Tuesday, June 9, 2015

...என்றார் சூஃபி - part 13

44

’இறையச்சம்’ பற்றிப் பேசியிருந்தோம். நிறைய கேள்விகளும் அவரவருக்குத் தோன்றும் விளக்கங்களுமாக நேரம் போய்க் கொண்டிருந்தது.

’இறைநேசர்கள் இறைவனை அஞ்சுவது எவ்வாறு? அதாவது, நேசம் இருக்கும் இடத்தில் அச்சம் எத்தகையதாக இருக்கும்?’

‘இறையச்சம், இறைநேசம், இறைஞானம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள தொடர்பு என்ன?’

’இறைநேசர்களுக்கு அச்சமும் கவலையும் இல்லை எனும்போது இறையச்சம் என்பதன் இடம் என்ன?’

இவை போன்ற கேள்விகள் சபையை நகர்த்திச் சென்று கொண்டிருந்தன. அப்போதுதான் சூஃபி ஒரு சிறிய கதையைச் சொல்லி விளக்கம் தந்தார். அது ஒரு ஜென் கதை!

’ஜென் மற்றும் தாவோ ஆன்மிகவாதிகள் தற்காப்புக் கலைகளையும் தியானமாக உருவாக்கினார்கள். அதில் வில் வித்தையும் ஒன்று.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்தில் ஒரு வாலிபன் இருந்தான். சிறந்த விற்கலைஞனாக – வில் வித்தை வீரனாக உருவாக வேண்டும் என்று அவனுக்கு ஆசை. அந்த ஆசை அவனின் இதயத்தில் அணையாத தீயாக எரிந்து கொண்டிருந்தது. உள்ளூர் குரு ஒருவரிடம் சில வருடங்கள் மிகவும் சிரத்தையாக அவன் வில் வித்தையைக் கற்றுக் கொண்டான். அம்பு எய்வதில் மிகவும் தேர்ந்து விட்டான். இனி தன்னை வெல்ல எவரும் இருக்க முடியாது என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் உண்டானது. இது பற்றி ஒருநாள் தன் குருவிடம் பேசினான்.

‘குருவே! வானில் எவ்வளவு உயரத்தில் பறவை சென்றாலும் அதனைச் சரியாகக் குறி வைத்து வீழ்த்தும் ஆற்றலை நான் பெற்றுவிட்டேன். இனி வில் வித்தையில் நான் கற்றுக் கொள்ள எதுவும் இல்லை அல்லவா? நான் ஒரு முழுமையான விற்கலைஞன் ஆகிவிட்டேன் அல்லவா?’ என்று அவன் கேட்டான்.

லேசாகப் புன்னகை செய்தபடி அவனிடம் குரு சொன்னார், ‘பையா! நீ கற்றுக் கொள்ள வேண்டிய வித்தை இன்னும் ஒன்று இருக்கிறது. அதை அடையாத வரை நீ ஒரு முழுமையான விற்கலைஞன் ஆக மாட்டாய். ஏன், அந்த வித்தை எனக்கே தெரியாது. நானும் ஒரு முழுமையான விற்கலைஞன் அல்லன்.’

இதைக் கேட்டு அவன் திகைத்தான். அந்த வித்தையைத் தான் எங்கு போய்க் கற்றுக்கொள்ள இயலும் என்று வினவினான். மிகத் தொலைவில் உள்ள மாகாணம் ஒன்றில் மலைச் சாரலில் வசிக்கும் ஒரு குருவிடம் செல்லுமாறு அவனிடம் உள்ளூர் குரு கூறினார். அவரிடம் விடை பெற்றுக் கொண்டு அவன் கிளம்பினான்.

