Tuesday, July 1, 2025

நானில்லை நானில்லை

 


இவருக்கு முன்னும் பின்னும் இப்படி ஓர் ஆளுமை இருக்கவில்லை என்று சொல்லிக் கொண்டாடும்படியான மேதைகள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். கவ்வாலி இசைத் துறையில் அப்படி ஒரே ஒருவரைக் குறிப்பிட வேண்டும் என்றால், நிச்சயமாக நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான் எனலாம்.

            நுஸ்ரத் பாடும் பாணியில் வலிமையும் அதே சமயம் மென்மையும் இருந்து இதயத்தில் ரசவாதம் நிகழ்த்தும். அவரைக் கவ்வாலி இசையுலகின் அல்லாமா இக்பால் என்று அழைக்கலாம்.

            நுஸ்ரத் பாடுவதைக் கேட்டுப் பாமரர்கள் முதல் பண்டிதர்கள் வரை பரவசம் ஆகி ஆரவாரம் செய்வர், அழுவர், ஆனந்த மௌனத்தில் ஆழ்வர். தர்காக்களில் நடைபெறும் உரூஸ் கொண்டாட்டங்களில் கிராமத்து மக்களுக்கும் தன் இசைக் கொடையை வாரி வழங்கி அதை ஓர் ஆன்மிகப் பணியாகவே ஆற்றி வந்த அந்த இசை மேதையை மக்கள் ஆட்சேபித்து நிறுத்தச் சொன்ன ஒரு பாடலும் உண்டு என்றால் ஆச்சரியம்தான்!

            ஆம், ஞானப் பாடல் ஒன்றை அவர் கவ்வாலியாகப் பாடும்போது, அதன் வரிகளின் அர்த்தங்கள் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி, இது என்ன இப்படி எழுதியிருக்கிறார்? இது மத துவேஷமான அர்த்தம் உள்ளதாகத் தெரிகிறது, பாடாதீர்கள் என்று மக்கள சொன்னார்கள். அதற்கான விளக்கத்தை நுஸ்ரத்தால் சொல்ல முடியவில்லை.

            இத்தனைக்கும் அந்தப் பாடலை எழுதியவர் சாதாரண மனிதர் அல்லர். மனம் போன போக்கில் எழுதும் வெறும் கவிஞர் அல்லர். அவர் இந்திய ஸூஃபி வரலாற்றில் உயர்ந்து நிற்கும் சிகரங்களில் ஒருவர். பாபா ஃபரீதுத்தீன் (ரஹ்) அவர்கள். அன்னார் எழுதிய ”மன் நியம் வல்லாஹி யாரா” (நானில்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக!) என்னும் பாடலில் வரும் ஒரு வரியைத்தான் மக்கள் புரிந்துகொள்ள இயலாமல் ஆட்சேபித்தனர். அதை அவர் பல இடங்களிலும் பாட முடியாமல் போயிற்று.


            
ஒருமுறை நுஸ்ரத் அவர்கள் தான் சார்ந்திருந்த ஸூஃபி நெறியான சாபிரிய்யா சிஷ்திய்யா நெறியில் ஒரு குருவாக இருந்த பீர் நஸீருத்தீன் நஸீர் (ரஹ்) அவர்களிடம் ஓர் இரவு பேசிக் கொண்டிருக்கும்போது தன் ஐயத்தைக் கேட்டார்: “நாங்கள் பாபா ஃபரீத் அவர்களின் கஜல் ஒன்றைப் பாடுகிறோம். அதில் ஒரு வரி வருகிறது. மக்கள் அதை மிகவும் இஃதிராஸ் (மறுப்பு) செய்கிறார்கள். அதை எனக்குக் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்.”

            ”அதைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை. நீங்கள் எப்போதும் போல் பாடுங்கள்” என்று பீர் நஸீர் (ரஹ்) சொன்னார்கள்.

            ”இல்லை, மக்கள் என்னிடம் விளக்கம் கேட்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை” என்று நுஸ்ரத் சொன்னார்.

            ”அப்படித்தான் ஆகும். ஃகாஸ்ஸயீன் (சிறப்பானோர்)களுக்கு உரிய ஒன்று ’ஆம்ம்’ (பொது) மக்களிடம் வந்துவிட்டால் அவர்கள் கூச்சலும் குழப்பமும் பண்ண ஆரம்பித்து விடுவார்கள். பாபா ஃபரீத் ஒரு மாபெரும் ஸூஃபி ஞானி, முஸ்த்தனத் ஆலிம் ( மார்க்க அறிஞர்), ஸுன்னாஹ் (நபிவழி)யில் பேணுதலானவர். அவருடைய பாடல் அது. சொல்லுங்கள், எந்த வரியை மக்கள் ஆட்சேபிக்கிறார்கள்.” என்று பீர் நஸீர் (ரஹ்) கேட்டார்.

            நுஸ்ரத் சொன்னார், “அதில் ஒரு வரி இப்படி உள்ளது: ’மன் வலீயம் மன் அலீயம் மன் நபி’ (நான் இறைநேசன், நான் ஹஜ்ரத் அலீ, நான் இறைத்தூதர்). பாபா ஃபரீத் எப்படித் தன்னை அலீ (ரலி) என்றும் நபி (இறைத்தூதர்) என்றும் சொல்லலாம்? என்று மக்கள் ஆட்சேபிக்கின்றனர்.”

            பீர் நஸீருத்தீன் நஸீர் (ரஹ்) அந்தப் பாடல் பற்றி நுஸ்ரத்துக்கு விளக்கம் அளித்தார். அதைச் சொல்லும் முன் அந்தப் பாடலை முழுமையாகப் பார்த்து விடுவோம்:

            நானில்லை, என் நண்பர்களே!

அல்லாஹ்வின் மீது சத்தியமாக நானில்லை!

நான் உயிரின் உயிர், நான் ரகசியத்தின் ரகசியம்

உடல் நானில்லை

             (மன் நியம் வல்லாஹ் யாரா(ன்) மன் நியம் /

ஜானே ஜானம் சிர்ரே சிர்ரம் தன் நியம்)

            கைப்பிடி மண்ணில் வந்த தூய ஒளி நான்

            நான் புறக் கண்களால் பார்க்கக் கூடிய ஒளி அல்லன்

                                    (நூரே பாக்கம் ஆமதா தர் முஷ்தே ஃகாக் /

                                கோர் ச்சஷ்மான் ரா வலே ரோஷன் நியம்)

            ஒளியின் ஒளி நான், ஒளியின் ஒளி நான்

            ஒளியுடன் ஒளி.

            நான் ஒரு விளக்கோ தீப்பந்தமோ அல்லன்

                                    (நூரே நூரம் நூரே நூரம் நூரோ நூர்

                                       மன் ச்சராகோ பம்பா ஒ ரவ்கன் நியம்)

            இறைநேசன் நான், ஹஜ்ரத் அலீ நான், நபி நான்;

            இறைவனை நிராகரித்த பாரசீக மன்னர்களான

            ஜாம், ருஸ்தம், பஹ்மன் ஆகியோர் அல்லன்.

