Monday, December 30, 2013

தேவநேயத் தேடல் - part1


     கல்லூரிக் கருத்தரங்கம் ஒன்றிற்காக கடந்த இரண்டு வாரங்கள் கடுமையான உழைப்பு. பழைய நூற்கள் பலவற்றைப் படிக்க வேண்டியிருந்தது. செந்தமிழ் நடையில் அமைந்த நூல்கள். தேவநேயப் பாவாணர், மறைமல அடிகள், கா.அப்பாதுரையார், க.அன்பழகன் போன்றோர் எழுதியவை. இவர்களின் செந்தமிழ் நடையைச் சிலர் கடுந்தமிழ் என்று கருதலாம். ஏன், கொடுந்தமிழ் என்றும்கூட சிலர் சொல்லக்கூடும். எப்படியோ, இளம்பூரணர் நச்சினார்க்கினியர் என்று தொடங்கி சுஜாதா வரைக்கும் வந்த பல்வகைத் தமிழ் நடைகளையும் அடியேன் ரசிப்பதுண்டு. மான் நடப்பது ஒரு போக்கு, யானை நடை ஒரு தினுசு. குறை சொல்ல என்ன இருக்கிறது?


      கடவுள் உண்டா? என்று ஒரு கேள்வி. பலரிடம் பலரும் கேட்ட கேள்வி. பெரியாரிடம் சிறியார் பலர் கேட்ட கேள்வி. இதே கேள்வி ஒருமுறை அ.ப.ஜ.அப்துல் கலாம் அவர்களிடம் பள்ளி மாணவி ஒருத்தி கேட்டிருக்கிறாள். உண்டு என்று தான் நம்புவதற்கான ஒரு காரணத்தை அவர் செப்பினார். “பிரபஞ்ச வெளியில் கோடிக் கணக்கான கிரகங்களும் விண்மீன்களும் விண்கற்களும் குடும்பங்களாக அமைந்து தத்தமது இடத்தில் ஒழுங்கான பாதையில் சீராக இயங்கி வருகின்றன. அனைத்திற்கும் ஆதாரமாகவும் அனைத்தையும் கடந்ததாகவும் உள்ள ஓர் இறையாற்றல்தான் இவற்றை இப்படி இயக்கி வருகிறது என்று நம்புகிறேன்.” இக்கருத்துப்பட அவர் பதில் சொல்லியிருந்தார்.


      ”தமிழர் மதம்” என்னும் தலைப்பில் ஒரு நூல். 15 செப்டம்பர் 1972-ல் வெளியிடப்பட்டது. எழுதியவர் தேவநேயர். ’மொழி ஞாயிறு’ என்றழைக்கப்படும் ஞானதேசிகன் தேவநேயன் என்னும் தேவநேயப் பாவாணர் அவர்களேதான். கடவுள் உண்டு என்பதற்கு தான் கருதும் ஏதுக்களாக அவர் ஒன்பது குறிப்புக்கள் தருகிறார். முதற்குறிப்பு மேலே அ.ப.ஜ.அ.க அவர்கள் சொன்ன அதே கருத்து! தேவநேயர் இஸ்ரோ விஞ்ஞானி அல்ல. அவர் சொல்லும் ஒன்பது கருத்துக்களை அப்படியே தருகிறேன். (1 முதல் 9 வரையிலான எண்களைத் தமிழில் கொடுத்துள்ளார். அதையும் தெரிந்துகொள்ளுங்கள்.):

கடவுள் உண்டென்பதற்குச் சான்றுகள்

 (க) கதிரவக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள் எல்லாம் இடையறாது ஓர் ஒழுங்காக இயங்கி வருகின்றன.

      ஓர் ஊரில் ஊர்காவலனோ அரசிய லாட்சியோ சிறிது நேரம் இல்லா விடினும், கலகமுங் கொள்ளையும் கொலையும் நேர்கின்றன. உயிரற்ற நாளும் கோளும் பாவை யாட்டுப் போல் ஒழுங்காக ஆடி வரின், அவற்றை ஆட்டும் ஓர் ஆற்றல் இருத்தல் வேண்டும். அவ் வாற்றல் அறிவற்றதாயிருக்க முடியாது. அவ்வறிவே இறைவன்.
(உ) இவ்வுலகம் முழுவதற்கும், கதிரவன் பகல் விளக்காகவும் திங்கள் இரா விளக்காகவும் எண்ணிற்கும் எட்டாத காலத்திலிருந்து விளங்கி வருகின்றன.

