Wednesday, January 10, 2024

2024 - முதல் ஐந்து நூற்கள்

 இந்த ஆண்டுக்கு (உண்மையில் திசம்பர் 2023 பதிப்பு) எழுதிய நூல்கள் மொத்தம் 12. அச்சகத்தில் இருந்து சென்னை புத்தகத் திருவிழாவில் சீர்மை அரங்கிற்கு இதுவரை வந்து சேர்ந்திருப்பவை ஐந்து நூற்கள். முகநூலில் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியே அறிமுகம் எழுதினேன். அவற்றை இங்கே தொகுத்துத் தருகிறேன்.

1. ரூமியின் ருபாயியாத்


உலகெங்கும் கடந்த கால் நூற்றாண்டு காலமாக அதிகமான அளவில் மொழிபெயர்க்கப்படும் கவிஞர் யார்? ஐயமின்றி, மவ்லானா ரூமி என்று சொல்லலாம். 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி ஞானியின் கவிதைகள் எப்படி நவீன மொழிபுகளாக வெளிப்பட்டு உள்ளங்களை ஈர்க்கிறது என்று பலரும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர்.
எனது எழுத்துப் பணியின் நூல் வடிவம் கூட மவ்லானா ரூமியின் மொழிபெயர்ப்பைக் கொண்டே தொடங்கிற்று. ஏ.ஜே.ஆர்பெர்ரி செய்த ஆங்கில ஆக்கத்தைத் துணை கொண்டு ஃபார்சி மொழியிலான மூலத்தையும் பயின்று ஏறத்தாழ எழுபது ருபாயியாத் (நான்கு அடிகளால் ஆன கவிதை)களைத் தமிழாக்கம் செய்து ஒலிக்குறிப்புகளுடனும் மூல ஃபார்சியுடனும் பிரதி ஒன்றை உருவாக்கினேன். அதனை பேராசிரியர் ஷே.நாகூர் கனி அண்ணன் 2007-இல் நூலாக வெளியிட்டார். அதன் தலைப்பு “ரகசிய ரோஜா.”
எனது அந்த நூல் தனிச்சுற்றுக்கு என்பது போல் சூஃபித்துவ ஆர்வம் கொண்ட மற்றும் அவ்வழியில் ஈடுபட்டுப் பயிற்சி எடுக்கின்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
அதன் பின்னர் ரூமியின் சிந்தனைச் சுடர்களை இரண்டு மூன்று வரிகளே கொண்ட கவிதைகள் போல் எழுதிய தொகுப்பு “ரூமியின் வைரங்கள்” வெளியானது (பேராசிரியர் மு.சாதிக் பாட்சா அவர்களின் ‘ராஜா பப்ளிகேஷன்ஸ்’) அதனைப் பின்னர் இலங்கையில் நண்பர் முஹம்மது சாப்ரி அவர்கள் “கஜல்” பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டார்.
என்.சத்தியமூர்த்தியின் ”தாகம் கொண்ட மீன் ஒன்று” (ஆங்கிலத்தில் கோல்மன் பார்க்ஸ் மொழிபெயர்த்த தொகுப்பான “The Essential Rumi" என்னும் நூலினை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட தமிழாக்கம்) மிகவும் பாராட்டப்பட்ட ஒன்று. அண்மையில் க. மோகனரங்கன் மொழிபெயர்ப்பில் “இதயங்களின் உதவியாளர்” என்னும் நூல் வெளிவந்து பெருங்கவனம் பெற்றுள்ளது.
இந்தச் சூழலில்தான் எனது மொழிபெயர்ப்பிலான “ரூமியின் ருபாயியாத்” நூலினை இப்போது சீர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்த நூலைப் பற்றி கவிஞர் நிஷா மன்சூர் இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதிய தனது முகநூல் இடுகையில் இப்படிச் சொல்கிறார்:
"இதுவரை தமிழில் வெளிவந்த ரூமி மெளலானா மொழிபெயர்ப்புகளில் சிறந்த மொழிபெயர்ப்பு எதுவென நண்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டார்கள்.
சர்வ நிச்சயமாக ரமீஸ் பிலாலியின் மொழியாக்கத்தில் வெளியான "ரூமியின் வைரங்கள்"தான் தமிழின் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகும்."
அவர் அப்படி உணர்கிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அதையும் தாண்டிய ஒரு பெருநூலை “ரூமியின் ருபாயியாத்” என்னும் தலைப்பில் இப்போது தந்திருக்கிறேன் (323 பக்கங்கள்) இதில் 410 ருபாயியாத் கவிதைகள் இருக்கின்றன. (இவற்றின் மூல ஃபார்சி வரிகளின் ஒலிபெயர்ப்பையும் (transliteration) இணைப்பாகத் தந்திருக்கிறேன். தேவையான இடங்களில், பாடல்களை விளங்கிக் கொள்வதற்கான அடிக்குறிப்புகளும் தந்திருக்கிறேன்.
ரூமியின் நூல் என்றாலே அதனை மிக அழகான வடிவமைப்பில் பதிப்பிக்க வேண்டும் என்று தோன்றுவது இயல்பு. “தாகம் கொண்ட மீன் ஒன்று” மற்றும் “இதயங்களின் உதவியாளர்” ஆகிய நூற்களின் அச்சாக்கம் மிகுந்த அழகியல் உணர்வுடன் செய்யப்பட்டிருந்தன. (எனது “ரகசிய ரோஜா”, “ரூமியின் வைரங்கள்”, நாகூர் ரூமி எழுதிய “பாரசீகக் கவிஞானி மவ்லானா ரூமியின் கவிதைகள் கதைகள்” ஆகிய நூற்களின் அச்சாக்கத்தை விட பன்மடங்கு அழகாக என்று சொல்வேன்.)
இப்போது சீர்மை வெளியிட்டிருக்கும் “ரூமியின் ருபாயியாத்” அச்சாக்கத்தில் அந்தத் தரநிலையை எட்டியிருக்கிறது. இறையருளால் சீர்மை மேலும் பல புதிய உயரங்களை எட்ட வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.

2. ரூமியின் ஞானப் பேருரைகள்


உலகின் பெரும் சிந்தனையாளர்கள் தாமே ஒரு சிந்தனைப் பள்ளியாகத் திகழும் ஆளுமையாக இருப்பார்கள். எனவே அவர்களின் சிந்தனை முறையை அவர்களின் பெயராலேயே அழைக்கும் மரபும் இருக்கிறது.
உதாரணமாக, மகாத்மா காந்தியின் சிந்தனைகளை “காந்தியம்” என்று சொல்கிறோம். அதே போல் பெரியாரியம், அம்பேத்கரியம் என்றெல்லாம் சொல்லாடல்கள் உள்ளன.
இது சிறந்த கவிஞர்களுக்கும் பொருந்தும்.
மகாகவி பாரதியின் சிந்தனைகளை “பாரதியம்” என்று சொல்கிறோம்.
உருதுவின் மகாகவியான அல்லாமா இக்பாலின் சிந்தனைகளை “இக்பாலிய்யத்” (அதாவது, இக்பாலியம்) என்றே அழைக்கிறார்கள்.
அதுபோல், ஃபார்சி மொழியின் மகாகவியான மவ்லானா ரூமியின் சிந்தனைகளை “ரூமித்துவம்” அல்லது “ரூமியியம்” என்று நாம் குறிப்பிடலாம்.
மவ்லானா ரூமி தொடர்பில் நான் இதுவரை எழுதியுள்ள நூற்களைப் பட்டியலிட்டு அவற்றை “ரூமித்துவ நூற்கள்” என்றே சீர்மை பதிப்பகம் குறிப்பிட்டிருக்கிறது.
எலிஃப் ஷஃபாக் எழுதி நான் தமிழில் மொழிபெயர்த்த “காதலின் நாற்பது விதிகள்” என்னும் நாவல், இத்ரீஸ் ஷாஹ்வின் “ரூமியின் வாழ்வில் நூறு கதைகள்” ஆகிய நூற்கள் ரூமியின் சரிதை நிகழ்வுகளை நமக்குக் காட்சிப்படுத்துகின்றன.
இப்போது வெளியாகியிருக்கும் “ரூமியின் ருபாயியாத்” என்னும் நூல் மவ்லானா ரூமியின் 410 குறுங்கவிதைகளைத் தமிழில் தருகிறது. (விளக்கக் குறிப்புகளும் ஒலிபெயர்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளன.)
எனினும், ஒரு மகாகவியின் கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர் எத்தகைய சிந்தனை முறைமையில் இருந்து எழுதுகிறார், அவரின் சிந்தை எத்தகைய கருத்தியல்களைக் கொண்டு இயங்குகிறது என்பதை நான் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு உதவி செய்யும் வகையில் அந்தக் கவிஞரைப் பற்றிய ஆய்வு நூற்கள் எழுதப்படுவது உண்டு.
ஆனால், அந்தக் கவிஞரே தனது சிந்தனைகளை உரைநடையில் பேசியோ எழுதியோ வைத்திருந்தால் அது அவரைப் புரிந்து கொள்ள மிகச் சிறந்த கருவியாகும்.
மவ்லானா ரூமி அப்படி ஓர் அற்புதமான உரைநடை நூலை நமக்குத் தந்திருக்கிறார். அது, அவர் தனது சீடர்களுக்கு ஆற்றிய ஞான உரைகளின் தொகுப்பு நூலான “ஃபீஹி மா ஃபீஹி” என்பதாகும். இந்நூலை மூல மொழியான ஃபார்சியில் வாசித்து, அதன் உருது மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்களையும் துணை கொண்டு, தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். “ஃபீஹி மா ஃபீஹி - ரூமியின் ஞானப் பேருரைகள்” என்னும் தலைப்பில் அதனை சீர்மை தற்போது வெளியிட்டுள்ளது.
’ரூமித்துவம்’ பற்றி அறிய விரும்புவோர்க்கு இது ஓர் இன்றியமையாத நூல்.விசி

3. விசித்திரர்களின் புத்தகம் (ஸூஃபி நாவல்)


