Tuesday, June 18, 2013

ஒரு சூஃபியின் டைரி -2

இனி ருஸ்பிஹானின் நூலுக்குள் நுழைவோம்.

”இந்நூல் சுயசரிதையின் மரபார்ந்த வரையறைகளைச் சிதறடிக்கின்றது” என்று டேவிட் ஜேம்ஸ் டன்கன் சொல்கின்றார். இதன் அரபி மூலப் பிரதி எவ்வித உட்பகுப்புக்களோ உட்தலைப்புக்களோ அத்தியாய அமைப்போ நிறுத்தக் குறியீடுகளோ இன்றி எழுதிச் செல்லப்பட்டுள்ளது என்று தெரிவிக்கும் கார்ல் எர்ன்ஸ்ட் அதே அமைப்பில் தந்தால் தற்கால வாசகர்களுக்கு அது ஏற்பாக அமையாது என்று கருதி தானே தலைப்புக்கள் சூட்டிப் பத்தி பத்தியாக (210 பத்திகள்) அமைத்திருப்பதாகச் சொல்கிறார். நல்ல காரியம் செய்தார்.

இந்நூல் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதற்பகுதி ’நினைவுகள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. தன் கடந்த கால அனுபவங்களை இதில் ருஸ்பிஹான் சொல்கிறார். திறப்பு, ஆரம்ப ஆண்டுகள், ஆரம்ப தரிசனங்கள், பாரசீக ஞானியரின் அங்கீகாரம், மேலும் ஆரம்ப தரிசனங்கள், மக்கா தரிசனங்கள், தெய்வீக சபைக்கு ஆகிய ஏழு தலைப்புக்களில் மொத்தம் ஐம்பத்தாறு பத்திகள்.

இரண்டாம் பகுதி ‘நடப்பு தரிசனங்கள்’. இந்நூலினை ருஸ்பிஹான் தனது ஐம்பைத்தாம் வயதில் (கி.பி.1181) எழுதத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் அவருக்கு நிகழ்ந்த ஆன்மிக தரிசனங்களின் பதிவாக இப்பகுதி 154 பத்திகள் கொண்டுள்ளது.

இதயத்தில் இறைஞான இரகசியங்களின் திறப்பு தனக்குப் பதினைந்தாம் வயதில் ஏற்பட்டதாக ருஸ்பிஹான் சொல்கிறார். அந்தச் சின்ன வயதில் அவருக்கு உண்டான அந்த அனுபவத்தை வாசிக்கும்போது ‘இதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் ஐயா’ என்று சொல்லத் தோன்றுகிறது. மட்டுமல்ல, இதுவரை ஆன்மிக வாழ்வு என்று என்னைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் இறைவன் மீதான ஒருவித ’க்ரஷ்’ மட்டுமே என்பதுபோல் தோன்றுகிறது. அவர் ஒரு சூஃபியாக பரிணமித்த ஆரம்பகால நிகழ்வுகளை அவர் வாயாலேயே கேட்போம்.

#1 முதன் முதலாய்...
“புரிந்துகொள்ளுங்கள் (இறைவன் உங்களுக்குப் புரிதலை அருள்வானாக!), நான் வழிதவறிப்போன மூடக் குடிகாரர்களின் மத்தியில் பிறந்தேன். மூன்று வயது வரை சந்தையில் உள்ள சாதாரண மக்களால் வளர்க்கப்பட்டேன். ‘அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக் கழுதைகளைப் போல்; சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதைகளைப் போல் இருக்கின்றார்கள்)’ (குர்ஆன் 74:50,51). ”படைப்புக்களின் இறைவனான உன் இறைவன் எங்கே?” என்னும் கேள்வி என் மனத்தில் எழுந்தது. எம் வீட்டின் முன்புறம் ஒரு பள்ளிவாசல் இருந்தது. அங்கே சில சிறுவர்களைக் கண்டு ‘உங்கள் இறைவனை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டேன். ‘அவனுக்குக் கைகளோ கால்களோ இல்லை என்று சொல்கிறார்கள்’ என்று அவர்கள் கூறினார்கள். அதாவது இறைவனுக்கு பாகங்களோ உறுப்புக்களோ இல்லை என்பதை அவர்கள் தம் பெற்றோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அந்தக் கேள்வியை நான் கேட்டபோது எல்லையில்லா இன்பத்தால் நான் நிரம்பினேன். இறைவனின் திருநாமங்களை ஓதும்போதும், ஆழ்நிலை தியானத்திலும் ஏற்படுகின்ற உதிப்பைப் போன்ற ஒரு நிலை எனக்கு அப்போது ஏற்பட்டது. ஆனால் அதன் எதார்த்தம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.”

#2 காதலின் கண்திறப்பு
”எனக்கு ஏழு வயது ஆனபோது அவனை நினைப்பதும் அடிபணிவதுமான ஒரு காதல் என் இதயத்தில் உண்டானது. நான் என் பிரக்ஞையில் தேடி அது என்னவென்று அறிந்தேன். அதன் பின் ஆழ்ந்த காதல் என் இதயத்தில் உண்டாயிற்று. அந்தக் காதலில் என் இதயம் உருகியது. அந்நேரம் நான் காதலில் பைத்தியமாக இருந்தேன். என் இதயம் நிரந்தரத்தின் நினைவெனும் கடலிலும் புனித நறுமணங்களின் வாசத்திலும் மூழ்கித் திளைப்பதாயிற்று. எவ்வித இடைஞ்சலும் இன்றிப் பேரின்பங்கள் என்னுள் விளைந்தன. ஒரு மெல்லுணர்வு என் இதயத்தை அதிரச் செய்தது; என் கண்கள் நீர் நிறைந்தன. மேலான இறைவனின் திருநாமங்களை நினைவு கூர்வதன்றி அவை வேறல்ல என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. அந்தக் காலங்களில் பிரபஞ்சம் முழுவதையும் நான் அழகிய முகங்களைப் போல் பார்த்திருந்தேன். மேலும் அப்போது தனிமை, வழிபாடுகள், தியானங்கள் மற்றும் சூஃபி குருமார்களைச் சந்தித்தல் ஆகியவற்றில் விருப்பம் வளர்ந்து வந்தது.”