      ஒரு வீட்டில் விளக்கேற்றி வைப்பது அதிற் குடியிருக்கும் மக்கட்கே. மக்களில்லா வீட்டில் விளக்குத் தானாகத் தோன்றி எரியாது. பல உலகங்கட்கும் இரு சுடரையும் விளக்காக ஏற்படுத்தியவன் ஒருவன் இருத்தல் வேண்டும். வேலை செய்யாத தூக்க வேலையாகிய இராக் காலத்திற்கு, வெப்பமான நெருப்பொளி விளக்காகாது குளிர்ந்த நிழலொளி விளக்காக விருப்பதும், கவனிக்கத் தக்கது.

(ங) பிற கோள்களைப் போற் சுற்றாது ஒரே இடத்திலிருக்கும் கதிரவன், பத்துத் திசையும் ஒளி சமமாகப் பரவுமாறு உருண்டையா யிருப்பதும், அளவிடப் படாத நீள் பெருங்காலம் எரிந்து வரினும் அதன் எரியாவி குன்றி யணையா திருப்பதும், இயற்கைக்கு மாறான இறும்பூதுச் செய்தி யாதலால், அதை யியக்கி யாளும் ஒரு பரம் பொருள் இருத்தல் வேண்டும்.

(ச) கோள்கள் ஒன்றோடொன்று முட்டாது தன் தன் பாதை வட்டத்தில் இயங்குமாறும், இவை சுழலுங்கால் அவற்றின் மேலுள்ள பொருள்கள் நீங்காவாறும், ஒவ்வொன்றையுஞ் சூழ ஒரு கவர்ச்சி மண்டலம் அமைந் திருப்பதும், இயற்கைக்கு அப்பாற் பட்ட ஓர் ஆற்றலின் அமைப்பே.

(ரு) காலமும் இடமும் தொடக்கமும் ஈறும் இல்லாதவை யாதலால், இற்றை மக்களுலகந் தோன்று முன், எண்ணிக்கை யற்ற உயிருலகங்கள் தோன்றி யழிந் திருத்தல் வேண்டும். இதைத் தான்,
      ”படைத்து விளையாடும் பண்பி னோனும்
      துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
      தன்னில் வேறு தானொன் றிலோனும்
      அன்னோன் இறைவ னாகுமென் றுரைத்தனன்”
மணிமேகலைக்கு அறிவுறுத்திய சிவனியத் தருக்கி (சைவவாதி).

(சா) மாந்தன் தோன்றி ஐம்பதினாயிரம் ஆண்டாயிற்றென வைத்துக் கொள்ளினும், நூற்றுக் கணக்கான தலைமுறைகள் கழிந்திருத்தல் வேண்டும். பத்துக் கணக்காகத் தொடங்கிய மக்கட் தொகை இன்று நூறு கோடிக் கணக்காகப் பெருகி யுள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் எத்தனைய ராயினும், அத்தனையரும் அடையாளங் காணுமாறு வெவ்வேறு முகவடிவி லுள்ளனர். கை வரையும் வேறுபட்டுள்ளது. இது அறிவு நிரம்பிய ஒரு பேராற்றலின் செயலேயாகும்.

[குறிப்பு: உள்ளங்கையில் உள்ள ரேகைகளைத்தான் ”கைவரை” என்று குறிப்பிடுகிறார்.]

(எ) “கடவுளை நம்பினோர் கைவிடப் படார்” என்பது, இன்றும் சிலர் வாழ்க்கையில் மெய்ப்பிக்கப் படுகின்றது.

(அ) உடல்நலம், மனநலம், மதிநலம் முதலிய நலங்கள் உள்ளாரும் இல்லாரும் படைக்கப் பட்டிருத்தல்.

(கூ) பஞ்சம், கொள்ளைநோய், பெருவெள்ளம், நில நடுக்கம் முதலிய இயற்கை அழிவு நிகழ்ச்சிகள் நேர்தல்.”

இப்பகுதியைத் தொடர்ந்து கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன் வைக்கும் ஐந்து கருத்துக்களைக் கூறுகிறார். பாவாணர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதால் அவற்றை இங்கே சொல்ல வேண்டியதில்லை. அதைத் தொடர்ந்து, ’பகுத்தறிவு’க்கு ஒன்று சொல்கிறார்:

“மாந்தன் மதியாற்றல் மட்டிட்ட தாகலின், இறைவன் ஆட்சியிலுள்ள எல்லாவற்றையும் அறிய முடியாது.
      ’ஆழ வமுக்கி முகக்கினும் ஆழ்கடல்
      நாழி முகவாது நானாழி” (மூதுரை. ககூ)’”


ஔவை பாட்டியின் இந்த வரிகள் புரியாதோர்க்கு:
“நம்பகிட்ட ஒரு சொம்பு இருக்கு. கடலுக்குப் போய் அந்தச் சொம்பை முக்குனாக்க அதுல ஒரு சொம்பளவு தண்ணிதான்யா வரும். நாலு சொம்பளவுத் தண்ணி வராது.”
(கு.குசலாவின் குறுக்குச் சால்: ’நாலு சொம்பளவுத் தண்ணி வேணும்னா அந்தச் சொம்ப நாலு தபா முக்க வேண்டியதுதானே?’ ரொம்ப கடுப்பேத்றார் மை லார்ட்.)