தமிழ் நாவல்களில் மெய்யியல் சிந்தனைகள் எப்படியெல்லாம் இடம் பெற்றுள்ளன என்று ஆராய்ச்சி நிகழ்த்த கவிஞர் ஜார்ஜ் ஜோசஃபுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ஸூஃபித்துவப் பின்னணியில் போதிய நாவல்கள் இல்லை என்பதைக் கண்டோம். தமிழிலேயே எழுதப்பட்ட ஸூஃபி நாவல் என்று நாகூர் ரூமியின் ”திராட்சைகளின் இதயம்” மட்டுமே கிடைத்தது.
இந்த நிலை மாற வேண்டும் என்பதற்கான முன்னெடுப்பில் சீர்மை பதிப்பகம் ஸூஃபி நாவல்களைத் தமிழில் கொண்டு வரத் தொடங்கிற்று. அந்த மொழிபெயர்ப்புப் பணியை நான் ஏற்றேன். அதன்படி, இதுவரை வெளியாகியுள்ள ஸூஃபித்துவ நாவல்கள் நான்கு:
1. காதலின் நாற்பது விதிகள் (எலிஃப் ஷஃபாக்)
2. ஜின்களின் ஆசான் (இர்விங் கர்ஷ்மார்)
3. அஹில்லா (முஅதஸ் மத்தர்)
4. விசித்திரர்களின் புத்தகம் (அயான் தல்லாஸ்)
இவற்றுள், தற்போது வெளி வந்திருக்கும் நான்காம் நாவலான “விசித்திரர்களின் புத்தகம்” முந்தைய மூன்று நாவல்களில் இருந்து சில அம்சங்களில் வேறுபடுகிறது.
முதலில், இது ஒரு நிஜக் கதை. அயான் தல்லாஸ் ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்து ஒரு நடிகராகவும் நாடக எழுத்தாளராகவும் இருந்தார். அவர் பின்னாளில் மொரோக்கோ நாட்டிற்கு வந்து இஸ்லாமை ஏற்று ஸூஃபித்துவ நெறியில் இணைந்து அப்துல் காதிர் அஸ்-ஸூஃபி என்று ஆகி, தன் வாழ்வின் கனிந்த காலத்தில் ஒரு ஸூஃபி குருவாகப் பரிணமித்தார். இந்த வாழ்க்கை வரலாற்றின் முதற்கட்டத்தை கொஞ்சம் புனைவு கலந்து அவரே ஒரு நாவலாக எழுதியிருக்கும் கதைதான் “விசித்திரர்களின் புத்தகம்” (The Book of Strangers) என்னும் நாவல்.
மெய்யறிவுக்கான தேடல் ஒரு நபரை எந்த அளவுக்கு கால இட எல்லைகளைக் கடந்து செல்ல வைக்கும் என்பதற்கு இந்தக் கதை ஓர் ஆவணமாக நமக்குக் கிடைத்திருக்கிறது.

4. சிவப்புக் கந்தகம் (ஸூஃபி கோட்பாட்டியல் நூல்)


ஸூஃபித்துவம் குறித்த கவனம் உலக அளவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனைப் பற்றிய சரியான நூற்கள் வெளிவர வேண்டிய தேவை மிக முக்கியமானது. அந்தத் தேவை தமிழில் அதிகம் உள்ளது. அதற்கான முன்னெடுப்புகள் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கிவிட்டது எனலாம். அவ்வகையில் எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாக்கவி, நெல்லிக்குப்பம் அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத், ஆர்.பி.எம்.கனி, டி.எம். மூசா கான் காதிரி, மகான் ஆரணி பாவா முதலியோரை நான் நினைவு கூர்கிறேன். இவர்களுள், முதல் மூவரின் நூற்கள் அனைத்து மதத்தினரும் எளிதில் வாசிக்கும் நடையில் அமைந்தவை.
இந்த முன்னெடுப்புகளின் தொடர்ச்சியில் ”சூஃபி வழி” என்னும் பெருநூலையும், “மவ்லானா ரூமியின் கவிதைகள் கதைகள்”, “நாகூர் நாயகம் அற்புத வரலாறு” , “ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்” முதலிய நூற்களை எழுதிய நாகூர் ரூமி அவர்களைக் குறிப்பிட வேண்டும். எனினும் இந்தப் பணி ஒற்றை ஆளால் முடியும் ஒன்றல்ல.
என்னால் இயன்ற அளவு ஸூஃபித்துவம் சார்ந்த, ஆழமும் அழுத்தமும் கொண்ட செவ்வியல் நூற்களை மொழிபெயர்த்து வருகிறேன்.
எந்த ஓர் அறிவுத் துறையையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் எனில் அந்தத் துறை சார்ந்த சொல்லாடல்களையும் அடிக்கருத்துக்களையும் கோட்பாடுகளையும் புரிந்து கொள்வது அவசியம். அதற்கான நூற்களை நாம் வாசிக்க வேண்டும். ஸூஃபித்துவத்துவமும் இந்த நியதிக்கு விதிவிலக்கல்ல.
எனவே, ஸூஃபித்துவக் கருத்தியல் தொடர்பான ஆதார நூற்களை மொழிபெயர்க்கும் வரிசையில், ஏற்கனவே இமாம் அல்-குஷைரியின் “ரிசாலத்துல் குஷைரிய்யா - சூஃபிக் கோட்பாடுகள்” நூலும், மவ்லானா ரூமியின் ”ஃபீஹி மா ஃபீஹி ரூமியின் ஞானப் பேருரைகள்” ஆகியவற்றைத் தமிழுக்குத் தந்திருக்கும் நிலையில், அப்துல்லாஹ் இப்னு அபீபக்ரு அல்ஐதறூஸ் அவர்கள் எழுதிய “கிப்ரீத்துல் அஹ்மர்” என்னும் ஸூஃபிக் கோட்பாட்டு நூலின் தமிழாக்கம் ”சிவப்புக் கந்தகம்” என்னும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது.
இந்த புத்தகம் அளவால் சிறியது; சிந்தனையால் பெரியது. ஸூஃபி வழியின் படிநிலைகளை விவரிக்கும் நூல் இது. ஸூஃபித்துவத்தில் ஒரு குருவின் கீழ் பயிற்சி பெறும் ஆன்மிகச் சாதகர்கள் அடையும் அனுபவங்களின் படிநிலைகளை வரைபடம் போல் சித்திரத்திக்கும் கட்டமைப்புக் கொண்ட அற்புதமான நூல் இது. ஸூஃபித்துவம் சார்ந்த நூற்றுக்கணக்கான அறபுச் சொல்லாடல்கள் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது. ஸூஃபித்துவம் பற்றி ஆழமாக அறிய விரும்புவோருக்கு இந்நூல் அடுத்த கட்டத்துக்க்கான முன்னகர்வை நல்கும் என்று நம்புகிறேன்.

5. மலை முகட்டில் ஒரு குடில்
(குர்ஆனிய ஞானக் கட்டுரைகள்)


சீர்மை பதிப்பக வெளியீடாக அண்மையில் வந்திருக்கும் எனது கட்டுரை நூல் “மலை முகட்டில் ஒரு குடில்”. இதில் 17 கட்டுரைகள் உள்ளன. இவை குர்ஆன் வசனங்களை அடிப்படையாக வைத்து ஆன்மிக நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஆகும். எனவே இவற்றில் ஸூஃபித்துவச் சுவை இருக்கும்.
கட்டுரைகள் ஒவ்வொன்றும் அளவால் சிறியவைதான், சில பக்கங்கள் வருபவைதான். நீளமான கட்டுரைகள் அல்ல.
நூலின் முன்னுரையில் இருந்து சில பகுதிகள்:
”ஒளி நிறமற்றது. ஆனால், ஆடியின் வழியே பாயும் போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிகின்றது. மழைக் காலத்தில் நீராடி வழியே பாயும் கதிரொளி வானவில்லாய் வெளிப்படுகிறது. அதுபோல், குர்ஆன் வசனங்கள் ஒளி ஆகும். அவை அடியேனின் சிந்தை என்னும் ஆடியின் வழியே பல்வேறு கருத்துருவங்களாக வெளிப்பட்டதன் பதிவுகளே இக்கட்டுரைகள். எனவே, வானவில் போல் இந்த நூல் ஒரு ஞானவில்!
”இவை 2007 முதல் 2018 வரையிலான காலத்தில் பல்வேறு சூழல்களில் எழுதப்பட்டவை.”
”இக்கட்டுரைகளில் மூன்று வித மொழிநடை அமைந்திருப்பதை இப்போது அவதானிக்கிறேன். முதல் ஒன்பது கட்டுரைகள் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களது மொழிநடையைப் பின்பற்றி எழுதப்பட்டன. ஏனைய கட்டுரைகள் தர்க்கம் என்னும் கருவி கொண்டு சிந்தனையை முன்னகர்த்தி வளர்ந்து செல்பவை.”
”இக்கட்டுரைகள் அனைத்தையும் இணைக்கும் மைய இழை மாமறையாம் குர்ஆன் மட்டுமே. எனினும், இக்கட்டுரைகளில் பல்சமய மற்றும் பல்தத்துவ ஒப்பாய்வுப் பார்வைகள் ஆங்காங்கே இருக்கின்றன. ஞானம் என்னும் நமது தொலைந்த ஒட்டகம் சீனாவில் மேய்ந்து கொண்டிருந்தாலும் அதனைப் பிடித்துக் கொண்டு வரத்தான் வேண்டும் அல்லவா?”





புத்தகத் திருவிழா 2024

சென்னையில் நடைபெற்று வரும் 2024-ற்கான புத்தகத் திருவிழாவை முன்னிட்டு சீர்மை பதிப்பகம் நான் மொழிபெயர்த்த மற்றும் எழுதிய நூற்களைக் கொண்டு வருகிறது. இதுவரை ஐந்து நூற்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. மேலும் ஏழு நூற்கள் அச்சில் இருக்கின்றன. பொங்கலுக்குள் வந்துவிடும் என்று நண்பர் உவைஸ் அஹ்மத் சொன்னார். 

கடந்த ஆறாம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று ஒருநாள் பயணமாக மனைவி மற்றும் மகனுடன் சென்னைக்குக் கிளம்பினேன். முந்தைய நாள்தான் நண்பர் கொள்ளு நதீமிடமும் உவைஸ் அஹ்மதிடமும் தகவல் சொன்னேன். உடனடியாக என் வருகையை அறிவித்து ஒரு போஸ்டரை முகநூலில் ஏற்றிவிட்டார்கள். 