#3 ஆன்மிகப் பாதையில் நுழைதல்
“நான் பதினைந்து வயதை அடைந்தபோது மறைவான உலகிலிருந்து வருவது போல் ஒரு குரல் என்னைச் சோதிப்பதாக ஒலித்தது ‘நீயோர் இறைத்தூதர்’ என்று. ‘என் பெற்றோர்களிடம் இருந்து நான் அறிந்திருக்கிறேன், முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின் இறைத்தூதர் இல்லை. நான் உண்ணுகிறேன், குடிக்கிறேன், இயற்கைக் கடன் கழிக்கிறேன், எனக்கு அந்தரங்க உறுப்புக்களும் உள்ளன. எனும்போது நான் எப்படி இறைத்தூதராக இருக்க முடியும்?’ என்று நான் அப்போது சொன்னேன். ஏனெனில், நபிமார்களுக்கு இந்தக் குறைகள் இல்லை என்று நான் அப்போது நம்பியிருந்தேன். மதிய தொழுகைக்காக நான் என் கடையை விட்டு எழுந்து (பக்லீ என்றால் காய்கறி வியாபாரி என்று பொருள்.) அங்கசுத்தி செய்ய நீர் தேடிக்கொண்டு பாலைவனத்தில் நடந்தேன். ஓர் அழகிய குரலைக் கேட்டேன். என் உள்ளம் படபடத்தது. ‘பேசுபவரே! என்னுடன் இருங்கள்’ என்று கத்தினேன். என் அருகில் இருந்த ஒரு மலையின் மீது நான் ஏறினேன். சூஃபி குருமார்களின் உடையணிந்த ஒரு அழகிய நபரை அங்கே பார்த்தேன். என்னால் எதுவும் பேச முடியவில்லை. இறைவனின் ஏகத்துவம் பற்றி அவர் ஏதோ சொன்னார். ஆனால் அது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஒருவித பரவச வெறிப்பு (ஜத்பு) என்மேல் கவிந்தது.”

#4 பாலைக்குப் பறந்தேன்...
“நான் அஞ்சினேன். மக்கள் சுற்றிலும் நடந்து கொண்டிருந்தார்கள். இரவு வரை ஒரு பாழிடத்தில் இருந்தேன். அதன் பின் கிளம்பி வந்து என் கடையில் தங்கினேன். விடியும் வரை பரவசமும் சஞ்சலமும் பெருமூச்சுக்களும் அழுகையுமாய் இருந்தேன். நான் அதிர்ச்சியும் வெறிப்பும் அடைந்திருந்தேன். அனிச்சையாக என் நாவில் “எம் ரட்சகனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்! (’குஃப்ரானக்க றப்பனா’ – குர்ஆன் 2:285) என்னும் சொற்கள் வந்தபடி இருந்தன. பிறகு என் நாவு அசைவற்றுப் போனது. பல நாட்கள் அங்கே நான் அமர்ந்திருந்தது போல் இருந்தது. மேலும் ஒரு மணி நேரம் கழிந்தது. பரவசம் என்னை ஆட்கொண்டது. தேவைக்காக என்று என் கடையில் நான் சேமித்து வைத்திருந்த பணப்பெட்டியையும் இதர பொருட்களையும் தெருவில் வீசி எறிந்தேன். என் ஆடையைக் கிழித்துக்கொண்டு பாலைவனம் நோக்கி விரைந்தேன். பரவசமும் வியப்பும் அழுகையும் ஏக்கமுமாக அதே மனநிலையில் ஒன்றரை வருடம் சென்றது. ஒவ்வொரு நாளும் நனி பரவசங்களும் மறைவான காட்சிகளும் நிகழ்ந்தன. அந்தப் பரவசங்களில் வானமும் பூமியும் மலைகளும் மரங்களும் எல்லாம் ஒளிமயமாய் இருப்பது போல் கண்டேன். பிறகு அந்த சஞ்சலத்தை விட்டும் அமைதி அடைந்தேன்.”

#5 முதல் திரை-நீக்கம் (கஷ்ஃபே அவ்வல்)
“என் ஆரம்பக் காலங்களின் அந்த திரையிடலை விட்டும் நான் மீண்டு வந்தேன். சூஃபிகளுக்குப் பணிவிடை செய்ய ஏங்கினேன். எனக்கு அழகிய முடி இருந்தபோதும் தலையை மொட்டை அடித்தேன். சூஃபிகளிடம் சேர்ந்து மிகவும் சிரத்தையுடன் அவர்களுக்கு ஊழியம் செய்தேன். திருக்குர்ஆனைப் படித்து அதனை மனனமும் செய்து முடித்தேன். [திருக்குர்ஆனை முழுமையாக (6666 திருவசனங்கள்) மனனம் செய்தவருக்கு ஹாஃபிழ் என்னும் பட்டம் வழங்கப்படும். ருஸ்பிஹான் பின்னாளில் திருக்குர்ஆனுக்கு ஒரு விரிவுரை நூலும் எழுதியுள்ளார்.] பேரின்பத்திலும் ஆன்மிக நிலைகளிலும் என் பெரும்பாலான நேரங்கள் சூஃபிகளுடனே கழிந்தன. ஆனால் ஒரு குறிப்பிட்ட நாள் வரை மறைவான உலகங்களில் இருந்து எவ்விதத் திறப்பும் ஏற்படாமல் இருந்தது. அந்த நாளன்று நான் ஃகான்காஹ்வின் (மடத்தின்) மேற்கூரை மீது அமர்ந்தவனாக மறைவான உலகம் பற்றி தியானித்திருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களான அபூபக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலீ(ரலி-ம்) ஆகியோருடன் என் முன் கடந்து செல்வதைக் கண்டேன். இதுவே என் முதல் திரை-நீக்கம்.”