”மதத்தை அழிக்க முடியுமா?” என்றொரு கேள்வி எழுப்பி அதன்கீழ் பாவாணர் சொல்லிச் செல்வதில் முடிவாக வரும் உளவியல் கருத்து என்னைக் கவர்ந்தது:

“கனவு காணாது உறங்கும் நேரம் தவிர, மற்றெல்லா நேரத்திலும் – இருப்பினும், நடப்பினும், வேலை செய்யினும், உரையாடினும் உண்ணினும் – இறைவனை நினைக்கவும் வழுத்தவும் வேண்டவும் இயலுமாதலின், மனம் உள்ளவரை  மதத்தை ஒருவராலும் அழிக்க முடியாதென அறிக.”

ஹாரூன் யஹ்யா என்ற பெயரைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இன்று முன்னணியில் இருக்கும் இஸ்லாமியப் பரப்புநருள் ஒருவர். பேச்சாளர் அல்ல. அவரின் களம் எழுத்து. நூற்றுக் கணக்கான நூற்களை நெய்திருக்கிறார், அதாவது எழுதியிருக்கிறார். நான் வியக்கும், விரும்பும் நபர்களுள் ஒருவர். அவர் ஒருவர்தானா அல்லது ஒரு குழு அமர்ந்து அப்பெயரில் எழுதித் தள்ளுகிறதா என்று ஐயம் உண்டு. அவ்வளவு நூற்கள் வெளிவந்துள்ளன. அறிவியல், வரலாறு என்னும் இரு துறை சார்ந்து திருக்குர்ஆன் பற்றி அவர் எழுதுகிறார். டார்வின் முன்வைத்த கூர்தலறக் கோட்பாடு (பரிணாமக் கொள்கை, Theory of Evolution) பொய் என்று நவீன அறிவியல் ரீதியாக அவர் மறுத்து எழுதியுள்ள நூற்கள், குறிப்பாக “DARWINISM REFUTED” என்னும் நூல், உலகப் புகழ் பெற்றது. டார்வினியலாளர்களின் மூக்குக்குள் புலிகேசியின் மீசையை விட்டு மூளையைக் குதறுவது!


ஹாரூன் யஹ்யா குறிப்பிடும் சில வாதங்களை தேவநேயப் பாவாணர் தனது நூலில் சொல்லியிருக்கிறார் என்பது வியப்பாக இருந்தது. அப்பகுதியைப் படியுங்கள்:

“இறைவனின்றி எல்லாம் இயற்கையாகத் தோன்றிய தென்பதையே, அறிவியற் பொது அடிப்படையாக இக்காலத்துப் புதுப் புனை வாராய்ச்சியாளர் பலர் கொண்டுள்ளனர். தார்வின் (Darwin) கொள்பும் (theory) இதற்குத் துணையெனக் கருதுகின்றனர். ஆயின் தார்வினெ தம் இறுதிக் காலத்தில் தம் இளமைக் காலக் கொள்பு பற்றி வருந்தின தாகத் தெரிகின்றது.

தாழ்ந்த இனத்தினின்று உயர்ந்த இனம் படிமுறையாகத் தோன்றிற்று என வைத்துக் கொள்ளினும், அடிப்படை யுயிரியான ஒற்றைப் புரையன் (unicellular being) எங்ஙனம் தானே தோன்றும்?

சடத்தினின்று சித்துத் தோன்றுமோ? தோன்றாதே!

ஆதலால் திரிபாக்கக் கொள்கை (Evolution Theory) தவறென்றே கொள்ள வேண்டியுள்ளது.

இனி, கதிரவனின்று ஞாலம் வீழ்ந்ததெனின், கதிரவன் எதனின்று வீழ்ந்தது?

இக்கொள்பாளர் கணக்கற்ற கதிரவக் குடும்பங்கள் பெரு விசும்பில் (Grand Universe) உள்ளதை அறிந்தாரா? அறிவியலாராய்ச்சியாளர் இயற்கையிலுள்ள, இறும்பூதுகளைக் கண்டு இறைவன் பெருமையை உணர்ந்து வியப்பதற்கு மாறாக, திறவுகோல் பெற்ற வேலைக்காரன் திருடனாக மாறிவிடுவது போல், தனக்கு நுண்மதி யளித்த இறைவனையே இல்லையென மறுப்பது, விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவது போன்றதன்றோ!”