உவைஸ் அஹ்மத், சாளை பஷீர், இஸ்மாயில் சேட் அன்ஸாரி, அஸ்வத் ஷரீஅத்தி ஆகியோர் உள்ளிட்ட சீர்மைக்குழுவினரைச் சந்தித்தேன் (சீர்மை அரங்க எண்- 318). பின்னர், மதிய உணவுக்கு முன் ஆறாம் “bay" வரை உள்ள கடைகளை அலசிச் சில நூற்களை வாங்கினேன். 

             திரு.பாலா பாரதி


இடையில் ஓரிடத்தில், யாரோ என்னைப் பேர் சொல்லி அழைக்க, திரும்பினால் பாலா பாரதி நின்றுகொண்டிருந்தார். “காக்கைக் கூடு” அரங்கிற்கு அழைத்தார். அவர் எழுதி வெளியாகியிருக்கும் “பாறை ஓவியங்களைத் தேடிப் பயணம் - தொகுதி 1” நூலை வாங்கினேன். மானுடவியல் மற்றும் தொல்லியல் நோக்கில் தமிழுக்கு அது மிக முக்கியமான ஒரு நூல். 


      நண்பன் சதீஷ் குமாருடன்.


மதிய உணவுக்கு நந்தனம் புகாரியில் அமர்ந்திருந்தபோது அலைபேசியில் என் கல்லூரிப் பருவத்து நண்பன் சதீஷ் குமார் அழைத்தான். சொன்னபடி முக்கால் மணி நேரத்தில் தாம்பரத்தில் இருந்து வந்துவிட்டான். எனது நூல்களை எல்லாம் பார்த்துவிட்டு “மலை முகட்டில் ஒரு குடில்” வாங்கியவன் ’ஆட்டோகிராஃப் போடு’ என்று சட்டென்று நீட்டியபோது என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினேன். ஆட்டோகிராஃப் போடும் அளவுக்கு நான் பெரிய ஆள் அல்ல. அதுவும், நண்பனுக்கா போடுவது? என்று தயங்கினேன். ஊரிலிருந்து புறப்படும்போதே (என்+)அவள் பார்க்கர் பேனாவை எடுத்து வைத்திருந்தாள். இதை அவள் எதிர்பார்த்திருக்கிறாள்! அது நிறைவேற என் நண்பனே வந்திருக்கிறான். ஆட்டோகிராஃப் இட்ட காட்சியை மகன் நதீம் கைப்பேசியில் சுட்டுவிட்டான். ஆக, வரலாற்றைப் பதிவு செய்துவிட்டார்கள். ”என்னய்யா நடக்குது இங்யெ?” என்னும் மூமண்ட்டாக இருந்த கணங்கள் எனக்கு. பொதுவாக நான் கணக்கில் ரொம்ப வீக். இதுவோ ஆண்டவன் கணக்கின் படிகளில் ஒன்று!


அரங்கிற்கு வரும் வாசகர்கள் என் புத்தகங்களை எடுக்கிறார்களா என்று பார்ப்பதே சுவாரஸ்யமாக இருந்தது. வாங்கியும் செல்கிறார்கள் என்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. அரங்குக்குள் நுழைந்த தம்பதியர் இருவர் எனது எல்லா நூற்களையும் எடுத்துப் பார்ப்பதும் வைப்பதுமாக இருந்தனர். கடைசியில் நான் மொழிபெயர்த்த நான்காம் நாவலான “விசித்திரர்களின் புத்தகம்” (அயான் தல்லாஸ்) நூலையும் “ஹிஜாப்” என்னும் நூலையும் வாங்கினார்கள். அந்த இணையர் சீர்மை பதிப்பகத்தின் வெளியீடுகளைத் தொடர்ந்து வாங்கி வருபவர்கள் என்றும் அந்தக் கணவரின் பெயர் ஆத்தூர் கலைச்செல்வன் என்றும் பின்னர் சீர்மை பதிப்பகம் இட்ட முகநூல் இடுகை வழி அறிந்தேன்.


மதியம் சீர்மை அரங்குக்கு மூத்த எழுத்தாளர் பாவண்ணன் வந்தார். நண்பர் சாளை பஷீர் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் என்று. நான் மொழிபெயர்த்த சில நூற்களை அவரிடம் காட்டினேன். “காதலின் நாற்பது விதிகள்” நாவலைப் பற்றி ஏற்கனவே அவருக்குத் தெரிந்திருந்தது.

“பேராசிரியராக இருந்து கொண்டு இதெல்லாம் எழுதுறதுக்கு நேரம் இருக்கா?” என்று கேட்டார்.

“இதுக்கெல்லாம் நேரம் தருகிற வேலையாக இருக்க வேண்டும் என்றுதான் நான் பேராசிரியராகவே ஆனேன்” என்று பதில் சொன்னபோது சிரித்துவிட்டார்.

என் பெருமிதமிகு மாணவரும் கவிஞரும் புனைகதையாளருமான ஜார்ஜ் ஜோசஃப் எழுதிய “எமரால்ட்” சிறுகதைத் தொகுப்பை அவர் ஸ்டாலிலேயே வெளியிட்டார்.


மாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தபோது இலங்கையில் இருந்து எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சிராஜ் மஷ்ஹூர் வந்தார். அவருடனான சுவாரஸ்யமான உரையாடலில் என் உறவினரும் இலங்கையில் “இளம்பிறை” என்னும் இலக்கிய இதழின் வழி ஆளுமைகள் பலரையும் அறிமுகப் படுத்தியவருமான எம்.ஏ.றஹ்மான் அவர்களைப் பற்றியும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அறிவுப் புலத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இயங்கி வரும் உள்ளங்களின் சகவாசம் தந்த புத்துணர்ச்சியுடன் திருச்சிக்கு வீடு திரும்பியபோது நள்ளிரவு மணி ஒன்றரை ஆகியிருந்தது. சென்னையிலிருந்து திருச்சி வரை நெடுகிலும் ஓயாத மழை.





Thursday, November 16, 2023

”அடி” தந்த ஒளி

 தி ஜானகிராமன் தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் எழுதிய குறுநாவலான “அடி”யை நேற்று வாசித்து முடித்தேன். அதில் சில வரிகளை அசை போட்டபோது தோன்றிய கருத்துக்களை இங்கே இரண்டு சின்னஞ் சிறு கட்டுரைகளாக வரைந்துள்ளேன். 



நாயின் குரைப்பில்…

            சூஃபி ஞானிகளின் பரவச மொழிகள் பற்றி ஆராய்ச்சிப் பண்ணி ஒரு புத்தகம்: Words of Ecstasy in Sufism (சூஃபிசத்தில் பரவச மொழிபுகள்). வடக்குக் கரோலினா பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆராய்ச்சித் துறைப் பேராசிரியர் கார்ல் டபிள்யூ ஏன்ஸ்ட் எழுதியது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வாசித்த அந்த நூலைப் பின்னர் சூஃபி ஞானி ஒருவருக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டேன்.

            அதில் சூஃபி ஞானிகளின் வித்தியாசமான பரவச அனுபவங்களைப் பற்றிய செய்திகள் இருந்தன. அதில் சில என் மனத்தில் அடிக்கடி நினைவுக்கு வரும். சில நடுநிசிகளில் தெரு நாய்கள் குரைத்து இரவின் நிசப்தத்தைக் குலைக்கும்போது, ’செ, இப்படிக் கிடந்து கத்தி தூக்கத்தைக் கெடுக்குதே’ என்று எரிச்சல் கிளம்பும் கணத்தில் அந்த நூலில் படித்த ஒரு சேதி ஞாபகம் வரும்.

            ”இயற்கையில் இறைவனின் இருப்பை உணர்வதன் அதீதமான உணர்வெழுச்சி” என்னும் வகையான பரவச அனுபவத்திற்கு உதாரணமாக அதை ஏன்ஸ்ட் குறிப்பிடுகிறார். அபுல் ஹசன் நூரி என்னும் சூஃபி ஞானி ஒருமுறை நாய் ஒன்று குரைப்பதைக் கேட்டார். அந்தக் கணமே பரவசம் மேலிட்டு “லப்பைக்” (இதோ இருக்கிறேன் / செவி சாய்த்தேன் / அடிபணிந்தேன்)  என்று உரைத்தார்.

            அதே போல் இன்னொரு நிகழ்வு. இறைவனுக்கு அர்ப்பணிப்பதற்காக (பலியிடுவதற்காக) அல்-முஹாசிபி ஆடு ஒன்றை ஆயத்தப்படுத்தினார். அது கனைத்தது. அதைக் கேட்ட சூஃபி ஞானி அபூ ஹம்ஸா அல்-இஸ்ஃபஹானி உடனே ”லப்பைக்” என்று உரக்கச் சொன்னார்.

            விலங்குகளின் சப்தங்களைக் கேட்டதற்கே அவர்கள் எவ்வளவு ஆழமாகப் போய்விடுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. இதை வாசித்த அனுபவமே அந்தப் பரவசத்தின் ருசியைச் சற்று நல்கத்தான் செய்தது.

            தி.ஜானகிராமன் எழுதிய “அடி” என்னும் குறுநாவலைப் படித்தபோது, அதன் முடிவில் அவர் எழுதியிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் அந்தப் பரவசத்தை மீண்டும் உணர்ந்தேன். ’மேலே முழுமதி, கீழே வயல்கள்’ என்னும் சூழலில் செல்லப்பாவை வெளியே அழைத்துக் கொண்டு போய் அதுதான் பரதேவதையின் அழகின் பிரதிபலிப்பு என்று காட்டுகிறார் அம்பாகடாட்சம் என்னும் ஞானி. அது நாவலின் இறுதிக் காட்சி. அதை இப்படி முடிக்கிறார் தி.ஜா:

            எங்கோ நாய் இரண்டு குரைப்பது கேட்டது.

            ”பேஷ் பேஷ்” என்றார் அம்பாகடாட்சம். “இதைவிட எப்படி அழகா அம்பாளைப் பார்த்துப் பாட முடியும்?” என்று புன்னகையுடன் குரைப்பில் லயித்துவிட்டது போல் நின்றார் அம்பாகடாட்சம்.

            சூஃபியின் நிகழ்வு நாயின் குரைப்பில் அவர் இறைவனை உணர்ந்ததைக் காட்டிற்று என்றால், தி.ஜா., நாய்கள் இறைமையை உணரும் விதத்தைக் காட்டிவிட்டார்.



