”

இன்னும் சிலர் சொன்னார்கள், “இது உண்மையாக இருக்க முடியாது. எனவே இதையெல்லாம் நூற்களில் எழுதி வைக்காதீர்கள்”

இந்த மூன்று சாராரிடமும் வெவ்வேறு உணர்வுகள் இருந்தாலும் அவர்களில் எவரும் அந்த அற்புதத்தின் சாராம்சத்தை அடைந்துகொள்ளவே இல்லை. “அவர் ஒரு மரப்பலகையை நீளமாக்கினார்” என்னும் வாசகத்தின் உட்பொருள் என்ன என்பதை அவர்கள் விளங்கவே இல்லை.

இந்த எளிமையான சூஃபிக் கதையின் சூக்குமங்களை இனி கவனிப்போம்:

மர்யமின் மகனான ஈசா சிறுவராக இருந்தபோது ஒருநாள் களிமண்ணில் பறவைகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தார். அவர் செய்தது போல் செய்ய முடியாத மற்ற பிள்ளைகள் ஓடிச் சென்று பெரியவர்களிடம் பல அவதூறுகளைக் கூறினார்கள்.

இந்த அற்புதத்தை அல்லாஹ்வின் அனுமதி கொண்டு ஈசா (அலைஹிஸ்ஸலாம்) நிகழ்த்தியதாகத் திருக்குர்ஆனில் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (காண்க: 3:49 மற்றும் 5:110).

விளையாட வேண்டும் என்னும் ஆர்வம் சிறுவர்களுக்கு இருப்பது இயற்கை. அதனால்தான் அறபியில் ஒரு பழமொழி சொல்லப்படுகிறது: அஸ்ஸபிய்யு ஸபிய்யன் லவ்கான நபிய்யன் – இறைத்தூதராகவே இருப்பினும் சிறுவர் சிறுவர்தான். ஆனால் இறைத்தூதரின் விளையாட்டும்கூட இறைவனின் அத்தாட்சி ஆகிவிடுகிறது. அந்நபிய்யு நபிய்யன் லவ்கான ஸபிய்யன் – சிறுவராகவே இருப்பினும் இறைத்தூதர் இறைத்தூதர்தான் (மற்ற பிள்ளைகளைப் போல் அல்ல) என்று சொல்வதுதான் சரி.

அன்றைய தினம் ’சப்பாத்’தாக (வாராந்திரப் பெருநாள். வழிபாட்டுக்கு மட்டுமே உரிய விடுமுறை தினம். யூதர்களுக்கு அது பிரதி சனிக்கிழமை ஆகும்) இருந்தபடியால் பெரியவர்கள் சொன்னார்கள், “இன்றைய தினம் எந்த வேலையும் அனுமதிக்கப் பட்டதல்ல. நாம் அவரைத் தடுக்க வேண்டும்.”

பொது மக்களின் கண்களுக்கு ஆன்மிகம் ஒரு வியாபாரமாகத் தெரிகின்றது. அதுவும் இதைச் சொல்பவர்கள் யார்? இறை இல்லத்தை வட்டி வசூலிக்கும் இடமாகவும் சந்தைக் கடையாகவும் மாற்றி வைத்திருந்த யூதர்கள்!

நல்ல பணம் இருப்பதைப் போலவே கள்ளப் பணமும் இருக்கிறது. கள்ளப் பணத்தின் புழக்கம் ஜாஸ்தியாகும் போது நல்ல பணமெல்லாம் கள்ளப்பணமாகவே சந்தேகிக்கப் படுகின்ற நிலை வந்துவிடுகிறது. போலி ஆன்மிகவாதிகள் பெருகிப் போன அந்த யூத சமூகத்தில் ஈசா (அலை) அவர்களையும் மக்கள் ஒரு ஆன்மிக வியாபாரியாகவே எண்ணியதில் ஆச்சரியம் இல்லை.

யூத மனம் வியாபாரத்திலும் வட்டியிலும் ஊறிப்போன ஒன்று. அதனால்தான் அவர்களுக்கு வாரம் ஒரு நாள் வியாபாரமே கூடாது என்ற மாபெரும் சோதனை வைக்கப்பட்டது. அவர்கள் அந்த வியாபார மனநிலை வழியாகவே இறைத்தூதரையும் பார்க்கிறார்கள்.

மர்யமின் மகனான ஈசா ஒரு குளத்தின் அருகில் அமர்ந்திருந்தார். மக்கள் திரண்டு அங்கே வந்து அவர் செய்த பறவைகள் எங்கே என்று அவரிடம் கேட்டார்கள். சிறிது தூரத்தில் இருந்த பறவைகளை அவர் சுட்டிக் காட்டினார். அவை உயிருள்ள பட்சிகளாகப் பறந்து சென்றன.

குளம் என்பது ஜீவனின் குறியீடு. ’மாவுல் ஹயாத்’ என்னும் ஜீவநீரூற்று கொண்டு மக்களின் இதயங்களை உயிர்ப்பித்தவர் ஈசா (அலை). ஜீவனைக் கொண்டு ஞான ஸ்நானம் தந்தார்கள் என்பதன் கருத்து அதுவே.

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களான “அல்-ஹய்யு” (ஜீவனுள்ளவன்) மற்றும் “அல்-முஹ்யு” (ஜீவனளிப்பவன்) ஆகிய இரண்டின் சுடர்கள் ஈசா (அலை) அவர்களில் அபரிதமாக வெளிப்பட்டிருந்தன (ஜுஹூர்). எனவே அவர்களின் அமைப்பிலேயே அல்லாஹ்வின் படைப்பாம்சம் இலங்கிக் கொண்டிருந்தது. திருக்குர்ஆன் அவர்களைச் சிறப்பித்து ரூஹுல்லாஹ் (அல்லாஹ்வின் ஆன்மா) என்றும் கலிமத்துல்லாஹ் (அல்லாஹ்வின் வாக்கு) என்றும் (உடைமைப் பொருளில்) கூறுகின்றது:

”மர்யமின் மகனான சொஸ்த்தக்காரர் ஈசா
அல்லாஹ்வின் தூதரும் அவனின் வாக்கும் ஆவார்
அதை அவன் மர்யமிடம் வெளிப்படுத்தினான்;
மேலும் அவனிடமிருந்தான உயிரும் ஆவார்”
(4:171)

”மர்யமின் மகனான ஈசா ஒரு குளத்தின் அருகில் அமர்ந்திருந்தார்.” என்பது அவர்களின் இந்த ஆன்மிகத் தன்மையைக் குறிப்பதாகும். ஏனெனில் நீர் என்பது உயிரூட்டலின் குறியீடாகும்:

”உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்தே வெளியாக்கினோம்” (21:30)

கதையைத் தொடர்ந்து பார்ப்போம்:

”பறக்கும் பறவைகளைச் செய்வது இயலாத காரியம். எனவே இது சப்பாத் பெருநாளை முறித்ததாக ஆகாது” என்று ஒரு முதியவர் கூறினார்.

சடங்குகளின் பிடியில் உறைந்து போய்விட்ட மனநிலை இது. கண் முன்னால் நடக்கும் அற்புதம் அந்த உள்ளத்தில் உணரப்படவே இல்லை. அவருடைய கவலை எல்லாம் கட்டிக் காக்கப்பட்டு வந்த மரபு உடைந்துவிடக் கூடாது என்பதுதான். மார்க்கத்தைப் பின்பற்றுவோருள் பெரும்பான்மையானோரின் மனநிலை இதுவே.

”நான் இந்தக் கலையைக் கற்றுக் கொள்வேன்” என்றார் இன்னொருவர்.

ஆன்மிகத்தைப் பற்றிய தவறான புரிதல் கொண்ட ஒருவரின் பார்வை இது. ஆன்மிகம் என்பது ஒரு கலை அல்ல. ஆன்மிகத்தில் கலை ஓர் அம்சமாக இருக்கலாம். அல்லது கலையின் அம்சங்கள் ஆன்மிகத்தில் இருக்கலாம். ஆனால் அது வெறும் கலையாக மட்டும் சுருங்கிவிட்டால் ஆன்மிகமாக இருக்காது.