(to be continued)

Thursday, December 12, 2013

கூஜா நாமா


(உமர் ஃகய்யாமின் ’ருபாயாத்’ பாடல்களில் ஒரு பகுதியாக அமைந்திருப்பது ’கூஜா நாமா’ என்பது. களிமண் கூஜாக்கள் தமக்குள் குயவனைப் பற்றியும் தம் வாழ்வைப் பற்றியும் பேசிக்கொள்ளும் பாணியில் மனிதர்கள் இறைவனைப் பற்றியும் வாழ்வைப் பற்றியும் பேசிக்கொள்வதாக உட்பொருள் தொனிக்க அவர் எழுதியுள்ளார். அந்தப் பெயரையே இந்தக் கவிதைக்குச் சூட்டுகிறேன்)

ஈரம் காயாத களிமண்
இன்னமும் நான்
குயவனின் கைகளில் இருக்கின்றேன்
இன்னமும் நான்

ஒவ்வொரு கணமும் வனைகிறது
அவனின் இயக்கம் என்னை
ஒவ்வொரு கணமும் புனைகிறது
அவனின் நாட்டம் என்னை

என் கட்டமைப்பில் தெரிவதெல்லாம்
அவனின் கைவண்ணமே
பொய்வண்ணம் அல்ல இது
சத்திய மெய்வண்ணமே!

வெறுமை என்னும் வடிவில்
வரைந்த பாத்திரம் நான்
ஏழு கடல்களின் தண்ணீர்
நிறைந்த பாத்திரம் நான்!

அவனின் மூச்சு கடலானது
என்னுள் எழும் அலைகளுக்கெல்லாம்
அவனின் காதலே வேர் ஆனது
என் கிளைகள் இலைகளுக்கெல்லாம்

விண்ணுக்கும் மண்ணுக்கும் இறைவனே
ஒளியாக இருக்கின்றான்
இறைவன் பார்வை எனில் மனிதனே
விழியாக இருக்கின்றான்

உடைவோம் என்ற அச்சத்தில்
சாகிறது கூஜா ஒன்று
உடைந்தோம் என்ற கவலையில்
வேகிறது கூஜா ஒன்று

’தோழர்களே! உடையுங்கள் என்னை’
என்கிறது ஒன்றின் முழக்கம்
’நேசர்களுக்கில்லை அச்சமும் கவலையும்’
என்பதே இறை வழக்கம்


(குறிப்பு: ”‘தோழர்களே! உடையுங்கள் என்னை’ என்கிறது ஒன்றின் முழக்கம்” என்பது மன்ஸூர் அல்-ஹல்லாஜின் கவிதை ஒன்றிற்கான சுட்டுதல் ஆகும். “உக்தூலூனீ யா ஸிகாத்தீ / இன்ன ஃபீ கத்லீ ஹயாத்தீ” (என் நண்பர்களே! என்னைக் கொல்லுங்கள்! நிச்சயமாக, நான் கொலை செய்யப்படுவதில் என் வாழ்க்கை உள்ளது!) என்பதே அந்தக் கவிதை வரிகள்)

Wednesday, November 27, 2013

கஸல் துளிகள்


விரல்கள் ரணமாக அவிழ்த்தேன்
காதல் மர்மங்களின் முடிச்சு ஒன்றை
நொடியில் தோன்றி நின்றன
நூறு முடிச்சுக்கள் இன்னும்
*

கண்ணாடி ஓவியம் நான்
’நான்’ இல்லாதுபோகும் இடமெல்லாம்
ஊடுருவிப் பாய்கிறது
உன் ஒளி
*
தேனீயைப் போல் சுறுசுறுப்பானவள்
தேனைப் போல் இனிமையானவள்
நெஞ்சே! மறந்துவிடாதே
விஷமுள்ள கொடுக்கும் இருக்கிறது!
*

உடல் வேறொரு காலத்தில்
உள்ளம் வேறொரு காலத்தில்
உயிர் முறுவல் பூக்கிறது
காலாதீதத்தில்

மூச்சு வேறொரு தாளத்தில்
பேச்சு வேறொரு தாளத்தில்
தியானம் மெல்ல சிரிக்கிறது
மௌன ராகத்தில்
*

மணமே அறிவித்துவிடுகின்றது
மலர்ந்த ரோஜாவை

புல்புலின்
புகழ்ப் பாடல்களால்
புல்புலையே அறிவிக்கிறது ரோஜா!