மலைச் சாரலில் ஒரு குடிலில் வசிக்கும் குருவிடம் அவன் சீடன் ஆனான். அப்படி என்ன புதிய வித்தை அவரிடம் உள்ளது என்று அறிய மிகவும் ஆர்வமாக இருந்தான். சில வருட பயிற்சிகளுக்குப் பிறகு அதற்கான தருணம் வந்தது. குரு அவனை அழைத்துக் கொண்டு அந்த மலை மீது ஏறினார். சில ஆயிரம் அடிகள் உயரத்தில் அந்தரத்தில் நீட்டிக் கொண்டிருப்பது போன்று ஒரு செங்குத்தான பாறை. சீடனின் கையைப் பிடித்தபடி அழைத்துச் சென்று அதன் விளிம்பில் அவர் நின்றார். சீடன் அரண்டு போனான்! பயத்தில் அவனின் கால்கள் உதறிக் கொண்டிருந்தன. குரு தனது வில்லை எடுத்து அதில் ஒரு கணையை வைத்து நேராக மேலே பார்த்தார். வட்டமடித்துக் கொண்டிருந்த பருந்து ஒன்றினை வீழ்த்தினார். ‘நீ செய் பார்ப்போம்’ என்பது போல் சீடனைப் பார்த்தார். அவன் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. வில்லில் அம்பினை வைத்துப் பிடிக்கவே அவனால் முடியவில்லை. குருவின் பாதத்தில் விழுந்து அழுதான் அவன். அதன் பின் அந்த வித்தைக்கான பயிற்சிகளில் கடுமையாக ஈடுபட்டான். ‘சிறந்த விற்கலைஞனுக்கு உயரத்தைப் பற்றிய அச்சம் துளிகூட இருக்கக் கூடாது’ என்று குரு அவனிடம் கூறினார். சில வருடங்களில் அவன் தேர்ச்சி பெற்றான். பல்லாயிரம் அடி உயரச் செங்குத்துப் பாறை விளிம்புகளில் அவன் நிற்கும் போது கால்கள் வேர் பிடித்தது போல் உறுதியாக நின்றன. அவன் கைகளில் நிதானம் இருந்தது.

இப்போது மீண்டும் அவன் உள்ளத்தில் தன் திறமையைப் பற்றிய மமதை உண்டானது. ‘இப்போது என்னை வெல்ல இவ்வுலகில் யாருமே இருக்க முடியாது அல்லவா குருவே?’ என்று அவன் கேட்டான். குரு நிதானமாகச் சொன்னார், ‘அடப் போப்பா நீ வேற. 
இதுவெல்லாம் ஒரு வித்தையே அல்ல! உண்மையான வில் கலைஞன் என்றால் அதற்கு வேறொரு திறமை வேண்டும். அது இல்லாமல் வில் வித்தை ஒருபோதும் முழுமை பெறாது. அந்த வித்தையை நான் என் வாழ்வில் கற்றுத் தேரவே முடியவில்லை. அந்த வித்தையை அறிந்தவர் ஒரே ஒரு குருதான் இப்போது இருக்கிறார்.’

அந்த குருவிடம் சீடனாகச் சேர்ந்து எப்படியாவது அவரிடம் உள்ள தனித்தன்மையான வித்தையைக் கற்றுவிட வேண்டும் என்று அவன் பிரதிக்ஞை செய்து கொண்டான். இதற்கு மேல் ஒரு வில் வித்தை இருக்கும் என்பதை அவனால் கற்பனைகூட செய்ய முடியவில்லை.

தனக்குத் தரப்பட்ட ’முகவரி’யை அவன் மிகவும் கஷ்டப்பட்டுச் சென்றடைந்தான். அந்த தேசத்திலேயே அதுதான் மிகவும் உயரமான மலைமுகடு. அதன் சாரலில் ஒரு குகையில் இருந்தார் அந்த குரு. படு கிழம்! ’இந்த வயதில் இவர் எப்படி வில் வித்தை சொல்லித் தருவார்?’ என்று எண்ணிச் சோர்வடைந்தான் அவன். எனினும் சில காலம் அவருக்குக் கர்ம சிரத்தையாகப் பணிவிடை செய்தான். அவர் இவனைத் தனது சீடனாக ஏற்றுக் கொண்டார். எல்லா வித்தைகளிலும் ஏற்கனவே அவன் தேர்ச்சி பெற்றிருப்பதை அறிந்தார். தன்னிடம் உள்ள ரகசியமான வித்தையை அவனுக்குக் கற்றுத் தர நாள் குறித்தார். அன்று முதல் அவன் தூக்கம் இல்லாமல் தவித்தான்! அந்த நாள் நெருங்க நெருங்க அவனின் நெஞ்சுக்குள் இதயம் எகிறி குதித்துக் கொண்டிருந்தது. அந்த நாளும் வந்தது.

