Sunday, February 10, 2019

விடைத்தாளில் சுழிகளிடும் சிவப்பு மைப் பேனா


      மூன்று வகுப்புக்களிலிருந்து வந்த விடைத்தாள் கட்டுகள் என் மேசை மீது கிடந்தன. அக மதிப்பீட்டுத் தேர்வுகள் தொடங்கி இது நான்காம் நாள். ஒவ்வொரு துறையிலும் அவரவர் ”கோர்” பாடங்களில் தேர்வெழுதிக் கொண்டிருப்பார்கள். வகுப்புகள் இல்லை. இவற்றைத் திருத்த ஆரம்பிக்கலாம் என்று அமர்ந்தேன். வினாத் தாளையும் விடைக் குறிப்புக்களையும் ஓரிரு முறை பார்த்துவிட்டு ஒரு கட்டைப் பிரித்தேன். தாள்களை ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யத் தொடங்கினேன். 

      ஒருகட்டத்தில் துறையில் நான் மட்டுமே அமர்ந்திருந்தேன்! பி.எச்.டி ஆய்வாளர் வந்தார் என்று இரண்டு பேராசிரியர்கள் அவருடன் போய்விட்டார்கள். பொது ஸ்டாஃப் ரூமுக்குச் சிலர் சென்றிருக்கக்கூடும். எப்படியோ, நான் மட்டுமே அமர்ந்து ஒரு ’ஜின்’னைப் போல் பேப்பர் திருத்திக் கொண்டிருப்பதை உணர்ந்த தருணத்தில் சற்றே திகிலாக இருந்தது. வாசலில் ஒரு நிழலாட்டம் அசையக் கண்டு ஏறிட்டுப் பார்த்தேன். (’அணங்குகொல்?’... இல்லை). நெட்டென வளர்ந்த மாணவன் ஒருவன் வந்தான். செல்வம் சாரிடம் நேற்று வாங்கிய ஐந்நூறு ரூபாயைத் திருப்பித் தரவேண்டும் என்றான். (சார் சார் என்று நாம் அழைப்பது ஆங்கிலம் என்றா நினைத்தீர்கள்? நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம் என்னும் தத்துவத்தைக் குறிக்கும் அர்த்தமுள்ள தூய தமிழ் வார்த்தை ஐயா அது!). கொடுத்து விடுவதாகச் சொல்லி வாங்கிக்கொண்டேன். மீண்டும் பகுதி-1 – தமிழ் - தாள்-4 விடைத் தாள்கள் என்னும் சுழலுக்குள் மூழ்கினேன். ஒரு முப்பது தாள்களைத் தாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். விடைத்தாளில் சுழிகளிடும் சிவப்பு மைப் பேனா ‘ஆட்டோமேட்டிக்’ மோடில் இயங்கத் தொடங்கியிருந்தது. ஒரு மதிப்பெண் கேள்விகள் இருபது. ’டிக்’ போடுவதாகச் சாய்மானக் கோடுகள் இருபது இழுக்க வேண்டும், அசுர வேகத்தில். ஏறத்தாழ எல்லோருமே இதில் இருபதுக்கு இருபது. (’இத மட்டும் எப்படி நல்லாப் படிக்கிறானுங்கன்னு தெரியல’). நேர்க்கோடுகளின் எல்லை முடிந்தது. அடுத்து ஆரம்பமாகும் பகுதி-ஆ பகுதி-இ நெடுகிலும் சுழிகள்.

      வெளியே சென்றிருந்த செல்வம் சார் வந்துவிட்டார். எம்மே வகுப்பிலிருந்தார்.  அவரிடம் பணத்தை ஒப்படைத்துவிடலாம் என்றெண்ணி எழுந்து சென்றேன். 

      ”ஒரு பையன் வந்தான. ஐந்தூரு ருபய தந்தனா” என்றேன்.