இதைச் சொன்னவர் ஏற்கனவே ஒரு கலைஞராக இருக்கவேண்டும். இசை, சிற்பம், ஓவியம் போன்ற ஏதேனும் ஒரு கலையில் திறமை மிக்கவராக இருக்க வேண்டும். புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக் கொள்வது போல், நடனம் ஆடுவதற்குக் கற்றுக் கொள்வது போல் ஆன்மிகத்தையும் கற்றுக்கொள்ளலாம் என்று அவர் நினைக்கிறார். ஆன்மிகம் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையும் மாற்றி அமைப்பதை வேண்டி நிற்கிறது. அதை ஒருவர் பகுதி நேரப் பயிற்சியாகக் கற்றுக் கொள்ள இயலாது. கலைக்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு இது. கலை முழுமை கொள்ளும்போது ஆன்மிகமாகப் பரிணமிக்க முடியும். ஆனால் ஆன்மிகம் கலையாக மட்டும் ஜீவிக்க முடியாது.

”இது ஒரு கலை அல்ல. இது ஏமாற்று வித்தையே அன்றி வேறல்ல” என்றார் இன்னொருவர்.

மூன்றாவது வகையான மனநிலை இங்கே வெளிப்படுகின்றது.

மனித மூளையின் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொள்வது இங்கே அவசியம். மூளை வலது இடது என்று இரண்டு பாகங்களாக உள்ளன. Right and Left Hemispheres. வலது பக்க மூளை உணர்ச்சிகளின் செயல்பாடுகள் கொண்டது. கற்பனை உள்ளுணர்வு போன்றவை அதன் இயக்கம். அது கலைப்பகுதி. இடது பக்க மூளை தர்க்கம் பகுத்தறிவு கணிதம் போன்ற செயல்பாடுகள் கொண்டது.

முதியவரின் பேச்சில் வெளிப்பட்டது முற்றிலும் உறைந்து போய்விட்ட மனநிலை. அதில் கலையுணர்வும் இல்லை, பகுத்தறிவும் இல்லை.

கலைஞனின் பேச்சில் வெளிப்பட்டது வலதுபக்க மூளையின் செயல்பாடு. அதன் பார்வையில் ஆன்மிகம் ஓர் அழகியல் மட்டுமே.

இப்போது பேசுவது இடதுபக்க மூளை. அறிவுஜீவிகள் என்று சொல்லப்படும் முட்டாள்களின் தர்க்கவியலும் பகுத்தறிவும் கொண்ட அணுகுமுறை. அது சொல்கிறது, ‘இது ஒரு கலை அல்ல’. உண்மைதான்! ஆனால், ஆன்மிக விஷயங்களில் பகுத்தறிவு அரை உண்மையைத்தான் பேசும். லா இலாஹ – ’கடவுள் இல்லை’ என்பது அரை மந்திரம்தானே? அதன் மீதிப்பகுதியான இல்லல்லாஹ் – ’அல்லாஹ்வை அன்றி’ என்பதற்கு அது வந்து சேராது. எனவே, அற்புதத்தை அது வெறும் ஏமாற்று வித்தையாகவே காண்கிறது.

நபி (ஸல்) அவர்கள் நிலவைப் பிளந்து காட்டினார்கள். அந்த பேரற்புதம் சில மனிதர்களுக்கு வெறும் சூனியமாகவே பட்டது. அவர்கள் நபியை நிராகரித்துவிட்டுப் போனார்கள்.

எனவே சப்பாத் பெருநாளும் முறிக்கப் படவில்லை, அந்தக் கலையும் கற்பிக்கப் படவில்லை. ’ஏமாற்று வித்தை’ என்பதைப் பொருத்த வரை அந்த மக்கள் - சிறியவர்களும் பெரியவர்களும் – தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டார்கள். ஏனெனில் பறவைகளை வடிவமைத்து உயிரூட்டுவதின் தாத்பரியம் என்ன என்பதை அவர்கள் அறியவில்லை.
சனிக்கிழமையில் உலக வேலைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டியது ஏன் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

வாராந்திரப் பெருநாள் என்பது தன் உயிர்த்தன்மையை இழந்துவிட்டது. அது ஓர் உறைந்த பிணம் போல் ஆகிவிட்டது. ’அன்ஃபாஸே ஈசா’ அதாவது ஈசா நபியைப் போன்ற ஓர் ஆன்மிக வாதியின் மூச்சுத்தான் அதற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டும். அவர்கள்தான் முஹய்யுத்தீன் – சன்மார்க்கத்திற்கு உயிரூட்டுபவர்கள். ஆனால் மக்கள் அத்தகைய ஆன்மிக வாதிகளை நிராகரித்து விடுகிறார்கள். தங்கள் பிணத்திற்கு – உயிரற்ற சடங்குகளுக்கு ஆடை அலங்காரம் செய்து அத்தர் பூசி அழகு பார்த்து மகிழ்கிறார்கள்.
மனம் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து விடுகிறது. தாளெடுத்து பேனாவால் எழுதிக் கணக்கு வழக்கு பார்த்தால்தானே அது கூடாத காரியம்? மனக்கணக்கு போட்டுப் பார்த்தால் ஆயிற்று. இப்படியாக இறைவனின் தியானத்தில் மூழ்க வேண்டிய மனம் அன்று உலக விஷயங்களில் இரட்டிப்பு வேலை செய்கிறது! அல்லது வெட்டிப் பொழுது போக்குகளில் மூழ்கிவிடுகிறது. ஆன்மிகப் பிரசங்கம் (ஃகுத்பா) ஒன்றேகால் மணிக்கு என்றால் 1:14:55 வரை உலகக் காரியங்களில், வியாபாரத் தந்திரங்களில் ஈடுபடுகின்றது.

ஆன்மிகம் காதலைப் போல் என்பதும் தொழுகை அதன் தாம்பத்யம் என்பதையும் மனிதர்கள் விளங்கவில்லை. ‘விலங்குகளைப் போல் மனைவியின் மேல் விழாதீர்கள். வீடு கூடும் முன் அவளுக்குத் தூது அனுப்புங்கள். அதுதான் முத்தங்கள்’ என்பது ஒரு நபிமொழியின் கருத்து. பலரின் ஆன்மிக வாழ்வில் Foreplay என்பதையே காணவில்லை!

எது ஏமாற்று வித்தை எது அல்ல என்பது பற்றி அந்த முதியவர்களுக்கே தெளிவு இல்லை. கலையின் ஆரம்பம் மற்றும் செயலின் முடிவு பற்றிய அறிவு அவர்களிடம் இல்லை.

இறைத்தூதர்களின் அற்புதங்களும் கண்கட்டி வித்தைகளான சூனியங்களும் வெளிப்படையில் ஒன்று போலவே காட்சி தரக்கூடும். அதன் அகமியத்தைத் தரிசிக்கும் ஆற்றப் அகக்கண் திறந்தவர்களுக்கே சாத்தியம். இதைத் திருக்குர்ஆன் நபி மூசா (அலை) அவர்களின் கைத்தடி (அஸா) நிகழ்ச்சியை வைத்து விளக்குகின்றது.

ஃபிர்அவ்னுடைய சபையின் மாந்திரீகவாதிகள் தங்கள் கைத்தடிகளைக் கீழே போட்டார்கள். அவை குட்டிப் பாம்புகளாகி நெளிந்தன. மூசா (அலை) அவர்களும் தன் கைத்தடியைக் கீழே போட்டார்கள். அதுவும் ஒரு பெரிய பாம்பானது. (மாறாக அது ஒரு கீரிப்பிள்ளை ஆகவில்லை.) அது அந்தக் குட்டிப் பாம்புகளை எல்லாம் விழுங்கி விட்டது. பிறகு மீண்டும் கைத்தடியாகி விட்டது. ’அஸா’தாரணமான அற்புதம்!

ஒரே செயலாக இருந்தாலும் மாந்திரீகவாதிகள் செய்தது சிஹ்ரு (மாயவித்தை, மேஜிக்) என்றும் மூசா (அலை) செய்தது இறையற்புதம் (முஃஜிஸா) என்றும் திருமறை தீர்ப்பளிக்கின்றது.

மக்கள் புறக்கண்களை நம்பியிருக்கிறார்கள். அவர்களின் அகக்கண்களோ குருடாகிக் கிடக்கின்றன. எனவே உண்மைக்கும் பொய்க்குமான வேறுபாடு அவர்களுக்குத் தெரிவதில்லை. கவர்ச்சியான போலிகளிடம் கவிழ்ந்து விடுகிறார்கள்.

உண்மையான ஏகத்துவம் (தவ்ஹீத்) எது, போலித் தவ்ஹீத் எது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

உள்ளமையின் கவனிப்பில் (இஃதிபாரெ உஜூத்) ஏகத்துவம் (தவ்ஹீத்) எது ஷிர்க் (இணைவைப்பு) எது என்பதிலும் அவர்களுக்குத் தெளிவு இல்லை. இதை அதுவாகவும் அதை இதுவாகவும் விளங்கி வழிகேட்டில் போய்விடுகிறார்கள்.

