Monday, October 22, 2012

கண் மையும் பெண்மையும்



அந்தக் கரிய கல்லினை ஒரு கூழாங்கல்லில் தேய்த்து விரலால் தொட்டெடுத்துக் கண்களின் கீழிமைகளில் தீட்டிக் கொண்டேன். “மை போட்டது போல் இருக்கிறது” என்று கேலி பேசினாள் அவள்.

கண்கள் பெண்களுக்கு மட்டும் இருக்கும் பாகம் அல்லவே? ஆண்கள் மையிட்டுக் கொண்டால் ஆகாதா? யாரும் அப்படி இட்டுக் கொண்டதே இல்லையா என்ன? -இப்படிச் சிந்தித்தேன்.

இதனைத் தொடர்ந்து சரம் சரமாய் எண்ணங்கள் உதிக்கத் தொடங்கின. கண்-மைச் சிந்தனைகள்.
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்குப் பொய் அழகு
என்னும் வரிகள் மெல்லிசையில் தவழ்ந்தது என் நினைவில்.

கண்ணுக்கு மை எப்படியோ அப்படித்தான் கவிதைக்குப் பொய். அதாவது கற்பனை. மை என்பது இயற்கையிலேயே கண்ணில் இல்லாத ஒன்றுதானே? அதனை ஒப்பனையாகத்தான் கண்ணுக்கு எழுதுகிறார்கள். அது போல் கற்பனை என்பது பொய்தான்.

ஆனால் கண் உண்மையாக இருப்பது போல் கவிதை உண்மையாக இருக்க வேண்டும். மையே கண் ஆகி விடாது. பொய்யே கவிதை ஆகி விடாது.

அழகிய கண்களுக்கு மை தீட்டினால் அழகு அதிகம் ஆகும். ஆனால் இயல்பிலேயே ஒன்றரைக் கண்ணாக இருப்பதற்கு மை தீட்டுவதால் அழகு வந்துவிடாது அல்லவா? கவிதையும் அப்படித்தான். கேவலமான சிந்தனைகளுக்குக் கற்பனை அலங்காரம் அழகு சேர்க்காது.

பெண்கள் தங்கள் கண்களுக்கு அஞ்சனம் தீட்டி அழகுபடுத்திக் கொள்ளும் பழக்கம் மிகவும் தொன்மையான ஒன்று.

அரபியில் ‘குஹ்ல்’/ இத்மித், குர்திஷில் ‘குல்’, துருக்கியில் ‘சுர்மா’, ஹிந்தியிலும் உருதுவிலும் ‘காஜல்’, மலையாளத்தில் ‘கண்மஷி’, சமஸ்க்ருதத்தில் ’காஜல்/கஜோல்’, எகிப்தில் ‘மீஸ்தீமீத்’, லத்தீனில் ‘ஸ்தீபியம்’, கிரேக்கத்தில் ‘ஸ்தீபி’, சோமாலியில் ’கூல்’ – இவை சில மொழிகளில் கண்மையின் நாமகரணங்கள் (COOL!)

எகிப்து, கிரேக்கம், ஆஃப்ரிகா, அரேபியா போன்ற பகுதிகளில் சில ஆயிரம் வருடங்களுக்கு முந்திய சமூகங்களில் இருபொருட்கள் கண்-மையாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.


மூன்றாம் ஆண்டிமொனி சல்ஃபைடு என்னும் பெயர் பூண்ட ஒரு வஸ்து. ஸ்டிப்னைட் என்றும் ஆண்டிமொனைட் என்றும் இதற்கு வேறு நாமங்களும் உண்டு. கி.மு.3000 காலக் கட்டத்தில் இது எகிப்தில் கண்-மையாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. முனியின் தவம் முறித்து ஆண்டி ஆக்க வல்ல அழகிய கண்களுக்கு இந்த ஆண்டிமொனி மேலும் ஆற்றல் அளித்துள்ளது!

அந்தக் காலத்திலேயே ஆண்டிமொனியால் பார்வை இழந்தவர்கள் பலர். ரசவாதிகள் (Alchemists) இப்பொருளைத் தம் பரிசோதனைகளில் கையாண்டனர். அவர்களில் பலர் துறவிகள் (MONKS). எனவே இப்பொருளுக்கு ANTI-MONACHOS – துறவிகளுக்கு எதிரானது என்று பொருள் தரும் வண்ணம் ANTIMONY என்று பெயர் சூட்டப்பட்டது. பெண்ணின் கண்ணிலும் அது துறவிகளுக்கு எதிரானதுதான்!

ANTI-MONOS – தனிமைக்கு எதிரானது என்னும் அர்த்தத்தில்தான் அப்பெயர் வந்தது என்னும் கருத்தும் உண்டு. ஏனெனில் மண்ணில் அது கலவையாகக் கிடைக்குமே அன்றித் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. சொல்லப் போனால் பெண்மை பேணும் கண்-மையும்கூட தனிமைக்கு எதிரானதுதான்!


இரண்டாம் லெட் சல்ஃபைடு என்பது மற்றொரு வஸ்து. இது காரீயம் என்னும் உலோகத்தின் கலவை. கலீனா என்பது இதன் செல்லப் பெயர். காரிகையின் கண்ணுக்குக் காரிய வீரியம் நல்கும் போலும். இதில் கொஞ்சமாக வெள்ளியின் சல்ஃபைடுக் கலவையும் இருக்குமாம்.

அல் நிறத்து அஞ்சனத்தை ஒளிமிகு விழியில் எழுதிக் கல் தரத்து நெஞ்சுகளைக் கரைக்கும் அந்தப்புரத்து அழகிகள் அற்றை நாள் எகிப்திலும் கிரேக்கத்திலும். அவர்கள் மேலிமைக்கு கொஹ்ல் கொண்டு கறுமையும் கீழிமைக்கு ’மலச்சைட்’ (காப்பர் ஹைட்ராக்ஸைடுத் தாது) தாமிரக் கலவையால் பச்சை நிறமும் தீட்டி அலங்கரித்தனர். பார்க்கும் கண்களிலேயே கரிய நிறமும் பச்சை நிறமும் தோன்றுதடா நந்தலாலா!

அந்நாட்களில் எதிரிகள் மீது ஏவப்படும் கணைகளின் முனைகள் கொடிய விஷத்தில் முக்கி எடுத்தவையாக இருக்கும். காயத்தோடு எவரும் தப்பிக்க முடியாமல் அது காயத்தை உயிர் உலர்ந்த கட்டை ஆக்கிவிடும்! புறப்போரின் இந்த மரபை அகப்போரில் ’அப்ளை’ செய்து பார்த்தேன். சிந்தை ஒரு சிறு கவிதையை உடனே ’சப்ளை’ செய்தது. ’வில் வில் வில் உன் விழியம்பில் எனைத் தாக்காதே’ என்று பாடிய கவிஞர் வாலியின் பாணியில்:
“அம்பாகப் பாய்ச்சுகிறாள் VISION
மையென்று வைக்கிறாள்
அதன் முனையில் விஷம்!”


’அல்-குஹ்ல்’ என்னும் அரபிச் சொல்லின் அடியாகப் பிறந்த ஆங்கிலச் சொல் ஆல்கஹால் (alcohol). ஆல்கஹால் என்றால் மது / சாராயம். ஆனால் அரபியில் மதுவுக்கு ஷராப்/ நபீத் /ஃகம்ர் என்று பெயர்(கள்)! ’குஹ்ல்’ என்பது கண்-மைதான்.
”மை எழுதிய கண்களால்
மது வார்க்கிறாள்
மனதில்”
என்று யாரேனும் கவிதை (கிவிதை?) எழுதினால் அந்தத் தமிழ் வரிகளில் அரபிக்கும் ஆங்கிலத்திற்கும் பொருளாதார பாத்யதை உண்டு!

மேல் வர்க்கத்துப் பெண்கள் தம் கண்களுக்கு மை தீட்டுவது அழகின் பாற்பட்ட ஒன்றாக இருந்தாலும், எகிப்திய எத்தியோப்பிய அரேபியப் பகுதிகளில் பாலைவனத்தில் வாழ்க்கை நடத்தி வந்த மக்கள் – ஆண் பெண் இருபாலரும் – தம் கண்ணுக்கு மை இட்டுக் கொண்டது அழகு கருதி அல்ல.