லைலாவின் அழகைச் சொல்கிறதாம்
மஜ்னூனின் அலங்கோலம்

லைலாவின் அழகு இல்லை எனில்
கயஸ்
மஜ்னூன் ஆவதெங்கே?
*

ஆதலினால் செய்யப்படுவதல்ல
காதல்

காதலினால் ஆகின்றன
எல்லாம்

*

Saturday, November 23, 2013

...என்றார் சூஃபி - part 2

3

‘நம் சமூகத்தில் இன்றைய இளைஞர்களிடம் அரசியல் விழிப்புணர்வு அதிகம் காணப்படுகிறது. இது மகிழ்ச்சியான விஷயமல்லவா?’ என்று கேட்டார் ஒருவர்.

”அன்பரே! கலவரத்தைப் புரட்சி என்று காணும் தவறான பார்வை பற்றி எச்சரிக்கையாக இருங்கள். இன்றைய காலகட்டத்தில் பக்கிகளின் கூட்டம் தம்மை ராஜாளிகளாக பாவனை செய்கின்றது. தவளைகளின் சப்தம் ஒருபோதும் சிங்க நாதம் ஆகிவிடாது.

ஹழ்றத் அலீயின் வாழ்வில் இருந்து ஒரு நிகழ்ச்சியைக் கவனியுங்கள். போர்க்களத்தில் அவர்கள் உக்கிரமாகச் சண்டையிட்டிருந்த நேரம். அன்னாரின் வாள் வீச்சின் வலிமையில் எதிரியின் வாள் அப்பால் போய் விழ, அவனும் மல்லாந்து சாய்ந்தான். அவன் மீது ஹழ்றத் அலீ அவர்கள் அமர்ந்து அவனின் தலையைத் துண்டிப்பதற்குத் தன் வாளை ஓங்கினார்கள். அப்போது அந்த மனிதன் செய்வதறியாத மருட்சியில் அன்னாரின் முகத்தில் காரி உமிழ்ந்துவிட்டான். ஓங்கிய வாள் அப்படியே நின்றுவிட்டது. முகத்தில் வழிந்த எச்சிலைத் துடைத்தபடி ஹழ்றத் அலீ அவர்கள் நிதானமாக எழுந்து நின்றார்கள். இஃது அவனுக்குப் பெரிதும் ஆச்சரியமாகிவிட்டது. அவர்களின் செயலுக்கான காரணத்தை அவன் கேட்டான். “நீ என் முகத்தில் உமிழ்ந்த நேரத்தில் சட்டென்று என் உள்ளத்தில் கோபம் எழுந்தது. அப்போது நான் உன்னை வெட்டியிருந்தால் அல்லாஹ்வுக்காகப் போரிட்டவன் ஆகமாட்டேன். என் சுயநலத்தில் உன்னை வெட்டிய கொலைகாரன் ஆகியிருப்பேன். எனவேதான் நான் நிறுத்திவிட்டேன்” என்றார்கள். ஹழ்றத் அலீயின் இந்த மனப்பக்குவம் அவனின் மனதைப் புரட்டிவிட்டது. அங்கேயே அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான். 

இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு மௌலானா ரூமி சொல்கிறார்கள்:
‘அல்லாஹ்வின் சிங்கம் சுயநலத்தில் இயங்குவதில்லை
அதன் அசைவுகள் எல்லாம் அவனின் நாட்டப்படியே!
அலீயின் ஞானம் பகைமையின் எச்சிலை
நம்பிக்கையின் தேனாக மாற்றிவிட்டது!’

ஞானம் இல்லாதோரின் அரசியல் என்பது குருடனின் கையில் கொடுக்கப்பட்ட வாளாகும். எந்த லட்சியத்திற்காகப் போரிடுவதாக அவன் சொல்கிறானோ அந்த லட்சியத்தையே அது துண்டு துண்டாக வெட்டிவிடும்.

ஹழ்றத் அலீயின் வாளினை உங்கள் கை ஏந்த வேண்டும் எனில் அன்னாரின் ஞானப் பார்வை உங்கள் கண்களில் உண்டாக வேண்டியது முன் நிபந்தனை ஆகும்” என்றார் சூஃபி.

4
“கலை ஒரு புனிதமான பொய்” என்று அல்லாமா இக்பால் சொல்வதை முன்வைத்தார் ஒருவர்.
“அதன் புனிதம் உன்னை சத்தியத்திடம் இட்டுச் செல்லும்” என்றார் சூஃபி.

5
”கண்மூடித்தனமாகக் கலைகளை எதிர்க்கும்போது சமயம் வெறும் அரசியல் ஆகிவிடுகிறது” என்றார் சூஃபி.