(மன் வலீயம் மன் அலீயம் மன் நபி

                             ஜாம் நியம் ருஸ்தம் நியம் பஹ்மன் நியம்)

            இந்த முழு உலகமும் என்னால் வெளிச்சமாகிவிட்டது

            நான் சூரியன், இல்நுழை கதிரின் துன்னணு அல்லன்!

                     (ஈன் ஹமா ஆலம் ஸ மன் ரோஷன் ஷுதாஸ்த்

                                        ஆஃப்தாபம் ஜர்ராயே ரவ்ஸன் நியம்.)

            என் ரகசியத்தில் அவனே வெளியாகிவிட்டான்

            நான் இல்லை அல்லாஹ்வின் மீதாணை! நானில்லை.

                                    (ஊஸ்த் அந்தர் சிர்ரே மன் ழாஹிர் ஷுதா

                                        மன் நியம் மஸ்’ஊத் வல்லாஹ் மன் நியம்)

            இதற்கு பீர் நஸீருத்தீன் நஸீர் (ரஹ்) சொன்ன விளக்கமாவது:

            மன் என்பதன் அர்த்தம் நான் என்பதுதான். வெளிப்படையாக இந்த வரியைப் பார்க்கும்போது ’நான் வலீ, நான் அலீ, நான் நபி’ என்று பாபா ஃபரீத் சொல்வது போல் தெரிகிறது. ஆனால், அவர்கள் அலீயும் அல்ல, நபியும் அல்ல. அவர்கள் வலீயாக இருப்பது சாத்தியம். ஆனால், வலீ (இறைநேசர்) விடயத்தில் பிறர்தான் ஒருவரை அப்படிச் சொல்வார்கள். ஒரு வலீ அவரே தன்னை வலீ என்று சொல்லிக் கொள்வதில்லை. இதை ஆட்சேபிப்போருக்கு – ’முஃதரிஸ்’களுக்கு – பாபா ஃபரீத் எங்கிருந்து இதைச் சொல்கிறார்கள் என்பது விளங்கவில்லை. இங்கே மன் (நான்) என்பதன் நாட்டப் பொருள் (முராத்) ஃபரீதுத்தீன் அல்லர். நானில்லை என் நண்பர்களே நானில்லை. இந்த உடல் நானில்லை. இந்த உடலை நான் என்று நினைத்து ஏமாறாதீர்கள். காட்சியில் தெரியும் இந்த உடலின் மீது ஃபரீதுத்தீன் என்னும் பெயர் இடப்படுகிறது. ஆனால் உள்ளே இருப்பது வேறு ஒன்று! அது வேறொரு உலகம். 

            நூரே பாக்கம் ஆமதா தர் முஷ்தே ஃகாக்           - கைப்பிடி மண்ணில் வந்திருக்கும் தூய ஒளி நான். இது பாபா ஃபரீதுத்தீன் அவர்களின் கைப்பிடி மண் அல்ல. நாம் அனைவரும் அந்த ஒரு கைப்பிடி மண்ணில் இருந்து படைக்கப்பட்டவர்கள்தாம். இங்கே பாபா ஃபரீதுத்தீன் நபிமொழி ஒன்றின் பக்கம் குறிப்புக் காட்டுகிறார்கள். அதாவது, அல்லாஹ் மனிதனைப் படைக்க நாடியபோது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, பூமிக்குச் சென்று ஒரு கைப்பிடி மண் எடுத்து வாருங்கள் என்று கட்டளை இட்டான். அந்தக் கைப்பிடி மண்ணில் இருந்தே மனித குலம் முழுவதும் வந்தது. அதைத்தான் பாபா ஃபரீதுத்தீன் குறிப்பிடுகிறார்கள். அதில் இறைவனின் ஒளி வந்தது. அதை அகக் குருடர்கள் தம் ஊனக் கண்களால் பார்க்க முடியாது!”

            நிச்சயமாக இந்தப் பாடல் பொது வெளியில், பொது மக்களுக்குப் பாடப்பட வேண்டிய ஒன்றல்ல. இது ஞான ரகசியங்களை விளங்கும் ஆற்றல் பெற்ற சிறப்பானோருக்கு உரிய பாடலாகும். ஸூஃபிப் பள்ளிகளில் நடைபெறும் ஸமா என்னும் இசை நிகழ்வுகளில் மட்டும் பாடப்பட வேண்டிய ஒன்றாகும்.

            இந்தப் பாடலின் தாக்கத்தால் தமிழில் ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது. அதை எழுதியவர் ஸூஃபி ஞானி ஃபாரூக்கி ஷாஹ் ஃபஜ்லி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்களாவர். அது நான் சார்ந்திருக்கும் ஆன்மிக நெறியின் கூடுகைகளில், திக்ரு மஜ்லிஸ் என்னும் தியான அமர்வுகளில் பாடப் படுவதுண்டு. அப்படிப் பாடும்போது சீடர்கள் பலரும் கைஃபிய்யத் (உணர்ச்சிவசம்) ஆவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், சரியாக விளங்கிக் கொண்டுதான் பரவசமாகிறார்களா என்று எனக்கு ஐயம் ஏற்பட்டதுண்டு.

            அது போன்ற பாடல்களைச் சரியாக விளங்க இறை ஞானப் பாடங்களின் பயிற்சிகளும் விளக்கங்களும் தேவைப்படுகின்றன. அவற்றில் போதிய அனுபவமும் தெளிவும் இல்லாமல் அத்தகைய பாடல்களைக் கேட்பதில் பிசகாக அர்த்தப்படுத்திக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.

            ’நான்’ என்பது பற்றிய இறைஞான ரகசியங்களை அறிந்தால்தான் ‘லா இலாஹ’ என்பதைச் செயற்படுத்தும் ரீதியில் நிராகரிக்கப்படும் ’நான்’ எது என்றும், ‘இல்லல்லாஹ்’ என்பதைச் செயற்படுத்தும் ரீதியில் உறுதிப்படுத்தப்படும் ‘நான்’ எது என்றும் விளங்கும். இறை ஞானியர் சொல்லும் ’குஃப்ரே ஹகீகி’ என்னும் தன்னை நிராகரித்தல் என்பதையே இங்கே நானில்லை (மன் நியம்) என்பது குறிக்கிறது. மேலும், வஹ்தத்துல் உஜூத் (ஏகத்துவ உள்ளமை) என்பதை, இறைவனுக்கு கைரான (வேறான) படைப்புக்களின் எதார்த்தத்தை நிராகரிக்காத வகையில் விளங்கும்போது மட்டுமே – அதாவது படைப்புக்களுக்கு ஜாத் உண்டு (அதாவது, ஜாத்தே அதம் – நாம ரூபம் மட்டுமுள்ள உள்ளமையற்ற சுயம். இது மஃலூமே இலாஹி – இறைவனின் அறிவில் உள்ள அஃயான் (குறிப்புகள்) ஆகும்), ஆனால் அவற்றுக்கு சுயமாக உஜூது இல்லை என்பதை விளங்கும்போது மட்டுமே, இத்தகைய பாடல்கள் நேர்வழியில் செலுத்தும்.