பாலை எனும் பாவையின் மேனி முழுதும் பகலவனின் வெய்யில் எனும் பசலை படர்ந்து தகிக்கும் காட்சி காண்போருக்குக் கண் கூசும்! பார்த்துக் கொண்டே இருந்தால் எரிச்சலும் உண்டாகும்! அந்நிலைக்கு ஆகாமல் விழிகளைக் காக்கும் பொருட்டு அவர்கள் அஞ்சனம் அப்பிக் கொண்டனர். ஆமாம், மையின் கறுப்பு வெய்யில் ஒளியை உள்வாங்கிக் கொள்வதால் அதன் அடர்த்தி குறைந்து மிதமாகவே கருவிழிப் பாவை மீது படும்!

பண்டைய இந்தியாவில் பாவையர் தம் விழிப் பார்வை கூர்மை பெறும் பொருட்டு இமைகளின் விளிம்பில் இட்டுக் கொண்ட மை, சந்தனத் திரி எரியும் விளக்கின் புகையை ஆமணக்கு எண்ணெய்யில் (விளக்கெண்ணெய்யில்) படிய வைத்து வழித்துத் தயாரிப்பது.

விட்டில் பூச்சிகள் கவரப்பட்டு விழுகின்ற
விளக்கின் புகை கொண்டு மை செய்தது
விழிகளையே விளக்காக்கித் தம் காதலரை
விட்டில் பூச்சிகளாய்க் கவர்வதற்கா?

வரலாறும் அறிவியலும் இப்படிச் செப்ப இலக்கியத்தின் பக்கம் என் இதயம் திரும்பியது.

”கண்ணுள்ளார் காதலவர் ஆகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து” (1126)
என்று காதலி ஒருத்தி சொல்வதாகப் பாடுகிறார் திருவள்ளுவர்.

‘கண்ணில் என் காதலர் இருக்கிறார். மறைவார் என்பதால் மை எழுத மாட்டேன்’ என்று இதற்குப் பொருள். ‘இமைக்கும் நேரம் கூட இடைவெளி இன்றி அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். எனவே கோலம் போடக் காலம் இல்லை’ என்பது மணக்குடவர் இக்குறளுக்கு எழுதிய உரையில் காணப்படும் கருத்து!


இக்கருத்தையே கொஞ்சம் மாற்றி அப்துல் ரகுமான் இப்படிச் சொன்னார்:
‘வீட்டுக்குள் அவர். வாசலில் எதற்கு வரவேற்புக் கோலம்?’

அப்துல் ரகுமானின் கஸல் துளி ஒன்று என் சிந்தனை மீது சில்லென்று தெரித்தது.
“கண்ணுக்கு மை தீட்டக்
கோல் எடுக்கிறாள்
அந்தோ
யாருடைய விதி
எழுதப்படப் போகிறதோ?”

நானும் ஏதாவது சொல்லிப் பார்க்க நாடினேன். சட்டென்று தோன்றின இவ்வரிகள்:
“அவளின் கருவிழிகள்
இரு கவிதைகள்
அதற்கு
அவளே வரைகிறாள்
மையால் உரை”
ஆகா! என்று வாய் லேசாக அங்காந்த கணத்தில் சொடேரென்று என் பிடரியில் தட்டியது நியாபகம். இது பாரதி எழுதிய பாடல் ஒன்றில் உள்ள அர்த்த கனமான கற்பனை அல்லவா?
”வேதத் திருவிழியாள் – அதில்
மிக்க பல்லுரை எனும் கரு மையிட்டாள்”
என்று சரஸ்வதியின் வருணனையில் அவன் பாடுகிறான்.
வேதம் அவளின் கண்களாம். அதற்கு வரையப்படும் உரை என்பது கண்ணில் தீட்டப்படும் மையாம்.

“கண்ணுக்கு மை என்பது அளவாக எடுத்து நிதானமாகத் தீட்டப்பட வேண்டும். கோதி எடுத்து அப்பிக் கண்ணையே மறைத்து விடக்கூடாது. அது போல் வேதத்திற்கு இயற்றப்படும் உரை அளவாக இருக்க வேண்டும். நிதானமாக எழுதப்பட வேண்டும். மூலக் கருத்தையே மறைப்பதாக இருக்கக் கூடாது.” என்று இதற்கு உட்பொருள் இருப்பதாக திரு.டி.என்.இராமச்சந்திரன் அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். (அவருக்குச் சொன்னவர் திருலோக சீதாராம் என்பதாக நினைவு).

மின்னல் போல் மனத்தில் பளிச்சிட்டுப் புளகம் தந்த கற்பனை இப்படி நமதல்ல என்று ஆகிவிட்டதே என நினைத்தேன். ‘அடடா, வடை போச்சே!’ என்று வருத்தப்பட்ட ’வைகைப் புயல்’ வடிவேலின் நிலையில் இருந்தேன். சற்று நேரத்தில் இன்னொரு மின்னல். அதன் பளிச்சில் நல்லதொரு கருத்தும் காட்சி தந்தது:
“கலைகள்
ஒன்றை ஒன்று சார்ந்தவை
அதோ
காவியங்கள் மீது
ஓவியம் தீட்டுகிறாள்!”
அதுவும் கறுப்பு வெள்ளைக் காவியத்தின் மீது இந்தியன் இன்க் கோட்டோவியம் (Indian-ink outline drawing)!


கட்டுரையின் ஆரம்பக் கேள்விக்கே திரும்புகிறேன். கண்-மை என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியதாகப் பரவலான பாவனை உள்ளது. ஆண் மை தீட்டினால் ஆண்மைக்கு இழுக்கா? என்று எண்ணும் வேளை தொலைக்காட்சி ஒன்றில் வந்து நின்றார் – ஆண்மைக்கு ஓர் அடையாளமான மீசைக்கே மையின் கைங்கர்யம் இருக்கிறது என்று அவனிக்கு அறிவித்த மூன்றெழுத்து நடிகர். அவர் தன் விழிகளுக்கு மையும் தீட்டியிருந்தார்!


“PIRATES OF THE CARRIBEAN” தொடர்த் திரைப்படங்களில் வரும் நண்பர் ஜாக் ஸ்பார்ரோ என்னும் கடற் கொள்ளையன் தன் கண்களில் மை தீட்டியிருப்பதும் நினைவு வந்தது.


என் மகனும் நானும் மகிழ்ந்து நெகிழ்ந்து பார்த்து ரசிக்கும் கார்ட்டூன் கேரக்டர்களில் ஒருவரான தோழர் பெருந்தகை ‘ஷின் ச்சான்’ (shin chan) அவர்களும் மை அப்பிய கண்களுடன் காட்சி தருபவரே!

இதெல்லாம் வெறும் ஒப்பனைகள். திரையில் வரும் கற்பனைகள்.

ஆனால் சுர்மா – இத்மித் – குஹ்ல் என்னும் கண்-மை இட்டுக்கொள்வதை வழிபாடாகவே கருதுகிறது இஸ்லாம். அது நபிவழி (சுன்னத்) என்னும் அந்தஸ்த்தில் உள்ள காரியம். அது ஒப்பனையோ கற்பனையோ அல்ல. ஆன்மிகத்தின் அம்சம்.

’இத்மித்’ என்று அரபியில் அழைக்கப்படும் மூன்றாம் ஆண்டிமொனி சல்ஃபைடு பற்றி நபிகள் நாயகம் நயந்துரைத்த மொழிகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபி-மொழி:
“உங்கள் அஞ்சனங்களில் சிறந்தது இத்மித். அது பார்வையைத் தெளிவாக்குகிறது, இமையின் முடிகளை வளர்த்துகிறது” (நூற்கள்: சுனன் நஸாயீ #5113, சுனன் அபுதாவூத் #3837).