#6 குருநாதரை அடைதல்
“அந்நாள் வரை எனக்கொரு குருநாதரை நான் அடைந்திருக்கவில்லை. எனவே பாஸாவில் உள்ள என் வீட்டிற்கே திரும்பி வந்தேன். ஈடேற்றம் அடைந்தவரான ஒரு ஞான வழிகாட்டியைத் தேடினேன். மேலான அல்லாஹ் என்னை ஷைகு ஜமாலுத்தீன் அபில் வஃபா இப்னு ஃகலீல் அல்-ஃபஸாயி (ரஹ்) அவர்களிடம் என்னை ஆற்றுப்படுத்தினான். அவர்களும்கூட பாதையின் ஆரம்ப நிலையில் இருந்தார்கள். மேலான இறைவன் அவர்களின் சகவாசத்தில் எனக்கு வானவருலகின் கதவுகளையும் இடையீடற்ற திரை-நீக்கங்களையும் அருளினான். அவர்களின் சகவாசத்தில், எண்ணற்ற பரவசங்களும் திரை நீக்கங்களும் ஏற்படும் வரை மறைவான ஞானங்களுடனும் இறை ரகசியங்களுடனும் ஆன்மிக நிலைகள் பொங்கிப் பாய்ந்தன.”


(to be continued)

ஒரு சூஃபியின் டைரி


சூஃபி குரு ஒருவருடனான சகவாசத்தில் சீடர்கள் அடைந்த அனுபவங்களைத் தொகுத்து ஒரு நாவலாக எழுதினார், அந்தச் சீடர்களில் ஒருவரான நாகூர் ரூமி. ‘திராட்சைகளின் இதயம்’ என்ற அந்த நாவலைப் படித்துவிட்டு, ‘இதே போல் நீயும் உன் அனுபவங்களைப் பதிவு செய்யலாமே’ என்று பேரா.யூனுஸ் ஒருசமயம் என்னிடம் சொன்னார். இதுவரை அதற்கான முனைப்பு என் மனத்தில் எழவில்லை.

சூஃபிகளின் உலகில் கனவுக்கு முக்கியமானதொரு இடம் உண்டு. சாதகனின் ஆன்மிக முன்னேற்றத்தை அளக்கும் அத்தியாவசியமான கருவி அது என்றால் மிகை அல்ல. உங்கள் கனவுகள் நீங்கள் யார் என்பதைக் காட்டும். உங்களுக்கே தெரியாத உங்களை! ’திராட்சைகளின் இதயம்’ நாவலில் கனவு ஒரு முக்கியமான அடிச்சரடாக நெடுகிலும் வருவதைக் காணலாம். கனவுலகம் பொய்யுலகம் அல்ல. இவ்வுலகை விடவும் இன்னும் நிஜமானது. (ஆனால கனவுகள் எல்லாமே நிஜமானவை என்று சொல்லிவிட முடியாது. இவ்வுலகில் சிலர் போதையாலோ மன-ப்ரம்மையாலோ ‘Hallucinations’ - பொய்த் தோற்றங்களைப் பார்ப்பதைப் போல் பலரும் கனவுலகிலும் பொய்த் தோற்றங்களையே கண்டு வருகிறோம்.)

சூஃபிகள் தம் அனுபவங்களைப் பதிவு செய்து எழுதியதாக அமைந்த இரண்டு நூற்களைச் சமீபத்தில் படித்தேன். இரண்டிலுமே கனவுக்காட்சிகள் முக்கியமாகச் சொல்லப்பட்டிருந்தன.
‘ஆரணி பாவா’ என்று அழைக்கப்பட்ட எம்.ஜே.முஹம்மது கமாலுத்தீன் பாகவீ (ரஹ்) அவர்களின் ஃகலீஃபா (பிரதிநிதி) ஹாஜி.பி.கே.ஷாஹுல் ஹமீது அவர்கள் எழுதிய ‘மல்பூஜாத்தே கமாலிய்யா’ என்பது அவற்றில் ஒன்று. தான் கண்ட கனவுகளையும் ஆரணி பாவா தனக்கு எழுதிய கடிதங்களையும் இந்நூலில் ஃகலீஃபா அவர்கள் தந்திருக்கிறார்.
உதாரணத்திற்கு ஒரு சுருக்கமான கனவு:

“அன்று இரவு கனவில் ஆரணி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் வீட்டில் வராண்டாவில் எனக்கு டிஃபன் கேரியரில் சாப்பாடு கொடுக்கப்பட்டு சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன். கனவு முடிந்து விடுகிறது. எனது மனதில் அப்போது விளக்கம் கொடுக்கப்படுகிறது. எதைக் கேட்டாலும் ஷைகுவிடம்தான் [குருவிடம்தான்] கேட்டு பெறவேண்டும் என தெளிவான விளக்கம் கிடைக்கிறது.” (பக்கம்:58)

மற்றொரு நூல் “THE UNVEILING OF SECRETS Diary of a Sufi Master”. இந்த சூஃபி குருவின் பெயர் ருஸ்பிஹான் பக்லீ (Ruzbihan Baqli). 12-ஆம் நூற்றாண்டில் அரபி மொழியில் எழுதப்பட்ட இந்நூலினை 21-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலமாக்கித் தந்திருக்கிறார் கார்ல் எர்ன்ஸ்ட் (Carl W.Ernst). இவர் வட-கரோலினா பல்கலைக்கழகத்தின் சமயவியல் துறையில் இஸ்லாமியப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர். சூஃபித்துவத்தில் ஈடுபாடு கொண்ட அறிஞர்.