            எப்படியோ, இறைவன் நம்முடன் இருக்கும் நிலையான ஐனிய்யத் மற்றும் படைப்புக்கள் இறைவனுக்கு வேறாக இருப்பதான கைரிய்யத் அகிய இரண்டையும் சமனப் படுத்தியபடி (balancing) புழங்குவோருக்கே இந்த ஞானப் பாடல்கள் நற்பயன் தரும். ”மஃரிஃபா (இறைஞானம்) என்னும் காற்றில் பறப்பதற்கு ஐனிய்யத் மற்றும் கைரிய்யத் ஆகிய இரண்டு சிறகுகள் வேண்டும்” என்று பீர் கவ்ஸி ஷாஹ் அக்பரி (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள். இந்தச் சிறகுகளில் ஒன்று முறிந்தாலும் ஆன்மா என்னும் பறவையால் பறக்க முடியாது.

            மேலும், இத்தகைய பாடல்களின் வரிகள் அனைத்தும் எல்லோருக்கும் ஒரே விதமாக உணர்ச்சியை உண்டு பண்ணாது. ஒருவருக்கு பேருணர்ச்சியைக் கிளர்த்தும் ஒரு வரி இன்னொருவருக்கு மிகச் சாதாரணமாகப் படலாம். அது அவரவர் இருக்கும் மனநிலை (ஹால்) மற்றும் படித்தரம் (மகாம்) ஆகியவற்றைப் பொறுத்தது. ஒருவருக்கே கூட ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ஒரு பாடலின் வேறு வேறு வரிகள் உணர்ச்சியைக் கிளர்த்தக் கூடும். இப்படித்தான் இந்தப் பாடல்கள் ஆன்மிகத்துக்கான கருவிகளாக உள்ளன.



            இதோ, ஃபாரூக்கி ஷாஹ் ஃபஜ்லி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் எழுதிய மெய்ஞ்ஞானப் பாடல்:

நானில்லை நானில்லை நிச்சயமாக நானில்லை 

நான் என்று சொல்வதும் நானில்லை

நாயனைத் தவிர வேறில்லை

எனதென்று சொல்வதும் எனதில்லை

ஏகனுடையதே, வேறில்லை

லா இலாஹ இல்லல்லாஹ் 

லா இலாஹ இல்லல்லாஹ்

                                                                        (நானில்லை…)

மண்ணில் நின்று வந்ததெல்லாமே

மண்ணென்றால் அது பொய்யில்லை.

பொன்னில் நின்று வந்ததெல்லாமே

பொன்னென்றால் அது பொய்யில்லை.

ஒன்றில் நின்று வந்ததெல்லாமே

ஒன்றேதான், ரெண்டில்லை.

ஹக்கில் நின்று வந்ததெல்லாமே

ஹக்கேதான் வேறில்லை

                                                            (நானில்லை…)

தன்னந் தனியாய் இருந்தான் அல்லாஹ்

முன்னால் வேறொரு பொருளில்லை.

குன் என்றுரைத்தான்

தன்னைத் தவிர ஆகிட அங்கொரு பொருளில்லை

ஆதியில் இருந்தது அனைத்துமாய் ஆனது

ஆரிஃபின் சொல்லில் பிழையில்லை.

ஆணையிட்டதும் ஆகிவிட்டதும்

அவனேதான் வேறில்லை.

                                                            (நானில்லை…)

என்னுடல் இயங்கும் விந்தையைப் பார்த்தேன்

இயக்குபவன் யார்? நானில்லை.

ரத்த நாளங்கள் இதயத் தாளங்கள்

இரவும் பகலும் ஓய்வில்லை.

என்னுயிர் சுவாசம் என் குடல் ஜீரணம்

நானின்றி நடக்குது பொய்யில்லை.

என்னில் இருந்து எல்லாம் செய்வது

ஹக்கேதான் வேறில்லை.

                                                            (நானில்லை…)

என்னுடல் என்பேன், உடல் நானில்லை.

உள்ளம் என்பதும் நானில்லை.

என் உயிர் என்பேன், உயிர் நானில்லை

உண்மை ரகசியம் நானில்லை.

நான் என்று சொல்வதும் நானில்லை

எனதென்று சொல்வதும் எனதில்லை

ஏகமாய் எங்கும் இருப்பவன் எவனோ

அவனேதான் வேறில்லை.

                                                            (நானில்லை…)

அணு அணுவாக அலசிப் பார்த்தேன்

அணுவில் கூட நானில்லை.

நொடி நொடியாக நினைத்துப் பார்த்தேன்

நொடியும்கூட நானில்லை.

அலசிப் பார்த்ததும் நானில்லை

நினைத்துப் பார்த்ததும் நானில்லை

பொய்யான நானில் மெய்யான நான்தான்

விளையாடும் பெரும்விந்தை.

                                                            (நானில்லை…)

சொன்னதும் கேட்டதும் ஆனதும் அவனே

உருவங்கள் மட்டும் அவனில்லை.

சிந்தை உருவங்களைச் செயற்பட வைத்தான்

செயற்பட வேறொன்று வரவில்லை.

சின்னதும் பெரியதும் காட்சியில் வந்தது

காட்சியில் வந்தது படைப்பில்லை.

சிந்தையில் இருந்த ஃபாரூக் ஃபஜ்லி

யான் பாடிட வந்தேன், நானில்லை.

                                                            (நானில்லை…)

Sunday, June 29, 2025

11 கோட்பாடுகள் - முன்னுரையில் இருந்து...


 இறையருளால் இன்று “நக்‌ஷ்பந்திய்யா ஸூஃபி நெறியின் 11 கோட்பாடுகள்” நூலை எழுதி நிறைவு செய்திருக்கிறேன். 

சீர்மை பதிப்பகம் இதனை அழகிய அச்சாக்கத்திலும் வடிவமைப்பிலும் நூலாக வெளியிடும், இன் ஷா அல்லாஹ்.

நூலின் முன்னுரையில் இருந்து சில கருத்துக்கள்:

இந்நூல் வெறுமனே ஏட்டறிவு பெறுவதற்காகவோ பெருக்குவதற்காகவோ அல்ல. இது பயிற்சி நூலாகும். செயலில் ஈடுபடுவதுதான் ஸூஃபித்துவத்தில் முக்கியம். ”இதயத்திற்குத் திரும்புதல்” என்னும் நூலில் ஹஜ்ரத் ஆஜாத் ரசூல் அவர்கள் சொல்கிறார்கள்: “ஸூஃபிசம் என்பது நீச்சல் அடிப்பது போன்றது. நீச்சல் பற்றிய நூல்களை வாசிப்பதால் உங்களுக்கு நீச்சல் அடிக்க வந்துவிடாது. மாறாக, திறன் மிக்க நீச்சல் வீரர்கள் நீரில் வேகமாகவும் லாவகமாகவும் நீந்துவதற்காகத்தான் பாராட்டப் படுகிறார்களே தவிர நீச்சல் உத்திகளின் விரிவுரைகளுக்காக அல்ல.” [ப.84]

இன்னோர் உதாரணம் உரைக்கலாம். அதாவது, இது ஒரு சமையல் நூலைப் போன்றது. சுவையான உணவை எப்படிச் சமைக்கலாம், அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை, அவற்றை எவ்வளவு இட வேண்டும் என்றெல்லாம் ’ருசிப்பி’ (recipe) விவரம் தருகிறது. ஆனால் அவற்றைச் செய்முறையில் கொண்டு வந்தால்தான் அந்த நூலின் பயன் கிடைக்கும் [அந்த நூலின் பக்கங்களை உண்பவன் கழுதையாக வேண்டுமானால் ஆகலாம்!] நிஜத்தில் அந்த உணவைச் சமைத்து ருசித்து உண்பதுதான் அதன் பயன். வெறுமனே நூலை வாசிப்பதும் நெட்டுருப் போடுவதும் அல்ல.