அத்தகையவர்கள்தான் இறைநேசர்களின் அற்புதச் செயல்களை (கராமாத்) நிராகரிக்கின்றார்கள். அது சாத்தியமே இல்லை என்று புத்தி பேதலித்துப் பிதற்றுகின்றார்கள். என்ன செய்வது, காய்ச்சலில் நாக்குக் கசந்து போனவனுக்கு டர்கிஷ் டிலைட், பஃக்லாவா, குலாப் ஜாமூன் என்று எதைக் கொடுத்தாலும் அவனுக்கு ’உவ்வே’ என்று குமட்டிக் கொண்டுதானே வரும்?

உண்மையில் ’முஃஜிஸா’ என்பது தாய் என்றால் கராமத் என்பது அதன் குழந்தை. ’மார்க்க அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள்’ (அல்-உலமாஉ வரஸத்துல் அன்பியா) என்றார்கள் நபி (ஸல்). தாயின் ஜாடையும் பண்பும் குழந்தையிடம் இருக்கத்தானே வேண்டும்?

ஈசா (அலை) அவர்கள் இறந்தவரை உயிர்த்தெழ வைத்தார்கள் என்பது முஃஜிஸா. அதே அற்புதத்தை முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) அவர்கள் நிகழ்த்தினார்கள் என்பது கராமத்.

முஃஜிஸாக்களை ஒப்புக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லுகின்ற பேர்வழிகள் கராமாத்துக்களை நிராகரித்துப் பேசுவது விசித்திரமாக இருக்கின்றது. ’அல்ஜீப்ரா கணக்குப் புரிகின்றது அரித்மெட்டிக்தான் புரியவே இல்லை’ என்று ஒருவன் சொன்னால் எப்படி இருக்கும்? அவனுக்கு அல்ஜீப்ராவும் புரியவில்லை என்பதற்கு அது ஆதாரமாகும்.

கராமாத்துக்களை ஒருவனால் புரிந்துகொள்ள இயலவில்லை என்றால் அவனுக்கு முஃஜிஸாத்துக்களும் நிச்சயமாக விளங்காது. வஹீ மற்றும் இல்ஹாம் பற்றிய நிலையும் இப்படித்தான். வலிமார்களான இறைநேசர்களுக்கு இறைவனிடமிருந்து வரும் இல்ஹாம் பற்றிய புரிதல் இல்லாதவனால் ஒருபோதும் நபிமார்களுக்கு இறைவனிடமிருந்து வரும் வஹீ பற்றியும் புரிந்துகொள்ள முடியாது.

பலகையை நீட்டுவித்தது பற்றிய செய்தியும் இப்படித்தான்.
அந்த நிகழ்வு யாதெனில், மர்யமின் மகனான ஈசா, தச்சரான யூசுஃபின் கடையில் இருந்தார். தேவைப்பட்டதை விடவும் நீளம் குறைவாக இருந்த ஒரு மரப்பலகையைத் தன் கைகளால் அவர் இழுத்தார். அந்தப் பலகை நீளமாகிவிட்டது!

ஒரு செடி பல வருடங்களில் பெரிய மரமாக வளர்கிறது. ஒரு கன்றுக்குட்டி சில வருடங்களில் பெரிய பசுவாகிறது. குழந்தை வளர்ந்து வாலிபத்தை அடைகிறது. அந்த பௌதிக வளர்ச்சி எங்கிருந்து வருகின்றது. ஆகாரம் தண்ணீர் என்று பல இடைக் காரணங்கள் நம் அகக் கண்களை மறைக்கின்றன. ஒன்று மற்றொன்றாக எப்படி மாறுகின்றது. அது இறைவனின் ஞானத்தில் அவனின் கற்பனையில் எப்படிப் பார்க்கப் படுகின்றதோ அப்படி ஆகின்றது.

ஈசா (அலை) அவர்களின் கைகள் அங்கே இறையாற்றலின் கருவிகளாக இருந்தன. இறைநேசரின் விவரிப்பில் அல்லாஹ் சொல்கிறான் “அவரின் கையாக நான் ஆகிவிடுகிறேன். அதைக் கொண்டு அவர் பற்றுகிறார்” (ஹதீஸ் குத்ஸி. நூல்: புகாரி). அப்படிப்பட்ட கையின் வழியே அமானுஷ்யமான செயல்கள் நிகழ்வதில் தடை என்ன?
தாவூத் நபியின் குளுமையான கையின் தீண்டலில் இரும்பு மெழுகைப் போல் இளகிவிட்டதே!

நபி (ஸல்) அவர்களின் கைகளை அல்லாஹ் தன் கைகள் என்று சொன்னதன் அடிப்படையும் இதுதான்: “(நபியே! எதிரிகள் மீது பொடிக் கற்களை) நீங்கள் எறிந்த போது நீங்கள் எறியவில்லை. ஆனால் அல்லாஹ்தான் எறிந்தான்” (8:17)

வெளிப்பார்வைக்கு அது நபியின் செயல். எதார்த்தத்தில் (ஹகீகத்தில்) அது அல்லாஹ்வின் செயல்தான்.

படைப்புக்களின் சுயங்கள் (ஜவாத்) அவனுடைய உள்ளமையில் (உஜூத்) அவனால் வெளிப்படுத்திக் காட்டப்படுபவையே. அதை அவன் எப்படி நாடுகின்றானோ அப்படி வெளிப்படுத்துவான். அந்த வெளிப்பாடு கால தேச பரிமானங்களில் ஒரு முறைப்படி வெளிப்படுத்தப் படுகின்றன என்றாலும் அந்தப் பரிமானங்களுக்கு இறைவனின் கற்பனை கட்டுப்பட்டதல்ல. ஏனெனில் அந்தப் பரிமானங்களே அவனின் அறிவில் (இல்ம்) அறியப்பட்டவையாக (மஃலூம்) உள்ளவைதான்.

எனவே, ஒரு கைத்தடி ஒரு நொடியில் பாம்பாக மாறிவிடுவது அசாத்தியம் அல்ல. சந்திரன் இரு துண்டுகளாகப் பிளந்துபோவது அசாத்தியம் அல்ல. மலைப்பாறை பிளந்து அதிலிருந்து ஓர் சினை ஒட்டகை வெளிப்பட்டுக் குட்டியை ஈனுவது அசாத்தியம் அல்ல. சமைத்த உணவு நூறு வருடங்கள் கெடாமல் இருப்பது அசாத்தியம் அல்ல. ஓர் இரவுக்குள் மக்களின் உடல்கள் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாறிப்போவது அசாத்தியம் அல்ல. வானளாவி எரியும் தீயின் மையம் பூஞ்சோலையாக மாறிவிடுவது அசாத்தியம் அல்ல. சிறிய ஊசியின் காது வழியே பெரிய ஒட்டகை நுழைந்து வெளியேறுவது அசாத்தியம் அல்ல. இறைத்தூதர்கள் மற்றும் இறைநேசர்களின் புதைக்கப்பட்ட புனித உடல்கள் காலா காலத்துக்கும் அணுவும் அழியாமல் அப்படியே இருப்பது அசாத்தியம் அல்ல.

இவையெல்லாம் அசாத்திய நிகழ்வுகள் அல்ல. ஆனால் அரிய நிகழ்வுகள்.
படைப்புக்களின் சுயங்கள் அல்லாஹ்வின் அறிவில் தரிப்பட்டுள்ளன. அவற்றை அவன் தன் உள்ளமையில் வெளிப்படுத்திக் காட்டுகின்றான். அவற்றை இறைத்தூதர் நாடியபடிக்கு வெளிப்படுத்திக் காட்டுவது அந்த இரைத்தூதரின் மீது அவன் கொண்டுள்ள நேசத்தின் அடையாளமாக இருக்கின்றது.

”உம் ரட்சகனின் பக்கம் நீர் பார்க்கவில்லையா,
நிழலை அவன் எப்படி நீட்டுகிறான் என்பதை?”
(25:45)

நிழல் (ழில்) என்று இங்கே குறிப்பிடப்பட்டிருப்பதன் உட்பொருள் படைப்புக்களின் சுயங்களைத்தான் என்று சூஃபிகள் விளக்குகின்றார்கள். ஈசா (அலை) அவர்களின் கைகள் இழுத்தபோது இறைவனே பலகையைத் தன் உள்ளமையில் நீட்டித்து வெளிப்படுத்தி (ஜுஹூர் ஆக்கித்) தந்தான்.