6

“எந்த மனிதனும் சாதாரணமானவன் அல்ல. ஏனெனில் இறைவன் சாதாரணமான ஒன்றைப் படைப்பதில்லை” (‘No man is ordinary for God cannot create something ordinary’, Prof.Dr.A.S.Mohamed Rafee M.A.,Ph.D., “Alpha Meditation”, p.61) என்று நாகூர் ரூமி சொல்வதைச் சுட்டினேன்.

“இறைவன் மகத்தானவன். ஏனெனில் அவன் சாதாரணத் தன்மையைப் படைத்திருக்கிறான்” (God is great for he has created ordinariness) என்றார் சூஃபி

7

“சிறியவர்களிடம் அன்பு காட்டாதவரும் பெரியவர்களிடம் மரியாதை காட்டாதவரும் நம்மைச் சேர்ந்தவர் அல்ல” என்பது நபி (ஸல்) அவர்களின் அருள்மொழி.

“அன்பே சிறியவர்களுக்கான மரியாதை; மரியாதையே பெரியவர்களுக்கான அன்பு என்றும் இதனை விளங்கலாம்.


மேலும், சிறியவர்களில் இருக்கும் பெரியவர்களிடம் மரியாதை காட்டுவதும் பெரியவர்களில் இருக்கும் சிறியவர்களிடம் அன்பு காட்டுவதும் இதில் அடக்கம்” என்றார் சூஃபி.

Saturday, November 2, 2013

ரூமியின் வைரங்கள் -part 12


கடலைத் தேடி அலையுமொரு
அப்பாவி மீனைப்போல
என் இனிய பயணியே!
எங்கே போகிறாய் நீ?

எங்கெங்கு நீ சென்றபோதும்
என் நெஞ்சமே உனது இல்லம்

அந்தக் கடல் மட்டுமே
உன் தாகம் தீர்க்க முடியும்
*

தற்பெருமையில் திளைத்தவர்களாய்
ஒவ்வொரு மாயத்தோற்றத்தின் பின்னும்
துறத்தியபடி ஓடிக்கொண்டிருக்கிறோம்

எத்தனை விசித்திரம் இது!
வெறுமையான நம்மில்தான்
எத்தனை மகத்தான கனவுகள்!
*

தற்புகழ்ச்சியை நிறுத்திக்கொண்டு
உன் இதயத்தின் கண்களை
மற்ற உலகங்களை நோக்கி
நீ திறக்கும்போது
நீ செய்பவை எல்லாம்
புகழுக்குரியதாய் இருக்கும்
*

புத்திசாலித்தனமான கேள்விகளாலோ
உன் பதவியையும் செல்வத்தையும்
துறந்து விடுவதாலோ
சத்தியத்தின் ரகசியம் திறக்கப்பட மாட்டாது

வெறும் வார்த்தைகளால்
உன் இதயத்தை உயர்த்தமுடியாது நீ

இதயம் செலுத்த வேண்டிய கட்டணம்
ஆழ்ந்த வேதனை மட்டுமே!
*

காதலின்
எரியும் துயரைத் தாங்கிக்கொள்ள
எத்தனை வலிமை வேண்டும் ஒருவர்க்கு

இணைதலை நோக்கி ஓடுவதல்ல தீர்வு

வலிமை தேவைப்படுவதெல்லாம்
பிரிவின் நிலையில் மட்டுமே
*

ஒருவராலும் தீர்க்க இயலவில்லை
என் குழப்பத்தை

ஒருவரும் சொல்ல முடியவில்லை
நான் எங்கிருந்து வருகிறேன் என்று

இதோ
நாற்சந்தியில் நின்றபடி
ரத்தம் கசிகின்றது என் இதயம்
எவ்வழியில் வீடென்று திகைத்தபடி
*

வாழ்நாளெல்லாம்
கேள்விகளால் குடையப்பட்டு
ஒரு பித்தனைப்போல்
கதவைத் தட்டியிருந்தேன் நான்

திறந்தது அது!

தட்டியிருந்திருக்கிறேன்
உள்ளுக்குள் இருந்தே!
*

வதைபட்டோருக்கு
விடுதலை கொண்டுவந்தாய்

துயரமுற்றோர்க்கு
மகிழ்ச்சியின் கோப்பையைத் தந்தாய்

ஆனால் அவர்களோ மறந்துபோயினர்
வெகுகாலமாகவே

சொல், இன்னொரு முறை
நீ உன் கோப்பையைத் தரப்போவதில்லை எனில்
அவர்களுக்கு நீ சொல்ல நினைத்ததுதான் என்ன?
*

காதலில் தம்மை இழந்தோரிடம்
தாமதமாகவே வருகின்றாய் நீ
எனினும் உன் முழுமையான வல்லமையுடன்!