அது போன்றுதான் இந்த நூலும். இது அகச் சமையல், இதயச் சமையல். இறைவனுக்கு விருப்பமான ருசியை உங்கள் இதயத்தில் உண்டாக்குவதே இந்தப் பதினொரு கோட்பாடுகளின் நோக்கம்.


உகூஃபே கல்பி (இதயத்தை எப்போதும் இறைவனுடன் இணைத்து வைத்தல்)

 


இது நக்‌ஷபந்திய்யா நெறியின் பதினொரு கோட்பாடுகளில் இறுதியானது ஆகும். இஃது, இதயத்தை இறைவனுடன் இணைத்து வைக்கும் பயிற்சியாகும்.

            ஸூஃபி வழி என்பது ’இதயத்தின் பாதை’ என்று ஒரு வருணிப்பு உண்டு. ‘ஹுளூரில் கல்ப் – இதயத்தின் பிரசன்னம்’ என்பது இப்பாதையில் முன்னேறுவதற்கு மிகவும் முக்கியமானது. இதயமே உடல் மற்றும் உயிர் ஆகிய இரண்டு கடல்கள் சந்திக்கும் மையமாக இருக்கிறது.

            நக்‌ஷ்பந்திய்யா நெறியின் பதினொரு கோட்பாடுகளில் முதல் எட்டுக் கோட்பாடுகள் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஷைஃகு அப்துல் ஃகாலிக் குஜ்தவானி (ரஹ்) அவர்களால் வரையறுக்கப் பட்டவை ஆகும். அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு இந்த எட்டுக் கோட்பாடுகளே போதிக்கப்பட்டு வந்தன. அந்த ஞான வழியில் பின்னாளில் வந்த ஷைஃகு பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் 14-ஆம் நூற்றாண்டில் மேலும் மூன்று கோட்பாடுகளை வரையறுத்து இணைத்து நக்‌ஷ்பந்திய்யா நெறிக்கு அடிப்படையான பதினொரு கோட்பாடுகள் ஆக்கினார்கள்.

            தான் கூடுதலாக இணைத்த இறுதி மூன்று கோட்பாடுகள் பற்றி ஷைஃகு பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) கொண்டிருந்த கருத்தை நாம் அறிய வேண்டியது அவசியமாகிறது. அதாவது, உகூஃபே ஜமானி மற்றும் உகூஃபே அததி ஆகிய இரண்டையும் விட உகூஃபே கல்பி என்பதுதான் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அதுதான் திக்ரின் சாராம்சமும் திரட்சியும் ஆகும் என்று மகான் அவர்கள் கருதினார்கள்.

            இப்பயிற்சி, திக்ரு என்னும் தியானத்தில் சாதகன் தன் இதயத்தை இறைவனிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவதற்காகும். எனவே, இதயம் என்பது ஆன்மிகத்தில் எவ்வளவு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது என்று அறிந்து கொள்வது அவசியம்.


            
‘கல்ப்’ (இதயம்) என்னும் சொல் வெளிப்படையான அர்த்தத்தில் நம் உடலில் இருக்கும் சதைத்துண்டைக் குறித்தாலும் அது அகமியமான ஒரு புலனையே குறிக்கிறது. இது, பாமர மக்களும்கூட அறிந்து வைத்திருக்கும் விடயம்தான். அவர்கள் அன்றாடப் புழக்கத்தில் கூட இப்படியான அர்த்தத்தில் பேசுவதைக் கேட்கலாம். ’இதய பூர்வமான நன்றி’, ‘என் இதயத்தில் உணர்கிறேன்’, ‘என் இதயம் உடைந்துவிட்டது’ என்றெல்லாம் பேசும்போது மனம் என்னும் அர்த்தத்திலேயே பேசுகிறோம். “எனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும்போதெல்லாம் கவிதை எழுதுகிறேன்” என்று கவிக்கோ அப்துல் ரகுமான் கூறினார். இங்கே ஹார்ட் அட்டாக் என்பதை மாரடைப்பு என்றோ அவரின் நெஞ்சுக்குள் இருக்கும் சதையுறுப்பான இருதயத்தின் இயக்கம் பாதிக்கப்பட்டுவிட்டது என்றோ நாம் புரிந்துகொள்வதில்லை. உடலின் உறுப்பான இதயத்திற்கு தாக்குதல் உண்டானால் கவிதை எங்கே வரும், இயல்பாகக்கூட பேச முடியாதே! கவிக்கோ இங்கே சிலேடையாகப் பேசுகிறார் என்பது சட்டென்று புரிகிறது. அவர் சதையால் ஆன இதயத்தைச் சொல்லவில்லை, உணர்வுகளின் மையமாக இருக்கும் அகமியப் புலனைத்தான் சொல்கிறார் என்று புரிந்து கொள்கிறோம். எனினும், இந்த மீப்புலன் அல்லது அகமியப் புலனுக்கு உடலில் ஓர் சுட்டிடமாக சதையாலான இருதயம் அமைந்துள்ளது. அவ்விடத்தில் இருந்து அந்த இதயத்தை அணுகுவது இயல்பாகவே நடக்கிறது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இதயத்தைப் பற்றிப் பேசும்போது சதைத்துண்டைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்:

 أَلاَ وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ‏.‏ أَلاَ وَهِيَ الْقَلْبُ ‏

            ”எச்சரிக்கை! மனித உடலில் சதைத்துண்டு ஒன்றுண்டு. அது சீர்பட்டால் முழு உடலும் சீரடையும். அது பழுதுற்றால் முழு உடலும் பழுதுபடும். அதுதான் இதயம்.” [அறிவிப்பாளர்: அந்-நுஃ’மான் இப்னு பஷீர் (ரலி), நூல்: ஸஹீஹுல் புஃகாரி #52]

            கல்ப் என்னும் சொல் இங்கே நஃப்ஸ் (மனம்) என்பதற்கு ஆகுபெயராக நின்று சுட்டுவதைக் காண்கிறோம். நஃப்ஸ் என்னும் சொல் உயிரைக் குறிக்கவும் ஆகுபெயர் ஆவது உண்டு. இதயம், மனம், உயிர் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொர்புள்ளவை ஆகும். இதயத்தை இறைவனிடம் ஒப்படைப்பது என்பது உயிரையும், மனத்தையும் அவனின் கையில் ஒப்படைப்பதுதான். நபி (ஸல்) அவர்கள் இறைவனின் மீது சத்தியம் உரைக்கும்போது,

بِيَدِهِ ‏‏ نَفْسِي وَالَّذِي

(வல்லதீ நஃப்சீ பியதிஹி) என்று கூறுவார்கள்.  ”என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக” என்று இதற்குப் பொருள்.