நபித்தோழர் அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
“நபி (ஸல்) தன் கண்களுக்கு மை இடுகையில் வலக் கண்ணில் மூன்று முறையும் இடக் கண்ணில் இரண்டு முறையும் இடுவார்கள்” (நூல்: முஸன்னஃப் இப்னு அபீஷைபா)

இந்த அழகிய நபிவழியைப் பின்பற்றும் ஆசையால்தான் சுர்மாக் கல்லை ஒரு கூழாங்கல்லில் உரசிக் கொண்டிருந்தேன். ஏனெனில் மெல்ல மெல்ல நடைமுறையில் இல்லாமல் ஆகி வருகிறது இந்த நபிவழி.

ஆயத்தமாகவே கிடைக்கும் சுர்மாப் பொடிகளும் வைத்திருக்கிறேன். தமிழகத்து அஞ்சனங்களில் கரிசலாங்கண்ணி சேர்க்கப்படுவது போல் வட மாநிலங்களில் இருந்து வரும் சுர்மாப் பொடிகளில் கற்பூரம் கலந்ததும் ரோஜா கலந்ததும் கிடைக்கின்றன. அப்படி எப்போதோ வாங்கி வைத்த பொடி ஒன்றை ஒருமுறை கண்ணில் இட்ட அடுத்த கணமே எரிதழல் போல் கனன்று அந்தி வானத்து நிறம் வந்துவிட்டது. உடனே கழுவி விட்டேன்.

பிறகுதான் தெரிந்தது. கண்-மைக்கும் காலாவதி உண்டென்று. மேலும் தூய பொருள்தான் கண் காக்குமாம். கலப்படங்கள் கண் கெடுக்குமாம். ஆதலால், அமெரிக்கா போன்ற நாடுகளில் ரசாயன மைகள் தடை செய்யப் பட்டுள்ளன.

சிக்னலின் எந்நிறமும் என் கண்ணின் அடையாளம் ஆவதை ஒருபோதும் நான் விரும்புவதில்லை. இத்தருணத்தில் ஒரு பிரார்த்தனை செய்தேன்:

“இறைவா!
என் கண்களில் பச்சையான பார்வை தோன்றக் கூடாது;
பக்குவமான பார்வையே தோன்ற வேண்டும்.
என் கண்களில் மஞ்சள் பார்வை இருக்கக் கூடாது;
மதுரமான பார்வையே மலர வேண்டும்.
என் கண்கள் சிவந்து போவதும் ஆகாது;
சிந்தனையின் ஒளி அதில் சிறக்க வேண்டும்.
என் பார்வைப் போக்குவரத்தைச் சீராக்கு;
நேரான பாதையில் அதை நடத்துவாயாக!”








Saturday, October 20, 2012

எருமை தியானம்




”எருமைமாடு”

பெயர்ச்சொல் மட்டுமல்ல. நம் புழக்கத்தில் இது ஒரு வசைச்சொல்.

யாரேனும் உங்களை இச்சொல்லால் அர்ச்சனை செய்ய நீங்கள் மகிழ்ச்சி அடைந்ததுண்டா?

எருமை மாட்டின் மேல் மழை பேஞ்சாப்ல’ என்று ஒரு சொலவடை உண்டு. சுரணை இல்லாதவன் என்று சுட்டிக் காட்டவாம். ஏனெனில் பெய்யெனப் பெய்யும் மழையில் சுகமாக நனைந்தபடி எந்தப் பதற்றமும் இல்லாமல் எருமை நடந்து செல்கிறதாம்.
எறுமைகளுக்குச் சுரணை இல்லை என்பது மனிதனின் கணக்கு. அது தப்புக் கணக்கு என்றே தோன்றுகிறது.

தன்னை வைத்தே எல்லாவற்றையும் எடை போட்டுப் பார்ப்பது மனிதனின் இயல்பாக இருக்கிறது. ஏனெனில் அதுதான் மனிதனுக்கு இலகுவாக இருக்கிறது. ஆனால் இந்த அணுகுமுறை கொண்டு ’உண்மை’யை அடைவது சாத்தியம் இல்லை.

மனிதன் தன்னை மையப்படுத்தியே சிந்திப்பது போல் எருமையும் அதன் கோணத்தில் இருந்து எண்ணக்கூடும் அல்லவா?

அதாவது, மனிதனுக்கு ரசனையே இல்லை என்று! சுரணை கெட்டது என்று நாம் நினைக்கும் எருமை நம்மைப் பற்றி ’மனிதன் ரசனை கெட்டவன்’ என்றொரு அபிப்பிராயம் வைத்திருக்கக் கூடும்!

எப்பக்கம் நியாயம் உள்ளது என்பது உங்களின் மனநிலையைப் பொருத்து மாறும். எருமையின் கோணத்தில் நான் சிந்தித்துப் பார்த்தபோது அதன் பார்வையும் சரிதான் என்றே படுகிறது!

”மழைத்துளிகள் தம்மைப் படைத்த இறைவனிடம் இருந்து புதிதாய் வருகின்றன” – தூரலுக்கு முகத்தைத் தூக்கிக் காட்டியபடி நபிகள் நாயகம் நவின்ற வாக்கில் மழை ரசனையின் மணம் வீசுகிறது!


மழையில் நனைதல் என்பது மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மழலைக்கும் மனத்தில் இயல்பாய் மலரும் ரசனை. பூப்பிளந்து பூமிக்கு வரும் குழவியும் மழைத்துளி போல் இறைவனிடமிருந்து புதிதாய் வரும் கொடைதானே?

ஆனால் பிள்ளைப் பருவம் மெல்லத் தேயும்போது மழையை ரசிக்கும் பார்வையும் மழுங்கிப் போய்விடுவது ஏன்?

மழை இறைவனின் அருட்கொடை. அதில் நனைந்து ஆனந்தம் அடைவது பக்தியின் அடையாளம் அல்லவா? மனிதனோ நனைவதை விட்டும் தப்பித்து ஓடுகிறான். ஆனால் எருமைகள் அந்த பக்திச் சுவையில் திளைக்கின்றன!

’மனிதன் அவசரக் காரனாகப் படைக்கப் பட்டிருக்கிறான்” (21:37) என்று சான்று வழங்குகிறது திருக்குர்ஆன்.

”நிதானம் என்பது இறைவனிடம் இருந்து வருகிறது; அவசரம் என்பது சாத்தானிடம் இருந்து வருகிறது” என்பது நபிமொழி.

அந்த அவசரம் மனிதனிடம் கூடிக்கொண்டே போகிறது. நிதானம் எருமைகளிடம் உள்ளது! சொல்லுங்கள், இறைவனின் அருளை அடைந்து கொண்டது யார்?

எருமை எமனின் வாகனம் என்பது இந்து ஞான மரபில் ஒரு குறியீடு. ஏனெனில் மரணம் என்பது மெல்ல மெல்ல வந்து சேர்கிறது! பொருத்தமான குறியீடுதான்.

ஆனால் எருமையின் பொறுமையை, அதன் அருமையை உணராத மனிதன் அதன் நிதானத்தைச் சோம்பேறித்தனம் என்று இகழ்கிறான். வாழ்க்கை எருமையின் கதியில் செல்லக்கூடாது என்றும் அது குதிரையின் வேகத்தில் விரைய வேண்டும் என்றும் விரும்புகிறான். ’மரணமே விரைந்து வா’ என்று தன்னையே அறியாமல் அழைக்கிறான்!

விரைவு என்பது விஞ்ஞானத்தின் பாதைக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் நிதானம் என்பதே மெஞ்ஞானப் பாதையின் நியதி.

ஞானிகளிடம் நிதானம் இருக்கும்.

அரபுப் பகுதியில் தோன்றிய இறைத்தூதர்களின் வாகனம் கோவேறு கழுதைகளும் சாதாக் கழுதைகளும்தான். அவற்றிடம் நிதானம் இருக்கும்.

ஆனால் பாருங்கள், ‘சோம்பேறிக் கழுத’ என்ற வாசகமும் நம்மிடம் வசையே அன்றி இசை அல்ல.


சீன தேசத்து ஞானி – முதிய குரு என்னும் பொருள் கொண்ட லாவ்சூ (LAO TZU) எருமையின் மீது இவர்ந்து வரும் காட்சி பிரசித்தமான ஒன்று.