அதிகாலை நேரம். குளிர்க் காற்று வீசிக் கொண்டிருந்தது. குகையை விட்டு வெளியேறிய குரு தள்ளாடியபடி நடந்து சென்றார். இவன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்து சென்றான். தூக்கத்தில் நடப்பது போல் அவர் மிகவும் நிதானமாக நடந்து சென்று ஒரு முகட்டில் நின்றார். அங்கிருந்து முழு உலகமும் தெரியும் என்பது போன்ற உயரம்! அவன் அவரின் கால்களை உற்று நோக்கினான். அவை இரும்புத் தூண்களைப் போல் உறுதியாக நின்றன. அவர் தன் கையை உயர்த்தி உச்சி வானத்தில் அவனிடம் சுட்டிக் காட்டினார். முதலில் அவனுக்கு ஒன்றுமே பிடி படவில்லை. கூர்ந்து கவனித்த போது புள்ளி போல் ஒரு பறவை தென்பட்டது. எவ்வளவு வளைத்து எய்தாலும் அத்தனை உயரத்திற்கு அம்பு செல்லவே முடியாது. இவர் என்ன அந்தப் பறவையைக் காட்டுகிறார் என்று எண்ணியபடி அவரிடம் வில்லை நீட்டினான். வேண்டாம் என்பது போல் சைகை செய்தார். பிறகு திரும்பி ஒரு கணம் கண்களை மூடி நின்றார். முகத்தை மேலே உயர்த்தியபடிக் கண்களைத் திறந்து அந்தப் பறவையை நோக்கினார். சட்டென்று அது கீழ் நோக்கி விழுந்தது! மண்ணில் அது விழுந்ததும் நம்ப முடியாமல் சீடன் அதனைப் பார்த்தான். செத்துக் கிடந்தது. வியப்பில் உறைந்து போய் அந்தக் கிழ குருவைப் பார்த்தான். அந்த மலை முகட்டில் அவர் நின்றிருந்தான். வயதால் அவரின் முதுகு வளைந்திருந்தது. அவரே ஒரு வில்லாக இருந்தார்!

அந்தக் காட்சியில் அவன் உணர்ந்ததைத்தான் அவர் அவனுக்கு இறுதி உபதேசமாகத் தந்தார்: “தானே ஒரு வில்லாக மாறி விடுபவன்தான் சிறந்த வில் வித்தைக்காரன்.”

இந்தக் கதையைச் சொல்லி முடித்து சில கணங்கள் மௌனமாக இருந்தார் சூஃபி. பிறகு 
எங்களிடம் கேட்டார், “மலை முகட்டில் அச்சமின்றி நிற்கும் ஒருவனின் கால்களை அச்சத்தால் நடுங்க வைக்க என்ன வழி?”

நாங்கள் பதில் சொல்ல மாட்டோம் என்பதை உணர்ந்த சூஃபி அவரே சொன்னார், “அதை விடவும் உயரமான மலை முகட்டில் அவனைக் கொண்டு போய் நிறுத்த வேண்டும். புதிய உயரத்தில் அவனின் கால்கள் முதலில் அச்சத்தால் நடுங்கும். சில நாட்களில் அதுவும் பழகிப் போகும். பிறகு அதை விடவும் உயரமான முகட்டிற்கு ஏற வேண்டும். இப்படியே மேலே மேலே செல்லச் செல்ல அச்சமும் புதிதாக அனுபவமாகும். ஆனால் அந்த அச்சம் பரவசத்தின், தியானத்தின் முகத்திரைதான்.

இறையச்சம் என்பதும் இப்படித்தான். இறையனுபவத்தின் உயரங்களை நீங்கள் புதிது புதிதாக அடைய அடைய அதனை முதன்முதலில் எதிர்கொள்வதன் அச்சம் இருக்கத்தான் செய்யும். இறையச்சத்தில் இருங்கள் என்பதன் பொருள் ஆன்மிகத்தில் மேலும் மேலும் உயரங்களை அடைந்து கொண்டே இருங்கள் என்பதாகும்.

எனவே, இறைவனை ஆன்மிக அனுபவத்தால் அறிய அறிய அச்சமும் அதற்கேற்ப புதிதாகிறது. ’இன்னமா யஃக்‌ஷல்லாஹ மின் இபாதிஹில் உலமாஉ’ (35:28) ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே’ என்னும் திருவசனத்தில் இறையச்சம் எனபதன் நியதியாக அறிதல் சுட்டப்பட்டிருப்பதை கவனிக்கவும். அது வெறும் ஏட்டறிவு அல்ல. ஆன்மிகப் பட்டறிவே ஆகும்.

’உங்களில் அல்லாஹ்வை மிகவும் அதிகமாக அறிந்திருப்பவன் நானே, அவனை அதிகமாக அஞ்சுபவனும் நானே’ என்பது நபி(ஸல்) அவர்களின் அருள்மொழி. (சஹீஹைன்: புஃகாரி, முஸ்லிம்)

அதாவது, எல்லையற்ற இறைவனிடமிருந்து அவர்கள் கணந்தோறும் புதிய புதிய ஆன்மிக உயரங்களை அடைந்து கொண்டே இருக்கிறார்கள். அனுபவத்திற்கேற்ப, அதன் படித்தர உயரத்திற்கேற்ப அச்சத்தின் தன்மையும் அமைகிறது. பரவசத்தின் தன்மையும்தான்.” என்றார் சூஃபி.