            மறுமையில், சீர்பெற்ற நிலையில் தன் இதயத்தை இறைவனிடம் கொண்டு வருபவனே வெற்றி அடைவான் என்கிறது குர்’ஆன்:

எவர் பேரமைதியுற்ற தூய இதயத்தை

அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ

அவர் (கண்ணியமடைவார்)” (26:89)

            ஊசலாட்டம், குழப்பம், பதற்றம், வஞ்சகம், சந்தேகம், இச்சைகள் முதலியவை இதயத்தில் உண்டாகும் நோய்களாகும். இறை நிராகரிப்பு (குஃப்ரு) மற்றும் இணைவைப்பு (ஷிர்க்) ஆகியவை இதயத்தில் உண்டாகும் மாபெரும் நோய்களாகும்.

”அவர்தம் இதயங்களில் நோய் உள்ளது.

அல்லாஹ் அவர்களுக்கு நோயை அதிகரித்துவிட்டான்.” (2:10)

            மனிதனில் அகமியமான இதயத்தில் மேற்சொன்ன நோய்கள் அதிகரிக்கும்போது அவனின் உள்ளம் கறுப்பாகி விடுகிறது. அதாவது, இருளாகி விடுகிறது. அதில் நோய் நீங்கும்போது அது வெண்மையாகி விடுகிறது, அதாவது, ஒளிமயமாகி விடுகிறது. இது குறித்து நபி (ஸல்) சொல்லி, இந்தக் கறும் புள்ளியே குர்’ஆனில் ’ரான்’ என்று சொல்லப்பட்டுள்ளது என்று சுட்டுகிறார்கள்:

            ”நிச்சயமாக, ஓர் அடியான் ஒரு பாவத்தைச் செய்யும்போது அவனின் இதயத்தில் கறும்புள்ளி ஒன்று உண்டாகிறது (இன்னல் அப்த இதா அஃக்த’அ ஃகதீஅத்தன் நுகிதத் ஃபீ கல்பிஹி நுக்தத்துன் சவ்தாஉ) அதை விட்டு அவன் விலகி, பாவமன்னிப்புத் தேடி, திருந்தி திரும்பினால், அவனின் இதயம் மெருகூட்டப்பட்டு தூய்மையாகிறது  (ஃப இதா ஹுவ நஸ’அ வஸ்தக்ஃபர வ தாப சுகில கல்புஹு) ஆனால் அவன் பாவத்திற்கு மீண்டுவிட்டால், அந்தக்  கறுமை அவன் இதயம் முழுவதையும் மூடும்வரை அதிகரிக்கிறது. ’ரான்’ என்று அல்லாஹ் குறிப்பிடுவது அதைத்தான் (வ இன் ஆத ஸீத ஃபீஹா ஹத்தா தஃ’லுவ கல்புஹு வ ஹுவர் ரானுல்லதீ தகரல்லாஹு): 

அவ்வாறன்று! அவர்கள் ஈட்டிக் கொண்டிருந்தவை

அவர்தம் இதயங்களின் மீது துருவாகப் படிந்துவிட்டன’ (83:14)”

[அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி); நூல்: ஜாமிஉத் திர்மிதி #3334]

            இதன் தொடர்பில் இன்னொரு நபிமொழியும் கவனத்திற்கு உரியது: சய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள், “அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) சொன்னார்கள்: ‘நிச்சயமாக, இரும்பு துரு பிடிப்பது போல் இதயங்களும் துரு பிடிக்கின்றன.’ நபித்தோழர்கள் கேட்டனர், ‘அதன் மெருகேற்றம் எது?’ அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) சொன்னார்கள், ‘மரணத்தை அதிகம் நினைவு கூர்வதும், குர்’ஆனை அதிகம் ஓதுவதுமாகும்.’” [நூல்: ஷுஅபுல் ஈமான் #1859; முஸ்னத் ஷிஹாப் #1179]

            இறைவனிடம் மன்னிப்புக் கோருவது – இஸ்திக்ஃபார் மற்றும் தவ்பா – பாவியான ஓர் அடியான் அல்லாஹ்வை நினைவு கூர்வதாக (திக்ரு) அமைகிறது. எனவே இதுவும் திக்ருல்லாஹ்வில் கட்டுப்பட்டதுதான். இதயத்தைத் தூய்மை செய்வதற்கு திக்ரு என்னும் இறை தியானத்தில் ஆழ்ந்தும் அதிகமாகவும் ஈடுபடுவதே ஔடதம் ஆகும். திக்ருதான் இதயத்தின் துருவையும் கறையையும் பிசுக்கையும் அகற்றி அதனை மெருகேற்றி ஒளிமயமாக்கும் என்று நபி (ஸல்) நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

            சய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்: “ஒவ்வொன்றுக்கும் ஒரு மெருகேற்றம் இருக்கிறது. இதயங்களைத் தூய்மையாக்கி மெருகேற்றுவது அல்லாஹ்வின் நியாபகமாகும்.” [நூல்: ஷு’அபுல் ஈமான் #519] [இதனை நபித்தோழர் அபூ தர்தா சொன்ன கருத்தாக ஷு’அபுல் ஈமான் நூலின் 503-வது ஹதீஸ் குறிப்பிடுகிறது.]

            மேற்சொன்ன கருத்துக்களின் அடிப்படையில் இப்னு கய்யிம் அவர்கள் சொல்லும் கருத்தாவது: “இதயம் இரண்டு காரியங்களால் துருவேறுகிறது: அலட்சியம் மற்றும் பாவம் (கஃப்லத் வ தன்ப்); அது இரண்டு விடயங்களால் மெருகேறுகிறது: பாவ மன்னிப்பு மற்றும் இறை தியானம் (இஸ்திக்ஃபார் வ திக்ரு)” [நூல்: அல்-வாபிலுஸ் சய்யிப் மினல் கிதாபித் தய்யிப் 1/40]

            மேற்கண்ட விளக்கங்கள் யாவும் இதயத்தைத் தூய்மையாக வைத்திருப்பது ஆன்மிக நலனுக்கு எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்று உணர்த்தப் போதுமானவை ஆகும். ஸூஃபிகள் இவ்வுலகில் வாழும்போதே தம் இதயத்தை இறைவனிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இந்த நபிவழியை (சுன்னாஹ்)வை அவர்கள்தாம் முழுமையாக நிறைவேற்றுவோராக உள்ளனர். அதற்கான பயிற்சியாக நக்‌ஷ்பந்திய்யா நெறியில் ”உகூஃபே கல்பி” அமைக்கப்பட்டுள்ளது.


            
”உகூஃபே கல்பி என்பது அல்லாஹ்வை அன்றி வேறு எதன் மீது கவனம் திரும்பாத அளவுக்கு இறைவனின் பிரசன்னத்தில் அடியான் இருக்கும் வகையில் இதயத்தில் உண்டாகும் விழிப்புணர்வு ஆகும்” என்கிறார் உபைதுல்லாஹ் அல்-அஹ்ரார் (ரஹ்) அவர்கள்.