Carl W.Ernst

இருக்கட்டும். யார் இந்த ருஸ்பிஹான் பக்லீ?

சூஃபித்துவம் பற்றி ஓரளவு அறிந்தவர்களுக்கும் இப்பெயர் புதிதாக இருப்பதில் வியப்பில்லை. கார்ல் எர்ன்ஸ்ட் தன் முன்னுரையில் சொல்வதைப் கேளுங்கள்: “மாபெரும் பாரசீக சூஃபியான ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள் ஆங்கில வழி இப்போது பெரிதும் பிரபலமடைந்து வருகின்றன. ஆனால், இன்னமும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெயர் அறியப்படாத முக்கியமான சூஃபிகளின் ஒரு பட்டியலே இருக்கிறது. அத்தகைய சூஃபிகளில் ஒருவரே ஷீராஸ் நகரில் வாழ்ந்த அற்புத ஞானியான ருஸ்பிஹான் பக்லீ (இறப்பு: கி.பி.1209). அவருடைய காலத்திலும், அதன் பின் சில நூற்றாண்டுகளிலும், ருஸ்பிஹான் சூஃபி மரபின் ஒரு முக்கியமான ஆளுமையாக மத்திய ஆசியாவிலும் இந்தியாவிலும் அறியப்பட்டிருந்தார். பாரசீக மகாகவிகளுள் ஒருவரான ஹாஃபிஸ் (இறப்பு: கி.பி.1389) ருஸ்பிஹானின் குடும்பத்தினர் உருவாக்கிய சூஃபி நெறியைச் சார்ந்தவரே. இறப்பிற்குப் பின் ருஸ்பிஹானின் புகழ் அவரின் சொந்த ஊரில் தேய்ந்து மறைந்தது. ஷீராஸில் உள்ள அவரின் அடக்கத்தலம் பாழடைந்தது. சமீப காலங்களில் அவரின் எழுத்துக்கள் ஈரான், இந்தியா, துருக்கி மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த அறிஞர்களின் சிறிய குழுவால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு அரபியிலும் ஃபார்ஸியிலும் அவர் எழுதியவை பதிப்பிக்கப்பட்டுள்ளன. 1972-ல் ஈரான் அரசின் தொல்லியல் துறை அவருடைய அடக்கத்தலத்தைப் புதுப்பித்தது. (1996-ல் அவ்விடம் செல்லும் பேறு அடியேனுக்குக் கிட்டியது.)”

Interlude: On a personal note

இந்த நூலை நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது (1999) சென்னை லேண்ட்மார்க்கில் பார்த்தேன். அப்போதே அதை வாங்க ஆசையாக இருந்தது. ருஸ்பிஹான் என்ற பெயரே மனதில் ஒருவித பரவச ருசியாகப் பட்டது. ‘அடடே இவர் நம்மாள்’ என்பது போன்ற ஒரு உணர்வு. அப்போது நூலின் விலை ரிலேட்டிவ்லி என் நிலைமைக்கு டைனோசர் விலையாக இருந்ததால் பலமுறை கையில் எடுத்து அழகு பார்த்துவிட்டு வைத்துவிட்டு வருவேன். அக்டோபர் 2011-ல் நூல் என் வீட்டுக்கே வந்துவிட்டது! இதோ, மே-ஜூன் 2013-ல் வாசித்துவிட்டேன். ஆனால் அப்போது ஒரு எண்ணம் இருந்தது, எனக்கொரு மகன் பிறந்தால் ருஸ்பிஹான் என்று பெயர் சூட்ட வேண்டும். 2004-ல் நிக்காஹ். 2005-ல் மகன் பிறந்தான். என்ன பெயர் சூட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். எனக்கிருந்ததைப் போலவே என் சகதர்மினிக்கும் மனத்தில் ஒரு பெயர் (அல்லது சில பெயர்கள்) இருக்கும் அல்லவா? நான் அவளிடம் கேட்கிறேன். என்ன சொன்னாள் தெரியுமா? ருஸ்பிஹான்! இந்தப் பெயர் எங்கிருந்து அவளுக்குத் தெரிந்தது என்று எனக்கு ஒரே வியப்பாக இருந்தது. அவளிடமே கேட்டேன். “எங்கேயோ பார்த்தது. ஆனால் இந்தப் பெயர் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு” என்றாள். அது ஒரு சூஃபி மகானின் பெயர் என்பதெல்லாம் அவளுக்குத் தெரியவே தெரியாது.

ஆனால் அந்தப் பெயரை என் குட்டனுக்குச் சூட்ட முடியாமல் போனது. காரணம் என்ன தெரியுமா? இங்கே முஸ்லிம்கள் வாயிலேயே பல அரபி & பாரசீகப் பெயர்கள் உருமாறித் தவிக்கின்றன. அதைக் கருத்தில் கொண்டு என் சின்னம்மா ஆட்சேபித்துவிட்டார்: “வேண்டாம்ப்பா. ’ஜுஜூப்பி கான்’னு சொல்லிருவாங்க”.
Interlude ends.

ருஸ்பிஹானின் வரலாற்றுக் குறிப்பை மேலே கண்டோம். அவருடைய ஆன்மிக ஆளுமை பற்றி டாக்டர். ஜவ்வாத் நூர்பக்‌ஷ் எழுதியிருப்பதை அப்படியே தமிழில் தருகிறேன்:
”பனிரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஷீராஸின் அருகே பாஸா என்ற இடத்தில் ருஸ்பிஹான் எனப் பெயரிய ராஜாளிப் பறவை ஒன்று பிறந்தது. இறை உள்ளமையின் வானில் அப்பறவை எந்த அளவு உயரே சென்றது எனில் தன் முன்னோர்களை எல்லாம் மிகைத்துவிட்டது. பாதையின் பரிபாஷை படி, ஜுனைத் அவர்களை அறிவின் சூஃபித்துவத்திற்கு அரசர் என்று சொல்கிறோம் என்றால், காதலின் சூஃபித்துவத்திற்குத் தலைவர் என்று ருஸ்பிஹானைக் கூறலாம்.