பிறகு, இறையச்சம் பற்றி வேறோர் உவமை சொல்லிப் பேசினார்:

“கடற்கரையில் நிற்கும் சிறுவர்களை கவனித்திருகிறீர்களா? அலைகளில் கால் நனைத்துக் குதூகலிக்கும் அவர்கள் தூரத்தில் சற்றே பெரிய அலை எழும்போது பயந்து கத்துவார்கள். ஆனால் அந்த அச்சத்தில் ஆனந்தமும் கலந்திருக்கும். அதே கடலில் ஆழிப்பேரலை வந்தால் – சுநாமி வந்தால் என்னாகும்? பெரியவர்களும்கூட பயப்படுவார்கள்.
சென்னை நெம்மேலி கடற்கரையில் நண்பர் டாக்டர் அஸ்லம் பிலாலி 

உங்கள் உள்ளம் ஒரு கடற்கரை. அதன் அப்பக்கம் ஆன்மிகக் கடல் இருக்கிறது. அதில் இறைவன் அனுப்பும் ஆன்மிக அனுபவ அலைகள் வீசிக் கொண்டிருக்கும். நீங்கள் ஓர்மையோடு அதில் கால்பதித்து நிற்க வேண்டும். அதுவே தியானம்.

உங்கள் உள்ளத்தில் கொஞ்சமாவது இறையனுபவ அலைகள் வீசிக் கொண்டிருக்க வேண்டும். இறைநேசர்களின் இதயங்களில் இறைக்கடலின் ஆழிப் பேரலைகள் வீசிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், கடற்கரையைப் பார்த்தே இல்லாத ஒருவன் ’நான் சுநாமிக்கு அஞ்சுகிறேன்’ என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? அப்படித்தான், வெற்றுப் பேச்சாகப் பலரின் முகங்களில் போலி இறையச்சம் அசடு வழிகிறது! அவர்களின் உள்ளங்கள் இறந்த கடலாக – dead sea ஆக இருக்கின்றன. அலைகளே அவற்றில் எழுவதில்லை.


இறையனுபவத்தின் ஆழிப் பேரலைகள் நம் உள்ளத்தில் பொங்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்” என்றார் சூஃபி.

Sunday, June 7, 2015

...என்றார் சூஃபி - part 12

42
பள்ளிப் படிப்பை முடித்துவிட்ட தன் பிள்ளையின் எதிர்காலத்திற்கு அறிவுரை வழங்கும்படிக் கேட்டுக் கொண்டார் ஒரு நண்பர். அந்தப் பிள்ளையின் திறமைகள் பற்றியும் ஆர்வங்கள் பற்றியும் விசாரித்த பின் சூஃபி நிதானமாகப் பேசினார்.

”ஓரு தென்னங் கன்றின் எதிர்காலம் என்ன? தென்னை மரம்தான்.

ஒரு ரோஜாக் கன்றின் எதிர்காலம் என்ன? ரோஜாச் செடிதான்.

ஓர் ஆலவிதையின் எதிர்காலம் என்ன? ஆலமரம்தான்.

ஒரு பூனைக்குட்டியின் எதிர்காலம் என்ன? பூனைதான்.

ஒரு கிளிக் குஞ்சின் எதிர்காலம் என்ன? கிளிதான்.

செடி கொடிகளில் விலங்குகளில் பறவைகளில் எதிர்காலம் என்பது இயற்கையில் நிர்ணயிக்கப் பட்டுவிட்ட ஒன்று. எனவே எந்தச் சிக்கலும் கிடையாது.

ஆனால் மனிதனில் அது வெறுமனே அவனது உடல் சார்ந்த விஷயம் அல்ல. ஆளுமையின் உருவாக்கம் சார்ந்தது. எனவே சிக்கல் எழுகிறது.

மனித குலத்தின் சாபக் கேடுகளில் ஒன்று ஆளுமையின் மதிப்பைப் பொருளாதாரத்தைக் கொண்டு கணக்கிடுவதாகும். இந்த மனநிலை மனித குலம் முழுக்கவும் புரையோடிக் கிடக்கிறது.

வருமானம் குவிக்கும் ஆளுமைகளாக நம் பிள்ளைகள் உருவாக வேண்டும் என்பதிலே நமக்குத் தீராத வேட்கை உண்டாகியுள்ளது. இதனால் மனித குலம் அடைந்த அக இழப்புப் பற்றிய சுரணையே இங்கு இல்லை.


மருத்துவனாக அல்லது பொறிஞனாக ஆக்கப்பட வேண்டும் என்னும் கல்வி ‘அறுவை’ சிகிச்சையில் அபார்ஷன் ஆகிவிட்ட கவிஞர்கள், கலைஞர்கள், ஞானிகள் எத்தனை பேர்?”