இந்த நிகழ்ச்சி மக்களிடம் பரவிய போது சிலர் சொன்னார்கள், “இது ஓர் அற்புதம். எனவே அந்தப் பையன் ஒரு ஞானியாக இருக்கவேண்டும்”

வேறு சிலர் சொன்னார்கள், “நாங்கள் இந்தக் கட்டுக்கதையை நம்பமாட்டோம். மீண்டும் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம்”

இன்னும் சிலர் சொன்னார்கள், “இது உண்மையாக இருக்க முடியாது. எனவே இதையெல்லாம் நூற்களில் எழுதி வைக்காதீர்கள்”

முன்பு சொன்ன அதே மூன்று மனநிலைகள் இங்கே எதிர் வரிசையில் சொல்லப் படுகின்றன. கலையுணர்வு கொண்டவர்கள் அந்த அற்புத நிகழ்ச்சியை வியந்து போற்றுகின்றார்கள். பகுத்தறிவுவாதிகள் அதை சந்தேகிக்கின்றார்கள். மீண்டும் நிகழ்த்திக் காட்டுமாறு கேட்கிறார்கள். இது அறிவியல் அணுகுமுறை. அற்புதங்கள் தன் இஷ்டப்படி ஞானிகளால் நிகழ்த்தப்படுவன அல்ல. அவர்களின் வழியாக இறைவன் நிகழ்த்துவன. மீண்டும் மீண்டும் செய்து பார்க்க அவை விஞ்ஞானச் சோதனைகள் அல்ல. இது அந்த அறிவுஜீவிகளுக்குப் புரியவில்லை. மூடிய மனநிலை உள்ளவர்கள் அந்த அற்புதத்தை அறவே ஏற்க மறுக்கிறார்கள்.

கலை ஆராதிக்கிறது, அறிவியல் ஆராய்கிறது, மூடிய மனம் நிராகரிக்கிறது.
இந்த மூன்று சாராரிடமும் வெவ்வேறு உணர்வுகள் இருந்தாலும் அவர்களில் எவரும் அந்த அற்புதத்தின் சாராம்சத்தை அடைந்துகொள்ளவே இல்லை. “அவர் ஒரு மரப்பலகையை நீளமாக்கினார்” என்னும் வாசகத்தின் உட்பொருள் என்ன என்பதை அவர்கள் விளங்கவே இல்லை.

மூன்று மனநிலைகளுமே ஆன்மிகத்திற்குப் போதுமானவை அல்ல. மனம் ஒரு வீடு என்றால் கலை அதன் முன்வாசல், அறிவியல் அதன் பின்வாசல். (மூடிய மனமோ இரண்டு கதவுகளையும் அடைத்துக் கொண்டது.) ஆனால் ஆன்மிகமோ அந்த வீட்டின் கூரையைப் பிய்த்தெறிந்து விடுகின்றது.

இதனை விளக்க மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் சொல்லும் ஒரு குறியீடு:
”மழை பெய்து கொண்டிருந்தது. சிங்கம் ஒன்று அதில் நனைந்தபடி கம்பீரமாக நடந்து போய்க் கொண்டிருந்தது. கொடாப்புக்குள் கூனிக் குறுகி அமர்ந்திருந்த கோழி ஒன்று அந்தச் சிங்கத்தைப் பார்த்து இரக்கப்பட்டது. ‘சிங்கமே! மழைல நனஞ்சீன்னா ஒனக்கு ஜல்ப்பு புடிச்சுக்கும், காய்ச்சல் வந்துரும். இப்படி உள்ள வா. மழ விட்டப்புறம் போகலாம்’ என்று அழைப்பு விடுத்தது. சிங்கம் அந்தக் கோழியின் அன்பான அழைப்பை ஏற்றுக் கொண்டது! கொடாப்பையும் காணவில்லை, கோழியையும் காணவில்லை!

அன்பர்களே! பிரபஞ்சமெங்கும் பொழிந்து கொண்டிருக்கும் இறையருள் என்னும் மழையில் ஆனந்தமாக நனைந்தபடி நடைபோடும் சிங்கம்தான் ஆன்மிகம். மனித மனமோ கொடாப்புக்குள் ஆசைகளை அடைகாத்தபடி படுத்திருக்கும் கோழியாக உள்ளது.
சிங்கத்திற்கு அழைப்பு விடுப்போம். அந்தச் சிங்கத்திற்குள் நாம் இருப்போம்!
     
இந்தக் கதைக்கு இத்ரீஸ் ஷாஹ் எழுதிய பின்குறிப்பு:

ஏசுநாதரை ஆன்மிகப் பாதையின் ஒரு குருவாக சூஃபி ஆசிரியர்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றார்கள். அவரைப் பற்றி வாய்மொழியாக வழங்கப்பட்டு வருகின்ற ஏராளமான மரபுக் கதைகள் மத்திய நாடுகளில் உள்ளன. திறமை மிக்க தொகுப்பாளருக்காக அவை காத்திருக்கின்றன. இந்தக் கதை பல்வேறு வடிவங்களில் பல சூஃபிப் பிரதிகளில் காணப்படுகின்றது. பைபிளில் ஏசுவுக்கு வழங்கப்படும் பல பெயர்கள், ‘தச்சனின் மகன்’ போன்றவை, குறியீடான ஆன்மிகப் பெயர்களே அன்றி வரலாற்று ரீதியானவை அல்ல என்று சூஃபிகள் சொல்கிறார்கள்.

Tuesday, August 6, 2013

நோன்பைத் திறந்து... part-3

நோன்பு நோற்றிருந்த அடியானில் அல்லாஹ் தன் நிலையை (ஹால்) அடியானில் பிரதிபலித்திருந்தான். இஃப்தார் செய்த பின் அந்தப் பிரதிபலிப்பு அடியானிலிருந்து மறைந்து விடுகிறதே தவிர அல்லாஹ்வின் நிலை அவனை விட்டும் எங்கும் நீங்காது, மாறாது. அல்லாஹ்வும் அடியானை விட்டும் நீங்குவதில்லை.

“அவன் உங்களுடன் இருக்கிறான், நீங்கள் எங்கிருந்த போதும்”
(வ ஹுவ மஅகும் அய்ன மா குன்தும் -57:4)

அல்லாஹ்வுக்கு உணவின் தேவை இல்லை. இஃது அவனுடைய சுயத்தின் நிலை ஆதலால் அவனுக்குப் பசியோ தாகமோ இல்லை. ஆனால் அடியானின் ஃபித்ரத் – இயற்கை இயல்பு, உணவின் தேவை உண்டு என்பதுதான். எனவேதான், நோன்பில் அல்லாஹ்வின் ஹால் (நிலை) அடியானில் பிரதிபலித்த போதும் அதன் அஸராத் (விளைவுகள்) அடியானுடைய இயல்புக்கு ஏற்ப உண்டாகி அவனுக்குப் பசியும் தாகமும் மிகைத்து விடுகின்றது.

இந்த இடத்தில், நோன்பு திறந்த பின் – இஃப்தாருக்குப் பின் நபி(ஸல்) அவர்கள் ஓதிய மந்திரத்தைக் கவனியுங்கள்:
“தாகம் போனது (தஹபழ் ழமாஉ)
நாளங்கள் நனைந்தன (வப்தல்லத்தில் உரூக்கு)
நற்கூலி உறுதிப்பட்டது (வ-ஸபத்தில் அஜ்ரு)
அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹு)”
(நூல்: சுனன் அபூதாவூத்: கிதாபுஸ் ஸவ்ம்: 2350; தாருகுத்னி: 25)

உறுதிப்பட்ட அந்த நற்கூலி எது? மறுமையில் இறைவனின் சந்திப்பு (லிகா).

’தாகம் போயிற்று’ என்றுதான் நபி(ஸல்) கூறுகின்றார்கள். நோன்பு போயிற்று என்று அல்ல. அது அடியானுடன் இருக்கும் அல்லாஹ்விடம் நீங்காமல் இருக்கின்றது.

இப்படியாக, நோன்பு சம்மந்தப்பட்ட மூன்று மந்திரங்களுமே ’அபூதாவூத்’ என்னும் ஹதீஸ் கிரந்தத்தில் காணப்படுவதும் எனக்கு வியப்புத் தட்டிற்று. காரணம், நோன்பு என்னும் வணக்கத்திற்கும் நபி தாவூத் (அலை) அவர்களுக்கும் ஆழமான தொடர்பு உண்டு.