      கலவரமாக என் முகத்தைப் பார்த்தார். நான் பேசியது அவருக்குச் சட்டென்று புரியவில்லை. தலையை உதறிக்கொண்டு நான் திரும்பவும் சொன்னேன்: “ஒரு பையன் வந்தான். ஐநூறு ரூபாய் தந்தான். காலைலேர்ந்து பேப்பர் திருத்தறேனா, பயலுக எழுதியிருக்க மாதிரியே பேசிட்டேன். தமிழே மறந்துரும் போலிருக்கு சார்”

      நினைத்துப் பாருங்கள். பத்துப் பதினைந்து பக்கங்களுக்கு ஒரு பிரதி முழுக்க இப்படியே சிதைவுத் தமிழாகப் போய்க்கொண்டிருந்தால் நீங்கள் படிப்பீர்களா? அதிலும் ஒவ்வொரு கேள்விக்கும் எல்லா வினாக்களையும் கருத்தில் கொண்டு, பாடத்திட்டத்தின் ஐந்து அலகிலிருந்தும் குறிப்புக்கள் எடுத்து ஒரு விடையை உருவாக்கி ‘இந்தாப் பிடி’ என்று தந்தால்?  உதாரணத்துக்கு ஒரு பத்தி காட்டவா?

      ”பதினென் கனக்கு நுல்கள் மிகவும் தமிழுக்குப் புலவார்கள் சிரப்புடன் எளுதிய ஓன்றாகும். அவர்கலின் கர்ப்பனை நயம் இலக்காண நுல்களும் இளக்கிய வலங்களும் தமிழர்கள் பெறுமை கொல்ல வேண்டிய வந்தன. புகழேந்தி நடாகம் எழுதியவர் யார் கவி காமு ஷரிப் நல்ல நடாகம் ஆசிரியோர். பண்டிய நட்டில்  கலாம்பாகம் பேட்டி நடத்தன. செல்பேன் குறித்து சுவபீ கூறுவன மூன்றாம் உலாகப் பேர் விவசாயம் அலிவின் பிடியில் உளாது. முன் தேன்றி மூத்த குடி கட்டுரை கூர்வன யாவை. வாளையாபாதி, குண்டாலகோசி, மணிமோகலை ஆகிய கப்பியங்கள் படைக்கப் பாட்டன. இலக்கிய வராலாராறு சொல்வது என்ன பகுதி-ஆ 14-அ உரைப்பன யாவை என்பாது தமிழுக்குத் தெண்டு செய்த்தான் சாவதில்லை. பறநானூரு புலேவர்கள் இயம்பும் கருத்து அவர்கள் யவாரும் அரசரிடம் பாரிசு பொற படினோர்கள். அரசன் நடுஞ்சுழியன் அவர்கலுக்கு யானை, குதுறை, புனை, நய் ஜுவ்லரி பொன்றா நிரையா பரிசுகள் கெடுத்தான். சுபவெ, வீ.இரையன்பு கருத்துக்கள் நல்லா எளுதி நட்டு மக்காள்க்கு புதிய சிந்தானை சொன்னோர்கள். இணையம் என்பாது தமிழுக்கு பெறிய்ய வளார்ச்சி சொய்துள்ளது. கிகா பைட் மெகா பைட் வசாதிகள் உளாது. அதில் தமிழர்கள் மலோசிய கனட வெலினாடு இருந்து தமிழுக்கு நிரையா கனிப்பொறி ஊளே ஏட்ரினார்கள். செம்முழியான தமிழ் மொலியாம் நிராயா பன்புகாள் உள்ளான. வலைப்பூக்கள் என்பாதும் உள்ளன. நாம் தாய் மொளியாம் தமிழுக்கு தொன்று செய்த்தான் சவாதில்லை...”

      இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்? என்ற பேருவகை நிலையை அனுபவிக்காமல் எப்படி ஐயா நான் இந்தப் பிரதியை அணுக இயலும்? படித்துப் பார்க்காமல் திருத்தலாம் என்றாலும் பழக்கமில்லையே என் செய்வேன்? (நோமென் நெஞ்சே! முறை அறிக: இதுக்கு ஒரு டிக்கு. ஐந்துக்கு இரண்டரை மதிப்பெண். அவனுக்கும் மகிழ்ச்சி. நமக்கும் மகிழ்ச்சி. கபாலிக்கும் மகிழ்ச்சி. மேலாண்மையில் இதனை வின்–வின் ஸ்ட்ரேட்டஜி என்கிறார்கள். அதவாது ”இருவீர் வேறல்”.)

இப்படியே எல்லோருக்கும் பேசாமல் ’பாஸ் போடுங்க சகோ. அப்புறம் பாருங்க… அடடே! பேப்பர் கடைசியில பாத்தீங்களா? ’தமிழ் வல்க’ன்னு வேற எழுதீருக்கானே? மொழிப்பற்று உள்ளவன் போல. போனஸ் மார்க் குடுங்க சகோ.

விளையாடாதீங்க. இப்படியே போச்சுன்னா ‘மெல்லத் தமிழினி சாகும்ங்கறது பேதையின் வார்த்தை அல்ல மேதையின் வார்த்தைன்னு ஆயிடும் போல.