சிறிது நேர மௌனத்திற்குப் பின் சூஃபி திருமறை வசனமொன்றை ஓதிக் காட்டிச் சொன்னார்:

”வ லா தக்துலூ அவ்லாதகும் ஃகஷ்யத இம்லாக்;
நஹ்னு நர்ஸுகுஹும் வ இய்யாகும்;
இன்ன கத்லஹும் கான ஃகித்அன் கபீரா” (17:31)
(”வறுமைக்கு அஞ்சி உம் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்;
அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்;
அவர்களைக் கொல்வது திண்ணமாக மாபெரும் பாவமாகும்”)

இந்தத் திருவசனம் சிசுக்கொலை பற்றிக் கூறுவதாகப் பொருள் வைக்கப்படுகிறது. அது சரிதான். ஆனால் உடலைக் கொலை செய்வது மட்டும்தான் கொலையா? அத்தகைய கொலைகள் இன்று குறைந்து வந்துள்ளன. ஆனால் அகக் கொலை இன்று பெருகி வந்துள்ள நிலையில் அந்தப் பின்னணிக்கும் இவ்வசனம் பொருத்தமாக உள்ளதை நாம் உணர வேண்டும்.

ஒரு மனிதரின் நற்பெயரை வேண்டுமென்றே நாசப்படுத்தும் காரியத்தை ஆங்கிலத்தில் “Character assassination” என்று சொல்வார்கள்.

ஒரு மனிதனில் இறையருளால் இயற்கையாக உருவாகி வரும் ஆளுமை நசிக்கப் படுவதை நான் “Personality assassination” – ஆளுமைப் படுகொலை என்று குறிப்பிடுகிறேன். 
இந்தப் படுகொலையைப் பரவலாகவே நம் சமூகத்தில் பெற்றோர்கள் செய்து வருகிறார்கள்.

பெற்றோர்களில் பலரும் தாம் படாத பாடு பட்டுத் தம் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியிருப்பதாக நினைக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் எப்பொழுதோ இறந்து போய்விட்டதை அவர்கள் அறிவதில்லை!” என்றார் சூஃபி.

43

திருமணத்தினால் உண்டாகும் பயன்கள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். கலகலப்பாக நடந்து கொண்டிருந்த சபைக்குச் சற்று நேரத்தில் சூஃபி வருகை தந்தார். என்ன பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை விசாரித்தார். “திருமணத்தால் உண்டாகும் மேலான பயன் என்ன?” என்று அவரிடம் கேட்டோம்.

“பொதுவாக மனிதனுக்குத் தனது மலஜலம் - கழிவு பற்றிய அருவருப்புணர்வு இருக்காது. திருமண வாழ்வு இந்த மனநிலையை சற்றே விசாலமாக்குகிறது! அதாவது தன் மனைவி மக்கள் என்று சிலரின் மலஜலத்தைப் பற்றிய அருவருப்புணர்வு அற்றவனாக ஒருவனை அது மாற்றுகிறது!” என்றார் சூஃபி.

இந்த பதில் சபையோருக்கு அதிர்ச்சியாகவும் வினோதமாகவும் இருந்தது. இதைத் தொடர்ந்து நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து மூன்று சம்பவங்களை அவர் நினைவு கூர்ந்தார்:

நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க ஒரு தோழர் தனது சிறு வயதுப் பெண் குழந்தையுடன் வந்திருந்தார். நபியைக் கண்டு குதூகலித்த அந்தக் குழந்தை அவர்களை நோக்கித் தாவியது. நபிக்கும் குழந்தைகள் என்றால் பிரியம். அந்தக் குழந்தையை எடுத்து அவர்கள் தம் மடியில் அமர வைத்துக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் அக்குழந்தை சிறுநீர் பெய்யத் தொடங்கியது. அதன் தந்தை பதறுகிறார். தன் குழந்தையை அச்சுறுத்தித் தடுக்க முனைந்தார். உடனே நபி அவரைத் தடுத்தார்கள். சும்மா இருக்கும்படி ஜாடை செய்தார்கள். குழந்தை சிறுநீர் கழிக்கட்டும், அதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று உணர்த்தினார்கள்.