 இசைக்கேடு

பல்லாயிரம் பல்லாயிரம் சொலவடைகள் செழித்த தமிழ் மொழியில் ”இசைக்கேடு” என்றும் ஒரு சொலவம். மிகச் சாதாரணமாக பேச்சு வழக்கில் பாமரரும் புழங்கும் ஒன்றுதான்.

உதாரணமாக, தி.ஜானகிராமனின் “அடி” என்னும் குறுநாவலில் இரண்டு இடங்களில் இச்சொல் வருகிறது. இரண்டு இடத்திலுமே இதைப் பேசுபவள் மங்களத்தம்மாள். கணவனிடம் ஓரிடத்தில் பிரிட்டிஷ்காரர்களைப் பற்றிச் சொல்கிறாள்: “அவா ஊர்ல யாரும் தினமும் குளிக்கிறதில்லையாம். இங்கியும் அப்படியேதான் இருக்கா. நெறைய பவுடர், செண்ட் எல்லாம் போட்டுண்டு வந்துடறா. அதுக்குப் பதிலாக தப்பித்தவறி கிட்டப்போய் எங்கியாவது இசைக்கேடா நின்னா மூத்ர நெடி அடிக்கிறது!”

இன்னொரு இடம், மங்களத்தம்மாள் பட்டுவை விசாரணை பண்ணுமிடம். அப்போது அவளிடம் சொல்கிறாள்: “நீயும் மாமாவாலெதான் இப்படி உசந்துட்டோம்னு நன்னி விசுவாசத்தினாலெ இசைக்கேடா நடந்துக்கலாம். நடந்துக்க சம்மதிக்கலாம்னு நினைக்கிலாமோல்லியோ?”

இசைக்கேடு என்னும் சொல் இசை (music) என்னும் கலைத் துறை சார்ந்த சொல்லன்று. இது மனித வாழ்க்கை சார்ந்த ஒரு ஞானச் சொல்லாகும்.

வாழ்க்கையே ஒரு இசைதான் என்று பார்க்கும் ஞான தரிசனம் இச்சொல்லில் இருக்கிறது. எனவே, வாழ்வில் அசந்தர்ப்பம் என்றோ இங்கிதம் தவறியோ, இடம் பொருள் ஏவல் என்பவற்றுக்குப் பொருந்தாமலோ, பிசகாகவோ, தவறாகவோ, குற்றமாகவோ ஏதேனும் நடந்தால் அது இசைக்கேடு.

இசை என்பது என்ன? ஏழு ஸ்வரங்கள் தம்முள் இயல்பாக இணங்கி ஒத்துழைத்து நகர்வது. அதாவது ஓசைகளின் ஒத்திசைவு (harmony).

மனிதர்களும் உறவை ஒட்டி வாழும்போது, இணங்கி வாழும்போது அந்த வாழ்க்கை இசை ஆகிறது. இயற்கையுடன் இயைந்து வாழும்போது அந்த வாழ்க்கை இசை ஆகிறது. பிரபஞ்ச நியதிகளுக்கு முரண்படாமல் வாழும்போது அந்த வாழ்க்கை இசையாகிறது. அந்த ஒத்திசைவு குலைவதே இசைக்கேடு.

இது தொடர்பாகத் தமிழில் இன்னொரு சொல்லும் இருக்கிறது: இசைப்பாட்டு. பேச்சு வழக்கில் எசப்பாட்டு என்று சொல்லப்படும். இது இன்னும் ஆழமான ஞானச் சொல்லாகப் படுகிறது.

எசப்பாட்டு என்பது எதிர்ப்பாட்டுதான். “யார்றா அது, என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறவன்?” என்றால், எதிர்ப்பாட்டு பாடுகிறான் என்று பொருள். எதிராகப் பாடுவதை ஏன் இசைப்பாட்டு என்றார்கள்? அதில்தான் தமிழின் ஞானம் இருக்கிறது.

எசப்பாட்டு என்பது கருத்து நிலையில் எதிர்ப்பாக இருக்கும். அதாவது, ஒருவர் பாடும் கருத்தை மறுத்துப் பிறர் பாடுவதாக அமையும். ஆனால் அது முன்னவர் பாடிய அதே பண்ணில் அமைந்திருக்கும்! எனவே, கருத்துப்படி பார்த்தால் அது எதிர்ப்பாட்டு; பண்ணின்படி பார்த்தால் அது உடன்படுகின்ற, ஒத்திசைகின்ற பாட்டு. எனவே அது எசப்பாட்டு.

உருதுவில் கவ்வாலி என்று பாடப்படும் வகையில் இரண்டு அணிகள் அமர்ந்து இசையிலேயே வாதாடுவது உண்டு. அது இசையால் அமைந்த வழக்காடு மன்றம் என்று சொல்லலாம். ஒருவரின் கருத்தை இன்னொருவர் மறுத்துப் பாடுவார். ஆனால் மெட்டு அதேதான்.

எனவே, எசப்பாட்டு என்னும் சொல் இவ்வகையில் வாழ்க்கை பற்றிய ஓர்  உண்மையை உணர்த்துகிறது. எதிரெதிரான, முரண்பாடான இரண்டு கருத்துக்கள் ஒரே மெட்டு என்னும் முழுமைக்குள் இயங்குகின்றன. தாவோயிசம் சொல்லும் opposites are complementaries, இரண்டும் இணைந்துதான் வட்டம் முழுமை அடைகிறது, இது அதனைச் சார்ந்துள்ளது, அது இதனைச் சார்ந்துள்ளது என்னும் தத்துவத்தை எசப்பாட்டு என்னும் ஒற்றைச் சொல் குறிக்கிறது.

வாழ்க்கை என்பது dialectics என்னும் முரணியக்கம் ஆகும் என்னும் தரிசனத்தை எசப்பாட்டு என்னும் சொல்லே தந்துவிடுகிறது.

Wednesday, June 28, 2023

விசேஷ மிஸ்கீன்கள்

(இந்தச் சிறுகதை பேராசிரியர் சேமுமு அவர்கள் ஆசிரியராக உள்ள “இனிய திசைகள்” மாதிகையின்  ஜூன் 2023--ஆம் தேதியிட்ட இதழில் வெளியாகியுள்ளது (பக்.30-33) ஆசிரியர் குழுவுக்கு மனமார்ந்த நன்றி.)


 

வெள்ளிக்கிழமை என்றால் தொழுகைக்கு முன்போ பின்போ யாராவது ஒரு மிஸ்கீனுக்கு (இரவலருக்கு) சாப்பாடு அல்லது சாப்பாட்டுக்கான பணம் ‘சதக்கா’ (தர்மம்) செய்ய வேண்டும். இது என்னவள் பேணி வரும் அறங்களுள் ஒன்று. வேறு ஏதேனும் ஞாபகார்த்த நாட்களை முன்னிட்டு இதர கிழமைகளிலும் இந்த அறத்தை நிறைவேற்றுவாள். மீஸ்கீனைத் தேடிக்கண்டு கொடுப்பது என் வேலை.

            மிஸ்கீன்களிலும் பல வகையானவர்கள் இருக்கிறார்கள். குஞ்சு குளுவான்களோடு வந்து “ஸ்லாமலேக்கும்… மூனு பேரு வந்திருக்கோம்…” என்று நீட்டியிழுத்து ஏக்கத்துடன் கேட்கும் தாய்க்குலத்தின் குரல். பத்து ரூவாத் தாளை மடித்துக் கதவிடுக்கில் நீட்டும்போது அழுக்காடை அணிந்த பெண்ணின் இடுப்பில் தலையைச் சாய்த்தபடி நிற்கும் சிறுமி அல்லது சிறுவன் பார்க்கும் பார்வை ஈரக்குலையைப் பதற வைக்கும். வறுமை சாவினும் கொடிது! ஒருமுறை அப்படி ஒரு பயலை அழைத்து வீட்டு மரத்தில் பழுத்த கொய்யாக்கனி ஒன்றைக் கொடுத்தேன். தயங்கி நின்றவன் அம்மா சொன்னதும் வாங்கிக் கொண்டான். விலக்கப்பட்ட கனிக்கு அனுமதி கிடைத்துவிட்டது போன்ற மகிழ்ச்சி அவன் முகத்தில்! கடித்து ருசித்துக்கொண்டே அம்மாவின் பின்னே போனான்.



இந்த வகை மிஸ்கீன்கள்தாம் பெரும்பான்மை. புனித ரமலான் மாதத்தில் இவர்களின் ஜனத்தொகை அதிகமாகிவிடும். பெண் என்றால் கந்தலான ஒரு புர்கா. ஆண் என்றால் தலைக்கு ஒரு நைந்த தொப்பி. ஒரு பெருநாளன்று இவர்கள் அரிதாரம் தரிப்பதை நேரிலேயே பார்த்துவிட்டேன். நெற்றியிலிருந்த திலகத்தை அழித்து அவசர அவசரமாகப் பைக்குள்ளிருந்து புர்காவை உருவியெடுத்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி. வயிற்றுப்பாடு ஐயா! கருப்பாயி நூர்ஜஹானாக மாறப் போகிறாள், தற்காலிகமாக! அவளருகில் ஒரு சின்னசாமி என்கிற சிக்கந்தர், மாமாங்கமாக எண்ணெய் காணாத தலைக்குத் தொப்பி அணிந்து கொண்டிருந்தான். இப்படியெல்லாம் அரிதாரம் போட்டுக்கொள்ளாமல் இதுதான் நான் என்பது போல் வந்து நிற்கும் மிஸ்கீன்களும் உண்டு. காவி வேட்டி கட்டி மேலுக்குக் காவி துண்டு போர்த்தி, திருநீற்றுப் பட்டையுடன் ஒருவர் திருவோடு ஏந்தி நிற்பதையும் பார்த்தேன். வயிறும் பசியும் எல்லாருக்கும் பொது. இதை விளங்கியவர்கள்தாம் இங்கே தொழ வருகிறார்கள் என்று அவன் நம்புகிறானே! அந்த நம்பிக்கை பொய்க்கலாகாது.

பல வருசங்களுக்கு முன், “இந்தப் பிச்சைக்காரர்கள்லாம் ஏன் சாமியார் மாதிரி காவி வேட்டியும் துண்டும் போட்டிருக்காங்க?” என்று நண்பன் ஒருவன் கேட்டான். “அதுதான் அவுங்களுக்கு இலவசமாக் கெடச்சது. கோட் சூட் குடுத்தீன்னா அதெப் போட்டுக்குவாங்க. கையேந்துறவனுக்கு எம்புட்டுப் போடலாம்னு மட்டும் யோசி” என்றேன்.