இப்ப என்ன ஆயிடுச்சுன்னு நொந்துக்கிட்டிருக்குறீங்க? தமிழ்லதானே எழுதீருக்கான்? அதப் பாராட்டனுமா இல்லியா? நாவல்ல சிறுகதைகள்ல பேசுறாப்லயே எழுதுனா வட்டார வழக்கு – அட்டகாசமா எழுதீருக்காரு ஆகா ஓகோன்னு பாராட்டறீங்க?

இது வட்டார வழக்கு இல்லிங்க. தமிழ்ச்சிதைவு.

நீங்க ஏன் இத தமிழ்ச்சிதைவுன்னு பாக்குறீங்க? அதுனாலதானே மண்ட காயுது? கொஞ்சம் மாத்தி யோசிச்சுப் பாருங்க சகோ. சிதைவுத் தமிழ். அப்பிடிப் பாருங்களேன். இப்ப இது ஒரு இலக்கியப் பிரதி ஆயிடுதுல்ல. ரசிச்சுப் படிக்கலாமில்ல.

என்னது? இலக்கியப் பிரதியா? இதுவா?

ஆமா. இப்ப என்ன செஞ்சிக்கிட்டிருக்கீங்க நீங்க? நம்ம உரையாடல ஒரு சிறுகதையா எழுதிக்கிட்டிருக்கீங்க. அழகியலான தலைப்பு சகோ, ‘விடைத்தாளில் சுழிகளிடும் சிவப்பு மைப் பேனா’. கவித்துவமா இருக்கு. உங்க சிறுகதைக்கான கருவே பையன் எழுதியிருக்கிற இந்த ஆன்சர்ஸ்தானே? அத நீங்க மேற்கோள் காட்டுறீங்கள்ல. அது இல்லாட்டி இந்தச் சிறுகதையே இல்ல. அப்டீன்னா, இதுவும் ஒரு இலக்கியப் பிரதி ஆயிட்டுதுல்ல?

இது வெறும் மேற்கோள்தானே? அதுவும் தப்புந் தவறுமா எழுதீருக்கான்னு காட்டுறதுக்குத்தான் கோட் பண்றேன். இதுவே எப்படி இலக்கியப் பிரதி ஆகும்?

அப்படியில்ல. சரியின் பிரதி சரியான தமிழில் இருக்கும். தவறின் பிரதி தவறான தமிழில்தானே இருக்கும்?

அது இலக்கியம் ஆகுமா?

ஏன் ஆகக் கூடாது? சரியின் இலக்கியங்கள் இருக்குறப்ப தவறின் இலக்கியங்களும் இருக்கலாம்ல? இரண்டுக்குமே பிரபஞ்சத்துல இடம் உண்டுல்ல?

இருந்தாலும். இது மாதிரியான தமிழ்ச்சிதைவ..

இல்ல சகோ. உங்க பண்டித அகம்பாவத்துல பேசாதீங்க. திரும்பத் திரும்பத் தமிழ்ச்சிதைவுன்னு சொல்லிக்கிட்டிருக்கீங்க. அது சிதைவுத் தமிழ்.

சரி, சரி. இது மாதிரி சிதைவுத் தமிழ வச்சு முழுசா ஒரு சிறுகதையோ நாவலோ எழுதினா படிக்க முடியுமா சொல்லுங்க?

ஏன் முடியாது? அதுவும் ஒரு இலக்கியப் படைப்பாத்தான் இருக்கும். அப்படி ஒத்துக்கலன்னா நீங்க எப்பவோ தேங்கிப் போயிட்டீங்கன்னு அர்த்தம். மொதமொதல்ல வட்டார வழக்குன்னு தமிழ்ல எழுதப்பட்டப்ப எப்படி இருந்திருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நாவல் சிறுகதைங்கற பேர்ல கட்டுரைகள் எழுதிக்கிட்டிருந்த தமிழறிஞர்கள் கோபப்பட்டாங்க. ஆனா இன்னிக்கு அவங்களோட இலக்கிய முக்கியத்துவம்னு ஏதாவது இருக்கா? மதுரத் தமிழ், கொங்கு தமிழ், தூத்துக்குடி தமிழ், நாஞ்சி நாட்டுத் தமிழ், சென்னைத் தமிழ்னு வட்டார வழக்குகள் இருக்கு. பிராமணத் தமிழ் மாதிரியான சமூகத் தமிழுங்களும் இருக்கு. அதையெல்லாம் வச்சு முழுசாவே கதைகள் எழுதுறாங்க இப்ப. இமையம் எழுதுனார்ல ‘எங் கத’ன்னு. பிரதி முழுசுமே வட்டார வழக்குதான். அதையே அம்பது வருசத்துக்கு மின்னாடி மூவா எழுதீருந்தார்னா ’என் கதை’ன்னு எழுதீருப்பாரு. படிக்க முடியுமா சொல்லுங்க? நீங்களே ஒருதடவை சொன்னீங்க, மூவா சரியான மொக்க ப்ளேடுன்னு.