காதலின் அனுபவத்திற்கும் அறிவின் பயிற்சிக்கும் உள்ள வேறுபாடு விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள வேறுபாடு போன்றது என்பது தெளிவு. ஃகுராசானின் மாபெரும் சூஃபி குருமார்கள் சூஃபித்துவக் காதலின் விதைகளை நட்டு வைத்தார்கள். ராபியா, ஹல்லாஜ், ஷிப்லி மற்றும் பிறர் அது ஒரு மரமாக வளரும் வரை நீர் பாய்ச்சினார்கள். அந்த மரம் ருஸ்பிஹானின் ஆன்மிக எழுச்சியால் கனிகள் கண்டது.

சூஃபித்துவத்தில் ருஸ்பிஹான் சொன்ன கருத்துக்கள் மிகவும் ஆழமானவை. எதுவரை எனில், அவருக்குப் பின் சொல்லப்பட்டவை எல்லாம் அவர் சொன்ன கருத்துக்களுக்கான அடிக்குறிப்புக்களாகவே அமைந்தன! அவரின் பல கருத்துக்கள் சூஃபிகளிலேயே பலருக்கும் புரிந்துகொள்ள இயலாத நிலையில் இருந்ததால் அவர் ‘ஃபார்ஸின் பரவசப் பேச்சாளர்’ (ஷத்தாஹ்-இ-ஃபார்ஸ்) என்று அழைக்கப்பட்டார். அவரின் அகப்பார்வை எட்டிய மேலான படித்தரங்களுக்குச் செல்ல நாடும் யாரும் அவரின் எழுத்துக்களைப் படித்துப் பார்க்க வேண்டும். அவரின் எழுத்துக்களைப் படிப்பவர் கண்மூடி நம்பிக்கைகளின் நூலகங்களைக் கொளுத்திவிடுவார் என்பது திண்ணம்” (டாக்டர். ஜவ்வாத் நூர்பக்‌ஷ், லண்டன், 3 ஜூலை 1996)

இந்த நூலைப் பற்றி சில அறிஞர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்-அட்டையில் உள்ளன. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் இந்தோ-முஸ்லிம் பண்பாட்டியல் பேராசிரியையாக இருந்த டாக்டர்.அன்னிமேரி ஷிம்மல் சொல்கிறார்: “இந்த நூல் நம் முன் நறுமண ரோஜாக்களால், வியப்பூட்டும் துணிச்சலான தரிசனங்களால் ஆன ஓர் உலகைத் திறந்து வைக்கிறது. அதனை விளக்கியிருப்பவர், இஸ்லாத்தின் மெய்ஞ்ஞானக் காதல் துறையின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவர், ருஸ்பிஹான்.” இப்படி இவர் சொல்லியிருப்பதை அடியேன் வழிமொழிகிறேன். குறிப்பாக, visions of incredible boldness என்று சொல்லியிருப்பதை. நூலைப் படித்துப் பார்த்ததில் ஒரு கழி கொண்டு பிடரியில் அடித்தது போல் கிறுகிறு என்று இருக்கிறது!

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் துறையின் பேராசிரியராக இருக்கும் சையத் ஹுசைன் நஸ்ரு சொல்கிறார்: “அழகான எளிமையான ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டுள்ள இந்த அழகிய செவ்வியல் இலக்கியமான ஆன்மிக சுயசரிதை இஸ்லாமியச் சிந்தனையாளர்களுக்கு மட்டுமல்லாது, ஆன்மிக வாழ்வு பற்றி மெய்யாகவே அக்கறை கொண்டுள்ள எவரையும் ஈர்க்கும்.” (...appeal not only to scholars of Islamic thought, but also to anyone seriously concerned with the life of the spirit.) அடியேனுக்கு இந்நூல் எவ்வாறு சீரியஸ்லி கன்சர்ன் ஆனது எனில், ருஸ்பிஹான் அசாத்திய வீராப்புடன் சொல்லிச் செல்லும் தரிசனங்களின் நிழலாவது என் மீது விழாதா என்று ஏங்க வைத்துவிட்டது.


இனி ருஸ்பிஹானின் நூலுக்குள் நுழைவோம்.

(to be continued)

Sunday, June 2, 2013

மணலின் கதை



வெகு தொலைவில் உள்ள மலை முகடுகளில் புறப்பட்ட நதியொன்று பலவகை நிலங்களின் வழியே ஓடி வந்து குறுகிய நீரோடையாகிப் பாலைவனத்தின் மணல்களைத் தொட்டது. இதுவரை கடந்து வந்தது போன்றே இந்தத் தடையையும் கடந்து பாய்ந்தோடி விடலாம் என்று நினைத்தது. ஆனால், எவ்வளவு வேகமாக அது பாலையின் மணலில் மோதியதோ அவ்வளவு வேகமாக உறிஞ்சப்பட்டுக் காணாமல் போனது.

[நதி என்பது நான் என்னும் தன்னுணர்வைக் குறிக்கும். சுயத்தைக் குறிக்கும். நதி என்பது நீரோட்டம். அது நிலையாக நிற்கும் ஒன்றல்ல. பாய்ந்து ஓடிக்கொண்டிருப்பது. நிற்பது அதற்கு மரணமாகும். ஒவ்வொரு கணமும் நமது சுயவுணர்வு – ‘நான்’ என்னும் உணர்வு வந்துகொண்டே இருக்கிறது. இதனை உள்ளம் என்றும் சொல்லலாம். கல்பு என்னும் அரபிப் பதத்திற்குப் புரளக்கூடியது என்று பொருள்.