இந்த மிஸ்கீன்களின் கூட்டத்தில் நான் தேடுவது வேறு வகையான நபர்களை. சில இறைநேசர்கள் (அவ்லியா) இப்படி மிஸ்கீன்களாக உலவக்கூடும். தர்வேஷ், கலந்தர், ஃபக்கீர் என்னும் பெயரெல்லாம் அவர்களைத்தான் குறிக்கும். மலாமத்தி என்றொரு வகையினரும் உண்டு. எல்லாரும் திட்டித் தீர்க்கும்படி காரியம் செய்து வைப்பார்கள். ஆணவ மலத்தை அழிப்பதற்கான ஆசிட் டெஸ்ட்! சிலர் பைத்தியம் போல் திரிவார்கள். மஜ்தூப் என்று அவர்களுக்குப் பெயர். இவர்களை எல்லாம் முஸ்லிம் சித்தர்கள் என்று இங்கே சில பேர் எழுதியிருக்கிறார்கள். சித்தன் போக்கு சிவன் போக்கு. தர்வேஷ் போக்கு தம்பிரான் போக்கு!

அத்தர் கடை இஸ்மாயில் ஒருமுறை சொன்னார்: “அப்பப்போ ஒரு மிஸ்கீன் வருவார். அவராகவே இவ்வளவு வேணும்னு ரொம்ப அதிகாரத்தோட கேப்பார். பத்து ரூவா குடு, இருவது ரூவா குடுன்னு. அவ்வளவுதான் கேப்பார். கேட்டதக் குடுத்துருவேன். வாங்கிக்கிட்டுப் போயிருவார். எதுக்கு நமக்கு வம்பு. எந்தக் கோலத்துல யாரு உலவுறாங்கன்னு நாம என்னத்தக் கண்டோம்?”

 அதுபோல் நானும் சில பேரை அடையாளம் கண்டு வைத்திருக்கிறேன். வாரா வாரம் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் போகும்போது சகதர்மினி கட்டித் தரும் சாப்பாட்டுப் பொட்டலம் ஒருவருக்குப் போய்க் கொண்டிருந்தது. பத்துப் பதினைந்து மிஸ்கீன்கள் நிற்கும்போது ஒருவரை மட்டும் விசேசமாகத் தேர்ந்தெடுத்து நான் எப்படிக் கொடுப்பது? அதற்கு நான் ஒரு யுக்தி வைத்திருந்தேன். நான் மஸ்ஜிதுக்குப் போகும் பாதையில் முதலாவதாகக் கண்ணில் படும் மிஸ்கீனுக்கே என் சாப்பாட்டுப் பொட்டலம்! (மட்டன் அல்லது சிக்கன் பிரியாணி. அல்லது, நெய்ச்சோறும் கறிக் குழம்பும் ஒரு அவிச்ச முட்டையும்.)



இந்த உத்தியை நான் செயல்படுத்தியபோது வாரா வாரம் அவரிடமே கொடுக்கும்படி வந்தது. தோதகத்திக் கட்டை மாதிரி கறுப்பு. முரணாக வெள்ளை வேஷ்டி சட்டை. முழுக்கைச் சட்டையை எப்போதும் கஃப் பண்ணியிருப்பார். இப்படி ஒரு ’நீட்நெஸ்’ உள்ள மிஸ்கீனை நான் வேறெங்கும் பார்த்ததே இல்லை. அருகில் ஒரு பையை வைத்துக்கொண்டு ஒரு வீட்டின் முன் குத்த வைத்து அமர்ந்திருப்பார். ஆனால் முகத்தில் ஒரு கடுமை இருக்கும். குறிப்பாக, லேசான சிவப்பு ஏறிய முட்டைக் கண்களைப் பார்க்கவே பயமாக இருக்கும். அவர் சிரித்து நான் பார்த்ததே இல்லை. நான்கைந்து வாரங்களாக, அதே இடத்தில் அவருக்கே வெள்ளிச்சோறு கொடுத்தேன்.

ஒரு வெள்ளிக்கிழமை அன்று கல்லூரிக்குப் போகும் வழியில் அவரைப் பார்த்தேன். யாரோ ஒருவரின் பைக்கில் அமர்ந்து வந்தவர் பள்ளிவாசல் இருக்கும் ஏரியாவின் முக்கில் மெல்ல இறங்கினார். அப்படியே படியில் அமர்ந்தார். வாகனத்தில் போய்க் கொண்டே என்னால் இவ்வளவுதான் பார்க்க முடிந்தது. சரிதான், இவர் விசேஷமான ஒரு மிஸ்கீன்தான் என்பது உறுதியாகிவிட்டது!



இன்னொரு விசேஷ மிஸ்கீனைக் கண்டு பிடித்த கதைச்சுருக்கத்தையும் இங்கே சொல்லிவிட வேண்டும். சாப்பாட்டுப் பொட்டலத்தை ஸ்கூட்டரில் தொங்கவிட்டுக்கொண்டு தேடியபடி காஜாமலை அடிவாரம் நோக்கிப் போனபோது அவர் கப்ருஸ்தானின் (இடுகாட்டின்) வாசலில் தார்ப்பாய் விரித்துப் படுத்துக் கிடந்தார். மேலில் துணியில்லை. கைலியும் முட்டிக்காலுக்குச் சற்று மேல் வரை மடக்கியிருந்தது. நான் ஸ்கூட்டரை நிறுத்திய மாத்திரத்தில் சட்டென்று எழுந்து சமனமிட்டு அமர்ந்தார். அந்த வேகம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “அஸ்-சலாமு அலைக்கும்” என்றார். முகத்தருகில் சென்ற அவரின் கையில் நாலைந்து கல்-மோதிரங்கள். மணிக்கட்டில் கயிறு சுற்றப்பட்டிருந்தது. கலைந்து கிடந்த தும்பை நரை தலைமுடி ஐன்ஸ்டீனை நினைவூட்டியது. அவரின் கண்கள் காத்திரமாக நோக்கின. கையை நீட்டி வாங்கிக்கொண்டார். அப்போது லுஹர் தொழுகைக்கான நேரம் நெருங்கியிருந்தது. “போங்க, போயி தொழுவுங்க. வீட்லயும் எல்லாரையும் அஞ்சு வேளையும் தொழுவச் சொல்லுங்க,” என்று கண்டிப்பான குரலில் சொன்னார். சரி அவர்? அவர் மஜ்தூபாக இருக்கலாம். அவரை விமர்சித்து சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடாது.

இப்படியாகப் போய்க்கொண்டிருந்த மிஸ்கீன் ஈகைப் படலத்தில் வேறொரு சுவையான நிகழ்வும் வந்தது. ஏதோ ஒரு காரியத்தின் நிமித்தம் ஏழு மிஸ்கீன்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று அகத்துக்காரி சொன்னாள்.

”வெள்ளிக் கிழமன்னா மிஸ்கீன்க நெறைய பேரு வருவாங்க. இப்ப எப்படிக் குடுப்பீங்க?”

“காஜாமலை பக்கம் இருப்பாங்க. போயி பாக்குறேன். அங்கேயும் இல்லேன்னா காலேஜ் பள்ளிவாசலுக்குப் போயி பாக்குறேன்.”

ஏழு பொட்டலங்களை மாட்டிக்கொண்டு ஸ்கூட்டரில் நான் போகும்போது வி.மிஸ்கீன்#1 என் கண்ணில் பட்டார். பூட்டியிருந்த கடை ஒன்றின் முன் குத்த வைத்து அமர்ந்திருந்தார். “நான் இங்கெ இருக்கேன். நீ எங்கெடா ஓடிக்கிட்டிருக்க?” என்பது போலிருந்தது அவரின் பார்வை. மானசீகமாக அவரிடம் சொன்னேன், “மன்னிக்கணும் மவ்லானா! இன்னிக்கு ஏழு பேருக்குக் குடுத்தாவணும். இப்ப ஒங்களுக்குக் குடுத்துப் பத்தாமப் போச்சுன்னா என்ன பண்ணுவேன்? வெள்ளிக்கிழமெ அன்னிக்கு ஒங்களுக்குத்தான்.”

இடுகாட்டு வாசலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டின் திண்ணையில் வி.மி.#2 அமர்ந்திருந்தார். ஒரு பொட்டலத்தை அவரிடம் நீட்டினேன். இரண்டு வைகளை ஏந்தி வாங்கிக் கொண்டவர் சொன்னார்: “அங்கே ஒருத்தர் போய்க்கிட்டிருக்காரு. போங்க, அவருக்குக் குடுங்க.” சரி என்று ஸ்கூட்டரைக் கிளப்பினேன். காஜாமலை அடிவாரத்தில் அன்றைக்கென்று ஒரு ஆளும் இல்லை. மலை மேலே யாரும் நிற்கிறார்களா என்று பார்த்தேன். யாருமில்லை. ரேஸ் கோர்ஸ் சாலைக்குப் போகும் தெருவில் அவர் சொன்னது போல் ஒரு மிஸ்கீன் போய்க் கொண்டிருந்தார். அவரைப் பிடித்து அவருக்கும் ஒரு பொட்டலம் கொடுத்தேன். இன்னும் ஐந்து இருந்தது. கல்லூரி மஸ்ஜிதுக்குப் போனேன். நான்கு பேர் அரக்கப் பரக்க ஓடி வந்தார்கள். ஆளுக்கொரு பொட்டலம் கொடுத்தேன். ஒரே ஒரு பொட்டலம் மட்டும் மிச்சம். அதை யாருக்குக் கொடுப்பது என்று யோசித்தபோது வி.மி#1 நினைவுக்கு வந்தார். திரும்பி வந்தபோது முன்பு அமர்ந்திருந்த அதே இடத்தில், பூட்டிய கடைக்கு முன்னால் அமர்ந்திருந்தார். கடைசிப் பொட்டலத்தை அவரிடமே கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

இன்னொரு வெள்ளிக்கிழமை. கல்லூரி விடுமுறை என்பதால் அன்று ஜும்’ஆ தொழுகைக்கு மகனும் என்னுடன் வந்தான். கையில் ஒரு உணவுப் பொட்டலம். ”இதெ யாருக்கத்தா தரபோறீங்க?” என்று கேட்ட மகனுக்கு என் மிஸ்கீன் தேடல் அனுபவங்களை எல்லாம் விவரித்துக்கொண்டே ஸ்கூட்டரை மெதுவாக ஓட்டினேன். “நீ வேணும்னா பாரு. அவுரு அங்கே மொத ஆளா நம்ம கண்ணுல படுவாரு. அவருக்கிட்ட குடுத்துருவோம்.”