ம்ஹும். நீங்க சொல்றத என்னால முழுசா ஏத்துக்கற முடியல. வட்டார வழக்குங்கறது நாடக வழக்குன்னு தொல்காப்பியரே சொன்னது. வட்டார வழக்குக்கு அகராதியெல்லாம் வந்திருச்சு. அத ஒவ்வொரு பகுதீலயும் மக்கள் பேசுறாங்க. அதுவும் இதுவும் ஒன்னாயிடுமா? இந்த மாணவன் இப்படிப் பேச மாட்டான். ஆனா இப்படி எழுதுறான். அதுவும் சுயாதீனமா இப்படி எழுதல. தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லைன்னு படிச்சத, அப்படி எழுதறதா நெனச்சிக்கிட்டுதான் தமிழுக்கு தெண்டு செய்த்தான் சவாதில்லைன்னு எழுதறான்…

பாத்தீங்களா, அதச் சொல்றப்பவே நமக்குச் சிரிப்புப் பொங்குது. இப்படிக் குலுங்கறீங்க. இத இலக்கியப் பிரதி இல்லேன்னு சொன்னா எப்படி? இது ஒரு வகைல மொழியைக் கையாள்றதுல உள்ள மனச்சிதைவின் வெளிப்பாடுன்னு பாக்கலாம். அதுவே மொழியைச் சிதைத்து ஒருவகைச் சிதைவு மொழியா வெளிப்படுது. எனவே இது சிதைவுத் தமிழ் ஆகுது. கொலாஜ் ஓவியம்னு ஒரு வகை இருக்குல்ல, அது மாதிரி. இது மொழியால் அமைந்த கொலாஜ் ஓவியம். ஓவியத் துறைல அத ஒரு ஜானரா ஏத்துக்கிட்டாங்க. இலக்கியத்துலயும் அப்படி நாம ஏத்துக்கலாம். சிதைவுத் தமிழ்ங்கறது ஒரு புது ஜானர்.

ஆனா, இது சுயாதீனமா எழுதப்படல… வட்டார வழக்கு மாதிரி பல பேர் ஒன்னா பேசுற பாணி இல்ல இது.

அதுதாங்க இதோட சிறப்பே. இது ஒருவகைல சர்ரியலிச வெளிப்பாடு. மீ-மெய்ம்மியல் பிரதி இது. இன்டிவிஜுவாலிட்டி இருக்குப் பாருங்க. இவன் எழுதற மாதிரி இன்னோருத்தன் எழுத மாட்டான். இது நகல் இல்ல. இப்ப, இவனுக்கு நீங்க எவ்ளோ மார்க் போட்டிருக்கீங்க? பதினஞ்சா? சரி. அதிக மார்க் வாங்குனவன் எவ்ளவு?

அறுபத்தொன்னு.

அவ்ளோ மார்க் எதுனால போட்டீங்க. செந்தமிழ்ல செப்பீருக்கான்னு. இல்லியா? நடூல நடூல செய்யுள் வரிகள அடி பிறழாம எழுதீருப்பான். உங்களுக்கு அப்டியே உச்சி குளுந்துருக்கும். பத்துக்கு ஒம்போது குடுப்பீங்க. அறுபது எழுபதுன்னு வாங்குவான். சரி இருக்கட்டும். காலைலேர்ந்து பேப்பர் கரெக்‌ஷன் பண்றீங்க. அப்பப்ப ஒருத்தருக்கொருத்தர் அதுல சிலத படிச்சுக்காட்டிப்பீங்கள்ல? எந்த மாதிரி பேப்பர்ஸ படிச்சுக் காட்டுவீங்க?

இது மாதிரிதான். தப்புந் தவறுமா எழுதுறானுங்களே, அந்தப் பேப்பர்கள.

எல்லோரும் சிரிப்பீங்கள்ல?