வருடம் முழுவதும் நோன்பு வைப்பேன் என்று சொன்ன அபூ சயீதுல் குத்ரீ (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) சொன்ன அறிவுரை: “ஒர் நாள் நோன்பு வைத்து ஒரு நாள் விட்டு விடுக. இதுவே நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பு. நோன்புகளில் மிகவும் சிறந்தது இதுவே.” (நூல்: ஸஹீஹுல் புகாரீ: 1840).

நோன்புடன் நபி தாவூத் (அலை) அவர்களுக்குள்ள தொடர்பு இது மட்டும்தானா? நோன்பின் அகமியங்களை விளங்குவதற்கு அன்னாரின் வாழ்க்கைக் குறிப்புக்கள் நமக்கு வழிகாட்டுகின்றன.

நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதங்களில் ஒன்று இரும்பினைக் கையால் மெழுகைப் போல் இலகுவாக உருக்கிக் கவசங்கள் தயாரித்தார்கள் என்பது.

அல்லாஹ் கூறுகிறான்:
“அவருக்கு நாம் இரும்பை மென்மையாக்கினோம்;
வலிமையான போர்க் கவசங்கள் செய்க
அவற்றின் கண்ணிகளை உறுதியாக்குக”
(வ அலன்னா லஹுல் ஹதீத்;
அனிஃமல் சாபிகாத்தின் வ கத்திர் பிஸ்சர்த் -34:10,11)

அல்லாஹ் கூறுகின்றான் (ஹதீஸ் குத்ஸி): “நோன்பு ஒரு கவசம்” (அஸ்ஸவ்மு ஜுன்னத்)
கவசம் தயாரிக்க நெருப்பு வேண்டுமே? ’ரமலான்’ என்றால் கரிப்பது என்று பொருள். பாவங்களைக் கரிக்கும் நெருப்பு அது.

இரும்பு எது? நம்முடைய ’நான்’ என்னும் தன்முனைப்பு (அனிய்யத்).

ரமலான் என்னும் நெருப்பில் தன்முனைப்பை உருக்கி நோன்பு என்னும் கவசம் செய்க. அதிகாலையில் அந்த நெருப்பில் உன் தன்முனைப்பு உருகத் தொடங்கட்டும். நோன்பு தொடங்கும் முன் உள்ள நேரம் ‘சஹர்’ எனப்படும். ’இரவு விழிப்பு’ என்பது அதன் பொருள். (இதன் உச்சரிப்பு: சீன்-ஹா-ரே)

இன்னொரு சஹர் இருக்கின்றது (உச்சரிப்பு: ஸாத்-ஹா-ரே). இதற்கு இரண்டு அர்த்தங்கள்: உருகுதல் மற்றும் திருமண உறவு.

நோன்பாளியே! நான் என்னும் தன்முனைப்பை ரமலானின் நெருப்பில் உருக்கிவிடு, உன் ரட்சகனின் சந்திப்பிற்காக.

“இரவின் விழிப்பில்
எழுந்த நெருப்பில்
உருகத் தொடங்கியது உள்ளம்
உன்னை அடைவதற்காக”

நோன்பு ஒரு கவசம். இஃப்தார் என்பது நோன்பு திறத்தல். கவசத்தைத் திறத்தல் என்பது கழற்றுதல். அரசன் எப்போது கவசத்தைக் கழற்றுவான்? வெற்றி (ஃபலாஹ், ஃபத்ஹ்) அடைந்ததும் அல்லவா?

அது என்ன போர்? அதன் வெற்றி எது? இந்தத் திருவசனத்தை கவனிக்கவும்:
“எவர் நம்மில் போர் செய்வாரோ
அவரை நம் வழிகளில் செலுத்துவோம்”
(வல்லதீன ஜாஹிதூ ஃபீனா
லனஹ்தியன்னஹும் சுபுலனா -29:69)

’ஜாஹிதூ ஃபீனா’ (நம்மில் போர்செய்வாரோ) என்பதன் கருத்து என்ன? அதன் வெளிப்படையான பொருள் (ழாஹிரி மஃனா) ’நமக்காகப் போர் செய்வாரோ’. அந்தரங்கப் பொருள் (பாத்தினி மஃனா) ‘வல்லதீன ஜாஹிதூ ஃபீ அனா’ – ‘எவர் ’நான்’ என்பதில் போர் செய்வாரோ’ அதாவது, தன்முனைப்புடன் போரிடுவாரோ அவரை இறைவன் தன்னை அடையும் பாதைகளில் அழைத்துச் செல்கிறான். இறைவனை அடைவதற்கான பல வழிமுறைகளை அவர் அறிந்துகொள்வார்.

இரும்பு வாள் கொண்டு செய்யும் போரினை நபி(ஸல்) அவர்கள் சிறிய போர் (ஜிஹாதுல் அஸ்கர்) என்றும் ’நான்’ என்னும் தன்முனைப்புடன் (மனோ இச்சைகளுடன்) செய்யும் போரினைப் ’பெரிய போர்’ (ஜிஹாதுல் அக்பர்) என்றும் குறிப்பிட்டார்கள். (நூல்: பைஹகீ)

சிறிய போர் வெளியில் நிகழ்கிறது. பெரிய போர் உள்ளில் நிகழ்கிறது. எனவே, மேற்காணும் திருவசனத்தின் வெளிப்பொருள் (இபாரத்துன் நஸ்ஸ்) சிறிய போரினையும் உட்பொருள் (இஷாரத்துன் நஸ்ஸ்) பெரிய போரினையும் சுட்டுகின்றன.

நபி தாவூத் (அலை) செய்த ’சிறிய போர்’ ஒன்று தன்முனைப்பை வீழ்த்துவதற்காகச் செய்யப்படும் ஆன்மிகமான பெரிய போருக்கு விளக்கமாக அமைகின்றது. அது, ஜாலூத்தின் (கோலியாத்தின்) படைகளுடன் நபி தாவூத் (அலை) அவர்களின் தலைமையிலான படை போரிட்டு வென்றதாகும். ’ஜாலூத்’ தன்முனைப்பின் குறியீடாவான். அது பற்றி அல்லாஹ் பின்வருமாறு சொல்கிறான்:

“தாவூது ஜாலூத்தைக் கொன்றார்
அல்லாஹ் ஆட்சியையும் ஞானத்தையும் தந்தான்
தான் விரும்பியதை எல்லாம்
அவருக்குக் கற்பித்தான்”
(வ கதல தாவூது ஜாலூத்த
வ ஆதாஹுல்லாஹுல் முல்க வல் ஹிக்மத
வ அல்லமஹு மிம்மா யஷாஉ -2:251)

ஜுன்னத் (கவசம்) என்பதில் உள்ள பேஷ் என்னும் முடிச்சைக் கழற்றினால் அது ஜன்னத் (சொர்க்கம்) ஆகிறது. ஜன்னத்தில் அடியான் அடையும் பேரின்பம் – நோன்பாளியின் இரண்டாம் இன்பம் – அல்லாஹ்வின் சந்திப்பு (லிகா) அல்லவா?

எனவே இஃப்தார் என்பது நோன்பு என்னும் ஜுன்னத்தைத் திறந்து ஜன்னத்தின் இன்பத்தை முன்மாதிரியாக இங்கே ரிஜ்கின் வழியே அடையும் சிறிய ’லிகா’ ஆகும்.

”போரின் முடிவில்
கவசத்தைக் கழற்றினேன்
சொர்க்கத்தில்
உன்னை தரிசிக்க”

நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பு முறைதான் (ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு வைப்பதுதான்) நோன்புகளில் மிகவும் சிறந்தது என்று நபி(ஸல்) குறிப்பிட்ட ஹதீஸை முன்பு கண்டோம் அல்லவா? இங்கே இன்னொரு விஷயத்தின் பக்கம் கவனம் செலுத்துவோம்.

நோன்பு என்பது படைப்புக்களின் தொடர்பை விட்டும் நீங்கியிருத்தலின் நிலையை நம்மில் ஓரளவு கொண்டுவருவதாக உள்ளது. (உணவு பானம் தாம்பத்யம் ஆகியவற்றை விட்டும் நீங்கி இருப்பது)

’இஃப்தார்’ என்பது படைப்புக்களின் தொடர்பை (உண்ணுதல், குடித்தல், தாம்பத்ய உறவு) மீண்டும் அடியான் அடைந்து கொள்வதாக உள்ளது.