மான் ஒன்றின் நளினத்துடனோ
சிங்கமொன்றின் கம்பீரத்துடனோ
எப்படி வரினும் உன்
வாளின்றி வருவதில்லை நீ
*

சிலநேரங்களில் என் கோரிக்கைகளுக்குச்
செவி கொடுப்பதே இல்லை நீ

உன் பாதத்தை முத்தமிடவும்கூட
அனுமதிப்பதில்லை நீ

என்னை மூழ்கடி அல்லது எரித்துவிடு
என்ன கவலை எனக்கு?
நீயே என் உயிரின் தலைவன் எனும்போது
*

என் அணைப்பிலிருந்து நழுவி
நீ சென்றுவிட்ட நாள் முதலாய்
ஒருவரும் கண்டதில்லை என்னை
கண்ணீருடன் அல்லாமல்

என் இதயத்திலும் ஆத்மாவிலும்
எப்போதும் இருக்கிறாய் நீ
நீயும்கூட
என்னை மறக்கவேயில்லை அல்லவா?
*

மெழுகுவத்திகள் ஏற்றி வைத்தேன்
பூந்தோட்டத்தில் இன்றிரவு

பானங்களாலும் இனிப்புக்களாலும்
நிரப்பி வைத்தேன் மேசையை

இசைக்கலைஞர்களும்
இதோ வந்துவிட்டார்கள் இங்கே

எப்படி ஏங்குகிறது என் உள்ளம்
நீ இருக்கவேண்டும் என்று!
*

ஒருமுறை இறந்து போனேன்
ஒருவரும் கண்ணீர் வடிக்கவில்லை

இன்னொரு முறை வாழ்வேன் எனில்
எப்படி இருக்கவேண்டும் என்றறிவேன்

உன் அறியாமைப் பேச்சால் என்னைத் தூண்டுகிறாய்
அதுவோ வெற்றொலியாய்க் கேட்கிறது எனக்கு
*

எட்டுத் திசைகளிலிருந்தும்
வருகிறது கடவுளின் ஒளி
என்று சொல்லப்படுகிறது

’எங்கிருந்து?’ என்கிறது கூட்டம்
இடமும் வலமும் திரும்பியபடி

அதோ அவர்கள் ஒரு கணமாவது
இப்படியும் அப்படியும்
பார்க்காமல் இருந்தால்தானே!
*

உன்னுள்ளும் அதற்கப்பாலும்
மறைந்துள்ளதொரு குகை,
சிந்தைக்கெட்டாத விந்தைகள்!

ஒவ்வொருவருக்கும் உள்ளது
ஒரு வேலையும் ஒரு காதலனும்

எனினும், அந்த மறைவான காதலன்
அவனே மிகவும் இனிமையானவன்!
*

இதயமே! இப்பாதையில்
சொற்கள் வெறுமையானவை மட்டுமே

இணைதலின் வாசலில்
உன்னை முழுமையாய் அர்ப்பணித்துவிடு

அவனின் பறவைகள் திரிகின்ற வானத்தை
ஒருபோதும் எட்டிவிட முடியாது நீ
உன் சிறகுகளை உதிர்த்தால் அன்றி
*

உன் நினைவாகவே மாறிவிட்ட உயிர்
ஒருபோதும் பொய்யாவதில்லை

ஒருபோதும் மங்குவதில்லை
பிறையாகி நிற்கும் அந்த நிலா

அதன் தேய்வு என்பது
நிறைவடைதலின் ஆரம்பம்தானே!
*

என்னருமை ஆத்மாவே!
அற்பர்களை விட்டு நீங்கிவிடு

தூய உள்ளம் கொண்டோருடன்
நெருக்கமாக இரு

இனம் இனத்தை ஈர்க்கும்

காகம் உன்னை அழைத்துச் செல்லும்
இருகாட்டிற்கு

கிளி உன்னை இட்டுச் செல்லும்
கனிகள் இருக்குமிடம்
*

’என்ன செய்வது?’ என்று கேட்டேன்
இற என்றான்

‘நீர் நெய் ஆகிவிட்டது’ என்றேன்
இற என்றான்

’உன் ஒளியைச் சுற்றிவருமொரு
விட்டில் ஆவேன்’ என்றேன்
இற என்றான்!
*

திடீரென்று வந்து
திருடிச் சென்றாய்
என்னிடமிருந்து மூன்று:

இதயத்தின் அமைதி
முகத்தின் பொலிவு
விழிகளின் உறக்கம்

அடடா! எந்த மனமும்
கற்பனை செய்ய முடியாத அந்தக்
கையைப் போற்றுகிறேன்!
*

பிரபஞ்ச வெளிகளிலிருந்து
வந்திருக்கின்றாய் நீ

எனினும், இந்த மண்ணுருவத்தால்
வசியம் செய்யப்பட்டு
பூமியின் பிரஜையாய்க் கருதுகிறாய் உன்னை