பள்ளிவாசலுக்குச் செல்லும் தெருவில் திரும்பியபோது வெள்ளை தொப்பி சட்டை லுங்கி அணிந்த கருப்புக் கம்பீரம் ஐம்பதடிக்கு அப்பால் நடந்து போய்க் கொண்டிருந்தது. சரியாக அதே வீட்டின் வாசலில் பையை வைத்துவிட்டு அமர்ந்தது. நான் அவரை நெருங்கி நிறுத்தி உணவுப் பொட்டலத்தைக் கொடுத்ததும் வாங்கிக் கொண்டார். “பாத்தியா? பிச்சக்காரன்னு கேவலமா யோசிச்சிரக்கூடாது. இவுரு ஒரு அவ்லியாவா இருக்கலாம். மரியாதையோட பாக்கணும். தெரியுதா?” என்றேன்.

ஜும்’ஆ தொழுதுவிட்டு வெளியே வந்தபோது ஓர் அதிர்ச்சியான காட்சி. எல்லா மிஸ்கீன்களும் – வயோதிகர்கள் பெண்கள் சிறார்கள் அனைவரும் – வெளியே நின்று கொண்டோ அமர்ந்தபடியோ யாசித்துக் கொண்டிருந்தனர். வி.மி#1 பள்ளி வளாகத்தினுள் படிக்கட்டுக்கு அருகில் படுத்துக் கிடந்தார். லேசாக ஒருக்களித்தபடி குப்புறக் கிடந்த அவரின் ஒரு கால் மட்டும் இழுத்துக்கொண்டது போல் மடங்கியிருந்தது. முடக்கு வாதம் வந்து நடக்கவே முடியாமல் தத்தளிப்பவர் போல் பாவித்துக்கொண்டு புலம்பியபடி யாசித்துக் கொண்டிருந்தார்.

மகன் என்னைப் பார்த்துப் பரிகசிப்பதுபோல் சிரித்தான், “அத்தா, இவுரு அவ்லியாவா?”

நானும் சிரித்தபடி ”இருக்கலாம்” என்றேன்.

கதையை இங்கேயே முடித்துவிடலாம். இன்னொரு வி.மிஸ்கீன் இருக்கிறாரே? அவர் என்னவானார்? எங்கேயும் போய்விடவில்லை. அங்கேயேதான் இருக்கிறார், கப்ருஸ்தான் வாசலில் தார்ப்பாய் மீது படுத்துக்கொண்டு, நாலைந்து கல் மோதிரங்கள் அணிந்த விரல்களின் இடையே பீடியைப் புகைய விட்டுக்கொண்டு. ஒருமுறை அவருக்கு உணவு கொடுக்கப் போனபோது ’வெல்டுடூ’வாகத் தெரிந்த ஒருவரிடம் ஏதோ ஆலோசனை சொல்வது போல் உருதுவில் பேசிக் கொண்டிருந்தார். நான் சற்று ஒதுங்கி நின்றேன். அவரை அனுப்பிவிட்டு வந்தவர் உணவை வாங்கிக்கொண்டதும், “நாகூர் எஜமானப் போய்ப் பாத்துட்டு வந்திருங்க” என்றார். என்ன திடுதிப்புன்னு இப்படிச் சொல்றாரே என்று மனதிற்குள் திகைத்தேன். உடனே மாற்றிச் சொன்னார்: “சரி, போயி நத்தர்வலி பாவாவப் பாத்துடுங்க.” தலையாட்டிவிட்டுக் கிளம்பிவிட்டேன். மூன்று நாளில் தப்லே ஆலம் பாதுஷா என்றழைக்கப்படும் நத்ஹர் வலியுல்லாஹ்வின் உரூஸ் நாள். நானும் மகனும் இமானுவேலையும் அழைத்துக் கொண்டுபோய் ஜியாரத் செய்தோம்.

ஒருநாள் வெயில் மெல்ல எழுந்து வரும் காலை ஏழே முக்காலுக்கு ஒரு காட்சி கண்ணில் பட்டது. பெரியார் கல்லூரி நிறுத்தத்தில் நின்ற பேருந்திலிருந்து வி.மி#2 இறங்கிக் கொண்டிருந்தார். அவர் கையிலும் ஒரு பை. வெளுத்து இஸ்திரி போட்ட மைநீலச் சட்டை போட்டிருந்தார். தூய்மையான வெள்ளைக் கைலி உடுத்தியிருந்தார். சரிதான், டியூட்டிக்கு இப்படித்தான் தினமும் வருகிறார் போலும் என்று மனம் எண்ணிற்று. மகனின் கேள்வி மீண்டும் மனதிற்குள் பகடியாக ஒலித்தது: “அத்தா, இவரு அவ்லியாவா?”

இப்போதும், சிரித்தபடி, “இருக்கலாம்” என்றேன்.

 


கசாப்புக் கத்தி

 


(”...என்றார் தர்வேஷ்” தொடரில் ஒரு பதிவு.)

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தோழர் தக்கலை ஹா மீம் முஸ்தஃபா ஒரு கவிதை எழுதியிருந்தார். அதனை சீடன் ஒருவன் தர்வேஷிடம் காட்டினான்.

                        ”பக்ரீத் நெருங்குகிறது

                         குர்பானிக்குத் தயாராகிறது சமூகம்

                         ஆட்டு வியாபாரிகளும்

                         கசாப்புக்கடைக்காரர்களும்

                         பரபரப்பாகிவிட்டனர்

                         ஒன்றுக்கு இரண்டு கத்திகளை

                         மோதினார் கூர்தீட்டி வைத்திருக்கிறார்

                         ஆடோ மாடோ

                         ஒட்டகமோ குர்பானி செய்வதில்

                         எந்தச் சிரமமும் நமக்கில்லை

                         இஸ்மாயிலை பத்திரப்படுத்திவிட்டோமே

                         ஆசை அறுக்காமல் இஸ்மாயிலை

                         குர்பானி கொடுப்பது எளிதல்ல

                         இஸ்மாயிலை குர்பானி கொடுக்காமல்

                         இபுராஹீமை ஒருபோதும்

                         நம்மால் கண்டடைய முடியாது.”

            கவிதையை வாசித்து ரசித்த தர்வேஷின் உதடுகள் புன்முறுவல் பூத்தன.

            ”அருமையாக எழுதியிருக்கிறார். ஆனால், இதில் ஓர் இடத்தில் சிறு பிழை உள்ளது. அதைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் விளக்கிக் கூற ஆசைப்படுகிறேன்.”

            ”சொல்லுங்கள் குருவே” என்றது சீடர் குழாம்.

            ”இஸ்மாயிலை நீங்களே குர்பானி கொடுக்க முடியாது,” என்றார் தர்வேஷ்.

            ”இன்னும் விளக்கமாகச் சொல்லுங்கள் குருவே” என்றனர் சீடர்கள்.



            ”அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி உங்களை நீங்களே அறுத்துக் கொண்டாலும் அது தற்கொலைதான். தற்கொலை பெரும்பாவம் அல்லவா?

            ”ராபர்ட் ஃப்ரேஜர் அல்-ஜர்ராஹி என்பவர் இதற்கு ஓர் உவமை சொல்லியிருக்கிறார். ‘சிறு சிறு காயங்களுக்கு நீங்களே மருத்துவம் செய்து கொள்ள முடியும். ஆனால், மயக்க நிலை தேவைப்படும் அறுவை சிகிச்சையை உங்களுக்கு நீங்களே செய்துகொள்ள முடியாது’ என்கிறார். ஆம், நீங்களே ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தாலும் சரியே! அதனால்தான் பிறப்பிலேயே விலாயத் என்னும் இறைஞானம் பெற்றிருந்த முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரலி) அவர்கள் தனக்கு ஒரு குருவைத் தேடி அவரிடம் தன்னை ஒப்படைத்தார்கள். உள்ளத்தை சிறு சிறு பாவ அழுக்குகளை விட்டும் நீ தூய்மை ஆக்கலாம். அப்படிச் செய்தால் நீ சரணடைய வேண்டிய குருவை அல்லாஹ் உனக்குக் காட்டுவான். ‘ஆசை அறுக்காமல் இஸ்மாயிலை / குர்பானி கொடுப்பது எளிதல்ல’ என்னும் வரிகள் இதற்குப் பொருத்தமாக உள்ளன. ஆனால் அடுத்து வரும் வரிகள் சரியாக இல்லை.

            ”கவிஞர் சொல்கிறார்: இஸ்மாயிலை குர்பானி கொடுக்காமல் / இபுராஹீமை ஒருபோதும் / நம்மால் கண்டடைய முடியாது. இஸ்மாயிலை யார் குர்பானி கொடுப்பது? இப்றாஹீம் நபிதான்! இப்றாஹீமைக் கண்டடையாமல் இஸ்மாயிலைக் குர்பானி கொடுக்க முடியாது என்பதே சரி. இப்றாஹீமைக் கண்டடையுங்கள். அவர் உங்கள் இஸ்மாயிலைக் குர்பானி கொடுப்பார்!

            ”இஸ்மாயில் என்று இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது ஒருவரின் தன்முனைப்பைத்தான் (நஃப்ஸ்). ஆசாபாசங்கள் நிரம்பிய மனம் அபூஜஹலாகவும் அபூலஹபாகவும் ஃபிர்அவ்னாகவும் நம்ரூதாகவும் இருக்கிறது. ஆசாபாசங்களை அகற்றித் தூய்மை ஆகிவிட்ட மனம் இஸ்மாயில் ஆகிவிட்டது. அது தியாகத்துக்குத் தயாராகிவிடுகிறது. ஆனால் அதுவே தன்னை அறுத்துக்கொள்ள முடியாது.

             ”இப்றாஹீம் நபியின் செயலைச் செய்பவர் குரு; இஸ்மாயில் நபியின் செயலைச் செய்பவர் சீடர்” என்றார் தர்வேஷ்.