கீழை ஆன்மிகப் பயணம் என்றுமே புரவியின் வேகம் கொண்டதல்ல. மனம் வேகமானது. அதற்கு பிடரி சிலிர்த்தோடும் குதிரைதான் பொருத்தமான குறியீடு என்று நாம் நினைக்கலாம். ஆனால் ஜென் தத்துவத்தில் மனம் ஓர் எருது என்றே உருவகப் படுத்தப்பட்டுள்ளது.

“ஜென்னின் பத்து எருதுகள்” என்று ஓர் ஓவியம் உண்டு. சுயத்தைக் கண்டறிதல் என்னும் தத்துவத்தை விளக்கும் பத்துப் படங்கள் அவை. பனிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜென் குரு கூவன் ஷீயுஆன் என்பவரால் வரையப்பட்டவை என்று சொல்லப்படும் அப்படங்கள் ஆன்மிகத் தேடலையும் ஞானம் அடைதலையும் பின்வரும் பத்து நிலைகளில் விளக்குகின்றன:

எருதைத் தேடுதல் (பூச்சிகளின் பாடல் மட்டுமே கேட்கிறது; எந்த இலக்கும் தெரியவில்லை)
எருதின் குளம்புத் தடங்களைக் காணல் (பாதை தெரிதல்)
எருதைக் காணல் (அதன் பின்னால் இருந்து; முன் பக்கம் அல்ல)
எருதைப் பிடித்தல் (மிகவும் சிரமமான காரியம் இது; மீண்டும் மீண்டும் தப்பித்து ஓடும் எருதைக் கைவசம் ஆக்குதல் எளிதல்ல)
எருதைப் பழக்குதல் (நம் சொற்படி அது அடங்கி வருதல்)
எருதின் மேல் அமர்ந்து அதை வீட்டிற்கு ஓட்டிச் செல்வது (ஆன்மிக அனுபவங்கள்)
எருதைக் கடந்து போதல் (எருதை மறத்தல்; சாட்டைக்கு இனி வேலை இல்லை)
எருதையும் தன்னையும் கடந்து போதல் (உடலும் மனமும் மறக்கப்பட்ட நிலை)
மூலத்தை அடைதல் (ஞானம் அடைதல்; பூச்சிகளின் பாடல் மட்டுமே கேட்கிறது)
ஊருக்குள் வருதல் (ஞானத்தை மக்களுக்கு போதிக்க வருதல் - குரு நிலை)


இந்தப் பத்து நிலைகளையும் ஓஷோ விளக்கியிப் பேசியிருக்கிறார். ‘THE SEARCH’ என்னும் நூலாக வெளிவந்துள்ளது. ஓஷோவின் உரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பத்து நிலைகள் பற்றி உளவியல் பார்வையில் மனநல மருத்துவர் ருத்ரன் எழுதிய நூலின் தலைப்பு “தேடாதே”!

சமீபத்தில் ’தி ஹிண்டு’ நாளிதழில் ஒரு கட்டுரை வாசித்தேன். மெதுவாக வாழும் கலையை வலியுறுத்தி எழுதப்பட்டிருந்தது. அதுதான் இப்போது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளில் சூடு பிடித்து வரும் ட்ரெண்ட் என்று சொல்லியிருந்தது. SLOW-PARENTING போன்ற வார்த்தைகள் அக்கட்டுரையில் தென்பட்டன. எல்லாம் கீழை நாடுகளின் தொல் சரக்குகள்!

வாழ்க்கை ஒரு வசந்தப் பயணமாக வேண்டும் எனில்-
மனதில் நல்ல ரசனை நிரம்பியிருக்க வேண்டும்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் உறுதி இருக்க வேண்டும்
செயல்களில் நிதானம் இருக்க வேண்டும்

மூன்றும் எறுமையிடம் உள்ளன!

எருமையாய் நடந்து வந்து கொண்டிருந்த மனித இன நாகரிகம் விஞ்ஞானத்தின் ரசவாதத்தில் குதிரையாய் மாறி வாயில் நுரை தள்ள இருபத்தோராம் நூற்றாண்டின் வாசலுக்கு வந்து மூச்சிளைத்து நிற்கிறது.

அது மீண்டும் எருமை ஆகி நடக்கக் கடவதாக!


(குறிப்பு: பத்து எருதுகள் படத்தை ஓவியமாக வரைவது என்பது ஜென் நெறியில் ஓவியர்களுக்கு ஒரு முக்கியமான தியானம். அதைப் பல ஓவியர்கள் மீண்டும் மீண்டும் வரைந்து பார்த்திருக்கிறார்கள். டொக்கூரிக்கி டொமிக்கிச்சிரோ (1902-1999) என்பவர் வரைந்த படங்கள் இது)

Friday, October 19, 2012

தீண்டும் இன்பம்



தோண்டும் தோறும் நீர் ஊறும் மணற் கேணி போல் மீண்டும் மீண்டும் கேட்கும்போதும் புதிதாய் ஏதேனும் தரிசனம் தருவதே நல்ல இசை.

‘நவில் தோறும் நூல் நயம்’ என்பது நூலுக்கு மட்டுமான இலக்கணம் அன்று. எல்லாக் கலைகளுக்கும் பொருந்தும்.


பாரதியின் ’காக்கைச் சிறகினிலே’ என்ற பாடலுக்குப் பல மெட்டுக்களில் இசை வடிவம் உண்டு. அவற்றுள் எல்.வைத்தியநாதன் இட்ட மெட்டு மட்டுமே என் மனதைக் கவர்ந்து நின்றது. (’ஏழாவது மனிதன்’ என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்)

உருவில் அது சிறிய பாடல்தான் என்றாலும் கருத்தில் பெரிய பாடல்.

“பெரிதினும் பெரிது கேள்” என்பான் பாரதி. அது எது என்பது அவரவர் அறிவும் அளாவி அடையுமாறு அனுமானத்திற்கு விடப்பட்ட ரகசியம். அதற்கான விடை இந்தப் பாடலில் இருக்கிறது என்றுதான் என் உள்ளம் எனக்கு உரைக்கிறது.

வலிக்காமல் செதுக்கியது போல் காட்சி தரும் அந்தக் கச்சிதக் கவிதை:
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் மொழிகளெல்லாம் நந்தலாலா – நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”

குயில் பாட்டு தந்தவன் இப்பாடலைக் காக்கையைக் குறிப்பிட்டுத் தொடங்குகிறான்.

மரங்கள், முற்றம், புழக்கடை, மாடி என எவ்விடத்தும் தென்படும் எளிய பறவை அது. “எத்தித் திருடும் அந்தக் காக்காய்” என்று பாரதியே வேறொரு இடத்தில் எள்ளிய பறவை அது!

அவ்வாறு நகை ஆடிய அந்த வரிக்கும் அடுத்த வரியிலேயே உணர்வின் மாற்றத்தைப் பாருங்கள்: “அதற்கு இரக்கப் படவேணும் பாப்பா”


காக்கை எத்தி எத்தி எத்தைத் திருடும்? அதற்கான விடையாகச் சொல்லி வைத்தார்கள் ஒரு பாலர் கதையில், வடை என்று!

வாய்க்கு உணவு வாய்க்காத சூழலில் வயிற்றில் எழும் பசிதான் கன்னம் வைக்கும் எண்ணம் தோன்றுவதற்குத் தோற்றுவாய்!

“எத்தித் திருடும் அந்தக் காக்காய் – அதற்கு
  இரக்கப் படவேணும் பாப்பா”

ஏனெனில், பறவைகளில் காக்கை ஏழை வர்க்கம். எனவே இல்லாதவன் பசிக் கொடுமையால் திருடினால் அவன்மேல் காட்டத்தான் வேண்டும் இரக்கம்!