            இதே கருத்தில், ”உகூஃபே கல்பி என்பது அடியான் தன் நேசனான ஏக இறைவனைத் தவிர வேறு எதையும் காணாத நிலையை அடைவதாகும். இப்பயிற்சி இறைவனின் முன் இதயத்தைக் கொண்டு போய் நிறுத்துகிறது. அடியான் தன் அனைத்து நிலைகளிலும் இறைவனின் வெளிப்பாட்டை அனுபவிப்பதாகும்” என்கிறார் ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன்.

            இதயத்தில் தொடர்ந்து ஊசலாட்டங்கள் வந்து கொண்டே இருக்கும். அதற்கு அறபியில் கல்ப் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அச்சொல் ’புரள்வது’ என்று அர்த்தம் உடையது. மனம் ஒரு நிலையில் இருக்காமல் புரண்டு கொண்டேதான் இருக்கும். அதன் இயல்பை மாற்ற முடியாது. ஆனால், இதயத்தில் நன்மையும் தீமையும் மாறி மாறி வந்து போய்க் கொண்டிருந்தால் அது நிம்மதியும் தூய்மையும் அடைந்த  இதயமாக - ‘கல்புன் சலீம்’ – ஆகாது. அந்த ஊசலாட்டம் நிறுத்தப்பட வேண்டும். எனில் கல்ப் புரளாதா? புரளும். மனிதப் புனிதர்களான இறைத் தூதர்கள் மற்றும் இறை நேசர்கள் ஆகியோரின் இதயங்கள் ”மினல்லாஹ் இலல்லாஹ்” (அல்லாஹ்விடம் இருந்து அல்லாஹ்விடமே) புரண்டு கொண்டுள்ளன.

            இங்கே, நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி ஒன்றும் கற்றுத் தந்த பிரார்த்தனையும் நினையத்தகும்:

            அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) சொன்னார்கள், ’நிச்சயமாக ஆதமின் மக்கள் அனைவரின் இதயங்களும் அருளாளனான அல்லாஹ்வின் விரல்களில் இரண்டு விரல்களின் இடையில் ஒரே இதயம்போல் உள்ளன. அதை அவன் தான் விரும்பியவாறு புரட்டுகிறான்.’ இதைச் சொல்லிவிட்டு அல்லாஹ்வின் திருத்தூதர் சொன்னார்கள்: ‘அல்லாஹ்வே! இதயங்களைப் புரட்டுபவனே! எங்கள் இதயங்களை உனக்கு அடிபணிதலில் திருப்புவாயாக (அல்லாஹும்ம முஸர்ரிஃபல் குலூபி ஸர்ரிஃப் குலூபனா அலா தாஅத்திக்க).’” [அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ருல் ஆஸ் (ரலி); நூல்: சஹீஹ் முஸ்லிம் #2655]

            இதயம் இறைவனின் பிரசன்னத்தில் இருப்பதன் அடையாளம் அதில் இறைவனின் ஒளிச்சுடர்கள் (தஜல்லியாத்) உண்டாவதாகும். இறைவனின் ஒளிச்சுடர்கள் – அதாவது இறை ஞானத்தின் வெளிச்சம் – அதில் உண்டாகும்போது தீய எண்ணங்கள் அதில் உண்டாக இயலாது. அதுகாறும் இதயத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மா சிவல்லாஹ் (அல்லாஹ் அல்லாதவை) எல்லாம் வீழ்ந்துவிடும். அந்த இதயத்தில் இறைவனின் ஆட்சி ஏற்பட்டுவிடும். அது இறைவனுக்குரிய இதயம் ஆகிவிடும்.

            இறைத்தூதரான சுலைமான் (அலை) அவர்களின் படையினர் தன் நாட்டைத் தாக்க வருவது பற்றி ஷீபா நாட்டின் அரசியான பல்கீஸ் அவர்கள் தன் அமைச்சர்களிடம் கூறினார்கள்: “அரசர்கள் ஒரு நகரத்துள் நுழைவார்களானால் நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியவான்களை இழிவுபடுத்தி விடுகிறார்கள்” (27:34).

            இந்த குர்’ஆன் வசனப்பகுதியின் உட்பொருளாக, “ஓர் அடியானின் இதயத்திற்குள் இறைவனின் ஒளிச்சுடர்கள் நுழையும்போது அதில் முன்பு மதிப்புற்றிருந்த உலகப் பொருட்கள் அனைத்தும் மதிப்பிழந்து விடுகின்றன. அவை அந்த இதயத்தை விட்டும் அகற்றப்பட்டு விடுகின்றன” என்று மகான்கள் சொல்கின்றனர்.

            அல்லாஹ் ”மலிக்குல் முல்க்” – அகில உலகங்களின் மீது ஆட்சியதிகாரம் உள்ள பேரரசன் ஆவான். அவன், மலிக்குல் அம்லாக் – அரசர்களுக்கெல்லாம் அரசன் ஆவான். எனவே, அவனின் ஒளிச்சுடர்களே அகில உலகையும் ஆள்கின்றன. அவனின் ஒளிச்சுடர்களை அரசர்கள் என்று உருவகப்படுத்துவது சரிதான்.


            
உகூஃபே கல்பி என்னும் சொற்றொடர் இரண்டு விதங்களில் அர்த்தப்படும் என்கிறார் டெரென்ஸ் நூனிஸ்:

1.      இதயம் திக்ரின் இடையில் இறைவனின் பிரசன்னம் பற்றிய விழிப்பில் இருத்தல். இப்பொருளில் இது யாத் தாஷ்த் என்பதை ஒத்திருக்கிறது.

2.      இதயத்தைப் பற்றிய கவனம் இருத்தல். அதாவது, சாதகர் திக்ரில் ஈடுபடும்போது அவரின் கவனம் இந்த கூம்பு வடிவ இதயத்தின் மீது நிலைக்கிறது. அது, இதயத்தை விழிப்புணர்வுடன் திக்ரில் ஈடுபடுமாறு செய்கிறது.


இந்த இரண்டாம் கருத்துப்பட கவிஞர் ஒருவர் இப்படிப் பாடியுள்ளார்:

”அடைகாக்கும் தாய்ப்பறவை போல் அமர்ந்திரு;

உன் இதயத்தின் முட்டையைக் கண்காணித்திரு.

இந்த முட்டையில் இருந்தே உன் பரவச நிலை வெளியாகும்

சுயமிழத்தல் பெருஞ்சிரிப்புடன் உன் இறுதி இலக்கை அடையும்”


(முற்றும்)

உகூஃபே அததி (ஓதுவதில் எண்ணிக்கையைப் பேணுதல்)

 


இறைவனை நினைவு கூர்வதற்கு ஓர் எல்லை இல்லை. ‘இறை விசுவாசியரே! அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள்’ என்றே திருமறை சொல்கிறது. எனினும், தஸ்பீஹ் (இறை நாமம் அல்லது இறை வாசகம் ஓதுதல், ஜபம்) அல்லது ஔராது (அன்றாட ஓதுதல்) என்னும் முறைகளுக்கு எண்ணிக்கை குறிப்பிட்டுப் பேணப்படுகிறது.

எண்ணிக்கை வைத்து ஓதுதல் நபிவழியில் உள்ளதாகும். இதற்கு ஹதீஸில் பல உதாரணங்கள் உள்ளன.