உன் சுயம் எது என்பதை
ஏன் மறந்துவிட்டாய் நீ?
*

செழிப்பும் பதவியும்
சூஃபிக்குப் பெருஞ் சுமைகளே

தூய வறுமையின் வித்தையில்
காதலனின் பெருமையைக்
காண்கிறார் அவர்
*

ஒருபோதுன் பாதம் மிதித்து
மறுபோது காற்றில் தூசிபோல் குதிப்பது
நடனம் அல்ல

அதுவோ
ஈருலகிற்கும் அப்பால் குதிப்பது
உன் வேதனையின் ரத்தத்தில் ஆடுவது
உன் வாழ்க்கையை அர்ப்பணிப்பது
*

உன் காதலனைத் தேடுவதில் இருந்தும்
உன்னைத் திசைமாற்றுவது
உன் ஆசைகளே

இணைதலை நாடுகிறாய் எனில்
ஏக்கத்தின் தோட்டத்திற்குள் நுழை
*

பாதை முடிவதில்லை என்றபோதும்
ஓர் அடி எடுத்து வை

நடந்துகொண்டேயிரு
கலங்கியபடி பார்க்காதே தொலைவில்

இந்தப் பாதையில்
இதயமே உனது வழிகாட்டி ஆகட்டும்

உன் தேகமோ தயங்குகிறது
பயத்தால் நிரம்பியுள்ளது
*

காதலின் மீது காதலாகியிருக்கிறோம்
ஏனெனில், காதலே நமது மீட்சி

ஆத்மாவே நமது வழிகாட்டி
காதலே நமது பானம்

மூலத்தைக் காண முடியாதவன்மீது
கைசேதமே கவிந்துள்ளது

அவனின் பாதை தடைப்பட்டுள்ளது
அவனின் அறியாமையைக் கொண்டே
*

மண்ணில் காலடி வைத்தாய்
மகிழ்ச்சியில் சூல் கொண்ட பூமி
மலர்த்திவிட்டது கோடிப் பூக்களை

குதூகலம் எட்டியது வானத்தை

வியப்புடன் பார்த்தது
விண்மீன்களை நிலா
*

கற்பனையைக் கிளர்த்தும் ஈருலகங்களும்
நாம் வந்து போகும் தங்குமிடங்களே

ஆத்மாவைப் பற்றி நாம் கேள்விப்பட்டதெல்லாம்
பல பல குழந்தைக் கதைகளே!
*

“நான் என்ன செய்ய வேண்டும்?” என்றேன்
ஆஹா! அதுவன்றோ கேள்வி! என்றான்

பகடியாடும் அவனின் வார்த்தைகள் கேட்டு
“இதுதான் நீ சொல்ல முடிந்ததா?” என்றேன்

என் பேச்சுக்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளினான்:
மார்க்கத்தின் மாணவனே!
ஒவ்வொரு கட்டத்திலும் கேட்டுக்கொண்டேயிரு
‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று
*

அஞ்சாதே! எப்போதும் உள்ளது மது
காதலுக்காக நீ தாகித்திருந்தால்

அஞ்சாதே! எப்போதும் உள்ளது நீர்
உன் உதடுகள் காய்ந்து வெடித்திருந்தால்

அஞ்சாதே! நீ பாழாகிப் போவதற்கு
உன்னுள் புதைந்துள்ளது பொக்கிஷம்

உன் கண்களைத் திற,
இவ்வுலகமொரு கனவு மட்டுமே!
*

நிலாவின் ஒளியைத் திருடிச்
சோலைக்குள் கொண்டு வந்தோம்
பூக்களின் தூக்கத்தைக் கலைக்க

விழித்தெழு! வெகுகாலம் பனிக்குள்
சிக்கிக் கிடந்துவிட்டது நம் கப்பல்

திறந்த கடலில் பாய்ந்து செல்லும்
காலம் வந்தது காண்
*

சூரியன் உன்னைச் சுட்டெரித்துவிடும்
காதலரின் நிழலடியில் தங்கியிரு

அவர்களின் சகவாசத்தில் படிப்படியாய் மாறுவாய்
நீயும் ஒருநாள், சூரியனைப் போல் சுடர்பவனாய்!
*

இரவின் இருளில்
நிலாக் கூடாரம் இட்டு வைத்தாய்

உறங்கும் ஞானத்தின் முகத்தின் மீது
தண்ணீர் தெளித்தாய்

ஒவ்வொருவருக்கும் ஆறுதல் சொன்னாய்
எனினும்,
ஏக்கத்தின் வாளால் வெட்டி வீழ்த்தினாய்
உறக்கத்தின் தலையை

*