மூணாறு ; ஒளியோவியர் : சையத் இப்ராஹீம் பிலாலி 

இந்த நான் பல கட்டங்களைக் கடந்து வந்துவிட்டது, பிள்ளைப்பருவம் விடலைப்பருவம் வாலிபப்பருவம் இப்படியாக. அப்பருவங்களில் இந்த உலகம் தரும் பல்வகை இன்பங்களை சுவைத்துக் கிரகித்தபடி வந்துவிட்டது. ஆனால் உலகம் அதைக் கிரகித்து அழித்துவிடக்கூடிய கட்டம் ஒன்று வருகிறது. அதுவே பாலை. அதற்கு மேல் உலக இன்பங்களில் முன்பு கண்ட சுவை உள்ளத்திற்கு வாய்ப்பதில்லை. பாலை என்பது வெறுமை. ‘வீரான்’ என்று சொல்வர். பழைய புலனின்பப் பயணத்தைத் தொடர உள்ளம் முனைகிறது. ஆனால் உலகம் தன்னை அழிப்பதை அது உணர்கிறது.]

எனினும், இந்தப் பாலைவனத்தைக் கடந்து செல்வதே தன் விதி என்றும் அதை மாற்ற வேறு வழி இல்லை என்றும் அது தெளிவாகக் கண்டது. பாலையிலிருந்து ஒரு ரகசியக் குரல் அதன் செவிகளில் ஒலித்தது: “காற்று பாலையைக் கடக்கின்றது. நீரோடையாலும் அது முடியும்”

[மண்ணில் சிக்காமல் பறந்து போய்விடும் காற்று. உலக இச்சைகளில் சிக்காமல் சென்றுவிடும் ஆன்மிகத்தின் மூச்சு. ‘அன்ஃபாசே ஈசா’ – இயேசுவின் மூச்சுகள் என்று சூஃபிகள் குறிப்பிடுவது அதனையே.]

நீரோடை மறுத்தது: “நான் மணல்களுடன் மோதிப் பார்க்கிறேன். ஆனால் அது என்னை உறிஞ்சி விடுகிறது. காற்று பறக்கிறது, எனவேதான் இந்தப் பாலையைக் கடக்க அதனால் முடிகிறது.”

[உள்ளம் தன் இயற்கைத் தன்மையை எடுத்துக்காட்டி சாக்கு சொல்கிறது. ‘ஆண்டவன் கண்ணைத் தந்து பார்வையையும் கொடுத்திருக்கிறான். பார்த்து ரசிக்காமல் என்ன செய்ய?’ என்பது போல்... எச்சரிக்கை. ‘தீயை அணைக்கிறேன் என்று மேலும் மேலும் அதன்மீது தீயை அள்ளி வீசாதே’ என்று மௌலானா ரூமி (ரஹ்) சொல்வதைக் கேள்.]

”உன் பழைய வழிமுறையில் நீ இந்தப் பாலையைக் கடக்க முடியாது. அப்படிச் செய்ய நினைத்தால் நீ மறைந்து விடுவாய் அல்லது சேறாகிவிடுவாய். உன் இலக்கிற்குச் சுமந்து செல்லும்படிக் காற்றிடம் உன்னை ஒப்படைத்துவிடு.”

[ஆன்மிகம் என்பது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும். சடங்குகளை நிறைவேற்றி வந்தது போல் இதில் செயல்பட முடியாது. ’ஃகிலாஃபே ஆதத்’ – பழக்க வழக்கங்களைப் புரட்டுதல் என்று சூஃபிகள் சொல்கிறார்கள்.]

”அது எப்படி?”

“நீ ஆவியாகிக் காற்றில் கலந்துவிட வேண்டும்”

[ஆவியாதல் ’ஃபனா’ என்னும் தன்னுணர்வின் அழிவு. ‘நான்’ என்னும் அகந்தையின் அழிவு. இறைக்காதல் என்னும் நெருப்பு இச்சைகளின் ஈரத்தை ஆவியாக்கி விடுகிறது. காற்றில் கலத்தல் – ஆன்மிக மூச்சில் உன் உள்ளத்தைக் கரைத்துவிடு. அல்லாஹு அல்லாஹ் என்று ஒவ்வொரு மூச்சும் இறைநாமத்தின் நாதம் ஆகிவிட வேண்டும். இதனை ‘பாஸே அன்ஃபாஸ்’ (மூச்சுக்களைப் பாதுகாத்தல்) என்று சூஃபிகள் சொல்கின்றனர்.]

இந்தச் சிந்தனை நீரோடைக்கு ஏற்புடையதாக இல்லை. அதுவரை, எதிலும் அது தன்னைப் பறிகொடுத்தது இல்லை. அது தன் சுயத்தன்மையை இழக்க விரும்பவில்லை. மேலும், அதனை ஒருமுறை இழந்துவிட்டால் அதை மீண்டும் அடைய முடியுமா இல்லையா என்று யாருக்குத் தெரியும்?

மணல் சொன்னது: “காற்று இவ்வாறு வேலை செய்கிறது. அது நீராவியை அள்ளியெடுத்து உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. பாலைவனத்திற்கு அப்பால் கொண்டு போய் கீழே விழச் செய்கிறது. மழையாகப் பொழிந்து, அந்த நீர் மீண்டும் ஓடையாகி விடுகிறது.”