தனக்கு ஒரு பணிப்பெண் வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடம் அன்னாரின் அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) கேட்டபோது, ஒருவருக்கு ஓர் உதவியாளர் இருப்பதை விட மேலான ஒன்றை அறிவித்துத் தருவதாகச் சொல்லி, நபி (ஸல்) தஸ்பீஹ் ஒன்றை ஓதக் கற்றுத் தந்தார்கள். அதாவது, உறங்கச் செல்லும்போது சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, மற்றும் அல்லாஹு அக்பர் 34 தடவைகள் ஓத வேண்டும் (ஸஹீஹ் முஸ்லிம் #2728)

நபி (ஸல்) சொன்னார்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தினமும் நான் அல்லாஹ்விடம் இஸ்திக்ஃபார் (மன்னிப்பு) தேடுகிறேன், எழுபது முறைக்கும் மேல் அவனிடம் திரும்புகிறேன்.” (ஸஹீஹுல் புகாரி #1870 & 6307)

நபி (ஸல்) சொன்னார்கள், “சில நேரங்களில் நான் என் உள்ளத்தின் மீது திரை ஒன்றைக் காண்கிறேன். எனவே அல்லாஹ்விடம் நான் ஒரு நாளைக்கு நூறு தடவை மன்னிப்புக் கோருகிறேன்.” (ஸஹீஹ் முஸ்லிம் #2702)

இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் ஒரே அமர்வில், எழுவதற்கு முன், ‘என் ரட்சகனே! என்னை மன்னிப்பாயாக, என் திரும்புதலை ஏற்பாயாக. நிச்சயமாக, நீயே தவ்வாபுர் கஃபூர் (திரும்புவோனும் மன்னிப்போனும்)’ என்று நூறு முறை ஓதினார்கள்.” (சுனன் திர்மிதி #3434)

ஒரே ஓதலுக்கு 70 என்றும் 100 என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதை வைத்துக் குழம்ப வேண்டியதில்லை. சூழ்நிலை மற்றும் தருணங்களுக்கு ஏற்ப எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம் என்பதை இது காட்டுவதாக மார்க்க அறிஞர்கள் கருதுகின்றனர். அதிகப்படுத்திக் கொள்வது சிறந்ததுதான். ஏனெனில், இறைவனை அதிகமாக நினைவு கூர்தலே குர்’ஆனில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தஸ்பீஹ், தஹ்லீல், தக்தீஸ் ஆகியவற்றை ஓதுவதற்கு விரல்களைப் பயன்படுத்துமாறும், அவை அல்லாஹ்விடம் சாட்சி பகரும் என்றும் நபி (ஸல்) அறிவுறுத்தியதாக ஹதீஸ் கூறுகிறது (சுனன் திர்மிதி #3583).

இவற்றின் எண்ணிக்கை சிறிய அளவாக இருப்பதால் விரல்களில் கணக்கு வைப்பது எளிது. கணக்குத் தப்பாது. 33-33-34 என்ற கணக்கில் ஓதுவதற்கு விரல்களைப் பயன்படுத்துமாறு நபி (ஸல்) சொல்லியிருப்பதால் குறைந்த எண்ணிக்கையிலான இந்த திக்ரு மற்றும் ஏனைய திக்ருகளை ஓதுவதற்கு விரல்களைப் பயன்படுத்துவதே சிறந்ததும் நபிவழியும் ஆகும்.

ஆனால், அதிக எண்ணிக்கையில், ஆயிரம் இரண்டாயிரம் என்று ஓதுவதற்கு விரல்களைப் பயன்படுத்தும் போது கணக்கு வைப்பது எளிதன்று. கணக்குத் தவறிப் போவதற்கான வாய்ப்புதான் அதிகம். எனவே, ஔராதுகளை ஓத மணிமாலை பயன்படுத்தப்படுகிறது. நவீனக் கருவிகளாக ‘டிஜிட்டல் கவுண்டர்’ போன்றவையும் வந்துவிட்டன. அவற்றைப் பயன்படுத்துவதும் சரிதான்.

பேரீத்தம் கொட்டைகளை வைத்து எண்ணியபடி தஸ்பீஹ் செய்த ஒரு பெண்மணியை நபி (ஸல்)அ வர்கள் சந்தித்தார்கள் என்று சய்யிதுனா சஃ’து இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்கள் (சுனன் திர்மிதி #3568, ஸஹீஹ் இப்னு ஹிப்பான் #837, முஸ்தத்ரக் ஹாகிம் பாகம்-1). நபி (ஸல்) அந்த தஸ்பீஹ் எண்ணும் முறைக்கு மறுப்புக் கூறவில்லை. எனவே, பேரெண்ணிக்கையில் தஸ்பீஹ் செய்ய அதற்குத் தோதான கருவியைப் பயன்படுத்துவது நபி (ஸல்) அவர்களின் ஏற்பைப் பெற்றுள்ள ஒன்றுதான். அந்த அடிப்படையில் கருவியைப் பயன்படுத்துவதும் நபிவழியே என்றாகிறது.

அபூ தர்தா (ரலி) அவர்கள் ஒரு பையில் பேரீத்தம் கொட்டைகளை வைத்திருந்தார்கள். வைகறைத் தொழுகைக்குப் பின்னர் அவற்றைக் கொண்டு தஸ்பீஹ் செய்தார்கள் என்று அல்-காசிம் இப்னு அப்துர் ரஹ்மான் அரிவிக்கிறார்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடமும் கூழாங்கற்கள் அல்லது பேரீத்தம் கொட்டைகள் நிரப்பப்பட்ட பை ஒன்று இருந்ததாகவும் அதனைக் கொண்டு அவர்கள் தஸ்பீஹ் செய்தார்கள் என்றும் அபூ நத்ரா அல்-கஃப்பாரி சொல்கிறார்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் ஒரு கயிறு இருந்தது, அதில் ஆயிரம் முடிச்சுகள் போடப்பட்டிருந்தன. அதை வைத்து அவர்கள் தஸ்பீஹ் செய்யாமல் உறங்கப் போக மாட்டார்கள் என்று நயீம் இப்னு முஹர்ரர் இப்னு அபீ ஹுரைரா அறிவிக்கிறார். இச்செய்தியை சயீது இப்னு அபூ வக்காஸ், அபூ சயீதுல் குத்ரி, நபி (ஸல்) அவர்களின் பணிப்பெண்ணான அபூ சஃபிய்யா, ஹுசைன் (ரலி) அவர்களின் மகளாரான சய்யிதா ஃபாத்திமா ஆகியோரும் அறிவிக்கின்றனர்.