அல்லாஹ் படைப்புக்களை விட்டும் நீங்கித் தன்மயமாக இருக்கும் நிலைக்கு ’ஷஃனே தன்ஸீஹ்’ என்றும் அவன் தன் படைப்புக்களுக்குத் தான் ரட்சகனாய் இருந்து அவற்றில் வெளிப்படும் நிலைக்கு ’ஷஃனே தஷ்பீஹ்’ என்றும் சொல்லப்படும்.

நோன்பு ஷஃனே தன்ஸீஹின் பக்கம் காட்டக்கூடிய குறிப்பாகவும், இஃப்தார் ஷஃனே தஷ்பீஹின் பக்கம் காட்டக்கூடிய குறிப்பாகவும் இருக்கின்றன.

நபி தாவூத் (அலை) அவர்கள் நோன்பைச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். நபி முஹம்மத் (ஸல்) அவர்களோ தன்ஸீஹ் தஷ்பீஹ் ஆகிய இரண்டின் பக்கமும் மக்களை வழிநடத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். எனவே, தினமும் நோன்பு நோற்று வந்த அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்களை நோக்கிச் சொன்னார்கள், “சில நாட்கள் நோன்பு வையுங்கள், சில நாட்கள் விட்டு விடுங்கள்” (நூல்: புகாரி, முஸ்லிம், நசாயீ, திர்மிதி, இப்னு மாஜா)

மேலும் நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியின் இன்பம் நோன்பில் இருப்பதாகச் சொல்லவில்லை, நோன்பின் முடிவில் இஃப்தாரில் இருப்பதாகச் சொன்னார்கள்.
ஷஃனே தன்ஸீஹில் – அல்லாஹ் என்னை விட்டுப் பிரிந்து எனக்கு அப்பால் இருப்பதில் எனக்கு எப்படி இன்பமிருக்க முடியும்?

ஷஃனே தஷ்பீஹில் – அல்லாஹ் என்னுடன் இருப்பதில்தான் என் இன்பம் உள்ளது.
இந்தத் தன்மைகள் நபிமார்களின் பெயர்களிலேயே பிரதிபலிப்பதாக இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் விளக்குகின்றார்கள்:

”தாவூத் என்னும் பெயரில் உள்ள அனைத்து எழுத்துக்களும் (அரபியில்) ஒன்றோடொன்று ஒட்டாமல் பிரிந்து நிற்கின்றன. எனவே அவர்களில் ஷஃனே தன்ஸீஹின் ஞானம் அதிகமாக வெளிப்பட்டிருந்தது. முஹம்மத் என்னும் பெயரில் அனைத்து எழுத்துக்களும் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன. எனவே அவர்களில் ஷஃனே தஷ்பீஹின் ஞானம் அதிகமாக வெளிப்பட்டிருந்தது”

இது இறைவனின் மாபெரும் அருட்கொடை ஆகும். அந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் அகிலத்திற்கெல்லாம் அருட்கொகையாக (ரஹ்மத்தல்லில் ஆலமீன்) இருப்பதன் பொருள் அகிலங்கள் அனைத்தும் அவர்களைக் கொண்டு அல்ல்லாஹ்வுடன் ஷஃனே தஷ்பீஹில் தரிப்பாடாகியுள்ளது.


நாமும் அன்னாரின் ஆன்மிக வழியில் அல்லாஹ்வின் சந்திப்பை அடைவோமாக!

Monday, August 5, 2013

நோன்பைத் திறந்து... part-2

அடியான் அவனது இச்சையையும் உணவையும் குடிப்பையும் விட்டுவிடுவதாக அல்லாஹ் சொல்கிறான். நோன்பு என்னும் ரசவாதத்தில் இச்சை மறைந்து இறைக்காதல் தோன்றிவிடுகிறது.

“அவனது உணவையும் அவனது குடிப்பையும்” (அக்லஹு வ ஷுர்பஹு) என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பைத் திறக்கும் அடியானோ “(இறைவா!) உன்னுடைய இரணத்தைக் கொண்டே நோன்பைத் திறக்கிறேன்” (வ அலா ரிஸ்கிக அஃப்தர்த்து) என்று சொல்கிறான்.

அடியானின் உணவு (அக்லஹு) என்று அல்லாஹ் சொன்னதன் பொருள், அந்த உணவு அவனுக்காக படைக்கப்பட்டது என்பதாகும். இது இறைவன் தன் அடியானிடம் கொண்டுள்ள கருணையைக் காட்டுகின்றது.

அல்லாஹ்வின் உணவு (ரிஸ்கிக) என்று அடியான் சொல்வது, அந்த உணவுக்கும் அல்லாஹ்வுக்கும் உள்ள தொடர்பை அவன் உணர்ந்துகொண்டான் என்பதைக் காட்டுகின்றது. உணவு (ரிஜ்க்) உணவளிப்பவனான (ரஜ்ஜாக்) இறைவனிடமிருந்து வருகின்றது (மினல்லாஹ்) என்பது நோன்பிற்கு முன்பே உணரப்பட்டதுதான். நோன்பின் அனுபவத்தில் உணர்ந்து கொண்டது அதனினும் ஆழமான ஓர் உண்மை.

இரணம் (ரிஜ்க்) என்பதும் ஒரு படைப்புத்தான் (ஃகல்க்). எனவே அதன் எதார்த்தமும் ’ஃபனா’வே ஆகும். அதன் எதார்த்த நிலையும் இல்லாமை (அதமிய்யத்) ஆகும். அதற்கென்று தனியே உஜூது (உள்ளமை) ஏது? அதுவும் இறைவனின் உள்ளமையில் அவனால் தரிப்படுத்தப் பட்டுள்ளது (காயிம் பிமவ்ஜூதிஹி). ரிஜ்க் ரஜ்ஜாக்கை விட்டுப் பிரிந்தில்லை. இதை நோன்பாளி உணர்ந்து கொள்கிறான்.

”இறைவா! உன் உணவைக் கொண்டே நோன்பைத் திறக்கிறேன்” (வ அலா ரிஜ்கிக அஃப்தர்த்து) என்று அடியான் சொல்கிறான். நோன்பின் நிலையிலிருந்து உண்ணவும் பருகவுமான நிலைக்கு மீள்வதற்கு ’இஃப்தார்’ என்று சொல்லப்படுகிறது. இதன் வேர்ச்சொல் ’ஃபதர’ என்பதாகும். அதற்கு முக்கியமான மூன்று அர்த்தங்கள் உள்ளன: உடைத்தல், படைத்தல் மற்றும் இயற்கை (ஃபித்ரத்).

மனிதன் தான் படைக்கப்பட்ட இயற்கை நிலைக்கு மீள்கிறான் என்னும் பொருளிலும் அது இஃப்தார் ஆகிறது. உடைத்தல் என்னும் அர்த்தத்தில்தான் ஆங்கிலத்தில் அதனை Breakfast அதாவது to break the fast என்று கூறுகின்றார்கள். தமிழில் ”நோன்பு திறத்தல்” என்று நளினமாகச் சொல்கிறோம்.

அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று “அல்-ஃபாத்திர்”. படைப்புக்களை இன்மையில் இருந்து உள்ளமைக்குக் கொண்டு வருபவன்.

“கூறுக: அல்லாஹ்வே! வானங்களின் மற்றும் பூமியின் படைப்பாளனே!”
(குலில்லாஹும்ம ஃபாத்திருஸ் சமாவாத்தி வல் அர்ள் – 39:46)

சரி, உடைத்தலுக்கும் படைத்தலுக்கும் என்ன சம்பந்தம்? விடையாகப் பின்வரும் திருவசனத்தைக் கருதலாம்:

“நிச்சயமாக அல்லாஹ்தான் தானியங்களையும் விதைகளையும் பிளப்பவன். இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகின்றான். உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளிப்படுத்துகின்றான். அவன்தான் அல்லாஹ். பின் எப்படி நீங்கள் திசைகெட்டுத் திரிகின்றீர்?” (இன்னல்லாஹ ஃபாலிக்குல் ஹப்பி வந்நவா; யுஃக்ரிஜுல் ஹய்ய மினல் மய்யி(த்)தி வ முஃக்ரிஜுல் மய்யி(த்)தி மினல் ஹய்ய்; தாலிகுமுல்லாஹு, ஃபஅன்னா து’ஃபகூன் -6:95)

தானியங்களும் வித்துக்களும் உடைகின்றபோதுதான் அவை முளை விட்டுச் சிறு செடியாகின்றன. உடைப்பவன் என்பதற்கு மேற்கண்ட திருவசனத்தில் வந்துள்ள சொல் ’ஃபாலிக்’ என்பதாகும். இந்தச் சொல்லின் வேரிலிருந்தே விடியல் நேரத்தைக் குறிக்கும் ஃபலக் என்னும் சொல் வருகின்றது. ஆங்கிலத்தில் Daybreak!