வாஸ்த்தவந்தான்

நல்லா எழுதீருக்கிற பேப்பர படிச்சுக்காட்ட மாட்டீங்க. பேசாம டிக்கடிச்சு மார்க் போட்டு சத்தமில்லாம வச்சுருவீங்க. ஏன்னு யோசிச்சீங்களா?

ஏன்னு நீங்களே சொல்லுங்க.

ஏன்னா அது ஒரு செத்தப் பிரதி! அலங்காரமான மம்மிஃபிகேஷன். அது ஒரிஜினல் இல்ல, நகலு. மூளைய ஜெராக்ஸ் மெஷினாக்கி வச்சிருக்குற ஒருத்தன் வெளித்தள்ளுனது. அது இலக்கியப் பிரதி அல்ல. அதை நாம கொண்டாட முடியாது. அது ஒரு பிணம். சீக்கிறமாப் பொதைக்குற வழியத்தான் பாப்போம்! உரிய மரியாதையோட, அறுபது எழுபதுன்னு மார்க் போட்டு. ஆனா இந்த சிதைவுத் தமிழ்ப் பிரதி இருக்கே, இது ஊனமா இருந்தாலும் உசிரோட இருக்கு. ஆனா, உங்கள்ட்ட உசிருக்கு மரியாதை இல்ல. வெறும் ஏழெட்டு மார்க்தான் குடுப்பீங்க. அவன முட்டாள்னு நாலு பேர்க்கு மின்னாடி நிறுத்துவீங்க. அவ்வளவு வித்யா கர்வம் உங்களுக்கெல்லாம். அறுபது மார்க் வாங்குனவன் தமிழுக்குச் செய்ற பங்களிப்பு என்னா சகோ? ஒன்னுமேயில்ல. ஆனா இவன் இருக்கானே, தமிழிலக்கியத்துக்கு ஒரு புது வகைய, ஜானர தந்திருக்கான். தமிழின் எல்லைகள விஸ்தாரமாக்குறான். இவன நீங்க பாராட்ட வேணாமா? இன்னோன்னையும் கவனிங்க. இப்ப செம்மொழின்னு சொன்னா அதுக்குன்னு சில தன்மைகள் இருக்கணும்னு ஒரு பட்டியல் இருக்குல்ல?

ஆமாம். அதுவும்தான் சிலபஸ்ல வச்சிருக்கம். கலைஞர் சொன்னது, பாவாணர் சொன்னதுன்னு ஐநா சப சொன்னதுன்னு சில பட்டியலுங்க இருக்கு. அதையும் கேட்டிருக்கம் எக்ஸாம்ல. தொன்மை மென்மைன்னு எதுகையா சில பண்புகளுண்டு. ஒருத்தன் ’பொன்மை’ன்னு எழுதீருக்கான். தங்கப் பஸ்பம் போல்ருக்கு. ஸ்வர்ணாஞ்சனம்.

யெஹ்ஹே… பகடீ..? ம்ம்? செம்மொழிப் பண்புகள்ல தாய்மைன்னு ஒன்னு இருக்குல்ல. அது தமிழுக்கு எப்டி பொருந்துது?

என்ன, மலையாளம் துளு தெலுங்கு கன்னடம், இது மாதிரி திராவிட மொழிகள்லாம் தமிழ்லேர்ந்து பொறந்துச்சு. தமிழ்தான் அதுக்கெல்லாம் தாயி. அதனால தாய்மைப் பண்பு பொருந்துது.

அதெல்லாம் பொறந்து ஆயிரம் வருஷமாச்சே. இப்பத் தமிழுக்குத் தாய்மைப் பண்பு இருக்கா இல்லையா? இப்ப ஒரு புது மொழி அதுலேர்ந்து உருவாகணும்ல? இந்தா உருவாயிக்கிட்டிருக்குல்ல, இவன் எழுதுறதுல.

ஆனால் இது டார்வினோட கூர்தலறக் கோட்பாடு தலகீழாவுற மாதிரி. ஒரு தமிழ்க்குரங்கு உருவாகிக் கொண்டிருக்கு.