காக்கை மீது இரக்கம் காட்டச் சொன்ன அவனே இன்னொரு இடத்தில் இப்படிப் பாடுகிறான்: “காக்கை குருவி எங்கள் ஜாதி”

இரக்கம் சுரக்கும் இதயத்தில் அல்லவோ இறைஞானம் பிறக்கும்? அந்த ஞானத்தில்தான் இப்பாடலை ஆரம்பம் செய்கிறான்:
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா”

பொதுக் கருத்தில் காக்கை என்பது அழகற்ற பறவை ஆகலாம். ஆனால் அகப் பார்வைக்கு அதுவும் ஆண்டவனின் அழகைக் காட்டும் ஓர் ஆடி ஆகிறது. ஏகத்தில் நிலைக்கும் பிரபஞ்ச ஆகத்தில் கரிய காகமும் ஒரு பாகம் அல்லவா?


“கங்கை நதியில் நீ காணும் தெய்விகத்தைச் சாக்கடை நீரிலும் நீ காணும் நிலை சாத்தியம் ஆகாத வரை ஞானம் சித்திக்காது” – விவேகானந்தருக்கு இப்படி அருளுரை வழங்கினார், பரத்தையின் வடிவிலும் பரம்பொருளையே பார்த்த பரமஹம்சர் என்னும் ஆன்மிக அன்னம்.

நீர் நீக்கிப் பால் பருகும் அன்னம் என்பர். அந்த அன்னம் அன்ன இறை அன்பர், படைப்பின் குறை பாராது படைத்தவனின் நிறை நோக்குவர்.

’நின்றன் கரிய நிறம்’ என்று சொல்லப்பட்டதில் ஆழ்ந்திருக்கும் பொருள் ஒன்று உண்டு. கறுமை என்பது இருள். கருமை என்பது புதிர். படைப்புக்கள் வெளிச்சத்திற்கு வரும் முன் இருந்த நிலை அது. அந்த ஆதி நிலையைத்தான் காக்கைச் சிறகின் கரிய நிறம் தனக்கு நினைவூட்டுவதாக பாரதி பகர்கிறான்.

பாரதியின் பார்வை அடுத்து மரங்களின் மீது அளாவுகிறது. முன்னினும் விசாலமான பார்வை என்பது குறிப்பு.
“பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா”


பார்க்கும் பொருள்கள் மாறலாம். அவற்றின் நிறங்கள் மாறலாம். ஆனால் அகப்பார்வைக்கு அவை அனைத்திலும் ஆண்டவனே தெரிகிறான். ஏனெனில் நிறங்கள் பல என்றாலும் அவற்றின் ஆதாரமாய் உள்ள ஒளி ஒன்றுதான்.

கரிய நிறம் என்பது ’நிற்குணம்’ என்னும் நிலையையும் பச்சை நிறம் என்பது ’சற்குணம்’ என்னும் நிலையையும் குறிக்கின்றன.

அடுத்து அவனின் கவனம் இன்னும் நுட்பமான ஒன்றை நோக்கி நகர்கிறது. கண்ணிலிருந்து காதுக்கு. காட்சியில் இருந்து ஓசைக்கு.
“கேட்கும் மொழியிலெல்லாம் நந்தலாலா – நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா”

ஓசையைக் கேட்பார் பலருண்டு. கீதம் கேட்பார் சிலரே.

ரசனை இல்லை எனில் இசையும் வெறும் ஓசை அன்றி வேறல்ல.

ஓசை என்பது மண் போல். பானை மண்ணால் ஆகிறது. மண் இன்றிப் பானை இல்லை. எனினும் பானை வெறும் மண் அல்ல.

அதுபோல், இசை ஓசையால் ஆகிறது. ஓசை இன்றி இசை இல்லை. எனினும் இசை வெறும் ஓசை அல்ல.


செவி ஓசை கேட்கும். இசை கேட்க இதயம் செவியில் ஒன்றும் செவ்வி வேண்டும். ”சிலரதன் செவ்வி தலைப்படுவார்” என்று வள்ளுவன் வாய்மொழிந்த காமம் போன்றதே நல்ல இசையும். அது விஷமாவதும் அமிர்தமாவதும் அவரவர் நிலைப்படி.

ஆன்ம கீதம் என்பது அதனினும் நுட்பமானது. அதற்கு உட்செவி திறக்க வேண்டும். அகப்பார்வை என்பதும் அகக்கேள்வி என்பதும் வேறு வேறு அல்ல. அவை ஒன்றின் பெயர்களே.

”காதால் காணவும்
கண்ணால் கேட்கவும்
கற்றுத் தந்தது
காதல்”
என்கிறான் லெபனான் தந்த கவிஞன் கலீல் ஜிப்ரான்.

முன்னினும் நுட்பமான இந்தத் தளத்தில் ஒரு மாற்றத்தை அடையாளம் காட்டுகிறான் பாரதி. இறைவனுக்குத் தொண்டனாய் மட்டும் இருந்தவன் இங்கே நேசனாக உயர்ந்திருக்கிறான். அதனால்தான் முன்பு ‘தோன்றுது ஐயே’ (எஜமானே) என்று பாடியவன் இங்கே தோன்றுதடா என்று பாடுகிறான். இது நெருக்கத்தின் அடையாளம் என்பதைக் காதலர் அறிவர்.

இறையடிமை என்பது பொதுநிலை.
இறைநேசம் என்பது சிறப்பு நிலை.

அடுத்த அடி ஆன்மிகத்தின் உச்சத்தை உரைக்கிறது.
“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா”

’நின்றன்’ என்று முன்னம் சொன்ன நிலை இங்கே ’நின்னை’ என்று மாறிவிட்டதை ஓர்க.

’கண்டு கொண்டேன்’ என்னும் நிலை காதலின் ஆரம்பம் எனில் ’கட்டிக் கொண்டேன்’ என்னும் நிலை அதன் முற்றாத முடிவல்லவா?

ஒளியாய்ப் பிறங்கும் ஒன்றைத் திரையிலாது தீண்டும் இன்பம் தரும் அந்தத் தீ எந்தத் தீ? அது கடவுள் மீது கட்டற்றுப் பெருகும் காதல்!


“நண்பனைப் பின்பற்று
காதலின் கட்டளையை நிறைவேற்று
உன் வலையில்
இறைவனைப் பிடிப்பவனாவாய்”
என்று பாடுகிறார் அல்லாமா இக்பால்.

அந்த வலை எந்த வலை என்று அறியார்க்கு அடையாளம் காட்டுகிறது நாயன்மாரின் நாவில் பூத்த தமிழ்: “அன்பெனும் வலையில் படுவோன் காண்க”

ஆண்டவனே நமக்கு அகப்படுவதினும் நாம் சுகப்படுவதற்குச் சிறந்த வழி வேறுண்டோ? அந்த அனுபவத்தில் தன் பாடலை முடிக்கிறான் பாரதி.

எல்.வைத்தியநாதன் இந்த வரியின் தனிச்சிறப்பை நன்றாக உணர்ந்திருக்கிறார். முன்னைய மூன்று வரிகளுக்கும் கீழ்ஸ்தாயியில் மெட்டமைத்தவர் இந்த இறுதி அடிக்கு மட்டும் மேல்ஸ்தாயியில் இசை அமைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல, முன்னைய மூன்று அடிகளிலும் நந்தலாலா என்னும் சொல் பாரதி எழுதியிருப்பது போன்றே ஒருமுறை மட்டும் உச்சரிக்கப்பட, இவ்வடியில் மட்டும் அது மூன்று முறை – முடிவின்மையைக் காட்ட முப்புள்ளிகள் வைத்தது போல் – உச்சரிக்கப் படுகின்றன.

உச்சரிப்பு வேறுபாடு வெறும் எண்ணிக்கையில் மட்டுமல்ல, உச்சரிக்கும் முறையிலும் தொனிக்கின்றது. கலவிக் கணத்தில் தன் கர்வம் அழியும் ஒருவன் இணையாளின் பெயரை உச்சரிப்பது போல் உள்ளது.

மனிதக் காதலின் தீண்டும் இன்பம் புனிதக் காதலின் சாயை அன்றோ?

விட்டில் ஒன்று விளக்கில் வீழ்ந்து உயிர் விடும் கணத்தில் தன் சக விட்டில்களுக்கு அதனை விளக்க எத்தனித்து ஏதோ முனுமுனுத்து விட்டு மரித்ததாம். இறையனுபவம் பெற்றவர்கள் அதனை விளக்க முற்படுவது இவ்வாறே ஆகிறது என்று சொல்வார் சூஃபி ஞானி அத்தார்.