”கூறுக: விடியற்காலையின் ரட்சகனிடம் பாதுகாவல் தேடுகிறேன்”
(குல் அஊது பி-றப்பில் ஃபலக் -113:1)

தானியங்களும் விதைகளும் முளை விடுவதற்காகப் பிளக்கின்ற செயல்பாட்டிற்கும் இருளில் வெளிச்சம் பரவுகின்ற விடியலுக்கும் ஓர் உருவகத் தொடர்பை இறைவனின் ஞானம் நமக்கு உணர்த்துகின்றது.

இருளின் விதை பிளந்து
ஒளி முளைவிட்ட போது...

தொழுகைக்கான பாங்கழைப்பில் ஓதப்படும் வரிகள்:
ஹய்ய அலஸ் ஸலாத் – தொழுகையின் பக்கம் வாருங்கள்
ஹய்ய அலல் ஃபலாஹ் – வெற்றியின் பக்கம் வாருஙள்

ஃபலாஹ் – வெற்றி என்பது என்ன? அறபிகளின் தொன்மையான பொருளில் ஃபலாஹ் என்பது வித்து பிளந்து முளை விடுவதைக் குறிக்கும். அதாவது ஹயாத்தின் (வாழ்வின், ஜீவனின்) அடையாளம் அது.

அதற்கும் ஸலாத் – தொழுகைக்கும் என்ன தொடர்பு? தொழுகை என்பது ஒருவித ’ஃபலாஹ்’ – விதை பிளத்தல் ஆகும்.

“இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் பதிலளியுங்கள், அவர் உங்களை உங்களுக்கு உயிரளிப்பதின் பக்கம் அழைக்கும்போது” (யா அய்யுஹல்லதீன ஆமனுஸ்தஜீபூ லில்லாஹி வ லிர்ரசூலிஹி இதா தஆகும் லிமா யுஹ்யீகும் – 8:24)

விடிகாலை என்பதென்ன? இருளின் மீது வெளிச்சம் பரவித் தன்னைக் காட்டிக்கொண்டு அதனை மறைப்பதாகும்.

படைத்தல் என்பது என்ன? படைப்புக்களின் எதார்த்த நிலையான அதமிய்யத்தின் (இன்மையின்) மீது அல்லாஹ் தன் உள்ளமையின் (உஜூதின்) சுடர்களை வெளிப்படுத்துவது (ஜுஹூர்). படைப்புக்களின் இன்மையான குணங்களை (சிஃபாத்தே நாக்கிஸா) தன் பூரணமான குணங்கள் (சிஃபாத்தெ காமிலா) கொண்டு மறைப்பது.

எனவே விடியல் தொழுகையின் (ஃபஜ்ரு / ஸுப்ஹு) பாங்கழைப்பில் கூடுதலாகச் சொல்லப்படுகின்றது:
அஸ்ஸலாத்து ஃகைரும் மினன் நவ்ம்” – தூக்கத்தை விட தொழுகை மேலானது – உறக்கத்தினும் தொழுகை நன்று.

(6:95)-ஆம் திருவசனத்தில் விதை பிளத்தலைத் தொடர்ந்து ”இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகின்றான்” (யுஃக்ரிஜுல் ஹய்ய மினல் மய்யி(த்)தி) என்று அல்லாஹ் சொல்வதன் ஒரு விளக்கம் இது.

எவ்வாறெனில், நபி(ஸல்) நவின்றார்கள்: ’தூக்கம் என்பது மரணத்தின் சகோதரன்’ (நூல்:மிஷ்காத்).

திருக்குர்ஆனில் உறக்கம் என்பது மரணத்திற்கும், உறக்கத்திலிருந்து விழித்தெழுவது வாழ்விற்கும் தொடர்புபடுத்திப் பேசப்பட்டுள்ளது:
”அவன்தான் இரவில் உங்களை மரிக்கச் செய்கிறான். மேலும், நீங்கள் பகலில் செய்தவற்றை எல்லாம் அறிகிறான். குறித்த தவணை முடிவதற்காக மீண்டும் உங்களைப் பகலில் எழுப்புகிறான்” (ஹுவல்லதீ யதவஃப்பாக்கும் பில் லைல் வ யஃலமு மா ஜரஹ்தும் பின்நஹாரி ஸும்ம அப்அஸுகும் ஃபீஹி லியுக்ளா அஜலும் முசம்மன் – 6:60)

”அல்லாஹ் உயிர்களை அவர்கள் மரணிக்கும்போதும், மரணிக்காதவர்களுக்கு அவர்களின் தூக்கத்திலும் கைப்பற்றுகிறான். பின்பு, எதன்மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை நிறுத்திக் கொள்கிறான். பிறவற்றை குறித்த தவணை வரை அனுப்பி விடுகிறான். சிந்திப்போருக்கு இதில் அத்தாட்சிகள் உள்ளன” (அல்லாஹு யதவஃப்பல் அன்ஃபுச ஹீன மவ்த்திஹா வல்ல(த்)தீ லம் தமுத் ஃபீ மஹாமிஹா. ஃபயும்சிகுல்லதீ களா அலைஹல் மவ்த்த வ யுர்சிலுல் உஃக்ரா இலா அஜலிம் முசம்மன். இன்ன ஃபீ தாலிக லஆயாதில் லிகவ்மின் யதஃபக்கரூன் -39:42)

எனவே, உறங்கச் செல்லும்போது நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்:
”உன் பெயரைக் கொண்டு, அல்லாஹ்வே!, மரணிக்கிறேன் பின் உயிர்த்தெழுகிறேன்” (பிஸ்மிக்க அல்லாஹும்ம அமூத்து வ அஹ்யா – நூல்: முஸ்லிம், ஃபத்ஹுல் பாரீ)

”உன் பெயரைக் கொண்டு, என் ரட்சகனே, என்னைச் சாய்க்கிறேன். உன்னைக் கொண்டே எழுகிறேன். நீ என் உயிரைக் கைப்பற்றினால் அதன் மீது கருணை செய். நீ அதை மீண்டும் அனுப்பினால் அதைப் பாதுகாப்பாயாக, உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பதைப் போல்” (பிஸ்மிக்க றப்பீ வளஃது ஜன்ம்பீ, வபிக அர்ஃபஉஹு, ஃபஇன் அம்சக்த நஃப்சீ ஃபர்ஹம்ஹா, ஃபஇன் அர்சல்தஹா ஃபஹ்ஃபழ்ஹா, பிமா தஹ்ஃபழு பிஹி இபாதகஸ் ஸாலிஹீன் – நூல்: புகாரி, முஸ்லிம்)

”அல்லாஹ்வே! நீயே என் ஆன்மாவைப் படைத்தாய், நீயே அதனை எடுத்துக்கொள்கிறாய். அதன் மரணமும் அதன் வாழ்வும் உனக்கே. நீ அதற்கு வாழ்வளித்தால் அதனைப் பாதுகாப்பாயாக. நீ அதை மரணிக்கச் செய்தால் அதற்கு மன்னிப்பு அளிப்பாயாக. அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் ஆரோக்கியத்தை வேண்டுகிறேன்” (அல்லாஹும்ம இன்னக ஃகலக்த நஃப்சீ வ அன்த தவஃப்பாஹா லக மமாத்துஹா வ மஹ்யாஹா, இன் அஹ்யய்தஹா ஃபஹ்ஃபழ்ஹா வ இன் அமத்தஹா ஃபக்ஃபிர் லஹா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்கல் ஆஃபியத் – நூல்: முஸ்லிம், அஹ்மத்)
 
ஆக, உறங்கி எழும் நேரமான விடியல் என்பது வாழ்வுடனும் படைப்புடனும் தொடர்புடையதாக உள்ளது.

“இருளின் விதை பிளந்து
ஒளி முளைவிட்ட போது
என்னை அழைத்தாய் நீ
வைகறையின் வாசலில்
சட்டென்று என்னில் நிறைந்தாய் நீ”

விடியலை அறபியில் ’ஃபஜ்ரு’ என்றும் சொல்வார்கள். ஃபஜர என்னும் வேர்ச்சொல்லுக்கு உடைத்தல், பிளத்தல் ஆகிய அர்த்தங்கள் உண்டு.