 

 


Monday, October 31, 2022

மத்துறு தயிர்

 


”மத்துறு தயிர்” என்னும் தலைப்பில் நான் எழுதிய இலக்கியக் கட்டுரை வாசகசாலை இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. அதற்கான சுட்டி:

http://www.vasagasalai.com/mathuru-thayir-katturai-by-ramees-bilali-vasagasalai-58/?fbclid=IwAR1LEFoqfL4XVgUDPJwsFddajdq9OmnYKZZnWDE6fUFloCyL-yIlk8pkTWs 

www.vasagasalai.com இணைய தளத்தில் 17 அக்டோபர் 2022 தேதியில் காணவும்.



Thursday, September 29, 2022

வையத் தலைமை கொள்

 

(07-09-2022 அன்று ஜமால் முகமது கல்லூரியில் அதன் ’தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம்’ நடத்திய தொடக்க விழாவில் நிகழ்த்திய உரை. சூழ்நிலை கருதி அவ்விழாவில் பேசாமல் விட்ட செய்திகளை இப்பிரதியில் இணைத்திருக்கிறேன்; செம்மை கருதி, அங்கு பேசிய சில செய்திகளை இதில் நீக்கியிருக்கிறேன்.)

பேராசிரியர்களே! மாணவ மக்களே!

இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தபோதே பேராசிரியர் த.செல்வராஜ் அவர்கள்  ”வையத் தலைமை கொள்” என்னும் இந்தத் தலைப்பை எனக்கு வழங்கினார். இந்தத் தலைப்பு பாரதியார் இயற்றிய புதிய ஆத்திசூடியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

வையத் தலைமை கொள் என்று அவர் ஏன் சொன்னார்? வையத் தலைமை என்றால் என்ன? வையத்துக்கு ஒற்றைத் தலைமை சாத்தியமா? வையத் தலைமை கொள்வதற்கான பண்புகள் எவை? என்ற வினாக்களை எழுப்பிக் கொண்டு என் சிந்தனையைச் செலுத்துகிறேன்.



வீட்டுத் தலைமையே எத்தனை சிரமமானது என்பதை இங்கே இருக்கும் பேராசிரியர்கள் நன்றாக அறிவோம். இதில் வையத் தலைமை என்று பாரதி குறிப்பிடுவது அதிகம் அல்லவா? என்று எண்ணலாம். வீதித் தலைமை, ஊர்த் தலைமை, மாவட்டத் தலைமை, மாநிலத் தலைமை என்று மேலே செல்லச் செல்ல அதை அடைபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும். இப்படி இருக்க, வையத் தலைமை என்று சொன்னால் எல்லோரும் அதற்கு ஆசைப்பட முடியுமா? என்று கேட்கலாம். புதிய ஆத்திசூடியிலேயே பாரதி தயங்காமல் சொல்கிறார்: ”பெரிதினும் பெரிது கேள்” (71)

உலகப் பார்வை என்பது தமிழ் மரபு, தமிழர் இயல்பு. உலகைக் குறிக்கத்தான் தமிழில் எத்தனை சொற்கள்: வையம், உலகம், ஞாலம், அவனி, புவி, பூமி, குவலயம். வடமொழிச் சொல்லாக இருந்தாலும் ‘ஜகம்’ என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

உலகத்தைச் சுட்டி அல்லது வாழ்த்தித் தொடங்கும் பேரிலக்கியங்கள் தமிழில் உள்ளன. “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்று தொடங்குகிறது திருக்குறள். “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு / பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு” என்று தொடங்குகிறது திருமுருகாற்றுப்படை. “உலகம் யாவையும் தாமுள வாக்கலும்” என்று தொடங்குகிறது கம்பராமாயணம். “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்று தொடங்குகிறது சேக்கிழாரின் பெரிய புராணம்.

ஐ.நா சபையின் வரவேற்பு வாசலில்  உலகப் பார்வை கொண்ட உன்னதக் கவிதை வரிகளை உலக மொழிகள் பலவற்றின் இலக்கியங்களில் இருந்தும் எடுத்துப் பொறித்து வைத்திருக்கிறார்கள். பாரசீக மொழியிலிருந்து கூட சூஃபி ஞானி இமாம் சாஅதி எழுதிய கவிதை அதில் இடம்பெற்றுள்ளது. “பனீ ஆதம் அஃழாயே யக் பைகரந்த்” – ’மனிதர்கள் அனைவரும் ஓருடலின் அங்கங்கள் ஆவர்’ என்று அந்தக் கவிதை தொடங்குகிறது. தமிழ் இலக்கியத்தில் இருந்து கணியன் பூங்குன்றனார் எழுதிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் பாடலைத் தேர்ந்தெடுத்து அங்கே பொறித்துள்ளார்கள்.

இந்தத் தமிழ் மரபில் நின்று உலகப் பார்வை பெற்ற பாரதியார் “வையத் தலைமை கொள்” என்று சொல்வதில் வியப்பில்லை.

பல ஆண்டுகளுக்கு முன், ‘பாரதியின் ஆன்மிகப் பார்வை’ என்னும் தலைப்பில் ஜெயகாந்தன் ஓர் அற்புத உரை நிகழ்த்தியிருக்கிறார். வேதம் என்னும் சொல் பாரதியின் கவிதைகளில் எப்படியெல்லாம் இடம் பெற்றிருக்கிறது என்று சுட்டிக் காட்டினார். அதுபோல், “வையத் தலைமை கொள்” என்னும் தலைப்பை ஓர்ந்தபோது வையம் என்பது பாரதியாரின் கவிதைகளில் எப்படியெல்லாம் சுட்டப்பட்டிருக்கிறது என்று நான் சிந்தித்துச் சிலிர்த்துப் போனேன்.



உலகப் பார்வை என்பது இன்றைக்கு மேலாண்மைத் துறையில் வலியுறுத்தப்படுகிறது. அது வணிகர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. இதழியலாளர் சம்ஸ் எழுதிய ஒரு செய்தியை இன்று வாசித்தேன். அதில் glocalian (குலோக்கலியன்) என்னும் ஆங்கிலச் சொல் பற்றி அவர் விளக்கியிருந்தார். லோக்கல் என்பது உள்ளூர், வட்டாரம் என்னும் அர்த்தங்களில் அமைகிறது. குளோபல் என்பது உலகளாவியது என்று பொருட்படும். இவ்விரண்டையும் இணைக்கும் சொல்தான் குலோக்கலியன் என்பது. ’சோனி’ நிறுவனத்தை ஆரம்பித்த அகியோ மரீட்டா உருவாக்கிய glocal (குலோக்கல்) என்னும் சொல்லில் இருந்து இந்த வார்த்தை வருகிறது. இதை வைத்து அமெரிக்காவில் ஒரு வணிகக் கோட்பாடு ஒன்று உருவாகியிருக்கிறது: “Think globally, act locally.” இந்தக் கோட்பாட்டைத் தனது இதழியல் பணிக்குத் தகுந்தபடி “உள்ளூர்ப் பார்வையில் இருந்து உலகைப் பார்; உலகப் பார்வையில் இருந்து உள்ளூரைப் பார்” என்று தான் வரித்துக் கொண்டிருப்பதாக சம்ஸ் சொல்கிறார். இதை உங்களின் வாழ்க்கைப் பாதைக்குத் தகுந்தவாறு நீங்களும் வரித்துக் கொள்ளலாம்.

”வையத் தலைமை” கொள்வதற்கு நாம் என்னென்ன பண்புகளை நம்மில் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டால் “புதிய ஆத்திசூடியில்” பாரதி சொல்லியிருக்கும் பண்புகளே அதற்கான விடை என்று கருதலாம். அவற்றை ஒவ்வொன்றாக விளக்கிப் பேச இங்கே அவகாசம் இல்லை என்பதால் ஒரு சிலவற்றை மட்டும் தொட்டுக்காட்டி என் உரையை முடிக்க நாடுகிறேன்.

பாரதியின் ஆத்திசூடி “அச்சம் தவிர்” என்று ஆரம்பிக்கிறது. “உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் / அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே” என்று பாடியவர் அவர். “பயம் எனும் பேய்தனை அடித்தோம்” என்று ஜெய பேரிகை கொட்டியவர். அங்கேயும் ஓர் உலகப் பார்வை: “வியனுல கனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வைக் கைப்பிடித்தோம்.”

உங்களுக்கு ஒரு திருக்குறளை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்: “சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை / இகல்வெல்லல் யார்க்கும் அரிது.” சொல் வன்மை, சோர்வு இன்மை, அஞ்சாமை ஆகிய இந்த மூன்றும் எவனிடம் இருக்குமோ அவனை அவ்வளவு எளிதில் தோற்கடிக்க முடியாது. திருவள்ளுவர் குறிப்பிடும் இந்த மூன்று பண்புகளையும் பாரதி பல இடங்களில் பாடியிருக்கிறார். ’அஞ்சாமை’ பற்றி நான் இப்போது சொன்னேன்.

அடக்குமுறை செய்கின்ற அரசனுக்கு முன்னால் நின்று அப்பர் பாடுகிறார்: “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்.” அவர் கையில் ஆயுதம் ஏதுமில்லை; அவருக்குத் துணையாகப் பெரும்படை இல்லை. ஆனால் அவரின் உள்ளத்தில் அச்சம் இல்லை. அத்தகைய வீரத்தை பாரதி தன் மகள் சகுந்தலாவுக்கு உபதேசித்தார்: “பாதகம் செய்பவரைக் கண்டால் – நீ / பயம் கொள்ளல் ஆகாது பாப்பா / மோதி மிதித்துவிடு பாப்பா – அவர் / முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.” இந்த உபதேசம், “கீழோர்க்கு அஞ்சேல்” (16) என்றும், “தீயோர்க்கு அஞ்சேல்” (45) என்றும், ”சீறுவோர்ச் சீறு” (28) என்றும் புதிய ஆத்திசூடியில் ரத்தினச் சுருக்கமாக இடம்பெறுகிறது. “நமனை அஞ்சோம்” என்னும் அப்பரின் வாக்கு, “சாவதற்கு அஞ்சேல்” (26) என்று பாரதியின் நாவில் வெளிப்படுகிறது.