[நீரோடை இதுவரை நீராகவே இருந்து வந்துள்ளது. அது வந்த வழியில் பல தோட்டங்களையும் தோப்புத் துரவுகளையும் செழிப்பாக்கி வந்திருக்கலாம். மக்களும் மாக்களும் தாகம் தணிப்பதற்குத் தண்ணீர் தந்து சேவை செய்திருக்கலாம். ஆனால் அது இன்னும் நீராகவேதான் இருக்கின்றது. அதாவது ’நான்’ என்பது உலகில் பல நிலைகளில் உதவியாகவும் இருக்கின்றது என்பது உண்மைதான். இதுவரை வழிபாட்டுச் சடங்குகளை வண்டி வண்டியாகச் செய்து வளமாக்கி வந்திருக்கலாம். சமூக சேவைகள் சகோதரத்துவப் பணிகள் என்றெல்லாம் செய்து வந்திருக்கலாம். ஆனால் உனது ‘நான்’ என்பது இன்னும் அப்படியே இருக்கிறது. இப்போது காலடி எடுத்து வைத்திருப்பது ஆன்மிகம் என்னும் களத்தில். இங்கே ’நான்’ என்னும் நீரோடை ஆவியாக்கப்பட வேண்டும்.

‘அந்த நீர் மீண்டும் ஓடையாகி விடுகிறது’ – நான் என்பது மீண்டும் நான் ஆகிவிடுகிறது. ஆனால் ஃபனா என்னும் அழிவின் பின் மீண்டும் அருளப்படும் நான் என்பது முற்றிலும் தன்மையால் வேறுபட்டது. Transformed Self என்று சொல்வது இதைத்தான். Trans – ஆவியாகிப் பாலையைக் கடத்தல். Formed – பழைய வடிவத்தை ஒத்ததாகப் புதிய வடிவம் கொடுக்கப்படுதல். முன்பு பல்கீஸ் அரசியின் நாட்டில் இருந்த அதே சிம்மாசனம் இப்போது சுலைமான் நபியின் அவையை அலங்கரிக்கின்றது. இப்போது அதன் மதிப்பே வேறு. ‘வேதத்தின் ஞானம் கொடுக்கப்பட்ட ஒருவர் அதனை இங்கே கொண்டு வந்தார்’ என்று குர்ஆனில் சொல்லப் பட்டுள்ளதைச் சிந்திக்கவும். நான் என்னும் சிம்மாசனத்தை இம்மையிலிருது மறுமைக்கு எடுத்துச் செல்ல ஒரு ஞானகுரு வேண்டும். அந்த ’நான்’ – பேரமைதி மிக்க இதயமாக (கல்புன் சலீம்) இருக்கும்.

நீரோடை பல நிலங்களில் ஓடி வந்ததில் அதன் நீர் தூய்மையை இழந்துவிட்டது. இப்போது முற்றிலும் சேறாக மாறிவிடும் நிலைக்கு வந்திருக்கிறது. ஆனால் அது ஆவியாகிக் காற்றில் பறந்து மலைகளின் உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் நீராகும்போது அது அழுக்குகளை விட்டும் விடுதலை அடைந்ததாக – மீண்டும் அதன் ஆதி நிலையில் இருந்தபடியே தூய்மையானதாக ஆகிவிடுகிறது. ‘குழந்தை போல் ஆதல்’ என்பது இதுதான். உள்ளம் வெள்ளை ஆகிவிட வேண்டும். மாசு மறுவற்ற தன்மை – மாசூமிய்யத் – உண்டாகிவிடுவது.

ஃபனா என்னும் அழிவு – இறைக்காதலில் அடைந்த அகமரணம் ’மவ்த்தே இஃக்தியாரி’ என்று சூஃபிகள் சொல்வது – மீண்டும் உயிர்த்தெழும் உள்ளம் இறைவனைக் கொண்டு வாழ்வதாகிறது. அந்நிலை ’பகா’ என்று சொல்லப்படுகிறது. (’பாகீ பில்லாஹ்’ – ’இறைவனைக் கொண்டு தரிப்பட்டிருப்பவர்’ என்னும் பெயரில் ஒரு சூஃபி மகான் இருந்தார்கள்.)

’காற்று இவ்வாறு வேலை செய்கிறது. அது நீராவியை அள்ளியெடுத்து உயரத்திற்குக் கொண்டு செல்கிறது’ – அதாவது ஆன்மிகத்தின் பயிற்சிகள் அகமாற்றத்தைத் தந்து படித்தரங்களை உயர்த்துகின்றன. (’தரஜாத்’ ‘மகாம்’ என்று சொல்லப்படுபவை.) சடங்கு வழிபாடுகள் எவ்வளவு எண்ணிக்கையில் இருப்பினும் அவற்றால் படித்தர உயர்வு உண்டாகாது. ‘ஞானம் (இல்ம்) இல்லாத மனிதனின் வழிபாடு செக்கு மாடு சுற்றுவதைப் போல்’ என்பது நபிமொழி ஒன்றின் கருத்து. அதாவது வருஷக் கணக்காக அந்த மாடு நடக்கிறது. ஆனால் இருந்த இடத்தை விட்டு ஒரு இன்ச் கூட அது அப்பால் நகர்ந்திருக்காது!

நான் மீண்டும் நான் ஆகிவிடுவதை பற்றி ஒரு கவிதை. பீர் கௌஸீ ஷாஹ் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்:
“நான் என்பதைப் புரட்டு
நான் என்று ஆகும்...
மூலமந்திரம் சொல்லும்
தெளிவான முகவரி இதுவே”
(அனா கோ பல்ட்டோ அனா ஹீ ஹே
யெஹீ ஹே சாஃப் பதா லா இலாஹ இல்லல்லாஹ்) 

அறபியில் நான் என்பதற்கு ‘அனா’ என்று சொல்லப்படும். அலிஃப்-நூன்-அலிஃப் என்னும் மூன்றெழுத்து. புரட்டிப் படித்தாலும் அதேதான். ANA. புரட்டினாலும் ANA. தமிழிலும் ’நான்’ என்பது அப்படி அமைந்துள்ளது எனலாம். Palindrome. NAAN. புரட்டினால் மீண்டும் NAAN. ஆங்கிலத்தில் அது ஒற்றை எழுத்துப் பாலிண்ட்ரோம். I என்பதை பக்கத்திலோ தலைகீழாகவோ புரட்டினாலும் மீண்டும் I வருகிறது. உருதுவில் சற்று வேறு மாதிரி. மைய்ன் (மீம்-யா-அலிஃப்). புரட்டினால் ‘னயம்’ – ‘நான் இல்லை’ என்று வரும்! அதனால்தான் பீர் கௌஸீ ஷாஹ் (ரஹ்) தன் உருதுக் கவிதையில் அனா என்னும் அறபிப் பதத்தைப் பயன்படுத்தி விஷயத்தை விளக்குகிறார்கள்.]