ஃபலாஹ் என்றால் வெற்றி என்றும் அது விதை பிளத்தலைக் குறிக்கும் என்றும் கண்டோம். வெற்றி என்பதைக் குறிக்க இன்னொரு சொல் ஃபதஹ் என்பதாகும்.
அல்லாஹ் தன் நேச நபியைப் பார்த்துச் சொல்கிறான்:
”நிச்சயமாக நாம் உமக்குத் தெளிவான வெற்றியாக வெற்றியளித்தோம்” (இன்னா ஃபதஹ்னா லக ஃபத்ஹம் முபீனா – 48:1)

’ஃபத்ஹ்’ என்பதன் (வேர்ச்சொல்: ஃபதஹ) பொருள் என்ன? திறத்தல், ஆரம்பித்தல். எனவே திருக்குர்ஆனின் திறப்பாகவும் ஆரம்பமாகவும் அமைந்த அத்தியாயத்தின் பெயர் “அல்-ஃபாத்திஹா” என்றானது.

எனவே, (48:1)-ஆம் திருவசனத்தின் உட்பொருள்: “(நபியே) மகத்தான திறப்பாக உமக்கு நாம் திறந்தோம்.”

இது தொடர்பாக இன்னொரு திருவசனம்: “உமக்காக உம் நெஞ்சை நாம் விரிவாக்க வில்லையா?” (அலம் நஷ்ரஹ் லக ஸத்ரக் -94:1)

படைப்புக்கள் அனைத்திற்கும் நபியே மகத்தான திறப்பாவார், ஆரம்பமாவார். பிரபஞ்ச நூலின் அல்-ஃபாத்திஹா அவர்களே.

நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “வேதநூலின் திறப்பு இன்றித் தொழுகை இல்லை” (லா ஸலாத்த இல்லா பில் ஃபாத்திஹத்தல் கிதாப் – அறிவிப்பாளர்: உபாதா இப்னுஸ் சாமித் (ரலி), நூல்: புகாரி: அத்தியாயம்-12/ 723, சுனன் இப்னு மாஜா: அத்தியாயம்-7 /837).

ஃபாத்திஹா அத்தியாயத்திற்கு ‘உம்முல் குர்ஆன்’ (குர்ஆனின் தாய்) என்றும் ஒரு பெயர் உண்டு. நபி(ஸல்) நவின்றார்கள்: “எவர் தொழுகையில் உம்முல் குர்ஆனை ஓதவில்லையோ அவரின் தொழுகை செல்லாது” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: சுனன் இப்னு மாஜா- அத்தியாயம்-7 / 838)

”உம்முல் குர்ஆன்” என்று சொல்லப்பட்டதன் காரணம் குர்ஆன் முழுவதும் அதிலிருந்து விளக்கமாக வெளிப்படுத்தப்பட்டதே. அதாவது, குர்ஆன் முழுவதும் அதனுள் அடக்கம். உம்ம் (தாய்) என்னும் சொல் இங்கே மூலம் (Source) என்னும் பொருளில் அமைந்துள்ளது.

படைப்புக்கள் முழுமைக்கும் பிரபஞ்சம் முழுமைக்கும் ’உம்மி’ நபியான முஹம்மத் (ஸல்) அவர்களே திறப்பாகவும் ஆரம்பமாகவும் மூலமாகவும் இருக்கின்றார்கள். அந்த நபியில் பிரபஞ்சம் முழுவதுமே அடக்கம்!

இனி, விடியல் – தொழுகை – பிளத்தல் – படைத்தல் - இஃப்தார் என்னும் பொருண்மைகளின் பக்கம் கவனத்தை மீட்போம்.

விடியலுக்கு அரபியில் உள்ள இன்னொரு பெயர் ‘ஸுப்ஹு’. விடியலை அல்லாஹ் வாழ்வுடன் அடையாளப்படுத்திச் சொல்லும் திருவசனத்தில் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளான்:
“விடியலின் மீது சத்தியமாக, அது சுவாசிக்கும் போது”
(வஸ்ஸுப்ஹி இதா தனஃப்பஸ் -81:18)
மூச்சு விடுதல் என்பது வாழ்வின் அடையாளம் அன்றோ!

விடிகாலையில் தொழப்படும் ஃபலக், ஃபஜ்ரு ஆகிய சொற்களுக்கு உடைதல், பிளத்தல் என்னும் அர்த்தங்கள் உண்டு.

நோன்பு திறத்தல் என்பதைக் குறிக்கும் இஃப்தார் (ஃபதர) என்பதற்கும் உடைத்தல், பிளத்தல் என்னும் அர்த்தங்கள் உண்டு.

இந்த பிளத்தல் உடைதல் என்பவை தானியங்கள், விதைகள் ஆகியவை பிளந்து செடிகளும் பயிர்களும் பிறத்தலைக் குறிக்கின்றன. இதனால் அவை படைத்தல் என்பதைக் குறிப்பதாகின்றன.

ஃபதர என்னும் வேரிலிருந்தே அல்லாஹ்வின் திருநாமங்களுள் ஒன்றான ‘அல்-ஃபாத்திர்’ (படைப்பவன்) என்பது வருகின்றது.

இருளில் ஒளி பரவும் நேரம் விடியல். அது ஃபஜ்ரு. அது ஃபலக்.

என் அதமிய்யத்தில் (இன்மையில்) அல்லாஹ்வின் உள்ளமையின் சுடர்கள் பிரதிபலித்து என்னை நிலைப்படுத்தி வைத்திருக்கிறான் என்னும் அனுபவ உணர்வைத் திறப்பது இஃப்தார்.

அதை நான் அவனது உணவைக் கொண்டே திறக்கிறேன். உணவு மட்டுமென்ன, சுயமாகவா நிலைப்பட்டுள்ளது? அதுவும் அதம் (இன்மை) அல்லவா? படைப்பு (ஃகல்க்) அல்லவா? அதுவும் அவனின் உள்ளமையைக் கொண்டே நிலைப்படுத்தப் பட்டுள்ளது. (அவன் உணவாகிவிடவும் இல்லை, உண்பவன் ஆகிவிடவும் இல்லை என்னும் நிலையில்) உணவிலும் உண்பவனிலும் இருந்து உண்பவனுக்கு உணவை ஊட்டுபவன் அவனே. இது ரஜ்ஜாக் (உணவளிப்பவன்) என்பதன் விளக்கம் (தஃரீஃப்). எனவே, உணவில் உணவளிப்பவனை அடைவதே ’இஃப்தார்’ ஆகிறது.

இது நோன்பாளிக்கு கிடைக்கும் இரண்டு இன்பங்களில் முதலாவதாகும். அந்த இரண்டு இண்பங்களாக அல்லாஹ் சொல்கிறான் (ஹதீஸ் குத்ஸி): ”நோன்பாளிக்கு இரண்டு இன்பங்கள் உள்ளன: இஃப்தாரின் போதுள்ள இன்பம் மற்றும் அவன் தன் ரட்சகனைச் சந்திப்பதின் போதுள்ள இன்பம்” (லிஸ்ஸாயிமி ஃபர்ஹத்தானி ஃபர்ஹத்துன் ஹீன யுஃப்திரு வ ஃபர்ஹத்துன் ஹீன யல்கா றப்பஹு)

இஃப்தாரில் நோன்பாளி அடையும் முதலாம் இன்பம் – உணவில் உணவளிப்பவனை அடைந்துகொள்வது – சிறிய சந்திப்பு (லிகாயே அஸ்கர்) ஆகும். ஏனெனில் இதில் உணவு என்னும் திரையின் இடையீடு இருக்கின்றது.

நோன்பாளியின் இரண்டாம் இன்பம் என்று சொல்லப்பட்டுள்லது மறுமையில் அவன் தன் ரட்சகனைச் சந்திப்பதாகும். அது பெரிய சந்திப்பு (லிகாயே அக்பர்) ஆகும். அங்கே அவன் எவ்வித இடையீடுமின்றித் தன் இறைவனைச் சந்திப்பான்.

”சூரத்துல் கியாமத்” – ’மறுமை’ என்னும் அத்தியாயத்தில் அல்லாஹ் சொல்கிறான்:
“முகங்கள் அந்நாளில் பிரகாசிக்கும்
தம் ரட்சகனைப் பார்த்தபடி”
(உஜூஹுன்ய் யவ்மஇதின் நாளிர(ஹ்)
இலா றப்பிஹா நாழிர(ஹ்) -75:22,23)


இஃப்தார் என்னும் இந்தச் சிறிய சந்திப்பு அந்தப் பெரிய சந்திப்பிற்கு நம்மைத் தயார் செய்கின்றது.

(to be continued...)