பொசுக்குன்னு கோபப்படுறீங்க பேராசிரியர். உடம்புக்கு ஆகாது பாத்துக்கங்க. குரங்கோ இல்ல அரவிந்தர் சொன்னாப்ல சூப்பர்மேனோ, இப்ப ஆரம்ப நிலையிலயே அத நீங்க முடிவு செய்ய முடியாது. மலையாளமோ துளுவோ கன்னடமோகூட ஆரம்பத்துல தப்புகளின் அபத்தத் தொகுதியாதான் இருந்திருக்கும். அதுவே வலுப்பட்டுக் காலப்போக்குல புது மொழியாயிடுது. அதாவது தமிழோட பிள்ளையாகி வளந்து நின்னு பேர் சொல்லுது. இந்தச் சிதைவுத் தமிழும் ஒரு காலத்துல அப்டி வளரலாம்ல? அதுக்கான சாத்தியம் இருக்கு. இப்ப இப்படி எழுதுறவன் ஒவ்வொரு வகுப்புலயும் ஐந்தாறு பேரு இருப்பானா? இது கொஞ்சம் கொஞ்சமா கலெக்டிவ் அன்காஷியஸ்ல பரவி அங்கிருந்து கலெக்டிவ் கான்ஷியஸுக்கு வந்து பிறகு ஒரு புது மொழியாகவே வெளிப்படலாம். அப்ப அதுல பண்டிதர்ங்க அறிஞர்ங்க எழுத்தாளர்ங்க கவிஞர்ங்கள்லாம் உருவாவாங்க. பேராசிரியர்களும் வருவாங்க. அப்பவும் அந்த மொழிய செதச்சு ஒருத்தன் எழுதுவான். ‘தமிழுக்கு தெண்டு செய்த்தான் சவாத்தில்லை’ என்று எழுதியவனுக்கு அறுபத்தஞ்சு மார்க்கு கொடுப்பீங்க அப்ப. தப்பா எழுதப்பட்ட பிரதிய சிவப்பு மைப் பேனா சுழியிடும். யாரு கண்டா, தப்புன்னு சுழிச்ச அந்த வரி ‘தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லை’ன்னுகூட இருக்கலாம்!

உஸ்ஸ்... சிதைவுத் தமிழ் வால்க, வெழ்க!... போதுமா சகோ? அதிருக்கட்டும். சங்க இலக்கியம் பத்திக் கேட்டா அதுல சினிமா பாட்டெல்லாம் எழுதி வய்க்கிறானுங்களே, அதுவும் இலக்கியப் பிரதிதானா?

அப்டியா? வெரி இன்ட்ரெஸ்டிங். இப்ப கைவசம் அப்டி ஏதாவ்து பேப்பர்ஸ் இருந்தா காட்டுங்களேன் பாப்பம்.

ம்ம்… இந்தக் கட்டுலன்னு நெனக்கிறேன்… இளங்கலை இரண்டாம் ஆண்டு... பிஎஸ்சி.. இந்தா இருக்குப் பாருங்க, கடசீல ரெண்டு கேள்விக்கு என்னா எழுதீருக்கான் பாருங்க.

29) தமிழில் இணைய தளம் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் என்ற படம் மூலம் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. கல்விச் சோலை, தினகரன், தினமணி போன்ற நாளிதழ் கள் இணையத ளத்தில் தமிழில் உள்ளது. கொள்ளையில தான் அடி காச்சிறுக்கு தென்னமரம் கள்ளு இருக்கு அது போத தருமா ஒத்தையில தான் அடி காச்சிறுக்கு நெல்லுமரம் கிள்ளிப் பரிச்சா அது போத கண்ணீர் விடுமா? வாழப்பழம் பழுத்திருக்கு ஒருபக்கம் சாஞ்சிருக்கு சாஞ்சாலும் சாஞ்சுவிடும் தாங்கி கொள்ளடா ஆலமரம் விழுதிருக்கு ஆடி காத்து பொழுதிருக்கு – ஒன்ன தொடத்தான்.

மின்னஞ்சல் என்பது தற்காலத்தில் உருவாக்கப்பட்ட இணைய சேவை அல்ல. 1990-களில் உருவாக்கப்பட்டது…