இப்பாடலின் முடிவில் ’நந்தலாலா’ என்னும் பெயர் விளக்கினுள் புகுந்து வந்த விட்டிலின் முனுமுனுப்பாய் ஒலிக்கிறது.

Wednesday, October 17, 2012

எறும்பின் கண் -7


சுலைமான் நபி செய்த அந்த இரண்டு காரியங்கள் யாவை?

பல்கீஸ் அரசி தன் பரிவாரங்களுடன் தன்னைப் பார்க்க வருவதற்கு முன் அவரின் நாட்டிலிருந்து அவரின் சிம்மாசனத்தைத் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்பது ஒரு காரியம். அதனை அவர்கள் எவ்வாறு நிகழ்த்தினார்கள் என்பதைத் திருக்குர்ஆன் கூறுகிறது:
”’பிரமுகர்களே!
அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன்
உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை
என்னிடம் கொண்டு வருபவர்?’
என்று (சுலைமான் அவர்களிடம்) கேட்டார்.
ஜின்களில் இஃப்ரீத் கூறிற்று:
’உம் இடம் விட்டு நீங்கள் எழுமுன்
யானதை உம்மிடம் கொணர்ந்து சேர்ப்பேன்;
திண்ணமாய் அதன்மேல் ஆற்றலுடையேன்
நம்பிக்கைக்கு உரியவன்’
இறைமறை ஞானம் தன்னிடம் உள்ள
ஒருவர் சொன்னார்:
‘உம் கண் இமைப்பதற்குள்
உம்மிடம் அதனைக் கொணர்ந்து சேர்ப்பேன்’
அவ்வாறே அதனைத் தன்முன் கண்டதும்
(சுலைமான் நபி) கூறினார்:
‘இஃதென் ரட்சகனின் அருட்கொடை;
நன்றியாகின்றேனோ மறுக்கின்றேனோ
என்று எனைச் சோதிக்க;
எவன் நன்றி செலுத்துகின்றானோ
அவன் தனக்கே செலுத்துகின்றான்;
எவன் மறுக்கின்றானோ,
திண்ணமாக என் ரட்சகன்
தேவையற்றவன், கண்ணியம் மிக்கவன்’”
(27:39,40)


’இது என் இறைவனின் அருட்கொடை’ (ஹாதா மின் ஃபழ்லி றப்பீ) என்று சுலைமான் நபி குறிப்பிட்டதன் விளக்கம் என்ன? இது பற்றி இரண்டு வியாக்கியானங்கள் உள்ளன.
1.பல்கீஸ் அரசியின் சிம்மாசனம்
2.இறைமறையின் ஞானம் பெற்ற அந்த ஞானி. (அவர் பெயர் ஆசிஃப் இப்னு பர்ஃகியா என்று விரிவுரைகளில் வந்துள்ளது.)

இவ்விரண்டில் எது பொருத்தமானது? என் அறிவிற்கு எட்டிய வரையில் இரண்டாவது பதில்தான் பொருத்தமானது.

ஏனெனில் பல்கீஸ் அரசியின் சிம்மாசனம் இறைஞானத்தை விடவும் பெரிய அருட்கொடை அல்ல. அதனைக் கண் இமைப்பதற்குள் தன் முன் கொண்டு வந்து நிறுத்தும் ஞானம் பெற்ற ஒருவர் தன் அவையில் இருப்பதையே சுலைமான் நபி இறைவனின் அருட்கொடை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கு வலு சேர்ப்பதற்கு முன்புள்ள திருவசனங்களின் பக்கம் கவனிப்போம். பல்கீஸ் அரசி அனுப்பிய அன்பளிப்பைப் பார்த்துவிட்டு சுலைமான் நபி சொன்னார்கள்:
நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்கிறீர்களா?
அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது
உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்.”
(27:36)


அல்லாஹ் நபிமார்களுக்குக் கொடுத்த விஷேசமான சொத்து இறைஞானம்தான் என்பதைச் சுட்டும் நபிமொழியை முன்பே கண்டோம். நபிமார்களின் வாரிசுகள் ஞானிகளே என்னும் நபிமொழியின் படிக்கு இங்கே அந்த ஞானி சுலைமான் நபியின் ஆன்மிக வாரிசாக இருக்கிறார். அவரையே இறைவனின் அருட்கொடை என்று அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பதுதான் மிகவும் பொருத்தமானது.

அந்த ஞானி கண்ணிமை நொடி நேரத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்ட அந்த சிம்மாசனத்தில் சில மாற்றங்களைச் செய்யுமாறு சுலைமான் நபி சொன்னார்கள். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த அற்புதமான நிகழ்ச்சி ஒன்றினையும் திருக்குர்ஆன் வருணிக்கின்றது:
“(சுலைமான் நபி) கூறினார்:
‘அவளின் அரியாசனத்தை
அவளுக்காக மாற்றுங்கள்;
நேர்வழி பெற்றோருள் உள்ளவளா
நேர்வழி அற்றோருள் உள்ளவளா
என்று நோக்குவோம்’
ஆகவே அவள் வந்தபோது
‘இது ஒப்பதா நின் அரியணை?’
என்று கேட்கப்பட்டது;
அவள் சொன்னாள்:
‘நிச்சயமாக அதனைப் போன்றே இது உள்ளது’
(சுலைமான் நபி சொன்னார்:)
’இவளுக்கு முன்பே நாம் ஞானம் அருளப்பட்டோம்
நாம் முஸ்லிம்களாக உள்ளோம்.
அல்லாஹ்வின் வேறானதற்கு
அவள் அடிமை செய்ததே
அவளைத் தடுத்திருந்தது
திண்ணமாய் அவள்
நிராகரிப்பாளரின் சமுதாயத்தில் இருந்தாள்’”
(27:41-43)

இவ்வாறு சொன்னபிறகு பல்கீஸ் அரசிக்கு ஏகத்துவ இறைஞானத்தை உணர்த்த இரண்டாம் நிகழ்ச்சியை சுலைமான் நபி பின்வருமாறு நடத்துகின்றார்கள்:
“’இம்மாளிகையில் பிரவேசியுங்கள்’
என்று அவளிடம் சொல்லப்பட்டது.
அப்போது அவள் (அதன் தரையைத்)
தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்.
எனவே (தன் ஆடையைத்) தன் இரு
கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்.
‘நிச்சயமாக அது மெருகேற்றிய பளிங்கினாலான மாளிகையே!’
(என்று சுலைமான் நபி அப்போது கூறினார்).
(அவள் சொன்னாள்:)
‘ரட்சகனே! நிச்சயமாக நான் எனக்கே
அநியாயம் செய்து கொண்டேன்;
அகிலங்களுக்கெல்லாம் ரட்சகனான அல்லாஹ்வுக்கு
சுலைமானுடன் முற்றிலும் வழிபட்டேன்’”
(27:44)

இதுவரை நாம் கண்ட இரு நிகழ்ச்சிகளில் இருந்து நாம் முன்னெடுத்துச் சிந்திக்க வேண்டும். சுலைமான் நபியின் அவையத்து ஞானி அக்காரியத்தை எப்படிச் செய்து முடித்தார்? கண் இமைக்கும் நேரத்திற்குள் வேறு நாட்டில் இருந்த சிம்மாசனத்தைத் தான் நிற்கும் அரண்மனைக்கு எவ்வாறு கொண்டு வந்தார்? இதில் பிரபஞ்ச ரகசியம் அடங்கியுள்ளது. சூஃபி மொழியில் அதற்கு “தஜத்துதே அம்ஸால்” (மாதிரிகளின் புத்தாக்கம்) என்று பெயர்.