பாரதி வாழ்ந்த காலத்தில் மக்களை அச்சம் பீடித்திருந்தது, ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது. “நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த / நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் / அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே” என்று அன்று நாடு இருந்த நிலையைப் பாடிக் காட்டுகிறார். தங்கள் கோழைத்தனத்தை அவர்கள் பண்பாடு என்னும் பெயரால் பூசி மெழுகியதைப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் “அச்சமே கீழ்களது ஆச்சாரம்” என்று பொங்கினார்.  இருக்கும் பொருள்களுக்கு அஞ்சுவதோடு கற்பனை செய்தும் அஞ்சிக் கிடந்தார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்: “வஞ்சனைப் பேய்கள் என்பார் – இந்த / மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார் / துஞ்சுது முகட்டில் என்பார் – மிகத் / துயர் படுவார் எண்ணிப் பயப்படுவார்.” எனவே, “பேய்களுக்கு அஞ்சேல்” (72) என்று புதிய ஆத்திசூடியில் தனியாகச் சொல்ல வேண்டியதாயிற்று.

உள்ளத்தில் இருந்து அச்சத்தை நீக்கிவிட்டால் அதில் ஊக்கமும் வீரமும் ஊறி வரும். எனவே, ”ரௌத்திரம் பழகு” (96) என்று சொல்கிறார். எப்படிப் பழகுவது? வரலாற்றில் வீரத்தின் அடையாளமாக இருந்த மேன்மக்களை கவனித்துப் பார். “சூரரைப் போற்று” (30). அப்போது உனக்கும் அந்த வீரம் விளையும்.

”சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்” என்பதை இன்னொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால், சொலல் வல்லன் என்பது கல்வி கற்றலைக் குறிப்பதாகவும், சோர்விலன் என்பது அதைச் செயற்படுத்தும் தொழில் வாழ்க்கையைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். கல்வி கற்று அதைச் செயல்படுத்தும் போது – அதற்குத் தக நிற்கும்போது – நீங்கள் பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அப்போது அஞ்சாமல் போராட வேண்டும் என்பதையே அஞ்சான் என்பது குறிப்பதாகக் கருதலாம்.

சொலல்வல்லன் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். அந்தப் பண்பையே பாரதியார் “சொல்வது தெளிந்து சொல்” (34) என்றும் “நேர்ப்படப் பேசு” (61) என்றும் ஆத்திசூடியில் ஆணை இடுகிறார்.

”சோர்விலன்” என்பது வெற்றியாளனுக்கு உரிய இன்னொரு பண்பு. சோர்வு ஏன் வருகிறது? ஊக்கம் குன்றுவதால் சோர்வு ஏற்படுகிறது. “ஊக்கமது கைவிடேல்” என்பது பழைய ஆத்திசூடியில் ஔவை சொன்ன அறிவுரை. சோர்வு வாழ்க்கையை அழித்துவிடும் என்று பாரதியார் எச்சரிக்கிறார்: “கெடுப்பது சோர்வு” (19). எனவே, “சிதையா நெஞ்சு கொள்” (27) என்பது அவர் தரும் அறிவுரை. பொருள்களில் மிக உறுதியானது வைரம். நிலத்துக்குள் புதைந்து கிடக்கும் கரிதான் வைரம் ஆகிறது. நிலத்தின் அழுத்தமே கரியை வைரம் ஆக்குகிறது. கரி எளிதில் உடைந்து விடும். அது வைரம் ஆகிவிட்டால் அது எளிதில் உடையாத உறுதியை அடைந்துவிடும். உன் மனம் கரியைப் போல் இருக்கக் கூடாது, வைரம் போல் இருக்க வேண்டும். எனவே, “சுமையினுக்கு இளைத்திடேல்” (29). வாழ்க்கைச் சுமைகள் உன்னை வைரம் ஆக்குகின்றன என்று உணர்ந்து கொள். சிதையாத நெஞ்சு என்பது வைர நெஞ்சு. ஆதலால், “வைரமுடைய நெஞ்சு வேணும் – இது / வாழும் முறைமையடி பாப்பா” என்று பாடுகிறார்.



 சோர்வைப் போக்கி ஊக்கத்தைப் பெருக்கும் பயிற்சிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை ”ராஜஸம் பயில்” (90) என்று சொல்லி உணர்த்துகிறார். சோர்வு நீங்கி, ஊக்கம் நிரம்பி இருப்பது எற்றுக்கு? “நாளெல்லாம் வினை செய்” (55) என்பதற்கு. வினை என்றால் தொழில், பணி. “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று வாழ்வதற்கு. இதற்குக் ”கர்ம யோகம்” என்று பெயர்.

“நமக்குத் தொழில் கவிதை / நாட்டுக்கு உழைத்தல் / இமைப் பொழுதும் சோராதிருத்தல்” என்பது பாரதியார் தனக்குத் தானே வரித்துக் கொண்ட வாழ்க்கை நெறி. இமைப் பொழுதும், அதாவது ஒரு நொடி நேரம்கூட சோர்ந்து விடாமல் தன் தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிறார். அதற்காகத்தான், “விசையுறு பந்தினைப் போல் – மனம் / விரும்பிய படி செல்லும் உடல் கேட்டேன்” என்று வேண்டினார்.

தொழில் எதற்கு? பணம் சம்பாதிப்பதற்கு, சொத்துக்களைப் பெருக்குவதற்கு என்று நாம் நினைப்போம். பாரதியார் சொல்கிறார்: நாட்டுக்கு உழைப்பதற்கு. அவர் தனக்கு ஈடு இணையற்ற கவித்திறன் வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கெஞ்சும் போதெல்லாம் உலக நோக்கு அங்கே இருப்பதைப் பார்க்கிறோம்.

வல்லமை வேண்டும் என்று கேட்கும்போதும் அது எதற்கு வேண்டும் என்னும் தெளிவான கோரிக்கை: ”வல்லமை தாராயோ? – இந்த / மாநிலம் பயனுற வாழ்வதற்கே.”

பாட்டுத் திறன் வேண்டும் என்று கேட்கும்போதும் அது எதற்கு என்னும் தெளிவான நோக்கம்: “என்றன் பாட்டுத் திறத்தாலே / இவ்வையத்தைப் பாலித்திட வேணும்.”

சோர்வு இல்லாமல் நாளெல்லாம் வினை ஆற்றினால், செய்யும் தொழிலே தெய்வத்திடம் சேர்க்கும் கர்ம யோகமாக, ஒரு தவமாக மாறிவிடும். இந்த அர்த்தத்தில் ஆத்திசூடியில் இன்னொரு அடி: “தவத்தினை நிதம் புரி” (53).

தவம் என்பதற்கு வேறொரு இடத்தில் பாரதியார் ஒரு வரையறை தருகிறார்: “தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் / வையத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை.”

அச்சம் அழித்து, பயம் எனும் பேயை அடித்து, ஜெய பேரிகை கொட்டிய பாரதியார், “அன்பென்று கொட்டு முரசே – மக்கள் / அத்தனைப் பேரும் நிகராம்!” என்றும் பாடுகிறார். “என் குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய / மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள் / அறிவை விரிவு செய், அகண்டமாக்கு / விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை / அணைந்து கொள் உனைச் சங்கமம் ஆக்கு / மானிடச் சமுத்திரம் நானென்று கூவு” என்பது அவரது சீடர் பாரதிதாசன் தரும் சிந்தனை. இந்த உலகப் பார்வை, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மரபின் விளைச்சல் என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.



பன்னீராயிரம் மாணவர்கள் பயிலும் இந்தக் கல்லூரியில் இப்போது நாலாயிரத்து ஐந்நூறு மாணவிகளும் பயில்கிறார்கள். “தையலை உயர்வு செய்” (50) என்கிறது பாரதியின் ஆத்திசூடி. பெண்களுக்கான கல்வி என்பது அதில் ஒரு வழிமுறை. அது எதற்காக? பாரதியார் சொல்கிறார்: “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் / அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்.”

உயர்ந்த சிந்தனைகளை நான் பசுமரத்து ஆணி போல் உங்கள் மனங்களில் பதிக்க வந்திருக்கிறேன் என்று என்னை அறிமுகப் படுத்திய மாணவர் சொன்னார். பாரதியாரின் ஆத்திசூடி தரும் சிந்தனைகளை உங்கள் உள்ளங்களில் பதித்துக் கொள்ளுங்கள். அது போல் நீங்களும் சிந்திக்கப் பழகுங்கள். கீழான எண்ணங்களுக்கு ஒருபோதும் இடம் கொடாதீர்.

”உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்று திருவள்ளுவர் சொல்கிறார். அதை “எண்ணுவது உயர்வு” (7) என்று பாரதியார் வழிமொழிகிறார். அதாவது, உயர்வான சிந்தனைகள் வேண்டும். அது எப்படி இருக்கும்? “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சிந்திக்கும். தான் பசித்துக் கிடக்கும் வேளையிலும், “வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்” என்று சிந்திக்கும். அங்கேயும், “பயிற்றிப் பல கல்வி தந்து / இப்பாரினை உயர்த்திடல் வேண்டும்” என்னும் உலகளாவிய பார்வை. அதே பார்வை ரௌத்திரம் கொள்ளும்போது, “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று முழங்குகிறது.

பாரதியாரின் புதிய ஆத்திசூடி 110 அடிகளைக் கொண்டது. அதில் 109-ஆவது அடி, “வையத் தலைமை கொள்” என்பது. இறுதியாக, 110-ஆவது அடியாக அவர் சொல்கிறார்: “வௌவுதல் நீக்கு.” உங்களுக்குத் தெரியும், பதவி ஆட்சி அதிகாரம் என்றெல்லாம் அடைந்துவிட்டால் அடுத்த நொடியில் இருந்தே வௌவுதல் அதாவது சுரண்டல் ஆரம்பம் ஆகிவிடுகிறது. எனவே, ”வையத் தலைமை கொள்” என்று வாழ்த்துவதுடன் ”வௌவுதல் நீக்கு” என்றும் பாரதியார் எச்சரிக்கிறார். ஏனெனில் பதவியில் அமர்ந்தோர் தவறுகள் செய்தால் “அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.”

வையம் வளமுடன் வாழ வேண்டும் என்று விழைகின்ற இந்த மனமும், உலகப் பார்வை கொண்ட சிந்தனையும்தான் உண்மையான வையத் தலைமை. அது உங்களுக்கு வாய்க்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.