இரண்டாவது நிகழ்ச்சி:

மதினா நகரில் நபி(ஸல்) தனது மஸ்ஜிதை நிர்மாணித்து அதில் தினமும் தனது தோழர்களுடன் தொழுகை நடத்தி வந்தார்கள். அவர்களைச் சந்திக்க பல திசைகளிலும் இருந்து மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். உபதேசங்களும் அதே மஸ்ஜிதில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒரு நாள், வட அரேபியப் பகுதியிலிருந்து பதூயீன் இனத்தைச் சேர்ந்த காட்டரபி ஒருவர் நபியைக் காண வந்திருந்தார். தொழுகையில் அவரும் கலந்து கொண்டார். அப்போது அவருக்குத் திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டிய நெருக்கடி உண்டானது. சட்டென்று தனது அங்கியைத் தூக்கியபடி அப்படியே மஸ்ஜிதில் சிறுநீர் கழித்து விட்டார்! தோழர்கள் அவரைத் தாக்கப் பாய்ந்த போது நபி(ஸல்) தன் தோழர்களை விலக்கிவிட்டு அந்தக் காட்டரபியைச் சிறிது தள்ளி அழைத்துச் சென்று பொறுமையாக அவருக்கு எடுத்துச் சொன்னார்கள், ‘இஃது இறைவனை வணங்கும் இடம். இதனைத் தூய்மையாக வைக்க வேண்டும். இது போல் அசுத்தம் செய்ய்க் கூடாது’.

மூன்றாவது நிகழ்ச்சி:

மதினாவிற்கு ஒரு காட்டரபிக் குழு வருகை தந்தது. ஆளுக்கொருவரை தம் இல்லத்திற்கு விருந்தினராக அழைத்துச் செல்ல வேண்டும் என்று நபி (ஸல்) கட்டளை இட்டார்கள். தாமும் ஒருவரை தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த ஆள் இருப்பவர்களிலேயே மிகவும் வாட்ட சாட்டமாக இருந்தார். பெருந்தீனிக்காரர். வயிறு உப்ப உண்ட பின் அவருக்கு ஒரு அறை தரப்படுகிறது, இரவு தங்குவதற்காக. அவர் உள்ளே படுத்துக் கொண்ட பிறகு யாரோ ஒருவர் வெளியே கொண்டியை மாட்டிவிட்டுச் சென்றுவிடுகிறார். நள்ளிரவில் அந்தக் காட்டரபிக்கு வயிற்றைக் கலக்குகிறது. வெளியே போக நினைத்த அவருக்குப் பெரிய அதிர்ச்சி, கதவு வெளிப்பக்கம் கொண்டி மாட்டியுள்ளது. என்ன செய்வதென்று குழம்பிப் போய் அவர் மீண்டும் படுத்து உறங்குகிறார். நாணல்கள் காற்றில் அசையும் ஓர் அருமையான ஊர் ஒதுக்குப்புறத்தைக் கனவில் காண்கிறார். ஒருவர் தன்னை லேசாக்கிக் கொள்ள தோதுவான இடம்! அவர் சட்டென்று அமர்ந்து பணியைத் தொடங்குகிறார். முழுவதுமாக ஆசுவாசப் படுத்திக்கொண்ட பின் கனவு கலைகிறது. துர்வாடை மூக்கைத் துளைக்கவும் விழித்து எழுந்து பார்க்கிறார். நபியின் வீட்டு அறையைத் தான் அசிங்கப்படுத்தி வைத்திருப்பதைக் கண்டு சாம்புகிறார். தனக்கும் இது பெருத்த அவமானம் ஆகிவிடும் என்று நினைத்த அவர் படாத பாடு பட்டுப் போராடி கதவின் வெளிக் கொண்டியைத் திறந்து அதே வேகத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓடி விடுகிறார். விடியல் தொழுகையை முடித்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் தம் விருந்தினரைக் காண வருகிறார்கள். ஆளைக் காணவில்லை. அவருக்குக் கொடுக்கப் பட்டிருந்த போர்வை மலம் அப்பி நாறிக் கிடக்கிறது. புன்னகை மலர்ந்திருக்கும் பூமுகம் மாறாமல் நபி(ஸல்) அவர்கள் ஒரு வாலியில் நீர் கொண்டு வந்து அந்தப் போர்வையை அலசத் தொடங்குகிறார்கள். அப்போது அங்கே அந்தக் காட்டரபி வருகிறார், தான் மறந்து வைத்து விட்ட தனது போர்வாளை எடுப்பதற்காக. தன் கைப்பிள்ளையின் துணியை ஒரு தாய் அலசுவது போல் நபி (ஸல்) தான் மலம் கழித்த போர்வையைத் துவைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். நபியின் கைகளைப் பிடித்து நெகிழ்ந்தவராக அக்கணமே அவர்களின் தோழராக, சீடராக மாறுகிறார்.


“அல்-ஃகல்க்கு இயாளுல்லாஹ்” – “படைப்புக்கள் (அனைத்தும்) இறைவனின் குடும்பம்” என்பது நபிமொழி.