’ஃபுசூசுல் ஹிகம்’ என்னும் நூலில் இந்நிகழ்ச்சிகளைப் பற்றி மகான் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றார்கள்:
“வஸ்துக்களின் ரகசியங்களைப் பொருத்த விஷயத்தில் ஜின்னை விடவும் இறைஞானம் பெற்ற மனிதனின் நிலை மேலானது என்பதை இந்நிகழ்ச்சி காட்டுகிறது. ஜின்னின் செயல் உடலின் அசைவால் ஆனது. ஞானியின் செயல்பாடு அவரின் அகக்கண்ணால் ஆனது. உடலின் அசைவை விடவும் கண்ணின் அசைவு அதி விரைவானது. கண் அசையும் கணம் அது பொருளுடன் தொடர்பு கொள்ளும் அதே கணம்தான். அப்பொருள் எத்தனைத் தொலைவில் இருந்தாலும் சரியே. கண் திறக்கும் அக்கணமே அது விண்ணுடனும் விண்மீன்களுடனும் தொடர்பு கொள்கிறது. காட்சி மறையும் அதே கணத்தில் அதனிடம் பார்வை மீண்டு விடுகிறது. இதில் சிறிதும் இடைவெளி என்பதில்லை.


“ஓர் இடம் விட்டு உடல் எழுவது என்பது அப்படி அல்ல. விழியின் வேகம் அதில் இல்லை. ஆசிஃப் இப்னு பர்ஃகிய்யா அந்த ஜின்னை விடவும் செயலில் பூரணமாக இருந்தார். அவர் பேசிய அதே கணத்தில் செயலும் நிகழ்ந்தது. அதே கணத்தில் சுலைமான் (அலை) பல்கீஸின் அரியாசனம் தன் முன் உருவாகி நிற்கக் கண்டார்கள். அது தன் இடத்தில் அசைக்கப்படாமல் இருந்ததைக் கண்டார்கள் என்று யாரும் எண்ண வேண்டாம். ஒரே கணத்தில் ஒரு பொருளின் இடமாற்றம் நிகழ்வதை நாம் சிந்திப்பதில்லை. ஏனெனில் அது ஒரே கணத்தில் இல்லாமை ஆகி (மஃதூம் – non-existent) மீண்டும் உள்ளமைக்குத் (உஜூத் – existence) திரும்புகின்றது. (இதுவே தஜத்துதே அம்ஸால் என்னும் தத்துவம்). இதனை அகக்கண் திறந்த ஞானியர் அன்றி வேறு எவரும் விளங்குவதில்லை. இது பற்றித்தான் அல்லாஹ் சொன்னான்: ”இல்லை, எனினும் இவர்கள் புதிய படைப்பைப் பற்றி ஐயத்தில் உள்ளனர்” (பல் ஹும் ஃபீ லப்சிம் மின் ஃகல்க்கின் ஜதீத் -50:15). ஒவ்வொரு கணமும் மாற்றத்தை உணராமலேயே அவர்கள் புதிய படைப்பைக் காண்கிறார்கள். இதனால், அந்த அரியாசனம் பல்கீஸின் அரண்மனையில் இல்லாமல் (மஃதூம்) ஆன அதே கணமே அதனை சுலைமான் நபி தன் கண்முன் புத்துயிர் பெறுவதாகக் கண்டார்கள். இதுவே இறைவனின் மூச்சால் படைப்புக்கள் புத்துயிர் பெறுவதாகும். இந்த சக்தியை ஒருவரும் அறிவதில்லை. இன்னும் சொல்வதெனில், மனிதன் தான் ஒவ்வொரு கணமும் இல்லாமல் (மஃதூம்) ஆகிக்கொண்டும் அதே கணத்தில் உள்ளமைக்கு மீண்டுகொண்டும் இருப்பதை உணர்வதே இல்லை.

”இது எவ்விதத் தாமதமும் இல்லாமல் நிகழ்கின்றது. ஒன்றின் இல்லாமைக் கணம் அதன் மாதிரியின் புத்துயிர்ப்புக் கணமாக உள்ளது. (இதுவே தஜத்துதே அம்ஸால் என்னும் கோட்பாடு ஆகும்) இது ’அஷ்அரீ’க்களிடம் உள்ள தஜ்ரீதுல் அஃராத் (நிகழ்வுகளின் புத்தாக்கம்) என்பதை ஒத்ததாகும்.

இந்தத் தத்துவத்தின் குறியீடாக சூரியன் உள்ளது! எனவே சூரியனை வழிபட்டுக் கொண்டிருந்த பல்கீஸ் அரசிக்கு இத்தத்துவத்தின் எதார்த்தத்தை நினைவூட்டி, சூரியன் அத்தத்துவத்தை விளக்குவதற்காக மனிதன் தன் மொழியமைப்பில் பயன்படுத்திக் கொண்ட ஒரு குறியீடு மட்டுமே என்பதை உணர்த்துவதற்காக சுலைமான் நபி ’அரியாசன இடமாற்றம்’ என்னும் செய்முறை விளக்கத்தை (demonstration) இறைஞானி ஒருவரைக் கொண்டு நிகழ்த்தினார்கள்.

‘பாஞ்சாலி சபதம்’ காவியத்தின் நடுவில் அர்ஜுனனின் வாய்மொழியாக காயத்ரி மந்திரத்தை பாரதி தமிழில் தருவதை முன்பு குறிப்பிட்டு விளக்கினோம். அப்பகுதியில் சூரியனைக் குறியீடாக வைத்து அவர் சொல்லும் கருத்தினை மேற்சொன்ன தஜத்துதே அம்ஸால் என்னும் தத்துவத்துடன் ஒப்பிட்டுக் காணலாம். அஃது மிகத் தொன்மையான காலத்திலேயே இந்திய மண்ணில் இருந்ததொரு ஞான தரிசனம் என்பதை பாரதியின் வரிகள் காட்டுகின்றன:
கணந்தோரும் ஒருபுதிய வண்ணம் காட்டிக்
காளிபரா சக்தியவள் களிக்கும் கோலம்
கணந்தோரும் அவள் பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்


பிரபஞ்சத்தில் எதுவும் ஒருகணமும் நிலையானதாய் இல்லை என்னும் இப்பார்வையை கிரேக்க தத்துவவாதியான ஹெராக்ளிட்டஸிடம் நாம் காண்கிறோம். “மாற்றம் என்பதே மாறாத ஒன்று” என்னும் அவரின் பொன்மொழி பரவலாக அறியப்பட்ட ஒன்று. “அனைத்தும் மாறுகின்றது; எதுவும் நிலைப்பதில்லை” என்பதும் அவர் சொன்னதுதான். “ஒரே நதியில் நீ இருமுறை இறங்க இயலாது. ஏனெனில் புதிய நீர் கணந்தோரும் பாய்ந்தபடி உள்ளது” என்று அவர் சொன்னதில் ’தஜத்துதே அம்ஸால்’ கோட்பாட்டின் பார்வை இருக்கின்றது.

ஹெராக்ளிட்டஸின் இந்தத் தத்துவத்தைப் பற்றி ஓஷோ பல இடங்களில் பேசியிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த அகதரிசனங்களில் இதுவும் ஒன்று. எனினும் அவர் ஹெராக்ளிட்டஸை விட ஒரு படி இன்னும் தாண்டிப் போவார்: “நான் சொல்கிறேன், ஒரு நதியில் நீங்கள் ஒரே முறைகூட இறங்க முடியாது. ஏனெனில் நீங்கள் உங்கள் காலினைத் தண்ணீரின் மேற்பரப்பில் வைக்கும்போது இருக்கும் நீர் வேறு, உங்கள் கால் உள்ளே இறங்கும்போது உள்ள நீர் வேறு!”