ம்ம்...ரைட்டு. இந்தப் பாட்ட நீங்க சுழிச்சு வச்சிருக்கீங்க. நல்லாத்தானே எழுதீருக்கான். குறிப்பா, நாளிதழ் கள் இணையத ளத்தில்-ங்கற பகுதி எனக்கு ரொம்ப ஈர்ப்பா இருக்கு சகோ. செய்தித்தாள்கள் ஒருவித அஞ்ஞான போதையத்தான் மக்களுக்கு ஊட்டுதுங்கற விஷயத்த நாளிதழ் கள்-ன்னு தனியாப் பிரிச்செழுதி உணர்த்தீருக்கான். இது கட்டுடைப்பு – டீ கன்ஸ்ட்ரக்‌ஷன் – உத்தி இல்லையா? அப்புறம் இணையத ளத்தில்-ன்னு வர்ற பகுதியிருக்கே, அதோட சின்ட்டாக்ஸ கவனிச்சீங்களா? ஒரு செய்யுளடியின் நறுக்கு மாதிரி இல்ல? இத எப்பிடி சகோ உங்களால ரசிக்காம இருக்க முடியுது? ஆச்சரியம்தான். அப்புறம், ’நெல்லுமரம்’ ஒரு சொல்லாடல் பாருங்க. இலக்கண ரீதியா நெல்லுங்கறது புல்லு வகதான். ஆனால், புல்லு வகயான தென்னைய மரம்னு சொல்றது வழக்கம்தானே. அதுமாதிரின் நெல்லுமரம்னு சொல்றான். இதுல ஒரு நாட்டுப்புறத் தொனி இருக்கு. சூப்பர். இது சினிமாப் பாட்டா?

தெரியல. அடுத்த கேள்விய பாருங்க. அதுல மெர்சல் படப் பாட்டு எழுதீருக்கான்.

26) புறநானூறு பாடல்கள் தமிழ் பெருமைகளை எடுத்துரைப்பது மட்டுமல்லாமல் வாழ்வியலையும் எடுத்துரைக்கிறது. மேலும் தமிழின் பெருமையை இப்பாடல் கூறுகிறது. ஆளப் போறான் தமிழன் உலகம் எல்லாமே. வெற்றி மகன் வழிதான் இனிமே எல்லாமே. வீரன்நா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே வாயில்லா பாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே சொல்லி சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான். நெஞ்சில் அள்ளி காத்தில் நல்ல தேன் தமிழ் தெளிப்பான். இன்னும் உலகம் எழ சங்கத் தமிழ்ப் பாட பச்சத் தமிழ் உச்சப்புகழ் ஏர், சீர் வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம். வாராயோ வாராய் நீ வம்பா வந்த சுளுக்கெடுப்போம். தமிழன் தா எந்நாளும் சொன்னாலே திமிரேறும் காற்றோடு கலந்தாலும் அது நாம அடையாளம்.

மேலும் புறநானூற்று பாடல் சாதியை ஒழிக்க வேண்டும் எனவும்...

அப்பா... எப்படி மனப்பாடம் ஆயிருக்கு பாத்தீங்களா சகோ? இதுதான் சினிமாப் பாட்டோட பவர்ங்கறது. ஊடக ஆற்றல். மல்டி மீடியா இல்லியா? ஒரு தடவ கேட்டான்னாலே பச்சுன்னு மனுசுல அப்பிக்கிரும். ஏயார் ரகுமான் மியூசிக்தானே?

இதையும் ஒரு இலக்கியப் பிரதின்னு சொல்வீங்களா, புறநானூற்றுக்குள்ள மெர்சல் பாட்டு வர்றத?

இல்லையா பின்ன? இரண்டு வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த இலக்கியப் பிரதிகளை ஊடாட விடும்போது மூன்றாவதாக ஒரு இலக்கியப் பிரதி கிடைக்கும்னு உங்களுக்குத் தெரியாதா? அதுவும் கால வித்தியாசம் எவ்ளவுக்கு எவ்ளவு அதிகமா இருக்கோ சிறப்பான இலக்கியப் பிரதி உருவாகும். இதை நான் அப்டித்தான் பாக்குறேன். சரி, நீங்க கரெக்‌ஷன தொடருங்க. நான் கெளம்புறேன்.

சகோ சென்றபிறகும் வாசலையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். மேற்கொண்டு திருத்தப் பணி ஆற்ற மனநிலை இல்லை. தாள்களை மடித்து லப்பர்பேண்ட் மாட்டி மேசை மீது வைத்தேன். பெரிதாகக் கொட்டாவி வந்தது. கைகளை முறுக்கிக்கொண்டு ஆசுவாசமானேன். கண்ணைக் கட்டியது. லேசாகக் கண்களை மூடித் தலையைப் பின்னுக்குச் சாய்த்தேன். நினைவுப் புலத்தில் அகவுலக மாணவர்கள் எழுதிய தேர்வுத் தாள்கள் படபடத்தன…