”இது உண்மைதான் என்று நான் எப்படி நம்புவது?”

”அது அப்படித்தான். நீ நம்பவில்லை எனில் ஒரு புதைமணலாகத்தான் ஆவாய். அதுவும்கூட பல ஆண்டுகள் எடுக்கும். ஆனால் ஒரு நீரோடையாக நீ இருப்பதைப் போல் அது இருக்காது.”

”இன்று நான் இருக்கும் இதே நீரோடையாகவே நான் இருந்துவிட முடியாதா?”

”இரண்டு நிலைகளிலுமே நீ இப்படியே இருப்பது சாத்தியமில்லை. உன்னுடைய சாரம்சங்கள் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் ஒரு நீரோடை உருவாகிவிடும். இப்போது நீ என்னவாக அழைக்கப்படுகிறாயோ இந்நிலை எப்படி வந்தது? நீ உன் சாராம்சம் என்னவென்று அறிவாயா?”

இதைக் கேட்டதும் அந்த நீரோடையின் நினைவில் சில எதிரொலிகள் எழுந்தன. முன்பு எப்போதோ ஒரு காற்றின் கைகளில் தான் அல்லது தன்னின் ஏதோ ஒன்று இருந்தது நிழலோட்டம் போல் ஞாபகம் வந்தது. மீண்டும் அந்நிலையை அடைவதே செய்யவேண்டிய உண்மையான காரியம் என்பதை அது உணர்ந்தது.

[’அதமிய்யத்’ (இல்லாமை) என்பதுதான் படைப்புக்களின் எதார்த்த நிலை ஆகும்.

‘நிரந்தரத்தில் இருந்து
மனிதனின் மீது ஒரு நிலை இருக்கவில்லையா?
(அப்போது) அவன்
நினைக்கப்படும் ஒரு பொருளாகவே இல்லை’
(ஹல் அதா அலல் இன்சானி ஹீனும் மினத் தஹ்ரி
லம் யகுன் ஷைஅம் மத்கூரா – அல்குர்ஆன் 76:1)

”ஒரு பொருளாக இல்லாதிருந்த மனிதனை
முன்னம் நாமே படைத்தோம் என்பதை
அவன் நினைவுகூர வேண்டாமா?”
(அவலா யத்குருல் இன்சானு அன்னா ஃகலக்னாஹு
மின் கப்லு வலம் யகு ஷைஆ – அல்குர்ஆன் 19:67)

இறைவன் தன் உள்ளமையில் படைப்புக்களை வெளியாக்கினான். அவ்வாறு அவன் அவற்றின் ரட்சகன் ஆனான். அந்த ஞாபகம் தூண்டப்பட வேண்டும்.]

அந்த நீரோடை ஆவியாகித் தன்னைக் காற்றின் கைகளில் ஒப்படைத்தது. காற்று அதனை அள்ளி எடுத்து பல மைல்களுக்கு அப்பால் கொண்டு சென்றது. மேலே மேலே தூக்கிக் கொண்டு போய் ஒரு மலைச் சிகரத்தின் சாரலில் மழையாகப் பொழிந்தது. முன்பு அந்த நீரோடையின் உள்ளத்தில் ஐயங்கள் இருந்தது. இந்த அனுபவத்தை அது துல்லியமாகப் பதிவு செய்துகொண்டது. இப்போது அது சொன்னது, “இப்போது நான் என் உண்மையான அடையாளத்தை அறிந்து கொண்டேன்.”

அந்த நீரோடை கற்றுக் கொண்டிருந்தது. ஆனால் அந்தப் பாலையின் மணல் சொன்னது, “நாம் அறிவோம், ஏனெனில் அன்றாடம் இது நடைபெருவதை நாம் காண்கிறோம். இப்பக்கத்தில் இருந்து அப்பக்கம் அந்த மலைச்சாரல் வரை நாமே பரந்து கிடக்கிறோம்.”

”வாழ்வின் நீரோடை தன் பயணத்தில் தொடர்ந்து செல்ல வேண்டிய பாதை மணலில் எழுதப்பட்டுள்ளது” என்று சூஃபிகள் சொல்வதன் பொருள் இதுவே.

இக்கதை குறித்து இத்ரீஸ் ஷாஹ் எழுதியிருக்கும் குறிப்பு:

“இந்த அழகிய கதை பல மொழிகளில் பேச்சு வழக்கில் உள்ளது. குறிப்பாக தர்வேஷ்களிடமும் அவர்களின் மாணவர்களிடமும் புழக்கத்தில் உள்ளது. சர் ஃபேர்ஃபாக்ஸ் கார்ட்ரைட் 1899-ல் இங்கிலாந்தில் வெளியிட்ட “Mystic Rose from the Garden of the King” என்னும் நூலில் இக்கதை இடம்பெற்றுள்ளது. இங்கே நாம் கேட்ட இக்கதைப் பிரதி 1870-ல் இறந்த அவாத் அஃபீஃபீ தூனிஸி அவர்கள் சொன்னது.”