இதே ’நதி’ என்னும் உதாரணம் கொண்டும் ’சூரியன்’ என்னும் உதாரணம் கொண்டும் ‘தஜத்துதே அம்ஸால்’ என்னும் தத்துவத்தை மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் தன் மஸ்னவி காவியத்தில் இவ்வாறு பாடுகிறார்கள்:
”உயிரைத் தெளித்தபடி வீழ்கிறது உச்சிக் கதிரவன்
கணந்தோறும் காலியாகி மீண்டும் நிரப்பப் படுகிறது
மெய்ம்மையின் சூரியனே! உயிரைப் பொழிக!
பழைய உலகில் புதுமையைக் கொணர்க!
ஆதமின் இருப்பில் உயிர் பாய்ந்துகொண்டுள்ளது
நதியில் நீர் பாய்ந்துகொண்டே இருப்பதைப் போல்!”
(ஜான் ஃபிஷான் உஃப்தாத் ஃகுர்ஷீதே புலந்த்
ஹர் தமீ தை மீ ஷவத் புர் மீ குனந்த்
ஜான் ஃபிஷான் ஏ ஆஃப்தாபே மஃனவீ
மர் ஜஹானே குஹ்னா ராபே மஃனவீ
தர் உஜூதே ஆதமீ ஜானோ ரவான்
மீ ரஸத் அஸ் கைப் ச்சூன் ஆபோ ரவான்
மஸ்னவி :2220-2222)

சுலைமான் (அலை) அவர்களின் அவைக்கு வந்த பல்கீஸ் அரசிக்கு நிகழ்த்திக் காட்டிய இரு நிகழ்ச்சிகளையும் இணைத்து இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் மேலும் பின்வருமாறு விளக்குகிறார்கள்:
“பல்கீஸ் அரசி அந்த அரியணையைப் பார்த்தபோது, தன்னுடைய நாட்டிற்கும் சுலைமான் நபியின் அரண்மனைக்கும் உள்ள தொலைவை எண்ணிப்பார்த்து, அங்கிருந்து தன் அரியணையை இத்தனை காலதேச இடைவெளியில் எடுத்து வந்திருக்க இயலாது என்று நினைத்தவராக “நிச்சயமாக அதனைப் போன்றே இது உள்ளது” (க அன்னஹு ஹுவ -27:42) என்று சொன்னார். தஜத்துதெ அம்ஸால் என்னும் தத்துவத்தின்படி அவர் சொன்னது உண்மையே. அது அதுவேதான். புதுப்பித்தலின் கணத்தில் முன்பிருந்த அதேதான் இப்போதும் நீங்கள். சுலைமான் நபியின் ஞானத்தின் மேன்மையைக் காட்டும் ஒரு விஷயம் அவர்கள் பல்கீஸ் அரசியை அரண்மனைக்குள் பிரவேசிக்குமாறு சொல்லி உணர்த்தியதில் இருந்தது. அதன் கண்ணாடித் தன்மையை உணராத பல்கீஸ் அதனை ஓடும் நீர் என்று நினைத்துத் தன் ஆடை நனையாதிருக்கும் பொருட்டு அதனைச் சற்றே உயர்த்திப் பிடித்தார். அதன் மூலம், அவர் கண்ட அரியணை இதைப் போன்றதே என்பதை சுலைமான் நபி உணர்த்தினார்கள். இது உச்சமான ஞான போதனை. ‘நிச்சயமாக அதனைப் போன்றே இது உள்ளது’ என்று சொன்னபோது பல்கீஸ் அரசி விஷயத்தின் புள்ளியைத் தொட்டுவிட்டார் என்று அவருக்கு மறைமுகமாக அறிவித்துவிட்டார். அந்தத் தருணத்தில் பல்கீஸ் அரசி சொன்னார்: ‘ரட்சகனே! நிச்சயமாக நான் எனக்கே
அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் ரட்சகனான அல்லாஹ்வுக்கு
சுலைமானுடன் முற்றிலும் வழிபட்டேன்’ (27:44)


“அவர் சுலைமான் நபிக்கு அடிபணியவில்லை. ஆனால் அகில உலகங்களின் ரட்சகனுக்கு அடிபணிந்தார். சுலைமான் நபியோ அகில உலகங்களின் ஒரு பகுதியே. இறைத்தூதர்கள் தங்களின் இறைநம்பிக்கையைக் குறுக்கிக் கொள்ளமாட்டார்கள் என்பது போலவே பல்கீஸ் அரசி தன் அடிபணிதலைக் குறுக்கிக் கொள்ளவில்லை.
இதற்கு மாறாக ஃபிர்அவ்னின் மந்திரவாதிகளோ, ”மூஸா மற்றும் ஹாரூனின் ரட்சகன்” (ரப்பி மூசா வ ஹாரூன் -26:48) என்று குறுக்கவும் செய்தார்கள். இதுவும் பல்கீஸ் அரசியின் அடிபணிதலை ஒத்ததுதான் என்றாலும் அதன் தன்மை இதில் இல்லை. அல்லாஹ்வுக்கு அடிபணிதலில் ஃபிர்அவ்ன் கடைசியில் பெற்ற தெளிவை விட பல்கீஸ் அரசி பெற்ற தெளிவு அதிகமானது. மேலும், “இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த ரட்சகன் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவனை அன்றி வேறு தெய்வம் இல்லை என்று நானும் நம்பிக்கை கொள்கிறேன்” (ஆமன்து அன்னஹூ லா இலாஹ இல்லல்லதீ ஆமனத் பிஹீ பனூ இஸ்ராஈல -10:90) என்று ஃபிர்அவ்ன் சொன்ன போது அவன் சூழ்நிலையால் கட்டுண்டு இருந்தான். அவன் இவ்வாறு இறைவனை இறைத்தூதர்களைக் கொண்டும் இனத்தைக் கொண்டும் குறிப்பாக்கினான். பல்கீஸ் அரசியின் இஸ்லாமோ சுலைமான் நபியின் இஸ்லாம் எதுவாக இருந்ததோ அதுவாகவே ஆயிற்று. ஏனெனில் அவர், “சுலைமானுடன்” (மஅஸ் சுலைமான் -27:44) என்று சொன்னார். சுலைமான் நபி எந்த வழிகளில் எல்லாம் இறைநம்பிக்கையில் செயல்பட்டார்களோ அவை அனைத்திலும் பல்கீஸ் தன்னை ஆக்கிக் கொண்டார்.”
(ஃபுசூசுல் ஹிகம் அத்தியாயம் 16)

வான்வெளி எங்கும் விண்மீன் கூட்டம்
வைரத் திரளென ஒளிரும் காட்சி
விண்மீன் முன்னே பால்வெளி ஞாயிறு
விண்டுரை செய்யின் கடுகினும் சிறிதே
உடுக்கள் மீன்கள் என இவை எல்லாம்
வெளியெனும் காட்டில் மின்மினிக் கூட்டம்
எட்டுத் திக்கிலும் விரிந்த இவ்வெளியில்
எங்கே ஞாயிறு? எங்கே பூமி?
பாழ்வெளி தன்னில் பார்வை பரவின்
பூழ்தித் துகளெனத் தோன்றும் காண்க

பிரபஞ்சப் பரப்பில் சூரியன் என்பது பெருவனக் காட்டில் அலையும் ஒரு மின்மினிப் பூச்சி போன்றது. அந்த மின்மினிதான் காட்டுக்கே வெளிச்சமிடும் சூரியன் என்று கருதும் ஒரு பூச்சி அதை விட எத்தனை சிறியதாக இருக்கவேண்டும்!

ஆனால் அது மின்மினித் திரையை விலக்கி அகக்கண்ணால் மெய்ம்மையின் சூரியனையே தரிசித்து விடுமானால் அதன் பேரானந்தம் சொல்லவும் கூடுமோ?

எறும்பிற்குக் கண் உண்டா என்று துவங்கிய இந்தத் தேடல் எறும்பின் சமவெளிக்கு அழைத்துச் சென்று அப்படியே சுலைமான் நபியின் ஞான உலகிற்குள் ஆற்றுப் படுத்திவிட்டது. அந்த உலகின் விசாலத்தின் முன் வியந்து வியந்து என் அறிவின் சிறு கால்களால் அடியெடுத்து நான் நடந்ததை இங்கே கட்டுரையாகப் படியெடுத்துத் தந்தேன்.

“சர்க்கரைக் கிடங்கினுள்
சட்டென்று புகுந்துவிட்ட
எறும்பு போல் ஆனேன்”
என்று இயம்பும் மௌலானா ரூமியின் ஆன்மிகப் பெருவியப்பின் ஒரு துளி இந்த அற்பனின் இதயத்திலும் வீழ்ந்தது இறைக்கருணையின் அடையாளமே!


அந்த வியப்பில்தான் எழுதினேன்:
”பிரபஞ்சத்தினும்
பெரிது உன் அழகு
என் அறிவோ
எறும்பின் கண்”

(முற்றும்)