Wednesday, October 17, 2012

நாட்குறிப்பு




முடிவற்ற இதழ்கள்
உதிராமல் விரியும்
உன்
கருணையின் காம்பில்

நதிக்கரையின்
நாணல் உன்
நேசத்தில் ஆகும்
புல்லாங்குழல்

இருளுக்குள்
ஓடி நான்
ஒளிந்த இடமெல்லாம்
விழிகளால்
விளக்கேற்றினாய்

வெளியேறும் எத்தனிப்பில்
படிமங்கள் உதிர்க்கும்
உன் குறியீடு
நான்

மெல்ல மெல்ல
உன் தூரிகை உறிஞ்சும்
ஓவியம் நான்

இசைச்சுழலின்
ஆழ் மையத்தில்
உன்னை மீண்டும்
முத்தமிடுகிறேன்

பிதற்றுவேன்
உன் அன்பில்
மொழிப்பயன்
வேறெது?

நாட்குறிப்பு எனது
கையெழுத்து நினது

உன் ரகசியத்திற்கும் தெரியாது
உன் ரகசியம் என்னவென்று

சந்தித்துக் கொள்கிறோம்
அந்தியைப் போல் சில நேரம்
விடியலைப் போல் சில நேரம்

a

No comments:

Post a Comment