அந்தக் குடும்பத்திற்கு அவர்கள் தாயாக இருக்கிறார்கள்.

இறைவன் அவர்களை “ரஹ்மத்துல்லில் ஆலமீன்” – “அகிலங்களுக்கெல்லாம் கருணை” என்று புகழ்கிறான்.


’தாயின் முன் குழந்தை போல் நபியின் முன் பிரபஞ்சம்’ என்றார் சூஃபி.

Friday, June 5, 2015

...என்றார் சூஃபி - part 11

40
மூல மந்திரமான திருக்கலிமா தரும் விளக்கங்களை உரையாடிக் கொண்டிருந்தோம்.
அப்போது சூஃபி கேட்டார், “திருக்கலிமாவைக் கொண்டு எத்தனை முஸ்லிம்கள் ஞானம் அடைகிறார்கள்?”

சிந்திக்க வேண்டியதுதான். திருக்கலிமாவை ஏற்றுக் கொண்டிருக்கும் அனைவரும் முஸ்லிம்கள். ஆனால் அதன் மீதான ஆத்ம சாதனைகள் செய்து ஞானம் அடைந்தவர்களையே நாம் ‘இறைநேசர்கள்’ (அவ்லியா) என்று கூறுகிறோம்.

திருக்கலிமா என்பது உன்னதமான ஞான வாசகம். எனினும், அதனை ஏற்றுக் கொள்வதே ஞானம் அடைவதுதான் என்று சொல்ல முடியாது.

எழுத்து என்றால் என்னவென்றே தெரியாத ஒரு குழந்தையின் கையில் பேனாவைக் கொடுப்பது போன்றது அது!

எழுத்து என்பதே தெரியாத குழந்தைக்கு எழுதுவது என்றால் என்னவென்று எப்படித் தெரியும்?

பேனா தன் கையில் இருப்பதாலேயே ஒருவன் தன்னை எழுத்தாளன் என்று பீற்றிக் கொள்வது எவ்வளவு பெரிய அபத்தம்! அப்படி நினைப்பவனுக்கு அறிவு வேலை செய்யவில்லை என்றுதானே பொருள்?

”என் கையில் பேனா இருக்கிறது சரி. ஆனால் எனக்கு எழுதவே தெரியவில்லையே? எழுதுவதற்கு நான் கற்றுக் கொள்ள வேண்டுமே” என்னும் நியாயமான சிந்தனையாவது ஒருவனுக்கு வந்தால்தான் அவனுக்கு அறிவு வேலை செய்கிறது என்று சொல்லலாம்.

“திருக்கலிமாவை ஏற்றுக் கொண்டிருப்பதாலேயே ஒவ்வொரு முஸ்லிமும் மேலான ஆன்மிக விழிப்புணர்வின் தளத்தில் வாழ்கிறான்” என்று கேள்வி-பதில் கூட்டமொன்றில் பிரச்சார பீரங்கி ஜாகிர் நாயக் பேசியதாக நியாபகம். அவரின் பேச்சுக்களில் நான் மிகவும் ரசித்த நகைச்சுவை துணுக்கு இதுவே!

”மாத்திரையைப் பற்றி நாம் அறிந்திருக்கா விட்டாலும் அதை விழுங்கினால் நமக்குள் வேலை செய்யத்தானே செய்யும்” என்று உவமை சொல்லி ’அமல்கள்’ (சமயச் சடங்குகள்) செய்யத் தூண்டப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இது போன்ற மொக்கை உவமைகள் வெறும் தூக்க மாத்திரைகளே அன்றி வேறில்லை! (”Religion is the opium of mankind” என்று கார்ல் மார்க்ஸ் கூறியது சரிதான் என்று ஆக்கிவிடும் அணுகு முறைகளில் இதுவும் ஒன்று.)

உங்கள் கையில் உலகின் விலை உயர்ந்த பேனாவே இருக்கலாம். ஆனால் உங்களுக்கு எழுதத் தெரியாத பட்சத்தில் நீங்கள் பெருமை அடித்துக் கொள்வதில் என்ன அர்த்தம் உள்ளது?

உங்களுக்கு எழுதத் தெரியவில்லை. ஆனால் திருக்கலிமா என்னும் உன்னதமான எழுதுகோலை வைத்துக் காது குடைந்து கொண்டிருக்கிறீர்கள்! இன்னும் மோசமான நிலைமை என்னவெனில், எழுதத் தெரிந்தவர்களைக் கிண்டலடித்துக் கெக்கலிக்கும் போக்கிரித் தனத்திலும் ஊறித் திளைக்கிறீர்கள்.