கன்னகியும் கேவலனும் திருமணம் நடந்தது. ஊர் பூம்புகார் என்பதில். அவர்கள் குடும்பம் பெரியா பணக்காரர்கள். தடபுடலாக திருமாணம் நடந்தது. யானை மீது ஊர்வலம் போனான் கோவலன். கன்னாகி உடம்பு பூரா நகை நட்டுகள் ஒட்டியானம் காசுமாலை வைரம் வைட்டூர்யம் முத்து பவலம் எல்லாம் நகயும் போட்டிருந்தாள். அவள் அழகு தேவதை போல் காச்சி அழித்தாள். அவளை வர்ணிக்க தமிழில் வார்த்தயே இல்லை என்று கம்பர் கூறுகிறார். திருமண விருந்தில் அரசர் முதல் ஆண்டி வரை ஊரில் உல்லோர்கள் மக்காள் எல்லாரும் வந்தன. எட்டுப்பட்டி ஜமீன்களும் வந்தானர். வெல்லைக்காரர்கள் அமெரிக்க அதிபர்கள் எல்லாரும் வந்தானர். அவ்வளவு சிறப்பாக கல்யானம் நடந்தது. அன்று இரவு கோவலனும் கன்னகியும் முதலிரவு என்றா. ஏழு மாடிக்கு மேலே மேகம் மிதக்கும் இடத்திலே அவார்கள் இருந்தன. அப்போது கன்னாகி மிகவும் அளகாக இருந்தால். வெட்கத்தால் அவளின் முகம் சிவப்பாக மாரியது. பல் முத்து போல் ஜொலித்தது. அவலைக் கோவாலன் காதல் ரசம் சொட்ட சொட்ட வர்னித்தான். ‘நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம். அலகாய் உடைந்தேன் நீயே அர்தம். யே என் தலக்கேருற பொன் தடம் போடுற என் உயிர் ஆடுற என்னாடி மாயாவி நீ.  ஏ கோலி சோடவே, என் கரிக் கொழம்பே, உன் பப்பி குட்டினான் டேக்மீ டேக்மீ...

ஒவ்வொரு வார்த்தையின் மீதும் சிவப்பு மைப் பேனா சுழித்துக் கொண்டே போகிறது. இதற்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பது? ஜீ சொன்னதுதான் கரெக்ட். ஒரு டிக் போடுவோம். பத்துக்கு ஆறு. கபாலிக்கு மகிழ்ச்சி. மாரிக்கு டபுள் மகிழ்ச்சி. ச்செ.. தலையை உதறிக்கொண்டு எழுந்தேன். ஜிப்பைத் திறந்து, பையிலிருந்து வாட்டர் ஃப்ளாஸ்க்கை எடுத்தேன். தொண்டைக்குள்ளே தண்ணீர் குளுமையாக இறங்கிச் சென்று வயிற்றில் விழுவதை துல்லியமாக உணர முடிந்தது. நீரருந்தி மூன்று மணிநேரம் ஆகிவிட்டிருந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது.  வீட்டுக்குக் கிளம்பலாமா என்று யோசித்தபடியே மீண்டும் கண்கள் அயரச் சாய்ந்தேன். அடுத்த பத்து மதிப்பெண் கேள்விக்கான விடையைத் திருத்தத் தொடங்கினேன்.

தலை விரி கோலமாக கண்ணகி அரண்மனைக்குள் நுழைந்தாள். அவள் பத்திரக்காளி போல் தோன்றினாள். கோபமாக நோக்கினாள். மன்னன் கோட்டான் ‘நீர்வார் கண் நோய், யாரையோ நீ மடக்கொடியே’. கன்னகி சினம் கொன்றாள். ‘நான்தான் கண்ணாகி. என்னை தெரியவில்லையா?’ என்றாள். மன்னன் அஞ்சி நடுங்கினான். கன்ணகி கேட்டாள் என் கள்வனையா நீ கணவன் என்றாய்? தேரா மன்னா என்றாள். கல்வனைக் கேறல் கடுங்கோல் இன்று அது நியாயம்தான் என்றான் அரசன். கண்ணாகி கோப வெறி ஏறியது. ஒரு கையில் சிலம்பை ஏந்தினாள். ‘மல்லிகை மலர்ந்தே தீரும் மல்லிகை மலர்ந்தே தீரும்’ என்று கர்ஜித்தாள். அன்று அவள் சூல் உரைத்தது இன்று நடந்துவிட்டாது. மதுரை மல்லிகை மிகவும் பேமஸ் ஆகிவிட்டது… 

No comments:

Post a Comment