இவற்றின் வழியாக, அதிகமான எண்ணிக்கையில் ஓதுவதற்கு அதற்குத் தோதான கருவியைப் பயன்படுத்துவதும் நபியால் ஏற்கப்பட்டது என்ற அடிப்படையில் நபிவழியே என்று உறுதிப்படுகிறது. இதில் சர்ச்சைகளும் விவாதங்களும் பயன் தரப் போவதில்லை. மனதிற்குள்ளேயே ஓதுகின்ற ஒரு தஸ்பீஹும்கூட வீணாகிவிடாது. அல்லாஹ் அதை அறிவான், அதற்கான நற்கூலி அருள்வான். அப்படி இருக்க, மணிமாலை, அல்லது கவ்ண்ட்டர் கருவி வைத்து ஓதினால் அது வீணாகிவிடும் என்று நினைக்க முகாந்திரம் இல்லை. விரலில் ஒரே இடத்தில் எத்தனை முறை அழுத்தினாலும் அதற்கான சாட்சியையும் விரல் கூறத்தானே செய்யும்? அதன்படி, தஸ்பீஹ் மணியை விரல்தானே நகர்த்துகிறது, இத்தனை முறை ஓதினார் என்று அது சாட்சி சொல்லுமே! இந்தத் தெளிவுடன் அதிகமாக ஓதுவதில் ஈடுபடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

உகூஃபே அததி என்னும் கோட்பாடு குறித்து மேலும் சில விளக்கங்களைக் காண்போம்.

            எண்ணிக்கை பேணி ஓதுவது என்பது ஆரம்ப நிலைச் சாதகருக்கு மன ஓர்மையையும், கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் (தர்தீப்) உண்டாக்க உதவுகிறது. 

            பல காலம் ஆன்மிகப் பாதையில் பயணித்துப் பக்குவம் அடைந்த மூத்தோரும்கூட எண்ணிக்கை வைத்து ஓதுதலைப் பேணுகின்றனர். எண்ணிக்கை வைத்து ஓதுவதில் அகமிய ஞானம் இருக்கிறது என்று அவர்கள் உணர்ந்துள்ளனர். உதாரணமாக, ஷைஃகு புர்ஹானுத்தீன் ஹெர்மன் சொல்கிறார்:

            ”ஆரம்பக் கட்டங்களில் அகத் தூண்டலும் உள்ளுணர்வும் ஏற்பட உதவுகின்ற இந்த முறைமை முன்னேற்றம் அடைந்த சீடர்களுக்கு ’பன்மியத்தில் ஒருமை’ (வஹ்தத் தர் கஸ்ரத்) என்பதன் பிரக்ஞையை உண்டாக்குகிறது.

இந்தப் பன்மியமும் பெருக்கமும் தோற்ற மயக்கமே!

அனைத்திலும் அந்த ஏகனே வெளியாகியுள்ளான்.

அகப் பார்வையால் நோக்கும்போது பன்மியம் என்பது ஒருமையே அன்றி வேறன்று. சிலருக்கு இதில் சந்தேகம் இருக்கலாம். எமக்கு ஐயமில்லை. தோற்றம் பல எண்ணிக்கைகள் காட்டினும் உள்ளமை ஒன்றே.”

உருது மகாகவி அல்லாமா இக்பால் (ரஹ்) அவர்கள் “ஜுக்னூ” (மின்மினி) என்னும் கவிதையில் சொல்கிறார்கள்:

(கஸ்ரத் மேன் ஹோ கயா ஹே வஹ்தத் கா ராஸ் மஃக்ஃபி

ஜுக்னூ மேன் ஜோ ச்சமக் ஹே ஒ பூல் மேன் மெஹக் ஹே)

“பன்மையில் ஒருமையின் ரகசியம் மறைந்துள்ளது

மின்மினியில் ஒளியாக இருப்பதே பூவில் நறுமணமாக உள்ளது”

எண்ணிக்கை வைத்து ஓதுவதன் ஆற்றலை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். “திக்ரில் எண்ணிக்கை பேணுவது என்பது தெய்வீக அறிவை (இல்முல் லதுன்னி) அடைவதற்கான முதல் படியாகும்” என்று ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்‌ஷ்பந்த் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள். மேலும், “திக்ரில் மீண்டும் மீண்டும் ஓதுவதில் எண்ணிக்கையைப் பேணுதல் என்பது எண்ணங்கள் சிதறிப் போகாமல் ஒன்று திரட்டப்பட உதவுகிறது” என்றும் கூறியுள்ளார்கள்.

            உகூஃபே அததி என்பது திக்ரில் ஓதப்படும் எண்ணிக்கையைப் பேணுவதாகும், அப்படிச் செய்வது பயன் தந்தாலும் தராவிட்டாலும்” என்று மவ்லானா நூருத்தீன் அப்துர் ரஹ்மான் ஜாமி (ரஹ்) அவர்கள் இதனை வலியுறுத்துகிறார்கள். ஒருவருக்கு அவரின் குருநாதர் எவ்வளவு எண்ணிக்கை குறித்துள்ளாரோ அந்த எல்லையை மீறாமல் அவர் நியமமாக ஓதி வருவது சீடரின் மீது கடமையாகும். தானாக அவர் அந்த எண்ணிக்கையை மாற்றக் கூடாது. குருவிடம் தன் நிலையை அவர் தெரிவிக்கலாம். ஆனால் எண்ணிக்கை நிர்ணயிக்கும் உரிமை குருவுக்கே உண்டு. சீடருக்கு எது நல்லது என்பது குருவுக்கே தெரியும்.

            ”எவ்வளவு முறை திரும்பத் திரும்ப ஓதுகிறோம் என்பது முக்கியமன்று. ஆனால், அவற்றை எவ்வளவு விழிப்புடனும் அமைதியுடனும் ஓதுகிறோம் என்பதுதான் முக்கியமானது” என்று ஃகாஜா அலாவுத்தீன் அல்-அத்தார் (ரஹ்) சொல்கிறார்.

            ஆரம்ப நிலைச் சாதகர்களுக்கு தரீக்காவின் ஷைஃகுமார் எண்ணிக்கை குறிப்பிட்டு ஓதச் சொல்வதில் உளவியல் ரீதியான காரணங்களும் உள்ளன. தொடக்கத்திலேயே அதிகமாக ஒருவர் ஓத ஆரம்பித்தால் அதன் தாக்கத்தைத் தாங்காமல் மனம் பேதலித்து விடுகின்ற அபாயம் இருக்கிறது. அப்படி அதீதமாக ஓதுதலில் ஈடுபட்டதால் சிலருக்கு சித்தம் கலங்கிப் போன நிகழ்வுகளும் உண்டு. எனவே, எண்ணிக்கை வரம்பு என்பது ஆரம்ப நிலைச் சாதகருக்கு மிகவும் தேவையான கடிவாளம் ஆகிறது.

            ”திக்ரு என்பது அதன் அளவு மற்றும் தரம் (quantity and quality) ஆகிய இரண்டு அம்சங்களிலும் பேணபப்ட வேண்டும். இவ்விரண்டில் திக்ரின் தரம்தான் அதிக முக்கியத்துவம் உடையது என்பதில் ஐயமில்லை. எனவே, கொடுக்கப்பட்ட எண்ணிக்கை வரம்புக்குள்ளேயே இதயத்தில் திக்ரின் தரத்தை ஆழப்படுத்த வேண்டும். இவ்வகையில், எண்ணிக்கை வரம்பு என்பது திக்ரின் தரத்தை அடைவதற்கு உறுதுணையாகவே இருக்கிறது” என்கிறார் உஸ்மான் நூரீ தோப்பாஷ்.

            எண்ணிக்கை என்பது இறைப் பேரறிவில் உள்ளதாகும். அதனைப் பேணுவதில் நிச்சயமாக அர்த்தமுள்ளது.