குறைந்த பட்சம் கிறுக்கிப் பார்க்கும் முயற்சியில்கூட நீங்கள் இறங்கவில்லை. பேனாவின் மூடியைக் கழற்றிப் பார்க்கக்கூட இல்லை.

ஆனால், பேனாவை ’அதன் தூய நிலையில்’ அப்படியே பாதுகாத்து வருவதாக போலி மகிழ்ச்சியில் போதை ஏறிப் பிதற்றுகிறீர்கள்.

திருக்கலிமாவின் வாசகத்தை மிக எளிதாக நீங்கள் மனனம் செய்துவிடலாம். அதன் வார்த்தைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், அதனாலேயே உங்கள் இதயத்தில் முஹம்மதின் ஞானம் வந்துவிடாது. அதற்கு அகப்பயிற்சிகள் அவசியம்.

“நம்மில் சிரத்தையாக முயல்வோரை நமது பாதைகளில் வழிநடத்துவோம்” (29:69) என்பது இறைவாக்கு.

“திருக்கலிமாவை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள். இனி, திருக்கலிமா உங்களை ஏற்றுக் கொள்வதற்குப் பாடுபடுங்கள்” என்றார் சூஃபி.

41

“புனித இரவு வருகிறது. அதில் நாம் என்னென்ன வழிபாடுகள் செய்ய வேண்டும்?” என்று சகோதரர் ஒருவர் கேட்டார். தொடர்ந்து பலரும் பலவிதக் கருத்துக்களை முன்வைத்துப் பேசிக் கொண்டிருந்தோம்.

உபரித் தொழுகைகள், சமயச் சொற்பொழிவுகள், இறைநாம ஜெபங்கள், திருமறை ஓதல்கள், இவை எதற்குமே ஆதாரங்கள் கிடையாது என்னும் தர்க்க வாதங்கள். இப்படியாக பேச்சு வளர்ந்து கொண்டிருந்தது.

புன்னகைத்துக் கொண்டிருந்த சூஃபி பின்வரும் திருவசனத்தைச் சப்தமாக உச்சரித்துப் பேசத் தொடங்கினார்:

“ஹிய ஹத்தா மத்லஇல் ஃபஜ்ரு” (97:5)
(“சாந்தி.
அது, வைகறையின் உதயம் வரை”)

இரவு முழுவதும், விடியல் வரை, உங்கள் மனம் சலனமற்று சாந்தமாக இருக்கும் எனில், எந்த இரவு ஆனாலும் அந்த இரவு உங்களுக்குப் புனித இரவுதான்!

”சலாம்” (பேரமைதி) என்பது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்று. அதாவது, அவனின் திருப்பண்பு அது.

இறைப்பண்பினை இரவெல்லாம் நீங்கள் அனுபவித்திருப்பீர்கள் எனில் அந்த இரவு புனிதமானது அல்லாமல் வேறு என்ன?

அத்தகைய இரவினைச் சாதாரணமான இரவு என்று சொல்வது இறைவனையே அவமதிப்பதாகும் அல்லவா?

அதே சமயம், மற்றவர்களுக்கு அது புனிதமான இரவாக இருக்க வேண்டும் என்பதில்லை.
நபி (ஸல்) அறிவித்துத் தந்திருக்கும் புனித இரவுகளின் பின்னணியில் அவர்களின் ஆன்மிக அனுபவங்கள் இருக்கின்றன. அந்த அனுபவ சமுத்திரத்தில் இருந்து ஒரு துளியையாவது ஒரு முஸ்லிம் அனுபவிப்பான் என்னும் கோணத்தில்தான் அந்த இரவுகள் பொதுவாக அனைவருக்கும் புனித இரவுகள் என்று சொல்லப் பட்டுள்ளன.

எவன் தன் மனத்தில் மிருக உணர்வுகள் மிகைத்தவனாக வாழ்கிறானோ அவனுக்கு மனித இரவுகளே வாய்க்காது எனும்போது புனித இரவுகள் ஏது?

புனித இரவில் என்ன செய்வது என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

இன்னின்ன வழிபாடுகள் செய்யுங்கள் என்று நபி(ஸல்) சொன்னவை எல்லாம் புனிதத் தன்மையை உணர்ந்து கனிந்த நபித் தோழர்களிடம் என்பதைக் கவனியுங்கள். ஒளு (அங்க சுத்தி) செய்தபின் தொழவேண்டும் என்பதைப் போன்றது இது.


ஏதாவது செய்து அதன் புனிதத்தைக் கெடுத்து விடாதீர்கள். அதன் புனிதத்தை உணர்ந்து கொள்ளுங்கள். அதுவே முதலில் முக்கியமானது.” என்றார் சூஃபி.